நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 25 ஜூலை, 2021

தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் மறைவு!

 
புலவர் இரா. இளங்குமரனார்

  திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவி அன்னைத் தமிழுக்கும் அருமறையாம் திருக்குறளுக்கும் தொண்டாற்றிய மூதறிஞர், தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் இன்று (25.07.2021) இரவு 7.30 மணியளவில் தம் மதுரை இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து, பெருந்துயருற்றேன்.

    இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும். திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட திரு. இளங்குமரனார் வாழும் வள்ளுவராகவே விளங்கியவர்.

    திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்த நாள்போக எஞ்சிய நாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் வாழ்ந்தவர்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நம் ஐயாவுடன் பழகும் பெரும்பேறு பெற்றிருந்தேன். அவர்தம் திருவள்ளுவர் தவச்சாலையில் இருந்த பாவாணர் நூலகத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியவர்களுள் யானும் ஒருவன். ஐயாவின் உரைகளைப் பலமுறை செவிமடுத்துள்ளேன். உரையாடியுள்ளேன். என் நூல்களுக்கு அணிந்துரை வழங்கியும், நான் ஏற்பாடு செய்த பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஊக்கமொழிகள் வழங்கியும் என்னைப் பெருமையுறச்செய்தவர். என் நூலொன்றில்இளங்கோவனார் அழுந்தக் கற்கும் ஆர்வலர். நிறையறிவுபெறுவான் நெடிதுழைப்பாளர். முத்தமிழ்த் திறமும் முத்திரை பதிக்கத் திகழவிருக்கும் முனைவர்என்று என்னை அன்பொழுக அறிமுகம் செய்துள்ளார்(1995). அவர்தம் உரைகள் சிலவற்றைப் பதிவு செய்து இணையவெளியில் பலரின் பார்வைக்கும் வைத்துள்ளேன். தமிழ்ப் பெருங்கடலாக விளங்கிய ஐயா இளங்குமரனாரின் இழப்பினை உலகத் தமிழர்கள் தங்கள் குடும்பத்து இழப்பாக எண்ணி வருந்துவர். அந்த அளவு அவர் உலகப் பெருந்தமிழராக விளங்கியவர். அன்னாரை இழந்துவருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றேன். ஐயாவின் வாழ்க்கை குறித்து முன்பு எழுதிய என் பதிவினை மீள்பதிவாகப் பதிவுசெய்கின்றேன்.

இரா. இளங்குமரனாரின் தமிழ் வாழ்க்கை

    இரா.இளங்குமரானார் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1930 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முப்பதாம் நாள் பிறந்தவர். தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார். தந்தையாரிடம் இருந்த தமிழறிவு, கணக்கு அறிவு மகனாரிடத்து நின்று நிலவியது. தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம்மை ஆயத்தம் செய்து கொண்டு தம் பச்சிளம் பருவத்திலேயே 08.04.1946 இல் ஆசிரியர் பணிமேற்கொண்டவர்.

    பின்னர்த் தனியே தமிழ் கற்றுச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றிபெற்றவர்(1951). பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறன் பெற்றிருந்த இரா.இளங்குமரனார் தம் பதினான்காம் அகவை முதல் பாடலியற்றும் திறன்பெற்றிருந்தவர். இப்பயிற்சி பின்னாளில் குண்டலகேசி என்னும் காவியம் உருவாக வழிவகுத்தது. இக்காவியம் 1958 ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

மதுரை பாரதி புத்தக நிலையத்தின் வாயிலாகப் பல நூல்கள் வெளிவரத் தொடங்கின. பல ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும் இவர் விரும்பிச்செய்தது நூலாக்கப் பணிகளேயாகும். பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார். தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர், மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர், தேர்வுக்குழு அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துத் திறம்படப் பணிபுரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

அறிஞர் இரா.இளங்குமரனார் அவர்களின் நூல்கள் யாவும் தமிழ்மண் இளவழகனார் அவர்கள் வழியாக மறுபதிப்பும் செம்பதிப்புமாக வெளிவந்துள்ளன. அயல்நாடுகள் பல சென்று தமிழ்ப்பொழிவு ஆற்றிய பெருமைக்கு உரியவர். தமிழக அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் பல சிறப்புப் பரிசில்கள், விருதுகளை வழங்கியுள்ளது. முனைவர் மு.தமிழ்க்குடிமகன், முனைவர் கா.காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப் போற்றி மதித்தவர்கள். தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். பல்வேறு அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும் இவரைப் பாராட்டிப் போற்றியுள்ளன.

தொடர்புடைய கட்டுரைகள்:

https://muelangovan.blogspot.com/2008/10/blog-post_22.html

https://muelangovan.blogspot.com/2010/04/blog-post_17.html

https://muelangovan.blogspot.com/2011/09/blog-post_05.html

 காணொலிகள்:

தனித்தமிழியக்கம் குறித்து https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg
தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து: https://www.youtube.com/watch?v=fURvAXvwjvc
தமிழ் மரபுத்திருமணங்கள் நடத்துவது எப்படி? https://www.youtube.com/watch?v=bo09sOb3y3Q