நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

பேராசிரியர் இரா. கந்தசாமியார் பிறந்த கூமாப்பட்டிக்குச் சென்று திரும்பினேன்….

பேராசிரியர் இரா. கந்தசாமியார்

பாவாணர் பயின்ற, பணியாற்றிய முரம்பு என்னும் ஊரில் நடைபெறும்(09.02.2023) பாவாணர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அறிஞர் ஆ. நெடுஞ்சேரலாதன் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். பாவாணர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பாவாணர் பெயரில் அமையும் விருதினைப் பெற உள்ளதை மகிழ்ச்சியாக நினைத்துக் கொண்டிருந்தேன்.  

நிகழ்ச்சிக்குச் செல்வதை உரையாடல் ஒன்றின்பொழுது அரபுநாட்டில் பணியாற்றும் என் அருமை நண்பர் பொறியாளர் சித்தநாத பூபதி அவர்களிடம் தெரிவித்து, முரம்பு செல்லும் வழிகள் குறித்து கேட்டறிந்தேன். அவ்வூருக்கு அருகில் உள்ள  கூமாப்பட்டிக்குச் செல்ல இருப்பது பற்றியும் சென்று திரும்புவதற்கு உரிய நேரத்தையும் பிற தேவையான விவரங்களையும் பெற்றுக்கொண்டேன்

பொறியாளர் சித்தநாத பூபதி அவர்கள் பொறியாளர் எனினும் குறள்வெண்பாவுக்கு நிரல் உருவாக்கிய கணினித் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். பத்தாண்டுகளுக்கு முன்னர் நானும் பூபதி அவர்களும் அமெரிக்காவில் சந்தித்து உரையாடி, நட்புகொண்டவர்கள். அவரின் சிறப்பினை அப்பொழுதே என் பக்கத்தில் எழுதி மகிழ்ந்திருந்தேன். தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். பழந்தமிழ் இலக்கியங்களிலும் புத்திலக்கியங்களிலும்  சித்தநாத பூபதி அவர்களுக்குப் பேரீடுபாடு உண்டு. உரையாடலின்பொழுது துபை நாட்டுக்கு வருமாறு அன்பு அழைப்பு விடுத்தவண்ணம் இருப்பார். அந்த நாளுக்குக் காத்திருந்தோம். இது நிற்க. 

முரம்பில் அமைந்துள்ள பாவாணர் பாசறை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கூமாப்பட்டிக்குச் செல்வது என் பயணத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. அங்குதான் தொல்காப்பியத்திற்குக் குறிப்புரை வரைந்தவரும்,  தணிகைப்புராண உரையாசிரியரும், விபுலாநந்த அடிகளாரின் நண்பரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான அறிஞர் இரா. கந்தசாமியார் அவர்கள் பிறந்தது. அவர் பிறந்த கூமாப்பட்டிக்குச் செல்லும் வேட்கையை அறிந்த சித்தநாத பூபதி அவர்கள் அந்த ஊருக்கு எப்படிச் செல்ல உள்ளீர்கள்? என்று கேட்டார்

பேருந்தில் பயணிக்க உள்ளேன் எனவும் கூமாப்பட்டிப் பணியை முடித்துக்கொண்டு மீண்டும் இராசபாளையம் வந்து அங்கிருந்து பொதிகைத் தொடர்வண்டியில் விழுப்புரம் செல்ல உள்ளேன் என்றும் தெரிவித்தேன்

முரம்பு கூமாப்பட்டி - இராசபாளையம் தொலைவுகளைச் சொல்லிப் பேருந்துப் பயணத்தைத் தவிர்க்குமாறும், தம் மகிழுந்து முரம்புக்கு உரிய நேரத்திற்கு வரும் எனவும் அதில் ஏறிக் கொண்டு, கூமாப்பட்டிக்குச் செல்லுமாறும், அங்குள்ள ஆய்வுப்பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் இராசபாளையம் திரும்பலாம் என்றும் நண்பர் சித்தநாதபூபதி குறிப்பிட்டார். “சொல்லியவண்ணம் செயல்” என்பதுபோல் அவ்வாறே திட்டமும் உறுதிப்பட்டது. 

09.02.2023 இல் முரம்பு பாவாணர் பாசறையில் பேரணி, பாடல், பொழிவு, நூல் வெளியீடு எனப் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன. பகல் 1.45 மணிக்கு  விழா நடைபெறும் இடத்துக்கு மகிழுந்து வந்தது. வண்டியில் திரு. சு. முத்துச்சாமி ஐயா  அவர்கள் வருகைபுரிந்து என்னை அழைத்துச் செல்லக் காத்திருந்தார்இவர் என் அருமை நண்பர் சித்தநாத பூபதியின் தந்தையார் ஆவார்.  ஐயாவுக்குப் பொது இடத்து உணவு ஒவ்வாமையால் விழாவில் கிடைத்த உணவைத் தவிர்த்தார். விழா நடைபெறும் இடத்தில் பகலுணவு இரண்டு மணிக்கு எங்களுக்குக் கிடைத்தது. உணவை முடித்துக்கொண்டு திருவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு வழியாகக் கூமாப்பட்டியை நோக்கி எங்கள் மகிழுந்து விரைந்தது. 

மகிழுந்தில் செல்லும்பொழுது சு. முத்துச்சாமி ஐயாவின் குடும்பம் கல்வி, பணிநிலைகள் குறித்து வினவினேன். முத்துச்சாமியார் அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் வகுப்பில் பயின்றவர்கள் என்பதும் சுப்பையநாயக்கன் பட்டியில் அமைந்துள்ள பாரதி நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும் தம் மக்களுக்கு நல்ல கல்வியைக் கிடைக்கச் செய்த விவரங்களையும் சொல்லியவண்ணம் வந்தார்கள். கூமாப்பட்டியை நெருங்கிச் செல்லும் பொழுது அவ்வூரின் இயற்கையழகையும், மேற்குமலைத்தொடரின் வண்ண எழில்கோலத்தையும் சுவைத்தபடியாகச் சென்றேன். 

ப. க. ஜெயபால், கிராம நிர்வாக அதிகாரி(ப.நி)

நாங்கள் கூமாப்பட்டிக்குத் தேடிச் சென்றவர் திரு. ப. க. ஜெயபால் ஐயா அவர்கள் ஆவார். பேராசிரியர் இரா. கந்தசாமியாரின் குடிவழியினர். இவர்கள் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஊரில் செல்வாக்கு நிறைந்தவர். பேருந்து நிலையத்தில் எங்கள் வருகைக்குக் காத்திருந்தார். அருகிலிருந்த வீடொன்றுக்கு உரிய அன்பர் வழியாக எங்களை அனுப்பிவைத்தார்கள். அதுதான் பேராசிரியர் இரா. கந்தசாமியார் வீடு என்று அறிந்தோம். அங்கு கந்தசாமியாரின் புகைப்படம் ஒன்று உள்ளது. இரா. கந்தசாமியாரின் உறவினர்கள் ஊர் முழுவதும் நிரம்பி வாழ்வதை உரையாடல்களில் அறிந்தோம். கந்தசாமியாரின் தந்தையார் இராமசாமித் தேவர் அவர்கள் 1883 பங்குனி உத்திரத்தில் மறைந்ததை நினைவூட்டும் நினைவிடமும் அருகில் இருந்தது. அதனையும் பார்வையிட்டோம். 

ப. க. ஜெயபால், புலவர் சு. முத்துச்சாமி

மு.இளங்கோவன், ப. க. ஜெயபால், புலவர் சு. முத்துச்சாமி

பின்னர் ஜெயபால் ஐயா அவர்களின் இல்லம் சென்று, நெடு நாழிகை உரையாடி, கந்தசாமியார் குறித்த விவரம் அறிந்தோம். என்னுடன் வந்த சு. முத்துச்சாமியாரும் ஜெயபால் அவர்களும் உறவினர்கள் என்பதும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதும் பின்னர் வெளிப்பட்டது. 

கூமாப்பட்டியில் நூறாண்டுகளுக்கு முன்னர் பிறந்த இரா. கந்தசாமியார் தம் அண்ணன், அம்மா ஆகியோருடன் முரண்பட்டு, இளம் அகவையில் வீட்டை விட்டு வெளியேறியவர். பல ஊர்களில் தங்கிக் கல்வி பயின்றும் பணியாற்றியும் நிறைவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பிறகு தமக்கு இளம் அகவையில் அடைக்கலம் தந்த சோழவந்தான் கிண்ணிமடம் சென்று தங்கியிருந்தபொழுது மாரடைப்பு நோயால் உயிர் இழந்தவர். சோழவந்தானில் இவருக்கு நினைவிடம் உருவாக்கிப் போற்றப்படுகின்றது (இது குறித்துப் பின்னர் எழுதுவேன்). பேராசிரியர் கந்தசாமியார் குறித்த விரிவான செய்திகளையும் குறிப்புகளையும் பெற்றுக்கொண்டு, மாலைநேரத்தில் மீண்டும் இராசபாளையம் நோக்கி மகிழுந்தில் விரைந்தோம். வரும் வழியில் அரும்பெரும் பாடல்களாலும் பத்திமையாலும் நினைக்கப்பெறும் ஆண்டாள் நாச்சியாரின் திருவில்லிப்புத்தூர் திருக்கோவிலின் கோபுர வனப்பையும், கோவிலின் வனப்பையும் கண்டு மகிழ்ந்து இராசபாளையம் தொடர்வண்டி நிலையம் வந்து சேர்ந்தோம். எங்களைச் சுமந்து செல்ல பொதிகை விரைவு வண்டி வந்துகொண்டிருந்தது. 

திங்கள், 13 பிப்ரவரி, 2023

முரம்பு பாவாணர் கோட்டத்தில் நடைபெற்ற பாவாணர் பிறந்த நாள் விழா!

ஆ. நெடுஞ்சேரலாதன் அவர்கள் மு.இளங்கோவனுக்கு ஆடை அணிவித்தல்


மும்பை சு. குமணராசன் அவர்கள் மு.இளங்கோவனைச் சிறப்பித்தல்

 மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாள் விழா 2023, பெப்ருவரி 9 ஆம் நாள் விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அடுத்துள்ள முரம்பு பாவாணர் கோட்டத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாகத் தமிழறிஞர்கள் பாவாணர் சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாக விழா நடைபெறும் பாவாணர் பாசறைக்கு வருகைபுரிந்தனர். அறிஞர் தளவை இளங்குமரனார் அவர்கள் கொடியேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். ஆடல், பாடல் நிகிழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. பாடகர் திருவுடையான் பெயர் தாங்கிய குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்வில் பாவாணரின் சிறப்புகளையும், ஆராய்ச்சிப் பணிகளையும் நன்கு உணர்ந்த அறிஞர் பெருமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

பாவாணர் கோட்டத்தின் முகப்பில் அறிஞர்கள்

திருக்குறள் பதிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள திரு. மா. பொழிலன் அவர்கள் திருக்குறள் சிறப்பு குறித்து அரிய உரை வழங்கினார். மும்பையிலிருந்து வருகைபுரிந்த திரு. சு. குமணராசன் அவர்கள் முதன்மை விருந்தினர்களுக்குப் பயனாடை போர்த்தி, நூல்களை அன்பளிப்பாக வழங்கி, வாழ்த்திப் பேசினார். புதுச்சேரியிலிருந்து வருகைபுரிந்த பாவாணர் கொள்கை பரப்புநர் விருதுபெற்ற முனைவர் மு.இளங்கோவன், தமிழில் தமக்கு ஈடுபாடு வருவதற்குக் காரணமாக அமைந்த நிகழ்வுகளையும் தாம் செய்துவரும் தமிழ் ஆய்வுப்பணிகளையும் அவையில் பகிர்ந்துகொண்டார். மூத்த அறிஞர் வை. மு.கும்பலிங்கம் அவர்கள் பாவாணர் வழிச் செம்மல் விருது பெற்று, அரியதோர் உரை வழங்கி அவையினரை மகிழவைத்தார். மதுரையிலிருந்து வருகைபுரிந்த திரு. வரதராசன் அவர்கள் தம் தமிழ்த்தொண்டுகளை அவையினர்க்கு நினைவூட்டி, அறிவார்ந்த மக்களாகத் தமிழ் மக்கள் மிளிரவேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். பாவலர் முனைவர் பா. எழில்வாணன் அவர்களின் வருகையும் பாவும் அனைவராலும் பாராட்டும்படியாக இருந்தன. பட்டி மன்றம், நூல் வெளியீடு என்று பல நிகழ்வுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

மு.இளங்கோவன் ஏற்புரை

விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அடுத்துள்ள முரம்பு என்னும் ஊரில் அமைந்துள்ள பாவாணர் கோட்டம், பாவாணர் பாசறை என்னும் இரண்டையும் உலகத் தமிழ் மக்கள் ஆர்வத்தோடு சென்று பார்க்க வேண்டும். இக்கோட்டம் முழுமையாக உருவாவதற்குத் தங்களால் இயன்ற கைப்பொருளை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். பாவாணர் இளம் அகவையில் பயின்ற, பணிபுரிந்த ஊரில் இத்தகு நினைவிடத்தை உருவாக்கியுள்ள பாவாணர் கோட்டத்தினர் பாராட்டிற்கு உரியவர்கள். க.ப. அறவாணன், இரா. இளவரசு, குடந்தை. கதிர். தமிழ்வாணன், தமிழண்ணல், சேலம் வேள்நம்பி உள்ளிட்ட தமிழறிஞர்களின் படங்களைப் பாசறை அரங்கில் வைத்துப் போற்றியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. 

மிகச் சிறந்த தமிழ்ப்பணியைத் தக்க அன்பர்களின் துணையுடன் செய்துவரும் தமிழாசிரியர் ஆ. நெடுஞ்சேரலாதன் அவர்கள் தமிழர்களின் நன்றிக்கு உரிய பெருமகனார் ஆவார். 

தொடர்புக்கு: தமிழாசிரியர் ஆ. நெடுஞ்சேரலாதன் 9443284903

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

பாவாணரைப் போற்றுவோம்!.



மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்த நாளாம் இன்று(பெப்ருவரி 7) அவர்தம் பெருமைகளைத் தமிழார்வலர்கள் உலகின் பல பகுதிகளிலும் தங்களுக்கு அமைந்த வாய்ப்புகளுக்கு ஏற்ப நினைவுகூர்ந்து வருகின்றனர். கொள்கையுறுதியாலும், ஆராய்ச்சித் திறனாலும், மொழிக்காப்பு முன்னெடுப்புகளாலும் போற்றப்படும் தமிழ் அறிஞர்களுள் நம் மொழிஞாயிறு பாவாணர் அவர்களே முதலிடத்தில் இருப்பதை அறிஞருலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. தம் முதல் ஆராய்ச்சி நூலான ஒப்பியன் மொழிநூலே தமிழாய்வுலகை அசைத்துப் பார்த்தது. இளைஞர்களுக்குத் தமிழின் செழுமையையும் தொன்மையையும் நினைவூட்டியது. அந்த நூலைக் கற்ற ஒரு மிகப்பெரும் அணியினர் தமிழகத்தில் மொழிக்காப்பு மறவர்களாகச் சுடர்விட்டு விளங்கியமையைத் தமிழுலகம் கண்டது. பாவாணரின் தலைமாணாக்கராக விளங்கிய பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் முயற்சியால் பாவாணரின் பெருமையைத் தமிழுலகம் அறிந்தது. பாவாணருக்குத் தொண்டர்களும், பற்றாளர்களும் உலகம் முழுவதும்  தோன்றியவண்ணம் உள்ளனர். பாவாணர் மறைவுக்குப் பிறகும் அவரின் நூல்கள் இன்றும் ஆர்வமுடன் வாங்கிப் பயிலப்படுகின்றன. அவரின் ஆராய்ச்சிப் பணிகள் அறிஞர் பெருமக்களால் தொடர்கின்றன. 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்… 

1981 ஆம் ஆண்டு, அரியலூர் மாவட்டம் உள்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவனாகப் பயின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது  பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழ்ச்சிட்டு என்னும் சிறுவர் இதழினை உறுப்பாண்மைக் கட்டணம் கட்டிப் படிக்கத் தொடங்கினேன். பலவாண்டுகளாக அந்த இதழ் வெளிவந்துகொண்டிருந்தாலும் என் கையினுக்குக் கிடைத்த முதல் இதழில் பாவாணர் மறைந்தார்! என்னும் தலைப்பிட்டு ஆசிரியவுரை எழுதப்பெற்றிருந்தது. பாவாணரின் பெருமைகளையும் சிறப்புகளையும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதாக அந்த ஆசிரியவுரை இருந்தது. அதனை ஆர்வமாகக் கற்று, உள்ளத்துள் பதித்தேன். அந்த நாள் முதல் பாவாணரின் நூல்களைப் பயிலத் தொடங்கினேன். மேல்நிலைக் கல்விக் காலத்திற்குள் பாவாணரின் பெரும்பான்மை நூல்களைக் கற்கும் வாய்ப்பு அமைந்தது. கல்லூரிப் பருவத்தில் பாவாணர், பெருஞ்சித்திரனார், அருளியார், வ.சுப. மாணிக்கனார், மறைமலையடிகளார் நூல்களை ஆழ்ந்து கற்கும் சூழலை அமைத்துக்கொண்டேன். அந்நூல்களைக் கற்ற நாள் முதல் தூய தமிழில் உரையாடுவதும், எழுதுவதும், தமிழ்ப்பெயர்களை வைக்குமாறு ஆர்வலர்களுக்கு நெறிகாட்டுவதும் என் இயல்புகளாக இருந்தன. என்னுடன் பயின்ற மாணவர்களும் எனக்குப் பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களும் என் தமிழ் ஈடுபாட்டை ஊக்கப்படுத்தி வளர்த்தனர். பாவாணர் நெறியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பலருடன் பழகவும் அவர்களின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரும் சூழல்களும் அமைந்தன. 

தமிழுக்கும் தமிழர்களுக்கும் பயன்படும் பல்வேறு பணிகளை இந்த நொடி வரை நான் ஆர்வமுடன் செய்து வருவதை அருகிலிருந்தும் அயலிலிருந்தும் பழகுபவர்கள் நன்கு அறிவார்கள். எம் ஊர்ப்பகுதியிலும் எம் நட்பு வட்டத்திலும் இருப்போர்க்குத் தமிழில் பெயர் சூட்டுவதை ஒரு கொள்கையாக வைத்துள்ளேன். மணவினை உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தமிழில் நடத்துமாறு அனைவரிடத்தும் வேண்டிக்கொள்வது உண்டு. தமிழ் வளர்ச்சிக்குரிய பணிகளை நண்பர்களுடன் இணைந்து இன்றும், இனியும் செய்வதும் என் இயல்பே. அவ்வகையில் பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், தவத்திரு விபுலாநந்த அடிகளார், இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்ட அறிஞர்களின் தமிழ்ப்பணிகளும் இவர்களை ஒத்த தமிழ்த்தொண்டர்கள் பல நூற்றுவரின் தமிழ்ப்பணிகளும் என்னால் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படிப்பதும், ஆராய்வதும், எழுதுவதுமாக இருக்கும் என் முயற்சிகளைத் தமிழகத்திலும் அயல் மண்ணிலும் வாழும் அன்பர்கள் ஊக்கப்படுத்திப் பாராட்டி, என்னை மேலும் மேலும் வளர்த்தெடுத்து வருகின்றனர். அவ்வகையில் கீழ்வரும் ஒரு பாராட்டு நிகழ்வு என் வாழ்வில் கிடைத்த பெருமைக்குரிய நிகழ்வாக அமைய உள்ளது.

ஆம்! 

விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அடுத்துள்ள தெற்குச் சோழபுரத்திற்கு அருகில் உள்ள முரம்பு பாவாணர் கோட்டத்தார் 09.02.2023 இல் தாம் எடுக்கும் பாவாணர் பிறந்தநாள் விழாவில் பாவாணர் கொள்கை பரப்புநர் என்னும் விருதளித்து என்னைப் பாராட்ட உள்ளனர். இந்த நிகழ்வில் தமிழகத்தின் பெருமைக்குரிய அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு பேரணி, நூல் வெளியீடு, பட்டிமன்றம், பாவரங்கம், சிறப்புப் பேருரை, கருத்துரை உள்ளிட்ட நிகழ்வுகளின் வழியாகப் பாவாணருக்குப் பெருமை சேர்க்க உள்ளனர். அறிஞர் அ. நெடுஞ்சேரலாதன் ஐயா அவர்களின் வினையாண்மையில், பாவாணர் பற்றாளர்கள் எடுக்கும் விழாவில் வாய்ப்புடையோர் கலந்துகொண்டு, பெருமை சேர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வியாழன், 2 பிப்ரவரி, 2023

தன்மானப் புலவர் தங்க. சங்கரபாண்டியன்

 

          புலவர் தங்க. சங்கரபாண்டியன்


  மின்னஞ்சலும், வாட்சப் உரையாடல்களும் கோலோச்சும் இக்காலத்தில் அஞ்சலட்டைகளிலும் அலுவலக உறைகளிலும் எழுதும் பழக்கம் குறைந்து வருவதை யாவரும் ஒப்புக்கொள்வர். ஆனால் தொடர்ந்து மடல் இலக்கியத்தை வளர்த்தும்வரும் தமிழ்த்தொண்டர்கள் தமிழகத்தில் அங்கொருவர் இங்கொருவர் என்று இருப்பதையும்  ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அத்தகையோருள் தங்க. சங்கரபாண்டியனார் குறிப்பிடத் தகுந்தவர்.

  தமிழ் இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள், கவிதைகள், மடல்கள் எழுதி வெளியிட்டுவரும் தமிழாசிரியர் தங்க. சங்கரபாண்டியன் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 20. 08 1948 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் ச.தங்கவேலனார், க. கண்ணம்மா  ஆகும். அரக்கோணத்தில் உள்ள . சி. எஸ். ஐ.சென்ட்ரல் பாடசாலை, தூய அந்திரேயர் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தவர். தன்னார்வமாக பி. லிட், முதுகலை, தமிழாசிரியர் பயிற்சி முடித்து, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவ்வகையில் விவேகானந்தா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி,  மணலிபுதுநகர்;  கிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி ,    திருவொற்றியூர்;  தூய பவுல், மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர்;  தரும  மூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன்  செட்டி மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர் ஆகிய பள்ளிகளில் பணியாற்றி, நன்மாணாக்கர் பல்லாயிரவரை உருவாக்கிய பெருந்தகையாளர் தங்க. சங்கரபாண்டியனார் ஆவார்.

இலக்கிய ஆர்வம் :

     பள்ளியில் படித்த போதும், கல்லூரியில் படித்த போதும் மாணவர்களால் இலக்கிய மன்றச் செயலாளராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  பள்ளி ஆண்டு மலரான  “மழலை மொழியில்”  கதை, கட்டுரை கவிதைகள் எழுதியவர்.  பள்ளி, கல்லூரிகளில் நடந்த அனைத்துப் பேச்சு, எழுத்துப் போட்டிகளில்  பரிசுகள் பெற்றவர்.  கல்வியியல் கல்லூரியில் பயின்றபோது இலயோலா கல்லூரியில் நடந்த அனைத்துக் கல்லூரி மாணவர் பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றவர்.

எழுதிய நூல்கள்:

     ஏறத்தாழ  40  நூல்கள் எழுதியுள்ளார்.   “ வேழவேந்தன் கவிதைகள் ஒரு மதிப்பீடு” என்ற இவரின் நூலை அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்  வெளியிட்டுப் பொன்னாடை போர்த்தி இவருக்குக் கணையாழி அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இவர் எழுதிய “ பெரியாரே என் தலைவர்” என்னும் நூலுக்குச் சேலம் கே. ஆர். ஜி. நாகப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கிப் பாராட்டியது.

கடித இலக்கியப் பணிகள் :

     தமிழில் வெளிவரும் எல்லாச் சிற்றேடுகளிலும் பல்லாண்டாகத் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார்.  கடிதங்கள் மூலம் இவர் புகழ்பெற்றவர்.   இவரது கடிதங்கள் வெளிவராத  ஏடுகளே  இல்லை எனலாம்.  கடித இலக்கியத்திற்குப் பெருந்தொண்டு ஆற்றியவர்களில் இவரே தலைசிறந்தவர்.  கடித இலக்கியத்தில் இவருக்கு  வழிகாட்டியாக இருந்தவர்கள் வல்லிக்கண்ணன், தி.க.சி. ஆகியோர்  ஆவர்.   அவர்கள் வழியைப் பின்பற்றி இன்றும் கடித இலக்கியம் படைத்து வருபவர்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விவரம்:

     இவர் கடந்த பல ஆண்டுகளாகச் சென்னை வானொலியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சென்னை வானொலி நிலையத்தாரால் சிறந்த வானொலி நேயர் என்னும் சான்றிதழ் பெற்றவர் இவர் சென்னை வானொலியைத் தவிர விவிதபாரதி வர்த்தக  ஒலிபரப்பு  நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.  இவரின் மெல்லிசைப்  பாடல்களையும், குழந்தைப் பாடல்களையும், நாட்டுப்புறப் பாடல்களையும், பலமுறை ஒலிபரப்பி சென்னை வானொலி  இவருக்கு ஆதரவு அளித்தது.  மேலும் வேரித்தாஸ் வானொலி, வத்திகான்  வானொலி, சீன வானொலி ஆகியவற்றிலும்  இவரது எழுத்துக்கள் ஒலிபரப்பப்பட்டன.   இவர் சென்னை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் பல்லாண்டாகப் பங்கேற்று வருபவர்.  மக்கள் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பங்கேற்றிருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியினரும், மக்கள் தொலைக்காட்சியினரும் இவரின் வீடு தேடி வந்து இவரைப் படம் பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் எழுதிய நூல்களுள் சில :

1. அகிலம் போற்றும் அறிவியல் அறிஞர்கள்

2. வியத்தகு விஞ்ஞான வித்தகர்கள்

3. அறிய வேண்டிய அறிவியல் செய்திகள்

4. அறிவியல் கருவூலம்

5. பெரியார் பேசுகிறார்

6. அண்ணா பேசுகிறார்

7. அம்பேத்கர் பேசுகிறார்.

8. அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி 

9. சமாதான காவலர் நேரு

10. நேருவின்  சொற்பொழிவுகள்

11. வேழவேந்தன் கவிதைகள் - ஒரு மதிப்பீடு

12. தங்க. சங்கரபாண்டியன் கவிதைகள் 

13. உயர்வைத் தரும் உன்னத மொழிகள் 

14. வடவெல்லைத் தமிழ்  மாமுனிவர் மங்கலங் கிழார்.

15. பெரியாரின் பெருவாழ்வு 

16. திறனாய்வுச் செம்மல் தி. க. சிவசங்கரன்

17. சிறுவர்க்கான  சிறந்த பாடல்கள்

18. குத்தூசி குருசாமியின் கட்டுரைகள்  ( தொகுப்பு )

19. குத்தூசி குருசாமியின் சிறுகதைகள் ( தொகுப்பு )

20. சிந்தனைச்  சிதறல்கள் 

பெற்ற பட்டங்களில் சில :

1. பெரும் புலவர்

2. புலவரேறு

3. புலவர் திலகம்

4. பகுத்தறிவுக் கவிஞர்

5. கண்ணியச் செம்மல்

6. மடல் மன்னன்

7. தன்மானப் புலவர்

8. மனிதநேயச் சிந்தனையாளர்

9. இலக்கியச் சிற்பி போன்ற பல்வேறு விருதுகளைப்  பெற்றவர். 

இவருக்குச்  “ சீர்மிகு  எழுத்தாளர்” விருதைத் தமிழ்நாடு சிற்றிதழ்ச் சங்கத்தார் வழங்கினர்.  மனித நேயச்  சிந்தனையாளர் பட்டம் தருமபுரி தகடூரான் தமிழ் அறக்கட்டளை வழங்கியது.   இலக்கியச் சிற்பி  கண்ணியச் செம்மல் போன்ற பட்டங்களைக்  கண்ணியம் மாத ஏடு வழங்கியது. “மடல் மன்னன்”  என்னும் பட்டம் காலஞ்சென்ற திறனாய்வுச் செம்மல் தி.க.சி. அவர்களால் வழங்கப்பட்டது.

இவர் தோற்றுவித்து நடத்திய அமைப்புகள் விவரம்:

     1960-70 ஆம் ஆண்டுகளில் இவர் அரக்கோணத்தில் பகுத்தறிவுப் பாசறை,  தமிழ்ச்சங்கம், எழுத்தாளர் மன்றம்,  தனித்தமிழ்க் கழகம், போன்ற அமைப்புகளைத் தோற்றுவித்துப் பணியாற்றியவர்.   தமிழ்நாடு அளவில் தமிழ்நாடு சோசலிசப் பேரவை என்னும் அமைப்பைத் தம் நண்பர் பா. சாரதியுடன் சேர்ந்து  நடத்தியவர்.   தமிழ்நாடு சோசலிசப் பேரவை என்னும் அமைப்பை நடத்தியபோது இவரும் இவர் நண்பர் பா. சாரதியும் அமைப்பாளர்களாக  இருந்து தமிழ்நாடு சோசலிசப் பேரவையினர் சென்னை தெருக்களின் பெயர்ப் பலகையிலுள்ள சாதிப் பெயர்களைத் தார் கொண்டு அழித்தனர்.  அப்போது  கல்லை சி. பழனி என்னும் சோசலிச பேரவைத் தலைவர் கைது செய்யப்பட்டுச் சிறையில்  அடைக்கப்பட்டார்.  இதன் பயனாகச் சில நாட்களில் தமிழக அரசே (அந்நாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள்) தெருப்பெயர் பலகையிலிருந்த சாதிப் பெயர்களை அழித்தது.   தோழர் செஞ்சட்டை பஞ்சாட்சரத்துடன் இணைந்து பகுத்தறிவு சமதர்ம இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளராகப் பணியாற்றியவர்.   தூக்குத் தண்டனை ஒழிப்பு இயக்கம் நடத்தியவர்.  தமிழக அரசுடனான இவரது இடையறாத கடிதப் போக்குவரத்தால் தூக்குத் தண்டனை கைதிகள் ஆயுள் தண்டனை  கைதிகளாக  ஆக்கப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதழ் ஆசிரியராக  ஆற்றிய பணிகள்:

இவர் “லீகல் லிங்க்”, “தி ஹீயூமன்”   இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.   நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் நடத்திய “மன்றம்”  வார இதழில் சில காலம் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் தற்போது “ நம்மால் முடியும்”  ஏட்டின் துணையாசிரியராகவும்,  “ மனோரஞ்சிதம்” ஏட்டின் ஆசிரியராகவும் திறம்படச் செயலாற்றி வருகிறார்.

பேச்சாற்றல் :

     தங்க. சங்கரபாண்டியனார் நாவீறு படைத்த நாவலர் ஆவார். பல்வேறு மேடைகளில் பேசி பரிசும்  பாராட்டும் பெற்ற சொல்லேர் உழவர். தமிழில்  அழகாகப் பேசக்கூடியவர்.

அமைப்புகளுடனான தொடர்பு : 

இவர்  பல்வேறு  இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு வருபவர்.  குறிப்பாக எருக்கஞ்சேரியிலுள்ள நண்பர்கள் குடும்ப  நற்பணி மன்றத்தின் ஆலோசகராகத் தற்போதும் செயலாற்றி வருபவர்.

பிற விவரங்கள் :

1.திருக்குறளில் மிகுந்த  நாட்டம் உள்ளவர்.   திருக்குறளைப் பரப்பும் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

2.இவர்  சிற்றிதழ்,  நூல்கள் தொகுப்பாளர்.

3.இவர் ஆயிரக்கணக்கில் நூல்களையும் சிற்றிதழ்களையும் தொகுத்து நூலகம் அமைத்து ஆய்வு செய்து வருகிறார்.

4.இவரின் “மணிவிழா”  சென்னையில் இரண்டுமுறை மிகச்   சிறப்பாக இவரின் நண்பர்களால் நடத்தப்பட்டது. 

5. 75 அகவையாகும் இவருக்கு  2022 ஆம் ஆண்டில் இவரின் பவழவிழா  கொண்டாடப்பட்டு 300 பக்க அளவிலான பவழ விழா மலர் வெளியிடப்பட்டது.  அண்மையில் இவருக்குச் சில அமைப்புகளால்  தமிழ்ச் சான்றோர், மற்றும் செந்தமிழர் காவலர்  போன்ற விருதுகள் வழங்கப்பட்டன.

        கடும்  உழைப்பாளியும்,  தீவிரப் பொது நல ஆர்வலருமான  தங்க.சங்கரபாண்டியனார் எதிர்வரும் காலங்களிலும் தமிழ்ப்பணிகளில் தொய்வின்றித் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்பது நம் வேட்கை. 



இல்ல முகவரி :

தங்க. சங்கரபாண்டியனார்,

G-1, எம்.பி.ஆர்லி அடுக்ககம்,

முதல் முதன்மைச் சாலை,

இலட்சுமி நகர், பொழிச்சலூர்,

சென்னை 600 074.