நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 29 நவம்பர், 2011

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம் ஆண்டுவிழா

வாணியம்பாடியில் தமிழ்ப்பணியாற்றிவரும் இலக்கிய அமைப்புகளுள் பாரதி தமிழ்ச்சங்கம் குறிப்பிடத்தக்க அமைப்பாகும். இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.சிவராஜி அவர்கள் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பின் நான்காம் ஆண்டு ஆண்டு விழா மலர்வெளியீடு, பரிசளிப்பு, பாட்டரங்கம், நாடகம், நூல்வெளியீடு என்று பல நிகழ்வுகளைக் கொண்டு நடைபெற உள்ளது.

நாள்: 11.12.2011 ஞாயிறு
நேரம்: காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை

இடம்: கே.பி.எஸ். மகால், கோட்டை, வாணியம்பாடி

நிகழ்ச்சித் தலைமை: சி.ஸ்ரீதரன்(தொழிலதிபர்)

முன்னிலை: ஜெ.விஜய் இளஞ்செழியன், ஏ.ரியாஸ் அகமது, மு.இராமநாதன்

வரவேற்புரை: இரா.முல்லை

பாட்டரங்கத் தலைமை: முனைவர் கோவை சாரதா

பங்கேற்பு: சுரேந்திரன், அன்பரசு, மலர்விழி

பாரதி வருகிறார் நாடகம் இயக்கம் முனைவர் கி.பார்த்திபராஜா

"விடுதலைக்கு வித்திட்ட வாணியம்பாடிச் செம்மல்கள்"
நூல்வெளியீடு: பேராசிரியர் அப்துல்காதர்

முதற்படி பெறுதல் பாரதி கிருஷ்ணகுமார்

நூல் அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன்

நூல்படி பெறுவோர்:
மேனாள் அமைச்சர் ஆர்.வடிவேல்
ஜி.சக்கரவர்த்தி,டி.கே.இராஜா உள்ளிட்டோர்.

அனைவரும் வருக!
அழைத்து மகிழ்வோர்

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம்

திங்கள், 28 நவம்பர், 2011

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் - அரிய படம்


கங்கை கொண்ட சோழபுரம்(1930)இல் கிருட்டினசாமி அரங்கசாமி ஐயங்கார் அவர்களால் எடுக்கப்பட்ட அரிய படம்

நன்றி: இந்து நாளிதழ்(28.11.2011)

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு அண்மைக்காலமாகச் செல்வபவர்கள் அங்குள்ள புல்வெளிகளையும் பூந்தோட்டங்களையும் கண்டு மகிழ்வார்கள். கோட்டைச்சுவர்கள் திருத்தமாக இருப்பது கண்டு வியப்பார்கள். ஆனால் முப்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் கோயிலில் நெருஞ்சிமுள்ளும், புல்புதர்களுமாக இருந்ததை ஊர்க்காரர்கள் அறிவார்கள். அங்கு நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா, மார்கழித்திருவாதிரை விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மக்கள் கூடுவார்கள். தஞ்சாவூர் கரகாட்டம் உள்ளிட்டவை சிறப்பாக நடக்கும்.கோயிலைச்சுற்றி நடக்கும் கரகாட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடக்கும்.

இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் நீங்கள் கேட்டவை என்ற திரைபடம் எடுக்க இங்கு வந்தபொழுது கங்கைகொண்ட சோழபுரம் கோயில் திரை வழியாக வெளியூர் மக்களுக்குத் தெரியத்தொடங்கியது. அதன் பிறகு மறுமலர்ச்சி, சங்கமம், பதவிப்பிரமாணம் உள்ளிட்ட திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்ட பிறகு கோயிலுக்கு சுற்றுலாக்காரர்களின் வருகை அதிகரித்தது. வெளிநாட்டினரும் பெருமளவு வருகின்றனர்.

கோயிலின் முன்புறமும், பக்கப்பகுதிகளும் இன்று தொல்பொருள் ஆய்வுத்துறையின் வழிகாட்டலுடன் செப்பம் செய்யப்பட்டுள்ளன.முன்பு ஆட்சியராகப் பணிபுரிந்த திரு. கோசலராமன் இ.ஆ.ப. அவர்களும் வருவாய் வளர்ச்சி அலுவலர் திரு.செந்தில்குமார் அவர்களும் இந்தக் கோயிலை அழகுபடுத்தும் முயற்சிக்குத் தோற்றுவாய் செய்தனர். முதற்கட்டமாகக் கோயிலை அடைத்திருந்த வீடுகள்,குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டன.புதிய வீடுகள் குறிப்பிட்ட எல்லைக்குள் உயரமாகக் கட்ட தடைவிதிக்கப்பட்டன.படிப்படியே பூங்காக்கள் அமைக்கும் முயற்சி விரிவடைந்தது.

கோயிலைச்சுற்றி கோபுரத்தை மறைக்கும் மதில்கள் இருந்ததாக நான் செவி வழியாக அறிந்தது உண்டு. அத்தகு படம் ஒன்று கல்கத்தா காட்சியகத்தில் இருப்பதாகவும் அறிகின்றேன். இதற்கிடையில் இன்று இந்து நாளிதழில் 1930 இல் எடுக்கப்பெற்ற ஓர் அரிய படம் கண்டேன். அனைவரின் பார்வைக்கும் இதனை வைக்கின்றேன்.

சனி, 26 நவம்பர், 2011

பிரான்சு நாட்டில் விருதுபெற்றவர்களுக்குப் புதுச்சேரியில் பாராட்டு விழா


பொறிஞர் பாலு, முனைவர் மு.முத்து, மருத்துவர் சித்தானந்தம்(அமெரிக்கா)

பிரான்சு நாட்டில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் கலந்துகொண்டு புதுச்சேரித் தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் விருதுபெற்றுத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு இன்று புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்ற விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் மு.முத்து அவர்களின் தலைமையில் புதுச்சேரியிலிருந்து பிரான்சு நாட்டில் நடைபெற்ற கம்பன்கழக விழாவுக்குத் தமிழார்வலர்கள் பலர் சென்று உரையாற்றி மீண்டனர். அவர்களுள் முனைவர் மு.முத்து, பொறிஞர் பாலசுப்பிரமணியன், கஸ்தூரி வைத்தி உள்ளிட்டவர்களுக்கு இன்று தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பெற்றது.

இன்று(26.11.2011) மாலை 6.30 மணியளவில் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற நாடக அறிஞர் சங்கரதாசு சுவாமிகள் நினைவுநாள் விழாவில் முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் கரு.அழ.குணசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நாடக அறிஞர் சங்கரதாசு சுவாமிகளின் நாடகப் பணிகளை நினைவுகூர்ந்து உரைநிகழ்த்தினர்.

பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமெரிக்காவிலிருந்து வருகைபுரிந்துள்ள மருத்துவர் சித்தானந்தம் அவர்களுக்குப் பாராட்டும் வரவேற்பும் தெரிவிக்கும் முகமாகப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்யப்பெற்றது. மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் அமெரிக்காவில் தங்கி மருத்துவப் பணியும் தமிழ்ப் பணியும் செய்பவர் என்று அரங்கிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பெற்றார். அதனை அடுத்துப் பிரான்சு சென்று விருது பெற்றுத் திரும்பியவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பெற்றது. புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


முனைவர் மு.முத்து உரை


பாராட்டு பெறும் அறிஞர்கள்

வெள்ளி, 25 நவம்பர், 2011

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!




முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. ‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

‘அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்’

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் ‘செங்கோட்டை’ திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்


-------------------------------------------------------------------------------------------------------------------------
பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!
-------------------------------------------------------------------------------------------------------------------------


2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் "பாலை" திரைப்படம் நாளை (நவம்பர் 25) தமிழகமெங்கும் வெளியாகிறது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன.

இயக்குநர் தங்கர் பச்சான்

‘இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்’

இயக்குநர் வெ.சேகர்

‘இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்’

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

‘வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய, ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு, நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்’

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

‘ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட’

ஓவியர் புகழேந்தி

மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம், ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை.

குமுதம் கார்டூனிஸ்ட் பாலா

’இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக, ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையைப் பேசுகிறது இப்படம். நம்பவே முடியாத கிராபிக்ஸ் சாகச கதாநாயகக் காட்சிகளைப் பார்த்துக் காசைக் கரியாக்குபவர்கள் ஒருமுறை ‘பாலை’ படத்தைப் பார்க்க வேண்டும். புதிய அனுபவமாக இருக்கும்’

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

“எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்”

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

“சங்க காலம் இப்படத்தில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று அரசியலும், மக்கள் கலையும், மாற்று திரைப்படமும் வெற்றி பெருதல் வேண்டும். நம் தோழர்களின் இம் முயற்சியை வெற்றியடையச் செய்வோம். இதுவே இந்தத் தலைமுறைத் தமிழர்களின் இயக்கம். மாற்றத்தை சாத்தியப்படுத்துவோம்”

ஊடகங்கள்

புதிய தலைமுறை
வரலாற்றுத் திரைப்படமாக எடுக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகம். பாலை திரைப்படக் குழுவினர் முதல் முறையாக தமிழில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி: தோழர் அருணபாரதி அவர்களின் வலைப்பதிவிலிருந்து மறுபதிப்பு

வெள்ளி, 18 நவம்பர், 2011

அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதிய வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல்வெளியீட்டு விழா



நினைவில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்கள் எழுதிய வல்வெட்டித்துறைக் கடலோடிகள் என்னும் நூல்வெளியீட்டு விழா கனடாவில் உள்ள கந்தசாமிக் கோயிலில் எதிர்வரும் 11.12.2011 மாலை 5 மணிக்கு அ.சி.விஷ்ணுசுந்தரம் நினைவுநிதியத்தின் சார்பில் நடைபெறுகின்றது.

அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்கள் மறைவுக்கு முன்பாக எழுதிமுடிக்கப்பெற்ற இந்த நூல் ஈழத்துத் தமிழர்கள் கப்பல்கட்டும் துறையில் மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் என்பதையும் மிகச்சிறந்த கடல்வாணிகம் செய்தவர்கள் என்பதையும் எடுத்துரைக்கும் நூல். அன்னபூரணி கப்பல் பற்றியும் அதனை உருவாக்கியத் தொழில்நுட்பக்கலைஞர்கள், அதனை விரும்பி விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர் பற்றியும், அந்த அன்னபூரணி கப்பல் ஈழத்திலிருந்து அமெரிக்கா சென்ற வரலாறு பற்றியும் மிகச்சிறப்பாக அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதியுள்ளார்.

ஐயாவின் மறைவுக்குப் பிறகு அவரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக வெளிவரும் இந்தப் படைப்பைத் தமிழர்கள் ஆர்வமுடன் வரவேற்பார்கள் என்று நம்புகின்றோம்.

நூல் வெளியீடு சிறக்க அறிஞர் ஈழத்துப்பூராடனார் தமிழகத்தில் தொடங்கிய பொன்மொழிப் பதிப்பகத்தின் சார்பில் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

வியாழன், 10 நவம்பர், 2011

கடலூர் நகராட்சிப்பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் விழா


திருக்குறள் நூல் பெற்ற மாணவர்களும் வழங்கிய தமிழார்வலர்களும்

குவைத்தில் இயங்கும் பொங்குதமிழ் அறக்கட்டளையினர் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் 250 ஐ வழங்கும் விழாவை இன்று(10.11.2011) மாலை பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை மிகச்சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்குக் கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையினரும் ஆதரவாக இருந்தனர்.

கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் திரு.இராம.சனார்த்தனன் அவர்களின் தலைமையில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பொங்குதமிழ் அறக்கட்டளையின் சார்பில் பொறியாளர் திரு.சேது மாதவன் அவர்கள் வரவேற்றார். பொங்கு தமிழ் மன்றம் குவைத்தில் ஆற்றிவரும் தமிழ்ப்பணிகளை எடுத்துரைத்து, தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் திட்டத்தைப்பற்றி மிகச்சுருக்கமாக உரையாற்றினார்.

கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் இராம.சனார்த்தனன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாணவர்களுக்குத் திருக்குறள் நூல்களை வழங்கித் தொடர்ந்து திருக்குறளைப் படித்து அதன் வழியில் நிற்கவேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் திருக்குறள் நூல் பற்றியும் நிகழ்ச்சியின் சிறப்பு பற்றியும் விளக்கவுரையாற்றினார். திருக்குறள் சிறப்புகளை எடுத்துரைத்து மாணவர்கள் திருக்குறளைத் தொடர்ந்து படித்து அதன் வழியில் நிற்க வேண்டும் என்று மாணவர்கள் உள்ளத்தில் பதியும்படியாக அரியதொரு சிறப்புரையாற்றினார். இவரின் பேச்சில் திருக்குறள் உரைகள், மொழிபெயர்ப்புகள், வெளிநாட்டினரின் பணிகளை நினைவுகூர்ந்தார்.

நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.உதயகுமார் சாம் அவர்கள் இத்தகு சிறந்த நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கிய பொங்கு தமிழ் மன்றத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். உலகத்திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நகராட்சிப்பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவர்கள், கடலூர்த் திரைப்பட இயக்கத்தின் பொறுப்பாளர் சாமிக் கச்சிராயர், கடலூர்ப்பகுதி சார்ந்த பெருமக்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


இராம.சனார்த்தனன் அவர்கள் தலைமையுரை


வரவேற்புரையாற்றும் திரு.சேதுமாதவன் அவர்கள்


விழாவில் பங்கேற்ற மாணவர்கள்


விழாவில் பங்கேற்ற மாணவர்கள்


முனைவர் மு.இளங்கோவன் விளக்கவுரை


மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் ஓய்வுபெற்ற மின்துறை அதிகாரி


உதயகுமார்சாம் அவர்கள் நன்றியுரை

செவ்வாய், 8 நவம்பர், 2011

கடலூரில் குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கும் விழா



குவைத் பொங்கு தமிழ்மன்றமும், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாகத் திருக்குறள் நூல் வழங்கும் விழாவை நடத்துகின்றன.நிகழ்ச்சியில் குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்களும், கடலூர் மாவட்டத் திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி நிரல்

நாள்: 10.11.2011
நேரம்: பிற்பகல் 3.30 மணி

இடம்: நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கடலூர்

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: திரு.இராம.சனார்த்தனன் அவர்கள்

வரவேற்புரை: திரு.சேது மாதவன் அவர்கள்

விளக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

வாழ்த்துரை: பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் அவர்கள்

நன்றியுரை: திரு.உதயகுமார் சாம் அவர்கள், தலைமையாசிரியர்

அனைவரும் வருக!

தொடர்புக்கு: சேதுமாதவன்(கடலூர்) + 91 9443916234

ஞாயிறு, 6 நவம்பர், 2011

ஆலந்தூர் கோ.மோகனரங்கன்


ஆலந்தூர் கோ.மோகனரங்கன்


ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் தமிழ்ப்பா புனைவதில் முத்திரை பதித்த பெரும் பாவலர் ஆவார். கிளை நூலகராகப் பணிபுரிந்தபடியே புகழ்பெற்ற பாக்களையும் இசைப்பாக்களையும் எழுதியவர். “தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் 01.06.1942 இல் சென்னையில்-ஆலந்தூரில் பிறந்தவர். பெற்றோர் கோ.மீனாம்பாள், மா.கோபால் ஆவர். ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் சென்னைத் தியாகராயநகர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும்பொழுது புதிய பாதை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர். பள்ளி இலக்கிய மன்றச் செயலாளராகச் செயல்பட்டவர். மாணவப்பருவத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றவர்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் தம் பதினெட்டாம் அகவையில் நூலகத்துறையின் பணியில் சேர்ந்தார். பணிசெய்துகொண்டே புலவர், பி.லிட்,முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாண்டுகள் முழுநேர ஆய்வாளராக இருந்து பேராசிரியர் இரா.குமரவேலனார் நெறிப்படுத்தலில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்.

ஆலந்தூரில் கவிதைவட்டம் என்னும் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தித் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள் வந்து கலந்துகொள்ளும் கவியரங்குகளை நடத்தியவர்.
நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு, ஆறுமுக நாவலர், சுன்னாகம் குமாரசாமிப் புலவர், சபாபதி நாவலர், பரிதிமாற்கலைஞர், அரசஞ் சண்முகனார் ஆகியோரின் நூல்களை வெளியிட்டவர். அறிஞர் அண்ணா அவர்கள் 1942 முதல் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து முதல்முறையாக நூல்வடிவம் கொடுத்து 22 தொகுதிகளாக வெளியிட்டவர்.

மறைமலையடிகள், திரு.வி.க, கா.சு.பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை மறுபதிப்பு செய்த பெருமைக்குரியவர்.

தமிழக அரசின் பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, விஜி.பி. விருது, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர் உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். இவர் எழுதிய பொன்னம்மா ஒரு புதுமைப்பெண் என்ற நாடகம் ஏ.வி.எம்.அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.

வணக்கத்திற்குரிய வரதராசனார் என்ற குழந்தை இலக்கிய நூல் தமிழக அரசின் முதல்பரிசைப் பெற்றது.

மலேசியா, தாய்லாந்து, மொரிசீயசு, உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு இலக்கியப் பயணமாகச் சென்று வந்துள்ளார்.

தில்லியில் உள்ள தேசியப் புத்தக நிறுவனத்தார் இவர்தம் கவிதைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்துள்ளனர். ஞானபீட நிறுவனத்தார் இவர்தம் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் பாடல்கள் பள்ளிப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் பாட நூல்களே மட்டுமன்றிக் கருநாடக மாநிலத்தின் தமிழ்ப்பாட நூல்களிலும், சிங்கப்பூர், மலேசியா, மொரிசீயசு நாட்டுத் தமிழ்ப்பாட நூல்களிலும் இவர் பாடல்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

ஆலந்தூர் மோகனரங்கன் வானொலியில் இசைப்பாடல்களையும் இசை நாடகங்களையும் எழுதிப் புகழ்பெற்றவர்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் துணைவியார் பெயர் திருவாட்டி வசந்தா மோகனரங்கன். இவர்களுக்கு முனைவர் மோ.பாட்டழகன், மருத்துவர் கவிமணி, மருத்துவர் மோ.தேன்மொழி, மொ.வெற்றியரசி, மருத்துவர் மோ.அன்புமலர், மருத்துவர் மோ.கலைவாணன் என்னும் மக்கட் செல்வங்கள் உள்ளனர்.

“காலமெனும் மலையிடையே கவிதை ஒரு தேனருவி”, எனவும்

“ஆசைக்குப் பாடுவோரும்
அழகுக்குப் பாடுவோரும்
ஓசைக்குப் பாடுவோரும்
உணர்வுக்குப் பாடுவோரும்
பூசைக்குப் பாடுவோரும்
புலமைக்குப் பாடுவோரும்
காசுக்குப் பாடாரானால்
காலத்தை வென்று வாழ்வார்!”

எனவும் பாடியுள்ள வரிகள் இலக்கியச்செழுமை கொண்டன.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் நூல்களுள் சில:

1. ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்
2. பள்ளிப் பறவைகள்
3. குப்பை மேட்டுப் பூனைக்குட்டி
4. வணக்கத்திற்குரிய வரதராசனார் கதை
5. இமயம் எங்கள் காலடியில்
6. கொஞ்சு தமிழ்க்கோலங்கள்
7. பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்
8. பொய்யே நீ போய்விடு
9. தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு
10. நினைத்தால் இனிப்பவளே
11. இதயமே இல்லாதவர்கள்
12. இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை
13. ஆலந்தூர் மோகனரங்கன் சிறுகதைகள்
14. கவிதை எனக்கோர் ஏவுகணை
15. குறுந்தொகையின் குழந்தைகள்(ஐக்கூ)
16. பிறர் வாழப்பிறந்தவர்கள்
17. ஆலந்தூர் மோகனரங்கன் மெல்லிசைப்பாடல்கள்
18. தாத்தாவுக்குத் தாத்தா
19. முத்தமிழ்க்கவிஞர் மோகனரங்கன் கவிதை நாடகங்கள்
20. கவிராயர் குடும்பம்
21. நாட்டு மக்களுக்கு நல்ல நாடகங்கள்


கோ.மோகனரங்கன் அவர்களின் அரிய ஆய்வேடு


மெல்லிசைப்பாடல்கள்

தொடர்புக்கு:

மோ. பாட்டழகன்
வசந்தா பதிப்பகம்
26, சோசப் குடியிருப்பு,
ஆதம்பாக்கம், சென்னை- 600081
பேசி
+ 044- 22530954

வியாழன், 3 நவம்பர், 2011

புதுச்சேரியில் தமிழ்மாமணி மன்னர்மன்னன் பிறந்தநாள் விழா!


கோ.பாரதி, மு.முத்து, அ.அறிவொளி, மன்னர்மன்னன்,
தொழிலதிபர் சிவக்கொழுந்து, துபாய் குழந்தை

  புதுச்சேரியில் உள்ள புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் இன்று (03.11.2011) மாலை 6.30 மணிக்குப் பாவேந்தரின் மகன் தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களின் பிறந்தநாள் விழாவும் நூல்கள் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடந்தன.

  புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் மு.முத்து அவர்கள் தலைமை தாங்கினார். பேராசிரியர் அ.அறிவொளி அவர்கள் கலந்துகொண்டு தமிழ்மாமணி மன்னர்மன்னன் எழுதிய பொன்னேடுகள், கோ.பாரதி எழுதிய சுடர்மணிகள் என்னும் இரண்டு நூல்களை வெளியிட, சப்தகிரி நிறுவனங்களின் நிறுவனர் திரு.சிவக்கொழுந்து அவர்களும், திரு. துபாய் குழந்தை அவர்களும் நூலின் படிகளைப் பெற்றுக்கொண்டனர். கவிஞர் கோவிந்தராசு, சொல்லாய்வுச் செல்வர் சு.வேல்முருகன், சுந்தர.இலட்சுமி நாராயணன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர். புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சிங்கப்பூர்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்குப் பெரியார் விருது




சிங்கப்பூரில் பலவாண்டுகளாகத் தங்கித் தமிழ்ப்பணியும் கல்விப்பணியும் புரிந்துவரும் பேராசிரியர் சுப.திண்ணப்பன் ஐயா அவர்களுக்குச் சிங்கப்பூரில் நடைபெறும் பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.

சிங்கப்பூரில் 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெறும் விழாவில் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மருத்துவர் சோம. இளங்கோவன், மா.அன்பழகன், வீ.கலைச்செல்வன்,க.பூபாலன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சிறப்பு விருந்தினராகத் திரு. விக்ரம் நாயர் அவர்கள் கலந்துகொள்கின்றார்.இந்த விழாவில் பெரியார் விருது பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு வழங்கப்படுகின்றது.