நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 29 ஜனவரி, 2019

தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனின் 14 நூல்கள் வெளியீட்டு விழா




தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனின் நூல்களைப் புதுச்சேரி முதலமைச்சர் வே. நாராயணசாமி  வெளியிட,  சமூகநலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா, திரு. ஜான்குமார் உள்ளிட்டோர் படிகளைப் பெற்றுக்கொண்டனர்.

     புதுச்சேரி, தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனின் 14 நூல்கள் வெளியீட்டு விழா, புதுச்சேரி செயராம் உணவகத்தில் 24. 01. 2019 மாலை 6 மணி முதல் 8 மணிவரை  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் வே. நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 14 நூல்களையும் வெளியிட்டு, நூலாசிரியரின் தமிழ்ப்பணியைப் பாராட்டிப் பேசினார். சமூகநலத்துறை அமைச்சர் மு. கந்தசாமி, புதுச்சேரி அரசின் தில்லிச் சிறப்புப் பிரதிநிதி அ. ஜான்குமார், புதுவை அரசின் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா, த. தனமாலா தமிழியக்கன் ஆகியோர் நூலின் படிகளைப் பெற்றுக்கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து நூலின் சிறப்புப் படிகளைப் புதுவைத் தமிழறிஞர்கள் பெற்றுக்கொண்டனர்.

     ஆல்பா கல்வி நிறுவனங்களின் தாளாளர் வ. பாசிங்கம், தொடக்கவுரையாற்றினார். மு.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். புலவர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் இ. பட்டாபிராமன், சீனு. இராமச்சந்திரன், துரை மாலிறையன், பாவலர் இலக்கியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் தமிழியக்கன் ஏற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்நெஞ்சன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை கு.அ. தமிழ்மொழி தொகுத்து வழங்கினார். புதுவைத் தமிழறிஞர்கள் மிகுதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




புதன், 16 ஜனவரி, 2019

சீர்காழி உ.செல்வராசுவின் ’பெண்ணே ஒரு பரிசுதான்’ நூலுக்கான வாழ்த்துரை!


  

  சிங்கப்பூர் நாட்டுக்கு இலக்கிய நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தபொழுது அறிமுகமானவர் என் அருமை நண்பர் சீர்காழி . செல்வராசு. பத்தாண்டுகளுக்கும் மேலாக அமைந்த இவருடைய நட்பு, வளர்பிறைபோல் வளர்ந்து,  நினைக்குந்தோறும் மகிழ்ச்சி ஏற்படுத்தும். எளிமையும் அன்பும் ஒருங்கே வாய்த்த உ. செல்வராசு கவிஞராகவும், பேச்சாளராகவும் சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் வலம் வருபவர். அடிப்படையில் இவர் ஒரு கப்பல் பொறியாளராக இருந்தாலும், கவிதை உள்ளம் கொண்டவர் என்பதால் சமூக முன்னேற்றத்தில் இவருக்கு எப்பொழுதும் அக்கறை உண்டு.

 சீர்காழியார் சிங்கப்பூரிலும், தமிழகத்திலும் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் இணைந்து, தமிழ்ப்பணியாற்றி வருபவர். சிலர் ’அமைப்பு’ வளையத்தைவிட்டு வெளியே வரமாட்டார்கள். ஆனால் நம் சீர்காழியாரோ எல்லா அமைப்புகளுடனும் இணைந்து பணிசெய்யும் பக்குவம் கொண்டிருப்பதைப் பாராட்டியாக வேண்டும். ’யாவரையும் கேளிராகப்’ பார்க்கும் உயர்ந்த உள்ளத்தினர் இவர்.  இளகிய உள்ளம் கொண்டவர் இவர் என்பதால் பசிப்பிணி நீக்குவதைப் பரிவோடு செய்பவர். இயல்தமிழில் ஈடுபாடுகொண்டவர்களை நான் மிகுதியாக அறிவேன். செல்வராசனாரோ இசைத்தமிழ் வளர்ச்சிக்குச் சீர்காழியில் கால்கோள் அமைத்தவர். "தமிழிசை மூவர்" தடம் பதித்த ஊரில் பிறந்தவர் என்பதால் இவருடன் இசைத்தமிழ் இணைந்துகொண்டது போலும்.

 யான் இயக்கிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம், விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழாக்கள் சிங்கப்பூரில் நடைபெற்றபொழுது ஆதரவுக் கரம் நீட்டியவர்களுள் சீர்காழியாரும் ஒருவர்.

  சிங்கப்பூரில் தொல்காப்பிய மன்றம் தொடங்குவதற்கு வாய்ப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு அண்மையில் நான் சிங்கப்பூர் வந்திருந்தேன். அருமை நண்பர் சீர்காழியாரும், பாவலர் எல்ல. கிருட்டினமூர்த்தியும், தமிழாசிரியர் ஜகூர் உசேனும் மனந்திறந்து உரையாடித் தொல்காப்பிய மன்றம் சிங்கப்பூரில் தொடங்குவதற்கு உரிய நெறிமுறைகளை வகுத்துத் தந்தனர். பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகள் சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலான தொல்காப்பியம் குறித்து, அறிமுகம் அமைவதற்குச் சிங்கப்பூர்த் தொல்காப்பிய மன்றம் பாடுபடவேண்டும் என்ற வேட்கையை விதைத்தவர் நம் சீர்காழியாரே.

 சீர்காழியாருக்குக் கவிதை எழுதுவது என்பது மூச்சுவிடும் உயிர்த்தொழில் போன்றது. நாட்டு நடப்புகளையும், சமூக அவலங்களையும் தம் பாட்டுச் சாட்டையைச் சொடுக்கிக் கண்டிப்பதைப் பல கவியரங்குகளில் கேட்டுள்ளேன். நல்ல தமிழில் நாளும் எழுதிக்குவிக்கும் இவரிடம் குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் சந்த நயம் பிடிபட்டுள்ளது. எனவே இவரைக் குழந்தைகளுக்கு உரிய பாடல்களை எழுதித் தருமாறு அன்புடன் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன். குழந்தைகளுக்குப் பாடல் எழுதுவோர் அருகிவரும் இக்காலகட்டத்தில் சீழ்காழி செல்வராசனார் முயன்றால் மிகச் சிறந்த குழந்தைப் பாவலராகச் சுடர்விட முடியும்.

 பெண்ணுரிமைக்கும், மக்களின் நல் வாழ்க்கைக்கும், உலக முன்னேற்றத்திற்கும் மாந்த நேயத்துக்கும் தொடர்ந்து குரல்கொடுக்கும் சீர்காழி உ. செல்வராசனார் தம் படைப்புகளால் தமிழர்களின் உள்ளமெல்லாம் வாழ்வார். சிங்கப்பூரையும், தமிழகத்தையும் தம் இருகண்களாகப் போற்றும் சீர்காழியாரைத் தமிழார்வலர்கள் முன்வந்து, ஊக்கப்படுத்தவேண்டும் எனவும், இவர்தம் படைப்பு நூல்களை  வாங்கிப் போற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

  பிறதுறையினரின் உழைப்பும், ஈடுபாடும் தமிழுக்கு வளம்சேர்த்து வருகின்றன என்பதில் நான் பெரிதும் நம்பிக்கையுடையவன். சீர்காழி உ. செல்வராசு அவர்கள் தம் கப்பல்துறை அனுபவங்களைப் படைப்புகளில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற அன்புவேண்டுகோளுடன் இவரைப் போற்றிப் பாராட்டுகின்றேன். பிறந்த ஊருக்குப் பெருமைசேர்த்த இவரையும் இவர் படைப்புகளையும் தமிழுலகம் என்றும் தாங்கிப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்பொழுதும் உண்டு.

மு. இளங்கோவன்
29.11.2018



புதன், 2 ஜனவரி, 2019

காலம் தந்த பரிசு க. பாஸ்கரன்!


 க. பாஸ்கரன் 

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கும் நோக்கில் இலங்கைக்குச் சென்றிருந்தபொழுது எனக்குக் கிடைத்த தமிழ் உறவினர்களுள் திருவாளர் கணபதி பிள்ளை பாஸ்கரன் அவர்களைத் தனித்துச் சுட்டியாக வேண்டும். படப்பிடிப்பின்பொழுது நான் தங்கியிருந்த விடுதிக்கு ஒரு வைகறைப் பொழுதில் வந்திருந்தார். அவரைச் சந்தித்து, என் நூல்களைக் கொடுத்தேன். ஏற்றுக்கொண்ட அவர் நிறைந்த நெஞ்சுடன் வாழ்த்தினார். அன்றுமுதல் இன்றுவரை ஆர்வம்குறையாத உறவுடன் உள்ளமை அவர்தம் நல்லுள்ளத்திற்குச் சான்றாகும்.

     ஆவணப்படம் சார்ந்து, பொறியாளர் கோணேசப் பிள்ளை அவர்களைச் சந்திப்பதற்கு உரிய ஒழுங்குகளைச் செய்துதந்தவர் நம் பாஸ்கரனார் ஆவார். அண்ணன் சிவம் வேலுப்பிள்ளையுடனும், காசுபதி நடராசா ஐயாவுடனும் கோணேசப் பிள்ளையைச் சந்தித்து, விபுலாநந்த அடிகளாருடன் அவருக்கு அமைந்த உறவினை நேர்காணல் செய்து பதிந்துகொண்டோம். அப்பொழுது மண்டூர் உள்ளிட்ட ஊர்களின் சிறப்புகளை அறியும் வாய்ப்பும் பாஸ்கரன் அவர்களால் ஏற்பட்டது. அதன் பிறகு கண்ணம்மா அக்காவினை இரண்டாவது முறையாகச் சந்திப்பதற்கான ஒழுங்குகளையும் செய்து தந்தார். பின்னர் விபுலாநந்த அடிகளாரின் தங்கை மகனும் கண்டியில் வாழ்ந்து வரும் பொறியாளருமான கணேசன் ஐயாவைச் சந்தித்துப் படப்பிடிப்பு நடத்துவதற்கு உரிய ஒழுங்குகளையும் நம் பாஸ்கரனார் அவர்களே செய்து தந்தார். பாஸ்கரன் ஐயா அவர்களின் துணையால் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தில் அரிய காட்சிகள் பல இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டன. எனவே விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை வரவேற்கும் நல்லுள்ளங்கள் எங்களுக்கு உதவிய பாஸ்கரன் அவர்களையும் நன்றியுடன் கொண்டாட வேண்டும் என்று இந்நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

     இலங்கைக்குச் செல்லும்பொழுதெல்லாம் திரு. பாஸ்கரன் அவர்களிடம் தனித்து உரையாடவோ, அமைதியாக அமர்ந்து பேசவோ நேரமின்றி, இலங்கை முழுவதும் சுற்றிச் சுழன்று விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணங்களைத் திரட்டியவண்ணம் இருந்தேன். ஓர் அமைதிச் சூழலில் பாஸ்கரனார் அவர்களின் பணிகள் குறித்தும், குடும்பநிலை குறித்தும் அறிவதற்கு வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது நடைபெற்ற ஓர் உரையாடலில் அவர் வெளிப்படுத்திய உண்மையொன்று அவர்மேல் எனக்கு ஏற்பட்ட மதிப்பினைப் பன்மடங்காக்கியது. அந்த உண்மை இதுதான்:

     இலங்கையின் தேற்றாத்தீவில் பிறந்து, அரிய தமிழ் நூல்கள் பலவற்றை அச்சிடும் மனோகரா அச்சகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்து, காலச் சூழலால் கனடா நாட்டுக்குச் சென்று, அங்கும் தமிழ்ப்பணியும் இலக்கியப் பணியும் செய்து மறைந்த நாங்கள் வழிபடுதெய்வமான ஈழத்துப்பூராடனார் குறித்து 1994 அளவில், ’ஈழத்துப்பூராடனாரின் இலக்கியப் பணிகள்’ குறித்து ஒரு கட்டுரையைச் செந்தமிழ்ச் செல்வி இதழில் எழுதியிருந்தேன். இதனை அடிப்படையாக வைத்து, ஈழத்துப்பூராடனாருக்குக் கிழக்குப் பல்கலைக்கழகம் மதிப்புறு கலாநிதிப் பட்டம் கிடைக்க வழி செய்தவர் நம் பாஸ்கரனார் ஆவார். இந்த அரிய செய்தியைக் கேட்டபொழுது திரு. பாஸ்கரனார் அவர்களின் மேல் எனக்கு நாளும் நாளும் மதிப்பு உயர்ந்தது. முன்பின் அறியாத நிலையில் என் கட்டுரை ஒருவருக்கு மதிப்புறு கலாநிதிப் பட்டம் கிடைப்பதற்குக் காரணமாக அமைந்ததை நினைத்தால் இப்பொழுதும் நான் மகிழ்ச்சியடைவது உண்டு. அந்தச் செயற்கரும் செயலுக்குக் காரணமாக இருந்தமை பாஸ்கரனாரின் தூய உள்ளத்திற்குச் சான்றாகும்.

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்து நாளும் பாஸ்கரனார் தொலைபேசியில் உரையாடும் சூழல் தொடர்ந்தது. ஆவணப்படத்தைப் பெரும் முயற்சிக்குப் பிறகு உருவாக்கி, அமெரிக்காவில் முதன்முதல் வெளியிட்டோம். அதன் பிறகு தவத்திரு விபுலாநந்த அடிகளார் வாழ்ந்த மட்டக்களப்பில் வெளியிடும் சூழலை நம் பாஸ்கரனார் உருவாக்கித் தந்தார்கள். அதற்காக நான் இலங்கைக்கு அழைக்கப்பட்டேன். விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச் சபையினர் அதற்கான விழா ஒழுங்குகளைச் செய்து, என்னைச் சிறப்பு விருந்தினராக ஏற்றுப் போற்றிப் பாராட்டினர். அப்பொழுதுதான் பொறியாளர் கணேசன் ஐயாவை முதன்முதல் நேரில் கண்டேன். இலங்கையின் புகழ்பெற்ற மனிதர்கள் பலைரையும் அந்த நிகழ்வில் சந்தித்தேன்.

அடுத்து இலங்கை அரசு சார்பாக நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் குறித்த சிறப்பு நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினனாக அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட்டேன். இதற்கெல்லாம் பின்புலமாக இருந்து, நான் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்திற்கு உழைத்த உழைப்பையும், விபுலாநந்தருக்குக் காலத்தில் நான் செய்த தொண்டினையும் முற்றாக அறிந்தவர் நம் பாஸ்கரனார் ஆவார். ஆவணப்படம் உருவானபொழுது ஏற்பட்ட தோல்விகளையும், இழப்புகளையும், ஏமாற்றங்களையும் நன்கு உணர்ந்த திரு. பாஸ்கரனார் உலகின் பல பாகங்களில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிட்ட பொழுதெல்லாம் அகம் குளிர்ந்து பாராட்டிய பெருமகனார் என்பதை இங்கு நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

     க. பாஸ்கரன் அவர்கள் தம் குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு ஒரு முறை சுற்றுலா வந்திருந்தார். காலைப் பொழுதில் சந்தித்து, சிற்றுண்டி உண்டு, அனைவருக்கும்  விடைகொடுத்து, அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றேன். என் அலுவல்பணியில் மூழ்கியிருந்ததால், என் பகலுணவு நேரத்துக்குப் பிறகு அவருடன் தொடர்புகொண்டேன். அவரை அழைத்துச் செல்ல  வேண்டிய மகிழ்வுந்தின் ஓட்டுநர் இந்நேரம் வரை வரவில்லை என்று சொன்னதும் அதிர்ந்துபோனேன். காலை உணவுக்கும் பகலுணவுக்குமான இடைவெளிவரை அவர் குடும்பத்தினருடன் விடுதி வாயிலில் காத்திருக்க நேர்ந்துவிட்டதே என்று பதறியடித்து, உடனடியாக அவர்கள் இருந்த இடம் சென்று, வேறு மகிழ்வுந்தில் ஏற்றிச், சென்னைக்கு அனுப்பிவைத்தேன். அந்த நிகழ்வில் ஏற்பட்ட அவர்தம் கசப்பான பயண அனுபவத்திலும் அவர் அமைதி காத்த பெருந்தன்மை நினைத்து நான் வியப்புற்றேன். தமக்குத் தொல்லையாக அமைந்த அந்த ஓட்டுநரின்மீது பரிவுகாட்டிய பாஸ்கரன் அவர்களின் சகிப்புத்தன்மையை நினைத்து அவர் ஒரு பேருள்ளம் வாய்த்த மாமனிதர் என்று முடிவுசெய்துகொண்டேன். தொல்லை தந்தவருக்கும் உதவும் தூய மனிதராக ஐயா பாஸ்கரன் மிளிர்பவர் என்று அவரை நாளும் நினைத்துப்பார்ப்பேன்.

     பின்பு ஒருமுறை இலங்கை சென்றபொழுது என் மனைவுயுடன் அவர்தம் இல்லம் சென்றிருந்தேன். எங்களை அன்புடன் வரவேற்றுத் தம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார். மட்டக்களப்புப் பண்ணியங்கள் பலவற்றை அன்பு மேலீட்டால் வழங்கி மகிழ்ந்தார் மட்டக்களப்பு வாவியொட்டிய அவர்தம் குடியிருப்பில் சில மணிநேரம் கழித்த அந்த இனிய பொழுது இன்றும் என் மனக்கண்ணில் உள்ளது.

     பழகுதற்கு இனிய பண்பாளரும், பிறருக்கு உதவும் உயர்ந்த உள்ளத்தினரும், ஏற்றுக்கொண்ட பணியைத் திறம்படச் செய்யும் செயல் மறவரும், துன்பம் தந்தவருக்கும் பரிந்துபேசும் கருணை உள்ளத்தினருமான க. பாஸ்கரனார் அவர்கள் இலங்கை அரசின் கல்வித்துறையில் திறம்படப் பணியாற்றியவர். இவரைப் போன்ற பண்புடைய மக்களால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டுள்ளதைப் "பண்புடையார் பட்டுண்டு உலகம்" என்று சான்றோர் குறிப்பிடுவது உண்டு.  அன்பொழுகும் உள்ளமும் அருளொழுகும் செயல்பாடுகளும் கனிந்த திரு. பாஸ்கரனார் அவர்களின் மணிவிழாச் செய்தியறிந்த நெஞ்சம் மகிழ்கின்றேன். மணிவிழாச் சிறக்கவும், மணிவிழா மலர் பொலிவுற்றுப் பூத்துக் குலுங்கவும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

# திரு. க. பாஸ்கரன் அவர்களின் மணிவிழா மலரில் இடம்பெற்றுள்ள நினைவுரை(2018).