நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

வரலாற்று அறிஞர் முனைவர் இல. தியாகராசன்


முனைவர் இல.தியாகராசன்(முதலில் நிற்பவர்) தம் நண்பர்களுடன்...

அரியலூர் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறையின் தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள முனைவர் இல. தியாகராசன் அவர்களின் கல்வெட்டு ஆராய்ச்சிப் பணிகளையும், வரலாற்றுத்துறைக்கு அவர் வழங்கியுள்ள பங்களிப்புகளையும் அண்ணன் பொறியாளர் இரா. கோமகன் அவர்கள் எப்பொழுதும் நினைவூட்டிக்கொண்டே இருப்பார். அவர்போல் உடையார்பாளையம் அரண்மனையைச் சார்ந்த அரசகுடும்பத்து நண்பர்களும் பேராசிரியர் இல.தியாகராசன் அவர்களின் சிறப்புகளை அடிக்கடி எடுத்துரைப்பார்கள். அண்மையில் அவர்தம் அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி - 1 என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. தொடர்ச்சியாக அவர்தம் கங்கைகொண்டசோழபுரம் கல்வெட்டுக்கள் என்ற நூலையும் படிக்க நேர்ந்தது. பேராசிரியர் இல. தியாகராசன் அவர்களின் கடும் உழைப்பும், வரலாற்றுத்துறையில் அவருக்கு உள்ள பெரும் புலமையும் இந்த நூல்களின் வழியாகக் கண்டு வியப்புற்றேன். பெரும்பணியைச் செய்திருந்தாலும் இவர்களைப் போலும் அறிவாளர்கள் போற்றப்படாமல் உள்ளமை தமிழகத்தின் போகூழேயாகும். பேராசிரியர் அவர்களின் வாழ்க்கையையும், அவர்கள் செய்துள்ள பணிகளையும் உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரில் வாழ்ந்த ம. இலட்சுமண நாயக்கர், அரங்கநாயகி ஆகியோரின் மகனாக இல. தியாகராசன் 15.11. 1955 இல் பிறந்தவர். வேட்டவலம் என்னும் ஊர், சங்க காலத்தில் திருக்கோவிலூர் மலையமான் மன்னர்கள் ஆண்ட மிலாடு(மலையமான் நாடு என்பதன் மருஉ) நாட்டின் தலைநகரமாக இருந்தது. கி.பி. 1151 இல் எழுதப்பட்ட இரண்டாம் இராசராசனின் கல்வெட்டில் “மிலாடான வேட்டைவலம்” என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் சமீன்தார்களின் ஆட்சியில் சிங்கவரம், சிங்கநகர் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இத்தகு பெருமைக்குரிய ஊரில் பிறந்தவர் நம் பேராசிரியர் இல. தியாகராசன் அவர்கள்.

இல. தியாகராசன் பிறந்த ஊரான வேட்டவலத்தில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். புகுமுக வகுப்பையும், இளங்கலை வகுப்பையும்(1975) திருவண்ணாமலையில் பயின்றவர். முதுகலைப் படிப்பை (வரலாறு) வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் பயின்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று “சுதந்திரப் போராட்டத்தில் வடார்க்காடு மாவட்டத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஆய்வேடு பணித்து, இளம் முனைவர் பட்டம் பெற்றவர்(1979). 1980 இல் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையில் கல்வெட்டு, தொல்லியல் முதுகலைப் பட்டப் பெருஞ்சான்றிதழ்ப் பயிற்சி பெற்றவர்(1980). 1981 இல் கல்வியியல் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையில் வரலாற்றுக்கு முந்தைகால அகழாய்வாராய்ச்சிப் பிரிவின் அலுவலராகப் பணியாற்றியவர். 1982 முதல் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறையில் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். பின்னர்த் துறைத்தலைவர், கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர்-. “அரியலூர் வட்டாரத்து வரலாற்றுத் தொல்லியல், கி.பி.1817 வரை - ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வழியாகப் பட்டம் பெற்றவர். 2014 இல் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து வரலாற்று ஆய்வுகளை ஆர்வமுடன் செய்துவருபவர்.

முனைவர் இல. தியாகராசன் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வுசெய்து, வெளிவராத பல வரலாற்றுச் செய்திகளை, உலகிற்கு அறிவித்துள்ளார். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள கல்வெட்டுகள், தொல்லியல், கோவிற்கலை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு இவர் ஆற்றியுள்ள பணிகளுக்கு வரலாற்றுத்துறையினர் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளனர். தம் கண்டுபிடிப்புகளைக் கட்டுரைகளாகவும், நூல்களாகவும், அறிக்கைகளாகவும் வெளியிட்டு மக்களுக்கு உண்மைத் தன்மையை எடுத்துரைத்துள்ளார்.

முனைவர் இல. தியாகராசனும் முனைவர் கோ. தங்கவேலுவும் இணைந்து எழுதிய சம்புவராயர் வரலாறு என்னும் நூல் வரலாற்றுத்துறை அறிஞர்களின் பெரும் பாராட்டினைப் பெற்றுள்ளது.

முனைவர் இல. தியாகராசன் திருவண்ணாமலை மாவட்டத்துக் கல்வெட்டுகள், கோவில்கள் குறித்து அரிய நூல்கள் பலவற்றை எழுதிவைத்துள்ளார். இராசேந்திர சோழனின் அனைத்துக் கல்வெட்டுகளும் அடங்கிய நூலினையும் உருவாக்கி வைத்துள்ளார். இவை யாவும் வெளிவரும்பொழுது தமிழகத்தின் வரலாறு துலக்கம் பெறும்.

இல. தியாகராசன் தம் கல்லூரிப் பணிகளுக்கு இடையே, தம் மாணவர்கள் வரலாற்று ஆர்வலர்களுடன் களப்பணிக்குச் சென்று பல்வேறு கல்வெட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார். தமக்குப் பிறகு கல்வெட்டுகளைப் படியெடுக்கும் வகையில் பல மாணவர்களை உருவாக்கியுள்ளார். அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் பேருந்து நிலையத்துக்கு மேற்கில் உள்ள ஆவேரி என்னும் ஏரியில் இருந்த கல்வெட்டைக் கண்டுபிடித்து, வெளியிட்டபொழுது இப்பகுதி மக்களும் மாணவர்களும் மகிழ்ந்தனர்.

செயங்கொண்டசோழபுரம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் செயங்கொண்டமும் அதனைச் சார்ந்த பகுதிகளும் சோழர் ஆட்சியில் முதன்மை வாய்ந்த ஊர்களாக இருந்தன. சோழநாட்டின்மீது படையெடுத்த பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் படையினர் சோழ நாட்டின் ஊர்கள், ஏரிகள், வயல்கள் பலவற்றைச் சிதைத்தனர். இதனால் மக்கள் குடிநீருக்குத் தவித்தனர். செயங்கொண்டம் அக்காலத்தில் வணிக நகரமாக விளங்கியது. சாடவர்ம சுந்தரபாண்டியன் அரியணை ஏறியதும்(1251-1271). இவர் ஆட்சிக்காலத்தில் 1261 ஆம் ஆண்டு, பெரம்பலூரை அடுத்துள்ள நன்னை என்ற ஊரைச் சேர்ந்த திருவிக்கிரமன் என்பவர் செயங்கொண்டத்தில் இந்த ஏரியை உருவாக்கினார் எனவும், ஜெயங்கொண்ட சோழ பேராவி என்பது இக்குளத்தின் பெயர் எனவும், இப்பெயர் மருவி, ஆவேரி என்று மாறியது என்றும் முனைவர் இல. தியாகராசன் கல்வெட்டின் துணையால் படித்துக்காட்டியபொழுது ஆய்வாளர்கள் மகிழ்ந்தனர். ஊரினர் வியந்தனர்.

ஆவேரி கல்வெட்டு:
“ஸ்வதிஸ்ஸ்ரீ கோச்சடபன்மர் திருபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்க்கு யாண்டு ய-அவது வைய்காசி  மாத முதல் செயங்கொண்ட சோழப் பேராவி அகவாயில் நன்னையுடையார் திருவிக்கிரமற்  வெட்டின தன்மக்குளத்தில் யிறைக்குதல், நீர்பாச்சுதல் செய்ய நினைத்தார் உண்டாகில் நகரத் துரோகி நம்மி லொருத்தரல்ல உ." என்று உள்ளது.(அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், தொகுதி 1, பக்கம்177,178,179)

இவ்வாறு அரிய கல்வெட்டுகள் பலவற்றை வெளிப்படுத்தியும் படித்தும், உலகுக்கு அறிவித்துவரும் உண்மை ஆய்வாளரான முனைவர் இல. தியாகராசனின் தமிழ்ப்பணியும் வரலாற்றுப்பணியும் தொடர்வதாகுக.




முனைவர் இல. தியாகராசனின் தமிழ்க்கொடைகளுள் சில:

1.   சோழகேரளன்
2.   கானக்கிளியூர் நாடு
3.   கடந்தையார் வரலாறு
4.   அரியலூர் ஜமீன்தார்களின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
5.   வந்தலை வரலாறு
6.   வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீசுவரர் திருக்கோயில் தலவரலாறு
7. பெண்ணாகடம் அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு
8.   நத்தம் ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் தலவரலாறு
9.வெண்பாவூர் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு
10.கங்கைகொண்டசோழபுரம் வரலாறு(புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து EFEO)
11.உடையவர் தீயனூர் அருள்மிகு அமிர்தாம்பிக்கை உடனுறை ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
12.விக்கிரமங்கலம் அருள்மிகு பூரணசந்திரகலாம்பிகை உடனுறை சோழீசுவரர் திருக்கோயில் தல வரலாறு
13. மேலப்பழுவூர் அருள்மிகு மீனாட்சியம்மன்  உடனுறை சுந்தரேசுவரர் தலவரலாறு
14. காமரசவல்லி அருள்மிகு பாலாம்பிகை உடனுறை சௌந்தரேஸ்வரர் கோயில் வரலாறு
15. கீழப்பழுவூர் அருள்மிகு அருந்தவ நாயகி உடனுறை ஆலந்துறையார் கோயில்
16. கீழையூர் அருள்மிகு அபிதகுஜாம்பாள் உடனுறை அகத்தீசுவரர்-சோழீசுவரர் கோயில்கள் வரலாறு
17. ஓலைப்பாடி அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை பசுபதீசுவரர் கோயில் வரலாறு
18.ஸ்ரீபுரந்தான் அருள்மிகு பிரகன்நாயகி உடனுறை கைலாசநாதர் (பிரகதீஸ்வரர்) மற்றும் சிவபாதசேகர ஈசுவரர் (ஒட்டக்கோயில்) திருக்கோயில்கள் வரலாறு
19. செந்துறை-நெய்வனம்
20.அருள்மிகு பிரகன்நாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
21. சிறுகளப்பூர் அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை காளத்தீசுவரர் திருக்கோயில் வரலாறு
22. வேட்டவலம் வரலாறு
23. வேட்டவலம் ஜமீன்வரலாறு
24. உடையார்பாளையம் ஜமீன் வரலாறு
25. ஆவூர் அகத்தீசுவரர் குகை வரதராசபெருமாள் கோயில்கள் வரலாறு
26. கோவிந்தப்புத்தூர் கங்காஜடாதீசுவரர் கோயில் வரலாறு
27. திருமழபாடி,கீழப்பழுவூர், பொம்மனப்பாடி கோயில்களின் தலவரலாறு
28. அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி-1, 2
29. அரியலூர் மாவட்ட வரலாறு
30. அரியலூர் மாவட்டக் கோயில்கள்
31. கல்வெட்டுக்கள் கூறும் அரியலூர் மாவட்ட ஊர்ப்பெயர்கள்
32. அரியலூர் அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில் வரலாறு
33. பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள்
34. கல்வெட்டுக்கள் கூறும் பெரம்பலூர் மாவட்ட ஊர்ப்பெயர்கள்
35. பெரம்பலூர் மாவட்ட வரலாறு
36. பெரம்பலூர் மாவட்டக் கோயில்கள்
37. கங்கைகொண்டசோழபுரம் கல்வெட்டுக்கள்...

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மலேசியாவில் முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு - 2018





     மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன் முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டினை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2018, சூன் மாதம் 8,9,10(மூன்று நாள்) ஆகிய நாள்களில் நடத்துகின்றது. இந்த மாநாட்டின் கருப்பொருள் "புத்துலக வளர்ச்சிக்கேற்பத் தரமான குழந்தை இலக்கிய வளர்ச்சியை நோக்கி..." என்பதாகும்.  முனைவர் முரசு. நெடுமாறன் தலைவராகவும், மன்னர் மன்னன் மருதை செயலாளராகவும் இருந்து இந்த மாநாட்டினை நடத்துகின்றனர்.

     நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டல், கற்றல் கற்பித்தல் முறைகளில் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் போன்ற குழந்தை இலக்கியங்களைப் பயன்படுத்தும் உத்திகளை ஆராய்தல், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வெளிவரும் படைப்புகளை ஊக்கப்படுத்துதல், புலம்பெயர்ந்த நாடுகளில் குழந்தை இலக்கியத்தின் நிலைகளை ஆராய்தல் என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகின்றது.

     முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டில் ஆய்வாளர்கள் குழந்தை இலக்கியம் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்கலாம். 15 மணித்துளிகளில் ஆய்வுக்கட்டுரை வழங்குமாறு தங்கள் ஆய்வுரையை மாநாட்டுக்கு அனுப்பலாம்.

·         ஆய்வுக்கட்டுரையின் சுருக்கம் அனுப்ப இறுதிநாள்: 15.03.2018
·         கட்டுரையின் முழுவடிவம் அனுப்ப இறுதிநாள்:  15.04.2018
·      ஆய்வுக்கட்டுரை அனுப்ப வேண்டிய 
   மின்னஞ்சல் முகவரி: info@childtamil.com
·         இணையதள முகவரி: www.childtamil.com

பின்வரும் தலைப்புகளைத் தழுவி ஆய்வுக்கட்டுரையைப் படைக்கலாம்:

· நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டும் வழிமுறைகள்.
·         நாட்டுப்புறச் சிறுவர் பாடல்களும் புதிய குழந்தைப் பாடல்களும்
·         குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள், காவியங்கள் - ஒரு நோக்கு
·         அழ. வள்ளியப்பாவிற்கு முன்பும் பின்பும்
·   கணினிக் காலத்திற்கேற்ற குழந்தை இலக்கியத் தோற்றத்திற்குரிய வழிவகைகளை ஆராய்தல்
·         புலம்பெயர்ந்த நாடுகளில் குழந்தை இலக்கியத்தின் நிலை
·         கற்றல் கற்பித்தலில் கவிதையைப் பயன்படுத்தும் உத்திகள்
·   தமிழ் மழலையர்க்கான கதை, கட்டுரை, நாடக நூல்கள்- ஒரு பார்வை

மாநாட்டுப் பதிவுக்கட்டணம்:

மலேசியப் பேராளர்களுக்கு: 300 மலேசிய வெள்ளி
மாணவர்களுக்கு: 100 மலேசிய வெள்ளி
அயலகப் பேராளர்களுக்கு: 250 அமெரிக்க டாலர்
இந்திய, இலங்கைப் பேராளர்களுக்கு: 100 அமெரிக்க டாலர்

தொடர்பு முகவரி:

ICOCIT Secretarieat, No. 50 A,
First Floor, Jalan 1/19, Seksyen 1,
46000 Petaling Jaya,
Selangor D.E.
Malaysia

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

வரலாற்றைத் தேடிய ஓர் இனிய பயணம்!...


குடுமியான்மலை இசைக் கல்வெட்டு

               பழைய வரலாறுகளை அறிந்துகொள்வதிலும் ஆவணப்படுத்துவதிலும் எனக்கு எப்பொழுதும் ஈடுபாடு உண்டு. அதற்குத் தகுந்தாற்போல் நான் பணிபுரியும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க எனக்கு ஒதுக்கப்படும் பாடங்களும் அமைந்துவிடும். கல்வெட்டியல், நாட்டுப்புறவியல், சங்கப்பாடல்கள், இலக்கணம் என்று நான் பயிற்றுவிக்கும் பாடங்கள் இருக்கும். அதுபோல் இன்றைய புதிய தொழில்நுட்பம் சார்ந்த இணையத் தமிழைக் கற்பிக்கவும் எனக்கு வாய்ப்பு அமையும். அதனால்தான் பழைய செய்திகளைத் தேடி எடுப்பதும் அதனைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்வதும் என் விருப்பமான வேலையாக உள்ளது. எனவேதான் என் பேராசிரிய நண்பர் முனைவர் ப.இரவிக்குமார் அவர்கள் என்னைப் பற்றி ஒருவரியில் ஒரு மதிப்பீடு செய்தார். அந்த மதிப்பீடு இதுதான்: பழைமை + புதுமை » மக்கள் = மு.இளங்கோவன்.

     முந்தைய வரலாற்றை அறிந்துகொள்ளும் ஒரு மாணவனாக வரலாற்றுச் சிறப்புமிக்க சில இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் எனக்கு அமைந்தது. உடன் என்னிடம் பயிலும் மாணவர்களையும் அழைத்துச்செல்லும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள் இருபதின்மரும், என்னுடன் பணியாற்றும் பேராசிரியர்கள்  மூவருமாக நாங்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு முதலில் சென்றோம். என் பிறந்த ஊர் என்பதால் அங்குள்ள சிற்பங்கள், கட்டடக்கலை அமைப்புகள், கல்வெட்டுச் செய்திகள், வாய்மொழி வரலாறுகள் அனைத்தையும் மாணவர்களுக்கு நேரில் அறிமுகம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றேன்.

     எங்கள் சுற்றுலாக்குழு அடுத்து, அருகில் உள்ள திருப்பனந்தாள் காசித்திருமடத்திற்குச் சென்றது. திருப்பனந்தாளில் உள்ள செஞ்சடையப்பர் திருக்கோவில் பாடல்பெற்ற இடம் என்பதைத் திருமுறை அன்பர்கள் நன்கு அறிவர். அதுபோல் திருப்பனந்தாளின் முகவரியாக விளங்கும் காசித்திருமடம் சார்பில் செந்தமிழ்க் கல்லூரி நடைபெற்றதையும் (இன்று கலை, அறிவியல் கல்லூரியாக மலர்ந்துள்ளது), சைவ இலக்கியங்களும், சாத்திர நூல்களும் இங்குக் கணக்கின்றிப் பதிப்பிக்கப்பட்டு, உலக மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கப்பெறுகின்றமையும் தமிழுலகம் நன்கு அறியும். நீதிநெறி விளக்கம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் உள்ளிட்ட அருந்தமிழ்ப் பனுவல்களை ஆக்கித் தந்த தமிழ் மாமுனிவர்  குமரகுருபர அடிகளாரின் மரபில் செழித்து வளரும் திருமடம் இது என்பதையும் இவண் நினைவூட்ட விரும்புகின்றேன். திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் உருவா தமிழ்ப்பரிசில் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும். தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களைப் புரந்தருளிய திருமடம் திருப்பனந்தாள் மடம் என்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மடத்தினை அருளாட்சி செய்துவரும் தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களைச் சந்தித்துக் காசித்திருமடத்தின் பதிப்புப்பணிகளை அறிந்துகொள்ளச் சென்றோம். எங்களை அன்புடன் வரவேற்ற திருமடத்தினர் எங்களுக்கு உரிய செய்திகளை மகிழ்வுடன் வழங்கினர். சில நூல்களையும் மாணவர்கள் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கினர்.

தாராசுரம்கோவில் இசைப்படிக்கட்டுகள்


     எங்களின் சுற்றுலாக்குழு அடுத்ததாகக் கும்பகோணம் எனப்படும் குடந்தையை அடுத்துள்ள தாராசுரம் கோவிலுக்குச் சென்றது. இங்கு இரண்டாம் இராசராசன் காலத்தில் கட்டப்பெற்ற அரிய கோயில் உள்ளது. இங்குள்ள சிற்பங்களும், கல்வெட்டுகளும் பழந்தமிழகத்துச் செய்திகளைப் பாதுகாத்து வைத்துள்ளன. இந்தியத் தொல்லியல்துறை உள்ளிட்ட அமைப்புகளால் இக்கோயில் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றது. இங்குள்ள இசைப்படிக்கட்டுகளை எந்தமிழ் மக்கள் சிதைத்தமை கண்டு வேலியிட்டுப் பாதுகாக்கின்றனர். ஒவ்வொரு படியிலும் ஒரு சுரத்திற்குரிய இசை தோன்றுமாறு இந்தப் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து வியந்தோம்.

     பகலுணவு நேரத்துக்குத் தஞ்சையைச் சென்றடைந்த நாங்கள், மராட்டிய அரசர்களின் அரண்மனை, அங்குள்ள அரசவை, காட்சியகம், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்களைப் பார்த்து மகிழ்ந்தோம். நான் இளம் முனைவர் பட்டம் பயின்றபொழுது (1992-93) மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற தலைப்பில் ஆய்வு செயததால் இந்த இடமும், வரலாறும் எனக்கு நன்கு அறிமுகமானவை. அவற்றை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். சரசுவதி மகால் நூலகத்தின் அமைப்பினையும், பதிப்புப் பணிகளையும் கூடுதலாக அறிந்தோம். அங்குக் காட்டப்படும் ஒலி, ஒளிக் காட்சிக்கூடத்தில் ஒளிபரப்பப்பட்ட தஞ்சாவூர் சிறப்புரைக்கும் விவரணப்படம் அருமையாக இருந்தது. அரைமணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளை மிகச் சிறப்பாகத் தெரியவைத்தனர். குளிரூட்டப்பட்ட அழகிய அரங்கில் இந்த ஆவணப்படத்தை அனைவரும் விரும்பிப் பார்த்துச் செல்கின்றனர். அனைத்துக்குமாக முன்பே நுழைவுச்சீட்டை வாங்கிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

     முதல்நாள் மாலைப்பொழுதின் நிறைவு நிகழ்வாக அடுத்து நாங்கள் தஞ்சாவூர்ப் பெரிய கோவிலுக்குச் சென்றோம். அங்கு நல்லாசிரியர் கரந்தை செயக்குமார் அவர்கள் தம் ஆசிரிய நண்பருடன் இணைந்து எங்களை வரவேற்றுத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் வரலாற்றையும் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். தஞ்சாவூர் கோயிலின் தொன்மை, வேற்று நாட்டினரின் படையெடுப்புகள், போற்றுவாரின்றிக் கிடந்த கோவிலின் சிறப்பை ஆங்கிலேயர்கள் உலகுக்கு அறிவித்தமை, அங்கு நடைபெற்ற ஆய்வுகள், வெளிவந்த நூல்கள் யாவற்றையும் எங்களுக்கு எடுத்துரைத்தார். தஞ்சாவூரில் உள்ள கல்வெட்டுகளில் ஆடற்கலைக்கும், கோவில் பராமரிப்புக்கும் அரசன் செய்துள்ள கொடைகளைக் கரந்தை செயக்குமார் நினைவூட்டினார். மாணவர்களும் தாங்கள் கற்ற வரலாற்று, கல்வெட்டுப் பாடங்களை நினைவூட்டினர். தஞ்சாவூர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்வுகளைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு, புதுக்கோட்டையை நோக்கி எங்கள் மகிழ்வுந்து புறப்பட்டது. புதுக்கோட்டையில் இரவு தங்கினோம்.

     சுற்றுலாவின் இரண்டாம் நாள் காலையில் தங்கியிருந்த இடத்திலிருந்து காலை 9 மணிக்குப் புறப்பட்டோம். எங்களுடன் பேராசிரியர் முத்தழகன் அவர்கள் இணைந்துகொண்டார்கள். புதுக்கோட்டை சார்ந்த வரலாற்றுச் செய்திகளை இவர் விரல்முனையில் வைத்திருப்பவர். பேராசிரியர் பே.க.வேலாயுதம் ஐயாவிடம் பயிற்சி எடுத்தவர் என்பதால் தமிழார்வமும், வரலாற்று ஈடுபாடும் இவருக்கு மிகுதியாக உண்டு. அனைவரும் 9.30 மணியளவில் சித்தன்னவாசல் சென்றடைந்தோம். எங்களின் மூடுந்துப் பயணத்திலேயே பேராசிரியர் முத்தழகன் புதுக்கோட்டை வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைத்தார். ஒவ்வொரு ஊர்ப்பெயருக்கும் உரிய வரலாற்றை நினைவூட்டினார். சாலையின் இருமருங்கிலும் இருந்த கற்பதுக்கைகளை அறிமுகம் செய்தார். சமண மதம் புதுக்கோட்டைப் பகுதியில் சிறப்பாக வளர்ச்சி பெற்றிருந்ததை வரலாற்றுச் சான்றுகளுடன் எங்களுக்கு நினைவூட்டினார். சித்தன்னவாசலை நெருங்கினோம். அன்னவாசல் என்ற ஊரின் அருகில் இருப்பதால் இந்த ஊர் சித்தன்னவாசல் (சிறிய அன்னவாசல்) என்று அழைக்கப்படுகின்றது (தமிழர்களின் பெயரிடும் முறை நினைந்து வியந்தேன்).

கற்பதுக்கைகள்

கற்பதுக்கைகள்

சித்தன்னவாசல் முகப்பு

     சித்தன்னவாசல் பாறை ஓவியங்களைப் பார்வையிட உரிய நுழைவுச்சீட்டை வாங்கிக்கொண்டு, பெரும் மலைப்பாறையில் குடையப்பட்டுள்ள குடைவரைக் கோவிலுக்குச் செல்லும் முன்பாகச் சில படங்களை நினைவுக்கு எடுத்துக்கொண்டோம். வரலாற்றுப் பாட நூல்களில் படித்த சித்தன்னவாசல் ஓவியச் சிறப்பை நேரில் கண்டு வியந்தோம். தாமரைப் பொய்கையும், அன்னப்பறவைகளும், நாட்டிய மங்கையர்களுமாக இருந்த ஓவியங்களின் நுணுக்கமான பகுதிகளைப் பேராசிரியர் முத்தழகன் எங்களுக்கு விளக்கினார். இதுவரை சித்தன்னவாசல்  சார்ந்து நடந்துள்ள ஆய்வுகளையும், ஆய்வாளர்களையும், அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்தார். ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வில் தடுமாறி நின்றுள்ள இடங்களையும் எங்களுக்கு எடுத்துரைத்தார். அங்கிருந்த கல்வெட்டுகள், எழுத்துகள், சமண முனிவர்களின் சிலைகள் யாவற்றையும் நின்று, நிதானித்துப் பார்த்தோம். சித்தன்னவாசல் ஓவியத்தைப் பிரிய மனமின்றிப் பிரிந்து, மலைமீது இருக்கும் ஏழடிப்பாட்டம் சமணப்படுக்கை நோக்கிப் புறப்பட்டோம்.
ஏழடிப்பாட்டம்

     மலையடிவாரத்தில் பெயர்ப்பலகை நின்று ஏழடிப்பாட்டம் பகுதியின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. முன்பு மலையில் ஏறுவதற்கு வசதிகள் இல்லாமல் இருந்ததையும், இப்பொழுது படிக்கட்டுகள், பாதுகாப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பேராசிரியர் முத்தழகன் எடுத்துரைத்தார். பாதுகாப்புக்குக் காவலர்கள் இருப்பதால் அச்சமின்றி மலைக்குச் செல்ல இயலும். மலையின் உயரே சமண முனிவர்கள் படுப்பதற்குப் படுக்கைகள் 17 அமைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழி எழுத்துகளில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அரிய வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டதாக அக்கல்வெட்டுகள் இருப்பினும் நம் கல்லாக் காளையரும், கழிநிலைப் பாவையரும் தத்தம் பெயர்களைப் பொறித்து, பழைமையைச் சிதைத்துள்ளதைக் கண்டு மனம் வருந்தினேன். நம்மவர்களின் மூடத்தனம் எண்ணிக் குமைந்தேன். சமணர் பள்ளிகள் காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்து காணப்படுகின்றன. எத்தனை அறிவர்கள் இந்த இடத்தில் கால்பதித்தனரோ என்று எண்ணியவாறு அங்கிருந்து மலையடிவாரம் வந்தோம். இது நிற்க.

சமணர் படுக்கை(ஏழடிப்பாட்டம்- சித்தன்னவாசல்)

சமணர் படுக்கையில் பழைய கல்வெட்டு

மு.இளங்கோவன், பேராசிரியர் முத்தழகன்(சமணர் படுக்கை செல்லும்வழி)

     சித்தன்னவாசலிலிருந்து புறப்பட்ட நாங்கள் குடுமியான்மலை இசைக் கல்வெட்டுகளைக் காண்பதற்குப் புறப்பட்டோம் இடையில் சாலையோரங்களில் இருந்த சில சமணச் சிற்பங்களைக் கண்டோம். சமண மதத்தைச் சார்ந்த நல் உள்ளம் கொண்ட பெரியோரின் முயற்சியால் சமணச் சிற்பங்கள் வேலியிட்டுப் பாதுகாப்பது எங்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.
சமணச் சிற்பம் அருகில் மு.இ.(அன்னவாசல்)

     குடுமியான்மலையின் பெயர்க்காரணம் என்ன என்று பேராசிரியர் முத்தழகனிடம் கேட்டேன். திருநலக்குன்றம் என்பது இந்த ஊரின் பெயர் எனவும் நலம் என்பதைச் சுகம் என்றாக்கி, சுகம் என்பது சிகை என்றாக்கி, சிகை என்பது குடுமி என்றாக்கி, இன்று குடுமியான்மலை என்று ஆகிவிட்டது என்றார்.. பல்யாகசாலை  முதுகுடுமி என்ற பாண்டிய மன்னன் பெயரையும் இணைத்துப் பார்க்க எனக்குத் தோன்றியது. இதுவும் நிற்க.

 குடுமியான்மலையின் திருக்கோயில் பின்னாளில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய கோவில் என்பது பாறையைக் குடைந்து வடிவமைத்துள்ளனர். புதிய கோவிலைக் கடந்து, பழைய கோவிலுக்குச் சென்றோம். கோவில் பகுதிகளில் தேனீக்களின் பெருங்கூட்டு வாழ்க்கையினைக் கண்டோம். ஒலி எழுப்பாமல் வருமாறு பாதுகாவலர்கள் கூறினர். அனைவரும் பேச்சின்றி, நடந்து அங்குள்ள இசைக்கல்வெட்டுகளைத் தூரத்திலிருந்து பார்த்தோம். மாணவர்கள் அனைவரும் அடுத்த பகுதிக்குச் சென்ற பிறகு, தேனீயின் தாக்குதல் நடந்தாலும் எதிர்கொள்ளும் முன்னேற்பாட்டுடன் நான்மட்டும் இசைக்கல்வெட்டினை நெருங்கிப் பார்த்தேன். சில படங்கள் எடுத்துக்கொண்டேன். இசைக்கல்வெட்டு சமற்கிருத மொழியில் கிரந்த எழுத்துகளில் இருப்பதை முன்பே படித்துள்ளேன். தமிழ்ச்செய்திகள்தான் இவ்வாறு பிறமொழிகளிலும், பிற எழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளன. கிரந்த எழுத்தில் எழுப்பட்டிருந்ததைப் படி எடுத்தவர்கள் தேவநாகரி எழுத்தில் படி எடுத்துள்ளனர் என்பதைப் பின்பு அறிந்தேன். எத்தனை இடியாப்பச் சிக்கலில் தமிழனின் இசையறிவு உள்ளது என்பதை அறிந்து மனம் கவன்றது. நம்மிலிருந்து பிரிந்துபோன இசையுண்மைகளை அறிய இயலாத நிலைக்கு வருந்தி, மீண்டும் ஒருமுறை தனித்து வந்து இந்த இடத்தை ஆராய வேண்டும் என்ற முடிவுடன் அடுத்த பகுதியில் இருந்த மலைக்குடைவரைக் கோவிலுக்குச் சென்றேன்.

குடுமியான்மலை இசைக்கல்வெட்டு அருகில் மு.இ.

பரிவாதிநி என்ற இசை குறித்த கல்வெட்டு

     மலைக்குவடைவரையில் சிவன்கோவில் உள்ளது. பரிவாதிநி என்று எழுதப்பட்ட இசைக்குறிப்பு அடங்கிய கல்வெட்டு ஒன்றும், வேறு சில கல்வெட்டுகளும் அங்கு இருந்தன. அவற்றை எழுத்து, எழுத்தாகத் தடவிப்பார்த்து, வியந்தேன். 


 பரிவாதிநி என்று குறிப்பிடப்படும் இசைக்கல்வெட்டு பற்றியோ, குடுமியான் மலை இசைக்கல்வெட்டு பற்றியோ முற்று முழுதான தெளிவான விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால் ஆய்வாளர்கள் தொடர்ந்து பல நூல்களையும், கட்டுரைகளையும் வரைந்து தம் ஆய்வுகளைத் தொடர்ந்தவண்ணம் உள்ளமையை அறிந்தபொழுது உண்மைகளை நெருங்கிக்கொண்டுள்ளோம் என்பது புலப்பட்டது. குடுமியான்மலை இசைக்கல்வெட்டு 1904 இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் முனைவர் டி.என்.இராமச்சந்திரன் என்பவர் 1931 இல் இதுபற்றி எழுதியுள்ளார் எனவும், முனைவர் பிரேமலதா உள்ளிட்ட ஆய்வாளர்கள் இதுபற்றி ஆராய்ந்து எழுதியுள்ளனர் எனவும் அறிந்தேன். பரிவாதிநி இசைக்குறிப்புக் கல்வெட்டுடன் தொடர்புடைய செய்திகள் வேறு சில கோவில் கல்வெட்டுகளில் உள்ளதையும் அறிந்தேன்( இது பற்றி விரித்துப் பின்னர் எழுதுவேன்)
திருநலக்குன்றம் என்று எழுதப்பட்டுள்ள குடுமியான்மலைக் கல்வெட்டு

குடுமியான்மலை இசைக்கல்வெட்டுகள் பற்றி விபுலாநந்த அடிகளார் தம் யாழ்நூலில் விரிவாக எழுதியுள்ளார். மூத்த அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் இந்த ஊரைப் பார்வையிட்டு வியந்ததாகவும் அறிந்தேன். இவ்வாறு மக்கள் பார்வையில் படும்படி இசைச்செய்திகள் குடைவரைக் கல்வெட்டில் பதிந்துள்ளமையால் இசையறிஞர்கள், மாணவர்கள் ஒன்றுகூடும் இடமாக இந்த ஊர் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. மேலும் சமற்கிருதத்தில் கல்வெட்டு இருப்பதாலும், கிரந்த எழுத்தால் செய்திகள் எழுதப்பட்டுள்ளதாலும், தமிழும் இக்கல்வெட்டில் ஆளப்பட்டுள்ளதாலும் நீள நினைந்து ஆழப்பயின்றால் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வர இயலும்.(இதுவும் நிற்க)

     குடுமியான்மலையைப் பார்வையிட்ட நாங்கள் திருமயம் (திருமெய்யம்)  கோட்டையையும் பார்வையிட்டோம். எங்கள் பயணம் அடுத்ததாகக் கீழடி அகழாய்வு இடம் நோக்கி அமைந்தது. இடையில் நெடுமறம் என்ற ஊரில் வண்டியை நிறுத்திப் பகலுணவு உண்டோம். திருப்பத்தூர் கடந்து, மதுரை மேலூர் வழியாக, வைகையாற்றைக் கடந்து சிலைமான் வழியாகக் கீழடியை மாலை 4.30 மணியளவில் அடைந்தோம். கீழடி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருந்தது; வாழையும், தென்னையும் வளத்தைக் காட்ட, செழித்திருந்தன. தென்னந்தோப்புக்கு இடையில் நுழைந்து அகழாய்வு நடைபெற்ற இடங்களைக் கண்டோம். அகழாய்வு நடைபெற்ற இடங்கள் பணி முடிந்ததால் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்தன.  முன்பே சென்றிருந்தால் அகழாய்வுப் பணிகளை நேரில் பார்த்திருக்கலாம். இருப்பினும் உரிய இடத்தை நேரில் கண்ட மன நிறைவும், அருகில் வாழ்ந்தவர்களிடம் அகழாய்வுப் பணிகள் குறித்து உரையாடி, விவரம் பெற்ற மகிழ்ச்சியும் எங்களுக்கு இருந்தது. கீழடி நிலங்களில் கிடந்த சில பானை ஓடுகள், செங்கல் சிதைவுகளை நினைவுக்கு எடுத்துக்கொண்டு மதுரை ஆலவாய் அண்ணலுடன் உறையும் அங்கயற்கண்ணி அம்மையையும் அவர்கள் எழுந்தருளியிருக்கும் கோவிலையும் காண்பதற்கு எங்கள் குழு ஆயத்தமானது...!

சனி, 17 பிப்ரவரி, 2018

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் சப்பான் நாட்டில் வெளியீடு!



விபுலநாந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிடுகின்றார் சப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் 
கா. பாலமுருகன். முதல்படி பெறுகின்றார் டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா. அருகில் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள்.

     சப்பான் நாட்டில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதற்குப் பொறியாளர்களும், மேலாண்மை பயின்றவர்களும் சென்றுள்ளனர். அவ்வாறு சென்று  சப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். சப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இந்த ஆண்டு டோக்கியோ மாநகரில் அமைந்துள்ள கொமாட்சுகவா சகுரா அரங்கத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினர் (03.02.2018). ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பத்தார் கலந்துகொண்ட இந்த விழாவில், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கும் கலை நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

     அண்மையில் தமிழகத்தில் மறைந்த தமிழ்க் கணினித்துறை வல்லுநர் தகடூர் கோபியின் மறைவுக்கு அகவணக்கம் செலுத்தும் நிகழ்வுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சப்பான் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சதீசுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன், பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன், வழக்கறிஞர் எழில் கரோலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, உரையாற்றினர்.

      சப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. முதல் படியைச் சப்பான் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் கா. பாலமுருகன் வெளியிட, டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா பெற்றுக்கொண்டார்.

     தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியப் பரவலுக்கும் ஆராய்ச்சிக்கும் பெரும் பங்காற்றிவரும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின்  சப்பானியக் கிளை இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. உலகத் தொல்காப்பிய மன்றத்தை நிறுவித் தமிழ்த்தொண்டாற்றிவரும் மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் என்ற விருதினைச் சப்பான் தமிழ்ச்சங்கம் வழங்கிப் பாராட்டியது.

     சப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு, குழந்தைகள் வழங்கிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

சப்பான் நாட்டில் வாழும் பறையிசைக் கலைஞர் தயகோ குரோசவா என்பவர் தம் குழுவினருடன் கலந்துகொண்டு பறையிசை வழங்கியமை அனைவரையும் வியப்படைய வைத்தது.

     பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் வழங்கிய தமிழின் சிறப்புரைக்கும் கையுறைப் பொம்மலாட்டக் கலைநிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது.
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவைத் தொடங்கி வைக்கும் மு.இளங்கோவன்


உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சப்பானியக் கிளை உறுப்பினர்கள்

மு.இளங்கோவனுக்குத் தொல்காப்பியக் காவலர் என்ற விருதை வழங்குகின்றார் சப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் கா. பாலமுருகன். அருகில் சப்பான் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் சதீசு, வினோத்து, செந்தமிழன், மு. கலைவாணன்.