நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 24 ஜூலை, 2018

புலவர் வெற்றியழகனின் தமிழ் வாழ்க்கை...


புலவர்  வெற்றியழகன்

  புதுவைக்கு வரும்பொழுதெல்லாம் . பிழைபொறுத்தான் அவர்கள் சென்னையில் வாழும் புலவர் கு. வெற்றியழகனைப் பற்றி எடுத்துரைத்து, அவரை அழைத்து, தொல்காப்பியம் குறித்து உரையாற்றச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைப்பார். நானும் புலவர் வெற்றியழகனை, ஓரிரு இலக்கிய நிகழ்வுகளில் முன்பு சந்தித்துள்ளேன்; மக்கள் செங்கோல் இதழில் அவர்தம் கட்டுரைகளைக் கண்ணுற்றுள்ளேன்; அழைத்துப் பயன்கொள்வோம் என்று அமைதி கூறி அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.

  ஓரிருமுறை புலவர் கு. வெற்றியழகனைச் செல்பேசியில் தொடர்புகொண்டு, புதுவைக்கு உரையாற்ற வருமாறு அழைத்ததும் உண்டு. எங்களின் சந்திப்புக்கு வாய்ப்பு அமையாமல் இருந்தது. அண்மையில் (21.07.2018) மதுரையில் ஓர் இலக்கிய நிகழ்வில் புலவர் கு. வெற்றியழகனைச் சந்தித்து, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. புலவர் பெருமகனாருடன் உரையாடியபொழுது அவர்தம் வறுமை படர்ந்த இளமை வாழ்க்கை அறிந்து, பெருங்கவலையுற்றேன். கல்வியில் அவருக்கு இருந்த ஈடுபாடு கேட்டு, வியப்புற்றேன். காட்டாற்றில் எதிர்நீச்சலடித்து வெற்றிப் பயணம் மேற்கொண்ட அவரின் வாழ்க்கை ஒரு திரைப்படம் போல் என் மனக்கண்ணில் விரிந்தது.

மு.இளங்கோவன், புலவர் வெற்றியழகன்

  புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர் மரக்காணம் ஆகும். எயில்பட்டினம் என முன்பு அழைக்கப்பட்ட இவ்வூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. சிறுபாணாற்றுப்படை  என்னும் சங்க இலக்கிய நூலில் இவ்வூரின் வளத்தைக் கற்று மகிழலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரணி என்ற ஊரில் பிறந்த கு. ஜெயராமுலு, குடும்பத்தில் நிலவிய வறுமை விரட்ட, சென்னைக்கு ஒரு தேங்காய் வணிகரின் சூழ்ச்சியால் பதினான்கு அகவையில் அழைத்துச் செல்லப்பட்டார். உள்ளூர் வணிகரிடம் பிள்ளையை ஒப்படைத்த குடும்பத்தினர் ஏழு மாதங்களாகியும் தம் பிள்ளையைப் பற்றிய எந்த விவரமும் தெரியாததால், தங்கள் பையனைத் தேடி, சென்னை சென்றனர். தேங்காய் மண்டியில் வேலை செய்த தங்கள் பையனைக் கண்டுபிடித்தனர். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்த மகிழ்வில் திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில் தஞ்சம் புகுந்தனர். சென்னைக்கு ஜெயராமுலுவாகச் சென்றவர் எவ்வாறு வெற்றியழகனாக மாற்றம் பெற்றார் என்ற அவரின் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டு, அவர்தம் வாய்மொழியாக யாவற்றையும் பதிவுசெய்துகொண்டேன். யான் கேட்ட புலவர் கு. வெற்றியழகனாரின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து....

ஜெயராமுலு...

  மரக்காணம் அருகில் உள்ள, திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட ஊரணி என்ற ஊரில் 12.10.1936 இல் குப்புசாமி, முனியம்மாள் ஆகியோரின் தலைமகனாகப் பிறந்தவர் ஜெயராமுலு. இவருடன் பிறந்தவர்கள் மூவர். ஓர் ஆண். இரு பெண்கள். ஊரணிக்கு அருகில் உள்ள கழிக்குப்பம் என்னும் ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர். இப்பள்ளியில் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தால் அப்பள்ளியிலிருந்து விலகித் தம் ஊரினர் உருவாக்கிய திண்ணைப்பள்ளியில் முத்து வாத்தியார் என்ற ஆசிரியரிடம் சிலகாலம் பயின்றவர். அங்குப் பார்த்தசாரதி மாலை, விவேக சிந்தாமணி, அறப்பளீசுவரர் சதகம் உள்ளிட்ட நூல்களைப் பயின்றவர். முத்து வாத்தியார் கண்டிப்புக்குப் பெயர்பெற்றவர். முதலில் வந்து வருகையைத் தெரிவிக்கும் மாணவனைத் தவிர அனைத்து மாணவர்களும் ஆசிரியரின் பிரம்படியிலிருந்து தப்ப இயலாது. இரவு வந்து உங்கள் வீட்டின் அருகில் இருந்து படிக்கின்றாயா என்று கவனித்தேன்? ஏன் படிக்கவில்லை என்று ஒவ்வொரு மாணவரையும் கண்டிப்பாராம். இதனைக் கேள்வியுறும் மாணவர்கள் மறுநாள் முதல் வீட்டில் உரக்க ஓசை எழுப்பிப் படிப்பது உண்டாம். காலைக்கடன் கழிக்கச் செல்லும்பொழுது விநாயகர் அகவல் உள்ளிட்ட நூல்களைப் படிக்குமாறு ஆசிரியர் அக்காலத்தில் வலியுறுத்துவாராம். அதனால் ஊரெங்கும் விநாயகர் அகவல் பாராயண ஒலி கேட்குமாம். அழகான கையெழுத்து வாய்க்கப்பெற்றது அந்த ஆசிரியரின் தண்டனையால்தான் என்று வெற்றியழகனார் நன்றியுடன் குறிப்பிட்டார். வறுமை காரணமாகச் சென்னையில் தேங்காய்க்கடையில் பணிபுரிவதற்காகச் சென்றவர், பின்னர் மளிகைக் கடைக்குப் பணிமாறினார்.  மளிகைக்கடையில் பணியில் இருந்தபொழுது பொருள்களை மடித்துக்கொடுக்கும் தாள்களைப் படித்துப்பார்ப்பது வழக்கம். அப்பொழுது ஒரு தாளில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அழகின் சிரிப்பு நூலில் இடம்பெறும்,

கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று, குரங்கு தொட்டு
“விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதிப்பதைப்போல்
கிளைதொறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம் பாய் எண்ணி எண்ணி
உச்சி போய்த் தன்வால் பார்க்கும்"

என்ற கவிதை வரிகளைக் கண்ணுற்று, இதுபோல் கவிதைகள் இயற்ற வேண்டும் என்று உந்துதல் ஏற்பட, தொடர்ந்து எழுதத் தொடங்கினார். 1954 ஆம் ஆண்டில் "நல்ல பிள்ளை" என்ற தலைப்பில் இவர் எழுதிய பாடல் பூமாலை என்ற சிறுவர் இதழில் வெளிவந்தது. அன்று தொடங்கி தொடர்ந்து எழுதிக்கொண்டே உள்ளார். படிக்க வேண்டும் என்ற வேட்கையால் தம் மளிகைக்கடைப் பணியை விடுத்து, அச்சுக்கூடம் ஒன்றில் பணிக்குச் சென்றார். பகல்பொழுதில் அச்சுக்கூடப் பணி நிறைவுறும். எனவே இரவில் படிப்பதற்கு நேரம் கிடைத்தது.

  சுப்பிரமணியன் என்ற நல்லோரின் துணையால், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இயங்கிய  சென்னை வேதாந்த சங்கத் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் செ. கோவிந்தராசனாரிடம் தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களைக் கற்றார். இலக்கணக்ககடல் மே. வீ. வேணுகோபால பிள்ளையிடம் இலக்கண ஐயங்களைப் போக்கிக்கொண்டார்.

  சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1969 இல் புலவர் வகுப்பில் சேர்ந்து, 1973 ஆம் ஆண்டில் புலவர் பட்டயம் பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்ற புலவர் வெற்றியழகன் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். பல நூல்களுக்கு மெய்ப்புப் பார்த்து வழங்கும் பணியும் தொடர்ந்தது. தாமே நூலாசிரியராக மலர்ந்து பல நூல்களைத் தமிழன்னைக்குப் படையல் செய்தார். முனிச்செல்வன், குப்புராமன், விறல் எழிலன் என்ற புனைபெயரிலும் எழுதியவர்.

புலவர் வெற்றியழகனின் தமிழ்க்கொடைகள்:

1.   வெற்றியழகன் கவிதைகள் (முதல் தொகுதி)
2.   வெற்றியழகன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
3.   வெண்ணிலா (குறுங்காவியம்)
4.   அறிவார்ந்த கதைகள்
5.   அண்ணா ஆட்சியின் அருஞ்செயல்கள்,
6.   அண்ணா   புகழ்மாலை
7.   அமைதிக் கடல் அண்ணா
8.   காவியக் கலைஞர்
9.   தமிழர் வாழ்வியல்
10. புத்திசாலிக் கதைகள்,
11. தவறில்லாமல் தமிழை எழுத
12. தரமிகு தமிழ்க் கல்வி
13. அருந்தமிழ்ச் சான்றோர் அறுபத்து மூவர்
14. உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும்
15. கலைஞர் நூறு
16. யாப்பரங்கம்
17. தொல்காப்பியம் எழுத்ததிகார எளிய உரை
18. தொல்காப்பியம் சொல்லதிகாரம் எளிய உரை
19. வெற்றியழகன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)
20. அழியாத ஓவியம்
21. வழக்கமும் விளக்கமும்
22. நல்ல தமிழ் எழுத
23. இசைத்தேன்

உள்ளிட்ட பல நூல்களைப் புலவர் வெற்றியழகன் வழங்கியுள்ளார்.

  1964 இல் நீலாவதி அம்மையாரை மணம் செய்துகொண்ட இவர்களுக்கு மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இரண்டு மகன்: ஒரு மகள்.

  1961 இல் புகுமுகத் தேர்வு, 1971 இல் இடைநிலைத் தேர்வு, 1973 இல் இறுதி நிலைத் தேர்வு எழுதி வெற்றி கண்டவர். 1973 இல் புலவர் பட்டம் பெற்றவுடன் ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராகச் செல்ல நினைத்தாலும், தாம் பணிபுரிந்த அச்சகத்தின் பணியால் அவ்வாய்ப்பை இழந்தார். பகுதி நேரப் பணியாகத் தமிழ்ந்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் 1973 முதல் 1976 வரை பிழை திருத்தும் பணியை மேற்கொண்டார். அன்று தொடங்கி இன்று வரை பிழை திருத்தும் பணியையே தம் வாழ்க்கைக்குரிய பணியாக ஏற்றுச் செய்து வருகின்றார். இவ்வகையில் ஆயிரக்கணக்கான நூல்கள் இவர் கண்பார்வையால் உயிர்பெற்றுள்ளன.

  தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களின் நூல்கள் மறுபதிப்புக் கண்டபொழுது அவை பிழையின்றி வெளிவருவதற்குத் துணைநின்றவர். அவ்வகையில் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், மொழிஞாயிறு பாவாணர், பவானந்தம் பிள்ளை பதிப்பித்த  யாப்பருங்கல விருத்தி, திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், காந்தளகம் தொகுப்பு முருகன் பாடல்கள், தொல்காப்பியம், கலைஞரின் பவழ விழா மலர், கலைஞரின் கவிதை மழை, கலைஞரின் சிறுகதைக் களஞ்சியம், நா. கதிரைவேற் பிள்ளையின் தமிழகராதி, அபிதான சிந்தாமணி, புலவர் குழந்தையின் இராவண காவியம், பாலகிருட்டின பிள்ளை பதிப்பித்த திருவருட்பா, கா.சு. பிள்ளை பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு, பாரதிதாசன் கவிதைகள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர், உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கக் கட்டுரைகள் (எட்டுத் தொகுதி), உள்ளிட்ட நூல்களை மெய்ப்புப் பார்த்து வழங்கிய பெருமைக்குரியவர்.

  தமிழ் வளர்ச்சித்துறையில் பதிப்பாசிரியராக இருந்து அறநெறிக் கருவூலம், பொன்மொழிக் களஞ்சியம், தமிழைப் பற்றிய வெளிநாட்டறிஞர் பொன்மொழிகள் ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

  தமிழ்நாட்டரசின் பதினொன்றாம் வகுப்புப் பாட நூலில் வரதட்சணை குறித்து இவர் எழுதிய பாடலும், பன்னிரண்டாம் வகுப்புப் பாட நூலில் இவர் இயற்றிய குருதிக்கொடை என்ற தலைப்பில் அமைந்த பாடலும் பாடப்பகுதிகளாக இருந்துள்ளன.

 தமிழகத்தில் நடைபெற்ற கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கட்டுரைப் போட்டிகள், கவிதைப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள் ஆகியவற்றுக்கு நடுவராக இருந்துள்ளார்.

சிறப்பு வகுப்புகள்:

  யாப்பரங்கம் என்ற தலைப்பில் யாப்பிலக்கண வகுப்பு, தலைநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் தொல்காப்பிய வகுப்பு, புறநானூற்றுப் பொழிவு, திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் மூன்றாவது முறையாக நன்னூல் வகுப்பு, பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் இராவண காவியப் பொழிவு, நங்கைநல்லூர் திருக்குறள் பேரவையின் சார்பில் நல்ல தமிழறிவோம் வகுப்பு, திருவள்ளூரில் தொல்காப்பிய வகுப்பு எனப் பல்வேறு வகுப்புகளை நடத்தித் தமிழ் இலக்கணம், இலக்கியம் பரப்பும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

  தமிழ்நாட்டரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஓங்கு தமிழ்ப் பாவலர் விருது, தலைநகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் மொழிப்போர் மறவர் விருது, சென்னைத் தமிழ்ச் சுரங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது, அண்ணா நகர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் தொல்காப்பியர் சீர் பரவுவார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

கொள்கையும் கோட்பாடும்:

  திருக்குறள் கற்ற நாள் முதலாகப் புலால் மறுத்தவர். சீர்திருத்தச் சிந்தனையுடைவர். குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயரிடும் நோக்கினர். சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர்.  தம் இறப்புக்குப் பிறகு உடலை மருத்துவ ஆய்வுக்கு வழங்குமாறு விருப்பம் தெரிவித்தவர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்னும் விருப்ப உணர்வினர். மொழி, இன, நாட்டுப்பற்றுடன் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும் செம்மல் இவர்.

குறிப்பு: என் கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர், நூல் வரைவோர், களஞ்சியம் தொகுப்போர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

திங்கள், 23 ஜூலை, 2018

அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுடனான சந்திப்பு!


முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

 மதுரை இலக்கிய நிகழ்வு நிறைவுற்றதும், தானி ஒன்றில் ஏறி அமர்ந்து தொடர்வண்டி நிலையம் நோக்கி விரைந்தேன். இரவு 11 மணிக்குத் தொடர்வண்டி. 10.45 மணிக்கு நிலையத்தை நெருங்கினேன். நான் பயணம் செய்யும் தொடர் வண்டி அரை மணி நேரம் காலம் தாழ்ந்து வரும் என்ற குறிப்பறிந்து மெதுவாக நடைமேடை நோக்கி முன்னேறினேன். ஆயிடை, அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். பழைய நினைவுகள் வரப்பெற்றவராக அன்புடன் நலம் வினவினார். இருபதாண்டுகளாக அவருடன் தொடர்பு உண்டு எனினும் இன்றுதான் மனந்திறந்து உரையாடுவதற்கு வாய்ப்பு அமைந்தது. அவர் பயணம் செய்யும் அதே தொடர்வண்டியில்தான் நானும் பயணம் செய்யவேண்டும். கூடுதல் சிறப்பு என்னவெனில் இருவரும் ஒரே பெட்டியில் பயணம் செய்ய உள்ளதை அறிந்ததும் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

 வண்டி அரை மணி நேரம் காலம் தாழ்ந்து வர உள்ளதை அவரிடம் சொல்லி, நடைமேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்தோம். நான் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்ச்சியை எடுத்துரைத்தபொழுது, தாமும் இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றி, மீளும் செய்தியைத் தெரிவித்தார். எங்களின் உரையாடல் எழுத்தாளர்கள் - சமகால இலக்கியம் நோக்கி மெதுவாக நகர்ந்தது. என் உள்ளங்கவர்ந்த எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் பற்றியும், அவர்தம் இலக்கிய ஆளுமை குறித்தும் சில வினாக்களைத் தொடுத்தேன். மகிழ்ச்சியுடன் தம் எண்ணங்களைத் திருப்பூரார் பகிர்ந்துகொண்டார். "சாயங்கால மேகங்கள்" என்ற நா.பா.வின் படைப்பினைப் பற்றி எடுத்துரைத்து, சில வரிகளை நினைவூட்டினேன். ஊக்கமடைந்த திருப்பூரார் தமக்கும் நா.பா. வுக்குமான இலக்கிய உறவு பற்றி மனந்திறந்து பேசினார். நா.பா. வின் பிற புகழ்பெற்ற படைப்புகளை எனக்கு அறிமுகம் செய்தார். தாம் சுவைத்த நா.பா.வின் பாத்திரங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவர் குடும்பத்துள் ஒருவராக, உற்ற நண்பராக விளங்கிய கடந்த கால வாழ்க்கையை என்னுடன் உரிமையுடன் பகிர்ந்துகொண்டார். எங்களின் பேச்சு ஜெயகாந்தன் படைப்புகள் குறித்தும் அவரின் இலக்கிய வாழ்க்கை குறித்தும் நகர்ந்தது. நான் அறியாத, ஜெயகாந்தனின் படைப்பு நுட்பங்கள் பலவற்றைத் திருப்பூரார் எனக்கு அறிமுகம் செய்தார்.

 அறிவிப்பு ஒன்று ஒலித்தது. நாங்கள் பயணம் செய்யும் அனந்தபுரி விரைவு வண்டி மேலும் ஒரு மணி நேரம் காலம் தாழ்ந்து வரும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அருகில் இருந்த மக்கள் பலரும் சோர்வடைந்து, நின்ற கோலத்தைக் கிடந்த கோலமாக்கினர். தொடர்வண்டியின்  காலத்தாழ்ச்சி அறிந்து நானும் திருப்பூராரும் மகிழ்ச்சியுற்றோம். உரையாடல் தொடர்ந்தது. தி.ஜானகிராமன் படைப்புகள் குறித்தும் அவரின் படைப்பு நுட்பங்கள் குறித்தும் திருப்பூரார் எனக்கு ஒரு வகுப்பு எடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. தி.ஜானகிராமனைப் படித்து முடிக்க வேண்டும் என்று உந்துதலை அவரின் உரையாடல் எனக்கு ஏற்படுத்தியது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி படைப்புகள் குறித்தும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். ஜெயமோகன் படைப்புகள் குறித்தும் உரையாடினோம்.

 திருப்பூரார் தம் தந்தையார் குறித்தும், அவரின் பணிநிலையால் பல ஊர்களில் படிக்க நேர்ந்தமை குறித்தும், குடும்பம் குறித்தும் பல செய்திகளை மனந்திறந்து பகிர்ந்துகொண்டார். சென்னையில் தாம் சந்தித்த இலக்கிய ஆளுமைகள் குறித்தும், அவர்களிடம் கற்றுக்கொண்ட உயர்பண்புகள் குறித்தும் ஓர் ஆசிரியர் மாணவனுக்கு எடுத்துரைப்பதுபோல் பொறுப்புடன் எனக்கு எடுத்துரைத்தார். திருப்பூராரை அடையாளம் கண்டுகொண்ட அவர் வாசகர்கள் சிலர் இடையில் புகுந்து வணக்கம் சொல்வதும், அவர்களை வாழ்த்தி வழினுப்புவதையும் திருப்பூரார் மேற்கொண்டார்.

 மு.வ. வின் இலக்கியப் படைப்புகள் பெருந்திரள் மக்களைச் சென்றடைந்தமையையும், பலர் அவர் நூல்களைப் படித்து மனம் மாற்றம் பெற்றனர் என்பதையும் எடுத்துரைத்த திருப்பூர் கிருஷ்ணன் மூத்த எழுத்தாளர்கள் கு. அழகிரிசாமி, கி. ரா. உள்ளிட்டவர்களின் இலக்கியச் சுவையூட்டும் படைப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

 எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் வாலி உள்ளிட்டவர்களின் படைப்பாளுமை மற்றும் பழகும் குணம் குறித்து அரிய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். எழுத்தாளர் அகிலன் தன் விருப்பம் ஒன்றை, நா.பா.விடம் எடுத்துரைக்க, அது அந்நாள் முதல்வர் எம்.ஜி. ஆர் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு நூலாசிரியர் பலருக்கு உதவியாக இருந்தமையையும் நினைவூட்டினார். நா.பா.வின் துணிவும், இலக்கியச் செம்மாப்பும் எனக்குப் புலப்பட்டன.

 இரசிகமணி டி.கே.சி. யின் கம்பராமாயண ஆர்வம் குறித்து, யான் அறியாத பல சுவையூட்டும் நிகழ்வுகளை எடுத்துரைத்தார். கல்கி, இராஜாஜி உள்ளிட்டோரின் படைப்புகள், அவர்களின் இலக்கியப் பணிகளும் எங்களின் உரையாடலில் இடம்பெற்றன.

 சமகால எழுத்துகளை ஆர்வமுடன் கற்றுள்ள திருப்பூர் கிருஷ்ணன், சமகால எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகிய பேரனுபவம் வாய்த்தவராக விளங்குவதை அறிந்து வியப்புற்றேன். ஒரு தகவல் சுரங்கமாகவும், சமகால இலக்கியப் போக்குகளை அறிந்தவராகவும் விளங்கும் திருப்பூர் கிருஷ்ணன் ஓர் இலக்கியப் பல்கலைக்கழகமாக விளங்குவதை அறிந்து மனதார அவரை வணங்கினேன். இவர்போலும் எழுத்தாளர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்புரைகள் நிகழ்த்தினால் கடந்த நூறாண்டுகளாகச் சிறந்த விளங்கிய படைப்பாளர்கள், படைப்புகள் குறித்த நல்ல அறிமுகம் மாணவர்களுக்குச் சென்று சேரும் என்பது என் நம்பிக்கை.
மு.இளங்கோவன், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

திங்கள், 16 ஜூலை, 2018

இளங்கோவன் என்னும் எம் ஏந்தல்!... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை





சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்களால் சிறப்பிக்கப்படும் இனிய பொழுது... 
(படத்தில்: தாமரைக்கோ, தூ. சடகோபன், மு.இளங்கோவன், ப.அருளி ஐயா, ’தழல்’ ஆசிரியர் தேன்மொழி அக்கா, திருவாசகம், தண்ணுமை ஆசான் திருமுடி. சேது. அருண், சாமி கச்சிராயர் 
(கோப்புப் படம்) .

 மிகப் பல்லாயிரந் தமிழாசிரியப் பெருமக்கள் – பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் நல் வாய்ப்பு வாய்ந்திருக்கும் நம் புதுவையுட்பட்ட தமிழ் மாநிலத்தில் – தமிழின் அடிப்படைத் திறங்களுணர்ந்து அதனுள் தோய்ந்து தெளிந்து – அதன் வரலாற்றுச் சிறப்புக்களை ஆழமாக அறிந்து – அது பெற்றிருக்கும் பெருமைகளையும் திருமைகளையும் துலங்கத் தெரிந்து – அதனை நம் தமிழ்ப்பிள்ளைகள் நெஞ்சில் வலிவார்ந்த படிவுகளாக உருவாக்கும் உயரிய போக்கு வாய்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடத் தக்க சிற்றளவுக்கும் மிக மிகக் குறைவானவர்களே உளர்!... பல்லாயிரக் கணக்கிலாகப் பணம் திரண்டு பாயும் வாய்ப்பு, ஆசிரியர் தொழிலுக்கு இன்று வாய்த்துள்ளது!

 தமிழ்தான் தம் வாழ்க்கையினையே இப்படி வாழ வைத்திருக்கின்றது – வளங்கொழிக்க வைத்திருக்கின்றது எனும் அடிப்படை நன்றியுணர்வு வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவானதாகவே உள்ளது!

 எவர்க்கு இலாது போயினும் தமிழாசிரியப் பெருமக்களுக்கு இத்தகு நன்றியுணர்வு ஓரளவுக்கேனும் இருந்தாதல் வேண்டும்.

“நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு!
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே”

என்ற பாவேந்தர் வரிகள், நம் தமிழாசிரியர்கட்கே இருந்தாக வேண்டிய மனப் பண்பின் பாங்கினைப் பதிவுசெய்து வைத்துள்ளமையை ஒவ்வொரு தமிழாசிரியரும் நன்கு உள்ளத்துள் பதியமிட்டு வைத்துக்கொள்ள வேண்டும்!

 ஐம்பது – அறுபதுகளில் (1950-59.. 1960-1969), நாங்கள் பயின்ற பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் என்போர்க்கு இருந்த தனீஇ மதிப்பு, மிகுந்த பெருமை சான்றது! அவர்கள்பால் ஓர் இனம்புரியாத அகப் பாசவுணர்வு எங்கள் நெஞ்சங்களில் படர்ந்திருந்தமையை இன்னும், இன்றும்  எண்ணின் உவப்பால் உகளிக்குதிக்கும் எழுச்சிநிலையே நினைவில் நீடி இன்புறுத்துகின்றது! அக்காலத் தமிழாசிரியர்கள் மிகப் பெரும்பாலரும் அப்படிக்கொத்த பெருமிதவுணர்வோடேயே நன்னடையிட்டார்கள்! இன்றோ, தமிழாசிரியர்களே தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டு இயங்குகின்றார்கள்! உயரிய ஊதியம் கிடைப்பதன் வழி கொஞ்சம் விரைத்தவாறு நிற்கின்றார்களே தவிர, தமிழால் தழைப்பெய்திய உள்ளங்கொண்டோராயிலர்!

 தமிழில்  கையெழுத்துப்போடும் அளவுக்குக்கூட மானமும் சூடும் வாய்ந்தோராகத் தமிழாசிரியருள் மிகப் பலர் இலர்! வாங்கும் ஊதியப் பணத்திலும் பணியிலும் இதன்வழி ஏதேனும் சிக்கல் நேரலாமோ என்றவாறு அஞ்சும் அகநடுங்கிகளாகவே பலர் இன்றும் உளர்! நாம் தமிழாசிரியர் என்று தலைநிமிர்த்தி நடக்கும் நடையராகப் பலர், இலர்!

 தம் பிள்ளைகளைத் தாம் பயிற்றுவித்துக்கொண்டிருக்கும் – அதேவகை அரசுத் தமிழ்ப் பள்ளிகளில் பயிலச்சேர்க்கும் மனபாங்கினராகவும் பலர் இலர்! பிள்ளைகளின் எதிர்காலம், - தமிழ்வழிக் கல்வியால் பாழாய்ப் போய்விடும் என அஞ்சும் அச்சங்கொள்ளிகளாய்ப் புதுவையிலும் – தமிழகத்திலும் பரவலாக மிகப் பலர், உளர்!

 தாம் பயிற்றுவிக்கவேண்டிய அரசுத் தமிழ்ப்பள்ளிப் பிள்ளைகளின் பாடங்களில் மனம் பற்றாது, உரியவாறு செயற்பற்றாது – ஆங்கிலக் கொள்ளைவிலைக் கொலைப்பள்ளிகளில் பயிலும் தத்தம் பிள்ளைகளை – உரிய நேரத்தில் அழைத்துச்சென்று உள்நுழைத்துவிடவும் – உண்ணவேண்டிய இடைநேரத்தில் தூக்குச்சட்டியொடு சென்று அவர்கட்கு ஊட்டி வரவும் – பள்ளி நிறைவுறும் நேரத்திற்கும் முன்னீடாக வண்டியொடு சென்று வாயிலருகில் காத்திருந்து பற்றி அழைத்துவரவும் வினைகள் பல மேற்கொண்டு – ஏமாறியராய் வேறு வழியின்று வந்து மாட்டிக்கொண்டு மனங்குமுறும் தலைகாய்ந்த ஏழைபாழைகளின் – கால்வழியினராய பிள்ளைகளுக்கு இரண்டகம் இழைக்கும் இரும்பாணி நெஞ்சத் தமிழாசிரியர் பலர் ஆங்காங்கும் உள்ளமையை வெளிப்படையாகவே நம் வாழ்க்கைப் போக்கிடையே நன்கு அறியலாகும்!

 தமிழகத்திலும் – புதுவையிலும் பொதுவாழ்வினராகிய நம் மக்களின் தமிழ் மானவுணர்வின்மைக்குக் காரணர்களாகவே தாங்கள் உள்ளோம் என்னும் உண்மையை, அன்னோர் ஆழ்ந்து கருதிப் பார்க்க வேண்டும்!  தமிழாசிரியர் என்போர்க்கு மட்டும் – தமிழ் மானம் எனும் ஒன்று வாய்த்துவிடுமாயின் – தமிழர் வாழ்விலும் அறிவிலும் – மலர்ச்சியும் வளர்ச்சியும் எழுச்சியும் ஏற்றமும் மாற்றமும் உறுதியாய்ச் சிறந்தொளிரும்!

 இத்தகு தமிழ் மானம் வாய்ந்தவராய் – தகைசான்ற தூய நன்மனத்தராய் - இத் தமிழகத்திலும் புதுவையிலுமாக ஆங்கொருவரும் ஈங்கொருவருமாக நெறிவிலக்கர்களாக நின்றுயரும் சிறப்புக்குரியோர் சிலருள் – முனைவர் பேராசிரியர் திருமிகு மு.இளங்கோவன் அவர்களும் ஒருவராகுவர்! முப்பான் ஆண்டுகளுக்கும் முன்னீடிருந்தே – இத் தமிழ்த்தோன்றலின் இளந்தைக் காலத்தினின்று இன்றுகாறுமான படிப்படியான நிலை வளர்ச்சிகளைக் காணும்- கண்டு களிப்பெய்தும் வாய்ப்பு எனக்குத் தொடர்ந்திருந்தது! பள்ளி – உயர்நிலைப் பள்ளி – செந்தமிழ்க் கல்லூரி – பல்கலைக்கழகங்கள் எனும் உயர்ச்சிப் படிக்கட்டுகளில் உயர்ந்துயர்ந்து கற்றுச் செழித்துச் சென்ற காலத்தினிடையே – அவ்வக்காலும் தொடர்ந்து தொடர்புவைத்திருந்தவர், இவர்!

 தன்மானஞ்சான்ற தனித்தமிழ் அறிஞர்களான பாவல்லோரான பாவேந்தர் – பாவலரேறு - சுப.மாணிக்கனார் என்றவாறியங்கிய பெருந்திறச் சான்றோர்களின் எழுச்சியாக்கங்களிற் படியப் படியத் தொண்டுமனம் என்பது இயல்பாகவே இவர்க்குத் தொற்றிக் கொண்டது! அறிவார்வமும் – ஆய்வுணர்வும் - தமிழின நன்னோக்கும் – மண்ணல நோக்கும் இவர் நெஞ்சில் படர்ந்தன! இவரின் தமிழ் உள்ளத்து வயலில் – தமிழியல்சார் விளைச்சல்களும் ஆண்டாண்டுக்கும் செழிப்பெய்தின.

 தமிழ் ஆய்விலே அகம் பற்றிக்கொண்டு – அகப்பட்டுக்கொண்டு தத்தம் வாழ்வையே தொலைத்து நலிவித்துவிட்ட தமிழ் அறிஞர் பலரின் குடும்ப நிலைகள் பற்றியும் இவர் கவலைப்பட்டுக் கசிந்துருகினார்! அக்குடும்பத்தார்க்குத் துணைநிற்க வேண்டியது தன் கடமைகளுள் ஒன்றெனவும் உறுதியெடுத்தவராய் அவற்றிற்குரிய செயல்பாடுகளில் தன் நேரத்தையும்- உழைப்பையும்  - தன் சொந்தப் பொருளையும் போட்டுப் – பல்வேறு பயன்கள் அன்னின்னோர்க்கு உருவாக்கித் தந்த வள்ளல், இவர்! பெருமழைப் புலவர் குடும்பத்தார்க்கு இவ்வகையிலாக இவர் செய்த  செயல்கள் வியப்புக்கும் – மதிப்புக்கும் உரியன!

 பெரியமனம் பொதிந்த அறிவுழைப்பாளியர் – பெரும் பெருஞ்செயல்களையே செய்து நிற்பவராகுவர்! (“செயற்கரிய செய்வர் பெரியர்” – என நம் வள்ளுவப் பேராசான் வாயுரைத்த செய்தியும், இதுவே!). பெருமழைப்புலவரையும் – பண்ணாராய்ச்சிப் பேரறிஞர் குடந்தை சுந்தரேசனாரையும் – இசையிலக்கண மேதை விபுலாநந்தரையும் – உச்சியில் தூக்கிவைத்து உலாச்செலுத்தும் இவரின் செயல்கள் யாவும் இத் தகு பெருமனத்து இயக்கங்களே!

 தமிழியல் சிறப்பு ஒழுங்கினை நுண்ணிதாகச் சிதைத்து உருக்குலைக்க ஒன்றுந் தெரியாத அற்பாவியரைப் போல நாடகமாடிய சூழ்ச்சியார்ந்த மேற்கட்டு அறிவாளியரிற் சிலர் முயன்றபோதெல்லாம் – உரிய தூய துணை நெஞ்சங்களுடன் கைகோர்த்துக்கொண்டு அவற்றைத் தகர்த்துத் தவிடுபொடியாக்கிய வரலாறுகளையெல்லாம் எம் போல்வார் நன்கு அறிவர்!

 இடைக்கட்டில் – எளிய பொதுக்குடும்பத்தில் முளைத்தெழுந்து துன்பத்தையும் ஏழ்மைத் துயரத்தையும் சுவைத்துப் பதம்பார்த்தவாறே வளர்ந்து படிப்படியாகத் தன்னைத் தானே தூக்கி நிறுத்திக்கொண்டு - வளர்த்தெடுத்துக்கொண்டு வானுலாக் கொள்ளும் செந்தமிழ் வானம்பாடியாய் நம் இளங்கோவன் என்னும் செம்மல் திகழ்கின்றார்!

 தமிழுலகத்தொடு நெஞ்சங்கலந்து தோய்ந்துறையும் சிறப்பு மாந்தராக இன்று தழைத்துத் தமிழ்தொண்டாற்றிவரும் பெருமதிப்புக்குரிய நம் இளங்கோவன் என்றும் எம்போல்வார் நெஞ்சகங்களில் உயரிடம் பற்றி மேலோங்கி நிற்பார்! வினைபலவாற்றி – விளைவுகள் நிறைத்து இம் மண்ணையும் - மக்களையும் – மொழியையும் சிறப்பிப்பார்!

 தூய நன்னெஞ்சமும் – துணிந்த வீறும் – தெள்ளிய அறிவும் – தோற்றப் பார்வையும் ஊற்றுக்கோளும் ஏற்று நிலைநிற்கும் நம் இளங்கோவன் ஏந்தல் – அன்பிலும் மலைநிலையர்! இவர் வாழ்க! இவர் குடும்பம் வாழ்க! இவரின் தமிழ்ச்சுற்றம் சிறக்க! இவரின் நற்பணிகள் மேலும் தொடர்க! தமிழ்மண் செழிக்க!

(11.02.2017 இல் வெளியிடப்பெற்ற என் வாழ்க்கைக் குறிப்புரைக்கும் நூலுக்குச் சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்கள் வழங்கிய வாழ்த்துரை. செழுந்தமிழ் நடை கருதியும், நாட்டு நிலை கருதியும் இவண் வெளியிடப்படுகின்றது).

புதன், 11 ஜூலை, 2018

பொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு!


கோனேரி பா. இராமசாமி

 புதுவையின் புகழ்பெற்ற தெருக்கூத்துக் கலைஞரும், புதுவை அரசின் பொறியாளரும், பன்னூலாசிரியருமாகிய கலைமாமணி கோனேரி பா. இராமசாமி அவர்கள் உடல்நலம் குன்றி, இன்று(10.07.2018) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து பெருந்துயருற்றேன்.

  கோனேரியார் அவர்களைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நன்கு அறிவேன். தெருக்கூத்துக் கலையில் அவருக்கு இருந்த ஆர்வம் கண்டு அவர்தம் பணிகளைக் கல்வியுலகிற்கு நான் முன்பே அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். அவர்தம் குரலையும், கலையார்வத்தையும் பதிவு செய்து காணொளியாக இணையத்தில் ஏற்றியுள்ளேன். திருமுதுகுன்றத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றிற்கு அழைத்துச் சென்று, நாட்டுப்புற ஆய்வாளர்கள் முன்பாகப் பாடச்செய்து அவரை அறிமுகம் செய்தேன். அவரின் கலைப்பணிகளை நம் மாணவர் ஒருவர் முனைவர் பட்டத்திற்கு ஆய்வுசெய்து வருகின்றார். கிழமைக்கு ஒருமுறை என்னுடன் பேசி, புதுச்சேரியின் தெருக்கூத்து வரலாற்றை எழுதுவதற்குப் பெருந்துணை செய்தவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

  புதுச்சேரி மாநிலம் கோனேரிக்குப்பத்தில் 15.11.1966 இல் பிறந்த கோனேரியார் புதுச்சேரியில் உள்ள தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு ஆதரவாக இருந்து, மக்கள் கலைக்கழகம் என்ற அமைப்பு நிறுவி, கலைப்பணி செய்தவர். அவர்தம் வாழ்க்கைக் குறிப்பு அறிய விரும்புவோரும், அவர்தம் கலையீடுபாட்டைக் காண விரும்புவோரும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கவும்.

வாழ்க்கைக் குறிப்பு அறிய




  கோனேரி பா. இராமசாமியாரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர், நண்பர் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.