நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 மார்ச், 2026

கலைமாமணி முனைவர் கா. இராசமாணிக்கம்

 

முனைவர் கா. இராசமாணிக்கம் 

[முனைவர் கா. இராசமாணிக்கம் புதுச்சேரியில் வாழ்ந்துவரும் இசை, நாட்டிய அறிஞர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக வாய்ப்பாட்டினைப் பயின்றவர். இளங்கலை – நாட்டியம் பயின்றவர். நாட்டியத்திற்கான தமிழ் உருப்படிகளில் இசை அமைதி என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கியங்களை நாட்டிய வடிவில் வழங்கிப் புகழ்பெற்றவர். பல்லாயிரம் மாணவர்களுக்கு இசை, நாட்டியம் பயிற்றுவித்து வருபவர்.] 

கா. இராசமாணிக்கம் அவர்கள் 19. 07. 1963 இல் புதுச்சேரியில் உளைவாய்க்கால் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் காத்தவராயன் – பச்சையம்மாள் என்பனவாகும். வில்லியனூர் விவேகானந்தா பள்ளியில் இளமைக் கல்வியை நிறைவு செய்தபின்னர். முத்தரையர்பாளையம் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பினைப் பயின்றவர். 

முனைவர் கா. இராசமாணிக்கம் அவர்கள் இசைத்துறையிலும் நாட்டியத்துறையிலும் பேரறிவுபெற்ற பெருந்தகையாளர். இவரும் இவரின் குடும்பத்தாரும் இசைத்துறைக்கும் நாட்டியத்துறைக்கும் ஆற்றிவரும் பங்கு சிறப்பிற்குரியனவாகும். முனைவர் கா. இராசமாணிக்கம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை மாமணி என்னும் பட்ட வகுப்பில் நான்கு ஆண்டுகள் பயின்று வாய்ப்பாட்டில் புலமைபெற்றவர். கலைக்காவிரி இசைக்கல்லூரியில் பயின்று நாட்டியத்தில் இளங்கலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நாட்டியத்திற்கான தமிழ் உருப்படிகளில் இசை அமைதி என்னும் பொருளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக மேடைகளில் பாடிவரும் இவர், தஞ்சாவூர் கே. பி. கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் நாட்டியம் பயின்ற சீடர் ஆவார். 

1992 ஆம் ஆண்டு முதல் சங்கீத சலங்கை நாட்டியாலயா – கலையருவி என்னும் இசை நாட்டியப் பள்ளியை நடத்திப் பல்லாயிரம் மாணவர்களுக்கு, இசை நாட்டியத்தைப் பயிற்றுவித்து வருபவர். ஆதித்யா வித்யாசரமம் பள்ளியில் கடந்த இருபது ஆண்டுகளாக இசைத்துறை இயக்குநராக இருந்து பல மாணவர்களுக்கு இசையைப் பயிற்றுவித்து வருபவர். மாணவர்கள் நாட்டியக்கலையையும்  இவரிடம் பயின்று வருகின்றனர். 

கா. இராசமாணிக்கம் பாடிய ஒலிவட்டுகள் 

  1. இது நல்ல தருணம்
  2. மணல்மேட்டு மழலைகள்
  3. நாட்டியப் பாடல்கள்
  4. பாரதியார் பாரதிதாசன் பாடல்கள் 

நாட்டியப்பணி 

  1. அருங்கலைச்செல்வி ஆயி
  2. வளம் காண வாருங்கள்
  3. நிலமகள் நலம் காப்பாள்
  4. இராமாயணம்(சீதா கல்யாணம்)
  5. வீரத்தாய் (பாரதிதாசன்)
  6. மகுடத்தின் மணிகள்
  7. ஒரு காற்சிலம்பு நியாயம் கேட்கிறது.
  8. பாரதி போற்றுதும்
  9. புரட்சிக்கவி
  10. கொடி முல்லை(வாணிதாசன்) 

ஆவணப்படங்களில் பாடியமை 

  1. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்
  2. விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் 

அயல்நாட்டுப் பயணம் 

பிரான்சு, செர்மனி, சுவிசர்லாந்து, டென்மார்க்கு, மலேசியா, ரியூனியன், கம்போடியா முதலான நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். 

சங்கீத நாடக அகாதெமி, தென்னகப் பண்பாட்டு மையம் முதலிய நிறுவனங்களில் உறுப்பினராக இருந்து கலைத்தொண்டு செய்துள்ளார். 

இல்வாழ்க்கை 

கா. இராசமாணிக்கம் அவர்கள் இராஜேஸ்வரி அவர்களை 1989 இல் திருமணம் செய்துகொண்டவர். இவரும் மிகச்சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு இராஜ்குமார், இரஞ்சனி என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். அனைவரும் இசைக்கலையை முறைப்படி பயின்று, பரப்பி வருகின்றனர். இக் கலைக்குடும்பம் தமிழ்போல் தழைத்து இனிது புகழ்பெறுக.

ஞாயிறு, 8 மார்ச், 2026

தொல்காப்பிய ஆய்வறிஞர் சந்திரா கிருட்டிணன்

 

பேராசிரியர் சந்திரா கிருட்டிணன்

[முனைவர் சந்திரா கிருட்டிணன் அவர்கள் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். கோவை பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். பேராசிரியராக 31 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தொல்காப்பியம் குறித்த ஆய்வினை நிறைவுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தை அருணா ரகுராமன் அவர்களுடன் இணைந்து மொழிபெயர்த்து வெளியிட்டு வருபவர். பன்னூலாசிரியர். பேராசிரியர் சென்னியப்பனார் அவர்களிடம் தமிழ் கற்ற பெருமைக்குரியவர்] 

    கோவை மாநகரில் வாழ்ந்துவரும் பேராசிரியர் சந்திரா கிருட்டிணன் அவர்கள் தொல்காப்பிய ஆய்வு உள்ளமும் தமிழ் நூல்களில் ஆழ்ந்த பயிற்சியும் கொண்ட பெருந்தகையாளர் ஆவார். மாணவர்களின் உள்ளங்கவர்ந்த பேராசிரியரான இவர்தம் ஆய்வுப்புலம் தொல்காப்பியம் சார்ந்தது ஆகும்.  31 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய பட்டறிவு உடையவர். தொல்காப்பியச் செய்திகளை ஆய்வுகள் வழியாகவும் மொழிபெயர்ப்புகள் வழியாகவும் நாடக வடிவிலும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பெரும்பணியை விருப்பமுடன் செய்து வருபவர். பேராசிரியர் சந்திரா கிருட்டிணன் அவர்களின் வாழ்வியலையும் தமிழ்ப்பணிகளையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். 

    சந்திரா கிருட்டிணன் அவர்கள் திருவனந்தபுரம்  ஊரில் வாழ்ந்த அ. சிவதாணு பிள்ளை - சீ மீனாட்சி ஆகியோரின் மகளாக 27. 07. 1960 இல் பிறந்தவர். தாத்தா வாத்தியார் அம்பலவாணர் பிள்ளை ஆச்சி வள்ளியம்மாள் ஆகியோரின் வளர்ப்பில் வளர்ந்தவர். 1 முதல் 5 வகுப்பு வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதி புரம்,  அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றவர். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கணபதிபுரம் அ. வி தே. உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். பத்தாம் வகுப்பினை விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். 11 ஆம் வகுப்பினைச் சத்தியமங்கலம்  . ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். இலக்கிய இளவல் (பி.லிட்), முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளைப் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். கல்வியியல் இளையர், நூலகவியல் இளையர் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பயின்று பெற்றவர். 

    சந்திரா கிருட்டிணன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு தொல்காப்பியம் செய்யுளியலும் யாப்பருங்கல விருத்தியும் ஒப்பாய்வு என்பதாகும்.இவர்தம் நெறியாளர் முனைவர் உமாபதி ஆவார். 

    1976 இல் முதலாம் ஆண்டு படிக்கின்ற பொழுது விஞ்ஞானச் சுடரில் முதல் கட்டுரை வெளிவந்தது. செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம், செங்கரும்பு, தமிழ்நேயம், பூம்புனல் முதலான இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். சமயத்தமிழ் இதழில் 7 ஆண்டுகளாகக் கட்டுரை எழுதி வருகிறார். எழுத்துலகப் பயணத்தில் இது 50 ஆவது ஆண்டு ஆகும். 

    நெதர்லாந்து சூரியத் தமிழ் தொலைக்காட்சியில் தொல்காப்பியத்தைத் தொடர்ந்து இணையம் வழியாக நடத்தித், தேர்வு வைத்துத்  தொல்காப்பியத் தேனீ என்ற பட்டம் வழங்கிய இவர்தம் தொல்காப்பியப் பணி போற்றுதலுக்கு உரியது. 

பணியனுபவம்: 

    சந்திரா கிருட்டிணன் அவர்கள் 1989 முதல் 1993 வரை இமாகுலேட் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1993 முதல் 1995 வரை சபர்பன் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1995 முதல் 96 வரை நிர்மலா கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். 1996 முதல் 2007 வரை வி. எல். பி. கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். 2008 முதல் 2009 வரை திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் பணியாற்றியவர். 2009 முதல் 2019 வரை கோவை அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

இல்வாழ்க்கை: 

    சந்திரா கிருட்டிணன் அவர்கள் 05. 11. 1984 இல் பொறியாளர் க. ச. பாலகிருட்டிணன் அவர்களை இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றவர். இவர்களுக்கு இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

எழுதியுள்ள நூல்கள்:

1. கதிர் நோக்கும் கவின் மலர்

2. நகை என்னும் மெய்ப்பாடு

3. பன்முகப் பார்வைகள்

4. அனிதா கிருஷ்ணமூர்த்தி (கட்டுரை ஆசிரியர் வரிசை)

5. கவிஞர் செல்வமணி (கவிஞர் வரிசை)

6. நலம் தரும் நந்தி

7. சுகம் தரும் சுகப்பிரம்மர்

8. தமிழர் பண்பாட்டில் கொழுக்கட்டை

9. நிலை (புதினம்)

10. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்

11. தொல்காப்பியம் உவமை இயல்

13. அருணோதயம் (புதினம்) 

ஆங்கில நூல்கள்: 

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் திருமதி அருணா ரகுராமன் அவர்களுடன் இணைந்து ஆங்கிலத்தில் எழுதியவை: 

1. தொல்காப்பியம்  - அகத்திணை இயல்

2. புறத்திணை இயல்

3. களவியல்

4. கற்பியல்

5. உவமவியல்

6. மெய்ப்பாட்டியல்

7. பொருளியல்

8. செய்யுளியல்

9. மரபியல் 

சமூகப் பணி: 

1.   நாட்டு நலப்பணித்திட்டச் செயல் அலுவலர்

2.   செஞ்சுருள் மன்ற அலுவலர்

3.   செஞ்சிலுவைச் சங்க அலுவலர்

4.   கோவை மாவட்ட பேரிடர் பயிற்சி அலுவலர் (ஓராண்டு) 

தொகுப்பாசிரியர்: 

1. தாவரக் களஞ்சியம்

2. கொங்கு நாட்டு மலைகள்

3. பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நூற்றாண்டு உரைக்கோவை

(ஞாலம் நின் புகழே பேச வேண்டும்) 

பாடப் பகுதியாக வந்தவை:

1.   மாசுக் கட்டுப்பாடு.  கட்டுரை,  பாரதியார் பல்கலைக்கழகம்

2.   கதிர் நோக்கும் கவின் மலர்

கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடப் பகுதி

 3. சிறுகதை தொகுப்பில் வந்த சிறுகதை (பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில்      பாடப் பகுதியாக உள்ளது)

4. அருணோதயம் புதினம் வி எல் பி கல்லூரியில் பாடப் பகுதியாக   வைக்கப்பட்டுள்ளது

5.  பாரதியார் பல்கலைக்கழகம், முதுகலைத் திறந்தவெளிப் பட்டப் படிப்பு மாணவர்களுக்குச் சைவசித்தாந்தம் என்னும் பாடத்தினை இருவர் இணைந்து எழுதியுள்ளனர். 

உரையாசிரியர்: 

1.   கந்தசாமி சுவாமிகள் எழுதிய அன்னூர் தல புராணம். 

    கோவை செம்மொழி மாநாட்டில் பண்ணத்தி குறித்து கட்டுரை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். பணிநிறைவுக்குப் பிறகு தொடர்ந்து தமிழ் ஆய்வுப்பணிகளிலும் மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர்.