நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 29 டிசம்பர், 2020

மக்கள் தொலைக்காட்சியில் வேளாண்மை அறிஞர் சி. இளையபாலன் நேர்காணல்!

 

முனைவர் சி. இளையபாலன்

    கலவை ஆதிபராசக்தி    அறிவியல் கல்லூரியில் யான் தமிழ்த்துறையில் பணியாற்றியபொழுது (1999-2005) ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். எங்கள் நிர்வாகத்தின் இன்னொரு நிறுவனமான ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தும் பணியும் எனக்குத் தரப்பட்டிருந்தது. அங்குப் பயின்ற அறிவார்வம் நிறைந்த பலநூறு மாணவர்கள் உயர்கல்வி பெற்று இன்று உலகின் பல நாடுகளில் பணியாற்றுகின்றனர். என்னுடன் நல்ல நட்பிலும் உள்ளனர். அத்தகு மாணவர்களுள் ஒருவர் சி.இளையபாலன் ஆவார்.

    ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் பயின்ற சி. இளையபாலன் ஆத்தூர்க்காரர். உழவர்குடியில் தோன்றியவர். சிற்றூர்ப்புற மாணவராக என் முன் நின்ற அவர் படிப்பில் நல்ல ஆர்வம் கொண்டவர். அன்பு உருவான அவர், பட்டப்படிப்பை அங்குச் சிறப்பாக நிறைவுசெய்ததுடன், உயர் படிப்புகளையும் முடித்து, முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு, பட்டம் பெற்றுள்ளார். தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவாறு, வேளாண்மை அறிஞராகவும் விளங்கிவருகின்றார். வேளாண்மைப் புலத்தின் பன்முகத் துறைகளிலும் ஆராய்ச்சி செய்து உலகப் புகழ்பெற்றுள்ளார். வாழை ஆராய்ச்சியில் இவருக்குத் தனித்துவமான பேரறிவு உண்டு. அண்மையில் உலக அளவில் இவருக்கு “மிகச் சிறந்த ஆசிரியர்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

    சிற்றூரில் வேளாண்மை ஆய்வுகளில் ஆர்வமுடன் செயலாற்றிக்கொண்டிருந்த இவரின் அறிவு தமிழகத்து உழவர்களுக்கும், வேளாண்மை அறிஞர்களுக்கும் தெரிதல் வேண்டி, காட்சி ஊடகங்களில் பங்கேற்குமாறு சில மாதங்களுக்கு முன் கேட்டுக்கொண்டேன். தக்க நேரம் பார்த்து, காத்திருந்த இவர்தம் செவ்வியை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. இதற்காக மக்கள் தொலைக்காட்சியின் படப்பிடிப்புக் குழுவினர் இவர்தம் ஊருக்குச் சென்று, இவர்தம் வேளாண்மைப் பண்ணையையும், ஆய்வு முயற்சிகளையும் படப்பிடிப்பு நடத்தி, நாளை ஒளிபரப்ப உள்ளனர். முனைவர் சி. இளையபாலனின் நேர்காணலை வேளாண்மையிலும் கல்வியிலும் ஆர்வம்கொண்ட அன்பர்கள் மக்கள் தொலைக்காட்சி வழியாகவும், இணையம் வழியாகவும் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க இயலும். 

    இளம் மாணவராக என் கண்முன் தெரிந்த தம்பி முனைவர் சி. இளையபாலன் தம் ஆராய்ச்சியால் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று விரும்பி, என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    தமிழ் மக்களின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வேளாண்மை உள்ளிட்ட மரபுசார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்புவதில் தனக்கு நிகரின்றிப் பாடாற்றும் மக்கள் தொலைக்காட்சி முனைவர் சி. இளையபாலன் போன்ற ஆய்வறிஞர்களை உலகுக்கு அறிமுகம் செய்யும் உயர்ந்த செயலைப் போற்றி என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மக்கள் தொலைக்காட்சி இணைய முகவரி: https://makkal.tv/

நாள்: 30.12.2020 நேரம்:  மாலை: 6.30 மணி

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

மாந்தநேயத்தின் மறுவடிவம் தியாகி மு. அப்துல் மஜீத் மறைவு!

 

                        
தியாகி மு. அப்துல் மஜீத்

  புதுச்சேரியின் புகழ்மிக்க பெருமக்களுள் ஒருவராக விளங்கிய தியாகி மு. அப்துல் மஜீத் ஐயா அவர்கள்  தம் தொண்ணூற்று மூன்றாம் அகவையில் இன்று (20.12.2020) இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருந்துயர் உற்றேன். கடந்த பதினைந்து ஆண்டுகளாக அவருடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளேன். புதுச்சேரியில் நாங்கள் ஏற்பாடு செய்யும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு, எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்துவார். ஈகைக்குணமும், தமிழ்ப்பற்றும் கொண்ட அவரை எம் புதுமனையினைத் திறந்து வைக்க ஈராண்டுக்கு முன் அழைத்தோம். தம் நண்பர் புலவர் கோ. கலியபெருமாள் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் வருகைதந்து வாழ்த்தி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் அமெரிக்காவிலிருந்து அறிவியல் அறிஞர் நா.க. நிதி அவர்களும் திருக்குறள் தொண்டர் இராம. மாணிக்கம் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 சமய நல்லிணக்கம் கொண்டவர்களைப் பட்டியலிட்டால் தியாகி மு. அப்துல் மஜீத் ஐயா அவர்களின் பெயர் கட்டாயம் இடம்பெறும். காஞ்சிபுரம் தவத்திரு. சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களிடத்துப் பெரும் மதிப்புடையவர். அதுபோல் அருட்தந்தை. அந்தோணிசாமி அடிகளாரின் அன்பையும், மயிலம் தவத்திரு. சிவஞான பாலய சுவாமிகளின் பேரன்பையும் பெற்றவர். மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டவர். தம் ஓய்வூதியப் பணத்தினைப் பல்வேறு அறச்செயல்களுக்கு மாதந்தோறும் வழங்கிவருவதை நான் அறிவேன். நண்பர்களின் குடும்ப நிகழ்வுகளிலும், இலக்கிய ஒன்றுகூடலிலும் முன்னின்று அனைவரையும் வரவேற்பது இவர்தம் இயல்பு.

 மு.அப்துல் மஜீத் அவர்கள் ஆங்கிலோ- பிரெஞ்சு ஆலையில் (AFT) எழுத்தராகவும், பின்னர் பிரெஞ்சியர் ஆட்சியில் அவர்கள் நடத்திய சமுதாய முன்னேற்றப் பள்ளியில் (சொசைட்டி பிராக்ரஸ்) ஆசிரியராகவும் பணியாற்றியவர். புதுவையின் முன்னணித் தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

  மு.அப்துல் மஜீது அவர்கள் தமிழில் மரபுப்பாடல் புனைவதில் வல்லவர். எனவே “மரபு மாமணி” என்று மதிக்கப்பெற்றவர். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர். ’வள்ளுவரின் செவ்வியலும் கம்பனின் புனைதிறனும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். பாவலர் பயிற்சிப் பட்டறை என்னும் இலக்கிய அமைப்பின் தூணொத்து விளங்கியவர். புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சியிலும், கம்பன் கழகத்தின் பணிகளிலும் ஆர்வமுடன் உழைத்தவர். எளிமையும், தன்னடக்கமும் கொண்டவர். மற்றவர்களுக்கு உதவுவது தம் வாழ்வின் நோக்கம் என்று வாழ்ந்தவர்.

  புதுவைக்குப் புகழ்சேர்த்த நன்மகனாரின் மறைவு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகும்.