நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 25 நவம்பர், 2007

புதுச்சேரியில் 11 ஆவது தேசியப் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியைப் புதுச்சேரி கூட்டுறவு புத்தக சங்கம் நடத்திவருகிறது.அந்த அந்த ஆண்டு வெளிவரும் நூல்களைப் படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் நேரடியாகப் பார்த்து வாங்க நல்ல வாய்ப்பாக இது அமையும்.இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி புதுச்சேரி வேல்.சொக்கநாதன் திருமணமண்டபத்தில் திசம்பர் 17முதல் 26 வரை நடைபெற உள்ளது.அலுவலக நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணிவரையும் விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரையும் கண்காட்சி நடைபெறும்.கண்காட்சியில் வாங்கும் நூல்களுக்கு 10% கழிவு வழங்கப்படும்.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ எண்பதிற்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் நூல்கள் பார்வைக்குக் கிடைக்கும். தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு,இந்தி முதலான மொழிகளில் அமைந்த நூல்கள் கிடைக்கும்.கல்வி நிறுவனங்களுக்குச் சிறப்புக்கழிவு உண்டு.நாள்தோறும் இன்னிசை.வினாடி-வினா போட்டிகள் நடைபெறும். 200 உரூவாவிற்குமேல் நூல்கள் வாங்குவோர்க்கு ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.அனுமதி இலவசம்.

செவ்வாய், 20 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை குறித்த கலந்துரையாடல்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை வரும் திசம்பர் 9 இல் புதுச்சேரியில் நடைபெறுகிறது.இதற்கான சிறப்புக் கலந்துரையாடல் இன்று 20.11.2007 இரவு 8 மணி முதல் 9.30 வரை புதுச்சேரியில் நடந்தது.

நிகழ்ச்சியை எவ்வாறு நிகழ்த்துவது என நண்பர்கள் சொன்ன வழிகாட்டல்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.வெளியூர் நண்பர்கள்,வெளிநாட்டு நண்பர்கள் தெரிவித்த
கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.மலர் வெளியீடு,வரும் பயிற்சியாளர்கள் மகிழ்ச்சியுடனும்,ஆர்வத்துடனும் பங்குபெற உரிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
எதிர்பார்த்ததைவிட பயிற்சியாளர்கள் மிகுதியாக வரவிரும்புவதால் வருகை பற்றிய சில
வரையறைகள் இணையம் வழியாகவும்,மின்னஞ்சல் வழியாகவும் தெரிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சனி, 17 நவம்பர், 2007

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் என்னும் பெயரில் ஒடுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களின்
கலை, இலக்கிய வளர்ச்சிப் பணிகளுக்குத் தமிழ்நாட்டில் புதிய கலை, இலக்கிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.இவ்வமைப்பின் தொடக்கவிழா முறைப்படி தமிழகத்தின் தலைநகரில் விரைவில் நடைபெற உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் கலை, இலக்கியங்களை வளர்த்தல்
இப் படைப்புகளை வழங்கும் படைப்பாசிரியர்களைப் பாராட்டல்,விருதுவழங்கிச் சிறப்பித்தல்,
படைப்பாளர்களை உருவாக்கும் நோக்கில் பயிற்சியளித்தலைச் செய்யத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.இது பற்றிய விவரம் பின்னர் விரிவாகப் பதிவுசெய்வேன்.

திங்கள், 12 நவம்பர், 2007

தினமணியில் புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை பற்றி...

இன்றைய(12.11.07) தினமணி இதழில் புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை பற்றி விரிவாக
செய்தி வெளிவந்துள்ளது.

பார்க்க :

புதுச்சேரி - 12 2007 00:11

கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் வலைப்பதிவுகள்

புதுச்சேரி, நவ. 11: கணினியில் வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கணினியைத் தமிழில் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகளில் எழுதுவதற்கான வசதிகளை பிளாக்கர்.காம், வேர்ட்பிரஸ்.காம் உள்ளிட்ட பல தளங்கள் இலவசமாக வழங்குகின்றன.

யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரில் இலவசமாக வலைப்பதிவுகளை ஆரம்பித்து தங்கள் கருத்துகளை எழுத முடியும். தங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும். உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை இதில் விவாதிக்க முடியும். கதை, கவிதை, கட்டுரை, திரைவிமர்சனம் என எழுதலாம்.

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள தமிழ்த் திரட்டிகள் உள்ளன. இவைகள் இலவசமாக வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கின்றன.

இதற்காகத் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழூற்று உள்ளிட்ட திரட்டிகள் செயல்படுகின்றன. எழுதுபவர்கள் இந்தத் திரட்டிகளில் தங்கள் வலைப்பதிவுகளை இணைத்துக் கொண்டால் ஒரே இடத்தில் உலகில் உள்ள அனைவரும் படிக்க முடியும்.

தமிழ்மணம் திரட்டியில் 2354 பேர் தங்கள் பதிவுகளை இதுவரை இணைத்துள்ளனர். இதில் ஒரு நாளைக்குச் சராசரியாக 143 பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இதேபோல் தேன்கூட்டில் 1874 பேர் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளனர். இந்திய மொழிகளில் தமிழில்தான் வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த வசதி வாய்ப்புகள் இருப்பதால் கணினியில் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இயங்குதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பலருக்குத் தேவை.

புதுச்சேரியில் இந்த வலைப்பதிவுகள் குறித்தும், கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைக் கொண்டு செல்வது, இது தொடர்பான இயங்குதளங்களையும், தமிழ் மென்பொருள்களையும் அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பதிவுகளில் தமிழைப் பயன்படுத்துவது போன்றவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல உள்ளது என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன்.

இதற்காக இவர்கள் டிசம்பர் 9-ம் தேதி ஒருநாள் பயிற்சிப் பட்டறையை நடத்த உள்ளனர். இதில் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்கிறார்.

இந்த அமைப்பைத் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கணினி நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களில் தமிழின் பங்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற பயிற்சி பட்டறைகள் இதற்கு வலு சேர்க்கும்.

நன்றி : தினமணி 12.11.2007

ஞாயிறு, 11 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை கலந்துரையாடல் கூட்டம்

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை வரும் திசம்பர் 9 இல் புதுச்சேரி சற்குரு உணவகத்தில்  நடைபெற உள்ளதால் அதற்கான கலந்துரையாடல் கூட்டம் இன்று (11.11.2007) புதுச்சேரியில் காலை 10.30 மணியிலிருந்து பகல் இரண்டு மணிவரை நடைபெற்றது.

பட்டறை நிகழ்முறை, பட்டறையில் பேசப்பட உள்ள தலைப்புகள், பயிற்சியளிக்கப்படும் துறை, பயிற்சியளிப்போர், மாலையில் புதுவை முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழா நிகழ்முறை  பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.

சென்னை வலைப்பதிவர் பட்டறையைச்சேர்ந்த தோழர்கள் சிலரை விருந்தினர்களாக அழைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பட்டறையில் சிறப்புமலர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.

தொடர்புக்கு:
இராச.சுகுமாரன் :9443105825
மின்னஞ்சல் : rajasugumaran@gmail.com

சனி, 10 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை பற்றி இந்து நாளிதழில்...

புதுச்சேரி தமிழ் வலைப்பதிவர் பட்டறை பற்றிய செய்தியை இன்றைய (10.11.2007) இந்து
நாளிதழில் பின்வருமாறு வெளியிட்டு உதவியுள்ளனர்.

Puducherry

Workshop for bloggers

Special Correspondent

PUDUCHERRY: A workshop for bloggers would be conducted by the Puducherry Bloggers Wing here on December 9.

According to coordinator of the programme R. Sugumaran, the proposed workshop aims at providing adequate training for using Tamil in computers on a wider basis.

Imparting training in operating systems and software in Tamil, sending e-mail in Tamil and writing in Tamil blogs, with the assistant of required software, would be the components of the programme. For further details, contact 94431-05825.

நன்றி : இந்து நாளிதழ்