நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 டிசம்பர், 2019

கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் – பேராசிரியர் தெ. முருகசாமி சிறப்புரை – காணொலி!





 தமிழ் உணர்வு தழைத்த உறவுடையீர்!

 உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரிக் கிளையின் சார்பில் 20.12.2019 மாலை, புதுவை செகா கலைக்கூடத்தில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள். பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்குப் புதுவைத் தமிழறிஞர்களும், பெங்களூரிலிருந்து திருவாளர் பார்த்தசாரதி அவர்களும், மெல்பர்ன் தமிழ்ச்சங்கத் தலைவர் பொறியாளர் ந. சுந்தரேசன் அவர்களும், சென்னையிலிருந்து திரு. சேது அவர்களும் வருகைபுரிந்து, நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

 பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் தொல்காப்பியத்திலும், கம்பராமாயணத்திலும், பிற தமிழ் நூல்களிலும் பெரும் புலமை பெற்றவர்கள். எனவே, பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்கி, இவ்வுரையை அமைத்த பேராசிரியர் அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு ஊக்கம் நல்கி, உதவிய அனைவருக்கும் நன்றியுடையோம். இக்காணொலியைக் கண்ணுறும் அன்பர்கள் தங்கள் நண்பர்களையும் கண்டு, தமிழின்பம் பெற வலியுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்த்தாயின் திருவடிக்கு இவ் ஆவண மலரினைப் படையலிடும் இப்பிறவி நினைந்து மகிழ்கின்றோம்.

காணொலி கேட்க இங்கு அழுத்துங்கள்.

வியாழன், 26 டிசம்பர், 2019

“செம்மொழி” இதழாசிரியர் எம்.இலியாஸ் அவர்கள் நீடு வாழ்க!


எம்.இலியாஸ்
(ஆசிரியர்- செம்மொழி)

 சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் செம்மொழி இதழின் ஆசிரியரும், தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளரும், எங்களின் நெஞ்சம் நிறைந்தவருமான அண்ணன் எம். இலியாஸ் அவர்களின் பிறந்த நாளான (திசம்பர் 26) இன்றைய நாளில் அவரைப் போற்றி வாழ்த்துவதில் நெஞ்சம் நிறைவடைகின்றேன்.

 கோவை செம்மொழி மாநாட்டில் தொடங்கிய எம் நட்பு, வளர்பிறைபோல் வளர்ந்து, சிங்கப்பூர் செல்லும்பொழுதெல்லாம் கண்டு உரையாடும் குடும்பநட்பாக மலர்ந்துள்ளமை நினைத்து, மகிழ்கின்றேன்.

 எம்.இலியாஸ் அவர்கள் சிறந்த பேச்சாளர்; கட்டுரையாசிரியர்; பன்னூலாசிரியர்; அரசியல் தலைவர்களுடனும், தமிழறிஞர்களுடனும் நெருங்கிப் பழகுபவர்; இளையவர்களையும் முதியவர்களையும் ஒருசேரப் போற்றும் உயர்ந்த உள்ளத்தினர். அனைவருடனும் நல்ல தொடர்பில் இருப்பவர்.

 சிங்கப்பூர் அதிபராக விளங்கிய மாண்பமை எஸ்.ஆர். நாதன் அவர்களின் அன்பைப் பெற்றவர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்களின் உள்ளம் நிறைந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கவிக்கோ, நாகூர் ஹனிபா உள்ளிட்ட பெருமக்களின் தொடர்பைப் போற்றி மதித்தவர்.

 சிங்கப்பூர் செல்லும் தமிழ் ஆர்வலர்களுக்கு நிழல்தரும் மரமாகவும், பயன்தரும் மரமாகவும் விளங்கும் பெருந்தகையாளர்.

 திருமுல்லைவாசலைப் பிறப்பிடமாகக் கொண்ட அண்ணன் எம்.இலியாஸ் அவர்கள் தமிழகத்தையும் சிங்கப்பூரையும் இணைக்கும் தமிழ்ப்பாலமாக விளங்குபவர். இவரின் செம்மொழி இதழ்ப்பணியும், தமிழவேள் கோ.சாரங்கபாணியாரை முன்னிலைப்படுத்திச் செயல்படும் செயல்பாடுகளும், சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகளுக்குத் துணைநிற்கும் இவரின் பெரும்பண்பும் இவருக்கு நிலைத்த புகழைத் தரும். அண்ண! சுற்றமும் நட்பும் சூழ, நீடு வாழி!



வெள்ளி, 20 டிசம்பர், 2019

கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் சிறப்பு உரையரங்கம்!




  மெல்பர்ன் தமிழ்ச்சங்கத் தலைவர் ந. சுந்தரேசனுக்குத் 
தொல்காப்பியத் தொண்டர் விருதளித்து மகிழும் 
உலகத் தொல்காப்பிய மன்றத்தார்.

புதுச்சேரி, உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் 20.12.2019 மாலை, செகா கலைக்கூடத்தில் கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் என்னும் தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. பிரான்சு பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் தெ. முருகசாமி “கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தை உள்வாங்கிக்கொண்டு, கம்பர் தம் இராமாயணத்தை எழுதியுள்ள சிறப்பினைத் தக்க மேற்கோள்கள் கொண்டு இந்த உரையரங்கில் பேராசிரியர் தெ. முருகசாமி நிறுவினார். மேலும் தொல்காப்பியர் குறிப்பிடும் “மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்”, “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”, “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ”, “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” என்னும் நூற்பாக்களோடு பொருந்திப்போகும் கம்பராமாயண வரிகளை எடுத்துரைத்தும். தொல்காப்பியர் குறிப்பிடும் வேற்றுமைகள், இடைச்சொற்களைக் கம்பர் பயன்படுத்தியுள்ள பாங்கினை எடுத்துக்காட்டியும், தமிழ் இலக்கிய உலகில் ஒரு முன்னோடிப் புலவராக கவிச்சக்கரவர்த்தி கம்பர் விளங்கியமையை எடுத்துரைத்தார்.

ஆத்திரேலியாவின், மெல்பர்ன் தமிழ்ச் சங்கத் தலைவர் பொறியாளர் ந. சுந்தரேசனுக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருது அளித்து உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் பாராட்டப்பட்டது. நற்றமிழ் நாவரசி பூங்குழலி பெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார்., முனைவர் தூ. சடகோபன் நன்றியுரை வழங்கினார்.  பெங்களூரிலிருந்து திரு. பார்த்தசாரதி கலந்துகொண்டு நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்ந்தார். தமிழறிஞர்களும், தொல்காப்பிய ஆர்வலர்களும் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையுரை

பேராசிரியர் தெ. முருகசாமி சிறப்புரை


புதன், 11 டிசம்பர், 2019

பட்டி சு.செங்குட்டுவனாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!



பட்டி. சு. செங்குட்டுவன்


  பட்டி சு. செங்குட்டுவன் என்று நடுநாட்டுப் படைப்பாளர்களால் பெரும் மதிப்புடன் அழைக்கப்பட்ட ஆசிரியர் பெருமான் பட்டி சு. செங்குட்டுவன் ஐயா இன்று(11.12.2019) இயற்கை எய்தினார் என்ற செய்தியை நண்பர் புகழின் பதிவு வழியாக அறிந்து பெருந்துயருற்றேன். பட்டியுடன் கால்நூற்றாண்டு காலம் பழகியுள்ளேன்.

  1997 இல் நான் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றியபொழுது, பட்டி சு. செங்குட்டுவனாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன். அவர் அப்பொழுது செஞ்சிக்கோட்டைக்கு அருகில் உள்ள பெருவளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பேசுவதற்கு (1997) எம்மை அழைத்திருந்திருந்தார். நானும் பேராசிரியர் ஒப்பிலா. மதிவாணன் அவர்களும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றச் சென்றோம். பேருந்தில் இறங்கி, உள்ளடங்கியிருந்த அந்த ஊருக்கு எங்களை அழைத்துச் செல்ல இரண்டு மாணவர்கள் வந்திருந்தனர். நாங்களும் உரிய நேரத்தில் சென்று, உரையாற்றினோம்.

பெருவளூர்ப் பள்ளி என்பது நான் பயின்ற பள்ளிபோல் சிற்றூர்ப்புறத்தின் சிற்பம் போல் இருந்தது. நாட்டுப்புறப் பாடல்களில் கும்மி, கோலாட்டம், ஒப்பாரிப் பாடல்களைப் பாடி நான் விளக்கியதால் மாணவர்களும் தாய்மார்களும் குழுமி, எங்களை அழைத்து வந்த பட்டியாரை நெஞ்சாரப் பாராட்டினார்கள். பட்டியும் எங்கள் அறிவார்வத்தை, அப்பகுதி மக்களுக்கு அறிமுகம் செய்து போற்றினார். அதன் பிறகு தொடர்ந்து நட்பில் இருந்தோம். கலை இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு, நெஞ்சு நிறைவாகப் பேசி மகிழ்ந்தோம்.

  அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்த பட்டி. சு. செங்குட்டுவன் ஐயா இயற்கை எய்திய செய்தி ஈட்டியால் நெஞ்சாங்குலையில் குத்தியதுபோல் எம்மைத் தாக்கியது. திருமுதுகுன்றப் பகுதியில் கலை இலக்கிய முயற்சியில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபட்ட நல் உள்ளம் இயற்கையில் இன்று கரைந்தமை வருத்தம் தருகின்றது. அன்னாரைப் பிரிந்துவருந்தும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.



வெள்ளி, 29 நவம்பர், 2019

தொல்காப்பியம் குறித்த பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களின் சிறப்புரை!


பேராசிரியர் பா. வளன் அரசு 

தமிழகத்தின் மூன்று பேராசிரியர்களை நான் அடிக்கடி நினைவுகூர்வது உண்டு. முனைவர் மு.தமிழ்க்குடிமகன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் பா. வளன் அரசு ஆகியோர் அவர்கள். தூய தமிழ் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்த பெருமக்கள். முன்னிருவர் இயற்கை எய்தினர். மூன்றாமவர் இன்றும் நெல்லைப் பகுதியில் தனித்தமிழ் பரப்பும் பல்வேறு பணிகளைச் செய்வதுடன் தமிழகத்திலும், கடல் கடந்தும் சொற்பெருக்காற்றித் தமிழ் வளர்த்து வருகின்றார். பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களைத் தொல்காப்பிய நூலினை அறிமுகம் செய்து, உரையாற்றுமாறு வேண்டினோம். குற்றால அருவிபோலும் அவர்தம் பொழிவு அமைந்தது. கடல்மடை திறந்தாற்போல் பல்வேறு செய்திகளைக் கொட்டி முழக்கினார்கள். இத்தகு பெருமைக்குரிய உரையைத் தமிழார்வலர்கள் கேட்பதுடன் கல்லூரி, பல்கலைக்கழகத்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

பேராசிரியர் பா. வளன் அரசு அவர்கள் நெல்லை, பாளையங்கோட்டையில் வாழ்ந்து வருபவர். தூய சேவியர் கல்லூரி, தூய யோவான் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றவர். வீரமாமுனிவரின் தேம்பாவணி குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மாணவர்களின் உள்ளத்துள் பதியும் வண்ணம் வகுப்புகளை நடத்துவதில் கைதேர்ந்தவர். திருக்குறள் ஈடுபாடும் தனித்தமிழ் ஈடுபாடும் நிறைந்த பெருமகனாரைத் தொல்காப்பியம் குறித்து உரையாற்றச் செய்து, உலகத் தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் வைக்கின்றோம்.

தமிழ்த்தாயின் திருவடிகளுக்கு ஓர் எளிய மாணவன் சூட்டும் அணிகலன் இக்காணொளி ஆகும். ஆவணமாக்குவதில் துணைநின்ற அனைவருக்கும் நன்றியுடையோம். எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்தும் தங்களுக்குத் தமிழ்த்தாயின் திருவருள் உரியதாகுக!

பேராசிரியர் பா. வளன் அரசு உரை கேட்க / பார்க்க இங்கு அழுத்துக!

ஞாயிறு, 24 நவம்பர், 2019

தொல்காப்பிய அறிஞர் வீ. செந்தில்நாயகம்


புலவர் வீ. செந்தில்நாயகம்

நான்காண்டுகளுக்கு முன்னர் நெல்லை, பாளையங்கோட்டையில் மாநிலத் தமிழ்ச் சங்க அரங்கில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடச் சென்றிருந்தேன். அப்பொழுது நடைபெற்ற சிறப்பு உரையரங்கில் புலவர் வீ. செந்தில்நாயகம் ஐயா கலந்துகொண்டு, உரையாற்றினார். தொல்காப்பியத்தில் அவருக்கு இருந்த புலமையைப் பேராசிரியர் பா. வளன் அரசு அதுபொழுது விதந்து பேசினார். அப்பொழுதே புலவர் வீ. செந்தில்நாயகம் ஐயாவின் பேச்சினைப் பதிந்து பாதுகாக்க நினைத்தேன். நான்காண்டுகள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் என் எண்ணம் ஈடேறாமல் இருந்தது. அண்மையில் அமைந்த நெல்லைப் பயணத்தில் தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து உரையாற்றுமாறு புலவரை வேண்டினோம். புலவர் வீ. செந்தில்நாயகம் ஐயாவும் அன்புடன் இசைந்தார்கள் (தொல்காப்பியம் குறித்த இவரின் காணொளி உரை விரைந்து இணையத்தில் வெளிவரும்).

புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களை ஒத்த பெரும் புலமையாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் நிலையில்தான் இன்று உள்ளது. கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்களில் இத்தகையோரைக் காண்பது அரிது. தொல்காப்பியரைத் தொடர்வோம் என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக இவர் உருவாக்கியுள்ள தொல்காப்பியச் செய்திகளை உரைநடையில் வழங்கும் நூலைப் பேராசிரியர் பா. வளன் ஐயா அளித்து, இந்தச் சந்திப்பில் என் முயற்சிகளை ஊக்கப்படுத்தினார்கள்.

புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களுடன் அமைந்த உரையாடலில் அவர்தம் கல்வியார்வம், தமிழ்ப் புலமை நலம், குடும்பநிலை, பணிநிலை யாவும் அறிந்து மகிழ்ந்தேன். இத்தகு மூத்த அறிஞர் பெருமக்களின் வாழ்வியலை எழுதி, இணையத்தில் பரவலாக்கும் இத் தமிழ்ப்பிறவி எண்ணி எண்ணி மகிழ்கின்றேன்.

புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:

  வீ. செந்தில்நாயகம் அவர்கள் நெல்லை மாவட்டம் விக்கிரம சிங்கபுரத்தில் வாழ்ந்த நா. சு. வீரபாகு பிள்ளை, சண்முக வேலம்மாள் ஆகியோரின் மகனாக 18.02.1942 இல் பிறந்தவர்.  நெல்லை அரசு மாதிரிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றவர் பிறகு விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளர் நல உரிமைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை பயின்றவர். 1960 முதல் 1964 வரை  திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றவர். இவர் திருபனந்தாளில் பயிலுங்காலத்தில் பேராசிரியர்கள் கா. ம. வேங்கடராமையா, தா.மா. வெள்ளைவாரணம், மு. சுந்தரேசம் பிள்ளை, சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் பேராசிரியர்களாக விளங்கினர். இவர் பயிலுங்காலத்தில்  கடையத்தில் வேலை பார்த்த முத்தரசன், குலசேகரப்பட்டினம் சார்ந்த இலக்குவனார், ஆண்டிப்பட்டி சீனிவாசன்  உள்ளிட்ட நண்பர்கள் தம் படிப்புக்கு உதவினர் என்று செந்தில்நாயகம் தம் நன்றியுடைமையைப் புலப்படுத்துவது உண்டு. நம் புலவர் அவர்கள் பயிலுங்காலத்தில் பகலுணவும், இரவுணவும் திருமடத்தில் இலவசமாக வழங்கப்பட்டன என்பது வரலாறு. பின்னர் நம் புலவர் அவர்கள்  பி.லிட், முதுகலைத் தமிழ், இளங்கல்வியியல் பட்டம் உள்ளிட்டவற்றைப் பெற்றவர். திரு. இருதய நடுநிலைப்பள்ளியில், தமிழாசிரியராகவும் (1964), புதுக்கோட்டையில் தமிழாசிரியர் பயிற்சி பெற்ற பிறகு 1967 இல் பத்தமடை இராமசேசன் உயர்நிலைப்பள்ளியில்  முதுகலைத் தமிழாசிரியராகவும் பணியாற்றி 1999 இல் ஓய்வுபெற்றவர்.

வீ. செந்தில்நாயகம் அவர்களின் பெரும்புலமையை அறிந்த இவர்தம் பள்ளித் தலைமையாசிரியர் இவரின் வகுப்பில் கடைசி இருக்கையில் அமர்ந்து பாடம் கேட்பது உண்டு. இவர் பணிபுரிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வடமொழி அறிந்தவர் என்பதால் வடமொழி இலக்கியங்களை இவருக்கு அறிமுகம் செய்தமையும் உண்டு. பத்தமடையில் பணிபுரிந்தபொழுது, சிவானந்த மகராசி அவர்கள் இவரின் கம்பராமாயணப் பொழிவு நடைபெற உதவி, இரண்டரை ஆண்டுகள் தொடர்பொழிவு நடைபெறுவதற்குத் துணைநின்றார். அம்பாசமுத்திரம் “சைவத் தமிழ் அண்ணல்” நடராச முதலியார் அவர்கள் நம் செந்தில்நாயகம் அவர்களின் கம்பராமாயணப் பொழிவு விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற வழி செய்து, பொழிவின் நிறைவுநாளில் நம் புலவரை யானை மீது அமர்த்தி, ஊர்வலம் வரச் செய்து பெருமைப்படுத்தினார்கள். பெரியபுராணம் குறித்த தொடர்பொழிவு ஏரல் என்னும் ஊரில் நம் புலவரால் நடத்தப்பட்டுள்ளது.

தம் பணியோய்வுக்குப் பிறகு நெல்லை, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், காந்தி கதை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைத் தொடர்பொழிவுகளின் வழியாக இலக்கிய ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்துவருகின்றார் நம் செந்தில் நாயகம் ஐயா!

   தமிழ்த்தொண்டில் நிலைபெற்று நிற்கும் வகையில் பல நூல்களை எழுதித் தம் புலமைநலம் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்க, இத்தமிழ்த் தொண்டர் ஆவன செய்துள்ளார். இவ்வகையில் சற்றொப்ப இருபது நூல்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளன.

வீ. செந்தில்நாயகம் அவர்கள் 1967 இல் திருவாட்டி கோமதி அவர்களைத் திருமணம் செய்து, மணவினைப் பயனாக மூன்று மக்கட் செல்வங்களைப் பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றார்.

வீ. செந்தில்நாயகம் அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி, அருவிப் பொழிஞர், சொல்லின் செல்வர், பெரியபுராணப் பேராழி, கம்பராமாயணக் கடல், சைவ சித்தாந்தப் பேராசான், தென்பாண்டித் தமிழாசான், திருக்குறள் செம்மல், திறனாய்வுத் தென்றல் உள்ளிட்ட விருதுகளைப் பல்வேறு இலக்கிய அமைப்புகள் வழங்கியுள்ளன.




புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களின் தமிழ்க்கொடை:

1.   தோள் கண்டார் (1989)
2.   வள்ளுவம் (1992)
3.   திருக்குறள் அதிகாரமுறை நாடகங்கள் (அறம்) ( 2001)
4.   திருக்குறள் அதிகாரமுறை நாடகங்கள் ( இன்பத்துப்பால்) (2001)
5.   கனிமொழி காதலன் (2001)
6.   புதிய எளிய பதிற்றுப்பத்து (2002)
7.   அம்மா ஆத்திசூடி (2002)
8.   வாலியும் வாளியும் வாழியர் (2003)
9.   கீதாந்தம் (2005)
10. திருவாசகம் - எளிய உரைநூல் (2009)
11. காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் (2009)
12. செங்கோட்டை அறம் வளர்த்த நாயகி அந்தாதி (2009)
13. தண்ணீர்தேசம் பன்னீர்பூக்கள் (2009)
14. திருக்குறளும் சைவமும்( 2013)
15. தொல்காப்பியத் தொடர் சிந்தனைகள் (2015)
16. இராமாநுஜரின் காந்தி காவியம் (2016)
17. திருக்குறள் காமத்துப்பால் எளிமை இனிமை (2016)
18. சிலப்பதிகாரம் சுருக்கம் (2018)
19. தொல்காப்பியரைத் தொடர்வோம் (இருதொகுதிகள்) (2019)

தொல்காப்பியம் குறித்த புலவர் வீ. செந்தில்நாயகம் அவர்களின் காணொளி கேட்க இங்கே அழுத்துக!

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகள், படங்களை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

புதன், 20 நவம்பர், 2019

திருக்குறள்தொண்டர் தமிழ்க்குழவி வாழ்க!



தமிழ்க்குழவி

தமிழை வணிகப் பொருளாக்கி, கல்வி நிறுவனங்களை – பல்கலைக் கழகங்களைச் சீரழிக்கும் கல்விக்கதிரவன்கள்” நடுவில் தமிழகத்தின் வெளிச்சம்படாத இடங்களில் இருந்துகொண்டு நற்றமிழ்த் தொண்டு செய்பவர்களை நாம் கொண்டாடுதல் வேண்டும். போற்றுதல் வேண்டும். அப்பொழுதே தமிழ் வளரும். தமிழுக்குத் தொண்டு செய்த புலவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், அருட்தந்தையர்கள், அருளாளர்கள, கொடை வள்ளல்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு உரைத்தல் அரிது. ஆம்!

அண்மையில் நாகர்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. நண்பர்கள் ஓரிருவர் என்னுடன் வந்தனர். நெல்லையிலிருந்து எங்களுக்கு நெறிகாட்டி அழைத்துச் சென்றவர் திருவாளர் இராமசாமியார். நாகர்கோவில் பயணத்தின்பொழுது கட்டாயம் நாம் தமிழ்க்குழவியைச் சந்திக்க வேண்டும் என்றார். தமிழ்க்குழவி யார்? என்றேன். தமிழ்க்குழவி அவர்கள் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்களை எழுதியுள்ளார் எனவும், பிள்ளைகளுக்கு ஞாயிறுதோறும் திருக்குறள் பயிற்றுவித்து, முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் 1330 திருக்குறளையும் சொல்லத் தக்க வகையில் பயிற்சியளித்து, தமிழக அரசின் பத்தாயிரம் உருவா பரிசில் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் என்றும் அறிந்து, மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். நான் செய்யச் சென்ற பணியை ஒதுக்கிவைத்து, முதற்பணியாகத் “திருக்குறள் தொண்டர்” திருவாளர் தமிழ்க்குழவி இல்லம் சென்றேன். “களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்” என்று மழலைச் செல்வங்கள் திருக்குறளை உரக்கச் சொல்லி, மனப்பாடம் செய்தவண்ணம் இருந்தனர்.

நாங்கள் சென்ற நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழ்க்குழவியின் இல்லத்தில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தானிகளில் ஆர்வமுடன் திருக்குறள் கற்க, அழைத்துவந்து விடுவதும் திரும்ப அழைத்துச் செல்வதுமாக இருந்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் திருக்குறள் நூலினைக் கையில் வைத்தபடி, திருக்குறளைப் படித்தும், மனப்பாடம் செய்து ஒப்புவித்தவாறும் காணப்பட்டனர். அகவை முதிர்ந்தவர்கள் ஓரிருவர் அப்பிள்ளைகளுக்குத் திருக்குறளை ஆர்வத்துடன் பயிற்றுவித்துக்கொண்டும், திருத்தம் செய்துகொண்டுமிருந்தனர். நம் தமிழ்க்குழவி ஐயாவும் பிள்ளைகளுக்குப் பயிற்றுவித்தவண்ணம் அவர்களின் நடுவண் இருந்தார். அழைப்பு மணியோசை கேட்டு, வெளிவந்து எங்களை வரவேற்றார்.

திருக்குறள் பயிற்றுவிக்கும் உயரிய பணியில் ஈடுபட்டிருக்கும் தங்களுக்கு இடையூறாக வந்தமைக்குப் பொறுத்தாற்றும்படி முதற்கண் வேண்டிக்கொண்டேன். ஐயா அவர்களும் எம் வருகை நினைத்து, அமைதியாக அமர்ந்து பேசமுடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்தார். பத்து மணித்துளிகள் மட்டும் ஒதுக்கிப் பேசுமாறு கேட்டேன். அன்புடன் இசைந்தார். தம் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும், தொண்டு குறித்தும் நெஞ்சுருகிப் பேசினார். மீண்டும் சந்திப்போம் என்றவாறு விடைபெற்று, அவர் நல்கிய நூல்கள் சிலவற்றைப் பெற்றுக்கொண்டு அடுத்த பணிக்கு ஆயத்தமானேன்.

தமிழ்க்குழவியுடன் உரையாடியதிலிருந்து…

தமிழ்க்குழவியின் இயற்பெயர் ஆ. விசுவநாதன் என்பதாகும். இவரின் தந்தையார் பெயர் பெ. ஆனந்தன். குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வடலிவிளை ஊரினர். 02.02.1950 இல் பிறந்தவர். 1967 முதல் 1970 வரை தெ.தி. இந்துக் கல்லூரியில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர். கல்லூரிப் படிப்பில் முதன்மை பெற்றுத் தங்கப்பதக்கம் பெற்றவர். 1970-73 ஆம் ஆண்டுகளில் உதகை, வால்பாறை ஊர்களில் பொலைபேசி இயக்குநராகப் பணியாற்றியவர். 1974 முதல் 76 வரை ஈரோடு மாவட்டம் பவானியில் தொலைபேசி இயக்குநராகப் பணியாற்றியர். 1976 -77 இல் நாகர்கோவிலில் தொலைபேசி  இயக்குநராகப் பணி.1979 முதல் 1994 வரை கரூரில் தொலைபேசித்துறையில் பணியாற்றினார். தாம் பணிபுரிந்த ஊர்களில் இலக்கியத் தொண்டிலும், தமிழ்த்தொண்டிலும், திருக்குறள் தொண்டிலும் முனைப்புடன் ஈடுபட்டு உழைத்தார். 2010 இல் கரூர் தொலைபேசித்துறையில் துணை மண்டலப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஊர்தோறும் திருக்குறள் பூங்கா அமைத்துத், திருக்குறள் எழுதி வைத்தல், நூல் எழுதுதல், திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்துதல் இவரின் விருப்பமான பணிகள். தம் பணி ஓய்வுக்குப் பிறகு 07.11.2010 முதல் குறளகம் என்னும் பெயரில் திருக்குறள் வாழ்வியலாக்கப் பயிற்சி மையத்தை நிறுவித் திருக்குறள் தொண்டினைத் தமிழ்க்குழவி ஆற்றிவருகின்றார்.

தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, பள்ளிகளில் திருக்குறள் விழிப்புணர்ச்சி வகுப்புகளை நடத்தி, தொடர்ந்து திருக்குறள் தொண்டு செய்துவருகின்றார். வானொலி நிகழ்வுகளில் கலந்துகொண்டு திருக்குறள் குறித்த உரைகளை வழங்கிவருகின்றார். திருக்குறள் அறிஞர்களைப் போற்றுதல், திருக்குறள் நூலினை அன்பளிப்பாக வழங்குதல், எளிய குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்துவருகின்றார்.

தமிழ்க்குழவியின் திருக்குறள் தொண்டினைப் போற்றிப் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் நிறுவனங்களும் பாராட்டினையும் விருதுகளையும் வழங்கியுள்ளன. தமிழ்க்குழவி அவர்கள் திருக்குறள் பயிற்சி வகுப்புகள், திருக்குறள் சிந்தனை முற்றங்கள், திருக்குறள் மாநாடுகள், மாணவர்களுக்கான போட்டிகள் எனத் தொடர்ந்து தம் ஓய்வூதியச் சேமிப்பிலிருந்து  செலவிட்டு, நற்றமிழ்ப் பணியாற்றி வருகின்றார்.

தமிழ்க்குழவியின்  தமிழ்க்கொடை:

1.   தமிழ்க்குழவி கவிதைகள்
2.   அம்மன் அருட்பா நூறு
3.   குறள் மணம்
4.   திருவருட் பிரகாச வள்ளலார் பிள்ளைத் தமிழ்
5.   குறள்வளம்
6.   காமராசர் பிள்ளைத் தமிழ்
7.   ஜீவா பிள்ளைத் தமிழ்
8.   மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ்
9.   குறள்மண மாலை
10. பாவலர் செய்குதம்பி பிள்ளைத்தமிழ்
11. கவிமணி பிள்ளைத் தமிழ்
12. ஆண்டாள் பிள்ளைத் தமிழ்
13. வங்கமணிகள் மூவர் பிள்ளைத் தமிழ்
14. நேசமணி பிள்ளைத் தமிழ்
15. ஏசுநாதர்பிள்ளைத் தமிழ்
16. குன்றக்குடி அடிகளார் பிள்ளைத் தமிழ்
17. காரைக்கால் அம்மையார் பிள்ளைத் தமிழ்
18. சித்தார்த்தன் பிள்ளைத் தமிழ்
19. திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ்
20. பாரதி பிள்ளைத் தமிழ்


வியாழன், 7 நவம்பர், 2019

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப் போட்டி 2019-20



திருநெல்வேலியை அடுத்துள்ள பாளையங்கோட்டையில் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் என்னும் தமிழமைப்பினைப் பேராசிரியர் பா. வளன் அரசு அவர்கள் கடந்த ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். கல்லூரி மாணவர்களின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளப்படுத்துவது இவ்வமைப்பின் தலையாய பணிகளுள் ஒன்றாகும்.

தமிழக அளவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் இவ்வமைப்பு நடத்தும் ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரை எழுதி, முதல் தகுதிபெறும் எழுத்தோவியத்திற்கு இருபத்தைந்தாயிரம் மதிப்புடைய தங்கப்பதக்கமும், அவர் பயிலும் கல்லூரிக்கு இருபத்தைந்தாயிரம் மதிப்புடை த.பி.சொ.அரிராம் சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் பரிசாகப் பெற இயலும்.

இந்த ஆண்டு ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்குரிய தலைப்பு:

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் எழுத்தோவியங்கள்.

தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் ஆண், பெண்  ஆகிய இருபாலரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

எழுத்துரை அறுபது பக்கங்களுக்குக் குறையாமலும் எழுபது பக்கங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். துணைநூற்பட்டியும் இணைத்தல் வேண்டும்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் எழுத்துப்பணியை விளக்கும் வகையில் ஆய்வுரை அமைதல் வேண்டும்.

ஆய்வுக்கட்டுரை அனுப்ப இறுதி நாள்: 16.12.2019

கட்டுரையை அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் பா.வளன் அரசு,
எண் 3, நெல்லை நயினார் தெரு,
பாளையங்கோட்டை – 627 002, திருநெல்வேலி மாவட்டம்.

பரிசுகள் 08.02.2020 காரி(சனி)க் கிழமை மாலை நெல்லையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.



திங்கள், 7 அக்டோபர், 2019

பாவலர் முடியரசனாரின் நூற்றாண்டு தொடங்கியது...


பாவலர் முடியரசனார்  (07.10.1920 - 03.12.1998) 

  திராவிட நாட்டின் வானம்பாடி என்று அறிஞர் அண்ணாவால் போற்றிப் புகழப்பட்ட பாவலர் முடியரசனாரின் நூற்றாண்டு இன்றிலிருந்து தொடங்குகிறது. பாவலர் அவர்களுடன் 1993 முதல் தொடர்பில் இருந்தேன். அவர்களின் குடும்பத்துள் ஒருவனாக வளர்ந்தேன். காரைக்குடியில் இன்று நூற்றாண்டு விழா தமிழார்வலர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. என் முனைவர் பட்ட ஆய்வுக்காலத்தில் பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதி, நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் முதல் பரிசான தங்கப்பதக்கமும், வெள்ளிச் சுழற்கோப்பையும் பெற்றேன்(1994). அக்கட்டுரை நூலாகவும் வெளிவந்தது. பாவலர் முடியரசனார் பற்றி முன்பே என் வலைப்பதிவில் எழுதியுள்ளேன் (08.10.2008). அக்கட்டுரையை மீள்பதிப்பாக இப்பொழுது பதிவுசெய்கின்றேன்.

"வேத்தவைப் பாவலரும் வேற்றுமொழி கலக்குந்
   தீத்திறக் காலை தெளிமருந்தே -மூத்த
   முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்
   முடியரசன் செய்யுள் முறை"

  என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவியரசு முடியரசன் அவர்கள். தமிழ்ப்பற்றும் பகுத்தறிவுக்கொள்கையும் கொண்டு பாவேந்தர் வழியில் பாட்டுப் பறவையாய்க் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன் ஆவார்..படிக்கும் காலத்திலும் பணிபுரியும் காலத்திலும் பல்வேறு இன்னகள் இடையூறுகள் வந்தபொழுதெல்லாம் தன்மானம் மிக்க தமிழ் அரிமாவாகச் செயல்பட்டவர் முடியரசன் ஆவார்.

 அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க் கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். வகுப்பறையைத் தமிழ் உணர்வூட்டும் பாசறையாக மாற்றியமைத்தவர். தமிழர்களின் வாழ்க்கை வளம்பெற தமிழகத்தில் மண்டிக்கிடந்த சமூக முன்னேற்றத்திற்குத் தடையான கருத்துகளை தம் அனல்கக்கும் பாடல்களால் எதிர்த்து எழுதியவர்.தாம் எழுதியதற்கு எதிராக எந்தச் சூழலிலும் செயல்படாத கொள்கை மறவராக விளங்கியவர்.சொல் செயல் இரண்டும் ஒன்றாக வாழ்ந்தவர். வீட்டிற்கு வருபவர்களிடம்கூட அழகு தமிழில் உரையாடும் தமிழ்நெஞ்சர்.

  திராவிட இயக்க உணர்வுடன் செயல்பட்ட முடியரசன் கடைசிக் காலம் வரை தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை உயர்வாகப் போற்றியவர். தமிழாசிரியர் பணியாலும் கவியரங்கப் பணிகளாலும், எழுத்துப் பணிகளாலும் என்றும் தமிழக வரலாற்றில் இடம்பெறும் பெருமைக்கு உரியவர் முடியரசனார்.

  முடியரசனார் மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் 07.10.1920 இல் பிறந்தவர். பெற்றோர் திண்டுக்கல் சுப்புராயலு, சீதாலெட்சுமி ஆகும். இவர்களுக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவர். இயற்பெயர் கா.சு.துரைராசு. தம் தாய்மாமன் துரைசாமி அவர்களின் இல்லத்தில் இளமையில் வளர்ந்தார். பின்னர் பெற்றோர் காரைக்குடி அருகில் உள்ள வேந்தன்பட்டிக்குக் குடி பெயர்ந்த பொழுது வேந்தன்பட்டி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். வேங்கடராம ஐயரிடம் பயின்றார். அவரிடம் கீழ்வாயிலக்கம்.நிகண்டு நூல்கள் அக்கால முறைப்படி அவரிடம் கற்றார்.

  திண்ணைப் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஐந்து,ஆறாம் வகுப்புகளை மேலைச்சிவபுரியில் இருந்த சன்மார்க்க சபையில் பயின்றார். தமிழில் ஆர்வமுடன் படித்த காரணத்தால் ஆசிரியர்கள் இவரைத் தமிழ் பயிலும் படி வேண்டினர்.பிரவேச பண்டிதம் என்னும் புலவர் நுழைவு வகுப்பில் பயின்றார்.தேர்வு எழுதி புலவரானார். அங்குப் பயின்றபொழுது பண்டிதமணியார், இரா.இராகவையங்கார், விபுலாநந்த அடிகள்,தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை உள்ளிட்டவர்களின் பேச்சினைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.

  கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் சேர்ந்து வித்துவான் வகுப்பில் சேர்ந்து பயின்றார். முத்து சாமிப் புலவர் என்னும் புலவர் பெருமானில் அறிவுரைப்படி வளர்ந்து தமிழின் மிகச்சிறந்த புலமையைப் பெற்றார். கல்லூரியில் இவர் பேச்சாற்றல்கொண்டு விளங்கியதால் வீரப்புலவர் எனப் பட்டம் வழங்கி அந்நாளைய கல்லூரி முதல்வர் அழைத்தார். நாடகத்தில் நடிக்கும் ஆற்றல் உடையவர்.

  திருப்புத்தூரில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றியபொழுது அவர்தம் பேச்சைக் கேட்ட முடியரசன் அதுவரை துரைராசு என்று அழைக்கப்பட்ட தம் பெயரை முடியரசன் என மாற்றிக் கொண்டார். அப்புனைபெயரே அவருக்கு நிலைத்த பெயராக நின்றது.

 பின்னர் பாவேந்தர் பாரதிதாசன் பழம் புலவர்களைக் கடிந்து பேசிய பேச்சைக்கேட்டுத் தமிழ்மொழி, இன, நாட்டு உணர்வுடன் பாடல் இசைக்கும் முறைக்குச் சென்றார். மேலைச் சிவபுரியில் மருத்துவர் ஒருவரின் இல்லத்திற்கு வந்த குடியரசு, விடுதலை, திராவிட நாடு உள்ளிட்ட இதழ்களைப் படித்து தமிழ் உணர்வும், பகுத்தறிவு உணர்வும் பெற்றார்.

  முடியரசன் தம் 21 ஆம் அகவையில் 'சாதி என்பது நமக்கு ஏனோ' என்ற கவிதையை எழுதி திராவிடநாடு இதழுக்கு அனுப்பினார். பெரியகுளம் துரைராசு என்னும் பெயரில் வெளியாயிற்று.பொழுதெல்லாம் இதழ்கள் படிப்பது, திரைப்படம் பார்ப்பது எனப் பொழுது கழிந்ததால் முடியரசன் வித்துவான் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் தஞ்சையில் தேர்வெழுதி வெற்றிபெற்றார்.

 1947 இல் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார். வகுப்பறைக்குள் நுழைந்ததும் தம் இருக்கை அருகே நிற்பார். மாணவர்கள் அனைவரும் 'வெல்க தமிழ்' என ஓங்கி ஒலித்த பிறகே வகுப்பில் அமர்வார்கள். சென்னையில் பணிபுரிந்தபொழுது பொன்னி உள்ளிட்ட இதழ்களில் எழுதவும் திரு.வி.க, வாணிதாசன் உள்ளிட்டவர்களுடன் பழகவும் வாய்ப்பு அமைந்தது.

  முடியரசன் தம் 29 ஆம் அகவையில் கலைச்செல்வி என்னும் அம்மையாரை மணந்து கொண்டார். சாதிமறுப்புத் திருமணமாக நடந்தது. மயிலை சிவமுத்து அவர்கள் தலைமையில் திருமணம் நடந்தது. பூவாளூர் பொன்னம்பலனார், காஞ்சி மணிமொழியார், டி.கே.சீனிவாசன், கவிஞர் வாணிதாசன், அழகுவேலன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

  பின்னர் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 28ஆண்டுகள் அப்பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து தம் 58 ஆம் அகவையில் ஓய்வுபெற்றார். பள்ளியில் பணிபுரிந்த பொழுது அவரின் தமிழ்ப்பற்று அவருக்குப் பல்வேறு இன்னல்களைப் பெற்றுத் தந்தது.அனைத்திலும் வெற்றிபெற்றார்.

  முடியரசனுக்குக் கலைத்துறையில் நல்ல ஈடுபாடு இருந்தது. நவாபு இராசமாணிக்கம் குழுவில் இணைந்து பாடல் எழுதச் சென்றார். அங்கு நிலவிய சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. திரும்பிவிட்டார். கண்ணாடி மாளிகை என்னும் திரைப்படத்திற்கு உரையாடலும் பாடலும் எழுதியுள்ளார். திரைத்ததுறையில் நிலவிய சூழல்கள் தமக்கு ஒத்துவராததால் தமிழாசிரியர் பணியில் நிலைத்து நின்றார்.

  பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் ஓராண்டுக்காலம்(1985-86) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் வாழ்க்கையைக் காப்பியமாக்கினார். அந்நூல் இன்னும் வெளிவரவில்லை.

 தமிழ்ப்பற்றும் கொள்கை வாழ்வும் வாழ்ந்த முடியரசனார் பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல் என்னும் காவியங்களையும் முடியரசன் கவிதைகள், காவியப்பாவை உள்ளிட்ட மிகச்சிறந்த பாட்டுப் பனுவல்களையும் வழங்கியவர். தமிழிசைக்குப் பயன்படும் வகையில் தமிழிசைப் பாடல்களை எழுதியவர். இவர்தம் கவிதைப் பணியைப் பாராட்டி இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன. 1950 இல் இவர் எழுதிய அழகின் சிரிப்பு என்ற கவிதை முதற்பரிசுக்கு உரியதாகப் பாவேந்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் தம் நூல்களுக்குத் தமிழக அரசின் பரிசில்கள் கிடைத்துள்ளன.

  அறிஞர் அண்ணா 'திராவிடநாட்டின் வானம்பாடி' என்ற பட்டத்தை 1957 இல் வழங்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1966 இல் கவியரசு என்ற பட்டத்தை பாரி விழாவில் வழங்கினார். கலைஞர் விருது(1988), பாவேந்தர்விருது(1987), கலைமாமணி விருது (1998) அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு (1993) முதலிய உயரிய பரிசில்களைப் பெற்றவர். இவர்தம் கவிதைகள் தமிழின முன்னற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிக் கவிஞரைப் பெருமை செய்தது. முதுமை காரணமாகத் தம் 79 ஆம் அகவையில் காரைக்குடியில் முடியரசனாரின் தமிழுயிர் 03.12.1998 இல் பிரிந்தது. கவிஞரின் மறைந்த மறுநாளில் தினமணி நாளேடு "பாடிப் பறந்த பறவை" எனத் தலைப்பிட்டு ஆசிரிய உரை எழுதி மதிப்பளித்தது.

தருமன் தர்மகுலசிங்கம் என்னும் மொழிபெயர்ப்பாளர்…


மொழிபெயர்ப்பாளர் தர்மகுலசிங்கம், பவானி ஆகியோரின் 
திருமண நினைவுநாளில் நேரில் வாழ்த்தும் மு.இளங்கோவன்

நார்வே நாட்டின் பேர்கன் தமிழ்ச் சங்கத்தாரின் அழைப்பை ஏற்று, ஈராண்டுகளுக்கு முன் (2017, சூன்)  நார்வே நாட்டிற்குச் சென்றிருந்தேன். இலங்கைப் பேராசிரியர்கள் அ. சண்முகதாஸ் ஐயாவும் எங்கள் அன்னையார் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் இப்பயணத்துக்கு வழி அமைத்தனர்.  பேர்கனில் அண்ணன்மார் மக்வின் சத்தியா, செயசிங்கம் ஆகியோரின் அன்பான விருந்தோம்பலில் சிலநாள் திளைத்தேன். நோர்வே நாட்டில் நடைபெறும் தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க் கல்வி குறித்து அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு எனக்கு இந்தப் பயணத்தின் வழியாக அமைந்தது. தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாவில் ஒரு சிறப்புரையாற்றவும் பணிக்கப்பட்டிருந்தேன். பேர்கன் பணிகளை முடித்த பிறகு, அருகில் உள்ள டென்மார்க்கு நாட்டிற்குச் சென்று தருமன் தர்மகுலசிங்கம் அவர்களைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருந்தேன். என் வருகையைத் தருமா அவர்கள் அறிந்து, அன்புடன் வரவேற்றார்.

முன்பே திட்டமிட்டவாறு பேர்கன் தமிழ்ச் சங்கத்தின் பணிகளை முடித்துக்கொண்டு, பேராசிரியர் அ.சண்முகதாஸ், மனோன்மணி அம்மா, நண்பர்கள் மக்வின், செயசிங்கம் ஆகியோருடன் பேர்கன் விமான நிலையம் வந்தேன். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அடுத்த விமானத்துக்குக் காத்திருந்தேன்.

நம் ஊர் வழக்கப்படி மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே சென்று காத்திருந்தேன். நான் செல்லும் விமானத்துக்கு என ஓரிருவர் மட்டும் வந்திருந்தனர். கூட்டம் குறைவாக இருந்ததால் நமக்குரிய விமானம் ஏறும் இடம் இதுதானா என்று எனக்கு ஐயம் ஏற்பட்டது. விமான நிலைய அதிகாரிகளை வினவி உறுதிசெய்துகொண்டேன். விமானம் புறப்படுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகத்தான் அந்நாட்டு மக்கள் வருகின்றனர். மிக இயல்பாகப் பேருந்தில் ஏறி அமர்ந்துகொள்வதுபோல் எளிமையாக அமர்ந்து கொள்கின்றனர். நம்மூர் போல் அதிகார, கெடுபிடிகள் ஏதும் இல்லை. அனைவரும் அன்பொழுக நடந்துகொள்கின்றனர். ஒருவரை ஒருவர் முடிந்த அளவு உதவுகின்றனர். முகத்தில் புன்னகை தவழ்வதைக் காணமுடிகின்றது. பேர்கனில் விமானத்தைப் பிடித்து, ஒருமணி நேரத்தில் டென்மார்க்கின், கோபனகன் நகரம் வந்து இறங்கினேன். கோபனகன் வானூர்தி நிலையத்திலிருந்து, இயல்பாக வெளிவந்தேன். பிற்பகல் நேரம் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. விமான நிலையத்தில் தொடர்வண்டி ஏறி, கோபனகன் நடுவண் தொடர்வண்டி நிலையம் வந்து சேர்ந்தேன். தர்மா அவர்களின் இல்லம் அமைந்திருக்கும் வேயன் (vejen) என்ற இடத்திற்குச் செல்ல ஒரு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு, நான் பயணிக்க வேண்டிய தொடர்வண்டி நடைமேடையை அடைந்தேன். நான் செல்ல வேண்டிய வண்டி வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். குளிர்க்காற்று மெல்ல வீசியது. வந்து நிற்கும் வண்டி நமக்கானதாக இருக்குமோ என்று ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். வரையறுத்த நேரத்திற்கு முன்பாகவோ, பின்பாகவோ அவ்வூரில் வண்டிகள் வாரா என்பதைப் பின்னர்தான் புரிந்துகொண்டேன். நினைவுக்கு அங்கு சில படங்களையும் எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு நொடியும் ஒரு ஆண்டாக நகர்ந்தது.

வேயன் நகருக்குச் செல்லும் வண்டி சரியான நேரத்துக்கு (மாலை 4.31 மணிக்கு) வந்து நின்றது. என்னுடன் பயணிப்பவர்களிடம் நான் செல்ல வேண்டிய வண்டி இதுதானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, ஏறி, எனக்குரிய இடத்தில், என் பொதிகளுடன் அமர்ந்துகொண்டேன். அக்கம் பக்கத்தில் அமர்ந்தவர்கள் படிப்பதும், எழுதுவதுமாக இருந்தனர். கொண்டுவந்த உணவுப்பண்டங்களைச் சுவைத்து உண்டபடி சிலர் வந்தனர். தொடர்வண்டியின் தூய்மையும், ஒருவருக்கொருவர் நாகரிகாமாக நடந்துகொள்ளும் முறையும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். பயணச்சீட்டு சோதனையாளர் வந்து சீட்டுகளை வாங்கிப் பார்த்து, உறுதிப்படுத்தினார். இரவு 07.07 மணிக்கு வேயனை அடைந்தேன். நான் வரும் வண்டியையும் இருக்கையையும் முன்பே தர்மா அவர்களுக்குத் தெரிவித்திருந்ததால் ஐயா அவர்கள் தொடர்வண்டி நிலையம் வந்து, நான் இறங்கும் இடத்தில் நின்று, வரவேற்று, இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

உறவினர்கள், நண்பர்களுடன் தருமகுலசிங்கம் அவர்களின் 
திருமண நினைவுநாள் கொண்டாட்டத்தில்

தர்மா அவர்களின் திருமணநாளாக அன்றைய நாள் இருந்தது.  எனவே அவர்தம் இல்லத்தில் உறவினர்கள், நண்பர்கள் சூழ இருந்தனர். நானும் இணைந்துகொண்டமை அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் தர்மா அவர்களுக்கும், அவர்களின் துணைவியாருக்கும் வாழ்த்துரைத்தோம். நான் பொன்னாடை அணிவித்து, நூல்களை வழங்கி இருவரையும் வணங்கி, வாழ்த்தினேன். அனைவருக்கும் சிறப்புணவு இரவு உணவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெடுநாழிகை உரையாடிய உண்டோம். பின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்.

காலையில் எழுந்து கடமைகளை முடித்து, தர்மாவுடன் இணைந்து உணவு உண்டேன். பிற்பகல் மீன் வறுவலை நம் தர்மா அவர்களே மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். உண்பதும் உரையாடுவதுமாக அன்றையப்பொழுது பயனுடையதாக இருந்தது. தர்மா அவர்களுடன் உரையாடியபொழுது அவர்தம் நீண்டநெடிய வாழ்க்கைப் பயணத்தையும் குடும்ப நிலையையும், சமூகப்பணிகளையும் அறிந்து அவர்மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது. தருமா அவர்கள் இலங்கையில் பிறந்தவர். பொதுவுடைமைச் சிந்தனையாளர். சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டவர். டென்மார்க்கு நாட்டிற்கு வந்த பிறகு டென்மார்க்கு மொழியைக் கற்று, அந்நாட்டு இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்டவர். அவர்தம் டேனிஷ் மொழிபெயர்ப்புப் பணிக்காக அந்த நாட்டின் அரசு சிறப்பினைப் பெற்றவர். அவர்தம் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வி கற்று, உயர்நிலையில் உள்ளனர் என்பதெல்லாம் அவர் உரையாடலில் தெரிந்துகொண்டேன்.

டேனிஷ் மொழியின் முதன்மை எழுத்தாளரான ஆண்டர்சன்(அனசன்) அவர்களின் வாழ்க்கையையும் படைப்புகளையும் தர்மா அவர்கள் மொழிபெயர்த்துள்ளார் (நியு செஞ்சுரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது). இவர்தம் பொன்விழா, மணி விழாவை ஒட்டி வெளிவந்த மலர்களில் உலகின் பல பகுதியிலிருந்தும் சான்றோர் பெருமக்கள் எழுதிய எழுத்தோவியங்கள் இடம்பெற்றுள்ளன.




தர்மன் இலங்கையில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள கரவெட்டி, கன்பொல்லை என்ற ஊரில் – நெல்லியடி பட்டினசபையின் கனுவில் (இரண்டாம்) வட்டாரத்தில் அமைந்திருக்கும் ஆண்டார் வளவில் வாழ்ந்த சின்னத்தம்பி தங்கம் – சித்தன் தருமன் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். பிறந்த ஆண்டு 1957 ஆம் ஆண்டு மார்ச்சு 10(பங்குனி மாதம் 10 ஆம் நாள்) ஆகும். வதிரி மிஷன் ஆரம்ப பாடசாலை, கரவெட்டி சரசுவதி வித்தியாசாலை, கரவெட்டி ரீநாரத வித்தியாலயம், வதிரி (கரவெட்டி) திரு. இருதயக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்றவர். கொழும்புத் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் கல்வி பயின்றார்.  கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர் தாம் பயின்ற ரீநாரத வித்தியாலயத்திலும் கம்பகஃதிவுலப்பிட்டிய சரசுவதி பிரிவெனவிலும்  ஆசிரியர் பயற்சி பெறுவதற்காக உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொதுவுடைமை இயக்கம், சாதியொழிப்பு இயக்கம் உள்ளிட்ட இயக்கச் சார்புகளில் ஈர்க்கப்பட்டவர். 1977 ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களினால் மனமுடைந்து, 1979 ஆம் ஆண்டில் பிரான்சுக்குப் புறப்பட்டார். பிரான்சு வாழ்க்கைக்குப் பிறகு டென்மார்க்கு நாட்டில் தங்கி, தம் இல்லற வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

டென்மார்க்கு நாட்டில் அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டு, பொதுப்பணியில் ஆர்வமாக உழைத்தார். டென்மார்க்கு டெமாக்கரடிக் கட்சியில் இவரின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. இதனால் இலங்கை சென்ற டென்மார்க்கு அரசியல் குழுவில் இவரும் இடம்பெற்றார். புலம்பெயர் தேயங்களில் வாழும் தமிழர்கள் சிறந்த கல்வியறிவு பெற்று, ஒவ்வொரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் கொண்டவர் நம் தர்மா. கலை, இலக்கியம், அரசியல், சமூகப்பணி எனப் பன்முகத் திறமையுடைவர்.

தர்மகுலசிங்கம் டேனிஷ் அகதிகள் குழுவில் (Danish Refugee Council) மொழிபெயர்ப்பாளராகவும், டேனிஷ் குடிவரவுப் புலத்தில் (Luth Advokatfirma Aabenaraa, Denmark) டேனிஷ் – தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் 1988 முதல் உள்ளார். மேலும் டேனிஷ் அரசுத்துறைகளில் பல்வேறு நிலைகளில் மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார்.



தர்மகுலசிங்கத்தின் முதல் புத்தகம் 1996 இல் வெளிவந்தது. கடந்த இருபதாண்டுகளில் ஐரோப்பாவில் வெளிவரும் பல்வேறு இதழ்களில் கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து எழுதி வெளியிட்டு வருகின்றார். டென்மார்க்கின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின்(அனசன்) தேவதைக் கதைகள் 31  ஐ தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து,  தாய், பாட்டி என்னும் இரு தொகுதிகளாக தமிழில் வழங்கியுள்ளமை மிகப்பெரும் பணியாகும். தாய் சிறுகதைத் தொகுப்பிற்கு 1997 இல் இலங்கை அரசின் சாகித்ய விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தேடல் – சில உண்மைகள் என்ற இவரின் நூலும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். ஆண்டர்சன் என்ற டேனிஷ் எழுத்தாளரின் பல வகைப் படைப்புகளையும் தமிழிற்கு அறிமுகம் செய்த பெருமை தர்மகுலசிங்கத்தைச் சாரும். அனசனின் 54 கதைகள் கொண்ட மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஒன்றை 2007 இல் வெளியிட்டுள்ளார்.

டென்மார்க்கு தமிழ் இலக்கியக் கழகம், வயன் நகர இசைப்பள்ளி, தமிழ் இசைப் பண்பாட்டுப் பள்ளி, டேனிஷ் – தமிழ்ப் பதிப்பகம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆகிய அமைப்புகளிலும், நிறுவனங்களிலும் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். 1997 - இல் இலங்கை தேசிய சாகித்ய விருது உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றவர். ஐரோப்பியா நாடுகளில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் தலைமை தாங்கி, நடத்திவரும் தர்மகுலசிங்கம் சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்ற விருப்பம் உடையவர்.

புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்கள் படைப்பு இலக்கியங்களையும், மொழிபெயர்ப்பு இலக்கியங்களையும் தந்து தமிழ் மொழிக்கு இலக்கிய வளம் சேர்த்துவருகின்றனர். அந்த அந்த நாட்டு அரசியல், கலை இலக்கிய முயற்சிகளுக்குப் பெருந்துணை புரிகின்றனர். அவ்வகையில் டென்மார்க்கு நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்து, தமிழ் மொழிக்கும் தமிழர்க்கும் பெருமை சேர்க்கும் நல்லுள்ளம் வாய்த்த இலக்கிய ஆளுமையாக நம் தருமன் தர்மகுலசிங்கம் இயங்கி வருகின்றமை பாராட்டிற்குரியது. இவர் தொண்டு தொடர்வதாகுக.

**** இக்கட்டுரையின் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.