நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 29 செப்டம்பர், 2007

ஈழத்துப்பூராடனாரின் தமிழ்இலக்கியப் பணிகள்

தமிழ் இலக்கியவரலாறு தமிழகத்தில் எழுந்த படைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு எழுதமுடியாதபடி உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் படைப்புகளைக் கவனத்தில் கொண்டு எழுதவேண்டிய அளவில் தமிழ்கூறும் நல்லுலகின் பரப்பு அகன்றுள்ளது. உலகம்பரவிய தமிழர்கள் படைப்பு இலக்கியங்களையும், பாடநூல்களையும், மொழிபெயர்ப்பு நூல்களையும், நாட்டார் வழக்காற்றியல் நூல்களையும்,பிற ஆய்வு நூல்களையும் வழங்கியதோடு, கணிப்பொறி, இணைய தளங்களில் தமிழைப் பயன்படுத்தி மின்னணு ஊடகப் பயன்பாட்டிற்குத் தமிழைக் கொண்டு சென்று தமிழ்வளர்ச்சிக்கு வழிவகுத்தனர். அயல்நாட்டில் வாழும் தமிழர்களுள் அறிஞர் ஈழத்துப்பூராடனார் குறிப்பிடத் தகுந்தவர்.இவர் படைப்பு நூல்களாலும், மொழிபெயர்ப்பு நூல்களாலும், ஆய்வு நூல்களாலும்,தொகுப்பு நூல்களாலும், பதிப்புப் பணிகளாலும் தமிழன்னைக்குப் பல்வேறு நல்லணிகளை அணிவித்துப் பெருமைசேர்த்துள்ளார். இவர்தம் வாழ்க்கையையும், தமிழ்ப்பணியையும் இக்கட்டுரை நினைவுகூர்கிறது.


ஈழத்துப்பூராடனாரின் இளமைப்பருவம்


கனடாவில் இன்று வாழும் ஈழத்துப்பூராடனார் தமிழீழத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த நாகமுத்து சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மை அம்மாளுக்கும் மகனாக 13.12.1928 இல் பிறந்தவர்.இவர்தம் இயற்பெயர் செல்வராசகோபால் ஆகும்.செட்டிப்பாளையம் என்னும் ஊரில் பிறந்தாலும் தேற்றாத்தீவில் வாழ்ந்தவர்.


இவர் தொடக்கக் கல்வியைக் குருக்கள்மடம் மெதடிசுத மிசன் தமிழ்ப்பாடசாலையிலும் உயர் கல்வியினை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும், மருதானை கலைநுட்பக் கல்லூரியிலும், குடந்தையிலும் (தமிழகம்) பயின்றவர்.ஈழத்தில் தம் ஆசிரியர் பணியை முப்பத்தைந்து ஆண்டுகள் செய்து 1985 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.தற்பொழுது கனடாவில் தம் குடும்பத்தினருடன் வாழ்ந்துவரும் ஈழத்துப் பூராடனார்க்கு அகவை எண்பதை நெருங்குகிறது. தள்ளாத அகவையிலும் தமிழ்ப்பணிபுரிவதில் சோர்வின்றிக் காணப்படுகிறார். உடலில் பல்வேறு நோய்கள் காணப்பட்டாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது எழுதுவதிலும், அச்சிடுவதிலும், அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பிவைப்பதிலும், அன்பர்களுக்கு மடல் வரைவதிலும் ஈடுபட்டு விருப்போடு செயல்பட்டு வருகிறார். இவர் இளம் அகவையில் பெற்ற பல்வேறு பயிற்சிகள் இவருக்கு இன்றளவும் தமிழ்ப்பணி புரிவதற்குத் துணையாக உள்ளது.


ஈழத்துப்பூராடனார் இளம் அகவையில் ஆசிரியர் பயிற்சி பெற்றதுடன் அமையாமல் ஓவியம். தட்டச்சு, சுருக்கெழுத்து, அச்சுக்கலை. ஓமியோ மருத்துவம் முதலானவற்றிலும் பயிற்சிபெற்றவர். தமிழ்மொழியில் நல்லபுலமை பெற்றதுடன், ஆங்கிலம், சிங்களம் முதலான மொழிகளையும் நன்கு அறிந்தவர். ஈழத்துப்பூராடனாரின் குடும்பம் தமிழறிவு பெற்ற குடும்பமாகும். இவரின் பாட்டனார் புலவர் இ.வ.கணபதிப்பிள்ளை, பெரியதந்தை வரகவி சின்னவப் புலவர்,கலாநிதி ஏ.பெரியதம்பிப் பிள்ளைப்பண்டிதர் முதலானவர்கள் வழியாக இவருக்குத் தமிழறிவும் தமிழுணர்வும் கிடைத்தது.


ஈழத்துப்பூராடனார் தமக்குப் பதினேழு அகவை இருக்கும்பொழுது பாடல்வரைந்து அதனை வீரகேசரி இதழில் (1945 சனவரி) வெளிவரச் செய்தார். அதனைக் கண்ட புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஈழத்துப்பூராடனாரை அழைத்து எழுத்துத் துறையில் ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு ஆசிரியப்பயிற்சி மாணவராக இருந்தபொழுது இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழகேசரி, மின்னொளி, சிறீலங்கா முதலான ஏடுகளில் எழுதி,கதை, கட்டுரைகள், தொடர்கள் வெளிவந்தன. அதுபோல் தமிழகத்திலிருந்து வெளிவந்த தமிழன், கல்கி, திங்கள், ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற ஏடுகளிலும் எழுதினார்.1954 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வானொலியில் ஈழத்துப்பூராடனாரின் பேச்சு ஒலிபரப்பாகத்தொடங்கியது.


ஈழத்துப்பூராடனார் இலக்கிய ஆர்வம் நிறைந்தவர் என்பதற்கு மேலும் ஒரு சான்று அவர்தம் இலங்கையில் தேற்றாத்தீவு இல்லத்தில் அமைந்திருந்த நூலகம் ஆகும். அங்கிருந்த நூல்கள் யாவும் ஈழத்துப்பூராடனாரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டன. கட்டம் செய்யப்பெற்று, வரிசை எண் இடப்பட்டு,பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு அரிய நூல்களின் சேமிப்பகமாகக்காட்சியளித்தது. ஆனால் அங்கு இருந்த போர்ச்சூழலும் குடும்பம் கனடாவிற்குக் குடிபெயர்ந்ததாலும் நூல்கள் சரியாகப் பராமரிக்க முடியாமல் சிதைந்தன.


இந்நூலகத்தில் தமிழ். ஆங்கிலம்,சிங்கள மொழிகளில் அமைந்த பல்லாயிரம் நூல்கள் இருந்துள்ளன. இவற்றுள் கலைக் களஞ்சியம், அகராதிகள், இலக்கண, இலக்கிய நூல்கள், ஆய்வுநூல்கள், நெடுங்கதைகள், மருத்துவம், சோதிடம், ஓவியம், அறிவியல், வடமொழி மறைநூல்கள், சித்தாந்த நூல்கள், சைவம். வைணவம், கிறித்தவம், இசுலாம், பொளத்தம் சார்ந்த நூல்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் இதுநாள்வரை வெளிவந்திருந்த திரைப்படப் பாடல்கள், வசனங்கள் முதலியனவும் இருந்தன. இவற்றுடன் சிற்றிலக்கிய நூல்கள், அம்மானை, பெரியெழுத்துக் கதைகள், 1938 இலிருந்து இலங்கைப் பாடசாலைகளில் பயன்பாட்டிலிருந்த புத்தகங்கள், செய்யுள் நூல்கள் ,கணக்கு, வரலாறு, புவியியல், பொருளியல், ஆசிரியர் பயிற்சியில் கற்பிக்கப்பட்ட உளவியல் நூல்கள், கல்விநூல்கள், கற்பித்தல் முறைகள், தேர்வு வினாக்கள், பல்வேறு இதழ்கள், இதழ்களின் நறுக்குகள், பல்வேறு கைப்படிகள் எனப் பல்வேறு நூல்கள் இருந்தன. இவை ஈழத்துப்பூராடனாரால் பெரும் பொருள்செலவில் வாங்கிப் பாதுகாக்கப்பட்டவை.


ஈழத்துப்பூராடனார் ஆசிரியராகப் பணிபுரிந்தாலும் தந்தையார் நடத்தி வந்த மனோகரா அச்சகத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தார். தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் அச்சகப்பொறுப்பு முழுவதையும் கவனிக்க வேண்டியநிலை ஈழத்துப்பூராடனாருக்கு அமைந்தது.1980-1984 ஆம் ஆண்டுகளில் ஈழ விடுதலைப்போர் வடிவம் பெற்றபொழுது போராட்டக் குழுவினர்க்குத் துண்டறிக்கை அச்சிட்டுஅளித்தமையை அறிந்த அரசும் காவல்துறையும், இராணுவமும் இவரின் நடவடிக்கையைக் கண்காணிக்கத் தொடங்கின. பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானார். எனவே இனியும் தமிழீழத்தில் தங்கியிருப்பது சரியில்லை என முடிவெடுத்துத் தம் மனோகரா அச்சகத்தை நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு,கனடாவிற்குக் குடிபெயர்ந்தார்.

ஈழத்துப்பூராடனார் ஈழத்தில் வாழ்ந்தபொழுது இவர்தம் தமிழ்ப்பற்று அறிந்த அரசினர் இவர்தம் ஈழத்துப்பூராடனார் என்னும் புனைபெயரில் அமைந்திருந்த ஈழம் என்னும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது எனக் கண்டித்தனர்.(1979முதல் அரசினர் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்ளைக் கண்காணிக்கத் தொடங்கியமையை நினைவிற்கொள்க).


ஈழத்துப்பூராடனார் 1985 இல் கனடாவிற்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்குச் சென்றபிறகு தமிழர்கள் பலரும் குடிபெயர்ந்து வசிக்கத் துணையாக இருந்தார். தமிழ்மக்கள் பயன்பெறும்வண்ணம் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திப் பல பணிகளையும் செய்தார்.அவற்றுள் ரிப்ளக்சு அச்சகம், சீவா பதிப்பகம்,நிழல் என்னும் பெயரில் இதழ் நடத்தியது, தமிழ்கற்பிக்கும் பணியில் ஈடுபட்டமை, உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்-கிளை ஏற்படுத்தியமை, இவர்தம் மகன் சார்ச் இதயராச் அவர்கள் வழியாகத் தமிழ்மகன் என்னும் திரைப்படம் உருவாக்கியமை,தம் மக்களுடன் இணைந்து தமிழ்க்கணிப்பொறி எழுத்துகளைப் பயன்படுத்தி முதன்முதல் தமிழ்நூல் வெளியிட்டமை (பெத்லேகம் கலம்பகம்)(1986) முதலியன இவர்தம் பணிகளுள் குறிப்பிடத்தக்கன.


ஈழத்துப்பூராடனார் எழுத்துப்பணிகள்


ஈழத்துப்பூராடனார் இளம் அகவையிலே எழுதத் தொடங்கிவிட்டார். தம்பெயரிலும்,கதிர், கதிர்வள்ளிச்செல்வன், பூராடனார், ஈழத்துப்பூராடனார் என்னும் பெயர்களிலும் பல்வேறு கதை, கட்டுரை, திறனாய்வு, கவிதை, மொழிபெயர்ப்புகள் எனப் படைத்துள்ளார். இவர்தம் எழுத்தாளுமை பதிப்பு, படைப்பு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, தொகுப்பு என்று பன்முகத்தன்மை கொண்டது.


பதிப்புப்பணிகள்


ஈழத்துப்பூராடனார் தாம் பல நூல்களை எழுதியதுடன்,தம்மையொத்த எழுத்தாளர்கள் நூல்களை வெளியிடவும்,பதிப்பிக்கவும் பல்வேறு வகைகளில் துணை நின்றுள்ளார்.ஈழத்தில் இருந்தபொழுது தம்முடைய மனோகரா அச்சகம் வழியும்.கனடாவில் ரிப்ளக்சு அச்சகம் வழியும் பல்வேறு நூல்கள் வெளிவரத் துணையாக இருந்துள்ளார். மேலும் தமிழகத்தில் நல்ல நூல்கள் பதிப்பிக்கவேண்டும் என்ற நோக்கில் இவர் நெறிப்படுத்தலில் பொன்மொழிப் பதிப்பகம் செயல்படுகின்றமை இங்குக் குறிப்பிடத்தகுந்தது (பொன்மொழிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்), கங்கைகொண்டசோழபுரம் (வழி).பெரம்பலூர் மாவட்டம்-612901)

ஈழத்துப்பூராடனார் எழுதத் துடிக்கும் நூலாசிரியர்களை இனங்கண்டு அவர்களின் நூல்களைத் தாமே முயன்று பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டவர். இவருடைய உதவியால் நடராசா,சற்குணம் ஆகிய இருவரும் எழுதிய நாவலர் பெருமானின் வாழ்க்கைக் குறிப்புகள் நூலும், கா.சிவப்பிரகாசம் அவர்களின் விபுலானந்தரின் கல்விச்சிந்தனைகள் நூலும், ச.நவரத்தினத்தின் கிழக்கின் பேரொளி புலவர்மணி நூலும்,சிவகுமாரன் கதைகள் நூலும் வெளிவந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கன.இவை தவிர ஈழத்து அறிஞர்கள் பலரின் நூல்களைத் தாமே பதிப்பித்துள்ளார்.


ஈழத்துப்பூராடனார் மொழிபெயர்ப்புப் பணிகள்


ஈழத்துப்பூராடனார் பிறமொழி அறிவின் துணைகொண்டு பலநூல்களைத் தமிழிற்கு மொழிபெயர்த்துள்ளார்.இவற்றுள் ஆங்கிலத்திலிருந்து புகழ்மிக்க கிரேக்க காவியங்களான இலியட்,ஒடிசியை மொழிபெயர்த்தமை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.இவ்வாறு மொழிபெயர்த்த பொழுது கிரேக்க நூல்களின் மூலநூலைத் தழுவித் தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார்.கோமரின் இலியட் காவியம் 2400 வெண்பாக்களாகவும், ஒடிசி காவியம் 2400 விருத்தப்பவாகவும்(1990) படைக்கப்பட்டுள்ளன.மேலும் கிரேக்க நாடகங்கள் பல பன்னிரண்டு தொகுதிகளாகவும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் 'சொபிக்கொலசின் நாடகங்கள்' 'அயிலசியசின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கப் பெருமைக்கு உரியன.


ஈழத்துப்பூராடனார் பலதுறை அறிவுபெற்றவர். தமிழின் இயல்,இசை,நாடகம் என்னும் முப்பிரிவுகளிலும் பல நூல்களை இயற்றியுள்ளார்.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கூடாது என இவர் எழுதியுள்ள நூல்களும் அறிக்கைகளும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகும். கணிப்பொறி உலகில் எழுத்துச்சீர்திருத்தம் தேவையற்றது என்பது இவர்கொள்கை.தாம் இதுநாள்வரை படைத்துள்ள நூல்கள் யாவற்றையும் பழைய எழுத்துவடிவுகளில் அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார்.அவ்வகையில் இவர் படைத்துள்ள தமிழ் எழுத்துகளின் உறுப்பு இலக்கணம் உணர்த்தும் எழுத்துநூல்(உரையுடன்), தமிழ் எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள், மின்கணனித் தமிழ் எழுத்துச் சீரமைப்பு தேவைதானா?தமிழ் அச்சுக்கலையில் மின்கணனி எனும் கொம்பியூட்டரின் பிரவேசம் என்பன தமிழுலகம் அறியத்தகும் நூல்களாகும்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை எனவும்,தேவையற்றது எனவும் சொற்போர்புரியும் நாம் அனைவரும் படித்து இன்புறத்தக்கன. அதுபோல் பழைய தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பினர்.இது குறித்து இவர் வெளியிட்ட அறிக்கை உலகம் முழுவதும் இவரால் அனுப்பி வைக்கப்பெற்றது.


இசைத்தமிழ் நூல்கள்


ஈழத்துப்பூராடனார் இசைத்தமிழ் குறித்த நூலொன்றையும் வெற்றிலை(பக்.80) என்னும் பெயரில் இசைப்பாடலாக எழுதியுள்ளார்.


நாடகத்தமிழ் நூல்கள்


ஈழத்துப்பூராடனார் தமிழின் ஒருபிரிவான நாடகத்துறை சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். இவை உரையாகவும், செய்யுளாகவும் அமைகின்றன. மதங்கசூளாமணி என்னும் நூலினை விபுலானந்த அடிகளார் இயற்றினார். இதில் வடமொழிச் சொற்கள் மிகுதியும் கலந்துகிடந்தன. இவற்றின் கருத்தைத் தழுவி ஈழத்துப்பூராடனார் மதங்க சூளாமணியின் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி கூத்துநூல்விருத்தம் என்னும் பெயரில் 320 செய்யுள் கொண்ட நூலினை வெளியிட்டுள்ளார். இந்நூலின் சிறப்பு என்னவெனில், பாடல்களுக்கு உரைவரையும் போக்கே தமிழ் உலகில் காணப்படுவது. நம் ஈழத்துப்பூராடனார் விபுலானந்தரின் உரைக்குப் பாடல் எழுதியுள்ளார்.


ஈழத்துப்பூராடனார் கூத்தர் வெண்பா(821 செய்யுள்),கூத்தர் அகவல், நாடகத்தமிழ், மணிமேகலை(தென்மோடி). சிலப்பதிகாரம்(வடமோடிக்கூத்து), கனடாக் குறவஞ்சி நாடகம், கிழக்கு ஈழமரபுவழி இருபாங்குக் கூத்துக்கலை ஆய்வுக்கான தகவற்திரட்டு முதலான நூல்களை இயற்றியுள்ளார். மேலும் பிற எழுத்தாளர்களுடன் இணைந்து பல நூல்களை நாடகத்துறையில் உருவாக்கியுள்ளார்.

ஈழத்துப்பூராடனாரின் தமிழழகி காப்பியம் என்னும் நூல் ஒன்பது காண்டங்களாக 12000 செய்யுள்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. தமிழரின்மொழி, கலை, பண்பாடு, இனம், வரலாறு, இலக்கம், இலக்கியம் பற்றிய பல தகவல்களைக்கொண்டு இந்நூல் உள்ளது. ஒவ்வொரு காண்டமும் 300 பக்கங்களைக்கொண்டது.


ஈழத்துப்பூராடனாரின் வரலாற்று நூல்கள்


ஈழத்துப்பூராடனார் ஈழத்தின் வரலாற்றை அறிவதற்குப் பயன்படும் வண்ணம் யாரிந்த வேடர்(1965), ஈழத்தின் வரலாறு(1986) என்னும் நூல்களை எழுதியுள்ளார்.


ஈழத்துப்பூராடனார் உரைநூல்கள்


ஈழத்துப்பூராடனார் உரைநடை எழுதுவதில் வல்லவர் என்பதுபோல் பிற நூல்களுக்கு உரை வரைவதிலும் வல்லவர்.அவ்வகையில் இவர் சீமந்தனி புராணம்(வித்துவான் பூபாலபிள்ளை), கதிர்காம சதகம்(இ.வ.கணபதிப்பிள்ளை) முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.


ஈழத்துப்பூராடனார் பனைஓலையிலிருந்து பதிப்பித்த நூல்கள்


ஈழத்துப்பூராடனார் பனைஓலைகளிலிருந்தது சில நூல்களை அச்சில் பதிப்பித்துள்ளார். அவற்றுள் கபோத கா,தை(1970) இரண்ய சம்கார அம்மானை(1966) குறிப்பிடத்தக்கன.


ஈழத்துப்பூராடனார் இயற்றிய சிற்றிலக்கியங்கள்


ஈழத்துப்பூராடனார் சிற்றிலக்கியங்கள் பலவற்றை இயற்றியுள்ளார். புயற்பரணி என்னும் பெயரில் 625 செய்யுட்கள் கொண்டநூலையும், ஈழத்துப் போர்ப்பரணி என்னும் பெயரில் 525 செய்யுள் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை தவிர வறுமைப்போர்ப் பரணி என்னும் நூலையும் இயற்றியுள்ளார். விபுலானந்தர் பிள்ளைத்தமிழ்(1984), ஈழத்து இரட்டையர் இரட்டை மணிமாலை(1984), புலவர்மணிக்கோவை (1984) முதலான நூல்களை இயற்றியுள்ளார்.


ஈழத்துப்பூராடனார் எழுதிய மட்டக்களப்பு குறித்த நூல்கள்


ஈழத்துப்பூராடனார் எழுதிய நூல்களுள் அறிஞர் உலகம் ஏற்றுப்போற்றும் நூல்கள் அவர் மட்டக்களப்பு தொடர்பில் இயற்றப்பட்டவற்றை எனில் மிகையன்று. ஏனெனில் இந்நூல்கள் மட்டக்களப்பு வரலாறு அறிவிப்பதோடு அமையாமல் அங்கு வழக்கிலிருக்கும் பழந்தமிழ்ச் சொற்கள்,வாழ்க்கை முறைகள், பண்பாடு எனப் பல்துறைப் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் அந்நூல்கள் வெளிவந்துள்ளன. அவ்வகையில்,


1.மட்டக்களப்புப் பிரதேசத்தின் வழக்கு மரபுச்சொற்கள் சொற்றொடர்களினதும் அகராதி(1984)

2.மட்டக்களப்பு மாநிலப் பழமொழிகள் அகரவரிசை(1984)

3.நீரரர் நிகண்டு(1984)

4.மட்டக்களப்புச் சொல்வெட்டு(1984)

5.மட்டக்களப்புச் சொல்நூல்(1984)

6.மட்டக்களப்பு மாநில உபகதைகள்(1982)

7.சீவபுராணம் நெடுங்கதை(1979)

8.மட்டக்களப்பு மக்களின் மகிழ்வுப் புதையல்கள்(1978)

9.மட்டக்களப்புப் பனையோலைச் சுவடிகள்(1980)

10.மட்டக்களப்பியல்

11.மட்டக்களப்பு உழவர்மாட்சிக் கலம்பகம்

12.கன்னங்குடா உழுதொழிற்பள்ளு

13.மீன்பாடும் தேன்நாடு

14.வசந்தன்கூத்து ஒருநோக்கு

15.வயலும் வாரியும்

16.மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கலை

முதலியன குறிப்பிடத்தக்கன.

ஈழத்துப்பூராடனார் கிறித்தவசமயத்தைப் பின்பற்றுபவர். இச்சமயம் சார்ந்து பல நூல்களை இயற்றியுள்ளார். இவர்தம் வாழ்க்கைமுறை என்பது அனைத்துச் சமயத்தாரையும் ஆரத்தழுவிப் போற்றும் வகையினது. இவர் கணிப்பொறி வழி அச்சிட்ட முதல்நூல் பெத்லேகம் கலம்பகம்(1986) கிறித்தவசமயம் சார்ந்த நூலாக இருப்பினும் சைவசமயம் சார்ந்த பல நூல்களுக்கு உரை வரைந்துள்ளார்.இவர்தம் தமிழ்ப் பணியைப் போற்றி இசுலாமிய சமயம் சார்ந்த பெரியவர்கள் பாராட்டு செய்துள்ளனர்.இவரின் வினைப்பாடுகளும் வெளிப்பாடுகளும் தமிழ் தமிழர் நலம்சார்ந்து அமைந்தது.



ஈழத்துப்பூராடனார் பெற்ற சிறப்புகள்


ஈழத்துப்பூராடனார் தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதிச் செயல்பட்டதால் இவர்தம் பணியைப் பாராட்டிப் பல்வேறு அமைப்பினரும், நிறுவனங்களும் பாராட்டிச் சிறப்புச் செய்துள்ளன. இவற்றுள் இந்து பண்பாட்டு அமைச்சின் நாடகசேவை விருது(1982), மட்டக்களப்பு கலை பண்பாட்டு அவை வழங்கிய இலக்கியமணி விருது,கனடாவில் வழங்கப்பட்ட பாராட்டுப் பதக்கம்( 1994), தொரன்றோ சேக்கம் நிறுவனத்தின் கேடயமும்(1987), மொரீசியசில் வழங்கப்பட்ட தமிழ்நெறிப்புலவர் விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இவர்தம் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டி வழங்கிய முனைவர் பட்டமும்(Doctor Of Letters)(2000), தமிழர் தகவல் விருது(1992), தாமோதரம் பிள்ளை விருது(1998) முதலியன குறிப்பிடத் தக்கன.


ஈழத்துப்பூராடனார் வெற்றிக்குக் காரணம்


ஒரு மாந்தன் இல்வாழ்க்கையிலும், இலக்கிய உலகிலும் இணைந்து வெற்றிபெறுவது அரிதாகவே நிகழும். அத்தகு அரிய வாழ்க்கை ஈழத்துப்பூராடனார்க்கு அமைந்துள்ளதைப் பெருமையோடு சுட்டிச் சொல்லவேண்டும். அவர்தம் அருமை மனைவியார் வியறிசு பசுபதி அவர்கள் தமிழ் பயிற்றுவித்தலில் நல்ல பட்டறிவுடையவர். ஈழத்துப்பூராடனாரின் மக்கட் செல்வங்கள் அச்சுத்துறையிலும், கணினித் துறையிலும் வல்லுநர்கள். எனவே உலகில் முதன்முதல் கணிப்பொறியில் தமிழ்நூல் அச்சிடும் நுட்பத்தைக் கண்டுபிடித்தனர். வெற்றியுடன் செயல்படுத்தினர். அம்மக்களுள் ஒருவர் கனடாவில் அச்சுக்கூடம் நிறுவியும் பதிப்புப் பணியில் ஈடுபட்டும் புகழ்பெற்றவர். இன்னொரு மகனார் இதயராச் அவர்கள் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் புகழ்பெற்றவர் .ஈழத்துப்பூராடனார் அன்பும் அடக்கமும் உருவானவர். அனைவரிடமும் மனம் ஒன்றிப் பழகுவது இவர்தம் இயல்பு, நன்றி மறவாமை என்னும் பண்பு இவரை உயர்நிலைக்குக் கொண்டு சென்றது. ஆசிரியர்களித்தும், நண்பர்களிடத்தும் இவர்கொண்ட மதிப்பும் சிறப்பும் இவர்தம் சான்றாண்மைக்குச் சான்று.


ஈழத்துப்பூராடனார் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அந்நூல்கள் யாவும் இன்று கிடைக்காமையை உணர்ந்து ஒவ்வொரு நூல்பற்றிய விவரங்களை அறிவிக்கும் அமைப்பில் நானும் எந்தன் நூல்களும் என்னும் பெயரில் மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் பதிப்புத்துறை சார்ந்தும்,தமிழக,ஈழத்து,கனடா சார்ந்த பல்வேறு தகவல்களைத் தருகின்றன.இவ்வாறு காலந்தோறும் நூல்களை ஈழத்துப்பூராடனார் வெளியிட்டாலும் இந்நூல்கள் செம்பதிப்பாகத் தமிழ் உலகிற்குக் கிடைக்கவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. தமிழ்மொழி செம்மொழித் தகுதி பெற்றுள்ள இன்றைய நாளில் நடுவண் அரசும்தமிழக அரசும் விருதுகளை அறிவிக்கும் பொழுதும், அயல்நாட்டில் தமிழ்ச்சேவை புரிந்தவர்களை அடையாளம் காணும்பொழுதும் ஈழத்துப்பூராடனார் போன்ற ஆக்கப் பணிபுரிந்தவர்களின் பெயர்களை முதலில் நினைவில் கொள்ளவேண்டும்.


ஈழத்துப்பூராடனார் ஆசிரியப்பணியில் இணைந்து நல்லாசிரியராக விளங்கியதுடன் நாள்தோறும் கற்கத் தக்கனவற்றைக் கற்றும்,செய்யத் தக்கனவற்றைச் செய்தும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இவர்தம் நூல்கள் தமிழின்அச்சு,இதழியல், கல்வியியல், நாட்டுப் புறவியல், வரலாறு, சமயம், பண்பாடு, இனப்பரவல், திரைப்படம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கும் தகவல் களஞ்சியமாகவும், ஆவணமாகவும் உள்ளன.பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியவை இவர்தம் படைப்புகள்.ஆய்வாளர்களுக்குப் பல்வேறு களங்களில் ஆராய்ச்சி செய்ய உதவுவன.

நன்றி : திண்ணை இணையதளம்(20.09.2007)

ஞாயிறு, 23 செப்டம்பர், 2007

இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம்


அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
தமிழிசைக் கலைக்களஞ்சிய ஆசிரியர்


  தமிழ்மொழி இயல்,இசை,நாடகம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது. தமிழின் இயல் பற்றிய பரந்துபட்ட ஆய்வுகள் காலந்தோறும் வளர்ந்துள்ளனவே தவிர ஏனைய இசை,நாடகம் குறித்த ஆய்வுகள் அவ்வளவாக வளர்ச்சிபெறவில்லை. மேலும் இசை, கூத்தோடு தொடர்புடைய நாட்டியம் பற்றிய செய்திகளில் முறையே தெலுங்கு,வடமொழியின் சார்புச் செய்திகள் புனைந்துரைக்கப்பட்டன. தமிழிசை பற்றியும், நாட்டியம் பற்றியும் தமிழக அறிஞர்கள் சொன்ன செய்திகள் யாவும் கவனிப்பாரின்றிப் போயின.

  அத்தகு நிலையில் ஆபிரகாம் பண்டுவர் அவர்கள் தமிழிசைக்கு என உழைத்து உருவாக்கிய கருணாமிருத சாகரம் என்னும் நூல் இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை வளர்ச்சிக்கு மிகப்பெரிய வித்திட்டது. இந்நூலைத் தொடர்ந்து தமிழிசை இயக்கமும், தமிழிசை ஆய்வுகளும் தமிழகத்தில் இசை மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தன. இத்தகு தமிசை ஆய்வுக்கெனத் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பிறமொழி இசை ஆதிக்கத்தை ஒற்றை மாந்தராக எதிர்த்ததுடன் தமிழிசைக்கு அரணாகப் பழந்தமிழ் இசை உண்மைகளைக் கண்டுரைத்தவர் அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் ஆவார். இவர்தம் தமிழிசை வாழ்வையும், ஆராய்ச்சி நூல்களையும் இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது.

வீ.ப.கா.சுந்தரம் இளமைப்பருவம்

  மதுரை மாவட்டம் உத்தமபாளையத்துக்கு அருகே உள்ள கோம்பை என்னும் ஊரில் 05.09.1915 இல் பிறந்தவர். பெற்றோர் வீ. பரமசிவம் பிள்ளை, காமாட்சி ஆகியோராவர். இளமையில் நாடகம் பார்ப்பதில் நாட்டம்கொண்டவர். பாடல்கள் பாடுவதில் வல்லவர். பட்டப்படிப்பு முடித்தபின் மதுரையில் பசுமலை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பதினேழு ஆண்டுகள் பணிபுரிந்தவர். பின் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.அங்கிருந்து ஓய்வுபெற்றபின் மதுரையிலுள்ள அரசரடி இறையியல் கல்லூரியில் மேல்நாட்டு மாணவர்களுக்கு இசையும், கருவி இசையும் பயிற்றுவித்தார் .மதுரை பசுமலையில் இருந்த தம் ஞானசம்பந்தர் மனையில் தம் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வித்துவான், தமிழ் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

  மதுரைப் பசுமலையில் வாழ்ந்தபொழுது நாவலர் சோமசுந்தரபாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது.அவர்தம் தொல்காப்பியம் குறித்த நூலிலிருந்த பிழைகளைப் பட்டியலிட்டுச் சென்றதாகவும் அவற்றைக் கண்ட நாள்முதல் தம்மீது நாவலருக்கு மிகுந்த அன்பு ஏற்பட்டதையும் வீ.ப.கா.சுந்தரம் அடிக்கடி கூறுவார். தமிழின் ஆழ்ந்த புலமைபெற நாவலரின் தொடர்பே காரணம் என்பார். ஐந்தாண்டுகள் அவரிடம் தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் பாடம் கேட்ட பெருமைக்குரியவர். மதுரையில் வாழ்ந்த சி.சங்கரசிவனார் என்னும் இசையறிஞரிடம் இசையியல், காலக்கணக்கியல், கஞ்சிரா முழக்கம் பற்றிப் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பாடம் கேட்டவர்.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பல நிறுவனங்களில் பணிபுரிந்தாலும் அவருக்கு எங்கும் ஓய்வுஊதியமோ, பொருந்திய ஊதியமோ கிடைக்கவில்லை. பற்பல ஊர்களில் நடைபெறும் இசை ஆய்வரங்குகளில் உரையாற்றியும், ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தும் தம் இசை ஈடுபாட்டை நிலைநிறுத்தி வந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் இசை ஆய்வு அறிஞராகப் பணிபுரிந்தார். தாம் பல காலமாக எழுதிவந்த கட்டுரைகளைத் தொகுத்துத் தமிழிசைவளம் என்னும் பெயரில் நூலாக்கினார். பல்கலைக்கழக வெளியீடாக அந்நூல் வெளிவந்தது.

  தருமையாதீன நிகழ்ச்சியொன்றில் அந்நாள் பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் ச.முத்துக்குமரனாரைக் கண்டதாகவும் அவர்தம் விருப்பப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (1988-2000) பணிபுரிய வாய்ப்பு அமைந்ததையும் வீ.ப.கா.சுந்தரம் குறிப்பிடுவதுண்டு.

   பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியேற்றது முதல் அவர் பல்லாண்டுகளாகத் தொகுத்து ஆய்வுசெய்து கண்ட முடிவுகளை நான்கு தொகுதிகளாகத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் என்னும் பெயரில் வெளியிட்டார். பன்னிரண்டு ஆண்டுகள் முயன்று இந்நான்கு தொகுதிகளும் வெளிவந்தன. எனினும் இத்தொகுதிச் செய்திகள் யாவும் ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கும் மேலான உழைப்பாகவும், கண்டுபிடிப்பாகவும் கொள்ளுதல் தகும். மொத்தம் 2232 தலைமைச் சொற்கள் இக் கலைக்களஞ்சியத்தில் மயக்கமற விளக்கப்பட்டுள்ளன. இன்னும் பல ஆயிரம் கிளைச்சொற்களும் போகிற போக்கில் இசைமேதை அவர்களால் விளக்கப்பட்டுள்ளதைத் தமிழிசை வல்லார் உணர்வர். இந்தியாவிலும், தமிழகத்திலும் வெளிவந்துள்ள இசைக் கலைக்களஞ்சியங்களில் இந்நூலே மிகப்பெரிய நூலாகும்.

  வீ.ப.கா.சுந்தரம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் களஞ்சியப்பணி நிறைவுற்றதும் மதுரையில் பசுமலையில் அமைந்த அவர்தம் ஞானசம்பந்தர் மனையில் இசையாய்வுகள் நிகழ்த்திவந்தார். இறுதியாக முறம்பு என்னும் ஊரில் அமைந்திருந்த பாவாணர் கோட்டத்தில் உரை நிகழ்த்தி வந்த சில நாளில் ( 09.03.2003) இயற்கை எய்தினார். அவர்தம் தமிழுடல் பசுமலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

  தமிழிசைக் கலைக்களஞ்சியத்தின் நான்கு தொகுதிகளுள்ளும் இசை,நாட்டியம், இசைக் கருவிகள், பாடல் இயற்றியோர் வரலாறு, பண்களின் தோற்றம், வளர்ச்சி, தாளக் கொட்டு, முழக்குமுறை மிகச்சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழிசை, நாட்டியம் குறித்த செய்திகளை, விளக்கங்களைத் தர வீ.ப.கா.சுந்தரம் பல்வேறு படங்கள், கட்டகங்கள், ஓவியங்கள் இவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.

  இசைவல்லார் இன்று பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களுக்கு வீ. ப. கா. சுந்தரம் அவர்கள் பலநூறு தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு பிடித்துள்ளார். தமிழ்க் கலைச்சொல் வரலாற்றிலும், வேர்ச்சொல்லாய்விலும் இவருக்குத் தனித்த இடம் உண்டு. தமிழிசைக் கலைக் களஞ்சியத்திற்குத் தமிழின் முதல்நூலான தொல்காப்பியம் தொடங்கி சங்க நூல்கள், சிலப்பதிகாரம், காரைக்காலம்மையார் பாடல்கள், பக்திப் பனுவல்கள், பெரியபுராணம், பிற்கால நூல்கள், தெலுங்கு, வடமொழி நூல்கள். உலகநாடுகளின் இசைகுறித்த நூல்கள் யாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு நம் வீ.ப.கா.சுந்தரம் விளக்கம் தந்துள்ளார். இதுநாள்வரை விளக்கம் பெறாமல் இருந்த பல்வேறு இசைக் கலைச்சொற்களைப் பல்லாண்டு பட்டறிவால் விளக்கிச் சென்றுள்ளமையை எதிர்காலத் தமிழகம் போற்றிச் சொல்லும்.


வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் நூல்கள்:


·        தமிசை வளம் (1985) ம.கா.பல்கலைக்கழகம்

·        பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்(1986) கழகம்

·        மத்தளவியல்(Art Of drumming),(1988 ) ஆசியவியல் நிறுவனம்

·        அருட்குறள்

·        பைந்தமிழ்ப் பயிற்று முறை

·        இன்றுள்ள இசைத்துறை வடசொற்களுக்குத் தமிழ்ச்சொல்

·        சிறுவர் இன்பம்

·        பஞ்சமரபு(1991) கழகம்

·        தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்(1994) உ.த.நி

·        பழந்தமிழ் இலக்கியத்தில் தாளமுழக்கியல்(1995), செல்வி பதிப்பகம்

·        ஆளுடைய பிள்ளையாரும் அருணகிரியாரும்

·        தமிழிசைக் கலைக்களஞ்சியம்

முதல்தொகுதி (1992)

இரண்டாம் தொகுதி (1994)

மூன்றாம் தொகுதி (1997)
              
நான்காம் தொகுதி (2000) பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியீடு.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் இசைத்துறைப் பங்களிப்பு

  வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் இசையை மறவாத இசைவாணர். தன் கைவிரல்கள் எந்த நேரமும் தொடைப் பகுதியில் தாளம் முழக்கிக் கொண்டிருப்பதை அருகில் இருந்தார் அறிவர். விழிப்பு, வினைப்பாடுகள், ஓய்வு, உறக்கம் எல்லா நிலைகளிலும் இசை, கூத்துப் பற்றிய நினைவில் இருப்பார். புல்லாங்குழல் இசைப்பதில் வல்லுநர். புல்லாங்குழல் தமிழரின் முதல் இசைக்கருவி என்பதும் முல்லைப் பண்ணே முதல் பண் எனவும் நிறுவியவர். முல்லை நிலத்துப் புல்லாங் குழலைக் கிறித்தவ தேவாலயங்களில் இசைக்கத் தொடக்க காலங்களில் இருந்த எதிர்ப்பைத் தன் அறிவால் தகர்த்து வாசித்ததை இசைமேதை அவர்கள் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார்.


  தாளக் கருவிகளை முழக்குவதில் தனியாத ஈடுபாடு கொண்டவர். ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி பார்க்கும்பொழுது அதில் இடம்பெறும் நாட்டிய நிகழ்ச்சிகளில் இடம்பெறும் இசைக்கட்டுகளை நுட்பமாகச் சுவைப்பவர். இசையரங்குகளில், பண்ணாராய்ச்சி மாநாடுகளில் உரையாற்றும் பொழுது எந்தச் சூழலிலும் தம் கருத்தைத் துணிவாக எடுத்துரைக்கும் ஆண்மையர். இவர்தம் கருத்துகளில் மாறுகொண்டவர்கள் தம்மை மீண்டும் அழைக்கவில்லை என்றாலும் தம்கொள்கையை வலியுறுத்திக்கொண்டே இருப்பார்.

  பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் நம் வீ.ப.கா.சுந்தரம் அவர்களை நன்கு மதித்துப் போற்றிய பெருந்தகையாளர். அருட்செல்வரிடத்து மிகுந்த மதிப்புக் கொண்டவர் வீ. ப. கா. சுந்தரம். பஞ்சமரபு நூலுக்குச் செப்பமான உரைவரையும் ஆற்றல் வீ. ப. கா. சுந்தரம் அவர்களுக்கு உண்டு என்பதை அறிந்த அருட்செல்வர் அவர்கள் அப்பணியை அவரிடம் வழங்கினார். அப்பணியை மிகத் திறம்படச் செய்தவர் வீ.ப.கா.சுந்தரம். அருட்செல்வர் நடத்தும் இராமலிங்கர் பணிமன்ற விழாக்களில் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்குப் பெருமை செய்யும் வகையில் உரையாற்ற வாய்ப்பு நல்குவார். ஆனால் தமக்கு இத்தகு வாய்ப்பினை அருட்செல்வர் வழங்குவதால் அவர்தம் கொள்கைகளை வீ.ப.கா.சுந்தரம் ஏற்றுக் கொண்டாரில்லை. வடமொழிச்சார்புக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்ப்பதாக வீ.ப.கா.சுந்தரம் அருட்செல்வரைப் பற்றிக் கூறும்பொழுது கூறுவார்கள். கருத்துநிலையில் இருவரும் வேறுபடுவார்களே தவிர ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டுவதில் நிகரின்றி விளங்கினர்.

வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பெற்ற சிறப்புகள்

  வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் இசையாய்வுகளை உணர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இவருக்குச் சிறப்புச்செய்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக இலங்கிய முத்தையா செட்டியாரின் பிறப்புமங்கல பரிசிலான உரூவா ஐம்பதாயிரம் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பண்ணாய்வு மன்றக் கூட்டங்களில் ஏழு ஆண்டுகள் இவர் ஆற்றிய உரைப்பொழிவுகள் விழாமலரில் இடம்பெற்றுள்ளன.

  அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் மூவர் தேவார இசைவிழாக்களில் வாய்ப்பு நல்கியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் சிறுவர் இன்பம் என்னும் வீ.ப.கா.சுந்தரம் நூலுக்கு வழகியுள்ள அணிந்துரையில் இவரை அறிஞர் எனவும் தம் நண்பர் எனவும் போற்றியுள்ளார். வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் தமிழிசை ஆய்வில் மதிப்புவைத்த அமெரிக்காவாழ் தமிழர்கள் இவரை அமெரிக்க நாட்டிற்கு அழைத்துச் சிறப்புச்செய்துள்ளனர். அமெரிக்கா முதலான நாடுகளுக்குச் சென்றபொழுது அங்குள்ள இசைக்கருவிகள், இசையமைப்பு முறைகள் முதலானவற்றைக் கற்றுவந்து தம் ஆய்வுநூல்களில் அவ்வறிவுச் செல்வங்களை வழங்கியுள்ளார். பல்வேறு கல்வி நிறுவனங்கள் இவரை அழைத்துத் தமிழிசை அறிவுச் செல்வத்தைப் பெற்றன.

வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் நெஞ்சில் நின்றவர்கள்

  வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் வாழ்க்கை ஆய்வுவாழ்க்கை. எனவே தம் குடும்பப் பணிகளைவிட ஆய்வுப் பணிகளில் மூழ்கிக் கிடந்தவர்கள். தம் நெஞ்சில் சில கொள்கைகளை வைத்திருந்தார். சில புதிய கண்டுபிடிப்புகளை வைத்திருந்தார். இவற்றோடு உடன்படுவோரை மேலாக மதித்தார். தம் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியான அறிஞர்களைக் கடவுளாகவே எண்ணி மதித்தவர். தாம் ஒரு கிறித்தவராக இருந்தும் தம் இல்லத்திற்குத் தமிழிசை முன்னோடிகளில் ஒருவரான தாளவேந்தர் என வீ.ப.கா.சுந்தரம் அவர்களால் போற்றப்பட்ட ஞானசம்பந்தர் பெருமானின் பெயரினைத் தம் மனைக்கு வைத்திருந்தார். அதுபோல் தமிழிசை மூவர்களான அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்துத்தாண்டவர் ஆகியோரைத் தம் எழுத்துகளில் உயர்வாகப் போற்றி எழுதியுள்ளார்.

  தமக்குப் பணி வழங்கித் தமிழிசைக் கலைக்களஞ்சியம் உருவாக்க காரணமாக அமைந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் முனைவர் ச.முத்துக்குமரனார், முனைவர் வீர. முத்துக்கருப்பன், முனைவர் பெ.செகதீசன். முனைவர் சி.தங்கமுத்து ஆகியோரை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் எஞ்ஞான்றும் மறந்தாரில்லை. அதுபோல் அறிஞர் வ.சுப.மாணிக்கனார், பேராசிரியர் தமிழண்ணல் பேராசிரியர் சீத்தா முதலானவர்களையும் மதித்தவர். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வ.சுப்பையாபிள்ளை, இரா.முத்துக்குமாரசாமி ஆகியோரையும் நன்கு மதித்தார். மருத்துவர் இரா.கலைக்கோவனிடத்து வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு நல்ல பற்றுமை இருந்தது.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் வழியில் இசையாய்வை இன்று நிகழ்த்துபவர்கள் நிர்மல்செல்வமணி, முனைவர் அரிமளம் பத்மநாபன், மதுரை மம்முது,. செ.அ.வீரபாண்டியன் முதலானவர்கள்.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் இசையாய்வு குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். பல கட்டுரைகளை வரைந்துள்ளார்.பல ஆய்வரங்குகளில் உரை நிகழ்த்தியுள்ளார். இன்னும் பல நூல்களை எழுதத் திட்டமிட்டிருந்தார். அவற்றுள் யாழ்பற்றிய நூலொன்று அவர் உள்ளத்தில் கருக்கொண்டிருந்தது. அது வெளிவராமல் போனது தமிழர்களின் போகூழேயாகும். எனெனில் ஒருமாலைப்பொழுதில் யாழ்பற்றிய பேச்சு வந்தது. மறுநாள் அவ் யாழ் பற்றிய கட்டுரையுடன் ஐயாஅவர்கள் வந்தமை எளியேனை வியப்படையச் செய்தது.

  தொல்காப்பியம், சங்க நூல்களில் இடம்பெறும் யாழ்குறித்த அனைத்துச் சொற்களையும் திரட்டி உருவம் கொடுத்திருந்தமையும் யாழ்நூலாரினும் புதிய உண்மைகள் சில இடம்பெற்றிருந்ததையும் அந்நாளில் கண்ட நினைவுகளுடன் இச் செய்தியைப் பதிவு செய்கிறேன்.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் கண்டுபிடிப்புகள் பலவும் அவர்தம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளன. நூல்வடிவம் பெறாமல் பல்வேறு ஏடுகளில் சிதறிக் கிடக்கும் அவர்தம் கட்டுரைகள் தொகுக்கப் பெறுவதும், நூலுருவம் பெறுவதும் காலத் தேவையாகும். ஏனெனில் இக்கட்டுரைகளில் பல்வேறு உண்மைகள் பொதிந்திருக்கக் கூடும். வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் தாமே பாடுதுறையை அறிந்தும், கருவியிசையை அறிந்தும், தாளம் பற்றிய பேரறிவு கொண்டும், தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சி கொண்டும், வேர்ச்சொல்லாய்வில் தோய்ந்தும், உலக இசைபற்றிய அறிவுகொண்டும், பயிற்றுவித்தலில் நற்றிறம் கொண்டும் விளங்கியதால் இவர்தம் களஞ்சியப் பணிக்கு நிகரான வேறொருவரின் உழைப்பை இசைத்துறையில் ஒப்புமைகாட்ட இயலாதவர்களாக உள்ளோம்.


வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் சில இசையாய்வு முடிவுகள்

  சிலப்பதிகாரப் பதிகவுரையை ஆய்வாளர்கள் முழுமையாக ஆராயாததால் பல்வேறு குழப்பங்கள் இசையாய்வுகளில் ஏற்பட்டுள்ளன. இப்பதிக உரையை முழுமையாக வீ.ப.கா.சுந்தரம் விளக்கியுள்ளார். பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட ஐந்து நிலங்களுக்கும் உள்ள இசையை இளங்கோவடிகள் தம் நூலில் குறிப்பிட்டுள்ளதை வீ.ப.கா.சுந்தரம் எடுத்துக் காட்டியுள்ளார். அவை : 1. முல்லையாழ், 2. குறிஞ்சியாழ், 3. மருதயாழ், 4. நெய்தல்யாழ் 5. சுடுபாலை. இவற்றின் இன்றைய பெயராக அரிகாம்போதி, நடபைரவி, கரகரப்பிரியா, தோடி, சங்கராபரணம் உள்ளதையும் வீ.ப.கா.சுந்தரம் கண்டுகாட்டியுள்ளார். பழங்காலத்தில் யாழ் என்றும், பின்னர்ப் பாலை என்றும் இன்று மேளகர்த்தா ராகம் என்றும் இசை வழங்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ளார்.

  தமிழகத்தின் தொன்மைக் காலத்தில் ஏழ்பெரும் பாலைகளுக்கும் தலைமையாக விளங்கியது செம்பாலையாகும். இது அடிப்படைப் பாலையாகவும் இருந்தது. இது சங்க காலத்தில் முல்லையாழ் (பெரும்பண்) என்னும் பெயரினைப் பெற்றிருந்தது. தலைமைச் சிறப்பால் பாலையாழ் எனவும் அழைத்தனர். பின்பு செம்பாலை எனப் பெற்றது. இன்று அரிகாம்போதி என்பது பண்டு செம்பாலை எனப்பட்டது. சிலம்பின் ஆய்ச்சியர் குரவையில் செம்பாலையை உரையாசிரியர்கள் அரிகாம்போதியின் நரம்புகளை உடையது எனத் தெளிவூட்டியுள்ளனர்.

  வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் பழந்தமிழ் நூல்களில் பொதிந்துகிடக்கும் இசையுண்மைகளை வெளிக்கொண்டு வந்ததுடன் இசையறிஞர்கள் தந்திருந்த சில தவறான விளக்கங்களையும் தம் நுண்ணறிவால் தெளிவுப்படுத் தியுள்ளார். பஞ்சமரபு நூலுக்கு அவர் வரைந்த நுண்ணுரை பல்வேறு புதிய இசையுண்மைகளை இசைத்துறைக்கு வழங்கியுள்ளது. இதுநாள்வரை விளக்கப்படாமல் இருந்த வரிக்கூத்தின் குலம் விளக்கம் பெற்றமை,யாழ் என்ற இசைக்கருவி காலந்தோறும் மாறிய விதத்தை விளக்கியுள்ளமை, காரைக்காலம்மையார்,  திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சேக்கிழார், அருணகிரியார் முதலானவர்களின் இசைத்தொண்டினை நினைவு கூர்ந்துள்ளமை, விளக்கியுள்ளமை இவரின் பெரும்பணியாகக் கொள்ளலாம்.

  இசைத்துறையில் பல்லாயிரம் தனித்தமிழ்ச் சொற்களை உருவாக்கித் தந்தமை, நாட்டிய முத்திரைகளை விளக்கியுள்ளமை, அரங்கேற்று காதையை விளக்கியுள்ளமை என இவர்தம் தமிழிசைப் பணியைப் பட்டியலிடலாம்.

சிலப்பதிகாரப் பதிகத்திற்கு அடியார்க்குநல்லார் வரைந்து காட்டியுள்ள உரை முறையில் பண்டைத்தமிழின் இசையிலக்கண முறை உள்ளதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் முதன்முதல் கண்டுகாட்டியுள்ளார். தமிழர்கள் பண்டைக் காலத்தில் இசை, நாட்டியம், கூத்துக் கலையில் வல்லவர்கள் என்பதைப் பழந்தமிழக இலக்கியச் சான்றுகளுடன் நிறுவ இவர்தம் நூல்கள் அடிப்படைச் சான்றாதாரங்களாக விளங்குகின்றன.

நன்றி : திண்ணை இணைய இதழ் 13.09.2007

ஞாயிறு, 16 செப்டம்பர், 2007

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்



 இருபதாம் நூற்றாண்டு தமிழ்மொழிக்கு ஏற்றம்தரும் நூற்றாண்டாக அமைந்திருந்தது.பனை ஓலைகளில் படிந்திருந்த தமிழ்மொழி அச்சுவடிவம் கண்டதும்,கணிப்பொறி,இணையத்தில் உலவியதும் இந்நூற்றாண்டில்தான் நடந்தேறியது.அதுபோல் பாரதியார்,பாரதிதாசன் முதலான பாவலர்கள் தோன்றித் தமிழ்க்கவிதை உலகைப் புதுப்பாதையில் வழிநடத்தியதும் இந்நூற்றாண்டில்தான் நிகழ்ந்தது. பலநூற்றாண்டுகளாகத் தமிழ்மொழியில் படிந்திருந்த பிறமொழிச் சொற்களைக் களைந்தெறிந்து தனித்தமிழ் இயக்கம் மக்கள்இயக்கமாக மாற்றம்பெற்றதும் இந்நூண்டில்தான் என்று எழுதினால் மிகையன்று.

 அத்தகு மொழிவளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகளைப் போல் பழந்தமிழ் நூல்கள் மக்களால் எளிதில் பயில்வதற்கு ஏற்றவகையில் உரை வரையப்பட்டும் பதிப்பிக்கப்பெற்றும் நாடு முழுவதும் பரவியதும் இருபதாம் நூற்றாண்டில்தான் நடந்தன. இவ்வாறு உரைவரையும் பெரும்பணியில் தமிழகத்து அறிஞர்கள் பலர் ஈடுபட்டுத் தம் அறிவையும் உழைப்பையும் நல்கி என்றும் தமிழகமக்களால் நினைக்கும்படியான அழியாப்புகழைப் பெற்றுள்ளனர்.அவ்வறிஞர் பெருமக்களுள் என்றும் தலைமேற்கொண்டு போற்றும்படியான பெருமைக்கு உரியவராகப் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் விளங்குகிறார். அவர்தம் தமிழ் வாழ்வையும் உரைப்பணிகளையும், படைப்பாக்கங்களையும் இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

சோமசுந்தரனாரின் இளமைவாழ்க்கை

 சோமசுந்தரனார் தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேலைப்பெருமழை என்னும் ஊரில் 1909 செப்டம்பர் ஐந்தாம் நாள் பிறந்தவர்.இவர்தம் தந்தையார் பெயர் வேலுத்தேவர் என்பதாகும்.தந்தையார் உழவர்.திண்ணைப்பள்ளி வரை கற்றவர்.தம்மகனும் திண்ணைப்பள்ளிவரை கற்க இசைந்தார்.

 அக்காலத்தில் சோமசுந்தரனார் திண்ணைப்பள்ளியில் வழக்கமாகக் கற்பிக்கும் அரிச்சுவடி, ஆத்திசூடி, வெற்றிவேற்கை,நிகண்டுநூல்கள்,நைடதம், கிருட்டிணன்தூது,அருணாசலப்புராணம் முதலான நூல்களைக் கற்கும் வாய்ப்பினை முதல் ஐந்தாண்டுகளில் பெற்றார்.அதன்பிறகு சோமசுந்தரனார்க்குக் கற்கும் ஆர்வம் இருந்தாலும் தம் மகனை உழவுத்தொழிலில் ஈடுபடுத்தவே தந்தையார் விரும்பினார்.எனவே தந்தையாரின் கண்ணில்படாமல் தமிழ் நூல்களைப் படிக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டார்.

 திண்ணைப் பள்ளியில் சோமசுந்தரனார்க்குப் பயிற்றுவித்த ஆசிரியர்க்கு வில்லிபாரதம் உள்ளிட்ட நூல்களில் நல்ல பயிற்சி இருந்தது.அவ்வாசிரியப் பெருந்தகை பாரதச் சொற்பொழிவு செய்யும் ஆற்றல்பெற்றவர். அவர்தம் ஆளுமை நம் சோமசுந்தரனாரை ஆட்கொண்டது.அவர்போல் நம் புலவரும் படிக்க விரும்பிப் பெற்றோர்க்குத் தெரியாமல் மடம்,கோயில் போன்ற இடங்களுக்குச் சென்று தனித்திருந்து படித்தார். இராமாயணம்,பாரதம் முதலான நூல்களைப் படிப்பதில் கவனம் செலுத்தினார்.

 சோமசுந்தரனார்க்குப் பத்து அகவை ஆகும்பொழுது இவர்தம் அன்னையார் மறைந்தார். தந்தையார் மறுமணம் செய்துகொண்டதால் சோமசுந்தரனார் தம் தாய்மாமன் இல்லத்தில் தங்கியிருந்தார்.அங்கும் இவர் கல்விபயில ஒத்துழைப்பில்லாமல் போனது.

மேலைப்பெருமழைக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் வாழ்ந்த சர்க்கரைப்புலவரிடம் தம் புலமைநலம் தோன்ற சில பாடல்களை எழுதிச்சென்று காட்ட சோமசுந்தரனாரின் கவிபுனையும் ஆற்றலையும் கல்வி ஆர்வமும் கண்ட சர்க்கரைப்புலவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று பயிலப் பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.

சோமசுந்தரனாரின் அண்ணாமலைநகர் வாழ்க்கை

 தமிழின் மீதும் தமிழ் இலக்கியங்களின் மீதும் அளவிலா ஈடுபாடு கொண்டிருந்த சோமசுந்தரனார்க்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகப்பெரிய அமுதசுரபியாகத் தமிழறிவை வழங்கியது.இவர் பயின்ற காலத்தில் சோழவந்தான் கந்தசாமியார்,விபுலானந்தர் அடிகள்,பண்டிதமணி கதிரேசன் செட்டியார். பொன்னோதுவார்,பூவராகன் பிள்ளை முதாலான பேரறிஞர்கள் தமிழ்பயிற்றுவிக்கும் பணியில் இருந்தனர்.

 அண்ணாமலைப்பல்கலையில் பயிலும் மாணவர்குக்கு அந்நாளில் வழங்கப்பட்ட பன்னிரு உரூவா உதவித்தொகையைக் கொண்டு நம் புலவர் படிக்க வேண்டியிருந்தது.குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாகச் சோமசுந்தரனார் கல்வி பயில்வதால் குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாமல் போனது.

 எனவே பல்கலைக்கழகத்திலிருந்து மூன்றுகல் தொலைவிலிருந்த நண்பர் ஒருவருடன் தங்கித் தாமே சமைத்துண்டு ஐந்தாண்டுகள் வறுமையோடு தமிழ்படித்ததார். அக்காலத்தில் சோமசுந்தரனார்க்குப் பேராதரவாகப் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் முதலானவர்கள் இருந்துள்ளதைப் பண்டிதமணி வரலாறு எழுதும்போது சோமசுந்தரனார் நன்றிப்பெருக்குடன் பின்வருமாறு எழுதுவார்:

...யான் பண்டிதமணியவர்கள் இல்லத்தே இரண்டாண்டுகள் ஊடாடிப்பழகும் பேறுபெற்றேன்.என்பால் பண்டிதமணியவர்களும் திரு.ஆச்சியார் அவர்களும் பிள்ளைமுறைகொண்டு அன்பு பூண்டொழுகினர்...(பக்.46)

...அக்காலத்தில் யான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தே ஒரு தமிழ்மாணவனாக இருந்தேன்.பண்டிதமணியவர்கள் அரசர் வேண்டுகோட் கிணங்கிப் பல்கலைக்கழகத்திற்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி பரவியபொழுது என்போன்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை....( பக.50)

 1941 ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே தமிழாராய்ச்சிப் பகுதியில் அறிவுரை தருநர் (அட்வைசர்) என்னும் சிறந்த பதவியை ஏற்று அண்ணாமலைநகரில் இருந்து பணிபுரிந்துவந்தார்கள்.

 ...வடமொழியிலே சாணக்கியர் என்னும் பேராசிரியராலே ஆக்கப்பெற்ற கொளடலியம் என்னும் பொருள்நூலைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்கள். இம் மொழிபெயர்ப்புப் பணியில் யானும்,ஒரு வடமொழிவாணரும் நம் பண்டிதமணியார்க்கு அருகிருந்து துணைசெய்யுமாறு நியமிக்கப்பட்டோம். அக்காலத்தே அவர்களுடன் நனி அணுக்கனாயிருந்து எளியேன் எய்திய நலங்கள் மிகப்பல (பக்.93,94).

 சோமசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேறினார். சோமசுந்தரனார் தமிழறியவே கல்வி கற்க வந்தாரேயன்றி வேலைக்குச் செல்லும் வேட்கையில்லாதவர். எனவே தமிழறியாத அந்நாளைய ஆளுநர் எர்சுகின் பிரபு கைகுலுக்கி வழங்கிய புலமைச் சான்றை (டிப்ளமோ)க் கிழித்துக்காற்றில் பறக்கவிட்டு ஊர்சென்றார்.

குடும்பம்

 சோமசுந்தரனார் ஊரையடைந்து தம் முன்னோர் தொழிலான வேளாண்மைத்தொழிலில் ஈடுபட்டார்.தம் மாமன் மகளான மீனாம்பாள் என்பவரை மணம்செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.

 அண்ணாமலை நகரில் இருந்த தம் ஆசிரியப் பெருமான் பண்டிதமணியாரைப் பார்க்க ஒருமுறை சென்றபொழுது அவர் வரைந்த திருவாசக உரைப்பணியில் இவரை ஈடுபடுத்தினார்.நாற்பது உருவா ஊதியத்திற்குப் பண்டிதமணியார் உரைசொல்லவும் அதனை எழுதிவழங்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பண்டிதமணியாருடன் பணிசெய்து உரைவரையும் போக்கினைத் தெரிந்துகொண்ட சோமசுந்தரனார்க்குப் பின்னாளில் உரை வரையும் வாய்ப்புத்தேடி வந்தது. பண்டிதமணியாரின் உரைப்பணி நிறைவுற்றதும் சோமசுந்தரனார் மீண்டும் உழவுப் பணியில் கவனம் செலுத்தினார்.

 உள்ளூர் அன்பர்கள் விருப்பத்திற்கு இணங்க, சில கட்டுரைகளையும், நாடங்களையும் வரைந்த புலவருக்குக் கருப்பக்கிளர் சு.அ.இராமசாமி அவர்கள் வழியாகத் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தொடர்பு அமைந்ததும் அதுநாள்வரை எரிமலைபோல் உள்ளுக்குள் இருந்த புலமை நலம் யாவும் பல்வேறு உரை நூல்கள் வழி உலகெங்கும் பரவின.

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் தொடர்பு

 சோமசுந்தரனார்க்கு மருதவனம் கு.குருசாமி என்பவர் நண்பராக விளங்கினார். அவர்கள் வழியாக அந்நாளில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த புலவர் சு.அ.இராமசாமி அவர்களைக் கண்டு கழகத்தின் தொடர்பைப் பெற்றார்.முதலில் சோமசுந்தரனாரின் படைப்பு நூல்களான செங்கோல் (நாடகம்), பண்டிதமணி, பெருங்கதை மகளிர், மானனீகை (நாடகம்) முதலியன வெளிவந்தன. சு.அ.இராமசாமி அவர்களுடன் இணைந்து சூளாமணிக்கு உரை வரையத் தொடங்கினர். அதன் பிறகு சங்க நூல்களுக்கும் பிற நூல்களுக்கும் சோமசுந்தரனார் உரைவரையவும், விளக்கவுரை வரையவும் வாய்ப்பினைப் பெற்றார்.

 அவ்வகையில் 1. சிலப்பதிகாரம், 2. மணிமேகலை,  3. அகநானூறு, 4. பெருங்கதை, 5.உதயண குமாரகாவியம், 6. வளையாபதி, 7. குண்டலகேசி, 8. நீலகேசி, 9. ஐங்குறுநூறு, 10. புறப்பொருள் வெண்பா மாலை, 11. கல்லாடம், 12. பட்டினத்தார் பாடல், 13. பரிபாடல், 14. குறுந்தொகை, 15. நற்றிணை (பின்னத்தூர் நாராயணசாமி உரைக்கு விளக்கம்), 16. பத்துப்பாட்டு,  17.சீவக சிந்தாமணி, 18.கலித்தொகை (நச்சினார்க்கினியர் உரைக்கு விளக்கம்), 19. திருக்கோவையார் (பேராசிரியர் உரைக்கு விளக்கம்) முதலிய நூல்களுக்கு இவர்தம் உரையும், விளக்கமும் அமைந்துள்ளன.

 சோமசுந்தரனார்க்கு உரைவரையும் ஆற்றல் அமைந்ததுடன் உரைநடை எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். பெருங்கதையை உரைநடையாக வரைந்துள்ளமை இதற்குச் சான்றாகும்.

 சோமசுந்தரனார் பாடல் இயற்றுவதிலும் வல்லவர் என்பதற்குச் சான்றாக 1952 இல் புயல்பற்றி இவர் பாடிய பாடல்களும்,1966 இல் மழைபெய்யாமல் வறட்சி ஏற்பட்டபொழுது மழைவேண்டி இவர் பாடிய பாடல்களும் சான்றாக விளங்குகின்றன.

 சோமசுந்தரனாரின் படைப்பு நூல்கள், உரைநூல்கள்,உரைநடை நூல்கள், கட்டுரைகள் முதலானவற்றைக் கற்கும்பொழுது அவர்தம் தனித்திறமைகளை ஒருவாற்றான் உணரமுடியும். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களின் பழுத்த தமிழறிவு இரண்டு அறிஞர்கள் வழியாக இத் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளதை இங்கு நினைவிற்கொள்ள வேண்டும். மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் ஒருவர்.மற்றவர் நம்புலவர் பெருமான் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்.இவ்விரு அறிஞர்களின் எழுத்துகளையும் ஆராய்ச்சிகளையும் ஊன்றிக்கற்றால் மிகச்சிறந்த தமிழாளுமை தெரியவரும்.

 நம் சோமசுந்தரனாரோ இலக்கண நூல்கள், சங்க நூல்கள், காப்பியங்கள், பக்திநூல்கள், உரையாசிரிர்களின் பேருரைகள், தனிப்பாடல்கள், சிற்றிலக்கியங்கள் யாவற்றையும் கரைகண்டுள்ளமை அவர்தம் தமிழ்க் கொடைகளின் வழிபுலப்படுகின்றது. அடியார்க்குநல்லலார், சேனாவர்யர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், பின்னத்தூர் நாராயணசாமியார் முதலான உரையாசிரியப் பெருமக்கள் விளக்கம் கூறாத பல இடங்களை விளக்கிச் செல்வதும், பொருத்தம் இல்லாத இடங்களை எடுத்துரைப்பதும், கூடுதல் விளக்கம் தருவதும், சரியான விளக்கம்தர முயன்றுள்ளதும் எண்ணி எண்ணி வியப்புறும் தகுதிப்பாடுகளாம்.

 தமக்குத் தெரியாத,தொடர்பில்லாத சில மதம், சமயம், இசை, கூத்து சார்ந்த பகுதிகளுக்கு விளக்கம் எழுதுவதற்கு அத்துறை வல்லாரை அணுகி உரை வரைந்துள்ளமை அவர் தமிழ் இலக்கியங்கள்மேல் கொண்டிருந்த பற்றிற்குச் சான்றாகும். அவ்வகையில் நம் புலவர்பெருமான் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு உரைவரையும்பொழுது இசைப்பேரறிஞர் இராமநாதனாரிடம் இசை நுணுக்கங்களை அறிந்ததை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும் (திரு.இரா.முத்துக்குமாரசாமி அவர்களுடன் நேர்காணலில், நாள்: 01.09.2007).

 உரைநடை வரைந்தபொழுதும், உரை வரைந்தபொழுதும் பன்னூறு நூல்களை மேற்கோள்காட்டிச் செல்லும் திறம் அவரின் ஆழ்ந்த கல்விப் பரப்பிற்குச் சான்றாகும். இடையிடையே இலக்கணக் குறிப்புகளை அமைப்பது சொற்பொருள் வரைவது, இலக்கியத்தின் இனிய பகுதிகளைப் படிப்பவர்க்கு எடுத்துக்காட்டிக் கதை நிகழும் இடத்தை மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்துவது இவரின் தனி இயல்பாக உள்ளது.

 சோமசுந்தரனாரின் படைப்புகள், உரைச்சிறப்புகள், உரையாளுமை, உரைவரைதலில் மேற்கொண்ட நுட்பங்கள், இவர்தம் உரைப் பணிக்குத் தமிழுலகில் உள்ள இடம் ஆகியன முறையே ஆராய்ச்சி செய்யப்பெறல் வேண்டும்.

 தம் பிறந்த ஊரான மேலைப்பெருமழையில் இருந்தவாறே பழந்தமிழ் நூல்களுக்குப் பல்லாண்டாக உரைவரைந்து சென்னைக்கு அனுப்பி வந்தார். இத்தகு தமிழ்ப்பணியில் சோமசுந்தரனாரை ஈடுபடுத்திய கழக ஆட்சியர் வ.சுப்பையாபிள்ளை அவர்கள் என்றும் தமிழ் உலகத்தினரால் போற்றத்தக்கவர்.

 சோமசுந்தரனார் பல ஆண்டுகளாக உரைவரைந்ததால் உடல்நலம் போற்றவில்லை.உடல் பாதித்தது. ஏறத்தாழ நான்காண்டுகள் வலக்கையில் கடுப்பு ஏற்பட்ட அந்த நேரத்திலும் தாம் உரைசொல்ல பிறரை எழுதச்செய்து அனுப்பி வந்தார். மூச்சுத் திணறல் முதலான நோய்கள் புலவரை வாட்டின. பல்வேறு மருந்துகளை உட்கொண்டு வந்தார். இதன் காரணமாகவோ என்னவோ பக்கவாதம் என்னும் நோய் கடுமையாகத் தாக்கியது.

 புதுவை சிப்மர் மருத்துவமனையில் 21.12.1971 இல் சேர்க்கப்பட்டு உணர்விழந்த நிலையில் பலநாள் இருந்த நம் புலவர் பெருமான் சோமசுந்தரனார் 03.01.1972 இல் இயற்கை எய்தினார்.

 சங்கப் புலவருக்கு நிகரான ஆற்றலைப் பெற்றிருந்தும் ஆசிரியர் பணியிலோ பிற மேடைப் பேச்சுப் போன்ற ஆரவாரப் பணிகளிலோ ஈடுபடாமல் தமிழ் நூல்களைத் தமிழர்கள் அனைவரும் கற்கவேண்டும் அதன் வழியாகப் பழந்தமிழகம் பற்றி மக்கள் அறியவேண்டும் என்ற ஒரே நோக்கில் வாழ்ந்த சோமசுந்தரனாரின் புலமையை மதிக்கும் வண்ணம் அவர் பெயர் என்றும் நின்று நிலவத் தக்க வகையில் அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அவர்தம் பெயரைச்சூட்டி மகிழ்வது அப்புலவர் பெருமானுக்கு நாம் செய்யும் கைம்மாறாக அமையும்.

நன்றி: திண்ணை இணைய இதழ் 06.09.2007

ஞாயிறு, 2 செப்டம்பர், 2007

மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கவிழா...

தமிழக மக்கள் தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பெரும் வணிக நிறுவனங்கள் திரைப்படம், பாடல், திரைப்பட நடிகர், நடிகைகளைப் பயன்படுத்திப் பல்வேறு வகைகளில் பண்பாட்டுச் சீரழிவுகளை நடத்தினர். இச்சூழலில் தமிழ் உணர்வாளர்கள் விரும்பிய வண்ணம் ஒரு தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி என்னும் பெயரில் மருத்துவர் இராமதாசு அவர்களால் உருவானதும் உலகத் தமிழர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள். அதன் நிகழ்ச்சிகள் தரமானதாகவும், தமிழ்ப் பண்பாட்டை எடுத்துக் காட்டுவதாலும், குடும்பத்துடன் பார்த்து மகிழும் வண்ணம் இருப்பதாலும் இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆவலுடன் பார்த்துவருகின்றனர்.

தன் முதலாண்டு வெற்றிப்பயணத்தை முடித்த மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கவிழா சென்னையில் நடைபெற உள்ளது.

இடம் : காமராசர் அரங்கம்,தேனாம்பேட்டை,சென்னை-18

நாள் : 06.09.2007

நேரம் : மாலை 4.00 மணி

கலை நிகழ்ச்சிகள் மாலை 4.00 மணிக்கு

பாராட்டு விழா மாலை 6.00 மணிக்கு

இரண்டாம் ஆண்டுத் தொடக்கவிழா இரவு 8.00 மணிக்கு...

நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டும், பொறுப்பாளர்களுக்குப் பாராட்டும் நடைபெறுகிறது. தொடக்கவிழாவில் நடுவண் தகவல் மற்றும் செய்திஒளிபரப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு பிரியரஞ்சன்தாசு முன்சி, மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணிஇராமதாசு கலந்துகொள்கின்றனர்.

தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி முதலானவர்களும் பழ.நெடுமாறன். எம்.கிருட்டிணசாமி, வரதராசன், இரா.நல்லகண்ணு, தொல். திருமாவளவன், காதர் மொய்தீன் முதலான அரசியல் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

அழகின்சிரிப்பு என்னும் குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் நிறைவுரையாற்றுவார்கள்.

தொடர்புக்கு

மின்னஞ்சல்: info@makkal.tv
இணையம் : www.makkal.tv

மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா