நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
பயிலரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயிலரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்- காட்சிகள்


பங்கேற்பாளர்கள்

சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை, கணினித்துறை இணைந்து நடத்தும் தமிழ் இணையப் பயிலரங்கின் சிறப்புச்செய்தி இன்று(22.12.2013) பகல் 1.30 மணிக்கு(இந்திய நேரப்படி) மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கின்றோம். வாய்ப்பு உள்ள நண்பர்கள் கண்டு மகிழலாம். 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்

சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 22. 12. 2013 (ஞாயிறு) காலை 10 மணி முதல் 4 மணி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழ் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள்ந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க உள்ளார். முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார்.

வியாழன், 19 டிசம்பர், 2013

பெருந்துறை மகாராசா கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்க விழா, இணையம் கற்போம் கருத்தரங்கு



ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாராசா கல்லூரி மாணவர் மன்றத் தொடக்க விழாவும், இணையம் கற்போம் கருத்தரங்கும் 20.12.2013 வெளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகின்றன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் காலை நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தோ. இரா. பெரியசாமி அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.

கல்லூரியின் தாளாளர் திருவமை ப. தரணிதரன் அவர்கள் தலைமையிலும்  கல்லூரி முதல்வர் முனைவர் சு. இராசலெட்சுமி அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும் மாணவர் மன்றத் தொடக்க விழாவில் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணாக்கரின் ஆளுமை என்ற தலைப்பில் முற்பகலிலும், இணையம் கற்போம் என்ற தலைப்பில் பிற்பகலிலும் உரையாற்ற உள்ளார். 

முனைவர் ந. இராசேந்திரன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.


சனி, 29 ஜனவரி, 2011

உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கின்றது...


பார்வையாளர்கள்



பார்வையாளர்கள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாராசா கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்கின்றது. பயிலரங்கின்
சிறப்பு நோக்கிய நிர்வாகத்தினர் கூடுதலாகக் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களையும் அரங்கில் கலந்துகொண்டு பயன்பெற விரும்பினர்.எனவே கூடுதல் மாணவர்களுடன் பயிலரங்கம் தொடர்கின்றது...

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கோவை பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கியது...


பார்வையாளர்கள் ஒரு பகுதி

கோவையில் இன்று26.12.2010 காலை 10.30 மணியளவில் தொடங்கியது.
கல்வியகம் அரங்கில் தொடங்கிய பயிலரங்கில் திரளான மாணவர்கள்,
தமிழ் ஆர்வலர்கள்,வலைப்பதிவர்கள் கலந்துகொண்டனர். பிரின்சு பெரியார் அறிமுக உரையாற்றினார். தலைமை வசந்தம் இராமச்சந்திரன்.புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார். இலதானந்து கலந்துகொண்டு தம் வலைப்பதிவு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பேராசிரியர்கள் துரை,இரவி ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.கோவை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர். தமிழ்த்தேனீ, அமெரிக்காவிலிருந்து வைரம் ஸ்கைப்பில் வந்து உரையாடினர். மாணவர்களுக்கு இணையப் பயன்பாட்டின் பல கூறுகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பயிலரங்கம் தொடர்கின்றது.


பார்வையாளர்கள் ஒரு பகுதி

சனி, 11 ஜூலை, 2009

புதுவை அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம்


பயிற்சியில் கலந்துகொண்ட தமிழாசிரியப்பெருமக்கள்

புதுவை அரசு அண்மையில் கணிப்பொறி இல்லாத கல்வி நிறுவனங்களே இல்லை என்னும் அளவிற்கு மிகச்சிறந்த ஒரு திட்டத்தைப் புதுவையில் நடைமுறைபடுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைவருக்கும் கல்வித்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் கணிப்பொறி,அகண்டவரிசை இணைய இணைப்புக்கு வழி வகை செய்துள்ளது. இதனால் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதன்வழி செய்திப்பரிமாற்றத்தில் மிகச்சிறந்த முன்னேற்றமும் ஏற்பட உள்ளது.

இதனை உணர்ந்த கல்வித்துறையினர் புதுச்சேரியில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்குப் புத்தொளிப்பயிற்சி வழங்கும் பொழுது என்னை அழைத்து அவர்களுக்குத் தமிழ் இணையம் பற்றிய வகுப்பெடுக்கும் வாய்ப்பினை வழங்கி வருகின்றனர்..இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் புதுவை மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து பயிற்சி பெற்றுள்ளனர்.

07.07.2009 இல் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சற்றொப்ப அறுபதிற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் தமிழ் இணையம் பற்றிய செய்திகளை அறிந்தனர்.இவர்களுக்குத் தமிழ்த் தட்டச்சுமின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,,பயன்பாட்டுக்குரிய தளங்கள்,தமிழ் விக்கிபீடியா, நூலகம் சார்ந்த தளங்கள்,கல்வி சார்ந்த தளங்களை அறிமுகம் செய்து வைத்தேன்.

ஓய்வுபெறும் அகவையில் இருந்தவர்கள் கூட ஆர்வமுடன் கேட்டனர்.சிலர் வலைப்பூ உருவாக்கி என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினர்.மூத்த,இளைய ஆசிரியப்பெருமக்களுள் பலர் இணையத்தின் வீச்சைத் தெரிந்து வைத்திருந்தனர்.தமிழில் எளிமையாக எடுத்துரைப்பதை அனைவரும் பாராட்டினர்.

தட்டச்சுப் பலகை அமைப்பு(ஒளியச்சு)என்.எச்.எம்.குறுவட்டு அவர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.

முனைவர் இராச.திருமாவளவனுடன் நான்


பயிற்சியில் கலந்துகொண்டவர்களில் ஒருபகுதியினர்

முனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து தமிழாசிரியர்கள் தமிழ் இணைய அறிவு பெற வழிவகுத்தார்.

சனி, 20 ஜூன், 2009

நாகர்கோயில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நிறைவு...




20.06.2009 வைகறையில் சில்லென்ற காற்று தொடர்வண்டியில் அரிதுயில்கொண்ட என்னை மெதுவாக எழுப்பியது.ஆரல்வாய்மொழி என்ற இடத்தில் தொடர்வண்டி மாற்றுப்பாதைக்காகத் தேங்கி நின்றது.காற்றாலைகள் எங்கும் கண்ணில் தென்பட்டன.ஒரிசா பாலு நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று வினவினார்.அடுத்து செல்வதரன் அவர்களும் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று கேட்டார்.செல்வதரன் நாகர்கோயில் தொடர்வண்டி நிலையத்தில் எனக்காகக் காத்திருந்தார்.அரைமணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு தொடர்வண்டி உரிய இடத்தில் சோம்பல்முறித்து நின்றது.



செல்வதரன் உந்துவண்டியில் ஏறி விடுதிக்குச் சென்றேன்.ஒரிசா பாலு என் வருகைக்காகக் காத்திருந்தார்.அருகில் பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களும் காத்திருந்தார்.தம்பி செல்வமுரளியும் சேலத்திலிருந்து வந்தார்.பெங்களூரிலிருந்து நண்பர் விசயலட்சுமணன் அவர்களும் வந்திருந்தார்.குளித்து முடித்து அனைவரும் சிற்றுண்டி உண்டோம்.இடையில் எழுத்தாளர் செயமோகன் அவர்களிடம் பேசி வாய்ப்புக்கு ஏற்ப சந்திப்பதாகச் சொன்னேன்.





பங்கேற்பாளர்கள்
அனைவரும் இணையப்பயிலரங்கம் நடக்கும் இடத்தைச் சரியாக 9.30 மணிக்கு அடைந்தோம். பதிவுக்குப் பிறகு அரங்கில் நுழைந்தோம்.மானிங் ஸ்டார் கல்லூரியில் உள்ள கணிப்பொறி அரங்கு நிகழ்ச்சிக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணிப்பொறிகள் இணைய இணைப்புடன் இருந்தன. காற்று வளிப்பாட்டு அறை. அனைவரும் மகிழ்ச்சியுடன் அமர்ந்தனர்.

பலதுறை சார்ந்த 60 பேர் பயிற்சி பெற வந்திருந்தனர். திருநெல்வேலியிலிருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஆர்வமுடன் கலந்துகொண்டார். கரூரிலிருந்து இரண்டு அன்பர்கள் வந்திருந்தனர்.அதில் ஒருவர் தட்சு தமிழ் இதழின் செய்தியாளர். நாகர்கோயில் சார்ந்த இதழியல்துறை நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். வங்கியில் பணிபுரியும் நண்பர்கள் நீதிமன்றத்தில் பணிபுரிபவர்கள் என ஆணும் பெண்ணுமாகப் பலர் வந்திருந்தனர்.

அருட்தந்தை விக்டர் அவர்கள்(தாளாளர்)குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். செந்தீ நடராசன் அவர்களும் நானும் குத்துவிளக்கேற்றினோம். விக்டர் அவர்களும் செந்தீ அவர்களும் மிகச்சுருக்கமாகவே உரையாற்றினர். அரங்கினைச் செல்வதரன் அவர்கள் சரியாக 10.10 மணியளவில் என்னிடம் கொடுத்தார். தமிழ் இணையம் ,கணிப்பொறி பற்றியும் தமிழ்த்தட்டச்சு பற்றியும் அடிப்படையான செய்திகளை எடுத்தரைத்தேன். தமிழ்மணம், மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை பற்றியும் மின்னிதழ்கள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன். நண்பர் செல்வமுரளியும்,விசயலட்சுமணன் அவர்களும் பின்புலத்தில் இருந்து தொழில் நுட்பச்சிக்கல் இல்லாமலும் தொய்வில்லாமலும் பார்த்துக்கொண்டனர். நானும் மாணவர்களை ஆளுவதில் பயிற்சி பெற்றவன் என்பதால் மகிழ்ச்சியாகவே நான்குமணிநேரம் வகுப்பெடுத்தேன்.இரண்டு மணிக்கு மேல் மின்சாரம் நிற்கும் என்றார்கள்.அதனால் இரண்டு மணிவரை வகுப்பெடுத்தோம்.உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மூன்று மணிக்குச் சரியக ஒன்றுகூடினோம்.அதன் பிறகு சிறிது நேரத்தில் அறிமுகம் செய்துகொண்டோம்.

ஒரிசா பாலு அவர்கள் விக்கிபீடியா, விக்கி மேப்பியா என்ற பகுதியை விளக்கி உலகத்தை எங்களுக்குக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.கடலியல் ஆய்விலும் வரலாற்று ஆய்விலும் வல்லவர் பாலு என்பதால் அனைவரையும் தூங்கவிடாமல் தம் பணியை மிகச்சிறப்பாகச் செய்தார்.

மு.,செல்வமுரளி,விசயலட்சுமணன்

தம்பி செல்வமுரளியும் விசயலட்சுமணன் அவர்களும் கூகுள் நிறுவனத்தில் ஜிமெயில் கணக்குத் தொடக்கம் பற்றியும் கமுக்கக்குறியீடுகள் பற்றியும் காட்சி விளக்கம் நல்கினர்.பயிற்சி பெற வந்த ஒருவருக்கு புதிய கணக்கு தொடங்கி வழங்கினர். அதனை அடுத்து வலைப்பூ உருவாக்கம் பற்றி காட்சி விளக்கத்துடன் பயிற்சி வழங்கினர். பயிற்சிக்கு வந்தவர்களுக்கு NHM எழுதி சில படிகள் வழங்கினேன்.முன்னமே காலையில் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பை ஒளியச்சு எடுத்து அனைவருக்கும் வழங்கினோம்.
ஒரிசா பாலு, செந்தீ நடராசன், செல்வமுரளி மற்றுமுள்ள தமிழார்வலருடன்

நிகழ்ச்சி நிறைவில் அனைவரும் தங்கள் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டனர். எட்டு வலைப்பதிவர்கள் வந்து கலந்துகொண்டமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இணையத்திலும் எழுத்துத்துறையிலும் ஆர்வம்கொண்ட பலரைக்கொண்டு இந்தப் பயிலரங்கம் வடிவமைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகளில் தொடர்ந்து இத்தகு பயிலரங்குகள் நடத்த கிறித்தவ தந்தைமார்கள் பலர் விரும்பியுள்ளனர். வாய்ப்புக்கு ஏற்ப அடுத்த பயிலரங்குகளுக்கு வருவதாக அனைவரிடமும் விடைபெற்றேன்.

காலச்சுவடு அலுவலகம் சென்று பேராசிரியர் பெர்னாடு பேர்டு அவர்களின் பேச்சைக் கேட்க நினைத்திருந்தேன்.நாகர்கோயிலில் மழை என்பதால் வெளியே செல்லமுடியவில்லை.இரவு அறைக்கு அறிஞர் குமரிமைந்தன் அவர்கள் வந்து உரையாடினார்கள்.குமரிக்கண்ட ஆய்வுகள், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வரலாறு பற்றி உரையாடினோம்.நடு இரவு வரை எங்கள் உரையாடலும் இணைய வடிவமைப்புப் பணிகளும் தொடர்ந்தன…

தமிழ் இணையப்பயிலரங்கம் நாகர்கோயிலில் இனிதே தொடங்கியது...

தமிழ் இணையப்பயிலரங்கம் இன்று 20.06.2009 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாகர்கோயில் மானிங்ஸ்டார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது.
அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளமும் கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,அமிர்தா ஊடக ஆய்வு மையமும்,அமுதம் தமிழ் மாத இதழும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த ஏற்பாடு செய்திருந்தன.

ஏறத்தாழ அறுதுபேர் பெயர்களைப் பதிவு செய்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சி பெற்றனர்.காலையில் 10 மணிக்குக் குத்துவிளக்கேற்றி மானிங் ஸ்டார் கல்லூரி தாளாளர் விக்டர் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.எழுத்தாளர் செந்தீ நடராசன் அவர்கள் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.செல்வதரன் அவர்கள் பயிலரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மிகச் சுருக்கமாகத் தொடக்கவிழா நடந்தது.

காலையில் பத்து மணியளவில் என் உரை தொடங்கியது.தமிழ்த்தட்டச்சு வகைகள்,தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு,பயன்பாடு பற்றி எடுத்துரைத்தேன்.மின்னஞ்சல் உரையாடல் வசதிகளை எடுத்துரைத்துக் காட்சிவழி விளக்கினேன்.என் உரை சிறப்பாக அமைய நண்பர் செல்வமுரளி,விசய லட்சுமணன் ஒரிசா பாலு ஆகியோர் தொழில்நுட்ப அளவிலான பணிகளைக் கவனித்தனர்.

உரையாடல் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்த போது எழுத்தாளர் செயமோகன் அவர்கள் எங்களுடன் இணையம் வழி பங்கேற்று அனைவருக்கும் வாழ்த்துரைத்தார்.அதுபோல் முனைவர் நா.கண்ணன் அவர்கள்(கொரியா)எங்களுடன் உரையாடலில் பங்கேற்றார். தமிழ்க்காவல் முருகையன்,திரட்டி வெங்கடேசன் ஆகியோரும் உடனடியாக இணைப்புக்கு வந்து வாழ்த்துரைத்தனர்.அரங்கில் இருந்தவர்களுக்குத் தமிழ் வழியில் இந்த அளவு வசதி உள்ளதே என்ற வியப்பும் மலைப்பும் இருந்தது.

மின்னிதழ்கள் என்ற தலைப்பில் அடுத்த நிலையில் என் பேச்சுத் தொடர்ந்தது.தினமலர் நாளிதழ் ஒருங்குகுறியில் வருவது பற்றியும்,அதன் பல்வகை சிறப்புகள் குறித்தும் உரையாற்றினேன்.தினமணி நாளிதழ் அண்மையில் ஒருங்குகுறிக்கு மாறியுள்ளது பற்றியும் பிற ஏடுகள் ஒருங்குகுறிக்கு மாறவேண்டியதன் தேவை பற்றியும் எடுத்துரைத்தேன்.
தமிழ்மணம் தளம் அதன் சிறப்பு முக்கியத்துவம் பற்றியும் காட்சி வழி விளக்கினேன்.அதுபோல் மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,தமிழ் இணையப்பல்கலைக்கழகம்,வரலாறு உள்ளிட்ட தளங்கள் பற்றியும் எடுத்துரைத்தேன்.கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,வங்கியில் பணிபுரிபவர்கள்,அருட் தந்ததையர்கள் பலர் வந்துள்ளனர்.

உணவு இடைவேளைக்கு இரண்டு மணிக்குப் பிரிந்தோம்.மீண்டும் மூன்று மணிக்கு அமர்வு தொடங்கியுள்ளது...

வெள்ளி, 19 ஜூன், 2009

கன்னியாகுமரி மாவட்ட வலைப்பதிவு,எழுத்தாளர் நண்பர்களுக்கு...


மாண்புமிகு கலைஞர் அவர்களால் குமரி முனையில் எடுக்கப்பெற்றுள்ள திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோயில்,சுங்கான் கடை, மானிங் ஸ்டார் பல்தொழில் நுட்பக்கல்லூரியில்(பாலிடெக்னிக்) 20.06.2009 சனி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை தமிழ் இணையப்பயிலரங்கம் நடக்கிறது.திரு.பிரிட்டோ,திரு.செல்வதரன் உள்ளிட்ட நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து இந்தப் பயிலரங்கை ஒரிசா பாலசுப்பிரமணி(B+) அவர்கள் ஒருங்கிணைத்துள்ளார்.

வழக்கம் போல் பல்வேறு தடைகளைக் கடந்து நல்ல உள்ளங்களின் மேலான ஒத்துழைப்பால் இந்தப் பயிலரங்கம் வெற்றியுடன் நடைபெற உள்ளது.உங்கள் அனைவரின் வாழ்த்துதலையும் ஒத்துழைப்பையும் கோருகிறேன்.

கன்னியாகுமரி,நாகர்கோயில்,திருவனந்தபுரம்,திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வலைப்பதிவு நண்பர்களும், எழுத்தாளர்களும்,தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு புதியவர்களுக்கு உதவலாம்.பயிற்சியில் மின்னஞ்சல்,உரையாடல் பற்றி விளக்கும் பொழுது இணைப்பில் உள்ளவர்கள் வந்து பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துரைக்கலாம்.

தரமான பயிற்சி வழங்கப்படுவதால் சில விதிமுறைகள் வகுத்து நிகழ்ச்சியை அமைத்துள்ளோம்.நிறை குறைகள் சுட்டிக்காட்டப்பட்டால் அடுத்த நிகழ்வில் அவற்றைச் சரிசெய்துகொள்வோம்.

புதுவையிலிருந்து நானும் சேலத்திலிருந்து திரு.செல்வமுரளி,விசய இலட்சுமணனும் கலந்துகொள்கிறோம் ஒரிசா பாலசுப்பிரமணியும் வந்துள்ளார்.அனைவரும் இணைந்து பயிற்சியளிக்க உள்ளோம்.தமிழ்த்தட்டச்சு,தமிழ் 99 விசைப்பலகை,மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம்,வலைப்பூ உருவாக்கம்,இணைய இதழ்கள்,வலைத்தளப் பாதுகாப்பு,தமிழ் விக்கிபீடியா,நூலகம் திட்டம்,மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை உள்ளிட்ட இணையம் சார்ந்த செய்திகள் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட உள்ளன.

உணவு,சிற்றுண்டி வழங்கப்படும்.முன்னமே பதிவுசெய்து கொண்டுள்ள நண்பர்கள் உரிய நேரத்தில் வந்து பங்குகொள்ள,பயன்பெற அழைக்கிறேன்.

கிழக்குப் பதிப்பக உரிமையாளர் நண்பர் திரு.பத்ரி அவர்கள் தம் நிறுவனம் சார்பில் வழங்கியுள்ள NHM எழுதியை இருப்பில் உள்ளவற்றைச் சிலருக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்.

பொள்ளாச்சி கவிஞர் சிற்பி ஐயா அவர்களும் பேராசிரியர் கி.நாச்சிமுத்து ஐயாவும்(சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,புது தில்லி),நா.கணேசன்(நாசா விண்வெளி ஆய்வுமையம்),திரு.கல்யாணசுந்தரம்(மதுரைத் திட்டம்,சுவிசர்லாந்து),பேராசிரியர் சி.இ.மறைமலை,முனைவர் பொற்கோ,தகடூர் கோபி,முகுந்து ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

சங்கமம்லைவ்,தட்சுதமிழ் உள்ளிட்ட இணைய இதழ் ஆசிரியர்கள் தங்கள் தளங்களில் இச்செய்தியை வெளியிட்டனர்.செய்தி இதழ்கள்,ஊடகங்கள் இந் நிகழ்வு பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளன.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.நாளை கன்னியாகுமரி-நாகர்கோயிலிலிருந்து எழுதுவேன்.நிகழ்ச்சி பற்றிய படங்களை,பேச்சு விவரங்களை வழங்குவேன்.

தொடர்புக்கு :
9994352587
9790307202
9865894576

சனி, 13 ஜூன், 2009

தமிழ் இணையப் பயிலரங்கம்-நாகர்கோயில்



தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் குமரிமுனையில் தமிழ் இணையப் பயிலரங்கம் ஒன்றை நடத்த அமெரிக்காவில் உள்ள தமிழ் மணம் இணையத்தள நிறுவனமும், கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து திட்டமிட்டுள்ளன.இந்த நிறுவனங்களுடன் இணைந்து அமிர்தா ஊடக ஆய்வுமையமும், அமுதம் மாத இதழும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

கணிப்பொறி,இணையத்தில் ஆர்வம் உடையவர்கள் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.

இடம்: மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி,
சுங்கான்கடை,நாகர்கோயில்(கன்னியாகுமரி மாவட்டம்)
நாள் : 20.06.2009 காரி(சனி)க்கிழமை
நேரம் : காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை

பயிலரங்கில் தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,புகழ்பெற்ற இணையத்தளங்கள் குறித்து காட்சி விளக்கத்துடன் செய்திகள் பேசப்படும்.மின்னிதழ்கள், நூலகங்கள், விக்கிபீடியா, விக்கி மேப்பியா பற்றியும் எடுத்துரைக்கப்படும்.புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன்,சேலம் செல்வமுரளி,ஒரிசா பாலு ஆகியோர் பயற்சியளிக்க உள்ளனர்.பயிலரங்கில் கலந்துகொள்ள உரூவா 100 பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.பகலுணவு உண்டு.

பதிவு செய்ய இறுதிநாள்: 18.06.2009.
முதலில் வருபவருக்கு முதல்வாய்ப்பு

தொடர்புக்கு
9994352587
9790307202
9789575900

புதன், 27 மே, 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23,24-05-2009 இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23,24-05-2009 இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் படக்காட்சிகள்...


மதுரை காமராசர் பல்கலைக்கழகம்


அரங்கில் உள்ள பேராளர்கள்


அரங்கில் உள்ள பேராளர்கள்


ஆய்வுக்கோவை வெளியீடு


துணைவேந்தர் இரா.கற்பகக்குமாரவேல்


கவிஞர் சிற்பி அவர்கள்


துணைவேந்தர் சபாபதிமோகன் அவர்கள்


பேராசிரியர் ஆறு.அழகப்பன் அவர்கள்


துணைவேந்தர் திருவாசகம் அவர்கள்


திருக்குறள் ந.மணிமொழியன்


பேராசிரியர் சுபாசு அவர்கள்


இசையறிஞர் மம்முது அவர்கள்


மு.இளங்கோவன் தமிழும் இணையமும் தலைப்பில் உரை


மு.இளங்கோவனுக்கு அறிஞர்கள் சிறப்பு செய்தல்

திங்கள், 25 மே, 2009

வலைப்பதிவுலகில் திரட்டிகளின் பங்களிப்பு

தகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவியை மக்களுக்குச் செய்துவருகிறது. பரந்து கிடக்கும் உலக மக்களை இணைப்பதுடன் அவர்களுக்குப் பயன்படும் தகவல்களையும் உடனுக்குடன் வழங்குவதில் முன்னிற்பது இணையமாகும்.இணையத்தில் ஆங்கிலமொழியில் தகவல்கள் பரிமாறும் நிலை தொடக்கத்தில் இருந்தது.அயல்நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள தமிழ் எழுத்துருக்களைக் கண்டு பிடித்தனர். அந்த எழுத்துருக்கள் ஒரே சீர்மையாக இல்லாமல் ஒருவர் பயன்படுத்தும் எழுத்து வேறொருவரிடம் இல்லாததால் எழுத்துரு சிக்கல் எழுந்தது.எனவே ஒருங்குகுறி எழுத்தில் எழுத உதவும் எ-கலப்பை என்ற மென்பொருளைச் சேந்தமங்கலம் முகுந்தராசு கண்டுபிடித்த பிறகு எழுத்துரு சிக்கல் தீர்ந்து இன்று செய்திகளைத் தமிழில் தடையின்றிப் பரிமாற வழியேற்பட்டுள்ளது.

தமிழர்கள் இணையத்தைப் பயன்படுத்தி இணையப் பக்கங்களை(Web site) உருவாக்கித் தகவல்களைப் பரிமாறுவது போலவே இணையத்தின் வழியாக வலைப்பூ அமைத்துத் தகவல்களை, படைப்புகளைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

வலைப்பூ என்பது எழுத்துகள்,ஒலி,ஒளி வடிவக்கோப்புகள், ஓவியம், படங்கள் இவற்றை நாமே இணையம் வழியாகப் பதிந்து வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் இணைய சேவையாகும். இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள வலைப்பூக்களில் வெளியாகும் தகவல்களை உடனுக்குடன் திரட்டித்தரும் பணியைத் திரட்டிகள் செய்கின்றன. இத்திரட்டிகளில் தமிழ்மணம், தேன்கூடு http://www.thenkoodu.com/, தமிழ்வெளி,திரட்டி(புதுச்சேரி), தமிழ்க்கணிமை, டெக்னோரட்டி, வேர்ட்பிரசு, மாற்று என்னும் தளங்கள் குறிப்பிடத்தக்கன.இதில் தேன்கூடு தளம் அதன் பராமரிப்பாளர் இல்லாமையால் அண்மையில் செயல்படாமல் போனது. எஞ்சிய தளங்கள் உலகெங்கும் எழுதும் தமிழர்களின் வலைப்பதிவுகளைத் திரட்டித் தருகின்றன. திரட்டிகளைப் பற்றி அறியும் முன் அது வளர்ந்த வரலாற்றை அறிவதும் தேவை.

தமிழில் முதல் வலைப்பூ உருவாக்கியவர் கார்த்திகேயன் இராமசாமி அவர்களாவார். தமிழ்மணம் என்னும் திரட்டியை நடத்தும் இவர் இதன் நிறுவனச் செயலாளராகப் பணிபுரிகின்றார்.2003 சனவரி ஒன்றில் இவர் தம் முதல் வலைப்பூவை இட்டுள்ளார்.2003 இல் தமிழ் ஒருங்குகுறி எழுத்து அறிமுகம் ஆனதும் அனைவரும் வலைப்பூவில் நாட்டம் செலுத்தத் தொடங்கினர். தொடக்கத்தில் தானியங்கி எழுத்துருக்களில் வலைப்பதிவு இருந்தது.பின்னர் தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களில் சிலர் பதிவிட்டனர். இதற்கு எழுத்துருக்கள் தரவிறக்கம் செய்ய வேண்டும்.ஒருங்குகுறி பயன்பாட்டிற்கு வந்த பிறகு வலைப்பதிவின் வளர்ச்சி அதிகமானது.மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்குத் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் பணியை வலைப்பூ செய்தது.

வலைப்பூவில் தொடக்க காலத்தில் தீவிரமாக இயங்கியவர்களில் நா.கண்ணன்,கனடா வெங்கட், மாலன், மதி கந்தசாமி,காசி,நா.கணேசன், முகுந்து, பத்திரி, இராம.கி,விருபா,இரமணீதரன் உள்ளிட்டவர்கள் (இப்பட்டியல் முழுமையானதல்ல.விடுப்பட்ட பெயர்களைத் தெரிவிக்க இணைத்துக் கொள்வேன்) குறிப்பிடத்தகுந்தவர்கள்.


தொடக்க காலத்தில் வலைப்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும் உள்ளிடப்பெற்ற செய்திகள் தரமுடையனவாக விளங்கின.வலைப்பதிவுகளின் எண்ணிக்கை பெருகிய பிறகு பல்வேறு தரமற்ற பதிவர்களை வலைப்பதிவு உண்டாக்கிவிட்டது. மொக்கைப்பதிவு, கும்மிப்பதிவு,கடலைப்பதிவு எனப் பல வகைப்பட்ட பதிவர்கள் தோன்றினர். இவர்கள் தங்கள் பக்கம் படிப்பாளிகளை இழுக்கப் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டனர். திரைப்படம்,திரைப்பட நடிகர்கள்,பாலியல் சார்ந்த செய்திகளை உள்ளிட்டு ஒவ்வொரு வகையில் படிப்பாளிகளைத் தங்கள் பக்கம் இழுக்க நினைத்தனர்.

தொடக்கத்தில் குறைந்த அளவில் பதிவுகள் இருந்ததால் யார் யார் எழுதுகின்றனர் என நண்பர்கள் வழியாக அறிந்து அவ்வாறு எழுதுபவர்களின் பட்டியலை ஒன்றுதிரட்டி மதி கந்தசாமி அவர்கள் தமிழ் வலைப்பதிவர்களை 2003 சூன் மாதம் பட்டியலிட்டுக் காட்டினார். http://tamilblogs.blogspot.com இப்பட்டியல் தமிழ் வலைப்பதிவுக்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்தது. இப்பட்டியலின் துணைகொண்டு தக்க படைப்புகளை வெளியிடுபவர்களை அடையாளம் கண்டு, படிக்க முடிந்தது.என்றாலும் அவர்களின் படைப்புகள் வெளியான உடன் படிக்க முடியாமல் காலம் தாழ்ந்தே படிக்க முடிந்தது.

இப்பட்டியலில் உள்ளவர்கள் வெளியிடும் படைப்புகளை உடனுக்குடன் காட்டும் படியான திரட்டிகளை உருவாக்கும் முயற்சி இக்கால கட்டத்தில் இருந்தது.இந்நிலையில் எ.கலப்பையைக் கண்டுபிடித்த முகுந்து அவர்கள் நியூக்ளியசு என்னும் வலைப்பதிவுக்கு உதவும் மென்பொருளைத் தமிழ்ப்படுத்த வேண்டிய தம் விருப்பத்தை வலைப்பதிவில் அறிவிக்க அமெரிக்காவில் பணிபுரிந்துகொண்டிருந்த காசி ஆறுமுகம் என்னும் வடிவமைப்புப் பொறியாளர் நியூக்ளியசைத் தமிழ்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

பல மணிநேரம் உழைத்து நியூக்ளியசைத் தமிழ்ப்படுத்தும் முயற்சியில் இருந்தபொழுது அதனைச் சோதித்துப் பார்க்கும் தளம் ஒன்று தேவைப்பட்டது.அதற்காக உருவாகியதுதான் தமிழ்மணம்.காம் என்ற தளமாகும்.தமிழ்மணம் தளம் உருவானதும் பலரும் பதிவுசெய்யும் வலைப்பதிவுகள் உடனுக்குடன் திரட்டிக் காட்டியது.ஓரிடத்திற்கு வந்தால் உலகம் முழுவதும் எழுதப்படும் பதிவுகளை உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்பினைக் காசி ஆறுமுகம் உருவாக்கினார் படிப்படியாகத் தமிழ்மணம் வளர்ச்சிபெற்றுப் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டு அனைவராலும் பாராட்டும்படியான தளமாக உருப்பெற்றது. இன்று தமிழ்மணத்தை அறியாமல் பதிவில் ஈடுபடமுடியாது என்ற அளவில் அத் தளம் உலகம் முழுவதும் உள்ள வலைப்பதிவர்கள் அறிந்த தளமாக மாறியுள்ளது.தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட பிறமொழியினருக்கும் தமிழ்மணம் தன் சேவையை அளிக்கிறது. தமிழ்மணத்தில் இன்று 5071 பதிவர்கள் தங்கள் பதிவுகளை இணைத்து எழுதி வருகின்றனர் (25.05.2009).

தமிழ்மணத்தின் சேவை தமிழ் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என உணர்ந்த எழுத்தாளர் மாலன் தம் திசைகள் இதழில் ஆசிரிய உரை எழுதி ஊக்கப்படுத்தினார்.


தமிழ்மணத்தைத் தொடர்ந்து தேன்கூடு என்னும் திரட்டி உருவானது.மிகச் சிறப்பாகச் செயல்பட்ட தேன்கூடு அதன் பராமரிப்பாளர் இல்லாமல் செயல்படாமல் போனது தமிழ் இணைய உலகிற்கு இழப்பேயாகும்.தேன்கூட்டை அடுத்துத் தமிழ்வெளி என்னும் திரட்டி தோற்றம் கண்டது.தமிழ் வலைப்பதிவர்களை ஒன்றிணைக்கும் பணியை அதுவும் மிகச்சிறப்பாகச் செய்து வருகிறது. தமிழ்வெளியை அடுத்துப் புதுச்சேரியிலிருந்து வெங்கடேசு என்னும் கணிப்பொறி வல்லுநரால் திரட்டி.காம் என்னும் பெயரில் திரட்டி ஒன்று உருவாக்கபட்டது.குறுகிய காலத்திலேயே உலகில் அனைவரின் கவனதையும் இத்திரட்டி பெற்றது.இதில் இணைவதற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தாலும் தரமான சற்றொப்ப 2000 பேர் எழுதும் பதிவுகளை இது திரட்டுகிறது.

தமிழ்மணத்தின் சிறப்பு. http://tamilmanam.net/

தமிழ்மணம் உலகில் தமிழுக்கெனத் தோன்றிய முதல் திரட்டி.இதில் உலகின் பல நாடுகளைச்சேர்ந்த 5071 பேர் எழுதும் பதிவுகள் திரட்டப்படுகின்றன .289 பேர் ஒவ்வொரு நாளும் தங்கள் பதிவை இணைக்கின்றனர்.1934 பின்னூட்டங்கள் இடப்படுவது ஒவ்வொரு நாளும் இதன் வழியாக அறியமுடிகிறது(25.05.09).

முகப்பு,இடுகைகள்,பதிவுகள்,"ம"திரட்டி,பூக்கூடை,தமிழ்விழி,கேளிர்,மன்றம்,உதவி / தகவல்,செய்திகள் என முகப்பில் வகைப்பாடு உள்ளது.அவை தவிர அறிவிப்புகள், சூடான இடுகைகள்,வாசகர் பரிந்துரை,பதிவுகள் பற்றிய விளக்கம், பின்னூட்டம்,பதிவர்கள் எழுதிய நூல் அறிமுகம்,பழைய பதிவுகளைக் காணும் வசதி.பழைய பின்னூட்டம் காணும் வசதி எனப் பல வசதிகளை இத்திரட்டி பெற்றுள்ளது.தமிழ்மென்பொருள்களைத் தரவிறக்கிக் கொள்ளும் வகையில் முகவரி தரப்பட்டுள்ளது. இடுகைகளை இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.தமிழ் மணத்தில் நம் வலைப்பூவை இணைக்கும் வசதியும் உள்ளது.நட்சத்திர இடுகைகள் என்னும் பகுப்பில் ஒவ்வொரு கிழமையும் ஒரு பதிவர் முதன்மைப்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படுகிறார்.அவர் பதிவும் அறிமுகம் செய்யப்படுகிறது.


தமிழ்வெளி திரட்டி அறிமுகம் http://www.tamilveli.com/

தமிழ்வெளி திரட்டி 1048 பேர் எழுதும் பதிவுகளைத் திரட்டுகிறது(28.12.08). முகப்பு, பதிவுகள், இணைக்க, தொடர்புக்கு என்னும் தலைப்புகளில் இதன் சேவை அமைகிறது.


முகப்புப் பக்கத்தில் இணைப்பதற்குரிய வசதி எளிமைப்படுத்தப்பட்டு சேவைக்குத் தயாராக உள்ளது. அதன் கீழே அண்மையில் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் பேச்சுகள் ஒலியுடன் கேட்க வசதிகள் உள்ளன.அவற்றைச் சொடுக்கிப் பேச்சினைக் கேட்கலாம்.அவ்வகையில் கி.வீரமணி, மருத்துவர் ச.இராமதாசு,தொல்.திருமாவளவன், கொளத்தூர் மணி, தா.பாண்டியன் உள்ளிட்டவர்களின் பேச்சினைக் கேட்கும் வசதி உள்ளது.

அதன் கீழே நிகழ்வுகள் என்ற தலைப்பில் அண்மைய நிகழ்வுகள் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது.அடுத்து வலைப்பதிவர்கள் இணைத்துள்ள செய்திகள்,இணைத்தவரின் விவரம் காணப்படுகின்றது. அதனை அடுத்து பதிவுகள் குறித்த பின்னூட்டங்கள், அதிகம் பார்வையிட்ட பக்கம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.திரைப்பா ஆசிரியர் அறிவமதி அவர்களின் மண் இதழ் பார்வைக்கு உள்ளது.சுப.வீ அவர்களின் நேர்காணல் உள்ளது.

பதிவுகள் என்ற பகுப்பில் இன்றைய பதிவுகள் முந்தைய பதிவுகள் உள்ளன. பதிவுகளில் தேடென்னும் வசதி உள்ளது.நமக்குத் தேவையானவற்றைச் சொடுக்கி நாம் பயன்பெறலாம். இன்றைய பதிவுகளைச் சொடுக்கினால் தமிழ் ஆங்கிலத்தில் பதியப்பட்ட தலைப்புகளைக் காட்டும். இதில் பதிவுத்தலைப்பு,பதிவர் பெயர்,உள்ளடக்கம்(தொடர் முழுமையல்ல) உள்ளன.முந்தயை நாள்களில் சென்று நாள்,கிழமை குறிப்பிட்டுத் தேட வசதி உள்ளது.

இணைக்க என்னும் பகுதிக்குச் செல்ல, சேர்க்கை நிலை என்னும் பகுதி இருக்கும்.இதில் விதிமுறைகளுக்கு உட்பட்டு இணைக்கவேண்டும்.அண்மையில் இணைத்தவர்கள், காத்திருப்போர் பட்டியல் காணப்படும்.தொடர்புக்கு என்னும் பகுதியை அழுத்தித் தளப் பராமரிப்பாளருக்குத் தகவல் தர நினைத்தால் தரலாம்.

இணைக்கும் பதிவுகள் உடனே உலகம் முழுவதும் தெரிந்துவிடும் என்பதால் தக்க பதிவர்களா? எனப் பார்த்து அவர்களின் முந்தைய பதிவுகளை ஆராய்ந்தே அவர்களை இணைத்துக் கொள்கின்றனர். தமிழ்மணம் திரட்டி அதனால்தான் மூன்று பதிவுகளை இணைத்த பிறகே இணைக்க வேண்டுகிறது.அந்தப் பதிவுகளை வைத்தே அவர்கள் நல்ல பதிவிடுபவர்கள்தான் என்று முடிவு செய்து இணைப்பர்.திரட்டி.காம் தளத்திற்கு இணைக்க பலர் வேண்டி விண்ணப்பித்தாலும் தரமாக எழுதுபவர்களாக இருந்தால்தான் அதன் நிருவாகி இணைப்பார்.பொழுதுபோக்கிகள், கவனத்தை ஈர்க்கும் வேலையற்றவர்களின் பதிவுகளை திரட்டி.காம் இணைப்பதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளது.தமிழ்வெளியில் இணைப்பவர்கள் படத்துடன் பதிவுகளை இணைத்தால் அப்படம் தெரியும்படி வசதி உள்ளது.முன்பு திரட்டி.காம் இந்த வசதியைச் செய்திருந்தது.

திரட்டி.காம் அறிமுகம் http://www.thiratti.com/

திரட்டி.காம் என்னும் திரட்டி நாளும் புதுமைகளைச் செய்து தன் தளத்தைத் தொழில்நுட்பம் கொண்ட தளம் என்று அனைவரையும் நினைக்கும்படி செய்கிறது.பதிவர்களின் படத்தையும் அவர்கள் வெளியிடும் பதிவுப் படங்களையும் தொடக்கத்தில் காட்டிய திரட்டி.காம் தளம் இப்பொழுது தேவையான தகவல்களை மட்டும் கொடுத்துப் பார்வையாளருக்கு உதவுகிறது.இணையக் குழுக்கள் வெளியிடும் தகவல்களையும் இத்தளம் திரட்டுகிறது.


வலைப்பதிவுகள் திரட்டும் இத்தளம் பின்னூட்டங்களைத் திரட்டுவது இல்லை.மேலும் பழைய பதிவுகளைத் தேடிப் பார்க்கும் வசதி இத்தளத்தில் இல்லை.இன்று முழுவதும் பதியப்பெற்ற பதிவுகளை ஒருவர் திரட்டி.காம் தளத்தில் பார்வையிட நினைத்தால் பார்க்க வசதி இல்லை.தளத்தில் உள்ள தகவல்களை மட்டும்தான் பார்க்கமுடியும்.தளத்தில் விளம்பரங்களும் உள்ளன.


மருத்துவம்,பங்கு வர்த்தகம்,திரைப்படம்,கவிதை,சமையல்,அரசியல்,தமிழில் புகைப்படக்கலை, தொடர்பிற்கு, எனும் தலைப்புகளில் செய்திகள் உள்ளன.மேற்கண்ட துறை சார்ந்த சொற்கள் எந்தப் பக்கத்தில் வெளியானாலும் தானே வகைப்படுத்தி இத்தளம் ஓரிடத்தில் தரும்படி இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்க்கணிமை http://tamil.kanimai.com/

தமிழ்க்கணிமை என்னும் பெயரில் ஒருதளம் தமிழில் வெளியாகும் பதிவுகளைத் திரட்டித் தருகிறது. அறிமுகம், பதிவுகள்,திரட்டிகள்,திரட்டுகள், செய்திகள், மின்னிதழ்கள், பிறமொழிகள் என்னும் பகுப்பு உள்ளது.நமக்குத் தேவையான பகுப்பிற்குச் சென்று தேவையான விவரங்களைப் பெறலாம். பிறமொழி என்ற பகுப்பில் ஆங்கிலம்,கன்னடம், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. புகழ்பெற்ற தளங்கள் வெளியிடும் செய்திகளையும் தமிழ்க்கணிமை திரட்டித் தருகின்றது. குறிப்பிடத் தகுந்த திரட்டி இது.இதனை நம் பதிவில் இணைத்துக்கொள்ள வசதி உள்ளது.

டெக்னோரட்டி http://technorati.com/

டெக்னோரட்டி என்னும் தளம் தமிழ்ப்பதிவுகளைத் திரட்டித் தருவது. புகைப்படம், காண்பொளி போன்றவற்றையும் திரட்டி வழங்குகிறது.தமிழ்ப்பதிவுகள் என்ற பகுப்பில் தமிழில் பதிவாகும் பதிவுகளைத் திரட்டித் தருகிறது.


வேர்ட்பிரசு http://botd.wordpress.com/?lang=ta

வேர்டுபிரசு நிறவனமும் தமிழில் வெளியாகும் பதிவுகளைத் திரட்டித் தரும் திரட்டியை வைத்துள்ளது. இதில் பதிவு செய்துகொண்டால் நம் பதிவுகளைத் திரட்டி வெளியுலகிற்கு வழங்கும். இவ்வகையில் இந்தத் திரட்டியில் உலகின் பலமொழிகளில் எழுதப்படும் வலைப்பதிவுகள் திரட்டும் வசதியைப் பெற்றுள்ளது.அதில் தமிழும் ஒன்று.

மாற்று http://www.maatru.net/

மாற்று என்னும் தளம் திரட்டிகளில் தனித்துவமான தளமாகப் புலப்படுகிறது.இதனை ஒரு குழுவினர் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு நிருவகிக்கின்றனர். இதில் பதிவர்களாகி நாம் இணைக்கத் தேவையில்லை. குழுவினருக்குத் தக்க பதிவாகத் தெரியும் பதிவுகளை மாற்றுத் தளம் வழி வெளியுலகிற்குக் காட்சிப்படுத்துகின்றனர்.தரமான தகவல்களைப் பெற நினைப்பவர்கள் இத் தளத்தை நாடலாம்.

சங்கமம் http://www.tamil.blogkut.com/

சங்கமம் என்ற பெயரில் ஒரு திரட்டி உள்ளது.பதிவுகள் செய்திகள் என்ற இரண்டு பகுப்பில் செய்திகள் உள்ளன.செய்திகள் பகுப்பில் படங்கள் உள்ளன.தகவல்களை உடனுக்குடன் திரட்டிக்காட்டுவதால் இதுவும் குறிப்பிடத்தக்க திரட்டியாக உள்ளது.

தமிழீழத்திரட்டி http://www.pageflakes.com/rishanthan/24236768/

தமிழீழம் சார்ந்தவர்கள் எழுதும் பதிவுகளைத் திரட்டித் தருவதை நோக்கமாகக் கொண்ட தளமாக இது செயல்படுகிறது.

இலங்கை வலைப்பதிவர் திரட்டி http://www.pageflakes.com/mayunathan

இலங்கைப் பதிவர்கள் எழுதும் பதிவுகளையும் இணையத்தில் வெளிவரும் செய்திகளையும் தாங்கி இலங்கைப்பதிவர் திரட்டி வெளிவருகிறது.சிறந்த திரட்டியாக இது உள்ளது.

திரட்டிகள் உலகெங்கும் எழுதப்படும் வலைப்பதிவுகளைத் திரட்டித்தரும் நல்ல நோக்கத்தில் செயல்படுகின்றன.தேவையான நெறிமுறைகள்,தொழில் நுட்பங்களைப் பெற்றுள்ளதும் வரவேற்கத் தக்கதே.பதிவர்கள் தங்களுக்கும் சமூகத்திற்கும் பயன்படும் செய்திகளை வெளியிட்டு இத்திரட்டிகள் வழி வெளியுலகிற்கு அறிவிக்கவேண்டும்.


இத்திரட்டிகளைத் தக்க வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இதனை விடுத்து அனைவரின் கவனத்தை இழுக்கப் பாலியல் செய்திகளை வெளியிடுவது, பொய்ச்செய்திகளை வெளியிடுவது, தனிமனித தாக்குதல் நிகழ்த்துவது தேவையற்றது. உங்கள் படைப்புகள் வழியாக உங்கள் மன உணர்வையும் அறிவாற்றலையும் உலகம் உற்று நோக்க இத்திரட்டிகள் வழிவகுக்கின்றன.

(23.05.2009 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் பேராசிரியர் சிறீகுமார் தலைமையில் படிக்கப்பெற்ற கட்டுரை.இதனை எடுத்தாள விரும்புவோர் உரிய இசைவு பெற வேண்டுகிறேன்.ஐந்து மாதங்களுக்கு முன் உருவாக்கப்பெற்ற இக்கட்டுரையில் தேவையானால் புதிய விளக்கம்(அப்டேட்) இணைக்க அணியமாக உள்ளேன்.அறிந்தோர் அறிவிக்கலாம். ஆய்வுக்கோவை முதல் தொகுயில் இடம்பெற்றுள்ளது.)

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் பற்றிய என் சிறப்புரை...


கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி முகப்பு

கோயமுத்தூரில் உள்ள புகழ்பெற்ற தனியார் கல்லூரி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியாகும்.இது தன்னாட்சி பெற்ற கல்லூரி.இகல்லூரியின் தமிழ்த்துறையில் ஆய்வு செய்யும் முனைவர் பட்ட, இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாதம் ஒருமுறை அறிஞர்களை அழைத்து ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வண்ணம் சிறப்புரை வழங்குவது வழக்கம்.

அவ்வகையில் மார்ச்சு மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் உரையாற்ற எனக்குக் கல்லூரியின் தமிழ்த்துறைத்துறைத் தலைவர் பேராசிரியர் பழனிச்சாமி அவர்களும்,பேராசிரியர் முருகேசன் அவர்களும் அழைப்பு விடுத்திருந்தனர்.

28.03.2009 காலை 9 மணியளவில் புதுச்சேரியில் புறப்பட்டு விழுப்புரம்,சேலம் வழியாகக் கோவை வந்து சேர்ந்தேன்.

கோவையை அடைந்தபொழுது இரவு 7.15 மணி.

என் வருகை முன்பே திட்டமிடப்பட்டதால் பேராசிரியர் முருகேசன் அவர்கள் எனக்காகப் பேருந்து நிலை வந்து எதிர்கொண்டு அழைத்தார்.தனியார் விடுதியில் இரவு தங்க ஏற்பாடு செய்தார்.

நான் வந்த உடனேயே நண்பர் காசி அவர்களுக்குச் செல்பேசியில் தெரிவித்தேன்.அடுத்த அரை மணி நேரத்திற்குள் காசி அவர்கள் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து சேர்ந்தார்.இருவரும் இரவு உணவு உண்டோம்.அறைக்கு மீண்டு, கணிப்பொறி தொடர்பான பல செய்திகளைக் காசி வழியாக அறிந்து மகிழ்ந்தேன்.இரவு 11.30 மணி வரை காசி என்னுடன் உரையாடிவிட்டுக் காலையில் கல்லூரி அரங்கிற்கு வருவதாகச் சொல்லி விடைபெற்றார்.நானும் பயணக்களைப்பில் கண்ணயர்ந்தேன்.

காலையில் ஆறு மணிக்கு எழுந்து காலைக்கடமைகளை முடித்து,இரவே பேசியது போல பேராசிரியர் கனல்மைந்தன் இல்லம் சென்றேன்.அம்மா அவர்கள் காலைச்சிற்றுண்டி வழங்கினர்கள்.கனல்மைந்தன் அவர்கள் என் குடும்பத்துடன் நல்ல தொடர்பில் இருப்பவர்கள்.

நான் ஆய்வு மாணவனாக இருக்கும்பொழுது அவர் கருத்துகளை அடிப்படையாக வைத்தே என் ஆய்வுக்கட்டுரையை வடிவமைத்தேன்.பல்வேறு கருத்தரங்குகளில் நானும் கனல்மைந்தனும் ஒன்றாகவே உலவுவோம்.கனல் எழுந்தால் வினாக்கணையால் துளைத்தெடுப்பார்.அவரின் சிந்தனையாற்றல் எண்ணி எண்ணி நான் மகிழ்வேன்.கருத்தரங்க நாளில் இரவு முழுவதும் நம் பேராசிரியர் கனல்மைந்தன் அவர்கள் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசித் தீர்ப்பார்.கல்லூரிப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஆய்வுகள், தில்லுமுல்லுகள் பற்றி கனல்கக்க உரையாற்றுவார்.அவரின் ஒரே பார்வையாளனாக நான் இருப்பேன்.எங்களுடன் வந்த நண்பர்கள் ஆய்வாளர்கள் அவ்வப்பொழுது புறப்பட்டாலும் நான் மட்டும் வைகறைப்பொழுது வரை கண் விழித்துக் கேட்டபடி இருப்பது வழக்கம்.எந்த ஊரில் கருத்தரங்கம் நடந்தாலும் அவரை நான் தேடுவதும் என்னை அவர் தேடுவதுமாக இருப்போம்.அத்தகு பேராசிரியரை இல்லம் கண்டு உரையாடி மீண்டமை மகிழ்ச்சி தந்தது.


ஆய்வாளர்கள் பார்வையாளர்கள்

காலை 9.30 மணிக்குப் பேராசிரியர் முருகேசன் அவர்கள் என்னை அழைத்துச் சொல்ல விடுதிக்கு வந்ததற்கும் நான் பேருந்திலிருந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.இருவரும் கல்லூரிக்குப் புறப்பட்டு காலை 10.30 மணியளவில் சென்றோம்.நாங்கள் வருவதற்கு முன்பாகவே நண்பர் காசி முதலாமவராக வந்திருந்தார்.காலத்தாழ்ச்சிக்குப் பொறுத்தருளும்படி வேண்டினேன்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பழனிச்சாமி ஐயாவை முதற்கண் துறைக்குச் சென்று கண்டேன்.மற்ற துறைப் பேராசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தேன்.

அரங்கிற்கு வந்து இணைய இணைப்புகளைச் சரி செய்வது என் முதற்கண் வழக்கம்.முன்பே கல்லூரியில் அனுமதி பெற்றிருந்ததால் கணிப்பொறி இயக்கும் நண்பர் வந்திருந்தார். மடிக்கணினி,இணைய இணைப்பு சரியாக இருக்கும் என நினைத்த எனக்கு சிறிது தயக்கம் ஏற்பட்டது.கணிப்பொறிக்கும் இணையத்துக்கும் இணைப்பு கிடைக்காமையே என் தயக்கத்துக்குக் காரணம்.என்ன செய்ய?

நண்பர் காசியை அழைத்துச் சரி செய்து, என் மடிக்கணினியில் இணைப்பு கொடுத்து ஒருவாறு 11.30 மணிக்குதான் நிகழ்ச்சி தொடங்கியது.

அதற்குள் காசி வழியாகவும் நண்பர் நா.கணேசன் ஐயா அவர்களின் வழியாகவும் செய்தியறிந்த திருவாளர்கள் இலதானந்து,கோவை சிபி உள்ளிட்ட பதிவர்களும் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களும் வேறு சில நண்பர்களும் வந்திருந்தனர். அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.


பயிற்சியளிக்கும் நான்(மு.இ)

தமிழ்மணம் தந்த காசி அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்து அவர் ஊரில் அவர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடக்கும் பொருத்தப்பாட்டை எடுத்துரைத்தேன்.பிறகு தமிழ்த்தட்டச்சு முறைகள் பற்றி எடுத்துரைத்துத் தமிழ் 99 விசைப்பலகை பழக எளிது எனவும் அரசு இதனை ஏற்றுக்கொண்டு அறிவித்துள்ளது எனவும் விளக்கினேன்.


காசி உள்ளிட்ட நண்பர்கள்

எதிர்பாராத நிலையில் பதிவர் இலதானந்து அவர்கள் ஒலிப்புவழி தட்டச்சு சிறந்தது எனவும் என் தமிழ்ப்பற்றால் தமிழ் 99 விசைப்பலகையைத் திணிப்பதாகவும் கருத்துரைத்தார்.மேலும் 99விசைப்பலகையே என் முயற்சி போலவும் கருதி கருத்துரைத்தார்.தமிழ் 99 இல் உள்ள பல்வேறு சிறப்புகளை எடுத்துரைத்து தமிழ் மரபிலக்கண முறைப்படி அறிஞர்கள் குழு இதனை உருவாக்கியது என்று உரைத்தும் விவாதம் நீண்டது.இதுபற்றி நாம் பதிவு வழிவிவாதிக்கலாம் எனவும் இது பற்றி நெடுநாழிகை உரையாடினால் பேச வேண்டிய, சொல்லவேண்டிய பிற செய்திகளைப் பேச காலம் குறைவாகும் எனவும் குறிப்பிட்டேன்.

பேராசிரியர் முருகேசன் அவர்கள் விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.உரை தொடர்ந்தது. பகல் 1.30 மணி வரை பல்வேறு இணையத்தளங்களை எடுத்துக்காட்டிச் சிறப்புகளை விளக்கினேன்.தமிழ்மணத்தின் சிறப்பை விளக்க முயற்சி செய்யும் பொழுது தமிழ் மணம் உள்ளிட்ட சில தளங்கள் கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தோம் தமிழ் மணம் தெரியும் படி செய்ய ஓர் அன்புவேண்டுகோளை வைத்தோம்.ஆய்வாளர்கள் பலருக்கும் ஏற்பட்ட ஐயங்களைப் போக்கினேன்.ஆய்வுக்கு உதவும் பக்கங்களைக் காட்டினேன்.

தமிழ்த் தட்டச்சு 99 விசைப்பலகை அமைப்பை ஒளியச்சிட்டு அனைவருக்கும் ஒரு படி வழங்கினோம்.

நண்பர் பத்ரி அவர்கள்(கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர்) தம் நிறுவனம் உருவாக்கிய NHM WRITER என்னும் மென்பொருளைக் கூடுதலாக என் விருபத்தின் பேரில் குறுவட்டாக அனுப்பி வைத்திருந்தார்கள்.அதனைநிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு படி வீதம் வழங்கினோம்.

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.

வியாழன், 19 மார்ச், 2009

கொங்குநாட்டில் தமிழ் இணையப் பயிலரங்குகள்...

கே.எஸ்.ஆர்.கல்லூரியில் தமிழ்மணம் அறிவிப்பு 
 
 தமிழில் இணையப் பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் நடத்த முன்பே திட்டமிட்டிருந்தேன். கல்லூரி மாணவர்கள் தமிழில் இணையத்தைப் பயன்படுத்தினால் தமிழுக்கு ஆக்கம் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிப் பேராசிரியர்கள் பலருடன் தொடர்புகொண்டு பயிலரங்குகள் நடத்தும் முயற்சியில் அண்மைக் காலமாக வெற்றியுடன் செயல்படுகிறேன். அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் பயிலரங்கம் நடத்தும் முயற்சியில் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்களும் அவர்களின் தலைமையில் இயங்கும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் பேருதவி புரிந்தனர். அவ்வகையில் அக் கல்லூரியில் 14.03.2009 காரி(சனி)க் கிழமை பயிலரங்கம் நடத்த கல்லூரி நிருவாகத்தினரும் முதல்வரும் அன்புடன் இசைவு தந்திருந்தனர். அமெரிக்காவில் வாழும் முனைவர் நாக. கணேசன் அவர்களும் இங்கு நடைபெற பல்லாற்றானும் உதவினார். 
 
  13.03.2009 பகல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு இரவு 10 மணியிளவில் திருசெங்கோடு சென்று சேர்ந்தேன். இரவு கல்லூரி விடுதியில் தங்கவைக்கப்பட்டேன். பேராசிரியர் இரா. சந்திரசேகர் அவர்களின் ஏற்பாட்டில் முனைவர் த. கண்ணன் அவர்கள் வரவேற்றார். நாளை நடக்கும் நிகழ்வுகள் பற்றித் திட்டமிட்டபடி இரவு கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன்.
  
கே.எஸ்.ஆர்.கல்லூரி வரவேற்புப் பதாகை 
 
14.03.2009 காலையில் கருத்தரங்கிற்காக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ள மயிலாடுதுறைப் பேராசிரியர் கண்ணன் அவர்கள் வந்துசேர்ந்தார். பிறகு செல்வமுரளி அவர்களும் வந்து சேர்ந்தார். அனைவரும் காலை உணவு உண்டு பேரா.சந்திரசேகரன் அவர்களுடன் கல்லூரி இயக்குநர் அவர்களையும் முதல்வர் அவர்களையும் கண்டோம். அங்கு எனக்கு முன்பாக புலவர் செ.இராசு அவர்கள் உரையாடிக்கொண்டிருந்தார். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புலவர் இராசு அவர்களுடன் அரங்கிற்கு வந்தேன். மாணவர்களும் இணைய ஆர்வலர்கள் பலரும் காத்திருந்தனர். 
 
  திட்டமிட்டபடி 10 மணிக்குப் பயிலரங்கு தொடங்கியது. உள்ளூர்ச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதழாளார் திரு.விசயகுமார் அவர்கள் தம் சங்கமம் இணைய இதழுக்காகவும் தொலைக்காட்சிக்காகவும் தளத்துக்காகவும் செய்திகள் காணொளியில் பதிவு செய்யும் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். அவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக இணையத்துறையில் இயங்கி வருபவர். அவர் பற்றி முன்னமே அறியாததால் அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. பிறகுதான் அவர் ஆற்ற்ல் நேரடியாக உணர்ந்தேன். இனிவரும் காலங்களில் அவரை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள நினைத்துள்ளேன். இது பற்றி அவருடன் உரையாடி அவர் அன்பையும் நட்பையும் பெற்றேன். 
 
 திரு.மா.கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முனைவர் இரா.சந்திரசேகரன் விருந்தினர்களை நன்கு அறிமுகம் செய்தார். முனைவர் நா.கண்ணன் (கல்லூரி முதல்வர்) அவர்கள் வாழ்த்துரை நல்கினார். புலவர் செ. இராசு அவர்கள் அரியதொரு தொடக்கவுரையாற்றினார். திரு.டி.என்.காளியண்ணக் கவுண்டர் அவர்களின் திருமகனார் திரு. இராசேசுவரன் (ஓய்வு பெற்ற நீதிபதி) அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தார். நீதிபதி ஐயா அவர்கள் நன்கு பேசினார். என்மேல் அன்பு பாராட்டினார். கவுண்டர் ஐயா அவர்கள் சென்னை சென்றுள்ளதாகவும் அடுத்தமுறை வந்து கண்டுபேசலாம் எனவும் தெரிவித்தார். அவருடன் உள்ளூர் ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர். 
 
கல்லூரி முதல்வர், நீதியரசர் இராசேசுவரனுடன் மு.இ.
    நீதியரசர் இராசேசுவரன் அவர்களுடன் மு.இ.
 
  தேநீர் இடைவேளைக்குப் பிறகு 11.30 மணிக்கு என் உரை அமைந்தது. 1.00 மணிவரை என் உரை தொடர்ந்தது. தமிழ் இணையத்தள வளர்ச்சி, தட்டச்சு.99 விசைப்பலகை, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மதுரைத் தமிழ் இலக்கிய மின்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை, விருபா, நூலகம், தமிழ்மணம் பற்றிய செய்திகளைக் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன். இணைய இணைப்பு சரியாக சில நேரம் கிடைக்காததால் சிறிது தொய்வு ஏற்பட்டபொழுது வேறு தகவல்களைப் பரிமாறி இயல்பாக அரங்கை நடத்த முயன்றேன். திரு.இரவிசங்கர் (விக்கி ஆர்வலர்) அவர்களை அங்குதான் முதன்முதல் சந்தித்தேன். எனக்குத் தேவையான சில காட்சி விளக்கங்களுக்கு உதவினார். பேரா.குணசீலனும் உதவினார். 
 
  பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்கள் நிகழ்ச்சிக்காகக் கரூரிலிருந்து வந்திருத்தார்.அவர் மகன்கள் அமெரிக்காவில் உள்ளனர்.எனவே நா.கணேசன் அவர்களுக்குப் பேராசிரியர் தங்கமணி ஐயா நன்கு அறிமுகம் ஆனவர். கணேசன் அவர்களின் தகவலால் பேராசிரியர் வந்திருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்னமே பேரா.பே.க.வேலாயுதம் அவர்கள் இல்லத்தில் தங்கமணி ஐயாவைக் கண்டு உரையாடி நான் நட்புப்பெற்றவன். அவரைக் கண்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.தருமபுரியிலிருந்து பொறியாளர் நரசிம்மன் அவர்களும் பார்வையாளராக வந்து கலந்துகொண்டார். தமிழ் ஓசை களஞ்சியத்தில் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வந்தது. அதனைக்கண்டு திருச்சியிலிருந்து ஈழத்தமிழறிஞர் மருத்துவர் வே.த.லோகநாதன் அவர்கள் தம் மகளாருடன் வந்து பயிற்சியில் கலந்துகொண்டு ஆர்வாமாகப் பயிற்சிபெற்று கடைசிவரை இருந்து விடைபெற்றனர். பகல் உணவு இடைவேளைக்கு அனைவரும் பிரிந்தோம். விடுதியில் சிறப்பாக உணவு ஆயத்தம் செய்திருந்தார்கள். 
 
 பகல் 2.30 மணியளவில் மீண்டும் அமர்வு தொடங்கியது. திருவாளர்கள் இரா.குணசீலன், த.கண்ணன், ப.சரவணன் கட்டுரைகளைக் காட்சி விளக்கத்துடன் படைத்தனர். விக்கிபீடியா பற்றி இரவிசங்கர் அவர்களும், இணையத்தளப் பாதுகாப்புப் பற்றி செல்வமுரளியும் இடையில் உரையாற்றினார். நேரம் அவர்களுக்கு அதிகமாக வழங்கமுடியாமைக்கு வருந்தினேன். பயனுடைய தகவல்களைத் தந்தனர். நான் மின் இதழ்கள் பற்றி மாலை 4 மணி வரை உரையாற்றினேன். பிறகு எளிமையாக நன்றியுரைத்தலுடன் நிறைவு விழா நடந்தது. தமிழ்த்துறைக்குச் சென்று அனைவரிடமும் விடைபெற்று விடுதி அறைக்கு வந்தேன். அங்குப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களும் பேராசிரியர் கண்ணன் (மயிலாடுதுறை) அவர்களும் காத்திருந்தனர். கண்ணன் அவர்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கு இணையம் பற்றிய தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். அது பற்றி சிறிது நேரம் உரையாடிவிட்டு, கரூருக்கு நாங்கள் புறப்பட ஆயத்தமானோம். 
 
 முதலில் திருச்செங்கோடு வரை மயிலாடுதுறை கண்ணன் எங்களுடன் வந்தார். அவருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு நானும் பேரா. இராசசேகர தங்கமணியும் வேலூர் வழியாக கரூர் வந்து சேர்ந்தோம்.பேராசிரியர் காலையில் சந்திப்பதாக உரைத்து விடைபெற்றார். 9.30 மணியளவில் கரூர் வந்து வள்ளுவர் விடுதியில் கரூர் மாவட்ட நூலகர் திரு.செ.செ. சிவக்குமார் ஏற்பாட்டில் தங்கியிருந்தேன். அந்த விடுதியின் உரிமையாளர் மிகப்பெரும் செல்வ வளம் உடையவர் எனவும், திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர் எனவும் வள்ளுவர் பெயரில் பல கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வைத்துள்ளதாகவும் அறிந்தேன்.அவர் பெயர் திருவாளர் செங்குட்டுவன் ஐயா என அறிந்தேன். செங்குட்டுவன் ஐயா விடுதியில் தமிழறிந்த இளங்கோ தங்குவது சிறப்புதானே!. மின்னஞ்சல் அனுப்பல், படித்தல் முதலிய பணிகளை முடித்துப் படுக்கும்பொழுது இரவு 12 .30மணியிருக்கும். 
 
  15.03.2009 காலையில் திரு.சிவக்குமார் அவர்கள் சென்னைக்குப் பணியின் பொருட்டுச் சென்றவர்கள் தொடர்வண்டியில் திரும்பினார். வண்டியில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்டு நடக்கவேண்டிய பணிகளைத் திட்டமிட்டார். காலையில் மாவட்ட நூலக அதிகாரி திரு.செகதீசன் ஐயா அறைக்கு வந்து ஒருவரை ஒருவர் கண்டு வணங்கினோம். இவர்களின் சொந்த ஊர் தாரமங்கலம் பகுதியில் இருந்ததாலும் தருமபுரியில் இவர்கள் முன்பு பணிபுரிந்ததாலும் அங்குள்ள என் நண்பர்கள் வழியாக அவர்களின் மேல் எனக்கு அளவுக்கு அதிகமான அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. இருவரும் சிற்றுண்டி முடித்துக்கொண்டு மாவட்ட நூலகத்திற்குச் சென்றோம். 
 
கரூர் நூலக முகப்பில் தமிழ்மண வரவேற்பு 
  பயிற்சி பெறுவோர் 
  நூலகர்களுக்குப் பயிற்சியளிக்கும் நான் 
  செ.செ.சிவக்குமார், மு.இ., செகதீசன் 
  
 முனைவர் கடவூர் மணிமாறன் கருத்துரை 
 
  காலை 9 மணிக்குச் சென்ற பிறகுதான் திரு செ.செ.சிவக்குமார் நேரில் அறிமுகம் ஆனார். அதற்கு முன் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் மட்டும் தொடர்பு கொண்டிருந்தோம். அவரைப் பார்த்ததும் எனக்கு அவர்மேல் ஓர் ஈடுபாடு வந்தது. மிகச்சிறந்த செயல்திறம் உடையவர். கரூரில் என்ன உதவியையும் யாரிடமும் பெற்றுக் கொள்ளும்படியான திறமையும் வினைத்திட்பமும் கொண்டவர்.மாவட்ட மைய நூலகத்தை இவர் மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். புதிய கட்டடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட நூலகமாக அது விளங்குகிறது. கணிப்பொறிகள் திரும்பிய திசைகளில் இருந்து அனைவருக்கும் உதவக் காத்துள்ளன. மாணவர்களை நூலகத்தின் பக்கம் இழுக்க பல திட்டங்களை வைத்து நடைமுறைப் படுத்தியவர். நகரின் நடுவே நூலகம் கரூருக்கு அழகுக்கு அழகு சேர்த்து விளங்குகிறது. 
 
  அரங்கில் 9.15 மணிக்கு என் விளக்கம் தொடங்கியது. அங்கிருந்த கணிப்பொறியை முதற்கண் தமிழில் இயங்கும்படி செய்தேன்.பின்னர் சிவக்குமார் அவர்களின் கணிப்பொறியும் தமிழில் இயங்கும்படி செய்தேன். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகர்களுக்கும் பயன்படும் வண்ணம் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 30 நூலகர்கள், முனைவர் கடவூர் மணிமாறன், பேரா. இராச்சேகர தங்கமணி, திரு.காமராசு உள்ளிட்ட இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். நூலக அலுவலர் அவர்களும் சிவக்குமார் அவர்களும் பிற பணிகளையும் கவனித்தபடி அரங்கை வழிநடத்தினர். 
 
   தமிழ்த் தட்டச்சிலிருந்து அனைத்துத் தகவல்களையும் பகல் ஒரு மணிவரை எடுத்துரைத்தேன். கணிப்பொறியை எனக்கு உதவிக்கு இயக்க இருவர் இருந்தனர். முறைப்பாட்டில் மின்சாரம் 10-12 நிற்பதாக இருந்தது.சிவக்குமாரின் ஏற்பாட்டில் மின்சாரம் தொடர்ந்து வந்தது. உள்ளூர் செய்தியாளர்கள், தொலைக்காட்சிக்காரர்கள் வந்து குவிந்தனர். இணையப் பயிலரங்கச் செய்தி கரூர் நகரம் முழுவதும் பரவியது. ஒரு மணி நேரத்தில் பரவியது. 1-00-2.30 மணிவரை உணவுக்காகப் பிரிந்தோம். 
 
  மீண்டும் மின்னிதழ்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.மின்னஞ்சலில் இருக்கும்பொழுது திரு.கண்ணன் (கொரியா) மயிலாடுதுறை நெடுஞ்செழியன், அறிவழகன் உள்ளிட்டவர்கள் இணைப்பில் வந்து மகிழ்வூட்டினர். தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பவுது உள்ளிட்ட பல தகவல்கள் என் இரு அமர்வுப் பேச்சிலும் தெரிவிக்கப்பட்டன. பலரும் புதிய அனுபவங்களை பெற்றனர். மாலை 5.30 மணிக்கு அனைவரிடமும் விடைபெற்று அறைக்கு 6 மணிக்குத் திரும்பினேன். 
 
   அரை மணி நேர ஓய்வுக்குப் பிறகு கிங் தொலைக்காட்சி நிலையம் அழைத்துச் செல்லப்பட்டேன். திரு.சிவராமன் என்ற இதழாளர் முன்பே வந்து அழைப்புவிடுத்தார்.ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் இணையம் சார்ந்த உரையாடலை நிகழ்த்திப் பதிவு செய்துகொண்டார். நிறைவில் ஓரிரு நாட்டுப்புறப் பாடல்களை நான் பாடும்படி நேர்ந்தது. அதனைக் கண்ட திரு. சிவராமன் நாட்டுப்புறப் பாடலில் நேர்காணல் செய்யாமல் விட்டுவிட்டோமே என வருந்தினார். மீண்டும் ஒருமுறை வருவதாக உரைத்து புறப்பட்டேன். இரவு உணவு நூலக அலுவலர் திரு.செகதீசன் அவர்களுடன் முடித்து அறைக்குச் சென்றபொழுது இரவு 10.30 மணியிருக்கும். சில பணிகளை முடித்து ஓய்வெடுக்கும் முன்பாக கரூர் வழக்கறிஞர் இராம. இராசேந்திரன் அவர்கள் காலையில் சந்திப்பதாகத் தொலைபேசி வழியாகத் தெரிவித்தார். (கிங் தொலைக்காட்சி ஒளிபரப்பு 18.03.2009 இரவு 9-10 ஒருமணி நேரம் ஒளிபரப்பாகியுள்ளது. அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர்.) 
 
  மறுநாள் நடந்த கரூர் நண்பர்கள் சந்திப்பு, நாமக்கல் நிகழ்ச்சி பற்றி பிறகு எழுதுவேன்...

செவ்வாய், 17 மார்ச், 2009

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி...

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி இன்று 17.03.2009 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் சார்ந்த கிளை நூலகர்கள்,ஊர்ப்புற நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்கின்றனர்.நான் தமிழ் இணையம்,மின் நூலகம்,மின் இதழ்கள்,தமிழ் இணைய வளர்ச்சி குறித்த பயிற்சி வழங்குகிறேன்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் திரு சி.அசோகன் அவர்களும் மாவட்ட மைய நூலகர் திரு.சு.பச்சையப்பன் அவர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.

ஞாயிறு, 15 மார்ச், 2009

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு

நாமக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைநூலகம்,ஊர்ப்புற நூலகம் சார்ந்த நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்ளும்
தமிழ் இணையப்பயிலரங்கு 16.03.2009 திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு நூலகர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த செய்திகளை எடுத்துரைத்துப் பயிற்சியளிக்க உள்ளார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட மைய நூலக அலுவலர்,மாவட்ட நூலகர் ஆகியோர் சிறப்பாகச் செய்துள்ளனர்.

கரூர் மாவட்ட மைய நூலக இணையப் பயிலரங்கின் முதல் அமர்வு சிறப்புடன் நிறைவு...

கரூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் இணையப் பயிலரங்கம் இன்று 15.03.2009 ஞாயிறு காலை 9 மணிக்குத் தொடங்கியது.கரூர் மாவட்டத்தைச் சார்ந்த நூலகர்கள் 25 பேரும்
ஆர்வலர்கள் சிலரும் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட மைய நூலகர் திருசெ.செ.சிவக்குமார் அவர்கள் வரவேற்றார்.மாவட்ட நூலக அலுவலர் திரு,சே.செகதீசன் அவர்கள் தொடக்கவுரை யாற்றினார்.

புதுச்சேரி பாரதிசான் அரசினர் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இணையத்தில் தமிழ் வளர்ந்த வரலாறு,99 விசைப்பலகை,மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம்,மதுரை இலக்கிய மின்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை,விருபா தளம் உள்ளிட்டவற்றையும் பிரஞ்சு நிறுவன நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

மு.இளங்கோவன் மின்னஞ்சல் தமிழில் அனுப்பும் முறையைச் சுட்டிக்காட்டியும்,பிற நண்பர்களுடன் பயிற்சியாளர்களை உரையாடவைத்தும் உரையைச் சோர்வில்லாமல் நிகழ்த்தினார். பலரும் மின்னஞ்சல் உருவாக்கும் விதத்தை அறிந்தனர்.இந்தச்செய்தி உடனுக்குடன் கரூர் செய்தியாளர்களால் தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டது.

முனைவர் கடவூர் மணிமாறன்,பேராசிரியர் இராசசேகர தங்கமணி,தலைமையாசிரியர் காமராசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இணைய இதழ்கள் என்ற தலைப்பில் மு.இளங்கோவனின் உரை இடம்பெறும்.

சனி, 14 மார்ச், 2009

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கு

  கரூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் 15.03.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் பகல் 4மணி வரை தமிழ் இணையப்பயிலரங்கு நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சார்ந்த கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம் சார்ந்த நூலகர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிய உள்ளனர். 
 
 புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பயிலரங்கில் கலந்துகொண்டு நூலகர்களுக்குத் தமிழ் இணையம் பற்றியும், தமிழ்த்தட்டச்சு, மின் நூல்கள், இணைய இதழ்கள், வலைப்பூ உருவாக்ககம், நூலகம் சார்ந்த தளங்களை அறிமுகப்படுத்திப் பயிற்சி அளிக்கிறார். மாவட்ட மைய நூலகர் திரு.சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் திரு.செகதீசன் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். முனைவர் கடவூர் மணிமாறன் உள்ளிட்ட இணையத்தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

திருச்செங்கோட்டில் தமிழ் இணையப்பயிலரங்கு தொடங்கியது...

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று 14.03.2009 காலை 10 மணிக்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது.பேராசிரியர் கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் நா.கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.புலவர் செ.இராசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.திரு.டி.என்.காளியண்ணன் அவர்களின் திருமகனார் திரு டி.என்.கே இராசேசுவரன் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.
முதல் அமர்வில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பிறகு முனவைர் குணசீலன் அவர்கள் வலைப்பூ உருவாக்கம் பற்றி உரையாற்றினார்.

பயிலரங்கிற்குத் திருவாளர்கள் இரவிசங்கர்(விக்கி),இராசசேகர தங்கமணி, செல்வமுரளி, விசயகுமார்(சங்கமம்) உள்ளிட்ட கணிப்பொறி வல்லுநர்கள்,ஆர்வலர்கள் வந்துள்ளனர்.மேலும் நாமக்கல்,கோவை மாவட்டத்தின் பல கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள்,ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அமர்வு தொடங்கியுள்ளது.

செவ்வாய், 3 மார்ச், 2009

கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளமும் இணைந்து நடத்தும் தமிழ் இணையப்பயிலரங்கு

தமிழ் இணையப்பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும். தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியாகும். அவ்வகையில் தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் இணையம் சார்ந்த பயிலரங்குகள் நடைபெற்றுள்ளன.அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத் திரட்டியுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கை நடத்துகிறது. பல நூறு மாணவர்கள் பயன்பெற உள்ளனர். பயிலரங்கு சிறப்புற அமைய அனைவரும் ஒத்துழைக்கலாம்.

இது போன்ற பயிலரங்குகளை வாய்ப்பிருப்போர் கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்) வழியாக நடத்தித் தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை உருவாக்கலாம்.

திருச்செங்கோடு பயிலரங்கு சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.

நிகழ்ச்சி நிரல், அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.


இடம்: கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு, தமிழ்நாடு

நாள்: 14.03.2009,சனிக்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை திரு.மா.கார்த்திகேயன்
தலைமையுரை: முனைவர் நா.கண்ணன்
அறிமுகவுரை : முனைவர் இரா.சந்திரசேகரன்

சிறப்புரை
புலவர் செ.இராசு,ஈரோடு

அமர்வு 1 :
தமிழும் இணையமும்

அமர்வு 2:
முனைவர் இரா.குணசீலன்
வலைப்பூக்கள் உருவாக்கமும் பயன்பாடுகளும்

உணவு இடைவேளை (1.00-2.00)

அமர்வு 3:
முனைவர் மு.இளங்கோவன்
இணைய இதழ்கள்

அமர்வு 4
திரு.சரவணன்
இணையத்தளப் பதிவுகளில் தனிநபர் பங்களிப்பு

அமர்வு 5
முனைவர் த.கண்ணன்
தமிழ் வலைப்பதிவுகள்

முன்பதிவு செய்து கலந்துகொள்ள வேண்டும்.

தொடர்புக்கு:

பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள்
தமிழ்ப்பேராசிரியர்,
கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு- 637 215
தமிழ்நாடு

செல்பேசி + 94435 51701
மின்னஞ்சல் tamilchandru@yahoo.com


அழைப்பிதழ்


அழைப்பிதழ்