நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 15 ஜூன், 2022

மலேசியாவின் ஈப்போ மாநகரில் உலகத் தமிழ் இசை மாநாடு!



தமிழிசைத் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் / கவிதைகள்

வரவேற்கப்படுகின்றன! 

  தமிழிசையின் சிறப்பினை வளரும் தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும் முயற்சியாக மலேசிய நாட்டின் ஈப்போ  மாநகரில் உலகத் தமிழ் இசை மாநாடு 2022, நவம்பர் 20 இல் நடைபெற உள்ளது. தமிழர், தமிழ் மொழிகலை, பண்பாட்டோடு இணைந்திருக்கும் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும் ஈப்போ வெற்றித் தமிழர் பேரமைப்பும் இணைந்து, உலகெங்கும் உள்ள தமிழ் இசை வல்லுநர்களை ஒன்றிணைத்து இந்த உலகத் தமிழ் இசை மாநாடு – 2022 நடத்துகின்றன

 தமிழிசை மாநாடு நடைபெறும் நாளன்று பாரம்பரிய இசைக் கருவிகளின் கண்காட்சிக்   கூடம்  காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமிழ் இசைத் தொடர்பான ஆவணப்படங்களும் குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. மேலும் இம்மாநாட்டினை ஒட்டி மாநாட்டு மலர் ஒன்று வெளிடவும் உள்ளனர். இந்த மாநாட்டு மலருக்குத் தமிழ் இசைத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் / கவிதைகள் வரவேற்கப்படுகின்றன

    தமிழிசை சார்ந்த கட்டுரைகள் / கவிதைகளை worldtamilmusiccon2022@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  31/8/2022 - க்குள் அனுப்பி வைக்கலாம்.  

    உலகத் தமிழ் இசை மாநாடு குறித்த மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள மாநாட்டுத் தலைவர் கவிரத்னா டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணன் அவர்களின் கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். 

தொடர்பு எண் +6 012500 6161 

வெள்ளி, 10 ஜூன், 2022

திருவாடானை அரசு கல்லூரியின் முத்தமிழ் மன்ற விழா!

மு. இளங்கோவன் உரை

கல்லூரி முதல்வர் முனைவர் அ.மாதவி அவர்கள் நூல் பரிசளித்தல்.  அருகில் பேராசிரியர்கள் மு. பழனியப்பன், முனைவர் ப. மணிமேகலை.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அரசு கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றும் பேராசிரியர் முனைவர் அ. மாதவி அவர்கள் தங்கள் கல்லூரியில் நடைபெறும் முத்தமிழ் மன்ற விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுமாறு தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, அழைப்பு விடுத்தார். என் அருமை நண்பர் பேராசிரியர் மு. பழனியப்பன் அவர்கள் நான் திருவாடானை சென்று திரும்புவதற்கும், தங்குவதற்கும் உரிய அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார். 

நிகழ்ச்சியின் முதல்நாள் இரவே காரைக்குடிக்குச் சென்று தங்கினேன். காலையில் கல்லூரிக்குச் செல்ல மகிழுந்து ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்கள். தவிர்த்தேன். அரசு பேருந்தில் போகலாம் என்று நண்பரிடம் தெரிவித்தேன். பேராசிரியர் மு. பழனியப்பன் அவர்கள் நான் தங்கியிருந்த விடுதிக்குக் காலையில் வந்து உரையாடினார். காரைக்குடியில் சிற்றுண்டி முடித்து, இருவரும் பேருந்தேறித் திருவாடானை நோக்கிப் பயணித்தோம். ஒரு மணி நேரப் பயணம். அந்த நேரத்தில் தமிழகத்துக் கல்வி நிறுவனங்களின் நிலைகள், பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைச் சீரழித்த கல்வியாளர்கள்(!), அரசியல்வாணர்களின் திரு(!) விளையாடல்களை யெல்லாம் அசைபோட்டபடி திருவாடானை சென்றுசேர்ந்தோம். 

திருவாடானை அரசு கல்லூரி என்பது சிற்றூர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்த மாணவர்களை அரவணைத்து, கல்விப்பால் ஊட்டும் தாயாக விளங்குவதை அறிந்தேன். தமிழக அரசால் புதியதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிக்குப் பேராசிரியர் அ. மாதவி அவர்கள் முதல்வராகப் பணியாற்ற வந்த பிறகு பல்வேறு வசதிகளை மாணவர்களுக்குச் செய்து தந்துள்ளமையைப் பேராசிரியர்களும் பெற்றோர்களும் நன்றியுடன் குறிப்பிட்டார்கள். தண்ணீர்ப் பஞ்சம் போக்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, எந்த நேரமும் மாணவர்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்குமாறு செய்தமை பெருஞ்சாதனை என்றார்கள். அதுபோல் வகுப்பறை, கணினி, இருக்கை வசதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் பகுதியில் பிறந்து வளர்ந்த நான், திருவாடானைப் பகுதி மாணவர்களையும், பேராசிரியர்களையும் சந்திப்பதற்குப் பெரும் விருப்பத்தோடு சென்றிருந்தேன். அனைவருடனும் உரையாடி மகிழ்ந்தேன். 

 முன்பே அறிமுகமான பேராசிரியர்கள் வந்து, ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டு, செய்யும் பணிகளைப் பகிர்ந்துகொண்டோம். காலை நிகழ்வின் முத்தமிழ் விழாவுக்குரிய நேரம் நெருங்கியது. 

கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாதவி அவர்கள் என்னை அறிமுகம் செய்யும் வகையில் என் பணிகளை எடுத்துரைத்து, பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்துவைத்தார்கள். சற்றொப்ப முக்கால் மணி நேரம் என் உரை அமைய வேண்டினர். நானும் நேரக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி உரையை அமைத்தேன்.  

சிற்றூர்ப்புறத்திலிருந்து கல்வி கற்பதற்குப் புறப்பட்ட என் வாழ்க்கைப் பயணத்தையும், கண்ட தோல்விகளையும், அதனை உடைத்து மேலெழுந்த வரலாற்றையும், தமிழ் கற்ற முறையினையும் அதனைப் பரப்புவதற்கு உலக அளவில் செய்துவரும் முயற்சிகளையும் எடுத்துரைத்தேன். நாட்டுப்புறப் பாடல் துறையில் நான் செய்த ஆய்வுகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தபொழுது அரங்கம் அமைதிகாத்தது. தமிழிசை என் உரைக்கு வலிமைசேர்த்தது. உலகப்போக்கை உணர்ந்து, கடுமையாக உழைத்துப் படித்து முன்னேறுமாறு மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்து என் உரையை நிறைவுசெய்தேன். நிறைவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தோம். வாழ்வில் நினைக்கத்தகுந்த பொழுதாக இந்த விழாவின் பொழுது அமைந்திருந்தது. 



முத்தமிழ் மன்ற விழா நிறைவுற்றதும் திருவாடானை சிவன்கோவில் சிறப்பையும் அருகில் இருக்கும் ஊர்களின் சிறப்பினையும் பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். அவற்றுள் தொண்டி. என்னும் ஊர் பழங்காலந்தொட்டு முதன்மையான ஊராக விளங்குகின்றது. ஓரி என்னும் ஊரும் புகழ்பெற்றதாகும். மேலும் காளையார் கோவில், நாட்டரசன்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, கீழடி முதலியன இப்பகுதியில் உள்ள பார்க்கத்தகுந்த ஊர்கள் என்றனர். முன்பே திட்டமிட்டிருந்தால் தொண்டிக்குச் சென்று கடற்காற்று வாங்கியிருக்கலாம். கடல்வளம் நுகர்ந்திருக்கலாம். ஆனால் தேவகோட்டையில் வாழும் பேராசிரியர் பழனி இராகுலதாசனைச் சந்திக்க இயற்கை இழுத்துச்சென்றது. 

 

வியாழன், 9 ஜூன், 2022

பேராசிரியர் மு. பழனி இராகுலதாசன்

 பேராசிரியர் மு. பழனி இராகுலதாசன்   

திருவாடானை அரசு கல்லூரியின் முத்தமிழ் மன்ற விழா அண்மையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் சிறப்புரையாற்றி முடித்ததும் பகலுணவுக்குப் பிறகு திருவாடானையிலிருந்து தேவகோட்டை வழியாகக் காரைக்குடிக்குத் திரும்புவது என் பயணத் திட்டம். அத் திட்டப்படியே பேருந்தில் ஏறினோம்

எனக்கு வழித்துணையாய் அமைந்த முனைவர் பட்ட ஆய்வாளர் சனகர் அவர்கள் தேவகோட்டை ஊரினர். அவரின் தந்தையார் தமிழ்ப் பேராசிரியர் என்பதறிந்தேன். தேவகோட்டையில் வாழும் பேராசிரியர் பழனி இராகுலதாசன் ஐயாவைத் தெரியுமா? என்று நண்பர் சனகர் அவர்களைக் கேட்டேன். மகிழ்ச்சியுற்ற சனகர் அவர்கள், பேராசிரியர் ஐயா தம் குடும்ப நண்பர் எனவும், ஊரில் உள்ளார்களா? என வினவித் தகவல் சொல்வதாகவும் தெரிவித்தார். சற்று நேரத்தில் பேராசிரியர் மு. பழனி இராகுலதாசன் ஊரில் இருக்கும் விவரம் கிடைத்தது. மகிழ்வுற்றேன்

பழனி இராகுலதாசனைப் பல நாளாகச் சந்திக்கும் விருப்பம் எனக்கு இருந்ததால், காரைக்குடிக்குப் பேருந்தில் நேரே செல்வதைத் தவிர்த்து, தேவகோட்டையில் இடையில் இறங்கினோம். பேருந்து நிலையத்திலிருந்து நடைதூரத்தில் உள்ள பழனி இராகுலதாசன் இல்லம் செல்லும் முன்பாகக் கையுறைப்பொருளாகப் பழங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு ஐயாவைக் காண ஆர்வமுடன் சென்றோம்

பழனி இராகுலதாசன் அவர்கள் என் வருகையை அறிந்து, தெருவின் முகப்பிற்கு வந்து, அன்புடன் தம் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தமிழரின் விருந்தோம்பலைப் பயிற்றுவித்த பேராசான் அல்லவா

பழனி இராகுலதாசனும் அவரின் துணைவியார் பொன்னியம்மாளும், 
உடன் மு.இளங்கோவன்

பழனி இராகுலதாசன் அவர்களின் இல்லம் முழுவதும் நூல்களால் நிரம்பியிருந்தது. கால் வைக்க இடமில்லை. திரும்பும் திசையெல்லாம் தமிழ்ச்செல்வங்கள் அடுக்கப்பட்டிருந்தன. இருந்த குறுகிய இடத்தில் அமர்ந்தோம். அதற்குள் பேராசிரியர் அவர்களின் துணைவியார் திருவாட்டி பொன்னியம்மாள் அவர்கள் குளம்பியுடன் வந்து நின்றார். வணங்கி, அறிமுகம் ஆனோம். நம் ஐயா அவர்கள் தேவகோட்டையில் உள்ள சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தம் பணி ஓய்வுக்காலத்திலும் நூல்கள் எழுதுவதும் மொழிபெயர்ப்பதும் என்று அமைதி வழியில் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுடன் உரையாடியதன் வழியாக அவர்களின் தமிழ் வாழ்க்கையை அறியமுடிந்தது.

பேராசிரியர் மு. பழனி இராகுலதாசனின் இயற்பெயர் பழனி என்பதாகும்.  பௌத்த சமயக் கொள்கைகளில் நம் பேராசிரியர் அவர்களுக்குப் பின்னாளில் பெரும் ஈடுபாடு உண்டாயிற்று. அதனால் புத்த பகவானின் மகனான இராகுலன் நினைவாக  இராகுலதாசனாக உயர்ந்தார். அடிப்படையில் பொதுவுடைமைக் கொள்கையாளர். எளிமையும் அன்பும் தமதிரு கண்களாகக் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் வல்லவர். இவர்தம் சொந்த ஊர் மதுரையை அடுத்துள்ள சோழவந்தானுக்கு அருகில் உள்ள நெடுங்குளம் என்பதாகும். 

நெடுங்குளத்தில் வாழ்ந்த . முத்துத் தேவர், முனியம்மாள் ஆகியோரின் மகனாக 21.03.1944 இல் மு. பழனி பிறந்தவர். நெடுங்குளம் திண்ணைப்பள்ளியில் பயின்றவர். இராசாமணி என்னும் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டவர். திருவேடகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்றவர். எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்ததால் மீண்டும் சோழவந்தான் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பிலிருந்து சேர்ந்து படித்தவர். சோழவந்தானில் படித்தபொழுது இன்றைய பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் அவர்களின் தந்தையார் குருநாத பிள்ளையிடம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பள்ளியிறுதி வகுப்பு வரை அங்குப் படித்து முடித்து, மதுரைக் கல்லூரியில் புகுமுக வகுப்பினைப் படித்தவர்

மதுரை தியாகராசர் கல்லூரியில் ஐந்தாண்டுகள் பயின்றவர். இளங்கலைப் பொருளாதாரமும்தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். பேராசிரியர் சுப. அண்ணாமலை அவர்களின் அன்புக்குரிய மாணவராக விளங்கித் திருமுறைகளையும் திருவருட்பாவையும், தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் கற்றவர்

1970 ஆம் ஆண்டு தேவகோட்டை சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் மு. பழனி பயிற்றுநராகப் பணியில் இணைந்து விரிவுரையாளர், தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பணி ஓய்வு பெற்றவர்(2000). பல்லாயிரம் மாணவர்களுக்குத் தமிழிலக்கியங்களை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். 

பேராசிரியர் மு. பழனி இராகுலதாசன் அவர்கள் 1970 இல் பொன்னியம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு மணிமேகலை (ஆங்கிலப் பேராசிரியர்), மணிவாசகன் என்னும் இரு மக்கள் செல்வங்கள் உள்ளனர்

கண்ணதாசனின் கண்ணதாசன் ஏட்டுக்குநிழல்என்ற சிறுகதையை 1972 இல் அனுப்பியபொழுது இராகுலதாசன் என்ற புனைபெயரில் அனுப்பினார். அவ்விதழில் படத்துடன் சிறுகதை வெளிவந்துள்ளது.  கவிஞர் மீராவின் அன்னம் விடு தூது இதழிலும் எழுதியவர். தாமரை, செம்மலர் இதழ்களிலும் எழுதிப் புகழ்பெற்றவர்

நிகழ்காலங்கள், அக்கரைப்பூக்கள் என்னும் இரு சிறுகதைத் தொகுதிகளைப் பழனி இராகுலதாசன் வெளியிட்டுள்ளார். சீனத்துச் சிறுவர் கதைகள் நூலையும் வெளியிட்டுள்ளார். வீடும் வீடு சார்ந்தும் என்னும் கவிதைத் தொகுதி விரைவில் வெளிவர உள்ளது

சாகித்ய அகாதெமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் சுப. அண்ணாமலை, ஸ்ரீ மத் சுவாமி சித்பவானந்தர், பி.எஸ். இராமையா ஆகிய நூல்களை எழுதியுள்ளமையுடன் ஸ்ரீஸ்ரீ யின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் பெயர்த்துள்ளார். மேலும் கேசவ தேவின் (மலையாளம்) தன்வரலாற்றை ஆங்கிலத்தின் வழித் தமிழுக்குப் பெயர்த்துள்ளார். இந்த நூல்களையும் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது

மு.இளங்கோவனும், பேராசிரியர் மு. பழனி இராகுலதாசனும்

தமிழ்ப்பேராசிரியராகவும் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கும் பேராசிரியர் மு. பழனி இராகுலதாசன் அவர்கள் நலத்துடனும் வளத்துடனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, தமிழன்னைக்கு நற்பணிகளாற்ற நெஞ்சார வாழ்த்துகின்றேன்.