நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

திருக்குறள் உரைவளத் தொகுப்பாசிரியர் தருமையாதீனப் புலவர் ச. தண்டபாணி தேசிகர் நினைவு விருது!

 


 தமிழ் வளர்ச்சிக்குத் தனிமாந்தர்களும், பெரும் வள்ளல்களும், நிறுவனத்தாரும் துணைநின்றுள்ளமையை வரலாறு பதிவுசெய்துள்ளது. அவ்வகையில் மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுர ஆதீனம் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றியுள்ள தமிழ்ப் பணிகளும் சமயப் பணிகளும் வரலாற்றில் என்றும் நிலைபெற்று நிற்பனவாகும். 

  தருமபுர ஆதீனம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும், சமய, தத்துவ நூல்களையும் போற்றிப் பாதுகாத்துப் பரப்பியுள்ள வகையாலும், திருமுறைகளைப் பண்மணம் குறையாமல் ஓதுதல் - ஓதுவித்தல் செய்த வகையாலும் தமிழ்க் கல்லூரியை உருவாக்கிப் பல்லாயிரம் தமிழ்ப் புலவர்களைப் பயிற்றுவித்துப் பைந்தமிழுக்குத் தொண்டாற்றுவதற்குப் புறந்தந்த வகையாலும், சமயப் பணிகளுக்கும் மக்கள் பணிகளுக்கும் ஆதரவு நல்கிவரும் வகையாலும் என்றும் நம் நன்றிக்குரிய சமய நிறுவனமாகத் திகழ்ந்துவருகின்றது. 

 தருமபுர ஆதீனத்தின் தகைமிகும் தலைவராகத் தற்பொழுது சமயத்தொண்டும் தமிழ்த்தொண்டும் ஆற்றி வரும் இருபத்தேழாம் பட்டம் தவத்திரு கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்  அவர்கள் அண்மைக்காலமாக அறம்பல செய்து வருகின்றமையை அனைத்துலகும் அறியும். தம் முன்னோர்களின் நெறியில் நின்று தமிழறிஞர்களைப் போற்றும் வகையிலும் தருமபுர ஆதீனத்தில் பணியாற்றிய அறிஞர்களின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும் பேரறிஞர்களின் பெயரில் விருதுகளை அண்மையில் நிறுவி, அறிஞர்கள் பலரை அழைத்துப் போற்றி வருகின்றமை தமிழ் நிலைபெறுதற்குரிய பெரும்பணியாகும். 

 அவ்வகையில்  புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவனுக்குத் திருக்குறள் உரைவளத் தொகுப்பாசிரியர் தருமையாதீனப் புலவர் ச. தண்டபாணி தேசிகர் பெயரில் அமைந்த விருதினைத் தருமபுர ஆதீனத்தில் 29.  08. 2026 நடைபெற்ற  சிறப்பு நிகழ்ச்சியில் ஆதீனம்  வழங்கியது. 

 மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தில்  நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் மு. இளங்கோவனுக்குச்  ச. தண்டபாணி தேசிகர் நினைவு விருதினையும் பத்தாயிரம் பணமுடிப்பு, பத்து கிராம் மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், நூல் பரிசுகள் முதலியனவற்றையும் வழங்கி, சாதரா அணிவித்து, குருமகா சந்நிதானங்கள் ஆசி கூறினார்கள். 

 தருமபுர ஆதீனத்தில்  நடைபெற்ற நிகழ்வில் முனைவர் மு. இளங்கோவனுக்குச்  ச. தண்டபாணி தேசிகர் நினைவு விருதினைத் தவத்திரு குருமகா சந்நிதானங்கள் வழங்கும் அரிய காட்சியைப் படமாக்கித் தமிழன்பர்களின் பார்வைக்கு வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். 

 விருது நல்கிப் புரந்தருளியமைக்கும், படக்காட்சிகளை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கவும் இசைவு நல்கிய முனைவர் தவத்திரு கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்  அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கும் கடப்பாடு உடையோம்.

காணொலி இணைப்பு: இங்கே

சனி, 29 ஆகஸ்ட், 2026

முனைவர் மு. இளங்கோவனுக்குத் தருமபுர ஆதீனச் சான்றோர் விருது!

 

தவத்திரு  கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் 
சுவாமிகள் மு.இளங்கோவனுக்கு விருது நல்கி, ஆசி வழங்குதல்

தமிழ்ப்பணியும் சமயப் பணியும் செய்துவரும் தருமபுர ஆதீனம் தொடர்ந்து  தமிழ்த்தொண்டாற்றிவரும் அறிஞர்களுக்குத் தருமபுர ஆதீனச் சான்றோர்களின் பெயர்களில் நினைவு விருதினை  வழங்கிவருகின்றது

புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவரும் முனைவர் மு.இளங்கோவனுக்குத் திருக்குறள் உரைவளத் தொகுப்பாசிரியர் தருமையாதீனப் புலவர் . தண்டபாணி தேசிகர் பெயரில் அமைந்த விருதினை தருமபுர ஆதீனத்தில் இன்று (29/08/2026) நடைபெற்ற  சிறப்பு நிகழ்ச்சியில் ஆதீனம்  வழங்கியது

தருமபுர ஆதீனத்தின் இருபத்தேழாம் பட்டம், தவத்திரு முனைவர், கயிலை மாசிலாமணி தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்  அவர்கள் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தில்  நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முனைவர் மு. இளங்கோவனுக்குத்  . தண்டபாணி தேசிகர் நினைவு விருதினையும் பத்தாயிரம் பணமுடிப்பு, பத்து கிராம் மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், பன்னிரு திருமுறை நூல் தொகுப்பு, திருக்குறள் உரைவளத் தொகுப்பு முதலியவற்றையும் வழங்கி, சாதரா அணிவித்து ஆசி கூறினார்கள்

முனைவர் மு. இளங்கோவன் தமிழ் இணையத்துறையில் ஆற்றியுள்ள பணிகளையும் தமிழ் ஆராய்ச்சித்துறையில் ஆற்றியுள்ள பணிகளையும் பாராட்டும் வகையில் தண்டபாணி தேசிகர் விருது தருமபுர ஆதீனத்தால்  வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

முரசு நெடுமாறனாரைக் கண்டு வணங்கினேன்!

  

முரசு நெடுமாறனாரிடம் தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூல் அளிக்கும் முனைவர் மு. இளங்கோவன்

 அண்மையில் மலையகச் செலவு மேற்கொண்டிருந்தேன். உலகத் தொல்காப்பிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதையும் தொல்காப்பிய அறிஞர்களைக் கண்டு மகிழ்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இச்செலவு அமைந்தது.  தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட உள்ள தொல்காப்பியக் கோட்டத்தின் இடத்தினைக் காண்பதையும் என் செலவில் இணைத்துக்கொண்டேன். யாவும் சிறப்பாக அமைந்தன. 

 24.08.2026 மாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முனைவர் முரசு நெடுமாறனார் அவர்களைக் கண்டு வணங்கும் பேறு பெற்றேன். முரசு ஐயாவுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுக் காலமாக, வளர்பிறைபோல் வளர்ந்து வருகின்றது. மலேசியத் தமிழர்களையும் மலேசியத் தமிழ் இலக்கியங்களையும் எனக்கு அறிமுகம் செய்த பெருந்தகை முரசு நெடுமாறனார் என்று பனிமலை உயர்வில் நின்று உரக்கச் சொல்ல இயலும். 

 முரசு நெடுமாறனார் உருவாக்கிய மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் அரும்பெரும் தமிழ்ப் புதையல் உருவாக்கும் அற்றைப் பொழுதிலிருந்தே முரசு அவர்களின் உழைப்பையும் தமிழ் ஆர்வத்தையும் கண்டு கண்டி வியந்துள்ளேன். மலேசியாவுக்கு முதன்முதல் சென்றபொழுது(2001) என்னையும் என் பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி அவர்களையும் வரவேற்று, இல்லிருத்தி, விருந்தோம்பிய நினைவுகள் கால் நூற்றாண்டைக் கடந்த பின்பும் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன. முரசு அவர்களின் குடும்பத்தார் காட்டிய அன்பையும் பெரும் பாசத்தையும் எண்ணி எண்ணி உருகுகின்றேன். முரசு அவர்களுக்கும் எனக்கும் நடந்த கடிதத் தொடர்புகளும், உரையாடல்களும் தனியொரு நூல் வரையும் அளவுக்கு செய்திச்செறிவு கொண்டவை. காலம் கனியும்பொழுது தனிநூல் உருப்பெறும். இது நிற்க. 

 முரசு அவர்கள் சற்றொப்ப தொண்ணூறு அகவையைத் தொட உள்ளார். தமிழ்நாட்டரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட உயரிய சிறப்பு ஆரங்களைப் பெற்று ஆரங்களுக்குப் பெருமைசேர்த்தவர். மாநாடுகள், கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து, தமிழாய்வுக்குத் துணைநின்றவர். இத்தகு பெரும்புலச் சான்றோரைக் கண்டு தகைசால் தமிழ்த்தொண்டர்கள் என்ற என் நூலினை அவர்தம் மாணடி சேர்த்து, மனங்குளிர்ந்த வாழ்த்தினைப் பெற்றமை என் வாழ்வின் இனிய பொழுதுகளில் ஏற்றம் தரும் பொழுதாகும். 

 முரசு நெடுமாறனார் நூற்றாண்டினைக் கண்டு, எங்களை வழிநடத்த  வணங்கி வாழ்த்துகின்றேன்.

வெள்ளி, 31 ஜூலை, 2026

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் விருதுநகர் குறள்நெறிக் கழகம் நடத்தும் திருக்குறள் மறுமலர்ச்சி மாநாடு


நாள்: 02. 08. 2026, ஞாயிற்றுக் கிழமை நேரம்: காலை 9 மணி முதல் (முழுநாள் நிகழ்வு) 

இடம்: வி.வி. சண்முகம்வள்ளியம்மை நினைவுத் திருமண மண்டபம், அருப்புக்கோட்டைச் சாலை, அல்லம்பட்டி, விருதுநகர் 

 மாநாட்டு நிகழ்வுகள்: பேரணி, கொடியேற்றம், திருவள்ளுவர் படத்திறப்பு, திருக்குறள் இசை நிகழ்ச்சிகள், தொடக்க விழா, நூல்கள் வெளியீடு, வாழ்த்துரை, விருதுநகர் மாவட்டத்தில் மறைந்த குறள்நெறிச் சான்றோர்களின் படத்திறப்பு, பாட்டரங்கம், வழக்காடு மன்றம், உரையரங்கம், கருத்தரங்கம், நிறைவு விழா பரிசளிப்பு என்னும் அமைப்பில் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருக்குறள் அறிஞர்கள் ஆர்வலர்கள் பங்கேற்கும் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். 

ஒருங்கிணைப்பாளர்: புலவர் ஆ. நெடுஞ்சேரலாதன் 

தொடர்பாளர்கள்:

பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் - 8056035782

பேராசிரியர் கா. சிறீதர் - 9486592380

தலைமையாசிரியர் கா. நல்லதம்பி - 9443631639







வியாழன், 30 ஜூலை, 2026

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் சிறப்பு நேர்காணல்

 


 தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் இலக்கியத்துறையின் முன்னைத் தலைவரும் மூத்த தமிழறிஞருமான கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, படைப்பு நூல்கள் என்று பன்முக ஆற்றலால் பைந்தமிழுக்குத் தொண்டாற்றிவரும் பெருந்தகையாளர் ஆவார். இவர்தம் கடந்தகால வாழ்வியலை அறிந்துகொள்ள, 25.07.2026 அன்று தஞ்சையில் பேராசிரியரின் “வள்ளுவம்”  இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். தமிழகத்துக்குத் தேவையான தமிழ்க் கல்வி சார்ந்தும், தமிழிலக்கியப் போக்குகள் குறித்தும், தம் கடந்தகால தமிழ் வாழ்வு குறித்தும், தம் ஆசிரியப் பெருமக்கள் குறித்தும் பெருமையோடு உரையாடிய செய்திகளை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றோம். 

 கடல்கடந்த நாடுகளிலும் தமக்கான மாணவச் செல்வங்களைப் பெற்றுத் திகழும் கு.வெ.பா. ஐயாவை நிகர்த்த நற்றமிழ்ச் சான்றோர்களை இற்றைத் தமிழகத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அறிஞர் பெருமகனாரின் அரிய செவ்வியைக் கேட்டுச் சுவைக்குமாறு உரிமையோடு தங்களை வேண்டுகின்றேன்.

காணொலி இணைப்பு

செவ்வாய், 28 ஜூலை, 2026

பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு – 2026

 

 

  தமிழ்நாட்டு அரசு கலை, பண்பாட்டுத்துறை ஆதரவுடன், தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுண்கலைப்புலமும் இணைந்து நடத்தும் பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு 2026, ஆகத்து மாதம் 04, 05, 06 ஆகிய நாள்களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது

  04. 08. 2026 (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழத்து இசைத்துறை மாணவர்களின் மங்கல இசை, வாழ்த்துப் பாடல்களுடன் தொடக்க விழா இனிதே தொடங்குகின்றது. முனைவர் தி. அருட்செல்வி அவர்கள் வரவேற்புரையாற்றவும், சிங்கப்பூர்த் தமிழிசை ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவுநர் ப. புருடோத்தமன் அவர்கள் நோக்கவுரையாற்றவும் உள்ளனர். 

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து இசைத்தமிழ்த் தொகுதி 6 தமிழிசைப்பாடல்கள் நூலினைத் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவர் எஸ்.அறிவுடைநம்பி வெளியிட, இசையறிஞர் குரு. ஆத்மநாதன் பெற்றுக்கொள்வார். 

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து இசைத்தமிழ்த் தொகுதி 3 தமிழிசைப்பாடல்கள் நூலினைப் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் முனைவர் ஆர். சிங்காரவேல் வெளியிட, கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். 

 முனைவர் வி. எல் .வி. சுதர்சன் அவர்கள் எழுதிய இன்தமிழ் இசைப்பாடல்கள் நூலினைப், ப. புருடோத்தமன் வெளியிட, பண்ணிசைப் பேரறிஞர் திருத்தணி என். சுவாமிநாதன் பெற்றுக்கொள்வார்கள். 

 தருமபுர ஆதீனம் இருபத்தேழாம் பட்டம்  முனைவர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு  திருத்தணி என் சுவாமிநாதன், குடந்தை தி. இலட்சுமணன் ஆகியோர்க்கு முதுபெரும் பாணர் விருதினையும்,  திருபுவனம் குரு. ஆத்மநாதன் அவர்களுக்குப் பெரும்பாணர் விருதினையும் வழங்கி, அருளாசி வழங்க உள்ளார்கள். 

 பொறியாளர் இரா. கோமகன் வாழ்த்துரை வழங்கவும், முனைவர் வ. ல. வே சுதர்சன் நன்றியுரை வழங்கவும் உள்ளனர். 

 இந்தப் பன்னாட்டு மாநாட்டில் இசையறிஞர்கள் டி. கே. எஸ். கலைவாணன், திருபுவனம் ஆத்மநாதன், வலிவலம் ஆர். எஸ். வெங்கட்ராமன் ஆகியோரின் இன்னிசைப் பயிலரங்குகள் நடைபெற உள்ளன. 

  முனைவர் மு. இளங்கோவன்,  முனைவர் செ. கற்பகம், முனைவர் இரா. கா. குமார், முனைவர் தி. அருட்செல்வி, முனைவர் வ. ல. வே. சுதர்சன், முனைவர் நா.கிரிஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு அமர்வுகள் நடைபெற உள்ளன. 

 தமிழிசை ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.











 

சனி, 18 ஜூலை, 2026

தமிழாகரர் தெ. முருகசாமியாரின் நல்வாழ்த்து!

 



  தொல் புதையல் என்னும் பெயரில் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் (சூலைசெப்டம்பர் 2026)  இதழில் என் நேர்காணல் 14 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இதனைக் கண்ணுற்ற மூத்த தமிழறிஞரும் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னை முதல்வருமான தமிழாகரர் தெ. முருகசாமி ஐயா என் முயற்சியைப் பாராட்டிச் சில வெண்பாக்களை மடல்வழி விடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்கள். மரபுப் பாக்கள் புனைவோர் அருகிவரும் வேளையில் இவ்வெண்பாக்களை நண்பர்களின் பார்வைக்கு வைக்கின்றேன்

தொல்புதையல் நல்லிதழில் தங்களின் நேர்காணல்

பல்சுவைப் பாங்காகப் பார்த்திட்டேன்! – நல்ல

இளம்அறிஞர் என்னும் எடுப்பான பேரை

வளமாகக் கண்டேன் அதில்


அன்னாய் இவனோர் இளமாணாக் கன்என்றே

சொன்ன குறுந்தொகைச் சொற்களின்பொன்னன்ன

வான்வரிச் சான்றாய் வளர்ந்துள்ள தங்களைத்

தான்அறிவேன் நன்றாக நான்


கோணல்நற் கோணலென வாழ்வைப்பா ழாக்குகிற

சாணேறி அந்தோ சறுக்கிடும்மாணா

இளைஞர்கள் சுட்டி இனிதாகக் கற்க

இளங்கோவே நல்லெடுத்துக் காட்டு


எத்தனை எத்தனை ஆன்ற அருஞ்செயல்கள்!

அத்தனை தானும் அருமையெனஇத்தரை

உள்ளோர் உணர உழைப்பினது சின்னமாய்

உள்ளஇளங் கோவிற்கென் வாழ்த்து

15.07.2026

திங்கள், 13 ஜூலை, 2026

தமிழியல் ஆய்வில் முனைவர் இரா. இளவரசு அவர்களின் தமிழ்க்கொடை – நினைவுக் கருத்தரங்கம்

 


 

 திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் முனைவர் இரா. இளவரசு அவர்களின் தமிழ்க்கொடை என்னும் தலைப்பில்  நினைவுக் கருத்தரங்கம் 12. 07. 2026 காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை  நடைபெற்றது. முனைவர் இரா. இளவரசு அறக்கட்டளையும், புரட்சிப் பாவேந்தர் பேரவையும், பாவாணர் தமிழியக்கமும் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன. 

 கோ. மணிவாசகம் இ. வ. ப. அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறையின் முன்னை இயக்குநர் முனைவர் ச. நாகராசன் அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். புரட்சிப் பாவேந்தர் பேரவையின் தலைவர் பாவலர் குறள்மொழி தொடக்கவுரையாற்றினார். 

 தஞ்சைப் பேராசிரியர் முனைவர் மு. இளமுருகன் அவர்கள் பேராசிரியர் இரா. இளவரசு அவர்களின் இயக்கச் செயல்பாடுகள் என்ற தலைப்பிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் பா. மதிவாணன் அவர்கள் முனைவர் இரா. இளவரசு அவர்களின் படைப்பிலக்கியப் பங்களிப்பு என்ற தலைப்பிலும், புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் முனைவர் இரா. இளவரசு அவர்களின் தமிழியல் ஆய்வுப் பங்களிப்பு என்னும் தலைப்பிலும் உரைநிகழ்த்தினர். 

 முனைவர் சு. செயலாபதி அவர்கள் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் முனைவர் பி. தமிழகன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

 இந்த நிகழ்வில் முனைவர் இரா. இளவரசு அவர்களின் தமிழியல் ஆய்வுப் பங்களிப்பை நினைவுகூர்ந்த மு. இளங்கோவனாகிய நான், தமிழ்க் காப்பியங்களுள் காப்பிய வளம் செறிந்த பெருங்கதையை  (Descriptive Grammar of Perunkatai)  ஆய்ந்து அதன் மொழியமைப்பை  வெளியுலகுக்கு வெளிப்படுத்தி, முனைவர் பட்டம் பெற்றவர் இரா. இளவரசு என்று அவைக்கு நினைவூட்டினேன். கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கு முனைவர் இரா. இளவரசு அவர்களால் எழுதப்பெற்ற இந்த ஆய்வேடு, 388 பக்கம் கொண்டது எனவும் பெருங்கதையின் சொல்லடைவு 1031 பக்கம் கொண்டது எனவும், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது எனவும் அவைக்கு நினைவூட்டி, இதனை அச்சிட்டு வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன். 

 பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் முழுமையாக வெளிக்கொண்டுவந்த பெருமை பேராசிரியர் இரா. இளவரசு அவர்களுக்கு உண்டு எனக் குறிப்பிட்டேன். பாரதிதாசன் உலக நோக்குடையவர் என்பதை ஆய்வு உலகுக்குத் தம் ஆராய்ச்சி நூல் வழியாக மெய்ப்பித்தவர் இரா. இளவரசு என்றும் கூறினேன். அதுபோல் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பாடல் எழுதியவர் பாரதிதாசன் என்பதை இரா இளவரசு  ஆராய்ந்து, “இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்” என்று நூல் எழுதியவர் என்றும் குறிப்பிட்டேன். பாரதிதாசன் பல்வேறு இதழ்களில் - மலர்களில் எழுதி, இதுவரை நூல்வடிவம் பெறாத 353 பாடல்களையும், 337 கட்டுரைகளையும் நூல்களாக வெளியிட்ட பெருமையும் இரா. இளவரசு அவர்களைச் சாரும் என்று குறிப்பிட்டேன். தமிழ்மண் பதிப்பகம் வழியாக வெளிவந்த பாவேந்தரின் ஒட்டுமொத்த நூல்களின் தொகுப்பான பாவேந்தம் (இந்த நூல் 1534 தலைப்புகளில் 7,854 பக்கங்களைக் கொண்டு, 25 தொகுதிகளாக வெளிவந்தது) நூலின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்பட்டவர் இரா. இளவரசு என்று புகழாரம் சூட்டினேன். 


 திருச்சிராப்பள்ளி, தஞ்சையைச் சார்ந்த அறிஞர்கள் பாவலர்கள், இரா. இளவரசு அவர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


நன்றி: தினமணி நாளிதழ், திருச்சி 13.06.2026

சனி, 4 ஜூலை, 2026

திருக்குறள் மணி சுப. சுப்பையா

  

திருக்குறள் மணி சுப. சுப்பையா
(23.09.1947 - 08.09.2021)

[சுப சுப்பையா அவர்கள் மலேசியாவின், சித்தியவான் என்னும் ஊரில் பிறந்தவர். சித்தியவான் பகுதியில் திருக்குறள் பரப்பும் பணியில் முன்னின்று உழைத்தவர். தொல்காப்பியக் கருத்தரங்கை மலேசியாவில் 1986 ஆம் ஆண்டில் நடத்தியவர். சித்தியவான் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உழைத்தவர். தமிழ் இளைஞர் மணிமன்றப் பணிகள், கூட்டுறவுக் கழகம், திருக்கோவில் பணிகளிலும் ஆர்வமுடன் உழைத்தவர்]. 

திருக்குறள் தொண்டர், திருக்குறள் மணி எனப் போற்றப்படும்  சுப. சுப்பையா PJK அவர்கள் மலேசியாவின், சித்தியவானில் வாழ்ந்த சுப்பிரமணியம்  நாகம்மாள் ஆகியோரின் மூத்த மகனாக 23.09.1947-ஆம் ஆண்டு பிறந்தவர். தன் மூன்றாவது வயதிலேயே தந்தையை இழந்த இவர் தனித்து வாழ்ந்த தாயால் வளர்க்கப்பட்டவர் ஆவார். இவருக்கு இரண்டு உடன்பிறந்தார் உண்டு. இவர்களின் பெயர்  நல்லையா, சந்திரன் என்பனவாகும். 

சுப. சுப்பையா தொடக்கக் கல்வியைச்  சுங்கை வாங்கித் தோட்டத்தில் பயின்றவர். ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றிருந்த இவர், வறுமையின் காரணமாகத்  தனது கல்வியைத் தொடர முடியவில்லை. தம்முடைய கல்வியைத் தொடர முடியாமல் தோட்டத்திலேயே வேலைக்கு சேர்ந்தார்

 சுங்கை வாங்கித் தோட்டத்தில் திருக்குறள் வளர்ச்சிப் பணிக்குப் பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர். தம்முடைய வாழ்வில் திருக்குறள் நெறியை இலக்காகக் கொண்டு வாழ்ந்தவர்

12.04.1970-இல் இராசம்மா என்ற பெண்மணியைத் தமிழ்த் திருமணம் புரிந்தவர். இவரின் இத்தமிழ்த் திருமணம் பெரியார் கு. மணியம் அவர்களின் தலைமையில், தமிழ்க்குயிலார் கா. கலியபெருமாள் அவர்களின் வாழ்த்துரையுடன் நடைபெற்றது. சுப. சுப்பையா – இராசம்மா ஆகியோருக்குக் கலைவாணன், கதிரவன், இராதை(மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பொறுப்பு வகிப்பவர்), கம்பன் என்னும் பெயர்களில் நான்கு பிள்ளைகளும் ஆறு  பெயரப்பிள்ளைகளும் உள்ளனர்

சுப. சுப்பையா அவர்கள் 1981-ஆம் ஆண்டு சனவரி  4 ஆம் நாள் முதல் 10 ஆம் நாள் வரை மதுரையில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். அவர்கள் ஆட்சியில் நடத்திய ஐந்தாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தமிழகம் சென்றவர். இவர்  . சுங்கை வாங்கித் தோட்டத்தில் மூன்று திருக்குறள் கருத்தரங்குகளையும், ஒரு தொல்காப்பியக் கருத்தரங்கையும் நடத்தி, சாதனை புரிந்துள்ளார் என்பது பெருமைக்குரியது.

 

தமிழ்க்குயில் கா. கலியபெருமாள், செல்லையா இராசதுரை, சுப. சுப்பையா 
(தொல்காப்பியக் கருத்தரங்கு, சித்தியவான்)

தொல்காப்பியக் கருத்தரங்கில் சுப. சுப்பையா (இடப்புறம்), 
ஆறு. நடராசன்( விழாவின் செயலாளர்), மற்றும் நடனக்குழுவினர்

தொல்காப்பியக் கருத்தரங்கின் பார்வையாளர்கள்

சுப. சுப்பையா அவர்கள்  மலேசியாவில் முதல் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடத்தியவர் ஆவார். இவருக்குப் பெருந்துணையாக இருந்தவர் ஆறு. நடராசன் ஆவார். விழாவின் செயலாளராக இருந்து இவ்விழா சிறக்க உதவியவரும் இவரேயாவார்.  இத் தொல்காப்பிய கருத்தரங்கிற்கு 12. 04 . 1986 அன்று மலேசியாவுக்கான இலங்கைத் தூதரும், மிகச் சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான மாண்புமிகு செல்லையா இராசதுரை அவர்களை அழைத்து வந்த பெருமையும் இவரைச் சாரும்

இப்பொழுது நம்மிடையே பரவலாக ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கும் தமிழர் திருநாளைச் சுப. சுப்பையா அவர்கள் 1978 ஆம் ஆண்டு சுங்கை வாங்கித் தோட்டத்தில்  தொடங்கியவர்களில் ஒருவராவார். சுப. சுப்பையா அவர்கள் கோ. சாரங்கபாணியாரின் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் மேல் தீராத நம்பிக்கை கொண்டவராக  விளங்கியவர்

சமயப் பணியாக அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தின்  பொருளாளராகவும், ஆலயத் திருப்பணிச் செயற்குழுவின்  நிர்வாகியாகவும் பணியாற்றியவர்

சுங்கை வாங்கித் தோட்ட இடுகாட்டு நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகப் பல துன்பங்களை அனுபவித்தவர். இன்று அந்த இடுகாடு சுங்கை வாங்கி மக்களுக்குப்  பொதுவாக இருப்பதற்கு இவர்  காரணமென்றால் அது மிகையில்லை. இவர் தோட்ட மக்களுக்கு ஒரு கூட்டுறவு வேண்டும் என்பதற்காகத் தமது நண்பர்களோடு “ சுங்கை வாங்கி கூட்டுறவுக் கழகத்தை”  அமைத்தவர்

சுப. சுப்பையா  1986 - ஆம் ஆண்டு சுங்கை வாங்கி . . கா கிளையை அமைத்து, அதன் துணைத் தலைவராகப்  பதவி வகித்தவர்.  அதன்  பின்னர்த் தலைவராகப் பொறுப்பேற்றவர்

சுப. சுப்பையாவுக்கு    ரவுப் தமிழ்ச் சங்கம்”  “திருக்குறள் தொண்டர்என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தது

சுப. சுப்பையா அவர்கள் திருக்குறளை மக்களிடையே பரப்பியதற்காகக் கோலாலம்பூர் தமிழ்நெறிக் கழகம்,   திருக்குறள் மணி ”  என்ற சிறப்பு ஆரத்தை (விருதை) வழங்கிச் சிறப்பித்தது. இவருடைய அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளைப் பாராட்டி, பேரா மாநில அரசர் அவர்களால் PJK பட்டம் வழங்கப்பட்டது. சுங்கை வாங்கி தோட்டக் கூட்டுறவுக் கழகம் இவர்தம் பணியைப் பாராட்டி, "கூட்டுறவு தந்தை விருது" என்னும் பெயரிலான விருதை  27.09.2009 இல் வழங்கிப் போற்றியது.


சமயம், அரசியல், திருமண நிகழ்வுகள், கூட்டுறவுச் சங்கங்கள் என எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளில், அவர்களின் உரிமைகளை முன்னிறுத்தி விடாமுயற்சியுடன் தொண்டாற்றியவர் இவர். சமூகப்பணிக்காக தன் வாழ்நாளின் பெரும் பகுதியை ஒப்படைத்தவர் என்பதும் இவரின் உயர்ந்த பண்பை எடுத்துக்காட்டுகிறது

சுப. சுப்பையா அவர்கள் 08.09.2021 இல் இயற்கை எய்தினார். 

திருக்குறள் மணி திரு. சுப. சுப்பையா அவர்கள் தமிழ்ப்பணியைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் என்பதால் மலேசியத் தமிழர்களால் என்றும் போற்றப்படுவார். 

 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வானுறையும்;

தெய்வத்துள் வைக்கப் படும்” 

என்னும் தமிழ்மறையின் வழியில் வாழ்ந்த சுப. சுப்பையா அவர்களின் பெருமையை நினைவுகூர்வோம்.

 

நன்றி:

முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன், முத்தமிழ்ப் பாவலர் மன்றம், ஈப்போ

திரு. சுப. கதிரவன், சித்தியவான்