நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 16 மார்ச், 2013

இணையம் கற்போம் நூலுக்கு ஜோதிஜியின் மதிப்புரை


முக்கியமானவர் - முனைவர் மு. இளங்கோவன்


நீங்கள் வலைபதிவரா? இல்லை வலையில் வெறுமனே மேய்சசல் மைதானமாக வைத்திருப்பவரா? 

எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பவரா? வலை பதிவுகளின் தொழில் நுடபங்கள் பார்த்து மிரண்டு போய் நிற்பவரா?

எவராயினும் நிச்சயம் தமிழ் இணையத்தை முழுமையாக தெரிந்தவர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்க முடியும். 

இந்த வருடம் மே மாதத்துடன் என்னுடைய வலையுலக பயணம் ஐந்தாவது ஆண்டை எட்டப் போகின்றது. ஆனால் தமிழ் இணையத்தின் நீளம் ஆழம் அகலம் போன்றவற்றை என்னால் முழுமையாக உள் வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அந்த குறையை சென்ற மாதத்தில் என் கைக்கு வந்த ஒரு புத்தகம் தீர்த்து வைத்தது.

டாலர் நூல் வெளியீட்டு விழாவை நடத்திய திரு. கே.பி.கே.செல்வராஜ் அவர்கள் திடீரென்று ஒரு மாலை என்னை அழைத்தார். அலுவலக பணியில் மும்முரமாக இருந்த என்னிடம் திரு. இளங்கோவன் அவர்களைத் தெரியுமா? என்று கேட்டார்.  நன்றாகவே தெரியுமே என்றேன். 

அவர் கணிப்பொறிகள் சார்ந்து தமிழிலில் இயங்கிக் கொண்டிருக்கும் முனைவராச்சே என்றேன்.  ஆச்சரியப்பட்டு அவர் உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார். இன்று மாலை என் அலுவலகத்திற்கு வர முடியுமா? என்றார்.  இருந்த வேலைகளை ஒத்திவைத்து விட்டு அன்று மாலை 6 மணிக்கு கேபிகே அலுவலகத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்காக காத்திருந்தேன்.

ஏறக்குறைய சமவயது உள்ள மு. இளங்கோவன் அவர்களுடன் உரையாடிய அந்த ஒரு மணி நேரத்தில் என்னால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. அப்போது தான் அவரின் இரண்டு புத்தகங்கள என் கைக்கு கிடைத்தது. 

ஒன்று இணையம் கற்போம் என்ற நூலும், அயலக தமிழறிஞர்கள் என்ற நூலையும் பார்த்து விட்டு ஆச்சரியப்பட்டேன்.

குறிப்பாக இணையம் கற்போம் என்ற நூல் ஒவ்வொரு சம கால இளைஞர்கள் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய நூலாகும். 

என்னுடைய இந்த ஐந்தாம் ஆண்டு தமிழ் இணையப் பயணத்தில் உருப்படியான சில விசயங்களை செய்யத் தொடங்க வேண்டும் என்று சில திட்டங்களை மனதில் வைத்திருந்தேன்.  இந்த ஆண்டில் புதுக்கோட்டையில் இருந்து செயல்படும் ஞானாலயா என்ற நூலகத்தை தமிழ் இணையத்தில் பலருக்கும் சென்று சேர்க்கும் வேலையை சிறப்பாக செய்ய முடிந்தது. அதன் தொடர்ச்சியாக திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஈடேறிக் கொண்டிருக்கிறது.  

மூன்றாவது கடமையாக தமிழ் இணையத்தில் மின் நூல் வடிவத்தில் இருக்கும் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும், அநேக பார்வைகளின் படாமல் இருக்கும் பல தரப்பட்ட நூல்களையும் ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம்  என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இவரின் இணையம் கற்போம் என்ற நூலைப் படித்து முடித்த போது என்னுள் இருந்த உத்வேகம் இன்னமும் அதிகரித்தது. 


இந்த சமயத்தில் தான் திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் அறிமுகமும், அவரின் இணையம் கற்போம் என்ற அற்புதமான நூல் என் கைக்கு கிடைத்தது.  2007 ஆம் ஆண்டு மே மாதம் எனக்கு அறிமுகமான இந்த தமிழ் இணையம் குறித்து இன்று வரைக்கும் கால் பங்கு கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்ற என்னுடைய ஆதங்கத்தை போக்கியது இந்த நூலே. 

176 பக்கங்களுடன் தரமான தாளில் அச்சில் வந்துள்ள இந்த இணையம் கற்போம் என்ற நூல் என்பது ஒரு என்சைக்ளோபீடியா என்றால் அது தவறில்லை. அந்த அளவுக்கு தமிழ் இணையம் குறித்து, இதன் வளர்ச்சி குறித்து, வளர்ந்து கொண்டிருக்கும் நிலை குறித்து, வாய்ப்புகள் குறித்து ஒவ்வொரு நிலையையும் அழகான எளிமையான வார்த்தைகளைக் கொண்டு நம்மை வாசிக்க வைப்பதில் முனைவர் மு. இளங்கோவன் வெற்றி கண்டுள்ளார்.  நூறு ரூபாய்க்கு இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பேசப்படும் ஒரு நூலை தனது கடுமையான உழைப்பின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியுள்ளார். 

கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரையுடன் தொடங்கும் இந்த நூலில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், தமிழ் இணையத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு எளிய உதாரணங்களுடன் படிப்படியான கோர்வையான சம்பவங்களுடன் புரியவைத்துள்ளார்.  தொடங்க வேண்டிய மின் அஞ்சல் முகவரி முதல் ஒவ்வொருவரும் தொடர ஆசைப்படும் வலைபதிவுகள் வரைக்கும் ஒவ்வொரு நிலைகளையும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

தமிழ் விசைப்பலகை உருவாக்க உழைத்தவர்கள், தமிழ் தட்டச்சு குறித்த புரிதல்கள், குழும மின் அஞ்சல் குறித்த அறிமுகம், திரட்டிகளின் பங்கு, தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகத்தின் முழுமையான விபரங்கள் என்று தொடங்கி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொரு நிலையையும் ஒவ்வொரு அத்தியாயத்தின் வாயிலாக வாசிப்பதற்கு எளிய நடையில் தெள்ளத் தெளிவாக புரிய வைக்கின்றார். இ கலப்பை உருவான கதை, தமிழ் விக்கிபீடியான, தமிழ் விக்சனரி, தமிழ் மின் அகரமுதலிகள் என்று ஒவ்வொரு கடலையையும் அமுதமாக தந்துள்ளார். 

இந்த புத்தகத்தின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் உண்டான ஒவ்வொரு அத்தியாங்களிலும் தமிழ் இணையம் வளர்ந்த கதையின் நிலையை ஏராளமான உழைப்பின் மூலம் கவனமாக பதிவு செய்துள்ளதோடு தான் பணியாற்றிக் கொண்டிருக்கும் கல்லூரி பேராசியர் பணியோடு உலகமெங்கும் இந்த தமிழ் இணையத்தை மாணவர்களுக்கு பயிலரங்குகள் மூலம் அறிமுகப்படுத்துவதையும் தனது கடமையாக கொண்டுள்ளார்.   தமிழ் இணையத்தில் இதைப்பற்றி யாரும் சொல்லவில்லையே என்று நீங்கள் மனதில் வைத்திருக்கும் அத்தனை விசயங்களைப் பற்றியும் இந்த நூலின் வாயிலாக தெளிவாக புரியவைத்துள்ளார்.  சம காலத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் வளர்ந்துள்ள நீட்சிகள் அனைத்தையும் பதிவு செய்துள்ள முனைவர் மு. இளங்கோவன் அவர்களை சிறப்பாக பாராட்டலாம்.

தமிழ் இணையம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருப்பது. ஆனால் தனது இணையம் கற்போம் என்ற நூலின் ஒவ்வொரு பதிப்பிலும் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த தமிழ் இணையத்தை அதன் மாற்றத்தை தவறாமல் புதிய பதிப்பில் சேர்த்துக் கொண்டே வருவதால் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திலும் ஏதோவொரு புதிய விசயங்களை உங்களால் கற்றுக் கொள்ள முடியும். 

தனது வலைபதிவில் நாம் மறந்து போய்க் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் அறிஞர்கள் குறித்தும், அவர்களின் சிறப்பையும் குறித்து  ஒவ்வொரு சமயத்திலும் ஆவணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கும் திரு. முனைவர் மு. இளங்கோவன் தமிழ் உலகத்தில் முக்கியமானவர். 


வெறும் எழுத்தோடு நின்று போகாமல் களத்தில் நின்று களப்பணியாற்றும் திரு. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் தமிழ் மொழி குறித்த அக்கறை, இதனை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய கடமை, என்று தன்னளவில் தளராமல் தினந்தோறும் உழைத்துக் கொண்டேயிருக்கின்றார். இவரின் உழைப்பின் மூலம் அடுத்து வரும் தமிழ் இணைய இளைஞர்களின் கைக்கு கணினித் தமிழாக கிடைக்கும் என்பதோடு இவரின் உழைப்பு இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்படும். 

நூலின் பெயர் 

இணையம் கற்போம்.

விலை  நூறு ரூபாய்

நூல் வெளியீடு 

               வயல்வெளி பதிப்பகம்
               இடைக்கட்டு,
               உள்கோட்டை (அஞ்சல்)
               கங்கைகொண்ட சோழபுரம் (அஞ்சல்)
               அரியலூர் மாவட்டம் 612 901

நூலாசிரியர் அலைபேசி எண் 94420 29 053

நன்றி: தேவியர் இல்லம் வலைப்பூ

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

ஜோதிஜி சொன்னது…

மிக்க நன்றி.