நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 7 ஜூன், 2026

“தொல்காப்பியச் செம்மல்” புலவர் ஆ. காளியப்பன்

 

 புலவர் ஆ. காளியப்பன் 

 [தொல்காப்பியச் செம்மல் ஆ. காளியப்பன் கோவை மாவட்டம், பேரூரை அடுத்த பூலுவப்பட்டி ஊரினர். பேருந்து நடத்துநர்; அஞ்சல் அதிகாரி; தமிழாசிரியராகவும், துணைத் தலைமையாசிரியராகவும் பணியாற்றியவர். ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பன்னூலாசிரியர். பேரூர் தவத்திரு மருதாசல அடிகளார், நா. க. நிதி ஆகியோரின் உதவியுடன் தொல்காப்பியருக்குச் சிலை நிறுவியவர். தொல்காப்பியக் கூட்டங்களை நடத்தித், தொல்காப்பியப் பரவலுக்கு வழிகண்டவர்]. 

 தொல்காப்பியப் பணியிலும் தமிழ்ப் பணியிலும் தம் வாழ்க்கையை ஒப்படைத்துக்கொண்ட புலவர் ஆ. காளியப்பனார் கோயம்புத்தூர் மாவட்டம், பேரூருக்கு அருகில் உள்ள பூலுவப்பட்டியில் 13.05.1954 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் ஆறுக்குட்டி – முத்தம்மாள் என்பனவாகும். தொல்காப்பியர் தமிழ்ச் சங்கமம் என்னும் அமைப்பை நிறுவியவர். தொல்காப்பியருக்குச் சிலை எடுப்பித்த முயற்சியாலும், தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் எழுதிய வகையிலும், தொல்காப்பியம் சார்ந்த மாதக் கூட்டங்கள், ஆண்டு விழாக்களை நடத்திவரும் வகையிலும் இவர்தம் தொல்காப்பியப் பணி ஈடு இணையற்றவையாகும். 

இளமைக் கல்வி: 

 ஆ.காளியப்பனார் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பூலுவப்பட்டியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்றவர். ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை ஆலாந்துறை அரசு உயர்நிலைப்பள்ளியில்(1972) பயின்றவர். ஆலாந்துறைப் பள்ளித் தமிழாசான்  தமிழவேள்” ந. இராமசாமி இவர்தம் தமிழுணர்வுக்கும் கல்விக்கும் அடிப்படை அமைத்தவர் ஆவார். அருந்தமிழை ஊட்டியது பேரூர்   சாந்தலிங்கர் தமிழ்க் கல்லூரியாகும். கல்லூரி நிறுவுநர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் இவர்தம் குடும்ப நிலையறிந்து, கல்லூரியில் தங்கிப் பயில்வதற்குரிய ஆதரவினை நல்கினார். கல்லூரியில் நல்ல மதிப்பெண் பெற்ற காளியப்பனார் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதர் தேர்வு எழுதி, வெற்றிபெற்றவர். 

இல்வாழ்க்கை: 

 ஆ. காளியப்பனாரின் துணைவியார் பெயர் அம்சவேணி என்பதாகும். இவர்களின் திருமணம்  01.09.1982 இல் நடைபெற்றது. இவர்களுக்கு இந்துமதி, உமாபதி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளை தொடங்கப்பட்டபொழுது அதன்  செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டவர். வேளாண்மை உழைப்புச் செய்யும் தொழிலாளர்களுடன் இணைந்து சங்கம் உருவாக்கி, அவர்களுக்கு எழுத்தறிவை ஊட்டும் பணியில் ஈடுபட்டவர்.  மே தினம் கொண்டாடி, செங்கொடி ஏற்றியவர். அதனால் பண்ணை முதலாளிகளால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு, சிறைசென்றவர். பேருந்தில் பயணச்சீட்டு ஆய்வாளராகப் பணிசெய்தவர். அப்போது   பள்ளி, கல்லூரி மாணாக்கருக்குப் பயணச்சலுகை அளித்து, அவர்களுக்கு உதவியவர். அஞ்சலகக் கிளை அதிகாரி பணி ஏற்றபொழுது  ஊரில் அனைத்துக் குடும்பங்களையும் அஞ்சலகச் சிறுசேமிப்புத் திட்டத்தில் இணைத்து மக்களின் சேமிப்புப் பழக்கத்துக்கு வழிசெய்தவர்.  பணியோய்வுக்குப் பிறகு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து, அதன் மூலம் 6 ஆசிரியர்களும் 4 கிராம நிர்வாக அதிகாரிகளும் பணிபெற்றுள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நெறியாளராகச்  செயல்படுபவர். 

 ஒடிசாப் புயல், கொரானா பெருந்தொற்றுத் தாக்கம்,  நெல்லை வெள்ளப் பெருக்கு, வயநாடு நிலச்சரிவு என இயற்கைச்சீற்றங்களின்பொழுது  முதல் அமைச்சர்  நிவாரண நிதிக்கு  நிதி வழங்கித் தம் கருணை உள்ளத்தை வெளிப்படுத்தியவர். பேரூர் கல்லூரிக்கு வளமான வகுப்பறை   அமைக்க உரூ 10, 000    வழங்கியவர். 

 காந்தி கலா நிலையம் பள்ளிக்கு ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவ உரூ 50,0000 வைப்பு நிதி  வைத்துள்ளவர்.  தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் கட்ட  உரூ. 10000,  அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவைக்கு உரூ 10,000 தந்தவர்.  தாம் பயின்ற  ஆரம்பப் பள்ளிக்கு உருவா 17000 மதிப்புடைய அச்சுப்பொறி வாங்கிக் கொடுத்தவர்.

தமிழ்ப்பணி: 

 ஆ.காளியப்பனார் பெரிச்சிபாளையம் அரசு உதவிபெறும் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தவர்.   அதனை அடுத்து உடுமலை, கரட்டூர் காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றவர். பின்னர் முதுகலைத் தமிழாசிரியர், துணைத் தலைமையாசிரியர் பொறுப்புகளையும் அப்பள்ளி நிர்வாகம் இவருக்கு வழங்கியது. 

  120 -இற்கும் மேற்பட்ட கட்டுரைகள்,  பல நூல்களை எழுதியவர். கடந்த 26-04-2021 சித்திரை முழுநிலவு அன்று இவர் இயற்றிய தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் நூல் பேரூர்,  தவத்திரு சாந்தலிங்கர் திருமடத்தில் வெளியிடப்பட்டது அந்நூல் பாரதிதாசன் பல்கலைக்கழக  உறுப்புக் கல்லூரியில் தமிழ் முதுகலை மாணாக்கர்களுக்குப்  பாடமாக வைக்கப்பட்டுள்ளது

 அமெரிக்காவில் வாழும் முனைவர் நா. க. நிதி, புலவர் ஆ. காளியப்பனார் இணைந்து பேருர் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்களின் பேராதரவில், உலகிலேயே முதன்முதலாக ஐம்பொன்னாலாகிய 270 கிலோ எடையுள்ள 6 இலட்சம் மதிப்புள்ள தொல்காப்பியர் சிலையைப் பேரூர் தமிழ்க்கல்லூரியில் திறப்பதற்கு முன்னோடியாக உழைத்தவர். சிலைத்திறப்பின் பொழுது தொல்காப்பியத்தை முழுமையாக மனனம் செய்த தேனிச் சிறுமிகளுக்கு 42 ஆயிரம் உரூபாய் வழங்கிச் சிறப்பித்தவர். 

தொல்காப்பியர் படிமம்


 செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரன் அவர்களைக் கொண்டு 10 நாட்கள்  தொல்காப்பியம் பற்றிப் பேசவைத்து, அனைவருக்கும் தொல்காப்பிய அறிமுகம் ஆவதற்கு வழிசெய்தவர்.   இரா. இளங்குமரனாருக்குப் பணமுடிப்பும் வழிச்செலவும் வழங்கி மகிழ்ந்தவர்.  அதுபோல் தஞ்சை முனவைர் இரா. கலியபெருமாள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னை ஆய்வறிஞர்  முனைவர் ப. மருதநாயகம்,  முனைவர்  இ. சுந்தரமூர்த்தி, புதுச்சேரி முனைவர் ப. பத்மநாபன்  ஆகிய தமிழ்ச் சான்றோர்களை அழைத்து வந்து  தம் அமைப்பின் சார்பில் பேச வைத்தவர்

  பேரூர் ஆதீனம் அருள் ஆணைப்படி, ஆ. காளியப்பனார்   தொல்காப்பியர் தமிழ்ச் சங்கமம்  என்னும் அமைப்பினை 05-09-2017 இல் தொடங்கியவர்.  அரசுப் பதிவுடன் (110/2018) இவ்வமைப்பு இயங்கி வருகிறது.     இவ்வமைப்பின் சார்பில் தொடர்ந்து 106  திங்கள்களைக் கடந்து,   தொல்காப்பியச் சிறப்புரைகள்  இடையறாது நிகழ்ந்து வருகின்றன.   தொல்காப்பியப் பொழிவு கேட்க வருகின்றவர்களுக்கு நண்பகல் உணவும், கையுறையும் நூல்களும்  வழங்கப்படுகின்றன. அதன்மூலம் சிறு எழுத்தாளர்கள் நூல்கள் வெளியிடப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர். பல பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் பயிற்சிகள் வழங்கி, மேடையமைத்துத் தரும் பணியைக் காளியப்பனார் செய்துவருகின்றார். 

 ஒவ்வொரு ஆண்டும் தொல்காப்பியர் நாள், திருவள்ளுவர் நாள், தாய்மொழி வளர்ச்சி நாள் கொண்டாடுவதில் ஆர்வம்கொண்டு செயல்படுபவர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவினை வேற்று மாநிலத் தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து நடத்தி வருபவர்.  இதுவரை பத்தராவதி, புவனேசுவரம், புதுச்சேரி,  அந்தமான், கொச்சி. மணிப்பூர் மோரே முதலான ஊர்களில் பொங்கல் விழாக்கள் நடைபெற்றுள்ளன. 

தொல்காப்பியச் சங்கமம் மூலம் தொல்காப்பியத்தை ஆய்வு செய்யும் ஒரு மாணவனுக்கு ஆண்டுதோறும் உரூ. 10500 வழங்கும் வகையில் வைப்பகத்தில் உரூ 1,50,000 இவர் முயற்சியால் வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் புலவர் ஆ. காளியப்பனார் அவர்களுக்கு உள்ள ஈடுபாட்டால் தொல்காப்பியா, தொல்காப்பியன் எனப் பெயர் வைக்கும் குழந்தைகளுக்கு உரூ 5000 வழங்கவும் வழிசெய்துள்ளார்

 16-4-2022 அன்று தொல்காப்பியர் நாள் விழாவினைப் பேரூர் அடிகளார் முன்னின்று நடத்தி வைத்தார்.  அப்போது  அமெரிக்கா,  மலேசியா நாடுகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். கோவை,  நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் அரசு  விருது பெறும் விருதாளர்களை அழைத்துச் சிறப்புச்செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் பணியைத் தொய்வின்றிச் செய்து வருபவர். 

 ஆ. காளியப்பனாரின் வாழ்க்கை வரலாற்றினைப் பேரூர் தமிழ்க்கல்லூரிகொங்கு நாட்டு யாப்பறி புலவர்கள்” என்ற நூலாக வெளியிட்டுச் சிறப்பித்து உள்ளது. கொச்சி தமிழ் ஐக்கியச் சங்கமும், எர்ணாகுளம் தமிழ் இலக்கிய வட்டமும் இணைந்து கேரள உயர்நீமன்றத் தலைமை நீதியரசர் P.S கோபிநாதன் அவர்களின் கையால் இவருக்குத்  தொல்காப்பியச் செம்மல்” எனும் விருதினை வழங்கியுள்ளது. 

தலைநகர் (புது தில்லி) தமிழ் கலை இலக்கிய மாநாட்டில் இவருக்குத்தொல்காப்பியர் விருது”  வழங்கப்பட்டது. இவர்தம் புலமையை உணர்ந்த பேரூர் மற்றும் காமாட்சிபுரி ஆதீனங்களின் அதிபர்கள் இவரைத் தத்தம் ஆதீனப் புலவராக அமர்த்திப் பெருமைசேர்த்துள்ளனர். 

 உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தமிழுக்குத் தொண்டாற்றும் . காளியப்பனார் போன்ற தமிழ்த்தொண்டர்களால்தான் தமிழ் நிலைபெற்று வருகின்றது.

ஆ. காளியப்பனாரின் 
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ் முகப்பு அட்டை


சனி, 6 ஜூன், 2026

தென்காசிச் செலவு…

 

 

மருத்துவர் ச. முத்துராமன்

  [இக்குறிப்பில் இடம்பெறும் மருத்துவர் ச. முத்துராமன் தென்காசி ஊரினர். எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் துறை வல்லுநர். தமிழ்ப்பற்றும், கலையுணர்வும் நிரம்பியவர். கவிதை நூல்கள் இரண்டினை வெளியிட்டுள்ளவர். மருத்துவத்தைத் தமிழில் பயிற்றுவிக்க இயலும் என்னும் கொள்கையர். தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்க 59- ஆவது மாநாட்டினைத் திருக்குற்றாலத்தில் நடத்தி அனைவரின் பாராட்டினையும் பெற்றவர்].

 

  திருவனந்தபுரத்தில் ஆய்வுக்குரிய குறிப்புகளைத் திரட்டிக்கொண்டு, பணிகள் முடிந்ததும் தென்காசி, ஆழ்வார்குறிச்சி, சிவசைலம் செல்வது நோக்கமாக இருந்தது. தென்காசிக்கு மாலைப் பொழுதில் சென்றுசேர்ந்தால் அங்கு நடைபெறும் திருவள்ளுவர் கழகத்தின் நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, இரவு அங்கு ஓய்வெடுக்கலாம் என நினந்தேன். குற்றாலத்தில் பருவகாலம் தொடங்கி, ஐந்தருவியில் நீர்வீழ்ந்து கொண்டிருப்பதால் ஒரு குளியல்போடும் ஆர்வமும் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. அதற்குரிய வகையில் திருவனந்தபுரத்துப் பேராசிரியர் சக்குடி பொ. சீனிவாசனிடம் என் பயணத்திட்டத்தைச் சொன்னேன். திருவனந்தபுரம் - தென்காசி மலைவழிப் பாதையில் பேருந்துப் பயணம் சிறப்பாக இருக்கும் என்று அவரும் குறிப்பிட்டார். அதற்குரிய வகையில் கேரளப் போக்குவரவுக் கழகத்தின் பேருந்தில் முன்பதிவு செய்தேன். 

தென்காசியில் எங்குத் தங்குவது? 

 முன்னமே என் பயணத்திட்டத்தை அறிந்திருந்த தஞ்சை மருத்துவர் குலாம் மொகைதீன் ஐயா, தென்காசியில் தம் தம்பியொத்த மருத்துவர் ச. முத்துராமன் உள்ளதாகவும், தங்கள் வருகையை அவரிடம் சொல்லியுள்ளேன் எனவும் கூறியதுடன் மருத்துவர் ச. முத்துராமன் ஐயாவின் தொடர்பு எண்ணையும் எனக்கு அனுப்பியிருந்தார். ச. முத்துராமன் அவர்களுக்கு என் வருகை நோக்கமும், நாளும் பொழுதும் தெரிவித்தேன். என்னைத் தென்காசிப் பேருந்து நிலையத்தில் வரவேற்க மருத்துவரும் ஆர்வமாக உள்ளதைத் தெரிந்துகொண்டேன். 

 04. 06. 2026 பிற்பகல் 3.10 மணிக்குத் திருவனந்தபுரத்தில் பேருந்து புறப்பட்டது. திருவனந்தபுரம் தென்காசிக்குரிய தொலைவு 110 அயிரமாத்திரிதான். ஆயின் மலைப்பாதை என்பதால் தென்காசிக்குச் சென்றுசேர்வதற்கு நான்குமணி நேரம் ஆகும் எனத் தெரிந்துகொண்டேன். பேருந்துப் பயணம் மழையும் தூறலும் சாரலுமாகத் தொடங்கியது. குளிர்ச்சியும் பசுமையும் வழியெங்கும் அமைந்து, உள்ளத்தை உவப்பாக்கின. குறிஞ்சியும் முல்லையும் கைகோர்த்து நிற்கும் காட்சியும் அருவிகள் வீழ்வதும் ஆறுகள் நெளிந்தோடுவதும் காண்பதற்குக் கண்கோடி வேண்டும். நான்கு மணிநேரம் ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்து வெளிவந்த மனநிறைவு இந்தப் பயணத்தால் ஏற்பட்டது. புதுச்சேரியில் வெப்பக்காற்றில் வெந்துகொண்டிருந்தவனுக்குக் குளிர்காற்றுப் பெரும் மருந்தாக இருந்தது. நெடுமங்காடு, நன்னியோடு, பாலோடு, கொல்லையில், மடதர, சொழியாகோடு, கண்டஞ்சிர, குழத்துப்புழா, தென்மலை, ஆரியங்காவு, புளியறை, புதூர், செங்கோட்டை வழியில் பேருந்து சென்றது. மலையாளத்தில் ஒலிக்கப்பட்டுள்ள ஊர்ப்பெயர்களையெல்லாம் தமிழ்ப்படுத்திப் பார்த்தது என் தமிழ் உள்ளம். ஓடு என்பது ஓடையாகவும், குழத்துப்புழா என்பது குளத்துப்புழையாகவும் தெரிகின்றன. யாவும் பொருள்பொதிந்த ஊர்ப்பெயர்களாக உள்ளன. இருமொழி வல்லுநர்களும் மெய்ப்பொருள் கண்டு சொன்னால் உலகம் ஒப்பும். இது நிற்க.

 தென்காசிப் பேருந்து நிலையத்தில் கைச்சுமையுடன் இறங்கினேன். காற்றும் மழையும் கலந்து வீசின. மழைக்குத் தப்பி, ஓரமாக நின்று நோட்டமிட்டேன். வெள்ளைநிற மகிழுந்திலிருந்து பட்டுவேட்டிச், சட்டையைப் பளபளக்க அணிந்தவர், இறங்கிய வேகத்தில் கைப்பேசியில் அழைப்பதைக் கவனித்தேன். நம் மருத்துவர்தான் என உணர்ந்துகொண்டேன். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனோம். தென்காசித் திருவள்ளுவர் கழகம் நடத்தும் திருக்குறள் விழாவுக்குச் செல்வதென முதலில் முடிவுசெய்தோம். 

  ஒலிபெருக்கியில் வரும் குரலைக் கேட்டதும் சென்னை வள்ளுவர் குரல் குடும்பம் சி. இராசேந்திரன் ஐயா திருக்குறளின் சீர்மையைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அரங்கு நிறைந்து அமர்ந்திருந்த அறிஞர்கள் அவர் பொழிவில் மூழ்கித் திளைத்திருந்தனர். 

  முன்னமே மருத்துவர் ச. முத்துராமன் என் வருகையைத் திருவள்ளுவர் கழகத்துப் பொறுப்பாளர்களிடம் சொல்லியிருந்தார். எனவே திருவள்ளுவர் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் .ந. கனகசபாபதி, செயலாளர் இராம. தீர்த்தாரப்பன், துணைத்தலைவர்  க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் உள்ளிட்ட மூத்த அறிஞர்கள் திருவள்ளுவர் கழகத்தின் அலுவலகத்தில் கூடியிருந்தனர். என் வருகை நோக்கத்தை அவர்களிடம் சொன்னேன். 

 இலங்கை வண்ணார்பண்ணையைச் சார்ந்த தா. பொன்னம்பலம் பிள்ளை அவர்கள் திருவிதாங்கூர் அரண்மனையில் ஆணையராகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற பிறகு பாளையங்கோட்டைச் சைவ சபையின் தலைவராக இருந்தமை பற்றி எடுத்துரைத்தேன். தா. பொன்னம்பலம் பிள்ளை தென்காசியில் சைவ சபையின் நான்காம் மாநாட்டினை நடத்தியுள்ளமையைக் கூறி, இவர் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் உள்ள சிவசைலத்தில் வாழ்ந்து 1935 இல் இயற்கை எய்தினார் என்ற குறிப்புகளைச் சொல்லி மேலதிக விவரம் வேண்டினேன். நான் கூறிய விவரங்கள் யாவும் அவர்களுக்குப் புதுமையாகத் தெரிந்தன. வழக்கறிஞர் ந. கனகசபாபதி அவர்கள் திருவள்ளுவர் கழகம் 99 ஆண்டு வரலாற்றைக் கொண்டது எனவும் திருவள்ளுவர் கழகம் தொடங்கப்படுவதற்கு முன்னர் திருவள்ளுவர் சபையாக இருந்ததையும் அதற்கு முன்னர் சைவ சபையாக இருந்ததையும் தெரிவித்தார். அவ்வாறு சைவ சபையாக இருந்தபொழுதுதான் தா. பொன்னம்பலம் பிள்ளை 1915 இல், தென்காசியில் நான்காவது சைவ மகாசங்க மாநாட்டினை நடத்தியிருக்க வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன். மேலதிக விவரங்கள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, சிறிது நேரம் திருவள்ளுவர் கழக விழாவில் கலந்துகொண்டு, நிகழ்வுகளைச் செவிமடுத்தேன். இது நிற்க. 

 திருவள்ளுவர் கழகத்துப் பொறுப்பாளர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது மருத்துவர் ச. முத்துராமன் இரண்டு நூல்களை அன்பளிப்பாக எனக்கும் மற்றவர்களுக்கும் அளித்தார். இளக்கன பிளை (கிறுக்கல் தொகுப்பு), கொசுக்கடி என்பன அந்த நூல்களின் பெயர். மருத்தவர் அவ்வப்பொழுது தோன்றும் சிந்தனைகளைக் கவிதைக் குறிப்புகளாகப் புதுப்பா அமைப்பில் எழுதியுள்ளார்கள். மாணவப் பருவத்தில் இவர், 

”மலராத மொட்டுகள் மலரத் துடிக்க

மலர்ந்த பூக்கள் வாழத் துடிக்க

சமுதாயச் சக்கடை சாகடிக்கத் துடிக்கிறது” என்று எழுதியவர். 


“வெட்டிச் சாய்க்கும்முன் நீ யோசி

வெட்டப்படுவது நான் ஆயினும்

வீழப்போவது நீதான்டா”

--------------- --------------------- -------------------- 

“செத்திருந்தால் பிழைத்திருப்பேன்;

பிழைத்ததனால் செத்துக்கொண்டிருக்கிறேன்” 

------------------- -------------- ------------------------

“சபையே கலைந்தாலும்

தனியொருவனாக நின்று தமிழில் பேசியே தீருவேன்”

-------------- ------------------------- ------------------------

“வீணடித்த நேரத்தை

விலைகொடுத்தும் மீட்க முடியாதே” 

----------------- ---------------------- -----------------------------

“வெற்றி ஒரு முற்றுப்புள்ளி

தோல்வி ஒரு திறவுகோல்” 

-------------  ----------------------  --------------

“விதையில் விசத்தையும் விதைப்பது

விஞ்ஞான உலகின் விபரீதத் தொழில்நுட்பம்” 

-------------------   ------------------- -------------------------

“நெருப்புக்கு ஏன் வேண்டும் நெஞ்சிலே ஈரம்” 

-------------------- -------------------- -------------------------

“நிறவெறி கொண்ட இனவெறியை

அறநெறிகொண்டு நசுக்குவோம்” 

------------------- --------------------- ----------------------------

கவசம் களைந்த கர்ணன்

மறுகணமே மரணம் எய்தினான்;

தலைக்கவசம் தவிர்த்த பயணம் மறுநொடியே

தலையெழுத்தை மாற்றிவிடும்” 

என்னும் வரிகளை அவர் நூலில் படித்தபொழுது, மருத்துவர் ச. முத்துராமனின் கவிதை உள்ளத்தை நூலில் கண்டேன். மருத்துவருடன் உரையாடியபொழுது அவர்தம் தமிழ் உள்ளம் புலப்பட்டது. கலையுள்ளம் கண்முன் தெரிந்தது. மருத்துவர் தம் இல்லத்துள் 1330 திருக்குறளையும் மரத்தில் தச்சுக் கலைஞரைக் கொண்டு உளியால் செதுக்கச்செய்த பலகையைப் பதித்து வைத்துள்ளார். இது இவர்தம் தமிழ்ப்பற்றுக்கு ஒரு சான்று. 

மு.இளங்கோவன், ச. முத்துராமன்

மருத்துவர் ச. முத்துராமன் வாழ்வும் பணியும் 

 மருத்துவர் ச. முத்துராமன் தென்காசியில் 10. 09. 1971 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் த. இரா. சண்முகசுந்தரம், த. ஆதிலட்சுமி ஆவர். தொடக்கக் கல்வியை ஊட்டியில் அமைந்துள்ள பிரிக்ச் கான்வெண்டில் படித்தவர். பின்னர் தென்காசி ஏ. ஜி. பதின்மப் பள்ளி, அம்பாசமுத்திரம் ஏ. வி. ஆர். எம். வி. பள்ளி, நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். நெல்லை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப்படிப்பை நிறைவுசெய்தவர். கேரளாவின் அஞ்சல் தூய சோசப் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத்துறையில் மருத்துவராகப் பணியாற்றியவர். மதுரையில் அரசு இராசாசி மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் அறுவை சிகிச்சைத்துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர். தம் சொந்த ஊரான தென்காசியில் மருத்துவமனையைத் தொடங்கி, எலும்புமுறிவு மற்றும் முடநீக்கியல் துறையின் சிறப்பு வல்லுநராக இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து மருத்துவப்பணியாற்றி வருபவர். 

 நெல்லை, முடநீக்கியல் மருத்துவர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர். மருத்துவத்துறை சார்ந்த பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் வழங்கி, அனைவரின் பாராட்டையும் பெற்றவர். சுழற்சங்க உறுப்பினராக இருந்து சமுதாயத் தொண்டில் முன்னிற்பவர். தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்க 59- ஆவது மாநாட்டினைத் திருக்குற்றாலத்தில் நடத்தி அனைவரின் பாராட்டினையும் பெற்றவர். தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்கத்தின் ஆண்டுமலரின் பதிப்பாசிரியராகவும் கடமையாற்றியவர். பல்வேறு பொதுநல அமைப்புகளில் இணைந்து மருத்துவப் பங்களிப்பையும் தமிழ்ப் பங்களிப்பையும் நல்கிவரும் ச. முத்துராமன் அவர்களைப் போன்ற மருத்துவ மாமணிகள் தமிழகம் எங்கும் தழைக்க வேண்டும் என்பது எம் எதிர்பார்ப்பு.


திருக்குறள் எழுத்துச் சிற்பத்தின் பின்புலத்தில் மு.இ, மருத்துவர் ச.மு.ரா