நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 24 மார்ச், 2026

பாடிப் பழகுவோம் – தமிழிசைப் பயிலரங்கம்

 

நிறுவன இயக்குநர் முனைவர் சசிகாந்த தாஸ் அவர்கள், முனைவர் தி. பாலச்சந்தர் ஓதுவார் அவர்களைச் சிறப்பித்தல். அருகில் முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், முனைவர் கா. இராசமாணிக்கம், முனைவர் மு.இளங்கோவன்
 

புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் அமைந்துள்ள காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள தமிழ்த்துறையின் சார்பில் 18.03.2026 – 19.03.2026 ஆகிய இரண்டு நாள்களும் பாடிப் பழகுவோம்தமிழிசைப் பயிலரங்கம் நடைபெற்றது. 

நிறுவன இயக்குநர் பேராசிரியர் சசிகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. இளங்கோவன் அனைவரையும் வரவேற்று, தமிழிசைப் பயிலரங்கத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். சிலப்பதிகாரப் பதிகப் பகுதிக்கு அடியார்க்குநல்லார் வரைந்துள்ள உரைப்பகுதியில் பண்டைத் தமிழிசையின் இலக்கணப் பகுதிகள் விளக்கப்பட்டுள்ளதைத் தம் நோக்கவுரையில் நினைவுகூர்ந்தார். இப்பதிகவுரையைக் கற்றுத் தேர்ந்து, அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் தம் இசையாய்வை மேற்கொண்டதை அரகில் நினைவுகூர்ந்தார். 


முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் உரை

 இசையறிஞர் அரிமளம் சு. பத்மநாபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழிசை வரலாற்றினையும், சிறப்பினையும் எடுத்துரைத்து அரியதொரு இசைப் பேருரை வழங்கினார். இவர் உரையில் தொல்காப்பியம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், பல்சமயப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படும் இசைப்பகுதிகளைச் சான்றுகளுடன் விளக்கினார். தமிழிசை மூவர் அளித்துள்ள தமிழிசைப் பங்களிப்புகளையும் எடுத்துரைத்துப் பேசினார். தொடக்க விழாவின் நிறைவில் முனைவர் மா. சுஜாதா நன்றியுரை வழங்கினார்.



பாடிப் பழகுவோம் – தமிழிசைப் பயிலரங்கின் முதல் சிறப்பு அமர்வில் கலைமாமணி கா. இராசமாணிக்கம் குழுவினர்  பாரதியார், பாரதிதாசன், புதுவைச் சிவம், வாணிதாசன், பெருஞ்சித்திரனார், தமிழ் ஒளி, தங்கப்பா பாடல்களையும் பல்சமயப் பாடல்களையும் பாடி மாணவர்களுக்கு இசைத்தமிழின் சிறப்பினைப் புரியவைத்தனர். வயலின் கலைஞர் சீனிவாசன் அவர்களும், நாமுழவுக் கலைஞர் அழகு. இராமசாமி அவர்களும், தண்ணுமைக் கலைஞர் பரத் அவர்களும் மிகச் சிறந்த இணையிசையை வழங்கினர்.

 

முனைவர் தி.பாலச்சந்தர் ஓதுவார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தேவாரப் பேராசிரியர் குமாரவயலூர் தி. பாலச்சந்தர் ஓதுவார் திருமுறைகளில் காணப்படும் இசைச்சிறப்புகளைப் பண்முறையில் பாடி விளக்கினார். திருமுறைகளின் சிறப்புகளையும், அடியார்களின் இசைப்பணிகளையும் சமயப் பணிகளையும் மாணவர்களுக்கு எளிமையாக அறிமுகம் செய்துவைத்தார். பிற்பகல் அமர்வில் அரிமளம் சு. பத்மநாபன் அவர்கள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இசைப்பகுதிகளைப் பாடி, விளக்கி உரையாற்றினார். மங்கல வாழ்த்து, கானல்வரி, கந்துக வரிப் பாடல்களைப் பாடி விளக்கியமை அரங்கினருக்கு இசைத்தமிழில் ஈடுபாட்டினை வரச் செய்ததது.

 

முனைவர் சிவகௌரி அவர்களின் உரை

இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்வில் முனைவர் சிவகௌரி கிரிஷ்குமார் அவர்கள் முதல் அமர்வில் சங்கப் பாடல்கள், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியும் விளக்கியும் தம் இசைப் பேருரையைச் சிறப்பாக அமைத்தார்கள்.

 

ப.தி. சேஷாத்ரி உரை

சென்னையச் சேர்ந்த திரு. ப. தி. சேஷாத்ரி அவர்கள் ஆழ்வார் பாசுரங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தும் அதில் பொதிந்திருக்கும் இசைப் பெருமைகளைப் பண்மரபில் பாடிக் காட்டியும் மாணவர்கள் உள்ளத்தில் பாசுரத் தமிழைப் பதியவைத்தார்.


பறையிசைக் கலைஞர் பிரசாந்த் குழுவினர்

பறையிசைக் கலைஞர் பிரசாந்த் அவர்கள் தம் குழுவினருடன் பறையிசையை முழக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

முனைவர் சித்தன் செயமூர்த்தி உரை

முனைவர் சித்தன் செயமூர்த்தி அவர்கள் மண்ணிசை மாண்பினை எடுத்துரைத்து மக்கள் வாழ்வில் உணர்வு ததும்பும் பாடல்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பாடிக்காட்டி விளக்கினார். செயமூர்த்தி அவர்கள் பனை மரம் குறித்த செயபாஸ்கரன் எழுதிய பாடலையும் பெருஞ்சித்திரனார் பாடல்களையும், அப்பா, அம்மா குறித்துத் தற்காலக் கவிஞர்கள் எழுதியுள்ள பாடல்களையும் அரங்கில் பாட, அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர். சில திரைப்படப் பாடல்களையும் பாடி, மாணவர்கள் உள்ளத்தில் செயமூர்த்தி இடம்பிடித்தார்.

 

முனைவர் இரகுநாத் மனே உரை

முனைவர் சசிகாந்த தாஸ் அவர்கள் சான்றிதழ் வழங்குதல். அருகில் முனைவர் சோ. சீனிவாசன், முனைவர் இரகுநாத் மனே.

பிரான்சிலிருந்து வருகைபுரிந்த செவாலியே, முனைவர் இரகுநாத் மனே இசை, பரதக் கலை மாண்புகள் குறித்த சிறப்புரையை வழங்கினார். நிறைவு விழாவில் நிறுவன இயக்குநர் முனைவர் சசிகாந்த தாஸ், அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முன்னை முதல்வர் முனைவர் சோ. சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு, பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டிப் பேசினர். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், புதுவைத் தமிழறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

 


செவ்வாய், 17 மார்ச், 2026

கலைமாமணி முனைவர் கா. இராசமாணிக்கம்

 

முனைவர் கா. இராசமாணிக்கம் 

[முனைவர் கா. இராசமாணிக்கம் புதுச்சேரியில் வாழ்ந்துவரும் இசை, நாட்டிய அறிஞர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக வாய்ப்பாட்டினைப் பயின்றவர். இளங்கலை – நாட்டியம் பயின்றவர். நாட்டியத்திற்கான தமிழ் உருப்படிகளில் இசை அமைதி என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கியங்களை நாட்டிய வடிவில் வழங்கிப் புகழ்பெற்றவர். பல்லாயிரம் மாணவர்களுக்கு இசை, நாட்டியம் பயிற்றுவித்து வருபவர்.] 

கா. இராசமாணிக்கம் அவர்கள் 19. 07. 1963 இல் புதுச்சேரியில் உளைவாய்க்கால் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் காத்தவராயன் – பச்சையம்மாள் என்பனவாகும். வில்லியனூர் விவேகானந்தா பள்ளியில் இளமைக் கல்வியை நிறைவு செய்தபின்னர். முத்தரையர்பாளையம் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பினைப் பயின்றவர். 

முனைவர் கா. இராசமாணிக்கம் அவர்கள் இசைத்துறையிலும் நாட்டியத்துறையிலும் பேரறிவுபெற்ற பெருந்தகையாளர். இவரும் இவரின் குடும்பத்தாரும் இசைத்துறைக்கும் நாட்டியத்துறைக்கும் ஆற்றிவரும் பங்கு சிறப்பிற்குரியனவாகும். முனைவர் கா. இராசமாணிக்கம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை மாமணி என்னும் பட்ட வகுப்பில் நான்கு ஆண்டுகள் பயின்று வாய்ப்பாட்டில் புலமைபெற்றவர். கலைக்காவிரி இசைக்கல்லூரியில் பயின்று நாட்டியத்தில் இளங்கலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நாட்டியத்திற்கான தமிழ் உருப்படிகளில் இசை அமைதி என்னும் பொருளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக மேடைகளில் பாடிவரும் இவர், தஞ்சாவூர் கே. பி. கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் நாட்டியம் பயின்ற சீடர் ஆவார். 

1992 ஆம் ஆண்டு முதல் சங்கீத சலங்கை நாட்டியாலயா – கலையருவி என்னும் இசை நாட்டியப் பள்ளியை நடத்திப் பல்லாயிரம் மாணவர்களுக்கு, இசை நாட்டியத்தைப் பயிற்றுவித்து வருபவர். ஆதித்யா வித்யாசரமம் பள்ளியில் கடந்த இருபது ஆண்டுகளாக இசைத்துறை இயக்குநராக இருந்து பல மாணவர்களுக்கு இசையைப் பயிற்றுவித்து வருபவர். மாணவர்கள் நாட்டியக்கலையையும்  இவரிடம் பயின்று வருகின்றனர். 

கா. இராசமாணிக்கம் பாடிய ஒலிவட்டுகள் 

  1. இது நல்ல தருணம்
  2. மணல்மேட்டு மழலைகள்
  3. நாட்டியப் பாடல்கள்
  4. பாரதியார் பாரதிதாசன் பாடல்கள் 

நாட்டியப்பணி 

  1. அருங்கலைச்செல்வி ஆயி
  2. வளம் காண வாருங்கள்
  3. நிலமகள் நலம் காப்பாள்
  4. இராமாயணம்(சீதா கல்யாணம்)
  5. வீரத்தாய் (பாரதிதாசன்)
  6. மகுடத்தின் மணிகள்
  7. ஒரு காற்சிலம்பு நியாயம் கேட்கிறது.
  8. பாரதி போற்றுதும்
  9. புரட்சிக்கவி
  10. கொடி முல்லை(வாணிதாசன்) 

ஆவணப்படங்களில் பாடியமை 

  1. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்
  2. விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் 

அயல்நாட்டுப் பயணம் 

பிரான்சு, செர்மனி, சுவிசர்லாந்து, டென்மார்க்கு, மலேசியா, ரியூனியன், கம்போடியா முதலான நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். 

சங்கீத நாடக அகாதெமி, தென்னகப் பண்பாட்டு மையம் முதலிய நிறுவனங்களில் உறுப்பினராக இருந்து கலைத்தொண்டு செய்துள்ளார். 

இல்வாழ்க்கை 

கா. இராசமாணிக்கம் அவர்கள் இராஜேஸ்வரி அவர்களை 1989 இல் திருமணம் செய்துகொண்டவர். இவரும் மிகச்சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு இராஜ்குமார், இரஞ்சனி என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். அனைவரும் இசைக்கலையை முறைப்படி பயின்று, பரப்பி வருகின்றனர். இக் கலைக்குடும்பம் தமிழ்போல் தழைத்து இனிது புகழ்பெறுக.