நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 டிசம்பர், 2007

உழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக உள்ளது.அதைச் சித்திரிப்பதே ஒன்பதுரூபாய் நோட்டு -தங்கர்பச்சான்

புதுச்சேரியில் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டுவிழாவைப்
புதுச்சேரி நண்பர்கள் தோட்ட அமைப்பினர் 29.12.2007 மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் நடத்தினர்.அதில் கலந்துகொண்டு இயக்குநர் தங்கர்பச்சான் தன் திரைப்படங்கள் பற்றி விரிவாகப்பேசினார்.

படைப்பாளிகள் பலர் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை மிகச்சிறப்பாகத் திறனாய்வு செய்தனர். பத்திரிகைகளைவிட மிகச்சிறப்பாகச் செய்தமை பாராட்டிற்கு உரியது. பத்திரிகைகள் கதைச்சுருக்கம் வெளியிடுவதையேஇன்று திறனாய்வாக நினைக்கிறது.
இதுவரை 87 பத்திரிகையில் ஒன்பது ரூபாய் நோட்டு பற்றி திறனாய்வு வந்துள்ளது. அனைவரும் இப்படத்தை விரும்பிப்பார்க்கின்றனர். பலரைத்தூங்கவிடாமல் செய்த படம் இது. வெளி நாடுகளிலிருந்து பலரைத் தம் பிறந்த ஊருக்கு வரவழைத்த படம் இது. மண்ணையும் மக்களையும் நேசிக்கும் படம். பெற்றோர் பாசத்தை வலியுறுத்தும் படம் இது.

என் 24 வயதில் எழுதத் தொடங்கிய கதை.அனைவருக்கும் காதல் ஊற்றெடுக்கும் வயதில் நான் மட்டும் வாழ்க்கையை உள்வாங்கிக்கொண்டு அதன் ஆழம் பற்றி எண்ணி எழுதியுள்ளேன். உழைக்கும் விவசாயகுடும்பத்திலிருந்து நான் வந்துள்ளதால் உழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கையைப்பதிவு செய்தேன்.

101 ஆண்டுகால திரைப்பட வரலாற்றில் இதுவரை விவசாயிகளின் வாழ்க்கையை ஆழமாக யாரும் பதிவுசெய்யவில்லை. அனைவரும் உண்டு உயிர் வாழக் காரணமாக இருக்கும் விவசாயியை யாரும் நினைப்பதே இல்லை. அழுக்கு,வியர்வை,நாற்றம் உழைப்பவர்களிடமே இருக்கும்.உழைப்பின் அடையாளமான வியர்வையை இச்சமூகம் உதாசீனப்படுத்துகிறது. உழவர்கள் - உழவர்களின் வாழ்க்கை செல்லாக்காசாக உள்ளதை ஒன்பது ரூபாய்நோட்டு சித்திரிக்கிறது.

ஒவ்வொருவரும் நம் உள்ளத்தை யாரிடமோ பறிகொடுத்துள்ளோம்.அவ்வாறு பறிகொடுத்த உங்கள் உள்ளங்களை என் வழிக்குக் கொண்டுவர நான் செய்த சூழ்ச்சியே அழகி திரைப்படம். படித்த இளைஞர்களை விலை பேசி வாங்கிச்செல்லும் பணக்காரர்களை அடையாளம் காட்டுவதே சொல்லமறந்த கதை.தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தும் முதல்படமே தென்றல். பெண்களின் உழைப்பில் வாழும் சமூக அக்கறை இல்லாதவர்களைக்
காட்டுவதே சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி.இப்படத்தில் நடிக்க யாரும் முன்வராத்தால் நானே நடிக்கவேண்டியிருந்தது.பள்ளிக்கூடம் பலவற்றின் நிலையை எடுத்துச்சொல்லி தனக்கு அறிவு தந்த பள்ளியை நினைக்கும் படி மாணவர்களுக்கு அறிவுரை சொன்னபடம் பள்ளிக்கூடம்.

எனவே சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டனவே என் படங்கள்.அழகி படம் திரையிடப்பட்ட முதல்நாள் என் குடும்பம் உட்பட 21 பேர் மட்டும் திரையரங்கில் இருந்தோம். இன்று 700 பேர் வரை பார்க்கின்றனர்.இவ்வளவு பேரை இழுக்க இவ்வளவுநாள் ஆகியுள்ளது. இளைஞர்கள் என் படம்பார்க்க வருவதில்லை.நடுத்தர வயதிற்கு மேல் உள்ளவர்களே என் படத்தை விரும்பிப் பார்க்கின்றனர்.

சத்தியராஜ் ஒன்பது ரூபாய் நோட்டு கதையைப் புரிந்துகொண்டு நடித்ததால்தான் - அப்படத்தில் மாதவராக வாழ்ந்ததால்தான் இப்படம் மிகச்சிறப்பாக அமைந்தது.

விழாவில் நடிகர் சத்தியராசு அவர்கள் கலந்த்கொண்டு தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.தங்கர்பச்சானின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் நடித்த இன்பநிலா அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.

திரைப்படக் கலைஞர்களுக்குப் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினார். புதுச்சேரியைச் சார்ந்த பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.பாராட்டிப்பேசினர்.

சனி, 29 டிசம்பர், 2007

புதுச்சேரியில் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா

புதுச்சேரி நண்பர்கள் தோட்ட அமைப்பினர் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழாவை இன்று 29.12.2007 மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரி செயராம் உணவகத்தில் நடத்துகின்றனர்.

சுந்தரமுருகன் வரவேற்க ப.திருநாவுக்கரசு தலைமையில் விழா நடைபெறுகிறது. இயக்குநர் தங்கர்பச்சான்.நடிகர் சத்தியராசு,நடிகர் அர்ச்சனா,படத்தொகுப்பாளர்பி.இலெனின்,இசையமைப்
பாளர் பரத்வாசு கலந்துகொண்டு பாராட்டுப் பெறுகின்றனர்.புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள் விருது வழங்கிப் பாராட்ட உள்ளார்.

நண்பர்கள் தோட்டம் வெளியிடும் நாள்காட்டியை நாடாளுமன்ற உறுப்பினர் மு.இராமதாசு அவர்கள் வெளியிட சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமி நாராயணன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அனந்தராமன்,இரா.சிவா ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

முனைவர் நா.இளங்கோ, க.தமிழமல்லன், இரா.தேவதாசு,புதுவை யுகபாரதி பாராட்டுரை வழங்குகின்றனர். மு.சச்சிதானந்தம் அவர்கள் நன்றியுரை கூற உள்ளார்.புதுவையில் உள்ள பல்வேறு தமிழமைப்புகள்,கலை,இலக்கிய அமைப்புகள் சார்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

வெள்ளி, 21 டிசம்பர், 2007

தமிழக,தமிழ் வரலாற்றில் மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் பங்களிப்பு...

தமிழக வரலாற்றில் தந்தை பெரியார் அவர்கள் முழுநேரத் தமிழகச் சிந்தனையாளராக இருந்தார். தமிழ் மக்களுக்கு இடையூறு வரும்பொழுதெல்லாம் அம் மக்களுக்குக் குரல் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டிருந்தார். அம் மக்களுள் பலர் அவரை அவதூறு பேசினானாலும் அவர்களுக்கு உழைப்பதையே கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வகையில்
தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள உயரிய தலைவர்தான் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள்.

தமிழ்நாடும் தமிழ்மொழியும் வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாறாமல் இருக்க அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் என்றும் வரலாற்றில் நின்று நிலவும். இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்லாமல் இருக்க அவர் திட்டமிட்டுப் பல நல்ல செயல்களைச் செய்துள்ளார்.

இளைஞர்களின் கல்வி நலன், வேலை வாய்ப்பு, பணி உயர்வு இவற்றை வைத்து இவர் நடத்திய இட ஒதுக்கீட்டுப் போராட்டம் இந்திய மக்களுக்கே வழிகாட்டக் கூடியதாக மாறியுள்ளதை இந்தியச் சமூக வரலாறு உணர்ந்தவர் அறிவர்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற போர்வையில் தமிழகம் கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்தியவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள். இந்தியப் பெரு முதலாளிகள் சில்லறை வணிகப் போர்வையில் நுழைந்தபொழுது தடுத்து நிறுத்தியவரும் இவரே.

குடிப்பழக்கத்தால் குடும்பப் பெண்கள் மிகுதியாகப் பாதிக்கப்படுவதைத் தம் மகளிர் அணி வழியாக எதிர்ப்பவரும் மருத்துவரே.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்று மருத்துவராக இருந்து இவர் கொடுக்கும் குரல் நோயாளிகளுக்கு அமிழ்தமாக இருக்கிறது.

தமிழ் மொழியைச் சிதைத்து எழுதுவதையே இதழ்கள் தொழிலாகச் செய்து கொண்டிருக்கையில் இவர் தமிழ் ஒசை ஏட்டைநல்ல தமிழில் நடத்துவதைப் பார்க்க மொழி ஞாயிறு பாவாணரும், பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் இல்லையே என்ற ஏக்கமே மேலிட்டு நிற்கிறது. வானூர்திகளும், குற்றச்சாற்றும், மகிழுந்தும், போக்கிலிகளும் இவரால் அல்லவா வெளியே தெரிந்தனர்.

குத்தாட்டங்களும், அருவருப்பான உடலசைவுகளும், அழுத பெண்களும், பேய் பிசாசு கதைகளும் கொண்டு உயர் சாதியினர் அரசோச்சும் கூடாரமாக இருந்த தொலைக்காட்சிகளின் நடுவே கறுப்பு முகங்கள் கதைத் தலைவர்களானது மருத்துவரால்தானே நடந்தது. தொலைக்காட்சிகளில் இலக்கணம் இலக்கியம், தமிழிசை, நாட்டுப்புறக் கலைகள் புதுவாழ்வு பெற்றது மருத்துவர் ச.இராமதாசு அவர்களால்தானே நடைபெற்றன.

சென்னை நாகரில் தெலுங்கிசை தெருக்கள் தோறும் உள்ள சபாக்களில் அரங்கேறும்பொழுது தமிழ்ப்பண்ணிசை மனிமன்றம் கண்டவர் இவரல்லவா? அதனால்தான் மலேசியா உள்ளிட்ட அயல்நாடுகளில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் மருத்துவர் ச.இராமதாசு அவர்களைப் பெரிதும் மதிக்கின்றனர்.

இவரின் தைலாபுரம் தோட்டம் இளைஞர்களை, மகளிரை, அரசியல் கட்சியினரை, எழுத்தாளர்களை, கலைஞர்களை அறிவாளிகளாக மாற்றும்
பயிற்சிப் பயிலரங்காக உள்ளதை அங்குச் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

புதன், 19 டிசம்பர், 2007

தமிழகப் பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு?

தமிழகத்தில் ஆட்சிமொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அச்சட்டம் நடைமுறையில் இல்லை என்பதற்குப் பலசான்றுகள் உள்ளன.தமிழகத்தில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களின் தகவல்கள் யாவும் ஆங்கிலத்தில் உள்ளமையை இங்கு நினைவிற்கொள்க.

பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்,பதிவாளர்கள் தமிழ்ப்பற்றாளர்களாக இல்லாமையே இதற்குக்காணரம்.தமிழ்ப்பற்றுடன் விளங்கிய முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் துணைவேந்தராக விளங்கியபொழது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்
ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.அதனை மற்ற பல்கலைக்கழகத்தாரும் நடைமுறைப்படுத்தலாமே!

அயல்நாட்டினருக்கு இணையதளத் தகவல்கள் எனப் பொய்க்காரணம் புகல்வோர் அதிகம்.நம் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தமிழர்களே அதிகம்.அயல்நாட்டினர் எண்ணிக்கையை எண்ணிச் சொல்லிவிடலாம்.நிலை
இவ்வாறு இருக்க தமிழிலும் ஆங்கிலத்திலும் தகவல்கொண்ட இணையதளத்தைப் பெற்ற பல்கலைக்கழகமாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம் மட்டும் இயங்குகிறது. ஏனைய தமிழகப் பல்கலைக்கழகங்கள் தமிழில் தகவல்களைத் தராமல் ஆங்கில அடிமைகளின் கூடாரமாக விளங்குவதை எவ்வாறு மாற்றுவது?.இந்தியக் குடிமகனின் வளர்ச்சிக்கு மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்கக்கூடாது என்பதுதானே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது.

அரசின் சட்டத்தை மீறுபவர்களை என் செய்வது?அரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதானே பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாக இருக்கமுடியும் ?தொடர்புடையவர்களுக்கு எடுத்துச்சொல்வோம்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2007

தமிழ்வளர்ச்சிப்பணியில் குடந்தைக் கதிர்.தமிழ்வாணன்


குடந்தைக் கதிர் தமிழ்வாணனார்

  தமிழ்ப்பணி என்பது பல்வேறு வகையினவாக அமைகிறது. தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் எழுதுவது, பேசுவது, பயிற்றுவிப்பது, பயில்வது, ஆராய்வது என யாவுமே தமிழ்ப்பணியாகக் கருதத் தக்கனவே.இத்தகு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் சிலரே. அவர்கள் அனைவரும் தமிழ்வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அத்தகு பெருமைக்குரிய தமிழ்வாழ்க்கை நடத்துபவர்களில் குடந்தையில் வாழ்ந்துகொண்டிருக்கும் 'பாவாணர் பற்றாளர்' கதிர் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவர்களின் வாழ்க்கையை அறிந்தபொழுது அவர்மேல் அளவுகடந்த மதிப்பும், அவர்கள் செய்துவரும் பணிகளை உற்றுநோக்கியபொழுது வியப்பும் மேலிட்டு நிற்கிறது.

  திருக்குறளில் ஆழ்ந்த பற்றும், பயிற்சியும் கொண்ட கதிர் தமிழ்வாணனார் தனித்தமிழில் சொற்பெருக்காற்றும் இயல்பினர். பல கோயில்களுக்குத் தமிழ்மறைகளின் வழியில் திருக்குடமுழுக்கு நிகழ்த்திய பெருமைக்கு உரியவர். நாடு முழுவதும் பல திருமணங்களைத் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பனுவல் உள்ளிட்ட தமிழ்மறைகள் ஓதி நடத்திய பெருமைக்கு உரியவர். இவர்தம் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம்.

  கதிர் தமிழ்வாணனார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் ஊரில் திருவாளர்கள் கு.கதிர்வேல்-சாலாட்சி அம்மாள் இவர்கட்கு மகனாக 23.04.1937 இல் பிறந்தவர். குத்தாலம் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்று பின்னர் ஆசிரியர் பயிற்சிபெற்று 28-11-1961 முதல் குடந்தை நகராட்சிப்பள்ளியில் 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற மறுநாள் தமக்குத் தலைமை ஆசியரியர்களாக வாய்த்த ஆசிரியப் பெருமக்களையும் தமக்குக் கல்வி வழங்கிய கல்வி நிறுவனங்களையும் சென்று வணங்கி வந்தவர்.

  கதிர் தமிழ்வாணனார் அவர்கள் பெற்றோர்கள் வழியும் கற்றோர்கள் வழியும் தமிழ்நூல்களைக் கற்று மகிழ்ந்தவர். கல்வெட்டறிஞர் வை.சுந்தரேச வாண்டையார் உள்ளிட்ட அறிஞர்கள் வழியாகத் தமிழிலக்கிய அறிமுகம் பெற்ற இவர் தாமே கற்றுத்தகுதி பெற்றார். பாவாணரின் உலகத் தமிழ்க்கழகப் பணிகளில் முன்னின்று உழைத்தவர்.தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் பேச்சில் ஈர்ப்புண்ட இவருக்குத் திருக்குறள் பின்னாளில் வழிகாட்டி நூலாக ஆனது. தம்மிடம் பயிலும் மாணவர்கள் பலருக்குத் தமிழுணர்வும் திருக்குறள் பற்றும் ஏற்படக் காரணமாக விளங்கியவர். இவர்தம் வகுப்பறையில் நாள்தோறும் திருக்குறளை எழுதிப் போடுவதும் வீட்டு அரங்கத்தில் திருக்குறளைப் பலரின் பார்வைக்கு எழுதி வைப்பதும் இவர்தம் அன்றாடக் கடமையாகும்.

  குடந்தை நகராட்சிப்பள்ளிகள் இருபத்தொன்றிற்கும், திருவள்ளுவர் படத்தை நகராட்சியின் இசைவுடன் வழங்கித் திருக்குறள் தொண்டு செய்துள்ளார்.

 தம் வகுப்பில் பயின்ற மா.தையல்நாயகி என்னும் மாணவியின் நினைவாற்றல் அறிந்து அம்மாணவிக்குத் திருக்குறள் 1330 உம் முற்றோதல் செய்யும் பயிற்சி தந்தார்.அம் மாணவிக்குத் 'தமிழ்மறைச்செல்வி' என்னும் பட்டத்தையும் வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்.தமிழ்நாட்டரசு இவர்தம் திருக்குறள் பயிற்றுவிக்கும் பணியைப் போற்றி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அரசுவிழாவில் ஆடையும் பதக்கமும் அளிக்கப்பெற்று 'திருக்குறள் நெறித்தோன்றல்' என்னும் நற்சான்றிதழும் அளிக்கப்பட்டுப் பாராட்டப்பெற்றார்.

  தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் திருக்குறள் பேரவையில் பல பொறுப்புகளில் இணைந்து பணிபுரிந்தவர். திருக்குறள் பதின்கவனகர் பெ.இராமையா அவர்களின் திருக்குறள் திறனை அறிந்து 1979 ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக ஒருமாதம் மருத்துவ விடுப்பெடுத்துக்கொண்டு கவனகரைத் தம் இல்லத்தில் தங்க வைத்துக் குடந்தையிலும் அண்டை, அயலில் உள்ள ஊர்களிலும் திருக்குறள் கவனக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கவனகரின் ஆற்றல் மாணவர்க்குத் தெரியும்படிச் செய்தார்.திருக்குறளைத் தம் வாழ்க்கையில் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டவர். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் வழியாகப் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார் இவற்றுள் திருக்குறள் குறித்த உரைகள் குறிப்பிடத்தக்கன.

 கதிர் தமிழ்வாணனார் அவர்களின் வீட்டு மாடியில் ஒலிபெருக்கி அமைக்கப்பெற்று நாளும் திருக்குறள் ஒலிபரப்பப்படுகிறது. இவர்தம் வீட்டில் உள்ள இடங்களுக்குத் தக திருக்குறளும் தமிழ்வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. சிறுபூந்தொட்டிகளில் உள்ள எழுத்துகளை உற்று நோக்கினால் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்று எழுதி வைக்கப்பெற்றிருக்கும் பாங்கினைக் காணும்பொழுது தமிழின்பம் பெறலாம். அதுபோல் மின்விசிறியின் இறக்கை மூன்றிலும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என எழுப்பட்டிருப்பதைக் காணும் யாவரும் வியந்து நிற்பர்.

  அயல்நாட்டுக்காரர்களும், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் இவர் வீட்டுத்தமிழை வியப்பர். அதனால்தான் குமுதம், தேவி, இதயம்பேசுகிறது முதலான பல்வேறு புகழ்பெற்ற ஏடுகளும் வீட்டில் நடைபெறும் தமிழ்ப்பணியை நாட்டுக்கு எடுத்துரைத்தன போலும்.

  மொழிஞாயிறு பாவாணர் அவர்களைத் தம் அறிவாசானாக ஏற்றுக்கொண்ட கதிர் தமிழ்வாணனார் பாவாணரின் வழியில் 1987 இல் நீடாமங்கலம் மருத்துவர் மறையரசன் அவர்களுடன் இணைந்து 4 கட்டங்களாக 1000 குழந்தைகளுக்குத் தனித்தமிழில் பெயர் சூட்டி மகிழ்ந்தார். 1990 இல் குடந்தையில் உள்ள ஆயிரம் கடைப்பெயர்களை ஆய்வு செய்து தாமே தமிழ்ப்பெயர்களை வைத்திருந்த கடை உரிமையாளர்களைப் பாராட்டி மகிழ்ந்தார்.

  ஆரவார நாகரிகத்திற்கு ஆட்படாத இவர் இதுவரை கே.பி.சுந்தராம்பாள் நடித்த அவ்வையார் படம் மட்டும் பார்த்தவர்.தம் மனைவியாரும் பிள்ளைகளும் தம் வழியில் நிற்கும் படி வாழ்பவர். பாவாணர் தனித்தமிழ்ப்பயிற்றகம் என்னும் அமைப்பை நிறுவி உள்கோட்டை, குத்தாலம், தஞ்சாவூர், திருவையாறு என ஒவ்வொரு ஊருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று தனித்தமிழ்ப்பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்திவருகின்றார்.

  பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனாரின்மேல் அன்பு கொண்ட இவர் அவர் தம் பெருமையைக் குடந்தைப் பகுதியில் நிலைநாட்டிவருபவர்.

  குடும்பவிழாக்கள், சடங்குகள், கோயில் பணிகள், திருமணம், வகுப்பறை என அனைத்து நிலைகளிலும் தூய தமிழ் பயன்படுத்தும் கதிர் தமிழ்வாணனார் வள்ளுவர் வழியிலும் வள்ளலார் வழியிலும் வாழ்பவர்.தம் மறைவுக்குப்பிறகு தம் உடலையும் கண்ணையும் பிறருக்கு உதவும் படியாக மருத்துவமனைக்கு அன்பளிப்பாக வழங்கி இசைவுதெரிவித்து ஒப்புதல் வழங்கியுள்ளார்.தாம் இதுநாள்வரை பயன்படுத்திய, தொகுத்து வைத்திருந்த அரிய நூல்களை மாணவர்களுக்குப் பயன்படும்படியாக நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் . தமிழுணர்வும்,இறையுணர்வும் கொண்ட கதிர் தமிழ்வாணனார் அவர்கள் குடந்தைப்பகுதியில் வாழும் தமிழறிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

முகவரி:

குடந்தைக் கதிர் தமிழ்வாணனார்
பாவாணர் இல்லம்
54,செல்வராசு நகர்,
குடந்தை -612001,தமிழ்நாடு,இந்தியா
பேசி: + 9364212184

செவ்வாய், 11 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்


சட்டப்பேரவைத்தலைவர்
மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன் அவர்கள்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்


பயிலரங்கில் பயிற்சி பெறுவோர்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்


பாரதிதாசன் பல்கலைக்கழகத்துணைவேந்தர்
முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்


மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன் அவர்கள்
சட்டப்பேரவைத்தலைவர்,புதுச்சேரி

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு நிகழ்ந்தமுறை...

  புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டு நண்பர்கள் பலரின் உடலுழைப்பாலும்,பொருளுதவியாலும் 09.12.2007 ஞாயிறு காலை 09. 00 மணி முதல் இரவு 08.30 மணிவரை புதுச்சேரி சற்குரு உணவகத்தின் கருத்தரங்க அறையில் சிறப்பாக நடைபெற்றது.

  காலை 9-00 மணிக்குப் பங்கேற்பாளர்களின் பதிவு தொடங்கியது.நிகழ்ச்சியில் 98 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டு பயிற்சிபெற்றனர். 9-30 மணிக்கு நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தைக் கோ.சுகுமாரன் அவர்கள் வழங்கினார் அவரைத்தொடர்ந்து தமிழா முகுந்த் அவர்கள் தமிழ் எழுத்துருக்களின் செயலிகளை எவ்வாறு நிறுவுவது எனச்செயல் விளக்கம் அளித்தார். இடையிடையே சென்னை நண்பர்களும் முகுந்துடன் இணைந்து கொண்டனர். இரா.சுகுமாரன் இளங்கோ செயலி நிறுவுவதை விளக்கினார்.

  காலை 10.00 முதல் 10.30 வரை முனைவர் மு.இளங்கோவன் தமிழ் 99 தட்டச்சுப் பலகையின் வருகை, பயன்பாடு, நிறை, குறைகளைப் பகிர்ந்து கொண்டார். மா.சிவகுமார் இடையில் வந்து அவையின் இறுக்கத்தைக் குறைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார். பங்கேற்பாளர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு விளக்கம் தரப்பட்டது.

  10.30 முதல்11.00 மணி வரை க.அருணபாரதி கணினியில் தமிழ்ப்பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.இதில் மின்னஞ்சல் வசதி,அரட்டை பற்றி விவாதிக்கப்பட்டது.  இவ்வாறு நடைபெற்ற பயிலரங்க நிகழ்வுகளை ஓசை செல்லா, வினையூக்கி, சிவகுமார் முதலானவர்கள் தமிழ்வெளி, தமிழ்மணம் முதலான தளங்கள் வழியாகப் படத்துடன் நேரடி ஒளிபரப்புச் செய்தனர்.

  தேநீர் இடைவேளைக்குப்பிறகு உபுண்டு இராமதாசு அவர்கள் தமிழில் உள்ள இயங்குதளங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 12.00 -12.30 வரை முகுந்த் இணைய உலவிகளான பயர்பாக்சு பற்றிப்பேசினார்.

  12.30 -1.00 மணிவரை முனைவர் மு.இளங்கோவன் தமிழில் உள்ள தரவுதளங்கள், இணையதளங்கள், இணைய இதழ்கள், வலைப்பூக்கள் பற்றி விரிவாகப்பேசினார். விக்கிபீடியா, விருபா, நூலகம், சென்னை நூலகம், மதுரைத் திட்டம், திண்ணை, பதிவுகள் பற்றி விரிவாகப் பேசி சிறப்புமலரில் உள்ள தம் கட்டுரையில் தமிழில் உள்ள தளங்களைப் பற்றிய பட்டியல் உள்ளதை அவைக்கு நினைவூட்டினார்.

பகலுணவுக்குப்பிறகு 2.00- முதல் 3.00 மணிவரை முனைவர் நா.இளங்கோ அவர்கள் வலைப்பதிவு அறிமுகம் என்னும் பொருளில் பல்வேறு செய்திகைப் பகிர்ந்துகொண்டார். அவர் உரைக்குப்பிறகு அரங்கில் பொருத்தப்பட்டிருந்த கணிப்பொறிகளில் பயிற்சி வழங்கப்பட்டது. இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பலர் மின்னஞ்சல் முகவரி உருவாக்கிக் கொண்டனர். பலர் வலைப்பூ உருவாக்கிக்கொண்டனர். மா.சிவகுமார், வினையூக்கி, வெங்கடேஷ் முதலான தோழர்கள் இதில் பெரும்பங்காற்றினர்.

பிற்பகல் 3.00 மணிக்கு வலைப்பூவில் படம் இணைப்பது,ஓசை இணைப்பது பற்றி பிரேம்குமார்,ஓசை செல்லா பயிற்சியளித்தனர். இடையிடையே வேறு நண்பர்களும் இணைந்துகொண்டனர். பயிற்சிக்கு வந்திருந்த முத்துராசுவின் கவிதை வாசிப்பைப்பதிவு செய்து ஓசை செல்லா அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இரா.சுகுமாரன் திரட்டிகளில் இணைப்பது உட்பட பல தகவல்களை அவ்வப்பொழுது வழங்கினார். மா.சிவகுமார் திரட்டிகளில் இணைப்பது பற்றி இடையிடையே விளக்கினார். தூரிகா வெங்கடேஷ் கூட்டு வலைப்பதிவு உட்பட பல தகவல்களைப்பகிர்ந்துகொண்டார்.

இணைய இதழ்களில் எழுதுவது பற்றி முனைவர் மு.இளங்கோவன் விளக்கினார். திண்ணை, பதிவுகள், சிபி, வணக்கம் மலேசியா முதலான இதழ்களில் எழுதுவது பற்றி விளக்கினார்.இவ்வாறு பயிலரங்கு நிறைவுநிலைக்கு வந்தது.

பயிற்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. மைசூர் செம்மொழி நிறுவன நண்பர்கள், பேராசிரியர் மயிலாடுதுறை நெடுஞ்செழியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் தங்கள் நிறைவான கருத்துகளை எடுத்துரைத்தனர்.

மாலை 6.30 மணியளவில் நிறைவுவிழா தொடங்கியது.

பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமை தாங்கினார். கோ.சுகுமாரன் முன்னிலை வகித்தார்.க.அருணபாரதி வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் நா.இளங்கோ தொடக்கவுரையாற்றினார். பேராசிரியர் மு.இளங்கோவன் நோக்கவுரை யாற்றினார். பராதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் கருத்துரை வழங்கினார். கணிப்பொறி, இணையவரலாறு, தமிழ் இணையத்தில் இடம்பெற்றமை, தமிழ் ஒருங்குகுறி குறித்துள்ள சிக்கல்கள், முழுமையான ஒருங்குகுறி இடம்பெற உள்ள நிலை இவற்றை நிரல்பட விளக்கினார். தமிழ்மொழி அனைத்து நிலைகளிலும் இடம்பெறவேண்டியதன் தேவை பற்றி எடுத்துரைத்தார். பயிற்சிப்பட்டறை என்பதைவிட பயிற்சிப் பயிலரங்கு என்றிருப்பதன் பொருத்தப்பாட்டை விளக்கினார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன் அவர்கள் நிறைவுரை யாற்றினார். தமிழ்வளர்ச்சிக்குப் புதுவை அரசு தொடர்ந்து பாடுபடும் எனவும், கணிப்பொறியில் தமிழ் இடம்பெறுவதற்கு இயன்ற உதவிகளைச்செய்ய அணியமாக இருப்பதாகவும் உறுதியளித்தார். பயிலரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது

தூரிகா வெங்கடேஷின் நன்றியுரையுடனும் நாட்டுப்பண்ணுடனும் இரவு 8.30 மணிக்கு விழா இனிதே நிறைவடைந்தது.

சனி, 8 டிசம்பர், 2007

விடிந்தால் திருமணம்....

உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ்வலைப்பதிவு நண்பர்களே!

நாளை (09.12.2007) ஞாயிறு காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை
புதுச்சேரியில் தமிழ் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையும், மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நிறைவு விழாவும் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறன.100 கணிப்பொறி ஆர்வலர்கள் பயிற்சி பெறுகின்றனர். புதுவை, தமிழகம், மைசூர், பெங்களூரு முதலான இடங்களிலிருந்து பயிற்சிபெற பலர் வருகின்றனர்.

புதுவை முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி, சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர். பட்டறை நிகழ்வுகள் உடனுக்குடன் உலகுக்கு அறிவிக்கும்படி இணைய ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

தமிழ் வளர்ச்சிக்கான முயற்சியை வாழ்த்துங்கள் நண்பர்களே!

வெள்ளி, 7 டிசம்பர், 2007

மக்கள் தொலைக்காட்சி இப்பொழுது நேரடி இணைப்பில்(D.T.H)...

மக்கள் தொலைக்காட்சி உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப்பற்றாளர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் தொலைக்காட்சியாக உள்ளது. இத் தொலைக்காட்சியில் திரைப்படம் தவிர்ந்த, தமிழ்ப்பண்பாட்டை வலியுறுத்தும் வண்ணம் தமிழ்க்கூடல், சொல்விளையாட்டு, செய்திகள், வணிகம் சார்ந்த நிகழ்ச்சிகள், பயனுடைய பொழுதுபோக்குகள், மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்பாகி உலக அளவில் அனைவராலும் விரும்பப்படுகிறது.

கம்பி வசதி இல்லாதவர்களும்,பிற தொலைக்காட்சிகளைப் பார்க்க விரும்பாதவர்களும் பயன்பெறும் வண்ணம் செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக வீட்டிற்கு இணைப்பு நல்கும் வகையில்(D.T.H) வழியாக மக்கள் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகள் அண்மைக்காலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்தியாவின் எந்த ஊரிலிருந்தும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இனி மக்கள் கண்டு மகிழலாம். மாத வாடகை இல்லாமல் தொடக்கத்தில் ஆகும் செலவுடன் நிகழ்ச்சிகளைக் காணலாம். 1500 உரூவாவிலிருந்து 2500 உரூவா வரை முதற்கட்ட செலவு செய்தால் மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட சில தமிழ் ஒளிபரப்புகளைக் கண்டு மகிழலாம். மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். தமிழர்களாக வாழ்வோம். பிற நாட்டினரின் பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்.

சனி, 1 டிசம்பர், 2007

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் வரவேற்பு

மலேசியாவிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் 34 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குச் சுற்றுச் செலவாக வந்துள்ளனர். பல்வேறு கல்வி நிறுவனங்கள், தமிழ் எழுத்தாளர்களைச் சந்தித்து மலேசியத்தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்வது இவர்களின் வருகையின் நோக்கமாகும். தமிழக அரசு இவ்வருகையை ஊக்குவிக்கும் முகமாகப் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. 

மலேசிய எழுத்தாளர்குழு நேற்று (30.11.2007) வெள்ளிக்கிழமை புதுச்சேரி வந்தது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய எழுத்தாளர்கள் தங்கள் இலக்கிய நிலைகளைப் பகிர்ந்த்துகொண்டனர். புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார். 

புதுவை அறிஞர்கள், எழுத்தாளர்கள், கல்விப் புலத்தைச் சார்ந்தவர்கள், பல்வேறு கலை, இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். புலவர் சீனு. இராமச்சந்திரன், கல்வி வள்ளல் வி. முத்து, ஆதவன் உள்ளிட்ட தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்களும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தினரும் விழாவைச் சிறப்புடன் நடத்தினர்.

 இருநாட்டு எழுத்தாளர்களும் அறிமுகமாகித் தங்கள் படைப்புகள், எழுத்துப் பணிகளைப் பரிமாறிக்கொண்டனர். 01.12.2007 இன்று புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறையில் மலேசியத்தமிழ் இலக்கியங்கள் குறித்த கருத்தரங்கில் எழுத்தாளர்கள் கட்டுரை படிக்கின்றனர். பேராசிரியர் சபாபதி, கார்த்திகேசு, முரசு.நெடுமாறன். இராசேந்திரன், புண்ணியவான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் வந்துள்ளனர்.