நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

முரசு நெடுமாறனாரைக் கண்டு வணங்கினேன்!

  

முரசு நெடுமாறனாரிடம் தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூல் அளிக்கும் முனைவர் மு. இளங்கோவன்

 அண்மையில் மலையகச் செலவு மேற்கொண்டிருந்தேன். உலகத் தொல்காப்பிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதையும் தொல்காப்பிய அறிஞர்களைக் கண்டு மகிழ்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இச்செலவு அமைந்தது.  தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட உள்ள தொல்காப்பியக் கோட்டத்தின் இடத்தினைக் காண்பதையும் என் செலவில் இணைத்துக்கொண்டேன். யாவும் சிறப்பாக அமைந்தன. 

 24.08.2026 மாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முனைவர் முரசு நெடுமாறனார் அவர்களைக் கண்டு வணங்கும் பேறு பெற்றேன். முரசு ஐயாவுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுக் காலமாக, வளர்பிறைபோல் வளர்ந்து வருகின்றது. மலேசியத் தமிழர்களையும் மலேசியத் தமிழ் இலக்கியங்களையும் எனக்கு அறிமுகம் செய்த பெருந்தகை முரசு நெடுமாறனார் என்று பனிமலை உயர்வில் நின்று உரக்கச் சொல்ல இயலும். 

 முரசு நெடுமாறனார் உருவாக்கிய மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் அரும்பெரும் தமிழ்ப் புதையல் உருவாக்கும் அற்றைப் பொழுதிலிருந்தே முரசு அவர்களின் உழைப்பையும் தமிழ் ஆர்வத்தையும் கண்டு கண்டி வியந்துள்ளேன். மலேசியாவுக்கு முதன்முதல் சென்றபொழுது(2001) என்னையும் என் பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி அவர்களையும் வரவேற்று, இல்லிருத்தி, விருந்தோம்பிய நினைவுகள் கால் நூற்றாண்டைக் கடந்த பின்பும் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன. முரசு அவர்களின் குடும்பத்தார் காட்டிய அன்பையும் பெரும் பாசத்தையும் எண்ணி எண்ணி உருகுகின்றேன். முரசு அவர்களுக்கும் எனக்கும் நடந்த கடிதத் தொடர்புகளும், உரையாடல்களும் தனியொரு நூல் வரையும் அளவுக்கு செய்திச்செறிவு கொண்டவை. காலம் கனியும்பொழுது தனிநூல் உருப்பெறும். இது நிற்க. 

 முரசு அவர்கள் சற்றொப்ப தொண்ணூறு அகவையைத் தொட உள்ளார். தமிழ்நாட்டரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட உயரிய சிறப்பு ஆரங்களைப் பெற்று ஆரங்களுக்குப் பெருமைசேர்த்தவர். மாநாடுகள், கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து, தமிழாய்வுக்குத் துணைநின்றவர். இத்தகு பெரும்புலச் சான்றோரைக் கண்டு தகைசால் தமிழ்த்தொண்டர்கள் என்ற என் நூலினை அவர்தம் மாணடி சேர்த்து, மனங்குளிர்ந்த வாழ்த்தினைப் பெற்றமை என் வாழ்வின் இனிய பொழுதுகளில் ஏற்றம் தரும் பொழுதாகும். 

 முரசு நெடுமாறனார் நூற்றாண்டினைக் கண்டு, எங்களை வழிநடத்த  வணங்கி வாழ்த்துகின்றேன்.

வெள்ளி, 31 ஜூலை, 2026

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் விருதுநகர் குறள்நெறிக் கழகம் நடத்தும் திருக்குறள் மறுமலர்ச்சி மாநாடு


நாள்: 02. 08. 2026, ஞாயிற்றுக் கிழமை நேரம்: காலை 9 மணி முதல் (முழுநாள் நிகழ்வு) 

இடம்: வி.வி. சண்முகம்வள்ளியம்மை நினைவுத் திருமண மண்டபம், அருப்புக்கோட்டைச் சாலை, அல்லம்பட்டி, விருதுநகர் 

 மாநாட்டு நிகழ்வுகள்: பேரணி, கொடியேற்றம், திருவள்ளுவர் படத்திறப்பு, திருக்குறள் இசை நிகழ்ச்சிகள், தொடக்க விழா, நூல்கள் வெளியீடு, வாழ்த்துரை, விருதுநகர் மாவட்டத்தில் மறைந்த குறள்நெறிச் சான்றோர்களின் படத்திறப்பு, பாட்டரங்கம், வழக்காடு மன்றம், உரையரங்கம், கருத்தரங்கம், நிறைவு விழா பரிசளிப்பு என்னும் அமைப்பில் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருக்குறள் அறிஞர்கள் ஆர்வலர்கள் பங்கேற்கும் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். 

ஒருங்கிணைப்பாளர்: புலவர் ஆ. நெடுஞ்சேரலாதன் 

தொடர்பாளர்கள்:

பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் - 8056035782

பேராசிரியர் கா. சிறீதர் - 9486592380

தலைமையாசிரியர் கா. நல்லதம்பி - 9443631639