நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 27 மார்ச், 2022

விபுலாநந்த அடிகளாரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்வோம்!

 

 

 தமிழ் மாமுனிவர் விபுலாநந்த அடிகளார் அவர்களின் பிறந்தநாள் மார்ச்சு 27 ஆகும். யாழ்நூல் கண்ட ஆராய்ச்சிப் பேரறிஞரின் வாழ்வியலை ஆவணப்படமாக்கி, உலகம் முழுவதும் திரையிட்டு, அடிகளாரின் பெருமையைத் தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு நினைவுகூர்ந்தோம்

 பேராசிரியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், பன்னூலாசிரியர், மாந்தநேயம் கொண்ட அடிகளார் எனப் பன்முகம் கொண்ட விபுலாநந்த அடிகளார் இயற்றிய வெள்ளைநிற மல்லிகையோ… எனும் பாடலை இசைத்தென்றல் இராஜ்குமார் இராசமாணிக்கம் அவர்களைப் பாடச்செய்து, புதுவை நாட்டியக் கலைஞர் திரு. கிருட்டினன் அவர்களின் குழுவினரின் துணையுடன் காட்சிப்படுத்தி எம் ஆவணப்படத்தில் இணைத்தோம்

 உலகத் தமிழர்கள் கண்டுகளிக்க அடிகளாரின் பிறந்தநாள் பரிசாக இன்று இணையவெளியில் வழங்குகின்றோம். கண்டு மகிழுங்கள். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் கலைநிகழ்வுகளில் இந்தப் பாடலைப் பயன்படுத்தி, நம் பிள்ளைகளின் உள்ளங்களில் நற்பண்புகளை மிளிரச்செய்யுங்கள். விபுலாநந்த அடிகளார் புகழ்பரப்பும் பணியில் துணைநின்ற கனடா வாழும் சிவம் வேலுப்பிள்ளை (நிறுவுநர், திருக்குறள் அறக்கட்டளை) அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் போற்றுகின்றோம்.

வெள்ளை நிற மல்லிகையோ என்ற அடிகளாரின் புகழ்பெற்ற பாடலின் காணொலியைப் பார்ப்பதற்குக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கவும்

இணைப்பு

ஞாயிறு, 20 மார்ச், 2022

உறுபசி போக்கும் ஓங்காரக்குடில்…


 

 ஒங்காரக்குடிலின் முகப்பு

 “கோவையிலிருந்து மருத்துவர் செந்தில்குமார் பேசுகின்றேன். நீங்கள் மு. இளங்கோவன் ஐயாவா”? என்று செல்பேசியில் அழைத்து, அறிமுகம் செய்துகொண்டார் அந்த நண்பர். இணையத்தில் தாங்கள் பதிந்துவரும் காணொலிகளைத் தொடர்ந்து பார்த்துவருகின்றேன். தங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். வரும் ஞாயிறு புதுச்சேரியில் சந்திக்க நேரம் ஒதுக்க இயலுமா?. என்றார். ஞாயிறு காலையில் சிற்றுண்டி உண்பது போல வாருங்கள் என்று நானும் அழைப்புவிடுத்தேன். எனக்கிருந்த அடுக்கடுக்கான வேலைகளில் அந்த உரையாடலை மறந்துபோனேன். சனிக்கிழமை இரவு மீண்டும் அதே குரல். தங்களைச் சந்திக்க காலையில் வருகின்றோம். என்னுடன் மருத்துவர் முத்துராமன் அவர்களும் சென்னையிலிருந்து வந்து இணைந்துகொள்வார் என்றதும் விடியல்பொழுதுக்குக் காத்திருந்தேன். முன்பின் அறிமுகம் இல்லாத நண்பர்கள் இருவர் நம்மைப் பார்ப்பதற்கு வருகின்றனரே!. இரவுப் பயணம் இடையூறாக இருந்திருக்குமே என்று நினைத்தபடி புதுச்சேரி, செயராம் உணவகத்தில் திட்டமிட்டபடி ஞாயிறு காலை எட்டு மணிக்குச் சந்தித்தோம். 

 காலைச் சிற்றுண்டி உண்டபடியே ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். மருத்துவர் செந்தில்குமார் தற்பொழுது கயானா நாட்டில் மருத்துவப் பணியாற்றி வருகின்றார் என்பதும், மருத்துவர் முத்துராமன் அவர்கள் சென்னையில் ஒரு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார் என்பதும் தெரியவந்தன. 

 மருத்துவர் முத்துராமன் அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியபொழுது எங்கள் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொல்காப்பியம் குறித்த அறிஞர்கள் பேச்சுகள் அடங்கிய காணொலிகளைத் தொடர்ந்து பார்த்துள்ளதாகவும், தம் வகுப்புத் தோழரான மருத்துவர் செந்தில்குமார் அவர்களும் எம் காணொலிகளைக் கண்டு மகிழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நலம் நோக்கிப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்டுள்ள காணொலிகளைக் கண்டு, அதன் பயன் நுகர்ந்து, அம்முயற்சியில் ஈடுபட்டுள்ள என்னை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்தப் பயணத்தை அவர்கள் அமைத்தனர் என்பதும் உரையாடலில் தெரியவந்தது. 

 மருத்துவர் முத்துராமன் அவர்கள் கைபேசி பயன்படுத்துவதில்லை என்று கூறினார். அவரை வியப்புடன் பார்த்தேன். இந்தக் காலத்தில் கைபேசி இல்லாமல் ஒருவரா? என்று வியப்புற்றேன். ஆயின் மின்னஞ்சல் பயன்படுத்துவார் என்று அறிந்தபொழுது ஆறுதல் கிடைத்தது.

 


 எங்கள் உரையாடலின் ஊடே, ஒருமுறை துறையூரில் இருக்கும் ஓங்காரக் குடிலுக்கு நான் வருகை தர வேண்டும் என்றும் அங்கு அருளாட்சி செய்துவரும் தவத்திரு ஆறுமுக அரங்க மகாதேசிக சுவாமிகளின் நல்லாசியைப் பெறுவதுடன் அங்கு நடைபெற்றுவரும் உணவுக்கொடைப் பணிகளைப் பார்வையிட வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தனர். நேரம் கிடைக்கும் பொழுது செல்லலாம் என்று கூறிவிட்டு, கையுறையாக என் நூல்கள், ஒளிவட்டுகள் சிலவற்றைக் கொடுத்தேன். அனைவரும் விடைபெற்றோம். 

 மருத்துவர் முத்துராமன் அவர்கள் சென்னைக்கும், மருத்துவர் செந்தில்குமார் அவர்கள் இலண்டன் வழியே கயானாவுக்கும் பயணமானார்கள். ஓரிரு கிழமைகள் ஓடின. என் முயற்சியை அறிந்த முத்துராமன் அவர்கள் எனக்குச் சில ஆங்கில நூல்களைப் படிப்பதற்குப் பரிந்துரைத்து, அதனை அவர் செலவில் வாங்கியும் அனுப்பினார். 

 மருத்துவர் செந்தில்குமார் அவர்கள் வழியாகவே நான் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் நிலையில் இருந்தேன். திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரில் அமைந்துள்ள ஓங்காரக் குடிலுக்குச் செல்லும் நாள் விடுமுறை நாளில் அமையுமாறு திட்டமிட்டோம். மருத்துவர் முத்துராமன் அவர்கள் சென்னையிலிருந்து மகிழுந்தில் புதுவைக்கு வந்து, என்னை அழைத்துக்கொண்டு துறையூர் ஒங்காரக் குடிலுக்குச் செல்வதாகத் திட்டம். உரிய நாளில் உரிய நேரத்தில் மருத்துவர் முத்துராமன் அவர்கள் ஓட்டுநரின் உதவியுடன் புதுச்சேரியில் உள்ள நம் இல்லத்துக்கு மிகச் சரியாக வந்துசேர்ந்தார். இருவரும் துறையூருக்குப் பயணமானோம். புதுச்சேரி - விழுப்புரம்- பெரம்பலூர் – துறையூருக்கு மூன்றரை மணிநேரத்தில் சென்றுசேர்ந்தோம். 

 மகிழுந்துப் பயணத்தில் முத்துராமன் அவர்கள் பேராவூரணி ஊரினர் என்பதும், ஊட்டியில் ஆங்கிலவழியில் கல்வி பயின்று, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர் என்பதும் தமிழில் அரிச்சுவடி கூடத் தெரியாது என்றும், பின்னர் தம் தாய்மொழியான தமிழின் சிறப்புணர்ந்து, தமிழை எழுத்துக்கூட்டிப் படிப்பதற்குத் தெரிந்துகொண்டு, பேச்சுகளைக் கேட்டும், பாடல்கள், உரையாடல்களைக் கேட்டும் தம் தமிழறிவை வளர்த்துக்கொண்டுள்ள பாங்கினைக் கேட்க கேட்க எனக்கு வியப்பே மேலிட்டது.  அமெரிக்க அதிபர்களின் வரலாற்றையும், நியூயார்க் நகரினை உருவாக்கிய அறிஞரின் வரலாற்றையும் கூறி, எனக்கு ஒரு தன்னம்பிக்கை வகுப்பையே மகிழுந்தில் நடத்தி முடித்தார் மருத்துவர் முத்து. என் பார்வைக்குச் சில ஆங்கில நூல்களையும் மகிழுந்தில் கொண்டுவந்திருந்தார். 


விருந்தினர் இல்லம்


உணவுக்கூடம்

 பகல் ஒன்றரை மணியளவில் ஓங்காரக் குடிலை அடைந்தோம். இரண்டு திருமண மண்டபங்களை இணைத்துக்கட்டியது போல் பெரிய மாளிகையாக ஓங்காரக் குடில் கண்ணில் தென்பட்டது. நுழைவு வாயிலோ, கடை வாயிலோ இல்லை. யார் வேண்டுமானாலும் வந்து உணவருந்தலாம் என்பதற்கு ஏற்ப, குடில் இருந்தது. கையில் எடுத்துச் சென்ற பைகளை வைப்பதற்கு வாய்ப்பாக மண்டபத்தில் இருந்தவர்களிடம் சொல்லி ஓர் அறைக்குரிய திறவியைப் பெற்றுக்கொண்டோம். எங்கள் வருகை முன்பே குடில் அன்பர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அங்குள்ள அன்பர்கள் சிலர் எங்களை அன்புடன் வரவேற்று உதவினர். ஓங்காரக் குடில் அறை மிகவும் எளிமையாகவும், போதிய வசதிகளுடனும் இருந்தது. உலகியல் விடுதிகளைப் போல் கட்டில் மெத்தை, தொலைக்காட்சிகள் இல்லை. பாய், தலையணை, போர்வைகள் இருந்தன. தண்ணீர், வெந்நீர் வசதிகள் இருந்தன. காற்று வளிப்பாடு (AC) இருந்தது. போதிய மின்விசிறி, விளக்குகள் உள்ளன. எங்கும் தூய்மை பளிச்சிட்டது. குளிப்பறையில் கை, கால் கழுவிக்கொண்டு முதலில் உணவருந்தும் கூடத்திற்குச் சென்றோம்.

 

உணவு பரிமாறுதல்


பசியாறும் பொதுமக்கள்

 ஓங்காரக்குடில் தொண்டர்கள் உணவினை வைத்துக்கொண்டு, பசிப்பிணியோடு வருபவர்களுக்கு அன்புடன் வழங்கிக்கொண்டிருந்தனர். சற்றொப்ப இரண்டாயிரம் பேருக்குமேல் தரையில் அமர்ந்து உணவருந்தும் கூடத்தில் எந்த இடத்திலும் அழுக்கு என்பதோ, பிசு பிசுப்பு என்பதோ இல்லை. தூய்மை எங்கும் குடிகொண்டிருந்தது. பெரிய தட்டுகள் தூய்மை செய்யப்பெற்று அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆளுக்கொரு தட்டினை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றோம். தொண்டர் ஒருவர் சோற்றினை மகிழ்வோடு எடுத்தளித்தார். மற்றொருவர் குழம்பினை மகிழ்ச்சியோடு பரிமாறினார். ஒருவர் ஊறுகாய் கொடுத்தார். தேவையான தண்ணீர்க் குவளையை எடுத்துக்கொண்டோம். மின் விசிறிக்குக் கீழே அமர்ந்து, மகிழ்ச்சியுடன் உண்டோம். தரையில் அமரமுடியாமல் உடல்நலிவுற்றவர்கள் நாற்காலியில் அமர்ந்து உண்ணலாம். முதல் முறை உண்டு, அடுத்த முறை சென்று சோறு பெற்று சாறு (இரசம்) ஊற்றிக்கொண்டு வந்தேன். மீண்டும் மூன்றாவது முறை சென்று மோருக்கு உரிய வகையில் உணவுபெற்று, மோரும் ஊற்றுமாறு செய்து, வந்து, தரையில் அமர்ந்து, உண்டேன். 

 உணவினை உண்டு முடித்ததும், எஞ்சிய உணவை உரிய ஏனத்தில் கொட்டிவிட்டு, தட்டினை நீரில் கழுவி வைத்தோம். அதனை முதுபெண்கள் இருவர் மீண்டும் கழுவினர். அந்தத் தட்டுகள் மீண்டும் சுடுநீரில் கழுவப்பெற்று உரிய பொறிகளில் மீண்டும் தூய்மை செய்யப்பெற்று, அடுத்த வேளை பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் தூய்மையாக அடுக்கப்பட்டிருந்தன. 

 துறையூர்ப் பகுதியில் வாழும் வறுமை நிலையில் உள்ள மக்கள், ஆதரவற்றவர்கள், வெளியூர்க்காரர்கள் யாவரும் இலவசமாக உண்பதற்கு உரிய ஏற்பாடுகள் ஓங்காரக்குடிலில் இருப்பதைக் கண்ணாராக் கண்டு வியந்தேன். உணவினைப் பரிமாறுபவர்களின் முகத்தில் மகிழ்ச்சியும் கருணையும் நிரம்பியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். பகலுணவுக்குப் பலரும் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாலை நான்கு மணிக்குப் பல்லாயிரம் பேருக்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஊர்திகளில் அருகில் உள்ள சிற்றூர்களுக்குக் கொண்டுசேர்க்கப்படுகின்றன. அவற்றைப் பெற்றுக்கொள்ளும் எளிய நிலை மக்கள் உண்டு முடித்து, பசியின்றிப் படுக்கின்றனர். ஆடு மாடுகளின் பசியினைப் போக்குவதற்குத் தனியே புல்லும் தழையும் வழங்கப்படுகின்றன.

 


பசும்புல் கொண்டுசெல்லும் ஊர்தி

குடில் தொண்டர் ஒருவர் எங்களுக்குக் குடிலின் செயல்பாடுகள், உணவுக்கூடம், பொருள் கிடங்கு, மளிகைப் பொருள் கிடங்கு, கறிகாய் கிடங்கு யாவற்றையும் காட்டினார். தேங்காய் உரிப்பது, பூண்டு உரிப்பது தொடங்கி, மிளகாய்த்தூள் அரைப்பது வரை அனைத்துக்கும் உரிய பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. குடிலின் பொறியியல் ஆர்வலர்கள் இவற்றை வடிவமைத்து வழங்கியுள்ளனர். சோறுவடித்தல், குழம்பு (சாம்பார்) வைப்பதற்கு உரிய வகையில் பெரிய பெரிய ஏனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருபத்து நான்கு மணி நேரமும் மின்தடை இல்லாமல் குடிலில் வெள்ளொளி வீசுகின்றது. ஒரு காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவிய பொழுது துறையூர் நகருக்குத் தண்ணீர் வசதியைக் குடில் வழங்கியது என்று அறிந்தபொழுது அவர்களின் உயிர் இரக்க உணர்வு புரியத் தொடங்கியது. 

உணவு தயாரிக்கும் தொண்டர்

 குடிலில் நடைபெறும் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கு உரிய அரங்கு பரந்துவிரிந்து காணப்பட்டது. மக்களுக்கு உயிர்காக்கும் அவசர ஊர்திகளும், உணவுகளைச் சிற்றூர் மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் மூடுந்துகள், மகிழுந்துகள் எனப் பலவகைப்பட்ட வண்டிகளும் அந்த அரங்கின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் ஒரு பருந்துப் பார்வையாகப் பார்த்தோம். 

 மாலை மூன்று மணியளவில் ஓங்காரக் குடிலினை உருவாக்கிய ஆறுமுக அரங்க மகாதேசிகரைக் கண்டு வாழ்த்தினைப் பெறலாம் என்றனர். மூன்று மணிக்குக் காத்திருந்தோம். 

 குடில் தொடங்கப்பட்டபொழுது ஒரு குடிசை அமைப்பில் இருந்தது எனவும், பல்லாயிரம் பேரின் உழைப்பிலும், உதவியிலும் இந்த நிலையை அடைந்தது எனவும் குடிலில் வதியும் தொண்டர்கள் குறிப்பிட்டனர். தவத்திரு அடிகளார் அவர்கள் தொடக்க காலத்தில் அமர்ந்து தவமியற்றிய அறை இன்றும் சிறப்பாகப் போற்றிப் பராமரிக்கப்படுகின்றது. அதில் குடிலுக்கு வரும் தொண்டர்கள் அமர்ந்து, அமைதி வழியில் வழிபாடு செய்கின்றனர். 

 குடிலின் ஒரு பகுதியில்  உள்ள அறையில் தவத்திரு ஆறுமுக அரங்க மகாதேசிகர் உண்ணா நோன்பிருந்து, தவ வாழ்வு நடத்துகின்றார். அவர்களைக் காண எளிய தொண்டர்கள் கையுறைப் பொருள்களுடன் நின்றனர். அனைவரும் வரிசையில் நின்றே அடிகளாரிடம் வாழ்த்துப்பெறுகின்றனர். வி.ஐ.பி. வரிசை போன்ற எதனையும் அங்குக் காண இயலவில்லை.  எல்லோரும் ஓர் நிறை என்பதை அறிந்தோம். நாங்களும் வரிசையில் நின்றோம். எங்களுக்கு உரிய முறை வந்தது. முதலில் மருத்துவர் முத்துராமன் அவர்கள் தவத்திரு அடிகளாரிடம் வாழ்த்துப் பெற்றார். முத்துராமனாரை நினைவில்கொண்டு, பழைய நினைவுகளை வினவி, தவத்திரு அடிகளார் அவர்கள் ஆசி வழங்கினார். நம் மருத்துவரும் உணவுக்கொடைக்குத் தம் பங்காகச் சிறு தொகையை வழங்கினார். அத்தொகை அதிகமாக உள்ளதே என்று அடிகளார் குறிப்பிட்டு, கொடை வழங்கும்பொழுது துன்பப்பட்டு வழங்கக்கூடாது என்றும் அவரவர்களின் தகுதிக்கு உட்பட்டே கொடை வழங்க வேண்டும் என்றும் கடன் வாங்கி வழங்குதல் கூடாது என்றும்  அன்புக்கட்டளையிட்டார்கள். 

 உணவுக்கொடைக்கு மிகச் சிறு தொகை ஒன்றை நானும் அடிகளாரின் திருக்கையில் அளிக்க முற்பட்டேன். அன்பால் பரிவுடன் என்னை நோக்கிய அடிகளார், புலால் உண்பீர்களா? என்றார். ஆம் உண்பேன் என்றேன். அப்படியா? பாவம் செய்த கையால் வழங்கும் தொகையை ஏற்கமாட்டேன் என்று தொகையைத் திருப்பியளித்தார். விரைவில் புலால் மறுப்பில் ஈடுபடுவேன் என்றும் உயிர்க்கொலையை ஆதரிக்கமாட்டேன் என்று கூறியதும், வாழ்த்துரைத்து, அத்தொகையை ஏற்றார். இதுபோன்று தொண்டர்கள் வழங்கும் சிறு சிறு தொகையாலும், ஓங்காரக் குடில் தொண்டர்கள் திரட்டியளிக்கும் கொடைகளைக் கொண்டும்தான் ஈடு சொல்லமுடியாத பசிப்பிணி போக்கும் இவ்வறப்பணி நடைபெறுவதை அறிந்து, நாமும் எதிர்காலத்தில் குடில் தொண்டராக மாற வேண்டும் என்று உறுதியேற்று, அடிகளாரிடம் விடைபெற்றேன். ஓங்காரக்குடிலின் திருவமுதுகொண்ட ஒரு கைப்பையை அன்பளிப்பாக அளித்தார்கள். 

 ஓங்காரக்குடிலின் செயல் மறவர்களாக விளங்கும் பல தொண்டர்களை மாலைப்பொழுதில் கண்டு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அவரவர்களும் எவ்வாறு  குடிலுடன் தங்களுக்குத் தொடர்பு அமைந்தது என்று குறிப்பிட, புதுப்புது புதினங்களைப் படிப்பது போல் உணர்ந்தேன். வாழ்க்கையில் துன்பத்தில் உழன்ற பலர் அடிகளாரின் வாழ்த்தினால் நன்னிலைக்கு வந்துள்ளதைக் குறிப்பிட்டனர். பகுதி நேரமாகக் குடிலுக்கு வந்துபோனவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கி, ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் தொண்டாற்றுவதை நினைத்து, அடிகளாரின் கொள்கை மேன்மையை அறிந்தேன். ஓங்காரக்குடிலிலிருந்து ஞானத்திருவடி என்னும் மாத இதழ் வெளிவருகின்றது. குடில்சார்ந்த செய்திகளைத் தொண்டர்களுக்குக் கொண்டுசேர்க்கும் பெரும்பணியை இவ்விதழ் செய்துவருகின்றது. 


ஞானத்திருவடி இதழ் அஞ்சலில் சேர்ப்பதற்கு ஆயத்தமாதல்

 துறையூர் வங்கிப் பணியில் இணைந்த மேலாளர் ஒருவர் உணவுக்கொடை வழங்குவதைக் கேள்வியுற்று, தாம் பணியேற்ற முதல் நாள் உணவருந்துவதற்குத் தொண்டர்களுள் ஒருவராக அமர்ந்து குடலில் உணவருந்தினார். அதனைக் கண்ட குடில் தொண்டர் ஒருவர், நீங்கள் வங்கி மேலாளர் ஆயிற்றே! என்று வினவ, ஆம் என்று உரைத்த மேலாளர் பின்னாளில் ஓங்காரக் குடிலின் பணிகளை அறிந்து, நிரந்தரத் தொண்டராக மாறி, குடில் வளர்ச்சிக்கு உதவும் மேலாண்மைக்குழுவினருள் ஒருவராக இணைந்துள்ளமை அறிந்து, உண்மையான ஓர் அறநிலைக்கு வந்துள்ளோமே என்று மகிழ்ந்தேன். 

 இரவு உணவும் குடிலில் சிறப்பாகக் கிடைத்தது. உண்டு முடித்தோம். இரவு முழுவதும் உரையாடிப் பெற்ற செய்திகளின் அடிப்படையில் ஓங்காரக் குடிலின் வளர்ச்சி, பணிகள், தொண்டுகள் யாவும் ஓரளவு தெரியவந்தன. குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை ஓங்காரக் குடிலுக்கு வரவேண்டும் எனவும் தவத்திரு அடிகளாரின் நல்லாசியினைப் பெறவேண்டும் எனவும் தீர்மானம் செய்துகொண்டேன். 

 காலையில் எழுந்து, கடமைகள் முடித்து, மீண்டும் ஒரு சுற்று ஓங்காரக் குடிலின் விடுபட்ட பகுதிகளைப் பார்வையிட்டோம். ஊருக்குப் புறப்படும் நிலையில் மீண்டும் அடிகளாரைச் சந்தித்து, முறைப்படி விடைபெற்றுச் செல்லுங்கள் என்று அன்பர்கள் குறிப்பிட்டனர். இடையில் ஓங்காரக் குடில் வெளியிட்டுள்ள வெளியீடுகள், ஒலிப்பேழைகளை வாங்கினோம். குடிலை ஒட்டி இருந்த அயல்நாட்டினர் தங்கும் விடுதியையும் கண்டு மகிழ்ந்தோம். சுற்று மதிலோ, பாதுகாப்புச் சுவரோ இல்லாமல் குடில் விடுதிகள் பாதுகாப்பாகவே இருப்பதைக் கண்டு, உண்மைநிலை உணர்ந்தேன். நினைவுக்குச் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன், மீண்டும் அடிகளாரின் திருவடி பணிந்து, நல்லாசி பெற்று ஊருக்குப் புறப்பட்டோம். 

 குடிலின் இயக்கம் கருணை உள்ளம் கொண்ட அன்பர்கள் தரும் பொருட்கொடையால்தான் நடைபெறுகின்றது. மலேசிய அன்பர்கள் பலரும் தமிழகத்து அன்பர்கள் பலரும் தங்களால் இயன்ற பொருட்கொடைகளைத் தந்தவண்ணம் உள்ளனர். சிங்கப்பூர், இலண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள தொண்டர்கள் பசிப்பிணி போக்கும் ஓங்காரக் குடிலின் பணியில் தங்களைக் கரைத்துக்கொண்டு உதவி வருகின்றார். குடிலின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை இருப்பில் இல்லை எனவும், அவ்வப்பொழுது கிடைக்கும் தொகையைக் கொண்டே அறப்பணி நடைபெற்று வருகின்றது என்பதும் அறிந்தபொழுது வியப்பு ஏற்பட்டது. அறக்கொடையாளர்கள் தரும் தொகை மளிகைப்பொருளாகவோ, கறி காயாகவோ, அரிசியாகவோ ஓங்காரக் குடிலுக்கு வந்துசேர்கின்றது. உணவுபடைக்கும் அரிசி, பருப்பு, கறி காய் யாவும் முதல் தரமானதாகவே குடிலுக்குக் கொள்முதல் செய்யப்படுகின்றன. உணவினை இலவசமாக வழங்குகின்றோம் என்று தரமற்ற பொருள்கள் குடிலுக்கு வர வாய்ப்பே இல்லை. 

 திருவள்ளுவரின் கொள்கையிலும் திருமூலர் மரபிலும் வள்ளலார் நெறியிலும் வாழும் சித்தராக விளங்கும் தவத்திரு ஆறுமுக அரங்க மகாதேசிகர் அவர்களின் தவ மேன்மையாலும், கருணையுள்ளம் கொண்ட, தன்னலம் இல்லாத, கொள்கைவழிப்பட்ட ஓங்காரக்குடில் தொண்டர்களாலும் குடிலின் பசிப்பிணி மருத்துவம் தொடர்ந்தவண்ணம் இருக்கும். 

ஓங்காரக்குடில் இணையதளம்: https://www.agathiar.in/ 

ஓங்காரக்குடில் அறப்பணிக்குக் கொடை நல்க விரும்புவோர் கவனத்திற்கு:

https://www.agathiar.in/donation/ 

முகவரி:

SRI AGATHIAR SANMAARGA CHARITABLE TRUST

(Reg. No : 85/4 – 2002)

Sri Bujanda Maharishi Hall,

113 - Extension , 621010 Thuraiyur,

Tiruchirapalli District, Tamilnadu, India.

 Phone: 0091-4327-255184, 0091-9688 278666

 Email: trustkudil@gmail.com 

 வாருங்கள்! பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்வோம்! பசிப்பிணி போக்குவதே உலகில் தலையாய அறம் என்று நினைப்போம்!

புதன், 9 மார்ச், 2022

மருத்துவ மாமணி ப. உ. இலெனின் நினைவுகள்…

  


     நான் பணியாற்றுவதற்குப்     புதுவை வந்தபொழுது  மருத்துவர் .. இலெனின் அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது. நூல்களின் வழியாக முன்பே அறிமுகம் ஆனவர்தான். எங்கள் அன்பிற்குரிய பேராசிரியர் த. பழமலை அவர்களின் மகன் இவர் என்பதும் எங்களின் நட்பு வேர்பிடித்ததற்குக் காரணமாக இருந்தது. 

நான் மாணவனாக இருந்தபொழுதே பேராசிரியர் த. பழமலை அவர்களைக் கவிதை வழியாக அறிந்திருந்தேன். பழமலையின் சனங்களின் கதையில் இடம்பெறும் “கீழைக்காட்டு வேம்பு” கவிதையால் என் உள்ளத்துள் உறையத் தொடங்கியவர்.  சில மாநாடுகளில், கலந்துரையாடல் கூட்டங்களில் பழமலையைக் கண்டு பேசியுள்ளேன். அவரின் தோற்றம் நகரியத் தோற்றமாக இருந்தாலும் செயல்பாடுகள் யாவும் சிற்றூர்ப்புற உழவருக்கு உரியதாக இருந்தது. இவர்தம் புரட்சிகர சிந்தனைகளை அந்நாளில் பார்த்தபொழுது, குடும்பத்தைக் கவனிக்காத ஆளாக எனக்குத் தெரிந்தார். பின்னர்தான் பழமலையின் பிள்ளைகள் மருத்துவர், நீதியரசர், பொறியாளர் என்று தகுதி சான்றவர்களாக வளர்ந்துள்ளமை அறிந்து வியப்புற்றேன். இலெனினுடன் பழகத் தொடங்கியபொழுதுதான் பழமலை அவர்கள் பொதுவுடைமை இயக்கங்களில் ஈடுபாடு உடையவர் என்பதும், வாழ்நாள் முழுவதும் கூட்டம், பேச்சு, எழுத்து என்று காலத்தைக் கழித்தவர் என்பதும் தெரிந்தது. அம்மாதான் குடும்பத்தைக் கவனித்து, பிள்ளைகளை வளர்த்தார்கள் என்பதும் புரியத் தொடங்கியது. இது நிற்க. 

மாலை நேரங்களில் கிழமையில் இரண்டு முறையாவது இலெனின் அவர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். என் வீட்டுக்கு அருகில்தான் அவரின் மருத்துவமனை. நடந்து சென்று திரும்பலாம். நகருக்குச் செல்லும்பொழுதெல்லாம் அம்பலத்தடையார் மடத்துத் தெருவில் இருந்த அந்த மருத்துவமனைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்புவேன். மருத்துவம், உடல்நலம் பற்றி எங்கள் உரையாடல் நீளும். அவர் எழுதிய கட்டுரைகளை நூல்களை வழங்குவார். ஓய்வில் படித்துக் கருத்துரைப்பேன். எம் குடும்பத்தினர்க்கு அவ்வப்பொழுது மருத்துவம் பார்த்துக்கொள்வோம். எனக்கு ஏதேனும் காய்ச்சல், இருமல் இருந்தால் சொல்வேன். அப்பொழுது சில மாத்திரைகளையும் அவர் குடிப்பதற்கு வைத்துள்ள தண்ணீரையும் கொடுத்து, இவற்றை வாயில் போடுங்கள் என்பார். வீடு திரும்புவதற்குள் குணம்பெற்றிருப்பேன். வெளியூர் பயணங்கள் மேற்கொண்டிருந்தால், தூசு படிந்த காற்றை உட்கொண்டதால்  எனக்கு இருமல் வருவது இயற்கை. அந்த இருமல் இலெனின் அவர்களின் ஒருவேளை மருந்துக்கு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். இந்தக் கொரானா காலத்தில் இலெனின் இருந்திருந்தால் ஏதேனும் ஒரு மருந்தைக் கொடுத்து, பலர் உயிரைக் காப்பாற்றியிருப்பார். இதுவும் நிற்க. 

பேராசிரியர் தமிழண்ணல், சிங்கப்பூர் கோவலங்கண்ணன் உள்ளிட்டோர் இலெனின் மருந்தால் நலம்பெற்றனர். அவர்களுக்கு உரிய மருந்துகளை வாங்கித் தனித்தூதில் அனுப்புவதை விருப்பமாகச் செய்து வந்தேன். அவர்களும் மருந்துகளை உண்டு, நலமுற்ற செய்திகள் எனக்கும், இலெனினுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். 

  ஒருநாள் புதிய மருத்துவனை கட்டிக்கொண்டு, இலெனின் அவர்கள் இடம் மாறிய செய்தி கிடைத்தது. இருக்கை, தொலைக்காட்சி வசதிகளுடன் அந்தப் புதிய மருத்துவமனை நல்ல காற்றோட்டத்துடன் இருந்தது. சற்றுத் தொலைவு என்றாலும் பழைய பழக்கத்தில் அடிக்கடி சென்று இருமல் மருந்து வாங்கி உண்பேன். நான் எழுதிய நூல்களைக் கொடுப்பேன். அவரும் அவரின் நூல்களைப் பரிசளிப்பார். அனைத்துத் துறையிலும் ஆழங்கால் பட்ட புலமையுடையவர் என்பதால் எளிய நடையில் மருத்துவச் செய்திகளை எழுதுவார். படித்தவர்கள், எளிய படிப்பறிவு உடையவர்கள்கூட இவரின் நூல்களையும் கட்டுரைகளையும் ஆர்வமாகப் படிப்பார்கள். பல இதழ்களில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உள்ளூர்த் தொலைக்காட்சிகளில் தோன்றி, மருத்துவ விளக்கம் இலவசமாக அளிப்பார். இலெனின் மருத்துவத்தை நேசித்தார். மக்கள் இவரின் மருத்துவத்தை நேசித்தனர். 

எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் இவர் மருத்துவத்திற்கோ, மருந்துக்கோ காசு வாங்குவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன் நம் ஊர்ப் பையன் ஒருவனுக்குச் சிறுநீரகக் கல் உருவாகி, உடல் அளவிலும் மன அளவிலும் வருந்திக்கொண்டிருந்தான். ஊருக்குச் சென்றபொழுது அழைத்து வந்து அவனை இலெனின் முன் கொண்டு சென்று நிறுத்தினேன். ஓரிரு மாதங்களுக்கு உரிய மருந்துகளைக் கொடுத்து, உண்ணச் சொன்னார். “சல்லிக்காசு” செலவு இல்லாமல் நலம்பெற்றான். 

புதுவையில் பிற மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கச் செல்வதை நான் அதிகம் விரும்புவது இல்லை. முன்பதிவு, காத்திருப்பு, ஆய்வுகள், மருத்துவர் கூலி, மருந்து செலவு யாவும் நம்மை அலைக்கழிக்கும். நெஞ்சாங்குலை ஆய்வுக்கு ஒருவாரம் காத்திருக்க வேண்டியிருக்கும். கால்முறிவுக்கு சிலநாள் காத்திருக்கச் சொல்வார்கள். கூட்டம் அலைமோதும். ஓரிரு மணித்துளிகளில் நம்மை மருத்துவர் வெளியேற்றிவிடுவார். அடுத்த நோயாளியை ஆர்வமுடன் எதிர்நோக்குவார். நம் இலெனின் அவர்களிடம் மருத்துவம் பார்க்கச் சென்றால் குடும்பநலம், நாட்டு நடப்பு, பழைய மருத்துவ வரலாறு, இப்பொழுது உள்ள நிலை என அனைத்து விவரங்களையும் பேசித் தகவலறிந்த பிறகே மருத்துவம் பார்ப்பார். மருந்து தருவார். வாசற்படி வரை வந்து வழியனுப்புவார். அவரின் அன்புமொழிகளைக் கேட்டே பலர் குணம்பெற்றிருப்பர். இவ்வாறு ஆறுதல் மொழிகளைக் கேட்கவே மீண்டும் ஒருமுறை வரலாம் என்றும் நினைப்பர். 

ஒருமுறை என் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு மருத்துவர் சொல்ல ஓர் ஆண்டாக அதற்குரிய மாத்திரையை உண்டுவந்தேன். இதனை அறிந்த இலெனின் கடும்கோபம் கொண்டார். வாழ்நாள் முழுவதும் மருந்து உண்ணும் அளவிற்கு அது கொடிய நோய் இல்லை. உணவுப்பழக்கம் போன்றவற்றில் சில மாற்றங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறி, தடுத்தாட்கொண்டார். மருந்தை நிறுத்தி, உணவில் கவனம் செலுத்தினேன். இயல்புநிலைக்குத் திரும்பினேன். 

மருத்துவத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தாலும் இலெனின் அவர்கள் அதனை ஈடுபாட்டோடு செய்தார். ஆங்கில மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை எடுத்துச் சொல்லி, மருந்தில்லா நிலையில் வாழ நம்மைத் தயார்படுத்துவார். நோய் அற்றுப் போகும்படி அவரின் மருத்துவ முறை இருக்கும். நாள்பட்ட நோயுடையவர்களும் இலெனின் அவர்களால் நீண்டநாள் உயிர்வாழ்ந்தனர். அவரை அணுகி மருத்துவம் பார்த்தவர்கள் அரசு அதிகாரிகள் முதல் அன்றாடம் உழைத்து வாழ்வோர் வரை எனப் பலதரப்பட்டவர்களும் இருந்தனர். அனைவரையும் ஒரே முறையில் சீராக நடத்துவது அவர் இயல்பு. 

மருத்துவத்தாலும், மருத்துவ அறிவு வெளிப்படும் எழுத்தாற்றலாலும் எங்களையெல்லாம் ஈர்த்த இலெனின் அவர்கள் திடுமெனப் புத்தாண்டு நாளின் வைகறைப் பொழுதில் இயற்கை எய்தினார் என்ற  செய்தி கேட்டு, இடியை ஏற்ற மயில்போல் குலைந்தோம். உடன் விரைந்தோடிச் சென்று, இலெனின் அவர்களின் செம்மாந்த உடலுக்கு அக வணக்கம் செய்தோம். இல்லத்திலிருந்த உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ஒருவருக்கு ஒருவர் கவலைகளைப் பகிர்ந்துகொண்டோம். அழுது உருகினோம்.  தக்கவர்களுக்குத் தகவல் தெரிவித்தோம். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நண்பர்களும் உறவினர்களும் குழுமினர். இறுதி வணக்கம் செலுத்தி, மாலையில் அவர் நல்லுடலைக் கொண்டுபோய் நன்காட்டில் அடக்கம் செய்தோம். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? 

“நெருநல் உளனொருவன் இன்றில்லை” என்பதுதான் உலகத்தின் பெருமையாக உள்ளது. “பயன்மரமாக” வாழ்ந்த இலெனினின் வாழ்க்கை புகழ்மிக்க வாழ்க்கையாகும். 

ஆண்டு ஒன்று உருண்டோடியது. இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். பல ஆண்டுகளாக நான் மருத்துவம் பார்த்துக்கொண்ட வகையில் இலெனினுக்கு  எவ்வளவு தொகை தர வேண்டியிருக்கும்?. இலெனின் ஒவ்வொரு முறையும் இப்படிதான் சொல்வார். 

“போங்க சார்! என்னிடம் வைத்தியம் பார்த்துக்கொண்டதற்கு நான்தான் உங்களுக்குப் பணம் தரவேண்டும்”

 என் ஈர விழிகளில் இலெனின் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

நூல்: மக்கள் மருத்துவர் ப.உ.லெனின் வாழ்வும் பணியும் நூலில் இடம்பெற்றுள்ள என் கட்டுரை.

வெளியீடு: பேராசிரியர் த. பழமலை, 182, இளங்கோ வீதி, சீனிவாசா நகர், சாலாமேடு - 605401 விழுப்புரம் மாவட்டம். தொடர்பு எண்: 99426 46942

நூல் விலை உருவா: 200 - 00