நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 7 அக்டோபர், 2019

பாவலர் முடியரசனாரின் நூற்றாண்டு தொடங்கியது...


பாவலர் முடியரசனார்  (07.10.1920 - 03.12.1998) 

  திராவிட நாட்டின் வானம்பாடி என்று அறிஞர் அண்ணாவால் போற்றிப் புகழப்பட்ட பாவலர் முடியரசனாரின் நூற்றாண்டு இன்றிலிருந்து தொடங்குகிறது. பாவலர் அவர்களுடன் 1993 முதல் தொடர்பில் இருந்தேன். அவர்களின் குடும்பத்துள் ஒருவனாக வளர்ந்தேன். காரைக்குடியில் இன்று நூற்றாண்டு விழா தமிழார்வலர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. என் முனைவர் பட்ட ஆய்வுக்காலத்தில் பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி, நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் முதல் பரிசான தங்கப்பதக்கமும், வெள்ளிச் சுழற்கோப்பையும் பெற்றேன்(1994). அக்கட்டுரை நூலாகவும் வெளிவந்தது. பாவலர் முடியரசனார் பற்றி முன்பே என் வலைப்பதிவில் எழுதியுள்ளேன் (08.10.2008). அக்கட்டுரையை மீள்பதிப்பாக இப்பொழுது பதிவுசெய்கின்றேன்.

"வேத்தவைப் பாவலரும் வேற்றுமொழி கலக்குந்
   தீத்திறக் காலை தெளிமருந்தே -மூத்த
   முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்
   முடியரசன் செய்யுள் முறை"

  என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவியரசு முடியரசன் அவர்கள். தமிழ்ப்பற்றும் பகுத்தறிவுக்கொள்கையும் கொண்டு பாவேந்தர் வழியில் பாட்டுப் பறவையாய்க் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன் ஆவார்..படிக்கும் காலத்திலும் பணிபுரியும் காலத்திலும் பல்வேறு இன்னகள் இடையூறுகள் வந்தபொழுதெல்லாம் தன்மானம் மிக்க தமிழ் அரிமாவாகச் செயல்பட்டவர் முடியரசன் ஆவார்.

 அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க் கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். வகுப்பறையைத் தமிழ் உணர்வூட்டும் பாசறையாக மாற்றியமைத்தவர். தமிழர்களின் வாழ்க்கை வளம்பெற தமிழகத்தில் மண்டிக்கிடந்த சமூக முன்னேற்றத்திற்குத் தடையான கருத்துகளை தம் அனல்கக்கும் பாடல்களால் எதிர்த்து எழுதியவர்.தாம் எழுதியதற்கு எதிராக எந்தச் சூழலிலும் செயல்படாத கொள்கை மறவராக விளங்கியவர்.சொல் செயல் இரண்டும் ஒன்றாக வாழ்ந்தவர். வீட்டிற்கு வருபவர்களிடம்கூட அழகு தமிழில் உரையாடும் தமிழ்நெஞ்சர்.

  திராவிட இயக்க உணர்வுடன் செயல்பட்ட முடியரசன் கடைசிக் காலம் வரை தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை உயர்வாகப் போற்றியவர். தமிழாசிரியர் பணியாலும் கவியரங்கப் பணிகளாலும், எழுத்துப் பணிகளாலும் என்றும் தமிழக வரலாற்றில் இடம்பெறும் பெருமைக்கு உரியவர் முடியரசனார்.

  முடியரசனார் மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் 07.10.1920 இல் பிறந்தவர். பெற்றோர் திண்டுக்கல் சுப்புராயலு, சீதாலெட்சுமி ஆகும். இவர்களுக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவர். இயற்பெயர் கா.சு.துரைராசு. தம் தாய்மாமன் துரைசாமி அவர்களின் இல்லத்தில் இளமையில் வளர்ந்தார். பின்னர் பெற்றோர் காரைக்குடி அருகில் உள்ள வேந்தன்பட்டிக்குக் குடி பெயர்ந்த பொழுது வேந்தன்பட்டி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். வேங்கடராம ஐயரிடம் பயின்றார். அவரிடம் கீழ்வாயிலக்கம்.நிகண்டு நூல்கள் அக்கால முறைப்படி அவரிடம் கற்றார்.

  திண்ணைப் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஐந்து,ஆறாம் வகுப்புகளை மேலைச்சிவபுரியில் இருந்த சன்மார்க்க சபையில் பயின்றார். தமிழில் ஆர்வமுடன் படித்த காரணத்தால் ஆசிரியர்கள் இவரைத் தமிழ் பயிலும் படி வேண்டினர்.பிரவேச பண்டிதம் என்னும் புலவர் நுழைவு வகுப்பில் பயின்றார்.தேர்வு எழுதி புலவரானார். அங்குப் பயின்றபொழுது பண்டிதமணியார், இரா.இராகவையங்கார், விபுலாநந்த அடிகள்,தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை உள்ளிட்டவர்களின் பேச்சினைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.

  கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் சேர்ந்து வித்துவான் வகுப்பில் சேர்ந்து பயின்றார். முத்து சாமிப் புலவர் என்னும் புலவர் பெருமானில் அறிவுரைப்படி வளர்ந்து தமிழின் மிகச்சிறந்த புலமையைப் பெற்றார். கல்லூரியில் இவர் பேச்சாற்றல்கொண்டு விளங்கியதால் வீரப்புலவர் எனப் பட்டம் வழங்கி அந்நாளைய கல்லூரி முதல்வர் அழைத்தார். நாடகத்தில் நடிக்கும் ஆற்றல் உடையவர்.

  திருப்புத்தூரில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றியபொழுது அவர்தம் பேச்சைக் கேட்ட முடியரசன் அதுவரை துரைராசு என்று அழைக்கப்பட்ட தம் பெயரை முடியரசன் என மாற்றிக் கொண்டார். அப்புனைபெயரே அவருக்கு நிலைத்த பெயராக நின்றது.

 பின்னர் பாவேந்தர் பாரதிதாசன் பழம் புலவர்களைக் கடிந்து பேசிய பேச்சைக்கேட்டுத் தமிழ்மொழி, இன, நாட்டு உணர்வுடன் பாடல் இசைக்கும் முறைக்குச் சென்றார். மேலைச் சிவபுரியில் மருத்துவர் ஒருவரின் இல்லத்திற்கு வந்த குடியரசு, விடுதலை, திராவிட நாடு உள்ளிட்ட இதழ்களைப் படித்து தமிழ் உணர்வும், பகுத்தறிவு உணர்வும் பெற்றார்.

  முடியரசன் தம் 21 ஆம் அகவையில் 'சாதி என்பது நமக்கு ஏனோ' என்ற கவிதையை எழுதி திராவிடநாடு இதழுக்கு அனுப்பினார். பெரியகுளம் துரைராசு என்னும் பெயரில் வெளியாயிற்று.பொழுதெல்லாம் இதழ்கள் படிப்பது, திரைப்படம் பார்ப்பது எனப் பொழுது கழிந்ததால் முடியரசன் வித்துவான் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் தஞ்சையில் தேர்வெழுதி வெற்றிபெற்றார்.

 1947 இல் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார். வகுப்பறைக்குள் நுழைந்ததும் தம் இருக்கை அருகே நிற்பார். மாணவர்கள் அனைவரும் 'வெல்க தமிழ்' என ஓங்கி ஒலித்த பிறகே வகுப்பில் அமர்வார்கள். சென்னையில் பணிபுரிந்தபொழுது பொன்னி உள்ளிட்ட இதழ்களில் எழுதவும் திரு.வி.க, வாணிதாசன் உள்ளிட்டவர்களுடன் பழகவும் வாய்ப்பு அமைந்தது.

  முடியரசன் தம் 29 ஆம் அகவையில் கலைச்செல்வி என்னும் அம்மையாரை மணந்து கொண்டார். சாதிமறுப்புத் திருமணமாக நடந்தது. மயிலை சிவமுத்து அவர்கள் தலைமையில் திருமணம் நடந்தது. பூவாளூர் பொன்னம்பலனார், காஞ்சி மணிமொழியார், டி.கே.சீனிவாசன், கவிஞர் வாணிதாசன், அழகுவேலன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

  பின்னர் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 28ஆண்டுகள் அப்பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து தம் 58 ஆம் அகவையில் ஓய்வுபெற்றார். பள்ளியில் பணிபுரிந்த பொழுது அவரின் தமிழ்ப்பற்று அவருக்குப் பல்வேறு இன்னல்களைப் பெற்றுத் தந்தது.அனைத்திலும் வெற்றிபெற்றார்.

  முடியரசனுக்குக் கலைத்துறையில் நல்ல ஈடுபாடு இருந்தது. நவாபு இராசமாணிக்கம் குழுவில் இணைந்து பாடல் எழுதச் சென்றார். அங்கு நிலவிய சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. திரும்பிவிட்டார். கண்ணாடி மாளிகை என்னும் திரைப்படத்திற்கு உரையாடலும் பாடலும் எழுதியுள்ளார். திரைத்ததுறையில் நிலவிய சூழல்கள் தமக்கு ஒத்துவராததால் தமிழாசிரியர் பணியில் நிலைத்து நின்றார்.

  பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் ஓராண்டுக்காலம்(1985-86) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் வாழ்க்கையைக் காப்பியமாக்கினார். அந்நூல் இன்னும் வெளிவரவில்லை.

 தமிழ்ப்பற்றும் கொள்கை வாழ்வும் வாழ்ந்த முடியரசனார் பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல் என்னும் காவியங்களையும் முடியரசன் கவிதைகள், காவியப்பாவை உள்ளிட்ட மிகச்சிறந்த பாட்டுப் பனுவல்களையும் வழங்கியவர். தமிழிசைக்குப் பயன்படும் வகையில் தமிழிசைப் பாடல்களை எழுதியவர். இவர்தம் கவிதைப் பணியைப் பாராட்டி இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன. 1950 இல் இவர் எழுதிய அழகின் சிரிப்பு என்ற கவிதை முதற்பரிசுக்கு உரியதாகப் பாவேந்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் தம் நூல்களுக்குத் தமிழக அரசின் பரிசில்கள் கிடைத்துள்ளன.

  அறிஞர் அண்ணா 'திராவிடநாட்டின் வானம்பாடி' என்ற பட்டத்தை 1957 இல் வழங்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1966 இல் கவியரசு என்ற பட்டத்தை பாரி விழாவில் வழங்கினார். கலைஞர் விருது(1988), பாவேந்தர்விருது(1987), கலைமாமணி விருது (1998) அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு (1993) முதலிய உயரிய பரிசில்களைப் பெற்றவர். இவர்தம் கவிதைகள் தமிழின முன்னற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிக் கவிஞரைப் பெருமை செய்தது. முதுமை காரணமாகத் தம் 79 ஆம் அகவையில் காரைக்குடியில் முடியரசனாரின் தமிழுயிர் 03.12.1998 இல் பிரிந்தது. கவிஞரின் மறைந்த மறுநாளில் தினமணி நாளேடு "பாடிப் பறந்த பறவை" எனத் தலைப்பிட்டு ஆசிரிய உரை எழுதி மதிப்பளித்தது.

தருமன் தர்மகுலசிங்கம் என்னும் மொழிபெயர்ப்பாளர்…


மொழிபெயர்ப்பாளர் தர்மகுலசிங்கம், பவானி ஆகியோரின் 
திருமண நினைவுநாளில் நேரில் வாழ்த்தும் மு.இளங்கோவன்

நார்வே நாட்டின் பேர்கன் தமிழ்ச் சங்கத்தாரின் அழைப்பை ஏற்று, ஈராண்டுகளுக்கு முன் (2017, சூன்)  நார்வே நாட்டிற்குச் சென்றிருந்தேன். இலங்கைப் பேராசிரியர்கள் அ. சண்முகதாஸ் ஐயாவும் எங்கள் அன்னையார் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் இப்பயணத்துக்கு வழி அமைத்தனர்.  பேர்கனில் அண்ணன்மார் மக்வின் சத்தியா, செயசிங்கம் ஆகியோரின் அன்பான விருந்தோம்பலில் சிலநாள் திளைத்தேன். நோர்வே நாட்டில் நடைபெறும் தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க் கல்வி குறித்து அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு எனக்கு இந்தப் பயணத்தின் வழியாக அமைந்தது. தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாவில் ஒரு சிறப்புரையாற்றவும் பணிக்கப்பட்டிருந்தேன். பேர்கன் பணிகளை முடித்த பிறகு, அருகில் உள்ள டென்மார்க்கு நாட்டிற்குச் சென்று தருமன் தர்மகுலசிங்கம் அவர்களைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருந்தேன். என் வருகையைத் தருமா அவர்கள் அறிந்து, அன்புடன் வரவேற்றார்.

முன்பே திட்டமிட்டவாறு பேர்கன் தமிழ்ச் சங்கத்தின் பணிகளை முடித்துக்கொண்டு, பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி அம்மா, நண்பர்கள் மக்வின், செயசிங்கம் ஆகியோருடன் பேர்கன் விமான நிலையம் வந்தேன். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அடுத்த விமானத்துக்குக் காத்திருந்தேன்.

நம் ஊர் வழக்கப்படி மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே சென்று காத்திருந்தேன். நான் செல்லும் விமானத்துக்கு என ஓரிருவர் மட்டும் வந்திருந்தனர். கூட்டம் குறைவாக இருந்ததால் நமக்குரிய விமானம் ஏறும் இடம் இதுதானா என்று எனக்கு ஐயம் ஏற்பட்டது. விமான நிலைய அதிகாரிகளை வினவி உறுதிசெய்துகொண்டேன். விமானம் புறப்படுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகத்தான் அந்நாட்டு மக்கள் வருகின்றனர். மிக இயல்பாகப் பேருந்தில் ஏறி அமர்ந்துகொள்வதுபோல் எளிமையாக அமர்ந்து கொள்கின்றனர். நம்மூர் போல் அதிகார, கெடுபிடிகள் ஏதும் இல்லை. அனைவரும் அன்பொழுக நடந்துகொள்கின்றனர். ஒருவரை ஒருவர் முடிந்த அளவு உதவுகின்றனர். முகத்தில் புன்னகை தவழ்வதைக் காணமுடிகின்றது. பேர்கனில் விமானத்தைப் பிடித்து, ஒருமணி நேரத்தில் டென்மார்க்கின், கோபனகன் நகரம் வந்து இறங்கினேன். கோபனகன் வானூர்தி நிலையத்திலிருந்து, இயல்பாக வெளிவந்தேன். பிற்பகல் நேரம் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. விமான நிலையத்தில் தொடர்வண்டி ஏறி, கோபனகன் நடுவண் தொடர்வண்டி நிலையம் வந்து சேர்ந்தேன். தர்மா அவர்களின் இல்லம் அமைந்திருக்கும் வேயன் (vejen) என்ற இடத்திற்குச் செல்ல ஒரு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு, நான் பயணிக்க வேண்டிய தொடர்வண்டி நடைமேடையை அடைந்தேன். நான் செல்ல வேண்டிய வண்டி வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். குளிர்க்காற்று மெல்ல வீசியது. வந்து நிற்கும் வண்டி நமக்கானதாக இருக்குமோ என்று ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். வரையறுத்த நேரத்திற்கு முன்பாகவோ, பின்பாகவோ அவ்வூரில் வண்டிகள் வாரா என்பதைப் பின்னர்தான் புரிந்துகொண்டேன். நினைவுக்கு அங்கு சில படங்களையும் எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு நொடியும் ஒரு ஆண்டாக நகர்ந்தது.

வேயன் நகருக்குச் செல்லும் வண்டி சரியான நேரத்துக்கு (மாலை 4.31 மணிக்கு) வந்து நின்றது. என்னுடன் பயணிப்பவர்களிடம் நான் செல்ல வேண்டிய வண்டி இதுதானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, ஏறி, எனக்குரிய இடத்தில், என் பொதிகளுடன் அமர்ந்துகொண்டேன். அக்கம் பக்கத்தில் அமர்ந்தவர்கள் படிப்பதும், எழுதுவதுமாக இருந்தனர். கொண்டுவந்த உணவுப்பண்டங்களைச் சுவைத்து உண்டபடி சிலர் வந்தனர். தொடர்வண்டியின் தூய்மையும், ஒருவருக்கொருவர் நாகரிகாமாக நடந்துகொள்ளும் முறையும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். பயணச்சீட்டு சோதனையாளர் வந்து சீட்டுகளை வாங்கிப் பார்த்து, உறுதிப்படுத்தினார். இரவு 07.07 மணிக்கு வேயனை அடைந்தேன். நான் வரும் வண்டியையும் இருக்கையையும் முன்பே தர்மா அவர்களுக்குத் தெரிவித்திருந்ததால் ஐயா அவர்கள் தொடர்வண்டி நிலையம் வந்து, நான் இறங்கும் இடத்தில் நின்று, வரவேற்று, இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

உறவினர்கள், நண்பர்களுடன் தருமகுலசிங்கம் அவர்களின் 
திருமண நினைவுநாள் கொண்டாட்டத்தில்

தர்மா அவர்களின் திருமணநாளாக அன்றைய நாள் இருந்தது.  எனவே அவர்தம் இல்லத்தில் உறவினர்கள், நண்பர்கள் சூழ இருந்தனர். நானும் இணைந்துகொண்டமை அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் தர்மா அவர்களுக்கும், அவர்களின் துணைவியாருக்கும் வாழ்த்துரைத்தோம். நான் பொன்னாடை அணிவித்து, நூல்களை வழங்கி இருவரையும் வணங்கி, வாழ்த்தினேன். அனைவருக்கும் சிறப்புணவு இரவு உணவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெடுநாழிகை உரையாடிய உண்டோம். பின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்.

காலையில் எழுந்து கடமைகளை முடித்து, தர்மாவுடன் இணைந்து உணவு உண்டேன். பிற்பகல் மீன் வறுவலை நம் தர்மா அவர்களே மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். உண்பதும் உரையாடுவதுமாக அன்றையப்பொழுது பயனுடையதாக இருந்தது. தர்மா அவர்களுடன் உரையாடியபொழுது அவர்தம் நீண்டநெடிய வாழ்க்கைப் பயணத்தையும் குடும்ப நிலையையும், சமூகப்பணிகளையும் அறிந்து அவர்மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது. தருமா அவர்கள் இலங்கையில் பிறந்தவர். பொதுவுடைமைச் சிந்தனையாளர். சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டவர். டென்மார்க்கு நாட்டிற்கு வந்த பிறகு டென்மார்க்கு மொழியைக் கற்று, அந்நாட்டு இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்டவர். அவர்தம் டேனிஷ் மொழிபெயர்ப்புப் பணிக்காக அந்த நாட்டின் அரசு சிறப்பினைப் பெற்றவர். அவர்தம் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வி கற்று, உயர்நிலையில் உள்ளனர் என்பதெல்லாம் அவர் உரையாடலில் தெரிந்துகொண்டேன்.

டேனிஷ் மொழியின் முதன்மை எழுத்தாளரான ஆண்டர்சன்(அனசன்) அவர்களின் வாழ்க்கையையும் படைப்புகளையும் தர்மா அவர்கள் மொழிபெயர்த்துள்ளார் (நியு செஞ்சுரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது). இவர்தம் பொன்விழா, மணி விழாவை ஒட்டி வெளிவந்த மலர்களில் உலகின் பல பகுதியிலிருந்தும் சான்றோர் பெருமக்கள் எழுதிய எழுத்தோவியங்கள் இடம்பெற்றுள்ளன.




தர்மன் இலங்கையில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள கரவெட்டி, கன்பொல்லை என்ற ஊரில் – நெல்லியடி பட்டினசபையின் கனுவில் (இரண்டாம்) வட்டாரத்தில் அமைந்திருக்கும் ஆண்டார் வளவில் வாழ்ந்த சின்னத்தம்பி தங்கம் – சித்தன் தருமன் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். பிறந்த ஆண்டு 1957 ஆம் ஆண்டு மார்ச்சு 10(பங்குனி மாதம் 10 ஆம் நாள்) ஆகும். வதிரி மிஷன் ஆரம்ப பாடசாலை, கரவெட்டி சரசுவதி வித்தியாசாலை, கரவெட்டி ரீநாரத வித்தியாலயம், வதிரி (கரவெட்டி) திரு. இருதயக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்றவர். கொழும்புத் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் கல்வி பயின்றார்.  கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர் தாம் பயின்ற ரீநாரத வித்தியாலயத்திலும் கம்பகஃதிவுலப்பிட்டிய சரசுவதி பிரிவெனவிலும்  ஆசிரியர் பயற்சி பெறுவதற்காக உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொதுவுடைமை இயக்கம், சாதியொழிப்பு இயக்கம் உள்ளிட்ட இயக்கச் சார்புகளில் ஈர்க்கப்பட்டவர். 1977 ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களினால் மனமுடைந்து, 1979 ஆம் ஆண்டில் பிரான்சுக்குப் புறப்பட்டார். பிரான்சு வாழ்க்கைக்குப் பிறகு டென்மார்க்கு நாட்டில் தங்கி, தம் இல்லற வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

டென்மார்க்கு நாட்டில் அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டு, பொதுப்பணியில் ஆர்வமாக உழைத்தார். டென்மார்க்கு டெமாக்கரடிக் கட்சியில் இவரின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. இதனால் இலங்கை சென்ற டென்மார்க்கு அரசியல் குழுவில் இவரும் இடம்பெற்றார். புலம்பெயர் தேயங்களில் வாழும் தமிழர்கள் சிறந்த கல்வியறிவு பெற்று, ஒவ்வொரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் கொண்டவர் நம் தர்மா. கலை, இலக்கியம், அரசியல், சமூகப்பணி எனப் பன்முகத் திறமையுடைவர்.

தர்மகுலசிங்கம் டேனிஷ் அகதிகள் குழுவில் (Danish Refugee Council) மொழிபெயர்ப்பாளராகவும், டேனிஷ் குடிவரவுப் புலத்தில் (Luth Advokatfirma Aabenaraa, Denmark) டேனிஷ் – தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் 1988 முதல் உள்ளார். மேலும் டேனிஷ் அரசுத்துறைகளில் பல்வேறு நிலைகளில் மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார்.



தர்மகுலசிங்கத்தின் முதல் புத்தகம் 1996 இல் வெளிவந்தது. கடந்த இருபதாண்டுகளில் ஐரோப்பாவில் வெளிவரும் பல்வேறு இதழ்களில் கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து எழுதி வெளியிட்டு வருகின்றார். டென்மார்க்கின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின்(அனசன்) தேவதைக் கதைகள் 31  ஐ தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து,  தாய், பாட்டி என்னும் இரு தொகுதிகளாக தமிழில் வழங்கியுள்ளமை மிகப்பெரும் பணியாகும். தாய் சிறுகதைத் தொகுப்பிற்கு 1997 இல் இலங்கை அரசின் சாகித்ய விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தேடல் – சில உண்மைகள் என்ற இவரின் நூலும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். ஆண்டர்சன் என்ற டேனிஷ் எழுத்தாளரின் பல வகைப் படைப்புகளையும் தமிழிற்கு அறிமுகம் செய்த பெருமை தர்மகுலசிங்கத்தைச் சாரும். அனசனின் 54 கதைகள் கொண்ட மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஒன்றை 2007 இல் வெளியிட்டுள்ளார்.

டென்மார்க்கு தமிழ் இலக்கியக் கழகம், வயன் நகர இசைப்பள்ளி, தமிழ் இசைப் பண்பாட்டுப் பள்ளி, டேனிஷ் – தமிழ்ப் பதிப்பகம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆகிய அமைப்புகளிலும், நிறுவனங்களிலும் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். 1997 - இல் இலங்கை தேசிய சாகித்ய விருது உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றவர். ஐரோப்பியா நாடுகளில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் தலைமை தாங்கி, நடத்திவரும் தர்மகுலசிங்கம் சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்ற விருப்பம் உடையவர்.

புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்கள் படைப்பு இலக்கியங்களையும், மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் தந்து தமிழ் மொழிக்கு இலக்கிய வளம் சேர்த்துவருகின்றனர். அந்த அந்த நாட்டு அரசியல், கலை இலக்கிய முயற்சிகளுக்குப் பெருந்துணை புரிகின்றனர். அவ்வகையில் டென்மார்க்கு நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்து, தமிழ் மொழிக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்க்கும் நல்லுள்ளம் வாய்த்த இலக்கிய ஆளுமையாக நம் தருமன் தர்மகுலசிங்கம் இயங்கி வருகின்றமை பாராட்டிற்குரியது. இவர் தொண்டு தொடர்வதாகுக.

**** இக்கட்டுரையின் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.