நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 4 ஜூலை, 2026

திருக்குறள் மணி சுப. சுப்பையா

  

திருக்குறள் மணி சுப. சுப்பையா
(23.09.1947 - 08.09.2021)

[சுப சுப்பையா அவர்கள் மலேசியாவின், சித்தியவான் என்னும் ஊரில் பிறந்தவர். சித்தியவான் பகுதியில் திருக்குறள் பரப்பும் பணியில் முன்னின்று உழைத்தவர். தொல்காப்பியக் கருத்தரங்கை மலேசியாவில் 1986 ஆம் ஆண்டில் நடத்தியவர். சித்தியவான் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உழைத்தவர். தமிழ் இளைஞர் மணிமன்றப் பணிகள், கூட்டுறவுக் கழகம், திருக்கோவில் பணிகளிலும் ஆர்வமுடன் உழைத்தவர்]. 

திருக்குறள் தொண்டர், திருக்குறள் மணி எனப் போற்றப்படும்  சுப. சுப்பையா PJK அவர்கள் மலேசியாவின், சித்தியவானில் வாழ்ந்த சுப்பிரமணியம்  நாகம்மாள் ஆகியோரின் மூத்த மகனாக 23.09.1947-ஆம் ஆண்டு பிறந்தவர். தன் மூன்றாவது வயதிலேயே தந்தையை இழந்த இவர் தனித்து வாழ்ந்த தாயால் வளர்க்கப்பட்டவர் ஆவார். இவருக்கு இரண்டு உடன்பிறந்தார் உண்டு. இவர்களின் பெயர்  நல்லையா, சந்திரன் என்பனவாகும். 

சுப. சுப்பையா தொடக்கக் கல்வியைச்  சுங்கை வாங்கித் தோட்டத்தில் பயின்றவர். ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றிருந்த இவர், வறுமையின் காரணமாகத்  தனது கல்வியைத் தொடர முடியவில்லை. தம்முடைய கல்வியைத் தொடர முடியாமல் தோட்டத்திலேயே வேலைக்கு சேர்ந்தார்

 சுங்கை வாங்கித் தோட்டத்தில் திருக்குறள் வளர்ச்சிப் பணிக்குப் பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர். தம்முடைய வாழ்வில் திருக்குறள் நெறியை இலக்காகக் கொண்டு வாழ்ந்தவர்

12.04.1970-இல் இராசம்மா என்ற பெண்மணியைத் தமிழ்த் திருமணம் புரிந்தவர். இவரின் இத்தமிழ்த் திருமணம் பெரியார் கு. மணியம் அவர்களின் தலைமையில், தமிழ்க்குயிலார் கா. கலியபெருமாள் அவர்களின் வாழ்த்துரையுடன் நடைபெற்றது. சுப. சுப்பையா – இராசம்மா ஆகியோருக்குக் கலைவாணன், கதிரவன், இராதை(மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பொறுப்பு வகிப்பவர்), கம்பன் என்னும் பெயர்களில் நான்கு பிள்ளைகளும் ஆறு  பெயரப்பிள்ளைகளும் உள்ளனர்

சுப. சுப்பையா அவர்கள் 1981-ஆம் ஆண்டு சனவரி  4 ஆம் நாள் முதல் 10 ஆம் நாள் வரை மதுரையில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். அவர்கள் ஆட்சியில் நடத்திய ஐந்தாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தமிழகம் சென்றவர். இவர்  . சுங்கை வாங்கித் தோட்டத்தில் மூன்று திருக்குறள் கருத்தரங்குகளையும், ஒரு தொல்காப்பியக் கருத்தரங்கையும் நடத்தி, சாதனை புரிந்துள்ளார் என்பது பெருமைக்குரியது.

 

தமிழ்க்குயில் கா. கலியபெருமாள், செல்லையா இராசதுரை, சுப. சுப்பையா 
(தொல்காப்பியக் கருத்தரங்கு, சித்தியவான்)

தொல்காப்பியக் கருத்தரங்கில் சுப. சுப்பையா (இடப்புறம்), 
ஆறு. நடராசன்( விழாவின் செயலாளர்), மற்றும் நடனக்குழுவினர்

தொல்காப்பியக் கருத்தரங்கின் பார்வையாளர்கள்

சுப. சுப்பையா அவர்கள்  மலேசியாவில் முதல் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடத்தியவர் ஆவார். இவருக்குப் பெருந்துணையாக இருந்தவர் ஆறு. நடராசன் ஆவார். விழாவின் செயலாளராக இருந்து இவ்விழா சிறக்க உதவியவரும் இவரேயாவார்.  இத் தொல்காப்பிய கருத்தரங்கிற்கு 12. 04 . 1986 அன்று மலேசியாவுக்கான இலங்கைத் தூதரும், மிகச் சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான மாண்புமிகு செல்லையா இராசதுரை அவர்களை அழைத்து வந்த பெருமையும் இவரைச் சாரும்

இப்பொழுது நம்மிடையே பரவலாக ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கும் தமிழர் திருநாளைச் சுப. சுப்பையா அவர்கள் 1978 ஆம் ஆண்டு சுங்கை வாங்கித் தோட்டத்தில்  தொடங்கியவர்களில் ஒருவராவார். சுப. சுப்பையா அவர்கள் கோ. சாரங்கபாணியாரின் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் மேல் தீராத நம்பிக்கை கொண்டவராக  விளங்கியவர்

சமயப் பணியாக அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தின்  பொருளாளராகவும், ஆலயத் திருப்பணிச் செயற்குழுவின்  நிர்வாகியாகவும் பணியாற்றியவர்

சுங்கை வாங்கித் தோட்ட இடுகாட்டு நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகப் பல துன்பங்களை அனுபவித்தவர். இன்று அந்த இடுகாடு சுங்கை வாங்கி மக்களுக்குப்  பொதுவாக இருப்பதற்கு இவர்  காரணமென்றால் அது மிகையில்லை. இவர் தோட்ட மக்களுக்கு ஒரு கூட்டுறவு வேண்டும் என்பதற்காகத் தமது நண்பர்களோடு “ சுங்கை வாங்கி கூட்டுறவுக் கழகத்தை”  அமைத்தவர்

சுப. சுப்பையா  1986 - ஆம் ஆண்டு சுங்கை வாங்கி . . கா கிளையை அமைத்து, அதன் துணைத் தலைவராகப்  பதவி வகித்தவர்.  அதன்  பின்னர்த் தலைவராகப் பொறுப்பேற்றவர்

சுப. சுப்பையாவுக்கு    ரவுப் தமிழ்ச் சங்கம்”  “திருக்குறள் தொண்டர்என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தது

சுப. சுப்பையா அவர்கள் திருக்குறளை மக்களிடையே பரப்பியதற்காகக் கோலாலம்பூர் தமிழ்நெறிக் கழகம்,   திருக்குறள் மணி ”  என்ற சிறப்பு ஆரத்தை (விருதை) வழங்கிச் சிறப்பித்தது. இவருடைய அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளைப் பாராட்டி, பேரா மாநில அரசர் அவர்களால் PJK பட்டம் வழங்கப்பட்டது. சுங்கை வாங்கி தோட்டக் கூட்டுறவுக் கழகம் இவர்தம் பணியைப் பாராட்டி, "கூட்டுறவு தந்தை விருது" என்னும் பெயரிலான விருதை  27.09.2009 இல் வழங்கிப் போற்றியது.


சமயம், அரசியல், திருமண நிகழ்வுகள், கூட்டுறவுச் சங்கங்கள் என எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளில், அவர்களின் உரிமைகளை முன்னிறுத்தி விடாமுயற்சியுடன் தொண்டாற்றியவர் இவர். சமூகப்பணிக்காக தன் வாழ்நாளின் பெரும் பகுதியை ஒப்படைத்தவர் என்பதும் இவரின் உயர்ந்த பண்பை எடுத்துக்காட்டுகிறது

சுப. சுப்பையா அவர்கள் 08.09.2021 இல் இயற்கை எய்தினார். 

திருக்குறள் மணி திரு. சுப. சுப்பையா அவர்கள் தமிழ்ப்பணியைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் என்பதால் மலேசியத் தமிழர்களால் என்றும் போற்றப்படுவார். 

 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வானுறையும்;

தெய்வத்துள் வைக்கப் படும்” 

என்னும் தமிழ்மறையின் வழியில் வாழ்ந்த சுப. சுப்பையா அவர்களின் பெருமையை நினைவுகூர்வோம்.

 

நன்றி:

முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன், முத்தமிழ்ப் பாவலர் மன்றம், ஈப்போ

திரு. சுப. கதிரவன், சித்தியவான்

வியாழன், 18 ஜூன், 2026

கு. இரவீந்திரன்

 

கு. இரவீந்திரன் 

[திருவனந்தபுரத்தில் பிறந்த கு. இரவீந்திரன் அவர்கள் இந்திய அரசின் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ், மலையாளம், ஆங்கிலம் அறிந்தவர். திருவனந்தபுரம் சைவப் பிரகாச சபையின் தலைவராகப் பணியாற்றி, சபை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியவர். சைவ சித்தாந்தம், வஞ்சிக் காண்டம், காவேரி – வைகை – பெரியார் ஆற்றுப் படுகைகளின் பண்டைய வரலாற்றுப் பார்வை (Kavery - Vaigai - Periyar River Valleys - A peep into Ancient History) முதலிய நூல்களை ஆங்கிலத்தில் வரைந்தவர். “செம்மொழியாக மலையாளம்” என்னும் நூலினை முனைவர் சங்கரன்குட்டி நாயருடன் இணைந்து எழுதியவர்.] 

கு. இரவீந்திரனின் இளமை வாழ்க்கை

இரவீந்திரன் அவர்கள்  26. 08.1937-ஆம் ஆண்டில்  எம். எஸ். குமாரசாமி பிள்ளை மற்றும் பாலம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகத் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.  இவரது  தந்தையார் எம். எஸ். குமாரசாமி பிள்ளை திருவனந்தபுரத்து மக்களுக்குப் பெரும்பயன் நல்கும் வகையில் 1932 ஆம் ஆண்டளவில் ஏற்படுத்தப்பட்ட 'வெலிங்டன் வாட்டர் வொர்க்ஸ்' (Willington Water Works) திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர். மேலும், திருவனந்தபுரம் சைவப் பிரகாச சபையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர். 

கு. இரவீந்திரன் அவர்கள் தமது பள்ளி, கல்லூரிப் படிப்புகளைத் திருவனந்தபுரத்தில் பயின்றவர். மலையாளம் வழியாகக் கல்வி பயின்ற இவர் இளம் வணிகவியல் படித்தவர் (B. Com.). இந்திய அரசின் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் (Audit and Accounts Department) முதன்முதல் பணியில் இணைந்தவர். இத்துறையில் முப்பத்தைந்து ஆண்டுக்காலம் சிறப்பாகப் பணியாற்றிய பிறகு 1995-ஆம் ஆண்டில் துணை கணக்காளர் ஜெனரலாக (Deputy Accountant General) ஓய்வு பெற்றவர். இவர்தம் பணிப்புலமையை அறிந்த அரசு IA&AS என்னும் தகுதிக்கு உயர்த்தியது. 

கு. இரவீந்திரனின் இல்வாழ்க்கை: 

கு. இரவீந்திரன் அவர்கள் 1961 ஆம் ஆண்டு மீனாட்சி ஈஸ்வரி அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண்மக்கள் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். கு. இரவீந்திரனின் மகள்கள் இருவரும் அயல்நாட்டில் பணியாற்றுகின்றனர். இவருக்கு இரண்டு பேரன்கள், ஒரு பேத்தி மற்றும் ஒரு கொள்ளுப் பேரன் உள்ளனர். 

கு. இரவீந்திரனின் பொதுப்பணிகள்: 

கு. இரவீந்திரன் அரசு பணியில் இருந்த காலத்தில் திருவனந்தபுரத்தின் சமூகப் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டவர். இருப்பினும், அலுவலகப் பணிச்சுமை காரணமாகச் சமூகப் பணிகளுக்கு இவரால் குறைந்த அளவு நேரத்தை மட்டும் ஒதுக்க முடிந்தது. 

இளம் வயது முதல் இவருக்குத் திருவனந்தபுரம் சைவப் பிரகாச சபையுடன் நல்ல தொடர்பு இருந்தது; ஏனெனில் இவரது தந்தையார் அச்சபையின் செயலாளராகத் தீவிரமாகச் செயல்பட்டவர். 

கு. இரவீந்திரன் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, தமது நேரத்தைச் சபையின் செயல்பாடுகளுக்கு அதிகமாக  வழங்கியவர். இவர் நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர்ப் பொருளாளராகப் பொறுப்பேற்றார். சைவப் பிரகாச சபையின் துணைத் தலைவராகவும் ஆனவர். 2007-ஆம் ஆண்டில் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024-ஆம் ஆண்டு வரை தலைவராகப் பணியாற்றியவர்.  

சபையின் தலைவராக  கு. இரவீந்திரன் பதவி வகித்த 17 ஆண்டுகாலத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து சபையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் முதன்மையானவை ஆகும். கு.இரவீந்திரன் அவர்களின் சைவசபை ஈடுபாட்டையும், ஆங்கிலப் புலமையையும் இந்நாளில் சபையின் செயலராகப் பணியாற்றும் சைவத்திரு நா. தா. சு. திருநாவுக்கரசு அவர்கள் நினைவுகூர்ந்தவற்றிலிருந்து சில செய்திகளைப் பகிர்ந்துகொள்கின்றேன். 

கு.இரவீந்திரன் அவர்கள் சைவப் பிரகாச சபைக்கு ஆற்றிய பணிகள்: 

            1. சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபொழுது அதற்கு எதிராகக் கேரள அரசிடமிருந்து உரிய இழப்பீட்டைப் பெறுவதற்குச் சபையின் செயலாளர் திரு. எம். எஸ். பத்மநாபன் அவர்களுடன் இணைந்து, அயராது பாடுபட்டவர்.   

 2. வருமான வரித்துறையிடமிருந்து வரித் திரும்பப் பெறுதல் (IT Refund) தொகையைப் பெற இவர் கடுமையாக உழைத்தவர். அவ்வகையில் ரூ. 4. 23 இலட்சம் தொகையைப் பெறுவதற்காக, 234 பக்கங்கள் கொண்ட கோப்பினை  மீண்டும் ஆயத்தம் செய்து, துறை அலுவலகத்திற்கு இருமுறை நேரில் சென்று வழங்கிச் சைவசபைக்குரிய தொகை திரும்பக் கிடைக்க உழைத்தவர். 

            3. கில்லிப்பாலம் (Killippalam) பகுதியில் உள்ள சபையின் இடத்தில் ஒரு மண்டபத்தைக் கட்ட சபை விரும்பியது. அப்பகுதி குடியிருப்பு மண்டலமாக (Residential Zone) இருந்ததால் சபையின் விண்ணப்பங்கள் அரசால் ஏற்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்பின் (LSG) கட்டுமான விதிகளை நன்கு ஆராய்ந்த இவர், கில்லிப்பாலத்தில் 1500 சதுர அடி பரப்பளவில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான அனுமதியை வெற்றிகரமாகப் பெற்றார். இணைச் செயலாளர் திரு. சங்கரன் அவர்களின் அயராத உழைப்பால் இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு இப்பொழுது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

            4. 'நிகுஞ்சம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' (Nikunjam Constructions) நிறுவனத்தின் கட்டுமானத் திட்டத்தைத் திறம்படத் தடுத்ததோடு, அந்நிறுவனம் மற்றும் 'போதீஸ்' (Pothys) ஆகியவற்றுடன் முத்தரப்பு ஒப்பந்தம் செய்து, அந்தச் சவாலான சூழலை ஒரு வாய்ப்பாக மாற்றினார். தனது பேச்சுவார்த்தைத்  திறமையால் சபைக்காகக் கணிசமான தொகையை ஈட்டித் தந்தார். ரூ.15,000 கடன் பெற்றிருந்த நிலையில் இருந்த சபை, பின்னர் ரூ.15,00,000 நிதி இருப்பினைக் கொண்ட சபையாக உயர்ந்தது. 

            5. 2013-ஆம் ஆண்டில், சந்திரசேகரன் நாயர் எழுதித் தருமபுர ஆதீனத்தால் வெளியிடப்பட்ட 'திருவாசகம்' மலையாள மொழிபெயர்ப்பு நூலை வெளியிடும் விழாவைச் சபை ஏற்பாடு செய்தது. இவ்விழா 'லெவி ஹால்' (Levy Hall) அரங்கில் நடைபெற்றது; இதில் திருவிதாங்கூர் மன்னர் உத்ராடம் திருநாள் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஓய்வுபெற்ற இரு துணைவேந்தர்கள், திருப்பனந்தாள்  மற்றும் கௌமார மடத்தைச் சேர்ந்த இரு மூத்த துறவிகள் மற்றும் சிறந்த கல்வியாளர்கள் ஆகியோர் மேடையை அணிசெய்தனர். 

 6. 'கேன் ஃபின் ஹோம்ஸ்' (Can Fin Homes) நிறுவனம் எம். ஜி. சாலைக் கட்டிடத்தில் தாங்கள் வைத்திருந்த 800 சதுர அடி இடத்தை ஒப்படைத்தது; அந்த இடம் பின்னர் 'டைட்டன்' (Titan) நிறுவனத்திற்கு அதிக வாடகைக்கு விடப்பட்டது. 

7. சபையின் நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை, அவற்றை நவீனமயமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் இவரே. துணைத் தலைவர் டாக்டர் குற்றாலம் பிள்ளையின் முழு ஆதரவுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பரிசுத் தொகையை உயர்த்துவதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். 

8. 2016-ஆம் ஆண்டில், கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாகப் பெண்களுக்கான 'ஸ்லோக பாராயணப் போட்டி' அறிமுகப்படுத்தப்பட்டது. 

9. கு. இரவீந்திரன் அவர்கள் சபையில் பொறுப்பு வகித்த காலத்தில் 2016-ஆம் ஆண்டில் 'மார்கழி விழா' என்ற 30 நாள் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. மார்கழி மாதத்தின் 30 நாட்களிலும் (டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரை), சமுதாயக் கூடத்தில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை முற்றோதல், அதனைத் தொடர்ந்து பூசை மற்றும் திருவமுது வழங்கல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன. 

கு.  இரவீந்திரன் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து பல்வேறு மொழிப்பணிகளையும் ஆற்றியவர்.  'பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி' (International School of Dravidian Linguistics) மற்றும் 'இந்தியத் திராவிட மொழியியல் சங்கம்' (Dravidian Linguistic Association of India) ஆகியவற்றின் பொதுக் குழுவில் துணைத் தலைவராகவும் (Correspondent) பணியாற்றியவர். 

மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள 'உத்ராடம் திருநாள் கலாச்சார நிறுவனத்தின்' (Uthradam Tirunal Institute of Culture) பொருளாளராகவும் பணியாற்றியவர். 

தமுது 71-வது வயதில், 'பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி'யால் வெளியிடப்பட்ட 'வஞ்சிக்காண்டம் - (Vanchikandam - A Shrewd Heritage: An Early History of Kerala) என்ற நூலை இவர் எழுதினார். இதுவே இவர் எழுதிய முதல் நூலாகும். 

கு.இரவீந்திரனின் நூல் பணிகள்: 

கு.இரவீந்திரன் 35 ஆண்டுகள் கணக்காளர் மற்றும் தணிக்கையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு தொடர்ந்த படிப்பு, நவீன தொழில்நுட்பம் சார்ந்த அறிவைப் புதுப்பித்தல் போன்றவற்றில் செலவிட்ட அயராத உழைப்பின் மூலம், வரலாறு, சைவ சித்தாந்தம், மொழி மற்றும் பண்பாடு சார்ந்த செய்திகளை எழுதும் எழுத்தாளராகத் தொண்டாற்றினார். 

1.   வஞ்சிக் காண்டம் (Vanchikandam - A Shrewd Heritage: An Early History of Kerala)  என்னும் நூல் பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி வழியாக 2008 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்த நூல் இவர் எழுதிய முதல் நூலாகும். 

2.   இரவீந்திரன் அவர்கள், 'உத்ராடம் திருநாள் கலாச்சார நிறுவனம்' (Uthradam Thirunal Institute of Culture) வெளியிட்ட 'Malayalam as a Classical language' (செம்மொழியாக மலையாளம்) என்ற நூலை முனைவர் டி. பி. சங்கரன் குட்டி நாயர் அவர்களுடன் இணைந்து எழுதியுள்ளார். 

3.   'சைவப் பிரகாச சபை' வெளியிட்ட 'Saiva Siddhantha - A Tamil Path to Salvation' (சைவ சித்தாந்தம்) 

4.   'Kavery - Vaigai - Periyar River Valleys - A peep into Ancient History'  (காவிரி - வைகை - பெரியார் ஆற்றுப் படுகைகள் - பண்டைய வரலாற்றின் ஒரு பார்வை) 

5.   Believe It Or Not My Observations on Curius Happenings In the History of India, 2025 (சைவப் பிரகாச சபை வெளியீடு) 








திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில், பூச்செடிகள் நிறைந்த தங்கள் இல்லத்தில் மனைவி திருமதி மீனாட்சியுடன் கு. இரவீந்திரன் அமைதி வாழ்க்கை வாழ்ந்தவர். பூச்செடிகளை வளர்ப்பது இவர்களின் விருப்பத்திற்குரிய செயலாகவும் ஆர்வமாகவும் இருந்தது. கு. இரவீந்திரன் அவர்களின் சமயப் பணியையும் எழுத்துப்பணியையும் பாராட்டித் திருவனந்தபுரம் சைவப் பிரகாச சபை இவருக்கு 24. 08. 2024 இல் சபை நிறுவுநர் நாள் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

கு. இரவீந்திரன் அவர்கள் 02.11.2024 இல் இயற்கை எய்தினார். 

*** நன்றி: 

சைவத்திரு நா. தா. சு. திருநாவுக்கரசு, செயலர், சைவப் பிரகாச சபை, திருவனந்தபுரம்.