[முனைவர் சந்திரா கிருட்டிணன் அவர்கள் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். கோவை பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். பேராசிரியராக 31 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தொல்காப்பியம் குறித்த ஆய்வினை நிறைவுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தை அருணா ரகுராமன் அவர்களுடன் இணைந்து மொழிபெயர்த்து வெளியிட்டு வருபவர். பன்னூலாசிரியர். பேராசிரியர் சென்னியப்பனார் அவர்களிடம் தமிழ் கற்ற பெருமைக்குரியவர்]
கோவை மாநகரில் வாழ்ந்துவரும் பேராசிரியர் சந்திரா கிருட்டிணன் அவர்கள் தொல்காப்பிய ஆய்வு உள்ளமும் தமிழ் நூல்களில் ஆழ்ந்த பயிற்சியும் கொண்ட பெருந்தகையாளர் ஆவார். மாணவர்களின் உள்ளங்கவர்ந்த பேராசிரியரான இவர்தம் ஆய்வுப்புலம் தொல்காப்பியம் சார்ந்தது ஆகும். 31 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய பட்டறிவு உடையவர். தொல்காப்பியச் செய்திகளை ஆய்வுகள் வழியாகவும் மொழிபெயர்ப்புகள் வழியாகவும் நாடக வடிவிலும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பெரும்பணியை விருப்பமுடன் செய்து வருபவர். பேராசிரியர் சந்திரா கிருட்டிணன் அவர்களின் வாழ்வியலையும் தமிழ்ப்பணிகளையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன்.
சந்திரா கிருட்டிணன் அவர்கள் திருவனந்தபுரம் ஊரில் வாழ்ந்த அ. சிவதாணு பிள்ளை - சீ மீனாட்சி ஆகியோரின் மகளாக 27. 07. 1960 இல் பிறந்தவர். தாத்தா வாத்தியார் அம்பலவாணர் பிள்ளை ஆச்சி வள்ளியம்மாள் ஆகியோரின் வளர்ப்பில் வளர்ந்தவர். 1 முதல் 5 வகுப்பு வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதி புரம், அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றவர். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கணபதிபுரம் அ. வி தே. உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். பத்தாம் வகுப்பினை விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். 11 ஆம் வகுப்பினைச் சத்தியமங்கலம் . ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். இலக்கிய இளவல் (பி.லிட்), முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளைப் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். கல்வியியல் இளையர், நூலகவியல் இளையர் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பயின்று பெற்றவர்.
சந்திரா கிருட்டிணன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு தொல்காப்பியம் செய்யுளியலும் யாப்பருங்கல விருத்தியும் ஒப்பாய்வு என்பதாகும்.இவர்தம் நெறியாளர் முனைவர் உமாபதி ஆவார்.
1976 இல் முதலாம் ஆண்டு படிக்கின்ற பொழுது விஞ்ஞானச் சுடரில் முதல் கட்டுரை வெளிவந்தது. செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம், செங்கரும்பு, தமிழ்நேயம், பூம்புனல் முதலான இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். சமயத்தமிழ் இதழில் 7 ஆண்டுகளாகக் கட்டுரை எழுதி வருகிறார். எழுத்துலகப் பயணத்தில் இது 50 ஆவது ஆண்டு ஆகும்.
நெதர்லாந்து சூரியத் தமிழ் தொலைக்காட்சியில் தொல்காப்பியத்தைத் தொடர்ந்து இணையம் வழியாக நடத்தித், தேர்வு வைத்துத் தொல்காப்பியத் தேனீ என்ற பட்டம் வழங்கிய இவர்தம் தொல்காப்பியப் பணி போற்றுதலுக்கு உரியது.
பணியனுபவம்:
சந்திரா கிருட்டிணன் அவர்கள் 1989 முதல் 1993 வரை இமாகுலேட் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1993 முதல் 1995 வரை சபர்பன் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1995 முதல் 96 வரை நிர்மலா கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். 1996 முதல் 2007 வரை வி. எல். பி. கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். 2008 முதல் 2009 வரை திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் பணியாற்றியவர். 2009 முதல் 2019 வரை கோவை அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இல்வாழ்க்கை:
சந்திரா கிருட்டிணன் அவர்கள் 05. 11. 1984 இல் பொறியாளர் க. ச. பாலகிருட்டிணன் அவர்களை இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றவர். இவர்களுக்கு இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.
எழுதியுள்ள நூல்கள்:
1.
கதிர் நோக்கும் கவின் மலர்
2.
நகை என்னும் மெய்ப்பாடு
3.
பன்முகப் பார்வைகள்
4.
அனிதா கிருஷ்ணமூர்த்தி (கட்டுரை ஆசிரியர் வரிசை)
5.
கவிஞர் செல்வமணி (கவிஞர் வரிசை)
6.
நலம் தரும் நந்தி
7.
சுகம் தரும் சுகப்பிரம்மர்
8.
தமிழர் பண்பாட்டில் கொழுக்கட்டை
9.
நிலை (புதினம்)
10.
தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்
11.
தொல்காப்பியம் உவமை இயல்
13. அருணோதயம் (புதினம்)
ஆங்கில நூல்கள்:
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் திருமதி அருணா ரகுராமன் அவர்களுடன் இணைந்து ஆங்கிலத்தில் எழுதியவை:
1.
தொல்காப்பியம் - அகத்திணை இயல்
2.
புறத்திணை இயல்
3.
களவியல்
4.
கற்பியல்
5.
உவமவியல்
6.
மெய்ப்பாட்டியல்
7.
பொருளியல்
8.
செய்யுளியல்
9. மரபியல்
சமூகப் பணி:
1. நாட்டு நலப்பணித்திட்டச் செயல் அலுவலர்
2. செஞ்சுருள் மன்ற அலுவலர்
3. செஞ்சிலுவைச் சங்க அலுவலர்
4. கோவை மாவட்ட பேரிடர் பயிற்சி அலுவலர் (ஓராண்டு)
தொகுப்பாசிரியர்:
1.
தாவரக் களஞ்சியம்
2.
கொங்கு நாட்டு மலைகள்
3.
பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் நூற்றாண்டு உரைக்கோவை
(ஞாலம் நின் புகழே பேச வேண்டும்)
பாடப் பகுதியாக வந்தவை:
1. மாசுக் கட்டுப்பாடு. கட்டுரை, பாரதியார் பல்கலைக்கழகம்
2. கதிர் நோக்கும் கவின் மலர்
கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் பல தன்னாட்சிக்
கல்லூரிகளில் பாடப் பகுதி
3. சிறுகதை தொகுப்பில் வந்த சிறுகதை (பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடப் பகுதியாக உள்ளது)
4. அருணோதயம்
புதினம் வி எல் பி கல்லூரியில் பாடப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது
5. பாரதியார் பல்கலைக்கழகம், முதுகலைத் திறந்தவெளிப் பட்டப் படிப்பு மாணவர்களுக்குச் சைவசித்தாந்தம் என்னும் பாடத்தினை இருவர் இணைந்து எழுதியுள்ளனர்.
உரையாசிரியர்:
1. கந்தசாமி சுவாமிகள் எழுதிய அன்னூர் தல புராணம்.
கோவை செம்மொழி மாநாட்டில் பண்ணத்தி குறித்து கட்டுரை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். பணிநிறைவுக்குப் பிறகு தொடர்ந்து தமிழ் ஆய்வுப்பணிகளிலும் மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர்.












