நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 27 டிசம்பர், 2023

மதுரகவி, பேராசிரியர் தா. ம. வெள்ளைவாரணம்

 

                   பேராசிரியர் தா. . வெள்ளைவாரணம் 

தா. . வெள்ளைவாரணம் அவர்கள் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் முன்னாள் மாணவராகவும், பேராசிரியராகவும் விளங்கியவர். பதிப்பாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும், வினா - விடை நூல்களை வழங்கியவராகவும், உரையாசிரியராகவும் தமிழுலகில் நன்கு அறியப்பட்டவர். இவர்  வெளியிட்ட வினா - விடை நூல்கள் (Notes) வித்துவான் தேர்வாளர்கள், புலவர் வகுப்பில் பயின்ற  மாணவர்கள், இளங்கலை (பி.லிட்), முதுகலை மாணவர்கள்  நடுவே இவரை  நன்கு அறிமுகம் செய்திருந்தன. திருவாசகம், சைவ சித்தாந்தம் குறித்து இவர் ஆற்றிய உரைகள் சைவ சமய அன்பர்களால் என்றும் நினைவுகூரப்படுபவை

பேராசிரியர் தா. ம. வெள்ளைவராணம் அவர்கள் 06.09.1927 இல் கும்பகோணத்தில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் மகாலிங்கம் செட்டியார், செகதாம்பாள் ஆவர். குடந்தையில் வாழ்ந்துவரும் சோழபுரம் சைவச் செட்டியார் மரபு வழியில் இவர் வந்தவர். 

குடந்தை நகராட்சி தொடக்க, உயர்நிலைப் பள்ளியிலும் குடந்தை சிறிய மலர் உயர்நிலைப் பள்ளியிலும் இளமைக் கல்வியை நிறைவுசெய்தவர். தம் பட்டப்படிப்பை மயிலாடுதுறை மெய்கண்டார் தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள் காசிவாசி சாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வித்துவான் படிப்பை 1945 ஆம் ஆண்டு முதல் 1950 வரை அமைந்த காலத்தில் நிறைவுசெய்தவர்.

 தா. ம. வெள்ளைவாரணம் அவர்களின் துணைவியார் பெயர் விசாலாட்சி அம்மாள் ஆகும். இவர்களின் திருமணம் 1950 ஆம் ஆண்டளவில் நடைபெற்றது.

பேராசிரியர் தா. ம. வெ. அவர்கள் தாம் பயின்ற திருப்பனந்தாள் காசிவாசி சாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பணி ஓய்வுக்காலத்திற்குப் பிறகு தரங்கம்பாடியை அடுத்த பொறையாற்றில் அமைதி வாழ்க்கை வாழ்ந்தவர். 

கல்லூரிப் பணிக்காலத்தில் வகுப்பில் இனிய இசையில் பாடல்களைப் பாடி, விளக்கும் ஆற்றலால் மாணவர்கள் நடுவே அனைவராலும் விரும்பத்தக்க பேராசிரியராக விளங்கியவர். அவரிடம் படித்த மாணவர்கள் மட்டுமன்றி, அவரிடம் பழகியவர்களும் ஐயாவின் நினைவில் திளைப்பது உண்டு. 1991 இல் நான்  எழுதிய பனசைக்குயில் கூவுகிறது என்னும் நூலில்,

“கிள்ளைகளும் காக்கைகளும் குரக்கினமும் குயிலினமும்

வெள்ளைவா ரணத்திடமே விரும்புதமிழ் கற்றுநிற்கும்,

பிள்ளைத்தமிழ் விளையாட்டாய்ப் பாவலர்கள் பாடிவர

பள்ளிகள்தாம் பலநிறையும் பழம்பனசை புலமைகாண்”

என்று இருபொருளில் யான் எழுதிய பாடலில் வெள்ளைவாரணம் ஐயாவின் சிறப்பினை முன்னோர் வழியாக அறிந்து பதிவுசெய்திருப்பேன்.

தம் பணியோய்வுக் காலத்தில் காசித் திருமடத்திலிருந்து வெளிவரும் குமரகுருபரர் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியும் திருமடத்துப் பதிப்புப் பணிகளில் துணைநின்றும் தமிழ்த்தொண்டாற்றியவர். 



பேராசிரியர் தா. ம. வெள்ளைவாரணம் அவர்களின் முத்துவிழா கும்பகோணத்தில் 24. 08. 2007 இல் நடைபெற்றது. பேராசிரியரைக் குருவாகவும் ஆசிரியராகவும் ஏற்றுக்கொண்ட அன்பர்கள் முன்னின்று இவ்விழாவை பக்திப் பெருக்கோடு நடத்தினர். 

பெற்ற விருதுகளும் பட்டங்களும் 

தா .ம. வெள்ளைவாரணம் அவர்களின் தமிழ் ஈடுபாட்டைக் கண்ட மதுரை ஆதீனம் தவத்திரு சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 1959 ஆம் ஆண்டில் “திருமுறைச் செம்மல்” பட்டம் வழங்கிப் பாராட்டினார்கள். திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் தவத்திரு அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் 1960 இல் “மதுரகவி” பட்டமும், சென்னை மாம்பலம் ஆரோக்கியாச்சிரமம் 1969 இல் “பண்டித ரத்னா” பட்டமும் செம்பொன்னார்கோவில் மணிவாசகர் மன்றம் 1997 இல் “சைவத்தமிழ் நாவலர்” பட்டமும், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் கயிலை மாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள் 1998 இல் “சைவத்தமிழ் மணி” என்னும் பட்டமும் வழங்கிப் பாராட்டியுள்ளனர். 

திருவாவடுதுறை ஆதீனம் தவத்திரு. சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் 08. 02. 2003 ஆம் ஆண்டில் “திருவாவடுதுறை ஆதீனப் புலவர்” என்னும் தகுதியை வழங்கிப் பாராட்டியுள்ளார்கள். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பு அமைப்பு  28.05.2004 இல் நடத்திய தொல்காப்பியத் தமிழ் ஆய்வு மாநாட்டில் “தொல்காப்பியச் செம்மல்” என்னும் உயர் தகுதியை அளித்துச் சிறப்பித்துள்ளது. 25. 01. 2007 இல் திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் அவர்கள் “சைவத் தமிழ்ச் சீராளர்” என்னும் விருதினை வழங்கிப் பாராட்டினார்கள். 25.01.2010 இல் “சிவநெறி உரைச்செம்மல்” என்னும் பட்டத்தினையும் வழங்கித் திருவாடுவதுறை ஆதீனம் பாராட்டியுள்ளது. 

தா. ம. வெள்ளைவாரணம் அவர்களின் குருவாக விளங்கியவர் மீனாட்சிசுந்தர தேசிக பரமாச்சாரிய சிவாக்ரக யோகிகள், ஆவர். 

தா. ம. வெள்ளைவாரணம் அவர்களின் உயர் பண்புகள்: 



பேராசிரியர் தா.ம. வெள்ளைவாரணம் தம்  மாணவர்களிடத்து அறிவார்வம் காணப்பட்டால் அவர்களை உரியவாறு பாராட்டி ஊக்கப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டவர். நன்னூல் உள்ளிட்ட பல நூல்களை அந்நாளில் அச்சிட்டு, இலவசமாக வழங்கியவர்கள். வறுமை நிலையிலும் உதவி தேவைப்படும் நிலையிலும் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்  படிக்கச் செய்யும் இயல்பினர். தம் இல்லத்தில் சில மாணவர்களைத் தங்கச் செய்து அவர்கள் சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஆதரவு காட்டியதை நன்றியுடன் பல மாணவர்கள் இன்றும் குறிப்பிடுகின்றனர். நாளும் சிவபூசை நிகழ்த்தும் இயல்புடைய தா.ம. வெள்ளைவாரணம் அவர்கள் தம் வழியில் பல மாணவர்களை ஆன்மீக உலகில் உருவாக்கிச் சென்றுள்ளதை நன்றியுடன் குறிப்பிடுதல் வேண்டும். 



தா. ம. வெள்ளைவாரணம் பதிப்பித்த, வெளியிட்ட நூல்கள்: 

பி.லிட்.(தமிழ்), முதுகலை உள்ளிட்ட தமிழ் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வெட்டியல், கோயிற்கலை என்னும் பாடநூல்களும் தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களும் பாட நூல்களாக அந்நாளில் இருந்தன. மாணவர்களின் கற்கும் இடர்ப்பாட்டினை அறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் கல்வெட்டியல், கோயிற்கலை வினா - விடைகளை நூலுருவில் உருவாக்கித் தந்ததுடன் இலக்கண நூல்களுக்கும் வினா விடை நூல்களையும் உருவாக்கித் தந்துள்ளார். இவற்றால் தமிழ் படிக்கும் மாணவர்கள் பாடங்களை எளிதாக அறிந்துகொள்ள முடிந்தது. அவ்வகையில் பேராசிரியர் உருவாக்கி, சென்னை மோகன் பதிப்பகத்தால் கீழ்வரும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தா.ம. வெள்ளைவாரணம் அவர்களின் வினா விடை நூல்கள் 

·         தொல்காப்பியம் – எழுத்து – இளம்பூரணம்

·         தொல்காப்பியம் – எழுத்து – நச்சினார்க்கினியம்

·         தொல்காப்பியம் – சொல் – சேனாவரையம்

·         தொல்காப்பியம் – பொருள் – இளம்பூரணம்

·         தொல்காப்பியம் – பொருள் – நச்சர், பேராசிரியர்

·         நன்னூல் – விருத்தியுரை

·         நன்னூல் – காண்டிகையுரை

·         அகப்பொருள் விளக்கம்

·         புறப்பொருள் வெண்பா மாலை

·         யாப்பருங்கலக் காரிகை

·         தண்டியலங்காரம்

·         மாறனலங்காரம்

·         பன்னிருபாட்டியல்

·         வண்ணத்தியல்பு

·         கல்வெட்டும் கல்வெட்டியலும்

·         கோயிற்கலை

·         தொல்காப்பியம் – சொல் – இளம்பூரணம்

·         தமிழ்மொழி வரலாறும் ஒப்பிலக்கணமும்

·         தொல்காப்பியப் பாயிரவிருத்தியும் சூத்திரவிருத்தியும்

·         கட்டுரைக் கனிகள் 1 & 2 

முதலிய நூல்களை வினா - விடை அமைப்பில் தந்துள்ளார். 

பேராசிரியர் தா. ம. வெள்ளைவாரணம் அவர்கள் சமய இலக்கியங்களிலும் சைவ சித்தாந்த சாத்திர நூல்களிலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். எனவே இவற்றை அறிந்துகொள்ள விழையும் அன்பர்களுக்குப் பயன்படும் வகையில் அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பல்வேறு நூல்களை எளிய விலையில் குறைந்த பக்கங்களில் கிடைப்பதற்கு வழிசெய்துள்ளார். அவ்வகையில் 

·         உருத்திராக்க மகிமை

·         தலத்துக்கொரு தேவாரம்

·         தேவாரம் பாடியவாறு அட்டவணை

·         கயிலை மாமுனிவர் தோத்திரத் திரட்டு

·         நாகூர் நாகநாத சுவாமி திருக்கோயில் தல வரலாறு

·         திருப்பெருந்துறை தல வரலாறு

·         மாலை மாற்றுப் பதிகம் உரை

·         அபிராமி அந்தாதியும் பதிகங்களும் உரை

·         கருவூர்தேவர் திருவிசைப்பாப் பதிகங்கள் உரை

·         ஏழ் கிழமை பாராயணத் திரட்டு

·         ஆணை நமதே பதிகங்கள் உரை

·         திருமுறை ஆசிரியர்கள் வரலாறு

·         திருச்செந்தூர் அகவல் உரை

·         காரைக்கால் அம்மையார் பிரபந்தங்கள் உரை

·         திருந்துதேவன்குடி தல வரலாறு

·         திருமாந்துறை தல வரலாறு

·         திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை – திருக்குடந்தை தலபுராணம் உரைநடையாக்கம்

உள்ளிட்ட நூல்களைத் தமிழ்,  சமய உலகம் செழிக்க வழங்கியுள்ளார். மேலும் இவர் வழங்கியுள்ள, 

·         சைவ சித்தாந்த வினாடி வினா

·         மெய்கண்ட சாத்திரங்கள் 14 ஓர் அறிமுகம்

·         ஆறாறு தத்துவம் ஏது? (36 தத்துவ விளக்கம்)

·         சிவஞானபோதம் & சிவஞான சித்தியார் தெளிவு

·         மெய்கண்ட சாத்திரம் 14 நூல்களில் வினாக்கள்

·         திருவாவடுதுறை ஆதீனப் பண்டார சாத்திரங்கள் 14 – ஓர் அறிமுகம்

·         திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் தெளிவு

·         முந்நூல் தெளிவு 

உள்ளிட்ட நூல்களும் சைவ சித்தாந்தம் பயிலும் மாணவர்களுக்குப் பேருதவியாக உள்ளன. 

தா. ம. வெள்ளைவாரணம் பொழிவுகளும் சிறப்புரைகளும் 

திருவிடைமருதூர், சிதம்பரம், நெய்வேலி ஆகிய நகரங்களில் பெரியபுராணத் தொடர் விரிவுரைகள் பல ஆண்டுகள் நிகழ்த்தியவர். திருவிடைமருதூரில் திருவாசகத் தொடர் விரிவுரை ஓராண்டு முழுவதும் வாரந்தோறும் நிகழ்த்தியவர். சிதம்பரத்தில் திருவிளையாடல் புராணம் தொடர் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். சிதம்பரத்தில் திருவாசகத் தொடர் விரிவுரையும் நிகழ்த்தியுள்ளார். சிதம்பரம், திருவாருர், சீர்காழி ஆகிய நகரங்களில் திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மைய வகுப்புகளை நடத்தி, பலருக்குச் சைவ சித்தாந்த பேருண்மைகளைப் பயிற்றுவித்தவர். 

தா. ம. வெள்ளைவாரணம் அவர்கள் திருவிடைமருதூரில் திருவாசகத் தொடர் விரிவுரை செய்தபொழுது சிவபுராணத்துக்கு அமைந்த பேச்சுரையை மட்டும் தமிழாசிரியர் சபா. ப. மகாலிங்கம் அவர்கள் எழுத்தில் பெயர்த்தெழுதி, திருவரங்கம் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் திருக்கூட்டம் சார்பில் நூலுருவம் பெற்றுள்ளது. இந்த நூலில் சிவபுராணம் சார்ந்த நுட்பமான கருத்துகள் பல இடங்களில் பதிவாகியுள்ளன. இந்த முயற்சியில் தா.ம.வெள்ளைவாரணனாரின் அணுக்கத் தொண்டர் சிவ. ஸ்ரீதரன் அவர்கள் ஈடுபட்டமை பாராட்டினுக்கு உரியது. அதுபோல் சிதம்பரத்தில் வாழ்ந்துவரும் சிவனியச் செல்வர் சீனு. அருணாசலம் அவர்கள் தா.ம.வெள்ளைவாரணம் அவர்களின் எண்ணங்கள் யாவும் எழுத்துருவம் பெறுவதற்குப் பெருந்துணைபுரிந்துள்ளார்கள். 

பொறுப்புகளும் பதவிகளும் 

திருவாவடுதுறை ஆதீனப் புலவர், திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் கல்விக் குழுமச் செயற்குழு உறுப்பினர், சோழபுரம் சைவச் செட்டியார் கல்வி வளர்ச்சிச் சங்கச் செயற்குழு உறுப்பினர், செம்பொன்னார் கோவில் மணிவாசக மன்றத்தின் சிறப்புத் தலைவர், பொறையாறு அம்பலவாணர் அருள்நெறிக் கழகத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து, தாம் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் அழுத்தமான சுவடுகளைப் பதிவு செய்த பெருமகனார் தா.ம. வெள்ளைவாரணனார் ஆவார். 

26.02.2010 இல் பேராசிரியர் தா. ம. வெள்ளைவாரணம் இறையடி எய்தினார். அவர்தம் நூல்களும் பொழிவுகளும், பணிகளும் அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.








 

 

செவ்வாய், 26 டிசம்பர், 2023

தென்தமிழக வரலாறுரைக்கும் முகிலை இராசபாண்டியனாரின் அருள்பதி ஆற்றுப்படை



நூல் அணிந்துரை

பேராசிரியர் முகிலை இராசபாண்டியனாரை என் மாணவப்பருவம் தொடங்கி, நன்கறிவேன். கண்ணியம் என்ற மாத இதழை நடத்திய எம் உறவினர் – ஊரினர் கண்ணியம் ஆ.கோ. குலோத்துங்கன் ஐயா அவர்கள் முகிலையாரின் ஆற்றலையும் அருந்தமிழ்ப் பணிகளயும், இதழியல் துறையில் ஆய்வு நிகழ்த்திய இவர்தம் அருமை பெருமைகளையும் எடுத்துரைத்தார். அன்று தொடங்கிய நட்பு கடந்த முப்பது ஆண்டுகளாக வளர்பிறையாய் வளர்ந்துள்ளது. பணியின் பொருட்டு, நான் பல ஊர்களில் வாழ நேர்ந்தாலும் அதே அன்புடனும் பாசத்துடனும் கலந்துரையாடும் முகிலையாரின் பண்புநலன் அனைவரும் பின்பற்றத் தகுந்தது. “பலநாள் பழகினும் தலைநாள் பழகிய” அதே உணர்வினை அவர்வயின் பெறலாம்.

முகிலை இராசபாண்டியன்

முகிலை இராசபாண்டியனார் பேராசிரியர்; தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் துணை இயக்குநர்; செம்மொழி நிறுவனப் பதிவாளர்; கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதினப் படைப்பாளர்; பன்னூலாசிரியர்; கேட்டார் வியக்கும் வகையில் சொற்பொழிவாற்றும் பேராற்றல் பெற்றவர். இவற்றையெல்லாம் கடந்து மிகச் சிறந்த மாந்தநேயம் கொண்ட பெருமகனார். இன்னோரான்ன பண்புநலன்களால் என் உள்ளத்தில் எப்பொழுதும் இவரை நான் போற்றி மதிப்பதுண்டு. 

முகிலையார் ஒரு நாள் தாம் இயற்றிய அருள்பதி ஆற்றுப்படையை மின்னஞ்சலில் அனுப்பி, அதனை மதிப்பிட்டு, அணிந்துரை வழங்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் முகிலையார் எதனையும் காலத்தில் செய்யும் கருத்துடையவர். நானோ மடியில் உழலும் குடியினன். எதனையும் ஒத்திப்போடும் உள்ளமுடையவன். பார்வைக்கு வந்த அருள்பதி ஆற்றுப்படையை உடனே படித்து முடித்திருந்தாலும் அதுபற்றிய கருத்தினை வழங்குவதில் காலத்தாழ்ச்சி செய்துவந்தேன். எனக்கு இயற்கை ஒப்புதல் தந்தது. ஆம் தொடர் மழை விடுமுறை தந்த மகிழ்வில் மீண்டும் அருள்பதி ஆற்றுப்படையைப் படித்து அதில் இடம்பெற்றிருக்கும்  அரிய கருத்துகளையும் வரலாற்றையும் கற்று மகிழ்ந்தேன். 

அருள்பதி ஆற்றுப்படை வெறும் செய்தியுரைக்கும் ஆற்றுப்படையாக அமையாமல் தகவல்களின் களஞ்சியமாக உருப்பெற்றுள்ளது. தென் தமிழக மக்களின் வழிபடு தெய்வமாக விளங்கும் அய்யா வைகுண்டரின் அருள் வரலாற்றினையும், அவர் கோவில் கொண்டிருக்கும் அருள்பதி மேன்மையையையும் இந்த நூல் கொண்டு விளங்குகின்றது. 

தமிழகத்தின் தென்முனையாகவும் தொன்முனையாகவும் விளங்கும் கன்னியாகுமரியும் அதன் தென்பரப்பில் விரிந்து கிடக்கும் கடல்கொண்ட இலெமூரியாக் கண்டமும் தொல் தமிழர்களின் தாய்நிலமாகும். “குமரிக்கோடு கொடுங்கடல் கொண்ட” பிறகு தமிழர்கள் வடதிசை நோக்கி நகர்ந்தனர் என்பதை இலக்கியங்களும் தொன்மரபுச் செய்திகளும் தெரிவிக்கின்றன. அத்தகு “பதியெழுவறியாப் பழங்குடிகள்” நிறைந்த தமிழ்நிலம் வந்தேறிகளின் சூழ்ச்சியால் பலவகையில் தாழ்வு நிலையை அடைந்தது. மாந்தர்களிடம் கீழ் மேல் வேறுபாடுகளைக் கற்பித்து, உணவு உடை இருப்பிடம் சார்ந்து பல்வேறு இடர்ப்பாடுகளை அனுபவிக்கும் நிலைக்குப் பழங்குடியினர் தள்ளப்பட்டனர். அவ்விழிநிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சமூகத் தலைவர்கள் பலர்  ஈடுபட்டு, இன்றைய அறிவுத் தெளிவுக்கு வழிவகுத்தனர். அத்தகு அறிவுத்தெளிவு பெற்ற மக்கள் தங்கள் வரலாறுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்கள் முன்னோர் வரலாறுகளை ஆவணங்களாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாவணமாக்கும் முயற்சியே முகிலை இராசபாண்டியனாரின் அருள்பதி ஆற்றுப்படை. 

அருள்பதி ஆற்றுப்படை ஆசிரியப்பாவால் அமைந்துள்ள நூல். எளிய, இனிய சொற்களால் இந்த நூலின் நடை யாக்கப்பெற்றுள்ளது. 511 ஆசிரிய அடிகளில் அரியதோர் ஆவணப்படுத்தலை நூலாசிரியர் செய்துள்ளார். நூலின் முகப்பில் அய்யா வைகுண்டர் அவர்களின் அருள் வரலாறும், அருள்பதியின் சிறப்பும் உரைநடையில் உவகையுடன் வரையப்பட்டுள்ளன. இவை நூலைக் கற்போர்க்குப் பாயிரம் போல் பல நூறு செய்திகளை வழங்குகின்றன. 

நூலின் தொடக்கப் பகுதி குமரிக்கண்டத்தின் மாண்பினையும் தொல்தமிழரின் சிறப்புகளையும் பாண்டியர் ஆட்சியின் பான்மையினையும் நமக்குத் தெரிவிக்கின்றது. குமரியாறு, பஃறுளியாறு யாவும் தென்தமிழகத்தை வளமுறச் செய்த ஆறுகள் என்பதைப் புறநானூறும், இளங்கோவடிகளாரின் சிலப்பதிகாரமும் நமக்கு எடுத்துரைக்கும். இத்தகு இலக்கியங்களை எழுத்தெண்ணிக் கற்ற முகிலை இராசபாண்டியனார் தம் ஆற்றுப்படையுள் முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றியுள்ளமை புலனாகின்றது. சங்க காலச் சால்பும், இன்றைய தமிழ் நாட்டின் எல்லையும் குமரி மாவட்டத்துச் சிறப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. 

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையில் பெருமைகுரியன. அவ்வகையில் தமிழகத்தின் தென்பகுதி என்பதுடன் இந்தியாவின் தென்முனை என்ற பெருமையும் கன்னியாகுமரிக்கு உண்டு. கன்னியாகுமரி என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வான்தொட்டு நிற்கும் திருவள்ளுவர் திருச்சிலையும் காந்தி மண்டபமும், விவேகானந்தர் பாறையும், காமராசர் மணிமண்டபமும் ஆகும். 

குமரி மாவட்டம் சான்றோர் பெருமக்களை அளவின்றி வழங்கி, நிலைத்த புகழ்பெற்றுள்ளது. அவர்களுள்  கவிமணி, செய்குதம்பி பாவலர், ஜீவா உள்ளிட்ட பெருமக்களை ஆசிரியர் நன்றியுடன் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளமை போற்றத்தக்கது. 

கன்னியாகுமரிக்கு அண்மித்து உள்ள ஊர் சாமித்தோப்பு ஆகும். இவ்வூர் அய்யா வைகுண்டர் அவர்களால் பெருமை பெற்ற ஊராகும். இங்குதான் அஞ்சா நெஞ்சம் படைத்த பால பிரஜாபதி அடிகளார் அருந்தமிழ்ப் பற்றுடன் அளவிறந்த தமிழ்ப்பணிகளைச் செய்து வருகின்றார். முந்திரிக்கிணறு என்னும் பொதுமைக்கிணற்றின் சிறப்பினையும் நூலாசிரியர்  இந்நூலுள் அழகுடன் புனைந்துள்ளார். 

அய்யா வைகுண்டர் கோவிலுள் எளிமையான வழிபாட்டு அமைப்பு மட்டும் உள்ளது என்றும் இங்கு வேறு சிலைகள் ஏதும் இல்லை என்றும் வழிபட வருவோர் தலையில் தலைப்பாகை அமைத்து வழிபட வேண்டும் என்றும் அங்குள்ள நடைமுறை வழிபாடுகளை நமக்குத் தெரிவிக்கின்றார். அய்யா தொடங்கிய பதிகள் அவர் வழியில் பின்னாளில் உருவான பதிகள் குறித்தெல்லாம் முகிலை இராசபாண்டியனார் சிறப்பாகத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 

இத்தகு ஊரை எவ்வாறு அடைவது? தொடர்வண்டி, பேருந்துகளில் கன்னியாகுமரி வந்து, அங்குத் தங்கி அங்குள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழ்ந்தபடி அருள்பதியை அடையலாம் என்று வழிகாட்டும் முகிலை இராசபாண்டியனார் தாம் பிறந்த ஊரான முகிலன்குடியிருப்பின் மாண்பினைப் பலபடப் புனைந்துகாட்டுகின்றார். 

வேளாண்மைத் தொழிலுடன் தொடர்புடைய பிற தொழில்களால் வளங்கொழிக்கும் ஊர் முகிலன்குடியிருப்பு. தென்னை மரங்களும் வயல்வெளிகளுமாக விளங்கும் இவ்வூரின் அருகே கடற்கரை கவினுடன் காட்சி நல்கும். இங்கு மீன்வளம் மிகுதி. “நண்டும் சிப்பியும் நகர்ந்தே வந்துநம் காலினைத் தொட்டே கடந்து செல்லும்” என்று இவ்வியற்கை வனப்பை நூலாசிரியர் நமக்குக் காட்சிப்படுத்திக் காட்டுவர். 

வெண்கலராஜன்கோட்டை, பழையாறு என்னும் பஃறுளியாறு, முகிலன்குடியிருப்பில் தோன்றிய அருள்பதி, அதனை நிர்வாகம் செய்யும் நிர்வாகக் குழுவினர், அங்கு நடைபெறும் அன்னதானம், அய்யாவின் பிற்றந்த நாளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், அங்குள்ள திருக்கிணற்றின் சிறப்பு, முதலிய சிறப்புச் செய்திகள் இந்த நூலை அழகுசெய்கின்றன. அருள்பதியின் மேன்மையை நூலாசிரியர், 

“அன்பும் அறிவும் ஆருயிர் காக்கும்

ஒற்றுமை என்னும் உணர்வே உயிரென

உலகோர் உணரும் இடமே அருள்பதி” (437-439) 

என்று குறிப்பிட்டுள்ளார். 

அய்யா வைகுண்டர் இந்த உலகுக்கு நல்ல நெறிகளைத் தம் வாழ்வின் வழியாக உணர்த்தியுள்ளார். அவர்தம் அருள்நெறிகள் இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.  இதனை, நூலாசிரியர் “தன்னலம் அற்றோர் தரணியை ஆள்வர்; தன்னலம் கொண்டோர் தானே வீழ்வர்” ( 445-446) என்று குறிப்பிடுவதன் வழியாகவும் உணரலாம்.  மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும். நன்றி மறவாத தன்மை வேண்டும். நேர்மைப் பண்பு வேண்டும். தன்னலம் அகற்றி, பொதுநலம் பேணும் உள்ளம் வேண்டும். உலக அமைதியே உயர்ந்த வழி என்று வாழ்ந்து காட்டிய அய்யா வைகுண்டரும், அவர் வழியில் வாழ்ந்துவரும் அவர்தம் தொண்டர்களும் இவ்வுலகில் அமைதி வழியில் அரும்பணிகள் ஆற்றி வருவதைப் பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் சிறப்பாக இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். 

போரும் பகையுமாக இப் புவிப்பந்து சீரழிந்து வருவதைக் கண்ணுறும் நூலாசிரியர், 

“உலகில் போரே ஒழிந்தி வேண்டும்

உண்மை நெறியே தழைத்திட வேண்டும்

உயிரை வதைக்கும் பசியாம் கொடுமை

உலகினை விட்டே ஒழிந்திட வேண்டும்

அன்பே இறையென அறிந்த மனிதர்

அவனி எங்கும் நிறைந்திட வேண்டும்

பொய்யும் களவும் அழிந்திட வேண்டும்

பொறுமை எங்கும் நிலைத்திட வேண்டும்…” (481-488) 

என்று வேண்டுகோள் வைப்பது அய்யா வைகுண்டரின் வழியில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருவபவர் முகிலை இராசபாண்டியனார் என்பதற்குச் சான்றாக அமைகின்றது. 

முகிலன்குடியிருப்புப் பேராசிரியர் முகிலை இராசபாண்டியனார் நூலின் வழியாக அய்யா வைகுண்டனாரின் அருள்வாழ்வையும்,  பணிகளையும் தவத்திரு பிரஜாபதி அடிகளாரின் அஞ்சாநெஞ்சத்தையும் அருந்தமிழ் உணர்வையும் அறிந்துகொள்ளமுடிகின்றது. மேலும், தென்தமிழகத்து மக்களின் வாழ்வியலையும் வழிபாட்டு முறைகளையும் இந்த நூலின்வழியாக  அறிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு எண்ணித் தமிழ்த்தாயின் திருவருளைப் போற்றுகின்றேன். முகிலை இராசபாண்டியனாரின் தமிழிலக்கியப் பணியைப் போற்றி வாழ்த்துகின்றேன்.

பணிவுடன் 

மு.இளங்கோவன்

புதுச்சேரி

15.11.2023

வெள்ளி, 22 டிசம்பர், 2023

தருமை ஆதீனப் புலவர் வித்துவான் மு. வைத்தியநாதன்…

வித்துவான் மு. வைத்தியநாதன் 

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள உருமு தனலெட்சுமி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், உருமு தனலெட்சுமி கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றித் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் பெருந்தொண்டாற்றிவரும்  வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் தம் எண்பத்தைந்தாம் அகவையில் தற்பொழுது திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்து வருகின்றார். தமிழிலும் சைவத்திலும் பெரும்புலமை மிக்க அறிஞரான இவர்தம் திருவெம்பாவை உரையைத் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் இவரின் இல்லத்துக்கு வந்து பதிவுசெய்து, மார்கழி மாத வைகறைப்பொழுதில் ஒலிபரப்பி வருகின்றமை இவர்தம் அறிவுப் பெருமைக்குச் சான்றாகும். 

 அரியலூர் மாவட்டத்தின் கிழக்கு எல்லைப் பகுதியை வரையறுத்து ஓடும் வடவாற்றங்கரையில் உள்ள ஊர் பிள்ளைப்பாளையம் ஆகும். பொல்லாப்பாளையம் என்று மக்கள் வழங்குவர். இவ்வூரில் வாழ்ந்த “மணியம்” பி. . முத்துக்குமரப் பிள்ளை, திருநாவுக்கரசி அம்மை ஆகியோரின் மகனாக 1940 ஆம் ஆண்டில் வித்துவான் மு. வைத்தியநாதன் பிறந்தவர். இவர்தம் குடும்பத்தினர் யாவரும் தமிழ் கற்ற பெருமைக்குரியவர்கள். 

தம் பிறந்த ஊரில் இடைநிலைக் கல்வி வரை பயின்று, திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான்காண்டுகள் (1956 முதல் 1960 வரை) பயின்று, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் தேர்வெழுதி, மாநில அளவில் முதல் மாணவராக வெற்றிபெற்றவர். இவரின் ஒருசாலை மாணவராக விளங்கியவர் முனைவர் பொற்கோ ஆவார். மு. வைத்தியநாதன் அவர்களுக்குச் செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியர்களாக வாய்த்தவர்கள் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய அறிஞர்களான  கே. எம். வேங்கடராமையா, இருமொழிப் புலவர் மு. சுந்தரேசம் பிள்ளை, மு. கோவிந்தராசனார், தி.வே.கோபாலையர்,  தா. ம. வெள்ளைவாரணம், கு. சுந்தரமூர்த்தி, நகராமலை இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் ஆவர். 

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பெரும்புலவர் சி. புன்னைவனநாத முதலியார் அவர்களைக் கொண்டு நடத்திய புலவர் பட்டத் தேர்வெழுதி, மு. வைத்தியநாதன் முதல் மாணவராகத் தேறியவர். கல்வியியல், மொழியியல், நூலகவியல் தேர்வுகளை எழுதிச் சான்றிதழ்களைப் பெற்றவர். பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் தம் தமையனார் மு. சுந்தரேசம் பிள்ளை அவர்களின் பரிந்துரையின்படி, திருச்சிராப்பள்ளியில் புகழுடன் விளங்கிய தனலெட்சுமி மேல்நிலைப் பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். பின்பு கல்லூரியில் ஆசிரியர் பணியாற்றி, 39 ஆண்டுகள் தமிழ்த்தொண்டாற்றி 2000 ஆம் ஆண்டில் பணிநிறைவு பெற்றவர். பணியின் நிமித்தம் தம் இருபதாம் அகவையில் திருச்சிக்கு வருகைபுரிந்த மு. வைத்தியநாதன் அவர்கள் கடந்த அறுபதாண்டுகளாகத் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளையும், சமய இலக்கிய நிகழ்வுகளையும் அறிந்த பெருமைக்குரியவராக உள்ளார்.

 


தமிழ்நாட்டு அரசின் பாடத்திட்டக் குழு, தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தும் பாட நூல் ஆசிரியராக இருந்தும் தாம் ஏற்றுக்கொண்ட பணிகளைத்  திறம்படச் செய்துள்ளவர். பள்ளிக்கல்வித் துறையின் ஒருங்கிணைத்த புத்தொளிப் பயிற்சிகளில்  ஆசிரியராக இருந்து கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைப் பயிற்றுவித்துள்ளார். 

பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்களுக்கு 1967 இல் திருமணம் நடைபெற்றது. இவரின் துணைவியார் பெயர் சந்திரா என்ற சந்திரகுமாரி ஆவார். இவர்களுக்கு வள்ளி என்ற ஒரே மகள் மக்கள் செல்வமாக வாய்த்தார். திருமதி வள்ளி அவர்கள் ஆத்திரேலியா மெல்பன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்களின் சமயப்பணி 

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தெற்கு வீதியில் உள்ள 150 ஆண்டுகள் பழைமையான திரிசிரபுரச் சைவ சித்தாந்த சபையின் செயலராக முப்பதாண்டுகள் பணியாற்றியவர். இந்தச் சபை யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களால் திறந்துவைத்த பெருமைக்குரியது. இச்சபையின் சார்பில் வாரந்தோறும் முப்புராணங்கள், பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாத்திர நூல்கள், பிரபந்தங்கள், திருப்புகழ், தாயுமனவர் பாடல்கள் குறித்த விரிவுரைகள் நடைபெறுவதற்குப் பெருந்துணைபுரிந்தவர். 1985 ஆம் ஆண்டில் அந்தச் சபையின் நூற்றாண்டு விழாவை முன்னின்று நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. 

திருச்சிராப்பள்ளியில் திருமுறை மன்றம் அமைத்து அம்மன்றத்தின் வழியாக அன்பர்களின் இல்லங்களில் திருமுறை முற்றோதல், உரை விளக்கங்கள் நடைபெற உதவியவர். காலை 9 மணிக்குத் தொடங்கும் சிறப்புரை மாலை 5 மணி வரை நடைபெறும். அவ்வகையில் பன்னிரண்டரை ஆண்டுகள் சிறப்புரைகள் நடைபெற்று 18286 பாடல்களுக்கும் விளக்கம் சொன்ன பெருமை இவரைச் சாரும். 

மலைக்கோட்டையில் உள்ள தருமபுர ஆதீனத்திற்கு உரிமையுடைய  மௌனமடம் உள்ளது. அதில் இயங்கிய சைவசித்தாந்த மாலை நேரக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி பலர் சைவ சித்தாந்த கலாநிதிகளாக மலர்வதற்கும் பலர் சைவசித்தாந்த புலவர்களாக வளர்வதற்கும் துணைநின்றவர். இவரின் வகுப்புகளில் கற்றுச், சமயப் பெருமை உணர்ந்த மாணவர்கள் சிலர் பின்னாளில் துறவிகளாகத் திருமடங்களில் இணைந்துள்ளனர். 

திரிசிரபுரச் சைவசித்தாந்த சபையில் மாதந்தோறும் நான்காம் ஞாயிற்றுக் கிழமைகளில் திருக்குறள் விரிவுரை, ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகள் அவ்வாறு விரிவுரை நிகழ்த்தியுள்ளார். அதன் நிறைவு விழாவில் கலந்துகொண்ட  தருமை ஆதீனம் இருபத்தாறாம் பட்டம் குருமகா சந்நிதானம் அவர்கள் நம் பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்களுக்குத் திருக்குறள் செல்வர் என்னும் விருதளித்தும், ஒரு பவுன் தங்கக் காசு அளித்தும், பொன்னாடை அணிவித்தும் பெருமை செய்தார்கள். 

திருச்சிராப்பள்ளி உறையூரில் அமைந்துள்ள வாகீச பக்த ஜனசபை எண்பது ஆண்டுகள் பழமையுடைய அமைப்பாகும் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் தொடர் விரிவுரைகளில் கலந்துகொண்டு திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், முப்புராணங்கள், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள், திருப்புகழ் பற்றிய தொடர் விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார். 

தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை, மதுரை பன்னிரு திருமுறை மன்றம், கோவை பன்னிரு திருமுறை ஆய்வு மன்றம், மயிலை திருமுறை மன்றம், மயிலாடுதுறை கோபல் அறக்கட்டளை, சென்னை அரனருள், சென்னை சைவ சித்தாந்த பெருமன்றம், இலால்குடி அறநெறிக் கழகம், சென்னை இராமலிங்கர் பணிமன்றம் உள்ளிட்ட அமைப்பினர் நடத்திய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கற்றோர் வியக்குமாறு கருத்துரை வழங்கிய பெருமைக்குரியவர். 

தருமபுர ஆதீனம் நடத்திய அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாடு மற்றும்  பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்வுகளில் இணைப்புரை வழங்கிய பெருமையும் இவருக்கு உண்டு. 

தருமையாதீனம் இருபத்தாறாவது குருமகா சந்நிதானம் அவர்கள் தருமையாதீனப் புலவர் என்னும் விருதினை வழங்கியுள்ளார்கள். மேலும், பொற்கிழியும் பொன்னாடையும் அணிவித்துப் பாராட்டியுள்ளார்கள். திருப்பனந்தாள் காசித் திருமடத்து அதிபர் கயிலை மாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் சைவத் தமிழ்மணி  என்னும் விருதும் பொற்பதக்கமும் அளித்துப் போற்றியுள்ளார்கள் காஞ்சிபுரம் காமகோடி பீடம் சார்பிலும் இவருக்குச் சித்தாந்த வித்தகர் என்ற விருதும் பணமுடிப்பும் வழங்கப்பெற்றுள்ளது. திருவரங்கத்தில் உள்ள இராசவேலு- செண்பகத் தமிழரங்கின் சார்பில் தமிழ் மாமணி விருதளித்துப் பாராட்டப்பெற்றவர். 

பதிப்புப் பணி 

பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். திருவையாற்றுப் புராணம், திருகற்குடிமாமலை மாலை, சிராமலையந்தாதி, சிராமலைக் கோவை உள்ளிட்ட பல நூல்களை ஏட்டுச் சுவடியிலிருந்து பதிப்பித்து அச்சு நூலாகக் கொண்டுவந்தவர். 

மலர்ப் பதிப்பாசிரியர் 

திரிசிரபுரச் சைவ சித்தாந்த சபை நூற்றாண்டு விழா மலர், துணைவேந்தர் தி. மூ. நாராயணசாமிப் பிள்ளை நூற்றாண்டு விழா மலர், இலால்குடி இராவ்சாகிப் எல். என். பரமசிவம் பிள்ளை நூற்றாண்டு விழா மலர், இலால்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொன்விழா மலர், உறையூர் வாகீச பக்த ஜனசபை வைரவிழா மலர் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர் திருக்கற்குடித் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலர் உள்ளிட்ட சிறப்பு மலர்களை வெளியிட்டு, நிகழ்வுகளை ஆவணங்களாகப் பதிவுசெய்த பெருமைக்குரியவர். 

திருமுறை விளக்க வகுப்பு 

திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல பயிற்சி மையங்களில் திருமுறை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் திருச்சிராப்பள்ளி கைலாசபுரம் கிளைப் பயிற்சி வகுப்பில் பேராசிரியராக இருந்து கடந்த ஏழாண்டுகளாகத் திருமுறை விளக்கம் செய்து வருகின்றார்கள். 


வானொலி உரைகள் 

வித்துவான் மு. வைத்தியநாதன் அவர்கள் திருச்சிராப்பள்ளி வானொலி வழியாகத் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் சைவ சமயச் சிறப்பு குறித்தும் மிகுதியான சிறப்புரைகள் வழங்கியுள்ளார். காலையில் சிந்தனை உரைகளாக அமையும் இவர் உரை, இரவுப் பொழுதில் நால்வர் பதிக அற்புதங்களாகவும், பன்னிரு திருமுறைகளில் தமிழ்க் கலைகளாகவும் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பக்திப் பொழிவுகளாகவும் மக்களின் நெஞ்சங்களை மகிழ்வித்துள்ளன.35 நிகழ்ச்சிகள் சமய இலக்கியம் குறித்தும் 18 உரைகள் சங்க இலக்கியம் குறித்தும் 10 உரைகள் திருமுருகாற்றுப்படை குறித்தும் அமைந்து, சற்றொப்ப 50 க்கும் மேற்பட்ட அரைமணி நேரச் சிறப்புரைகளைத் திருச்சிராப்பள்ளி வானொலி ஒலிபரப்பியுள்ளது. 

ஊரன் அடிகளார் திருவருட்பாவினை ஆறு திருமுறைகளாகத் தொகுத்து ஆய்வுப் பதிப்பாக வெளியிட்டார்கள். மேலும் தருமை ஆதீனம் பன்னிரு திருமுறைகளை 20,000 பக்கங்களில் வெளியிட்டனர். இவற்றையெல்லாம் மெய்ப்புப் பார்த்து, நூல் செப்பமாக வெளிவருவதற்குத் துணைநின்ற பெருமைக்குரியவர் நம் பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள். 

தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படக் கற்ற பேராசிரியர் மு. வைத்தியநாதன் அவர்கள் வாழ்நாளெல்லாம் அதன் சுவைகளையும் சிறப்புகளையும் பல வடிவங்களில் மக்கள் மன்றத்திற்குக் கொண்டுசேர்த்த மாமனிதர் என்றும் மேன்மைகொள் சைவநெறியைப் பரப்புவதில் ஆர்வமுடன் செயல்பட்டவர் என்றும் இவரைப் போற்றலாம்.

 

திங்கள், 20 நவம்பர், 2023

மலேசியா, “இசைத்தென்றல்” நா. மாரியப்பன்

 

                     “இசைத்தென்றல்” நா. மாரியப்பன் 

இணையவெளியில் உலவிக்கொண்டிருந்தபொழுது 2023 சூன் திங்கள் 10, 11 நாள்களில் (காரி, ஞாயிறு) மலேசியாவின் ஈப்போ மாநகரில்  மரபு கவிதை மாநாடு நடைபெற உள்ளது என்ற குறிப்பைப் படித்து, மாநாட்டுக் குழுவினரைத் தொடர்புகொண்டேன்மாநாட்டு ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான முனைவர் குமரன் வேலு அவர்களைத் தொடர்புகொண்டு, தங்குமிடம், உணவு, போக்குவரவு குறித்த உதவிகள் சிலவற்றைக் கேட்டேன். அவர்களும் மகிழ்ச்சியாக உதவ முன்வந்தார்கள். கோடை விடுமுறைக் காலம் என்பதால் அயல்நாடு செல்வதில் இடர்ப்பாடு இருக்காது என்று செலவுத்திட்டம் வகுத்துக்கொண்டேன். மலையகச் செலவும் உறுதிப்பட்டது. மரபு கவிதை வளர்ச்சிக்குத் தனித்தமிழ் இயக்கத்தாரின் பங்களிப்பு என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வரைந்து மாநாட்டுக் குழுவுக்கு விடுத்தேன். கட்டுரையும் ஏற்கப்பட்டது. 

மாநாட்டில் கட்டுரை படிப்பது ஒரு காரணமாக இருந்தாலும் அங்கு வாழ்ந்துவரும் என் மூத்த நண்பர்கள் சிலரைக் கண்டு உரையாடுவதும், அவர்களிடமிருந்து தமிழிசை சார்ந்த ஆய்வுக்குறிப்புகள் சிலவற்றைப் பெற்று வருவதும், மலையகத்தின் மாண்புறு அழகுக் காட்சிகளைக் கண்டு வருவதும் என் செலவின் உள்நோக்கமாக இருந்தன. 

மலேசியாவில் வாழ்ந்துவரும் மூத்த இசையறிஞர் இசைத்தென்றல் நா. மாரியப்பனார்க்கு என் வருகையை முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். அவரைக் காண்பதற்கும், உரையாடுவதற்கும் வாய்ப்பாக அவர் இல்லத்துக்கு அருகில் தங்கும் அறை இருக்குமாறு விடுதியில் முன்பதிவு செய்திருந்தோம். என் இசைத்தமிழ்க் கலைஞர்கள் - நோக்கீட்டு நூல் உருவாக்கத்தின்பொழுது உலகின் பல பகுதிகளில் வாழ்ந்துவரும் இசைக்கலைஞர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களின் இசை வாழ்க்கையையும் பணிகளையும் அறிந்து, அவர்களை நேரில் காணும் வாய்ப்புக்கு ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தேன். அந்த வகையில் மலேசியாவில் வாழ்ந்துவரும் இசைத்தென்றல் நா. மாரியப்பனாரின் தொடர்பு கிடைத்தவுடன்  ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் அவருடன் உரையாடுவதும் அவர்தம் முக்கால் நூற்றாண்டு(எழுபத்தைந்து ஆண்டு) இசைப்பயணத்தை அறிவதும் என் வழக்கமாக இருந்தது. 

ஈப்போவில் முன்பே  நடைபெற்ற ஒரு  மாநாட்டில் நா. மாரியப்பனாரைக் காணும் வாய்ப்பு அமைந்தாலும் அவருடன் நெருங்கி உரையாடவோ, அவர்தம் கடலளவு இசையறிவை அறிந்துகொள்ளவோ அன்றைய நாளில் பொழுது வாய்க்கவில்லை. அந்த மாநாட்டில் பகலுணவு நேரத்தில் அவரின் இசைப்பொழிவு இருந்ததால் மாநாட்டுக்கு வந்தவர்கள் அனைவரும் உணவுக்கூடம் நோக்கி ஓடினோமே தவிர, தேனொத்த அவர்தம் இசைநிகழ்வைக் கேட்டோமில்லை. இசைத்தென்றலின் இசைமழை பாலைநிலைத்தில் பெய்த பெருமழையாகப் பயனற்றுப் போனது. எனவே, அடுத்த முறை மலேசியா வரும்பொழுது இசைத்தென்றல் நா. மாரியப்பனாரைச் சந்திக்க வேண்டும் என்ற வேட்கையை முதன்மை நோக்கமாக அடைகாத்து வைத்திருந்தேன். 

09.06.2023 மாலை நேரத்தில் மலேசியாவின் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கினேன். அங்கு வந்து என் உயிர்த்தோழர் ம. முனியாண்டி ஐயாவும் மாணிக்கம் சொக்கலிங்கம் ஐயாவும் இரவிச்சந்திரன் ஐயாவும் எதிர்கொண்டு வரவேற்றனர். அவர்கள் கொண்டுவந்திருந்த மகிழுந்தில் ஏறிக்கொண்டேன். கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்சு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கொண்டு வந்து இறக்கிவிட்டு, அன்பர்கள் குழு என்னிடம் விடைபெற்றது. 

மலேசியாவின் பிரீக்பீல்ட்சு நகருக்கு வந்துள்ளதையும் விடுதியில் தங்கியிருக்கும் விவரத்தையும், விடுதியின் பெயரையும் சொல்லி, இசைமேதை நா. மாரியப்பனாரைச் சந்திக்க விரும்பும் ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டேன். விவரங்களைக் கேட்டறிந்த ஐயா அவர்களே நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து, கீழ்த்தளத்தில் வினவிப் பார்த்துள்ளார்கள். கீழே இருந்த தமிழக அன்பர்கள் சிலர் என் வருகை குறித்த விவரத்தை ஐயாவிடம் சரியாகத் தெரிவிக்காத காரணத்தால் என்னைச் சந்திக்க இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். நான் குளித்து முடித்து, மீண்டும் ஐயாவுடன் தொடர்புகொண்டேன். மீண்டும் அவருடன் உரையாடி, விவரங்களைப் பெற்று அருகில் இருந்த இல்லத்துக்கு நானே தேடிச் சென்றேன். ஐயாவும் என் வருகைக்காக அங்கிருந்த கோவில் முகப்பில் அமர்ந்து  காத்திருந்தார்கள். என்னை அழைத்துக்கொண்டு, தம் குடியிருப்பு நோக்கி ஆர்வமாகச் சென்றார்கள்.

 

நா. மாரியப்பனார், மு. இளங்கோவன்

நா. மாரியப்பனாரின் தமிழ் வாழ்க்கை 

நா. மாரியப்பன் அவர்கள் மலேசியாவின் பினாங்கில் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் பெயர் நாகப்பன், பொன்னம்மாள். பினாங்கு, ஆயர் ஈத்தாம் ஊரில் இருந்த மாரியம்மன் கோவில் நினைவாக இவருக்கு மாரியப்பன் என்ற பெயர் அமைந்தது. ஏழாம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். இவரின் தமிழ் ஆசிரியராக வாய்த்த கா.கு. மாணிக்க முதலியார் அவர்களின் ஊக்குவிப்பில் இசை ஈடுபாடு இவருக்கு அமைந்தது. இளம் அகவையில் நடிப்பாற்றலும் மாரியப்பனார்க்கு இருந்தது. மாரியப்பனாரின் தந்தை நாகப்பன் அவர்கள் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம்,  நன்னிலம் வட்டம் பாப்னஞ்சேரியில் பிறந்தவர். அம்மா காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர். 

மாரியப்பனார் ஏழாம் வகுப்பு கல்விக்குப் பிறகு, தம் தந்தையார் ஊரான பாப்னஞ்சேரிக்கு வந்து, நாடகக் குழுவில் இணைந்து பயிற்சிபெற விரும்பினார். இராமநாதபுரத்தில் இருந்த ஸ்ரீதேவி நாடக சபாவில் சேர்ந்தார்.  மூன்று ஆண்டுகள் இந்தக் குழுவில் இணைந்து இராமநாதபுரம், குளித்தலை, பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி முதலிய ஊர்களில் தங்கி, நாடகத்தில் நடித்தார். பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் பாடல்களைக் கேட்டு, பயிற்சிபெற்றார். 1954 இல் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்பினார். பினாங்கு மாணவர் மணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டார். இவரிடமிருந்த இசைப்புலமையை அறிந்து, இவருக்கு மலேசிய வானொலியில் இசையமைக்கவும், பாடவும் வாய்ப்புகள் அமைந்தன. நாடகமேதை டி.கே. சண்முகம் அவர்கள் மலேசியாவின் பினாங்குக்குச் சென்றபொழுது நம் மாரியப்பனார்  “தாமரை பூத்த தடாகமடி” என்ற பாடலை இனிய இசையுடன் பாடினார். பாடலில் ஈர்ப்புற்ற டி.கே. சண்முகம், தாம் கடிதம் தருவதாகவும் தமிழகம் சென்று எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்க்குமாறும் சொன்னார். அவரிடம் கடிதம் பெற்றுக்கொண்டு மாரியப்பன் அவர்கள்  தமிழகம் வந்தார். 

1957 முதல் 1970 வரை சென்னையில் தங்கிப், பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பழகவும் பாடவும் வாய்ப்புகளைப் பெற்றார். எம்.ஜி.ஆர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சிதம்பரம் ஜெயராமன் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் இவருக்கு அமைந்தது. இசையறிஞர் எம்.கே. ஆத்மநாதன் அவர்களைத் தம் குருநாதராகக் குறிப்பிடும் மாரியப்பனார் அந்நாளில் ஒரு பாடல் பாடினால் ஏழரை ரூபாய் ஊதியம் கிடைக்கும் என்கின்றார். சென்னை வானொலியிலும், சென்னையில் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பாடியுள்ளார். 

மாரியப்பன் அவர்கள் 1960 ஆம் ஆண்டில் சாந்தா அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். 1. தமிழ்ச்செல்வி, 2. துருவன், 3. தாமரைச்செல்வி. சென்னையில் பிறந்த இவர்கள் மூவரும் முறைப்படி சென்னையில் இசைக்கல்லூரியில் இசை பயின்றவர்கள். 

1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மலேசியாவுக்குச் சென்று, ரெ. சண்முகம் அவர்களின் அறிமுகத்துடன் திரு. பாலகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து, மாதம் 32 பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும் எனவும் அதற்குரிய சம்பளம் 300 வெள்ளி எனவும் உறுதிப்படுத்தப்பட்ட அதன் அடிப்படையில் மலேசிய வானொலிக்கு இசையமைக்கத் தொடங்கினார். அதற்காகச் சிவரஞ்சனி இசைக்குழு உருவாக்கிச் செயல்பட்டார். இக்குழுவில் 12 இசைக்கலைஞர்கள் இணைந்து பணிபுரிந்தனர். 

இசைத்தென்றல் நா. மாரியப்பனாரின் தமிழிசைப் பணியைப் பாராட்டிப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விருதுகளும் பட்டங்களும் வழங்கியுள்ளனர். அவை: 

1.       இசைத் தென்றல் பட்டம் - பினாங்குத் தமிழிளைஞர் மணிமன்றம் (1956)

2.       சிறந்த இசையமைப்பாளர் விருது - ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி (2010)

3.       திருக்குறள் இசைமணி - திருக்குறள் ஆராய்ச்சி மையம்

4.   வாழ்நாள் சாதனை - கோலாலம்பூர் தமிழ்ச்சங்கம் 

மேற்கண்ட செய்திகளை அவரின் வாய்மொழியாக அறிந்துகொள்ள முடிந்தது.  ஒவியர் எஸ். சந்திரன் அவர்களின் நூலிலும் இச்செய்திகள் பதிவாகியுள்ளன. 

இசைத்தென்றல் மாரியப்பனார் அகவை முதிர்ந்த நிலையிலும் இசைப்பாடல்களை நாள்தோறும் இசைத்து, பயிற்சி செய்துகொண்டுள்ளார்கள். இசை ஈடுபாட்டுடன் அவரைக் காணச் சென்ற என்னைக் கண்டதும் அளவிலா மகிழ்ச்சியுற்றார்கள். தம் வாழ்நாள் பணிகளைச் சற்றொப்ப இரண்டு மணிநேரம் விவரித்துப் பேசினார்கள். கைபேசியில் பதிந்துகொண்டேன். சில படங்களும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன்.

 

நா. மாரியப்பனார் 2004 ஆம் ஆண்டில் இசைத்தென்றல் என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டதைச் சொல்லி, அந்த நூலின் படியினையும் எனக்கு வழங்கினார். டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு ஐயாவின் வாழ்த்துரை அந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றது. 

பினாங்கில் பிறந்து வளர்ந்த மாரியப்பனார் பலவாண்டுகள் தமிழகத்தில் தங்கி, இசைப்பயிற்சி, நாடகப்பயிற்சி பெற்றுள்ளார். மலேசிய வானொலியில் பணியாற்றிய காலத்தில் கவிஞர்கள் பலரை இசைப்பாடல் எழுதச்செய்து அதற்கு இசையமைத்து, வானொலியில் உலவ விட்ட பெருமைக்குரியவர். அவ்வகையில் பல்லாயிரம் பாடலுக்கு இசையமைத்துள்ள இப்பெருமகனாரின் இசை ஆவணங்கள் போற்றிப் பாதுகாக்காமல் போனதால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்றன. சிதறிக் கிடந்த பாடல்களுள் கையினுக்குக் கிடைத்த பாடல்களை மட்டும் தொகுத்து இசைதென்றல் என்னும் பெயரில் நூலாக்கி, 282 பக்கத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இந்த நூல் 2004 இல் வெளிவருவதற்கு மலேசியத் தமிழ்த்தொண்டர் காரைக்கிழார் அவர்களின் துணை பெரிதும் உதவியுள்ளது. 

இசைத்தென்றல் நூலில் கவிச்சுடர் காரைக்கிழாரின் 34 பாடல்களும், மணிக்கவிஞர் பாதாசனின் 21 பாடல்களும் வண்ணக்கவிஞர் திருவரசு, எழுச்சிக்கவிஞர் தீப்பொறி, புதுமைக் கவிஞர் பூபாலன், கவிஞர் இளமணி, கவிஞர் காசிதாசன், கவிப்புயல் வேலுசாமி, கவிஞர் அரசன் கனி, கவிஞர் வீரமான் உள்ளிட்ட 17  பெருங்கவிஞர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. மலேசிய நாட்டின் தமிழ் மெல்லிசைப் பாடல் வளர்ச்சியையும் தமிழிசை வளர்ச்சியையும் அறிவதற்கு  இந்த நூல் பெரும் ஆவணமாக உள்ளது. 



இசைத்தென்றல் நா. மாரியப்பனாரின் இசைப்பணிகளுள் முதன்மையானதாகத் திருக்குறளை இனிய இசையில் பாடி வழங்கியுள்ளதைக் குறிப்பிட வேண்டும். 133 அதிகாரங்களிலிருந்தும் ஒவ்வொரு குறட்பா வீதம் 133  திருக்குறளை இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட இராகங்களில் பாடி ஒலிவட்டில் வழங்கியுள்ளமை இவர்தம் இசைப்புலமைக்கு எடுத்துக்காட்டாகும். “அகர முதல எழுத்தெல்லாம்” எனத் தொடங்கும் குறட்பாவைப் பூபாள இராகத்தில் இனிமையுடன் பாடித் தந்துள்ளார். மோகனப் பண்ணிலும் பல குறட்பாக்கள் பாடப்பட்டுள்ளன. ஏழாம் வகுப்பு மட்டும் கல்வியறிவு பெற்ற நா. மாரியப்பனாரிடம் மிகச்சிறந்த இசையறிவு இருப்பதை இவருடன் உரையாடியபொழுது அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ்நாட்டு இசையறிஞர்கள் பி.யு. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம், கண்டசாலா, டி.எம்.சௌந்தரராஜன், சிதம்பரம் ஜெயராமன், கிட்டப்பா, நடிப்பிசைப்புலவர் கே.ஆர். இராமசாமி, பி,பி. ஸ்ரீனிவாஸ், தியாகராஜ பாகவதர், சீர்காழி கோவிந்தராஜன் என்று அத்தனைக் கலைஞர்களைப் போலவும் பாடும் ஆற்றல் பெற்றவர். மேற்கண்ட ஒவ்வொருவரின் குரலையும் வயப்படுத்தி வைத்துள்ள மாரியப்பனார் அவர்கள். நம் தமிழ்நாட்டுப்  பாடுதுறை வல்லுநர்களைப் போலவே பல பாடல்களைப் பாடி என்னை மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்தினார். 

தொண்ணூறு அகவையிலும் ஒவ்வொரு நாளும் பாடுவதும், பயிற்சிபெறுவதுமாக இருக்கும் இந்தத் தமிழ் இசைமேதையை உலகத் தமிழர்கள் போற்றிப் புரப்பது நம் தலைக்கடனாகும்.