நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 27 மே, 2015

முனைவர் பா.சுந்தரவடிவேல் அவர்களின் பணிகளுக்குப் பாராட்டுகள்!

முனைவர் பா.சுந்தரவடிவேல்

அமெரிக்காவில் வாழும் என் அருமை நண்பர் பா. சுந்தரவடிவேல் அவர்கள் தமிழர்களின் அரிய கண்டுபிடிப்புகளை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிப்பதில் வல்லவர். தமிழர்களின் மூச்சுப்பயிற்சிக் கலைபற்றி உலக அளவில் பல ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியவர். திருமூலரின் கருத்துகள் எந்த அளவு அறிவியல்தன்மை பெற்றவை என்பதைச் சான்றுகாட்டி விளக்குவதில் வல்லவர். கறம்புக்குடியில் பிறந்த இந்தத் தமிழுள்ளம் ஆங்கிலத்தில் வழங்கும் உரையையும் அதனைச் செவிமடுக்கும் அமெரிக்கர்களையும் காணொளியில் கண்டு மகிழும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

அமெரிக்காவின் தெற்குக் கரோலினா மாநிலத்தில் சார்ல்சுடன் மாநகரில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் பா. சுந்தரவடிவேல் அவர்களை 2011 இல் பெட்னா விழாவில் கண்டு உரையாடியுள்ளேன். அவர்களின் தமிழ்ப்பற்றுக்கு இணையாக ஒருவரைக் காட்டுவது அரிது. அவர் அலுவலகத்தையும் ஆய்வுக்கூடத்தையும் பார்வையிடும் வாய்ப்பு எனக்கு அப்பொழுது அமைந்தது. இவர்போல் ஆக்கப்பணிகளைச் செய்பவர்கள்தான் தமிழுலகுக்குத் தேவை.

முனைவர் பா.சுந்தரவடிவேல் அவர்களின் உரைகேட்க இங்கே சொடுக்கவும்.


வியாழன், 21 மே, 2015

“புதுமைத்தேனீ” கவிமாலை மா. அன்பழகனார்!


“புதுமைத்தேனீ” கவிமாலை மா. அன்பழகன்

சிங்கப்பூரில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகளுள் புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். இலக்கியப் படைப்பாளியாகவும், இலக்கியம் படைப்போரை ஊக்குவிக்கும் சிறந்த தமிழ்த்தொண்டராகவும் விளங்குபவர். சிங்கப்பூர் செல்லும் யாவரையும் அன்புடன் வரவேற்று, மேடையமைத்து உரையாற்றச்செய்யும் பேருள்ளம்கொண்டவர். சிங்கப்பூர் இளைஞர்களைத் தம் ஆற்றல்மிகும் செயல்திறனால் அரவணைத்துப் போற்றும் நல்லுள்ளம் கொண்டவர். இவர் பணிகளைக் கண்டும் கேட்டும் வியப்புற்று, இவர்  பற்றி ஒரு முடிவுக்கு வந்தவர்கள் கடைசியாக நம்பமுடியாமல் திகைக்கும் இடம் ஒன்று உண்டு. அது மா. அன்பழகன் அவர்களின் தோற்றமும் அதற்குப் பொருந்திவராத அகவையும் யாராலும் நம்பமுடியாது. ஆனால் நம்பிதான் ஆகவேண்டும். இவரின் இளமைத்தோற்றம், அகவை குறித்த விவாதம் சிங்கப்பூர் நண்பர்களின் உரையாடல்களில் அவ்வப்பொழுது கட்டாயம் இடம்பெறும்.

மா. அன்பழகன் அவர்கள் கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், திரை இலக்கியம், கடித இலக்கியம், மேடைப்பேச்சு என அனைத்துத் துறைகளிலும் ஆற்றலுடன் விளங்குபவர். திரைத்துறையில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து பணிபுரிந்தவர்.

மா. அன்பழகன் அவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர்கள் மாசிலாமணி, செல்லம்மாள் ஆகியோரின் பதின்பிள்ளைகளுள் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர். பிறந்த ஊரில் பள்ளிப்படிப்பும், அதிராம்பட்டினம், கும்பகோணம், சென்னையில் மருத்துவக்கல்லூரியில் படித்திருந்தாலும் இவர்தம் பட்டப்படிப்பு முற்றுப்பெறாமல் போனது.

1971 ஆம் ஆண்டு மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டவர். இவரின் இல்லறத் துணைவியார் திருவாட்டி திலகவதியார் ஆவார். இவர்களின் இல்லறப் பயனாகச் செல்வம், இராமையா என்னும் ஆண்மக்களைப் பெற்றனர். இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களிடம் பதினைந்து படங்களுக்கு மேல் துணை இயக்குநராகப் பணிபுரிந்த பெருமைக்குரியவர். பாத பூஜை, புது செருப்பு கடிக்கும் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.

மாண்புமிகு தமிழக முதல்வராக இன்று விளங்கும் ஜெ. ஜெயலலிதா வர்கள் திரைத்துறையில் புகழுடன் விளங்கிய சூழலில் அவரை நாயகியாக வைத்துக் குறும்புக்காரி எனும் படத்தைத் தயாரித்து, பாதியிலேயே படத்தை நிறுத்தவேண்டிய சூழ்நிலை அக்காலத்தில் ஏற்பட்டுவிட்டது. எனினும் புரட்சித் தலைவி அவர்கள் தம் நூறாவது பட விழாவின்போதுபடமெடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்கிற முறையில் நினைவுப் பரிசு வழங்கி இவரைப் பாராட்டியுள்ளார்.

1994 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தங்கி வணிகம் செய்யத் தொடங்கினார். இப்பொழுது முழுநேர இலக்கியப்பணியாற்றி வருகின்றார்.

கவிமாலை என்னும் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி, சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்க்கலைக்கும் தொண்டாற்றி வருபவர்.



மா.அன்பழகன் அவ்வர்களின் கவிதை ஈடுபாட்டை அறிந்த உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் இவருக்கு 1990 ல் கிருட்டினகிரியில் நடைபெற்ற  உலகக் கவிஞர் மன்றத்தின் சார்பில் இவருக்குக்  "கவிமாமணி" பட்டம் வழங்கிச்  சிறப்பித்தார்.

மா.அன்பழகன் அவர்களின் நூல்கள் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவர்தம் படைப்புகளை ஆய்ந்து பலர் பட்டம்பெற்றுள்ளனர்.

ப.சு.ஆவணப்பட விழாவை ஒருங்கிணைத்து வெளியிட்ட 
கவிமாலை மா. அன்பழகன் அவர்கள்

இவர் எதனையும் புதுமையாகவும் மக்கள் ஏற்கும் வண்ணமும் செய்வதால் இவருடைய 60 ஆம் ஆண்டின் நிறைவு   விழாவின்போது "புதுமைத்தேனீ" என அன்போடு அழைக்கப்பட்டார். அதுவே அவருடைய செயற்பாட்டால் இன்றும் நிலைத்து நிற்கிறது. வாழ்வில் நேர்மையையும் சிந்தனையில் புதுமையையும், செயலில் உண்மையான உழைப்பையும், கொண்டவர். மக்களுக்குப் பயன்படும் பொதுநலச் சேவையும், அன்பான மனித நேயப் பண்புகளும் இவருடைய இனிய குணங்கள்.

 மா. அன்பழகன் அவர்களின் தமிழ்க்கொடை:

சமுதாயச் சந்தையிலே.... .....கட்டுரை - 1985
அலைதரும் காற்று..............கவிதை
ஜூனியர் பொன்னி.............புதினம்
மடிமீது விளையாடி..............புதினம்
இதில் என்ன தப்பு...............திரைக்கதை

அந்தப் பார்வையில்...............புதினம் - 1987

பழமும் பிஞ்சும்.....................சிறுவர் இலக்கியம்
                                                           

ஒன்றில் ஒன்று.....................கவிதை(ஆங்கில மொழிமாற்றத்துடன் ) 2003
இப்படிக்கு நான் ...................படச்சுவடி

விடியல் விளக்குகள்............. சிறுகதைகள் 2005

உடன்படுசொல் ....................மேடைப் பேச்சு 2006

இன்னும் கேட்கிற சத்தம்       பதிவு(உரை வீச்சு) 2007

ஆயபுலம் ............................புதினம் 2009
என்பா நூறு .......................வெண்பா
 BUBBLES OF FEELINGs...சிறுகதைகள்

என் வானம் நான் மேகம் ........சிறுகதைகள் 2010

BEYOND THE REALM..........சிறுகதைகள் 2011

கவித்தொகை ........................கவிதை - 2012
திரையலையில் ஓர் இலை .......கட்டுரை

கூவி அழைக்குது காகம்....மாணவர் கடித இலக்கியம் - 2014


புதுமைத்தேனீ கவிமாலை மா. அன்பழகனாரின் தமிழ்ப்பணி தொடர்வதாகுக!




புதன், 20 மே, 2015

பேராசிரியர் இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களைச் சந்தித்தேன்…

பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள்

சென்னையில் நடைபெற்ற (18,19 - 05 - 2015) திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ள நம் நண்பர்கள் அயலகத்திலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வருகின்றார்கள் என்று அறிந்து சென்றிருந்தேன்.

தொடக்கவிழாவில் தமிழ்நாடு அரசு செயலர் திரு. மூ.இராசாராம் இ... உள்ளிட்டவர்களின் உரை கருத்துச்செறிவாக இருந்தது. திரு. மூ. இராசாராம் இ... அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். உலகின் பிறமொழிகளிலும் திருக்குறளின் உயரிய மொழிபெயர்ப்புகள் வெளிவரவேண்டும் என்று செயல்பட்டு, வினையாற்றி வருபவர். செயலர் அவர்களின் பெரும் ஒத்துழைப்பால் உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் க. பசும்பொன் அவர்கள் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அயலகத்திலிருந்து திரு. . மன்னர் மன்னன் (மலேசியா),முனைவர் மு. பரமசிவம், திரு. செல்வசோதி, முனைவர் ஆர்.  வேல்முருகன் (சிங்கப்பூர்), திரு. பற்றிமாகரன் (இலண்டன்) உள்ளிட்டோர் வந்திருந்தனர். அனைவரிடமும் உரையாடினேன்.

முதல்நாள் நிகழ்ச்சி நிறைவுக்கு வரும்நிலையில் பேராசிரியர் அரங்க. பாரி அவர்களும் நானும் விருகம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்களைக் காணச் சென்றோம். நீண்ட தேடலுக்குப் பிறகு பேராசிரியர் அவர்களின் இல்லம் சென்றோம். மகிழ்வுந்தில் செலும்பொழுதே இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் குறித்த அனைத்து விவரங்களையும் பேராசிரியர் அரங்க. பாரி அவர்கள் சொல்லியவண்ணம் வந்தார்.

பேராசிரியர் இலெ..கரு. இராமநாதன் செட்டியார் அவர்களைப் பற்றி அறிஞர்கள் வழியாகவும் நூல்கள் வழியாகவும் நானும் அறிந்திருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்மிகு பேராசிரியராக இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் விளங்கிப் பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பல வகையில் உழைத்துள்ளார் என்று பொதுவாக அறிந்து வைத்திருந்தேன். அவர்தம் கண்டிப்பும், உழைப்பும் குறித்து அவரின் மாணவர்கள் வழியாக அறிந்துள்ளேன். அதுபோல் அண்ணாமலை அரசர் ஏற்படுத்திய தமிழிசைச் சங்க வளர்ச்சியிலும் பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்று அறிந்திருந்தேன். அதனால்தான் அண்மையில் மருத்துவர் ச. இராமதாசு ஐயா அவர்கள் திரு. செட்டியார் அவர்களை அழைத்து அவர்களின் தமிழிசைப் பணியைப் போற்றிப் பாராட்டியுள்ளார் என்பதைச் செய்தி ஏடுகளில் படித்துள்ளேன்.

பேராசிரியர் இலெ. . கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் நூறு அகவை கடந்து நூற்றியொன்றாம் அகவையில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். பன்னூலாசிரியராகவும், பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் விளங்கிய திரு. செட்டியார் அவர்களை நீண்ட நாட்களாகக் காணவேண்டும் என்று நினைத்திருந்தும் அந்த வாய்ப்பு பேராசிரியர் அரங்க. பாரி அவர்களால்தான் எனக்குக் கிடைத்தது.

விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மீனாட்சியகத்தில் எங்கள் மகிழ்வுந்து நின்றது. அழைப்பு மணியை அடித்து வாயிற்படியடுத்து, உள்ளே நுழைந்ததும் திருவாளர் ஆச்சி அவர்கள் எங்களை அன்பொழுக வரவேற்றார்கள். பேராசிரியர் அவர்களுக்கு எங்கள் வருகையைச் சொல்லி, மெதுவாக எழுப்பி அமரவைத்தார்கள். பேராசிரியர் செட்டியார் அவர்களும் அன்பொழுக எங்களை வரவேற்றார்கள்.

பேராசிரியர் அரங்க.பாரி அவர்கள் தம்மை அறிமுகம் செய்துகொண்டு, என்னையும் அறிமுகம் செய்துவைத்தார். பேராசிரியர் அரங்க. பாரியைப் பார்த்த உடனேயே அவரின் கல்வி பற்றியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் பணியில் இணைந்த வரலாறு பற்றியும், 100 விழுக்காடு துல்லியமாக அறிந்துவைத்திருந்தார். அனைத்தையும் சொன்னபொழுது இருவரும் அதிர்ந்துபோனாம். இந்த அகவையிலும் பேராசிரியர் அவர்களின் நினைவாற்றலை வியந்தபடி அமர்ந்தோம்.
முனைவர் அரங்க.பாரி அவர்கள் பேராசிரியர் அவர்களுக்கு நூல்களை வழங்கி, வாழ்த்துப்பெறுதல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தாம் பணியாற்றியபொழுது நடந்த நிகழ்வுகளை நினைவுமாறாமல் திரு. செட்டியார் அவர்கள் குறிப்பிட்டார்கள். திரு. செட்டியார் அவர்கள் நூற்று ஒரு அகவையிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் தோற்ற வரலாறு முதல் இன்று நடைபெறும் புதிய துணைவேந்தர் பதவி அமர்த்தம்வரை அறிந்துவைத்துள்ளார். தம் காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அரசியல்துறையில் புகழ்பெற்ற நாவலர் நெடுஞ்செழியன், திரு. மதியழகன், பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மாவீரன் பழ.நெடுமாறன் உள்ளிட்ட அனைவரையும் திரு. செட்டியார் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம்மைப்பறி பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ள வரலாற்றையும் நினைவுகூர்ந்தார்.

தம் காலத்தில் பணியாற்றிய பேராசிரியர்கள் பற்றியும், தமிழறிஞர்கள் பற்றியும் பல அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். யாழ்நூல் ஆசிரியர் விபுலாந்தர் பணியமர்த்தம், கா.சு.பிள்ளை பணியமர்த்தம், பண்டிதமணியார் மணியமர்த்தம், பண்டாராத்தார் பணியமர்த்தம் உள்ளிட்ட பழைய நிகழ்வுகளை எங்களுக்கு நினைவூட்டினார்.

தம்மை மிக உயர்வாகப் போற்றும் முனைவர் பொற்கோ போன்றவர்களையும் நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் திரு. செட்டியார் அவர்களுக்கு அரங்க.பாரி அவர்கள் ஆடை அணிவித்து, தம் நூல்களைப் பரிசாக வழங்கினார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபொழுது பேராசிரியரைப் பல கோணங்களில் படமாக எடுத்துக்கொண்டேன். பேராசிரியர் அவர்களிடம் கேட்டுத் தெளிவுபெறவேண்டிய சில வினாக்களைப் பல ஆண்டுகளாக நான் வைத்திருந்தேன்.
மு.இளங்கோவன், பேராசிரியர் இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், திருவாளர் ஆச்சி அவர்கள்.

பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் பற்றி திரு. செட்டியார் அவர்களின் கருத்து என்ன? என்று வினவினேன். ஏனெனில் திரு. செட்டியார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிபொழுது பெருமழைப்புலவர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர். பேராசிரியர் அவர்கள் ஓரளவுதான் பெருமழைப்புலவர் பற்றி சொன்னார். அடுத்துப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பற்றி வினவினேன். ஏனெனில் பேராசிரியர் பணிபுரிந்தபொழுதுதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பணியிலிருந்து பண்ணாராய்ச்சி வித்தகர் விலக நேர்ந்தது.  பொருத்தமான காரணங்களைப் பேராசிரியர் சொல்லவில்லை என்றாலும் பண்ணாராய்ச்சி வித்தகரின் இசைப்புலமையை ஒத்துக்கொண்டார். ஓதுவார்களின் பண்மரபு குறித்த முடிவுகளைப் பண்ணாராய்ச்சி வித்தகர் மறுத்துரைத்த வரலாற்றை நினைவுகூர்ந்தார்.

பேராசிரியர் இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் எல்.பி.கே.ஆர் என்று கல்வியுலகில் அறியப்பட்டவர். நெற்குப்பை என்ற ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்பது முறை பொறுப்புத் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். அரசர் குடும்பத்திற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவாரக விளங்கியவர். நோக்கு, சோழவேந்தர் மூவர்(1957) உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

பேராசிரியர் அவர்களிடம் உரையாடியபடியே அவர்களின் வீட்டில் மாட்டப்பெறிருந்த படங்களைப் பார்த்தேன். பேராசிரியர் எல்.பி.கே.ஆர் அவர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் பல நினைவுகளையும் வரலாற்றையும் சொல்லும் படங்கள் இருந்தன. அதில் ஒன்று அண்மையில் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் திரு. செட்டியார் அவர்களின் தமிழிசைப் பணியைப் போற்றிப் பாராட்டும் நிகழ்ச்சியை நினைவூட்டும் ஒரு படம் வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உண்மையாகத் தமிழுக்கும், தமிழிசைக்கும் உழைப்போரைப் போற்றுவோர் அருகிக் காணப்படும் நிலையில் மருத்துவர் ச.இராமதாசு ஐயா அவர்கள் நூற்றாண்டு கண்ட பேராசிரியரை அழைத்துவந்து பாராட்டியமையைப் போற்றித்தானே ஆகவேண்டும்.

பேராசிரியர் அவர்களும் ஆச்சி அவர்களும் வழங்கிய தேநீரைப் பருகியபடி அவர்களின் குடும்பநிலை, பிறந்த ஊர், கல்வி குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டோம். முதுமைநோக்கி அவர்களை ஓய்வெடுக்கும்படிக் கேட்டுக்கொண்டு, மகிழ்ச்சியுடன் விடைபெற்றுக் கொண்டோம். நூற்றாண்டு கண்ட ஒரு தமிழறிஞரைப் பார்த்த மனநிறைவும், அவர்களுடன் உரையாடிய நினைவுகளும் என்றும் என் உள்ளத்தில் பசுமையாக இருக்கும்.



சனி, 16 மே, 2015

பண்ணாராய்ச்சியாளர் குடந்தை ப. சுந்தரேசனார் உலகத் தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டிய இசைமேதை! கடலூரில் முனைவர் வி. முத்து உரை!


 முனைவர் வி. முத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட, திரு. மாரிமுத்து அவர்கள் பெற்றுக்கொள்ளும் காட்சி. அருகில் கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள்.

கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம் சார்பில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் வெளியிடப்பட்டுத் தமிழறிஞர்கள், தமிழுணர்வாளர்கள் முன்னிலையில் இன்று மாலை (16.05.2015) திரையிடப்பட்டது. புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவரும், கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புத் தலைவருமாகிய முனைவர் வி. முத்து அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார். திரு. மாரிமுத்து அவர்கள் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.  

பேராசிரியர் இரா.. குழந்தைவேலனார் அறிமுகவுரையாற்றினார். அரங்க. இரகு, புலவர் மு. நாகப்பன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு இந்த ஆவணப்படத்தின் தேவையையும், இந்தப் படம் எடுக்கப்பட்டதற்கான நோக்கத்தையும் எடுத்துரைத்தார்.

திரு. மாரிமுத்து அவர்கள் ஆவணப்படத்தின் கூடுதல்படிகளை வாங்கி, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

புதுச்சேரி, கடலூர் வாழும் தமிழார்வலர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆவணப்படம் குறித்து ஊடகங்களுக்குத் திரு.முத்து அவர்களின் செவ்வி.

திரு. மாரிமுத்து அவர்களின் உரை

பேராசிரியர் இரா..ச.குழந்தைவேலனார் ஊடகங்களுக்குச் செவ்வியளித்தல்

பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்



பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

செவ்வாய், 12 மே, 2015

கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா



கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா 16.05.2015 காரி(சனி)க் கிழமை மாலை 6.05 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்பு நிகழ்வாகப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.

தோழர்  அரங்க. இரகு அவர்கள் வரவேற்புரையாற்றவும், கல்விச்செம்மல் முனைவர் வெ. முத்து அவர்கள் தலைமை தாங்கவும் பேராசிரியர் இராச. குழந்தைவேலனார் அவர்கள் அறிமுகவுரையாற்றவும் உள்ளனர்.

  கவிஞர் செல்ல. கந்தசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெறும் நிகழ்வில் முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரையாற்ற உள்ளார். புலவர் மு.நாகப்பன் அவர்கள் நன்றியுரை வழங்க உள்ளார்.

விழாவுக்கான ஏற்பாடுகளைக் கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் செய்துள்ளனர். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்!

தொடர்புக்கு: 99420 61664 /  97153 23923