நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 மே, 2026

பல்லடம் மாணிக்கம் ஐயா மறைவு!

 

பல்லடம் மாணிக்கம் 

 திருமுதுகுன்றத்தில் வாழ்ந்துவந்த புலவர் பல்லடம் மாணிக்கம் ஐயா அவர்கள் இன்று (29.05.2026) இயற்கை எய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். நான் மாணவனாக இருந்தகாலம் முதல் பல்லடம் மாணிக்கனாருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். அவர்தம் தமிழ்ப் பணிகளைப் பலவாண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் எழுதி, ஐயாவின் சிறப்புகளை உலகம் அறியச் செய்திருந்தேன்.  தமிழ்த்தாய் தம் உண்மைத் தொண்டர்களுள் ஒருவரை இன்று இழந்து நிற்கின்றாள்.  பல்லடம் மாணிக்கம் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். 

பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

கோவையை அடுத்த பல்லடத்திற்கு அருகில் உள்ள சிற்றூரில் சாமியப்பா, வள்ளியம்மா ஆகியோரின் மகனாக 23.11.1936 இல் பிறந்தவர். சிற்றூரில் தொடக்கக் கல்வியை முடித்து, பல்லடத்தில் உயர்நிலைக் கல்வி கற்றவர்.புலவர் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் (1962). ஆயிரம் பூ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டவர்.இந்நூல் பாவேந்தர், கா.அப்பாத்துரையார் வாழ்த்துப் பெற்ற நூல்

 சென்னையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1962 முதல் 1975 வரை இத் தமிழாசிரியர் பணி நீடித்தது. 1972 இல் விருத்தாசலத்தில் திலகவதி அம்மாவைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு மக்கட் செல்வங்களைப் பெற்றார்

 தேவி திரைப்படத்தில் திரைப்பாடல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கில் சிறப்புடையன. இசைமேதை தட்சணாமூர்த்தி அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பாளர். இப்படத்திற்குத் துணை இசையமைப்பாளராக விளங்கியவர் திரு.சேகர் (இசையமைப்பாளர் இரகுமான் அவர்களின் தந்தையார்). டி.எம்.சௌந்தரராசன் பல பாடல்களைப் பாடினார். இப்படத்தில் சோ நடித்துள்ளார். இப்படப் பாடல்கள்,இலங்கை,சிங்கப்பூர் வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பப்படுவது உண்டு

தேவி தேவி உன்னைத்தேடி அலைகிறேன்...

தித்திக்கும் முத்தமிழே... 

என்னும் பாடல்கள் சிறப்புடையன

பல்லடம் மாணிக்கம் ஐயா உருவாக்கிய தமிழ்நூல் காப்பகம் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலகமாக விளங்கியது.

மேலும் அறிவதற்கு என் வலைப்பதிவுக்கு வருக!

பதிவு 1

பதிவு 2

 

சனி, 23 மே, 2026

பொம்மலாட்டக் கலைஞர், கலைமாமணி மு. கலைவாணன் மறைவு!

 

கலைமாமணி மு. கலைவாணன்  

    புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் . மா. முத்துக்கூத்தன் அவர்களின் மகனும் மிகச் சிறந்த பொம்மலாட்டக் கலைஞருமான கலைமாமணி மு. கலைவாணன் அவர்கள் 22. 05. 2026 இரவு 11 மணியளவில் சென்னையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயர் உற்றேன். சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருந்துகளை உட்கொண்டு வந்தவர். எனினும் தாம் கற்ற பொம்மலாட்டக் கலையை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பொம்மலாட்டப் பயிலரங்கம் நடத்திக்கொண்டிருந்தபோது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இயற்கை எய்தியுள்ளார். 

    மு. கலைவாணன் அவர்கள் கலைமாமணி . மா. முத்துக்கூத்தன், மு. மரகதம் ஆகியோரின் அருமைப் புதல்வராக 20.11.1957 இல் பிறந்தவர். "கலைவாணர்" என் எசு.கிருட்டினன் அவர்களின்மேல்கொண்ட மதிப்பின் காரணமாகத்  தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார் தந்தையார் முத்துக்கூத்தனார்

     மு. கலைவாணன் கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். இளமை முதல் தந்தையாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். மு.கலைவாணன் - தமயந்தி திருமணம் 10.10.1982 இல் நடைபெற்றது. இவர்களுக்கு முத்தரசன், பகலவன் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்

     மு. கலைவாணன் இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொம்மலாட்டக் கலை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். அத்தனை நிகழ்வுகளிலும் பகுத்தறிவுக் கருத்துகளும், சுற்றுச்சூழல் சிந்தனைகளும், தமிழ் மரபு போற்றும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும். பொம்மலாட்டத்தில் வழக்கமாக இடம்பெறும் புராணக் கருத்துகளை இவர் பின்பற்றாமல் மக்களும் மாணவர்களும் அறிவுத்தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கில் தம் பொம்மலாட்ட நிகழ்வை நடத்துவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்

     சென்னை பொதிகை தொலைக்காட்சிக்காக இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், "கலை மாமா" என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்து தொலைக்காட்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். ஆசிரியர்களுக்கு இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், குழந்தைகளுக்கு இதுவரை அறுநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், பெற்றோருக்கான பயிற்சி வகுப்புகள் 54 ஐயும் நிகழ்த்தியுள்ளார். மூன்று திரைப்படங்களிலும், இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சப்பான் முதலிய நாடுகளிலும் தம் கலைப்பணியைச் செய்தவர். 

அறிவாளுமை மிக்க கலைமாமணி மு. கலைவாணனை இழந்து, தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

குறிப்பு: 

கலைமாமணி மு. கலைவாணனின் பணிகளை மேலும் அறிய என் பழைய பதிவைப் படிக்கவும்.