நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 16 பிப்ரவரி, 2026

தொல்காப்பியம் – திருக்குறள் ஓர் ஒப்பாய்வு நூலுக்கான அணிந்துரை - புலவர் பெ. கறுப்பண்ணனின் அறிவுத் தெளிவை விளக்கும் அரிய நூல்

 


தொல்காப்பியம்திருக்குறள் ஓர் ஒப்பாய்வு என்னும் பெயரில் பெரும்புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் இயற்றியுள்ள அரும்பெரும் ஆராய்ச்சி நூலினைக் கண்ணுற்றுப் படிக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. இவ்வாய்ப்பை எனக்கு நல்கியவர் கரூரின் சீர்சால் செந்தமிழ்த்தொண்டரும் புலவரும் புரவலருமான அருணா பொன்னுசாமியார் ஆவார். அருணா பொன்னுசாமியார் அவர்கள் என் மாணவப்பருவத்திலிருந்து என் முயற்சியினை உற்றுநோக்கி நெறிப்படுத்தும் சான்றோர் ஆவார். பொன்னுசாமியாரின் புலமைத் தொடர்பால் எனக்கு அரும்பெரும் புதையலாகப் பெ. கறுப்பண்ணன் அவர்களின் நூல் என் பார்வைக்குக் கிட்டியது

புலவர் அருணா பொன்னுசாமியாருடன் இணைந்து அளப்பரும் தமிழ்ப்பணிகளை அன்றன்றும் ஆற்றிவரும் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்நூற்கடல் தி. வே. கோபாலையரின் அன்புக்குரிய மாணவராக அமர்ந்து, தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்; பன்னூலாசிரியர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் செயல் மறவராகவும் பொறுப்பாளராகவும் விளங்கியவர். தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாக விளங்கும் கருவூரில் தம் பணியோய்வுக்குப் பிறகு அமைதி வாழ்க்கை வாழ்ந்துவரும் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் தமிழ்த்தாய்க்கு அரிய அணிகலனாகத் தொல்காப்பியம்திருக்குறள் ஓர் ஒப்பாய்வு என்னும் பெயரில் இத் தண்டமிழ்ப் பனுவலைத் தந்துள்ளார்

தொல்காப்பியச் செய்திகள் திருக்குறளில் எவ்வாறு பதிவாகியுள்ளன என்பதை விளக்கும் அரிய ஆராய்ச்சி நூலாக இந்நூல் மிளிர்கின்றது. புலவர் பெ. கருப்பண்ணன் அவர்களின் தொல்காப்பிய அறிவும், திருக்குறள் புலமையும் சங்கப் பனுவல்களில் தோய்ந்த இவர்தம் அரும்புலமையும் இந்த நூலில் வெளிப்பட்டு நிற்கின்றன

தொல்காப்பியம் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் என்பதை நாம் அறிவோம். தமிழின் உயிராக விளங்கும் இந்த நூலினை மோலோட்டமாகக் கற்றவர்கள் இந்நூல் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூறும் நூல் என்று மட்டும் கூறிவிட்டு, ஒதுங்கிக்கொள்வார்கள். ஆயின் அதில் தோய்ந்தவர்கள்ஊடாடி ஒன்றாகக் கலந்தவர்கள் தொல்காப்பியரின் உள்ளத்தை அறிந்து நவில்வதுடன் அந்நூலில் பொதிந்துகிடக்கும் அரிய உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, நம் அறிவுப்பசிக்கும் சிந்தனைத் தூண்டலுக்கும் இரை போடுவார்கள்

                மாணிக்க நாயகர், சோமசுந்தர பாரதியார், தி.வே.கோபாலையர், அடிகளாசிரியர், கு. சுந்தரமூர்த்தியார், .சுப.மாணிக்கம், தமிழண்ணல், சிவலிங்கனார், . பாலசுந்தரனார், வீ..கா. சுந்தரம், இரா. இளங்குமரனார் உள்ளிட்ட அறிஞர்கள் அவ்வகையில் தொல்காப்பிய ஆராய்ச்சிக்குப் பெரும்பங்களிப்பு நல்கியுள்ளனர். அவ்வகையில் தொல்காப்பியத்தை ஊன்றிக் கற்ற புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் தொல்காப்பியச் செய்திகளைக் கொண்டு, நூல் படைத்துள்ள திருவள்ளுவரையும் சங்கப் புலவர்களையும் ஆழ்ந்து கற்று, நமக்கு ஒப்பற்ற அருந்தமிழ்ப் பனுவலாம் இந்த நூலை வழங்கியுள்ளமைக்குத் தமிழுலகம் இவருக்கு நன்றி தெரிவிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளது

தொல்காப்பியம்திருக்குறள் ஓர் ஒப்பாய்வு என்னும் பெயரில் அமையும் இந்த நூல்வள்ளுவப் பெருமகனாரின் வாழ்வியல் இலக்கிய நூலுக்குத் தொல்காப்பியனாரின் ஆழ்நிலை இலக்கண நூலே முதல் நூலாக இருந்துள்ளதுஎன்னும் கருதுகோளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது

தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளைப் பற்றிச் செய்யுளியலில் குறிப்பிடும்பொழுதுபயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஎன்று குறிப்பிடுவதை எடுத்துக்காட்டியும் பிற உரையாசிரியர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டியும் நூலினால் பயன் உருவாகும் தன்மையை இந்த நூலில் நம் புலவர் அவர்கள் விளக்கியுள்ளார். “பயன் என்பது சொல்லிய பொருளால் பிறிதொன்று பயப்பச் செய்தல்என்பது தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் அவர்களின் கருத்தாகும்

அவ்வகையில் தொல்காப்பியர் நால்வகையில் அமையும் பாக்களைக் கொண்டு மூவகைப் பொருளை (அறம்,பொருள்,இன்பம்) வெளிப்படுத்த இயலும் என்பதைத் தம் செய்யுளியலில்

அந்நிலை மருங்கி னறமுத லாகிய

மும்முதற் பொருட்கு முரிய வென்ப” (செய். 102) 

என்று உரைத்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு நம் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் இந்த நூலில் அரும்பெரும் கருத்துகளை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்

அறம் பொருள் இன்பம் வீடு என்பது பிற்கால வழக்கு எனவும் தொல்காப்பியர், காலத்தில் அறம் பொருள் இன்பம் என்னும் மூவகைப் பயனே மக்களிடம் இருந்தது எனவும் இதனை உளங்கொண்டே திருவள்ளுவப் பெருமான் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் வகுத்தனர் என்பதும் இந்த நூலின் வழியாக அறியப்படும் முதல் அறிவு விருந்தாகும். வடநூலார் குறிப்பிடும்தர்மார்த்த காம மோட்சம்என்பன பிற்கால வழக்கு என்று கூறித் தமிழ் மரபை அரணிட்டுக் காக்கும் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் அறிவுத்தெளிவை எண்ணி எண்ணி வியக்கின்றேன்

வீடுபேறு அடைய விரும்பும் துறவோர்களைப் பற்றித் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் குறிப்பிடுவதையும் இந்த நூலில் குறித்துள்ளார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் என்று செய்திகள் இடம்பெற்றுள்ளதை நினைவிற்கொண்டே அறத்துப்பாலில் (பாயிரவியலை நீக்கி) இல்வாழ்வை முதற்கண் வைத்து, அதன் பின்னர் பொருள்சார்ந்த செய்திகளை நவின்று, ஈற்றில் களவு, கற்பு வாழ்வை வள்ளுவர் அமைத்துள்ளார் என்பது புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் ஆய்வு எண்ணமாக உள்ளது

தொல்காப்பிய நூற்பாவடிகளும், தொல்காப்பியரின் கருத்துகளும் திருக்குறளில் எவ்வாறு பதிவாகியுள்ளன என்று சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டும் இந்த நூலாசிரியரின் ஒப்பீட்டுப் புலமை பாராட்டுதலுக்கு உரியது

புறத்திணையும் அகப்பொருளின் ஒரு கூறே என்று உணர்த்தவே புறப்பொருளை அகத்திணைக்கும் களவியலுக்கும் இடையில் வைத்துள்ளார்எனவும்பொருள் என்னும் சொல் பலபொருள் ஒரு சொல்லாகப் பல்வேறு இடங்களிலிலும் பயின்று வருகிறதுஎனவும் பெ. கறுப்பண்ணன் கண்டு காட்டும் உண்மைகள் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் ஆழமாக ஆராய விழைவார்க்கு நல்வழிகாட்டும் திசைகாட்டிகளாகும்

 திருக்குறளில் இடம்பெறும் 133 அதிகாரத் தலைப்புகளைக் குறிக்கும் சொற்கள் தொல்காப்பியத்தில் எவ்வாறு வடிவம் பெற்று நிற்கின்றன என்பதை நுட்பமாக எடுத்துக்காட்டும் புலவர் கறுப்பண்ணரின் செயல் இவர்தம் தொல்காப்பியப் புலமைக்குக் கட்டியம் கூறும்

 உரையாசிரியர்கள் திருக்குறளை எவ்வாறு பொருத்தமுடன் ஆண்டு, தொல்காப்பிய நூற்பாக்களை விளக்கியுள்ளனர் என்பதையும் புலவர் பெ. கறுப்பண்ணன் இந்த நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்

தொல்காப்பியத்துள் இடம்பெறும் தெய்வம், கடவுள், இறை, அமரர் முதலான சொற்களை எடுத்துக்காட்டித் திருவள்ளுவர் இறை என்று குறிப்பிடும் பொருத்தப்பாட்டையும் இந்த நூல் விளக்கியுள்ளது. அவ்வகையில் தொல்காப்பிய நூற்பாக்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ள புலவரின் ஆய்வுச் சிறப்பினையும் நுண்ணாய்வு நோக்கினையும் பாராட்டுதல் வேண்டும்

 கருத்துகள் சங்கப்பாடல்களில் பொருந்திப் போகும் இடங்களையும் புலவர் எடுத்துக்காட்டிப் பட்டியலிட்டுள்ளார். அவ்வகையில் அறத்துப்பால் செய்திகள், பொருட்பால் செய்திகள், இன்பத்துப்பால் செய்திகள் சங்கப் பனுவல்களில் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன என்பதைத் தனித்தனித் தலைப்புகளில் எடுத்துக்காட்டும் பாங்கினை அறியும் பொழுது புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு அளித்துள்ள பங்களிப்புத் தெளிவாகத் தெரிகின்றது

புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் தொல்காப்பியப் புலமையும் வள்ளுவப் புலமையும் உரையாசிரியர்களின் கருத்தறிந்த தன்மையும், சங்கநூற் புலமையும் இந்த நூலின் வழியாக ஒருசேரப் புலப்படுகின்றன

திருக்குறளுக்கு முன்னரே ஒருவரியில் தொகுப்புரை வரைந்த பெருமகனார் புலவர் பெ. கறுப்பண்ணர் அவர்கள் கொங்குநாட்டின் கண்ணர்குலத்தில் தோன்றித் தமிழ்த்தாயின் திருவடியில் இந்நூலாம் ஆய்வுமலர் ஒன்றைச் சூட்டியுள்ளமைக்கு இத்தமிழுலகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது

தொல்காப்பியம்திருக்குறள் என்னும்  இருநூல் கடலுள் மூழ்கி அறிவு முத்துகளைக் கண்டெடுத்து வழங்கியுள்ள புலவர் பெ. கறுப்பண்ணர் அவர்கள் காவிரி மணலின் எண்ணிலமையும் ஆண்டுகள் கவின்மிகு வாழ்வில் திளைக்க, எம் தமிழ்த்தாய் அருள்புரியட்டும். இந்நூல் ஆய்வறிஞர்களின் கைகளில் தவழட்டும். இந்நூலால் தமிழாய்வு உலகம் பயன்பெறட்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன்

பணிவுடன்

மு. இளங்கோவன்

புதுச்சேரி – 605008

26.12.2025


புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் பணிகளை அறிய இங்குச் செல்க.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

குறளேருழவர் மகன் நாலடியார்…

 


 [குறளேருழவர் நெல்லைப் பகுதியில் திருக்குறள் தொண்டுசெய்த அறிஞர். சிறுகதை, நாடக நூல்களை எழுதியவர். திருவள்ளுவர் அறக்கட்டளையை நிறுவியவர். திராவிட இயக்க உணர்வினர்; மக்கள் பணிக்காகவும், இந்தி எதிர்ப்புக்காகவும் சிறைசென்றவர். தமிழகத்து முதலமைச்சர் பலராலும் மதிக்கப்பட்டவர்] 

 தமிழ்த்தொண்டிலும் திருக்குறள் தொண்டிலும் நெல்லைப் பகுதியில் உழைத்துவரும் பெருமக்களைச் சந்திப்பது என்று முடிவுசெய்திருந்தேன். அதனடிப்படையில் நெல்லையில் வாழ்ந்துவரும் நல்லாசிரியர் வை. இராமசாமியார் அவர்களிடம் தக்கவர்களை அறிமுகப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொண்டேன். 81 அகவை கொண்ட முனைவர் வை. இராமசாமியாரும் நானும் திட்டமிட்டு 08.02.2026 காலை முதல் இரவு வரை நெல்லைப் பகுதியில் பலரைச் சந்தித்தோம். 

 பகல்பொழுதில் சத்தியம் தொலைக்காட்சியின் செய்தியாளர் திருவாளர் வனராஜ் சங்கர் அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம். இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் அழைப்பை நண்பர் நாகராசன் அவர்கள் விருப்பமுடன் தெரிவித்தார். மிகச் சிறப்பாக நடைபெற்ற அத்திருமணத்தில் விருந்துண்டு மகிழ்ந்தோம். பகலுணவுக்குப் பிறகு பேருந்தேறி, தங்கும் மனைக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். எங்கள் உரையாடலில் நெல்லைப் பகுதித் தமிழ்த்தொண்டர்கள் ஒவ்வொருவராக அவர்தம் பணிகளின் வழியாக மீண்டும் பிறப்பெடுத்தவண்ணம் இருந்தனர். 

 நெல்லைப் பகுதியில் மொழிப்பற்றுடனும் திருக்குறள் பற்றுடனும் வாழ்ந்த குறளேருழவர் அவர்களின் செம்மாந்த தமிழ்ப்பணிகளை வை. இராமசாமியார் எனக்கு எடுத்துரைத்தார். மேலும் குறளேருழவர் அவர்களின் மகன் நாலடியார் அவர்கள் நெல்லையில் வணிகத்தில் ஈடுபட்டிருப்பதையும் தமக்கும் அவருக்குமான நட்பையும் சொன்னார்கள். குறளேருழவர், நாலடியார் என்ற பெயர்களைக் கேட்டவுடன் விடுதிக்குச் செல்லும் விருப்பத்தைத் தவிர்த்து, நேரே குறளேருழவர் இல்லம் செல்வோம் என்று திட்டமிட்டு, அவர்தம் இல்லம் சென்றோம். எங்கள் வருகைக்காக நாலடியார் ஐயா அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். 

 ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். குறளேருழவர் அவர்களின் தமிழ்ப்பணியை நான் அறிய விரும்புவதாக வை. இராமசாமியார் தெரிவித்ததும் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ந்தனர். குறளேருழவரின் தமிழ்ப்பணிகளை அவர்கள் ஒவ்வொருவராகப் பகிர்ந்துகொண்டனர். 

குறளேருழவரின் தமிழ் வாழ்க்கை 

 தமிழ்த்தொண்டுகளால் நெல்லைப் பகுதியில் அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்றவர் குறளேருழவர் அவர்கள், திருநெல்வேலியில் அமைந்துள்ள பேட்டை என்னும் ஊரில்  03.06.1923 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் ஆவுடையப்பர், இசக்கியம்மாள் என்பனவாகும். குறளேருழவர் அவர்களின் இயற்பெயர் பாலகிருட்டினன் என்பதாகும். 

 குறளேருழவர் தொடக்கக் கல்வியைப் பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் பயின்றவர். பின்னர் நெல்லையில் உள்ள மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைப் பயின்றவர். பள்ளிப் படிப்பின்பொழுதே இவருக்குத் திருக்குறளிலும், கவிதை எழுதுவதிலும் ஆர்வம் இருந்தது. 

 குறளேருழவர் அவர்கள் திராவிட இயக்க உணர்வினர். இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுச் சிறைசென்றவர். திராவிட நாட்டுக் கொள்கைகளை விளக்கும் போராட்டங்களில் ஈடுபட்டும் சிறை சென்றவர். விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றவர். மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காகப் போராட்டங்களில் ஈடுபடுவதும் சிறைசெல்வதும் இவர்தம் அற்றைப் பொழுதின் செயல்பாடுகளாக இருந்தன. மக்கள் பற்றும் மொழிப்பற்றும் கொண்ட குறளேருழவரின் பெருமை மக்களுக்குத் தெரியத்தொடங்கியது. 

 குறளேருழவர் மதுரை நடுவண் சிறையில் 1953 ஆம் ஆண்டு தளைப்படுத்தப்பட்டிருந்தார். அப்பொழுது சிறைச்சாலையில் திருக்குறள் நூல்களை அனைவரும் படிப்பதற்கு வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்பட்டுத், திருக்குறள் நூல் படிப்பதற்கு வைக்கப்பட்டது. அங்கிருந்த சிறைக்கைதிகளுக்குத் திருக்குறளைப் பயிற்றுவிக்கும் பெரும்பணியில் குறளேருழவர் ஈடுபட்டார். திருக்குறளை நாளும் படித்து மனத்துள் நிறுத்தியதால் பெரும்பான்மையான திருக்குறள் இவருக்கு நினைவுகூரும் வகையில் அமைந்தன. திருக்குறள் மீது இருந்த பற்றின் காரணமாகத் தம் பெயரைக் குறளேருழவர் என்று மாற்றி, அரசிதழிலும் பதிவுசெய்துகொண்டவர்(வில்லேருழவர், சொல்லேருழவர் சொல்லாட்சிகள் திருக்குறளில் இடம்பெற்றுள்ளதை நினைவில் நிறுத்துங்கள்).

குறளேருழவரின் திருக்குறள் பணிகள் 

 குறளேருழவர் திருநெல்வேலியில் திருவள்ளுவர் அறக்கட்டளையை நிறுவித் திருக்குறள் பணிகளில் தம்மை முழுமையாக இணைத்துக்கொண்டவர். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் திருக்குறள் முற்றோதல் வகுப்புகளை நடத்தியவர். திருக்குறள் தேன் என்னும் பெயரில் நூலெழுதித், திருக்குறள் கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்த்தவர். 

 குறளேருழவர் திருக்குறள் கருத்துகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் சிறு சிறு கதை நூல்களை வெளியிட்டவர். மாணவர்களிடம் பரவலாக இந்த நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

குறளேருழவரின் திருக்குறள் கதை நூல்கள் 

1.   குறள் காட்டும் குட்டிக்கதைகள் (1959)

2.   ஔவை சொன்ன கதைகள் (1962)

3.   திருக்குறள் முத்துக் கதைகள் (1964)

4.   பள்ளிப் பிள்ளைகள் படிக்கும் கதைகள் (1978)

5.   தினசரி திருக்குறள் வாசிப்பு (1980)

6.   குறள்மணிக் கதைகள் (1981)

7.   திருக்குறள் கதைகள் (1982)

8.   குறட்சுவைக் கதைகள் (1982)

9.   குறள்நெறிக் கதைகள் (1982)

10.  தினசரி குறள் வாசிப்பு (1983)

11.  குறள் மணக்கும் கதைகள் (1985)

12.  குறள் கூறும் கதைகள் (1988)

13.  குறள் மிளிரும் கதைகள் (1988)

14.  இன்பத்துக் காலக் கதைகள் (1993)

15.  இயைபுத் திருக்குறள் (1994) 


திருக்குறள் சார்ந்த பிற நூல்கள்


16.  குறள் காட்டும் நட்பும் சுற்றமும்

17.  வள்ளுவம்

18.  வள்ளுவன் விரும்பும் மனிதன்

19.  குறள் காட்டும் மகவு

20.  மாணவிகளுக்கு 

 குறளேருழவர் திருக்குறள் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் "பண்பு" என்ற மாத இதழைப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். இந்த இதழில் திருக்குறள் சார்ந்த கட்டுரைகள் கவிதைகள், நாடகங்கள் இடம்பெற்றிருந்தன. "சைவத் தமிழ்" என்னும் இதழையும் நடத்தியவர்

குறளேருழவரின் நாடக நூல்கள் 

 திருக்குறள் செய்திகள் மக்களிடம் சேர்வதற்கு ஏற்ற வடிவம் நாடகம் என்பதை உணர்ந்த குறளேருழவர் பல்வேறு மேடை நாடகங்களை இயற்றியுள்ளார். சமூக நாடகங்களாகவும், வரலாற்று நாடகங்களாகவும் அவை விளங்கின. சினேகிதியின் தியாகம், கண்ணம்மாவின் காதல், கோடம்பாக்கம் கொலை வழக்கு, அன்புள்ள... முதலிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. 64 வானொலி நாடகங்களை எழுதியவர் என்றும் அறியமுடிகின்றது

 குறளேருழவர் பல்வேறு வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். வேதியர் வெங்கண்ணா, இமயவரம்பன், கபிலவஸ்து, ஹர்சர், கரிகால் சோழன், வெறுங்கோயில், தண்ணீர்ப்பந்தல், திப்பு சுல்தான் முதலியன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திப்பு சுல்தான் நாடகம் 13.01.1967 இல் சென்னை, ஒற்றைவாடைக் கலையரங்கில் நடிக்கப்பெற்றுப் பலரின் பாராட்டையும் பெற்றது

திருவள்ளுவர் அறக்கட்டளை 

 திருவள்ளுவர் அறக்கட்டளை என்னும் பெயரில் ஓர் அமைப்பை 01.09.1988 இல் நிறுவி, அதில் 1330 உறுப்பினர்களைச் சேர்த்துத் திருக்குறள் தொண்டாற்றினார். திருவள்ளுவர் அறக்கட்டளையில் உறுப்பினர்களாகச் சேர்பவர்களுக்குத் திருக்குறள் தேன், திருவள்ளுவர் படம், திருக்குறள் ஒலியிசை, குறட் கருவூலம் முதலியவற்றை அன்பளிப்பாக அளிப்பது குறளேருழவரின் வழக்கமாகும். இதனால் மக்கள் பலரும் உறுப்பினராகச் சேர்ந்து திருக்குறள் பணியாற்றினர். இவ்வமைப்புக்குத் திருநெல்வேலியில் 07.45 செண்டு இடம் உள்ளது

 குறளேருழவரின் மனைவி பெயர் மாரியம்மாள் என்பதாகும். இவர்களுக்கு ஒரு மகன் குழந்தைச் செல்வமாக வாய்த்தார். அவர் பெயர் நாலடியார்(17.05.1958). நாலடியாருக்கு குறளமுதன், தமிழரசி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்

 குறளேருழவர் அறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதலான முதலமைச்சர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்

 குறளேருழவரின் திருக்குறள் பணிகளைக் கருத்தில்கொண்ட தமிழ்நாட்டு அரசுதிருக்குறள் நெறித்தோன்றல்என்னும் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. உலகத் திருக்குறள் மையம் திருக்குறள் படைப்புச் செம்மல் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது

 திருக்குறள் கருத்துகளைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகச் செய்துவந்த குறளேருழவர் அவர்கள் 28.03.2008 இல் இயற்கை எய்தினார்



 நன்றி: நல்லாசிரியர் வை. இராமசாமி, நெல்லை