நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 9 மார்ச், 2019

உலகத் தொல்காப்பிய மன்றம் - தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா


முனைவர் நா.க.நிதி(அமெரிக்கா) அவர்களுக்கு, 
மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அவர்கள் தொல்காப்பியத் தொண்டர் விருதளித்துப் பாராட்டுதல். அருகில் பேராசிரியர்கள் எஸ்.ஆரோக்கியநாதன், மு.இளங்கோவன், கு. சிவமணி

முனைவர் நா.க.நிதி(அமெரிக்கா) அவர்களுக்கு, 
மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அவர்கள் தொல்காப்பியத் தொண்டர் விருதளித்துப் பாராட்டுதல். 
அருகில் புதுவைத் தமிழறிஞர்கள்


     புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் சிறப்புரையும், தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழாவும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 09.03.2019 காரிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 9 மணிவரை நடைபெற்றது. ஆய்வறிஞர் கு. சிவமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியர் எஸ். ஆரோக்கியநாதன் கலந்துகொண்டு "மொழியியல் நோக்கில் தொல்காப்பியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தெ.முருகசாமி "சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

     புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமெரிக்காவிலிருந்து வருகைபுரிந்த அறிவியல் அறிஞர் நா.க.நிதி அவர்களுக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருதினை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வழங்கிப் பாராட்டிப் பேசினார். தமிழ் உணர்வு தழைத்த உரையாக மாண்புமிகு அமைச்சர் அவர்களின் உரை இருந்தது.

     தூ. சடகோபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ப.பத்மநாபன் அறிமுகவுரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரையாற்றினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரையாற்றினார். புதுச்சேரியில் வாழும் தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.