நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 30 ஜூன், 2011

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் பார்வையிடல்…

 
எம்.ஐ.டி. தொடர்வண்டி நிலையம் 
 
 அமெரிக்கா என்றால் கற்றோருக்கு நினைவுக்கு வருவது ஆர்வர்டு பல்கலைக்கழகமாகும். உலகின் இருநூறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் இருப்பது ஆர்வர்டு பல்கலைக்கழகமாகும். அனைத்து வசதிகளையும் கொண்ட பழைமையான பல்கலைக்கழகம் இதுவாகும். அதுபோல் எம்.ஐ.டி. பல்கலைக்கழகமும் உலகப் புகழ்பெற்றது. இரண்டையும் இன்று பார்த்து மகிழ்வது என்ற பூரிப்பில் எங்கள் மகிழ்வுந்து புறப்பட்டது. 
 
  ஒரு தொடர்வண்டி நிலையத்தில் எங்கள் மகிழ்வுந்தை நிறுத்திவிட்டு அடுத்துத் தொடர்வண்டியில் புறப்பட்டோம். தொடர்வண்டி நிலையத்தில் சீட்டு பெறுதல் தானியங்கியில் நடக்கின்றது. உரிய இடத்தைத் தேர்ந்து கடனட்டையை உள்ளிட்டால் சீட்டு கையினுக்கு வந்துவிடும். அதனை எடுத்துச்சென்று வாயிலில் உள்ள பொறியில் காட்டினால் வழிவிடும். ஒரு சீட்டைக் காட்டி இரண்டு மூன்றுபேர் சென்றுவிடமுடியாது. அத்தகு பேர்வழிகளைக் காவலர்கள் கண்காணிக்கின்றனர். எங்கும் தூய்மையாகக் காணப்படும் தொடர்வண்டி நிலையத்தின் வனப்பைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றோம். 
 
  தொடர்வண்டி வந்தது...  நண்பர் பாலா ஒவ்வொரு செய்தியாகச் சொல்லி எனக்கு வியப்பைப் பன்மடங்காக்கினார். முதலில் எம்.ஐ.டி என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் வாயிலில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினோம். தொடர்வண்டி நிலையத்தில் எம்.ஐ.டி.யின் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகள், முதன்மை நிகழ்வுகள் படக்காட்சியாக எங்கும் உள்ளன. அரிய சில கண்டுபடிப்புகளும் நினைவுக்கு வைக்கப்பட்டுள்ளன. கல்விக்கு அங்கிருந்த முதன்மை கண்டதும் எனக்குப் பழைய நினைவுகள் நினைவுக்கு வந்தன. 
 
  புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் அருகில் தொடர்வண்டி, பேருந்து நிலைகள் இருப்பதும் ஆராய்ச்சிகள் வீதியில் விளம்பரப்படுத்தப்பட்டமையும் கண்டு என் தமிழ்நாட்டில் இத்தகு நிலை என்று வரும் என்று ஏங்கினேன். ஏனெனில் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழ்ப்பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் வாயில்களில் வெளியூர்ப் பேருந்துகள் இன்றும் நின்று போவதில்லை. நாங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது நடு இரவில் நிற்காத வெளியூர்ப் பேருந்தை மாணவர்கள் சிறைப்பிடித்து பல்கலைக்கழகத்தின் உள்ளேகொண்டுபோய் நிறுத்தியதும் மறுநாள் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் வந்து ஒப்பந்தம் பேசி பேருந்தை எடுத்துச்சென்றதும் நினைவுக்கு வந்தன. நம் நாட்டில் கல்விக்கு முதன்மை வழங்கும் நாள் என்று? என்ற நினைவில் எம்.ஐ.டி.வாயிலை அடைந்தோம். 
 
  அமெரிக்கக் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட வரும் உள்ளூர், வெளியூர் ஆர்வலர்கள், சுற்றுலாக்காரர்கள் மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிறுவனத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வளாகச் சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் எம்.ஐ.டி.யிலும் வளாகச்சுற்றுலா இருப்பதை முன்பே அறிந்திருந்தோம். 
 
  காலை 11. மணிக்கு எங்களுக்கு வளாகச் சுற்றுலா தொடங்கியது. அங்குப் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் எங்களுக்கு நெறியாளராக இருந்து பல்கலைக் கழகத்தின் ஒவ்வொரு துறை பற்றியும், நூலகம் பற்றியும், உடற்பயிற்சிக் கூடங்கள், புத்தகக்கடைகள், சிற்றுண்டி அங்காடிகள், மாணவர்கள் தங்கும் விடுதி, கட்டணம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். பேராசிரியர்களின் அறைகளை மெதுவாக எட்டிப் பார்த்தேன். இருவர் மூவர் அமரும்படியும் அல்லது தனிமையில் இருக்கும்படியும் கணினி, இணைய இணைப்பு உள்ளிட்ட ஏந்துகளுடன் அறைகள் இருந்தன. பார்வையாளர்கள் அமர்வதற்குத் தனி இருக்கைகள், மெத்தைகள் இருந்தன. 
 
  சில கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகள், நூலகங்களுக்குள் மாணவர்கள் ஆசிரியர்கள் தவிர வேற்று ஆட்கள் நுழைய இயலாதபடி நெறிமுறைகளை வகுத்துள்ளனர். அனைவருக்கும் இசைவுஅட்டை உண்டு. அவர்கள் இசைவு அட்டையை உள் நுழைத்துக் கமுக்கக் குறியீட்டைத் தட்டச்சிட்டால்தான் கதவு திறக்கும். அதன் பின்னரே உள் நுழையமுடியும். நூலகத்திலும் அன்னவாறே நடைமுறை. தூய்மைக்கும் ஒழுங்குக்கும் பெயர்பெற்ற அமெரிக்க மண்ணில் எங்கும் தூய்மை நிலவுகின்றது. கல்வி நிறைவனங்கள் பல மடங்கு பளிச்சிடுகின்றன. வகுப்பறைகள் பெரிய அளவில் உள்ளன. அனைத்தும் சிறந்த நாற்காலிகள் கொண்டும், எழுதுபலகைகள் கொண்டும் உள்ளன. 
 
  திரையரங்கு போல் மேலிருந்து கீழே உற்று நோக்குவதுபோல் வகுப்பறைகள் உள்ளன. எழுது பலகைகள் நம்மூரில் ஆசிரியர்கள் வந்த பிறகுதான் தூய்மை செய்யப்படும். மாணவர்கள் அடித்துத் தூய்மைப்படுத்தும்பொழுது அரிசி ஆலையில் தவிடு பறப்பதுபோல் வெள்ளைச்சுண்ணாம்பு நீறு பறக்கும். இங்குள்ள வகுப்பறைகளில் ஒரு பலகையில் எழுதிய பிறகு அந்தப் பலகையை மேலே இழுத்துவிடலாம். எழுதுவதற்கு அடுத்த பலகை ஆயத்தமாக இருக்கும். நான் பார்த்த வகுப்பறையில் பத்துப் பலகைகள் எழுதுவதற்கு இருந்தன. உயிரித்தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வுத்துறைகளின் ஆய்வுமாணவர்களும், பேராசிரியர்களும் கண்ணிமைக்காமல் தம் கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தினர். 
 
  முதலில் நாங்கள் மாணவர்களுக்கு உரிய உண்டிச்சாலையைக் கண்டோம். 24x7 என்ற கணக்கில் ஆண்டு முழுவதும் உண்டிச்சாலை திறந்திருக்குமாம். தேர்வுநாளில் மாணவர்கள் இரவு முழுவதும் படித்துவிட்டு விடியற்காலம் வந்து தேநீர் பருகுவது உண்டாம். நான் பணிபுரிந்த கல்விநிறுவனங்களின் சிற்றுண்டிச் சாலைகளை நினைத்தேன். எந்த அளவு பின்தங்கியுள்ளோம் என்று நினைத்துக்கொண்டேன். மாணவர்களுக்குரிய எழுதுபொருள்கள், ஆடைகள், உணவுகள் யாவும் உணவகத்தில் உண்டு. உடற்பயிற்சிக்கூடத்தையும் பார்வையிட்டோம் அங்குப் புகைப்படம் எடுக்க இசைவு இல்லை. ஆண், பெண் இருபாலாரும் நீந்துவதும் குளிப்பதுமாக இருந்தனர். சிறுவர்களும் நீச்சல் பயிற்சி பெறுகின்றனர். 
 
  மாணவர் விடுதிகளில் ஆண், பெண் இருவரும் இணைந்து தங்கியிருப்பது நடைமுறையாம். இருபதுக்கும் மேற்பட்ட மாணவர் விடுதிகளில் இதுதான் நடைமுறையாம். ஒரே ஒரு விடுதியைக் காட்டி அங்கு மட்டும் மாணவிகள் தனித்துத் தங்குகின்றார்கள் என்று எங்கள் நெறியாளர் குறிப்பிட்டார். முதலாண்டு மாணவர்கள் கட்டாயம் விடுதியில் தங்க வேண்டுமாம். இரண்டாம் ஆண்டில் வீட்டிலிருந்தோ, தனியாக அறை எடுத்தோ தங்கிப் படிக்கலாம். நம்மூர்க் கணக்கில் இளங்கலைப் பட்டம் பெற பதினைந்து இலட்சம் உருவா செலவாகும் என்று அறிந்தோம். கட்டணம் தவிர பிற செலவுகள் இந்தக் கணக்கில் வராது. மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு நடுவங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. தமிழகத்தின் ஒரு பல்கலைக் கழகத்தில் ஒரு துணைவேந்தர் கொண்டு வந்து சிறப்பாக நடத்திய நடுவத்தை அடுத்த துணைவேந்தர் மூடுவிழா நடத்தும் நிலைகள் மாற வேண்டும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பழைய மாணவர் சங்கங்களும் சிறப்பாகச் செயல்படுகின்றன. 
 
  ஒன்றரை மணி நேரத்தில் நாங்கள் எம்.ஐ.டி.கல்விச்சாலை முழுவதையும் சுற்றிப்பார்த்து ஓரளவு அங்குள்ள கல்வி நிலைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. எம்.ஐ.டி.கல்வி நிறுவனத்தின் உண்டிச்சாலையில் பகலுணவை முடித்துக்கொண்டோம். பெரும்பாலும் இந்திய உணவை நான் தேர்ந்தெடுப்பதுதான் வழக்கம். உணவில் கோழிக்கறி இல்லாமல் உணவு இருக்காது. துணைக்குக் கோழிக்கறியை வரவழைக்க வேண்டியிருந்தது. அமெரிக்க உணவகங்களில் உண்டதுபோக எஞ்சியவற்றை வீட்டுக்கு எடுத்து வந்துவிடலாம். சிலர் பாதியை உண்டுவிட்டு கையில் எடுத்துவந்து வழியில் உண்பதும் உண்டு. குளிர்க்குடிப்புகளைப் பாதி குடித்துவிட்டு, எஞ்சியதைக் கையில் கொண்டு வந்து உண்டோம். நண்பர் பாஸ்டன் பாலா அவர்கள் கல்வி நிறுவனத்தின் சிறப்புகளை மேலும் தாம் அறிந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்து வந்தார். 
 
  மாணவர்களின் கல்வியறிவுக்கு உரிய அனைத்து வசதிகளையும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தித் தருகின்றன. மாணவர்களும் அவற்றைத் தக்கபடி பயன்படுத்திக்கொள்கின்றனர். பகடிவதை (ரேகிங்) மாணவர்களிடம் உண்டா? என்று பாலாவிடம் வினவினேன். அப்படியென்றால் என்ன என்றே மாணவர்களுக்குத் தெரியாதாம். படிப்புடன் பண்பாட்டையும் கற்றுத்தரும் அமெரிக்கக் கல்விபோல் தமிழகத்திலும் கல்வித்துறையில் பண்பாட்டுக்கல்வி இணைக்கப்பட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்… 
 
எம்.ஐ.டி.நூலகம் அருகில் எம்.ஐ.டி.யில் ஒரு கட்டடம் 
 
இறைவழிபாட்டுக் கூடம் ஒளிநுட்பம்கொண்ட புதிய கட்டடம் 
 
உணவகம் அருகில் 
 
வகுப்பறை 
 
எம்.ஐ.டி முகப்பில் மு. இளங்கோவன்

புதன், 29 ஜூன், 2011

பாஸ்டன் செலவு…

23.06.2011 நாள் முழுவதும் ஓய்வு கிடைத்தது. மருத்துவர் சித்தானந்தம் ஐயா மருத்துவத் துறை சார்ந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. நான் அவர்களின் வீட்டில் இருந்தபடி இணையம் வழியாக என் நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் தொடர்புகொண்டு அமெரிக்க வருகையின் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டேன். பிற்பகல் நான்கு மணியளவில் மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் தம் கடமைகளை முடித்துக்கொண்டு இல்லம் திரும்பினார்கள். காத்திருந்த நான் அவர்களுடன் பால்டிமோர் வானூர்தி நிலையம் சென்றேன். இடையில் சில கடைகளைக் காட்டியும் சில பொருள்களைக் காட்டியும் ஐயா அவர்கள் எனக்கு வியப்பூட்டினார். தம் அன்புப் பரிசிலாக ஒரு காணொளிக் கருவி ஒன்றை வாங்கி என் பையில் வைத்தார்கள்.

நான் பாஸ்டன் என்ற நகருக்குச் செல்வதால் உள்ளூர் வானூர்திகளில் மிகைச்சுமை கூடாது என்று என் ஒரு பெரும் பையைத் திரு. முத்து அவர்களின் இல்லத்தில் வைக்கும்படியும் மீண்டும் நான் அவர்கள் வீட்டிற்கு வருவதால் அங்கு அதனை எடுத்துக்கொண்டு அடுத்த ஊருக்குச் செல்ல இயலும் என்றும் மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களிடம் வேண்டிக் கொண்டேன். அதன்படி பின்னர் ஐயா அவர்கள் முத்து அவர்களின் இல்லத்தில் என் பையைச் சேர்த்ததை அறிந்தேன்.

மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்கள் வானூர்தி புறப்படவும், அடுத்த இடம் நோக்கிச் செல்வதற்குள் நடு இரவு ஆகும் என்றும் ஓர் இந்திய உணவகத்தில் உண்ணுவதற்கு அழைத்துச் சென்றார்கள். சிற்றுண்டியை முடித்துக்கொண்டு வானூர்தி நிலையம் வந்து சேர்ந்தோம். எனக்குரிய செலவுத்திட்டத்தை உறுதிப்படுத்திக்கொண்டோம். என் செலவு உறுதிப்படுத்தப்பட்டது. ஐயாவிடம் பிரியாத விடைபெற்றேன். முன்னாளில் என் ஆய்வுப் பணிக்கு உதவியும், இப்பொழுது ஒரு வரவேற்பு நல்கியும் தங்குவதற்கு உதவியும் துணைநின்ற மருத்துவர் சித்தானந்தம்-முனைவர் குணா இணையர் என் வாழ்நாளில் என்றும் நினைக்கத்தகுந்த செம்மல்களே ஆவர். அவர்களுக்கு நன்றி கூறி வானூர்தி நிலையத்தின் பாதுகாப்பு ஆய்வுக்கு என்னை உட்படுத்திக்கொண்டேன்.

நம் ஊர் அன்பர்கள் பாதுகாப்பு ஆய்வு குறித்து எனக்குப் பல முன் நிகழ்வுகளை நினைவூட்டி அச்சமூட்டினர். ஆனால் அவர்கள் குறிப்பிட்டதுபோல் எத்தகு இடையூறும் இல்லாமல் என் பாதுகாப்பு ஆய்வு நிறைவுற்றது. எங்கள் வானூர்தி புறப்படும் வாயில் அருகில் வந்து வானூர்தி வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன். வானூர்தி நிலைய அதிகாரி ஒர் அம்மையார் கனிவுடன் மறுமொழி கூறினார். அருகில் இருந்த ஒரு தம்பி அவரும் பாஸ்டனுக்கு வரும் வானூர்தியில் செல்ல உள்ளதை அறிந்து அவரிடம் எனக்கு வானூர்தி வந்ததும் நினைவூட்டும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் உதவினார்.

குறித்த நேரத்தில் வானூர்தி வந்தது. சிறிது நேரத்தில் நாங்கள் வானூர்தியில் அமர்வதற்கு இசைவு தந்தனர். ஒருவர் பின் ஒருவராகச் சென்று அமர்ந்தோம். ஒருவர் செல்லும் வரை காத்திருந்து மற்றவர் செல்வதும், சிறு குறைபாடுகள் நேர்ந்தால் மனமுருகி வருத்தம் தெரிவிப்பதும் அமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள். வானூர்தியில் எனக்கு இருபக்கமும் இருவர் அமர்ந்திருந்தனர். நடுவில் நான் அமர்ந்திருந்தேன். இடப்பக்கம் இருந்தவர் தேர்வுக்குப் படிப்பவர்போல் படிப்பதில் கவனம் செலுத்தினார். இன்னொருவர் இளைஞர். அமர்ந்த சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். அவர்க்குச் சிற்றுண்டி உண்ணக்கூட விருப்பம் இல்லை போலும்!.

நான் வானூர்திப் பணியாளர் தந்த சிற்றுண்டியையும் பழச்சாறையும் அருந்தினேன். மெதுவாகப் பத்து மணித்துளிகள் கண்ணயர்ந்தேன். விழித்த சிறிது நேரத்தில் பாஸ்டன் வானூர்தி நிலையத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்தமை நினைவுக்கு வந்தது. சிறிது நேரத்தில் எங்கள் வானூர்தி தரையிறங்கியது. அனைவரும் முறையாக இறங்கி வெளியேறினோம். செலவு மேற்கொள்வோர் பொருள்கள் எடுக்கும் இடத்தில் நண்பர் பாஸ்டன் பாலா காத்திருந்தார். மிக எளிதாக என்னை அடையாளம் கண்டுகொண்டார். இருவரும் வெளியேறி மகிழ்வுந்து நிறுத்தும் இடத்திற்குச் சென்றோம். ஒருவருக்கொருவர் நலம் வினவியபடியே வண்டியை அடைந்தோம்.

வண்டியில் ஏறி அமர்ந்த பிறகு மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்துவிட்டேன் என்று சொல்ல நினைத்தேன். என் கைப்பையை வண்டியின் பின்புறத்தில் வைத்து முன் இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன். அந்தப் பையில்தான் தொலைபேசி எண்கள் இருந்தன. மீண்டும் இறங்கி அந்தத் தாளினை எடுத்துக்கொண்டு மீண்டும் பையை இருந்த இடத்தில் வைத்து வண்டியை எடுத்துக்கொண்டு வந்தோம்.

வண்டியில் அமர்ந்த இருவர் மீண்டும் வண்டியை விட்டு இறங்கி ஏதோ பொருள்களை எடுப்பதும் பேசுவதும் மீண்டும் வைப்பதுமாக இருப்பதைத் தொலைதூரத்தில் காணொளிக் கருவியால் கண்டுணர்ந்த காவலர்களின் உற்றுநோக்கலுக்கு எங்கள் வண்டி உள்ளாகியதைப் பின்னர்தான் உணர்ந்தோம். அதன் அறிகுறியாக எங்கள் வண்டியை நோக்கிக் காவலர் ஒருவர் முன்னேறி வந்து வண்டியில் உள்ளவர்கள் அதன் உரிமையாளர்களே என்று நினைத்து எங்களை ஒன்றும் கேட்காமல் நின்றுகொண்டிருந்தார். அமெரிக்கக் காவல்துறையின் நுண்ணறிவை வியந்தேன்.

மகிழ்வுந்தில் இரண்டு மணி நேரத்தில் பாலா இல்லம் அடைந்தோம். இருவரும் மனம் திறந்த தமிழ் வலைப்பதிவு, இணையத்துறை வளர்ச்சி பற்றி உரையாடியபடி அவர் வீடு வந்து சேர்ந்தோம். அவர் குடும்பத்தார் உறங்கிக்கொண்டிருந்தனர். காலையில் எழுந்து கடமைகளை முடித்துக்கொண்டு எம்.ஐ.டி., ஆர்வர்டு பல்கலைக்கழகங்களைப் பார்வையிடச் செல்வது என்று உறுதிசெய்துகொண்டு எனக்கு அவர்கள் தந்திருந்த அமைதியான அறையில் கண்ணயர்ந்தேன்.

திங்கள், 27 ஜூன், 2011

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(பெட்னா) தமிழ் விழா 2011


சார்ள்சுடன் கடற்கரையின் அழகிய தோற்றம்

 தமிழர்கள் பணிகளின்பொருட்டும், படிப்பின்பொருட்டும் அமெரிக்காவின் பல மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் தமிழ்ச்சங்கம் நிறுவியும், தமிழ்ப்பள்ளிகள் அமைத்தும், இன்ன பிற அமைப்புகளை உருவாக்கியும் தமிழ் வளர்ச்சிக்கும் கலைவளர்ச்சிக்கும் பாடுபடுகின்றனர். அத்தகு தமிழ்ப்பற்றுடைய குடும்பத்தார் ஆண்டுதோறும் குடும்பம் குடும்பமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற நகர் ஒன்றில் ஓரிடத்தில் கூடித் தமிழ்விழா எடுத்து ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 தமிழகத்திலிருந்தும், உலகின் பிற பகுதிகளிலிருந்தும் புகழ்பெற்ற தமிழறிஞர்கள், கலைஞர்களை அழைத்துச் சிறப்பிப்பதுடன், தமிழர்களின் மரபுக்கலைகளைப் போற்றும் முகமாகத் தமிழகத்து மரபுக்கலைஞர்களை அழைத்துக் கலைநிகழ்ச்சிகள் நடத்தும்படியும் செய்கின்றனர். வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர் தம் முன்னோரின் பண்பாட்டை அறிய வேண்டும் என்ற உயர்நோக்கில் இத்தகு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

 மேலும் தமிழுக்கும் தமிழருக்கும் உழைத்த தமிழ்ச்செம்மல்களைச் சிறப்பிக்கும் முகமாக அவர்களின் நூற்றாண்டு விழாக்களை நடத்தியும் சிறப்புமலர்கள் வெளியிட்டும் தமிழ்ப்பணியாற்றி வருகின்றனர்.இந்த ஆண்டும் அவ்வகையில் தனித் தமிழே நனிச் சிறப்பு ! இனம் பேணல் நம் பொறுப்பு ! என்னும் உயரிய நோக்கத்துடன் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினர் 24ஆம் ஆண்டு விழாவினைச் சீரும் சிறப்புமாக நடத்த உள்ளனர்.

 அமெரிக்காவின் தென்கரோலினா மாநிலத்தில், சீர்பெருகும் சார்ள்ஸ்டன் மாநகரில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையும், பனைநிலத் தமிழ்ச் சங்கத்தாரும் மற்றும் உலகளாவிய தமிழ் மெய்யன்பர்களும் இணைந்து நடத்தும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 24வது ஆண்டு விழாவை மிகச்சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

 இந்த விழாவின் இன்னொரு தனிச்சிறப்பு பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரையெழுதித் தமிழ்நூல்களைத் தமிழ்மக்கள் அனைவரும் படித்து மகிழ வழி செய்த பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது பேரவையின் புகழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். எந்த ஒரு அரசியல் பின்புலமோ, பொருள் வளமோ இல்லாமல், சிற்றூரில் பிறந்து தமிழ்ப்புலமை நலம் மட்டும் துணையாகக் கொண்ட ஒரு அறிஞர் பெருமகனாரின் நூற்றாண்டு விழாவை அமெரிக்க மண்ணில் கொண்டாடுவது பேரவையின் தமிழ்ப்பற்றுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.


சிறப்புமலர் மேலட்டை

பேரவையின் நிகழ்வுக்குப் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். கனடாவைச் சேர்ந்த சீர்மிகு இராதிகா சிற்சபேசன், திரைப்படக்கலைஞர் திரு.நாசர், நடிகர் சார்லி, திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார், திரு.அப்துல் சபார், புதுகைப் பூபாளம் கலைக்குழுவினர், திண்டுக்கல் சக்திக் கலைக்குழு, கோடைமழை வித்யா, திருபுவனம் ஆத்மநாதன், பாடகர்கள் தேவன், பிரசன்னா, உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

 பெருமழைப்புலவர் மலர் வெளியீட்டு நிகழ்விலும், சிலப்பதிகார இசைநுட்பங்கள் குறித்தும் நான் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பு உள்ளது. இத்தகு பெருமைக்குரிய வாய்ப்பு நல்கிய பேரவையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என யாவருக்கும் என் நன்றி.

உலகத் தமிழர்களே! வாருங்கள் பேரவை விழாவில் சந்திப்போம்.

நாள்: 2011 சூலை 1 முதல் 4 வரை

இடம்: கில்யார்டு அரங்கம், சார்ள்ஸ்டன், தென் கரோலினா, அமெரிக்கா

சனி, 25 ஜூன், 2011

கொலம்பியாவில் வரவேற்பு…


வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழன்பர்கள்

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கொலம்பியா நகரில் மருத்துவர் சித்தானந்தம் - முனைவர் குணா அவர்கள், புதுச்சேரியிலிருந்து வருகைபுரிந்துள்ள முனைவர் மு.இளங்கோவன் அவர்களை வரவேற்க ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சி மேங்கோ குரோ உணவகத்தில் 22.06.2011 மாலை 7 மணிக்குத் தொடங்கியது. மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் மு. அனந்தகிருட்டினன் அவர்கள் கலந்துகொண்டு மு.இளங்கோவனின் தமிழ் இணையப் பணியைப் பாராட்டிப் பேசினார். அடுத்து முனைவர் மு.இளங்கோவன் இலக்கியம் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் நூல்களின் சிறப்பை எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் உள்பட பல தமிழார்வலர்கள் கலந்துகொண்டனர்.


முனைவர் மு.அனந்தகிருட்டினன் அவர்களின் வாழ்த்துரை


மருத்துவர் சித்தானந்தம் வரவேற்பு


நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்க்குடும்பத்தார்


மருத்துவர் சித்தானந்தம்,மு.இ, முனைவர் குணா

வியாழன், 23 ஜூன், 2011

அமெரிக்காவின் தேசிய இயற்கை வரலாற்றுக் காட்சியகம்…


நிலவுக்கற்கள்,கருவிகள்

21.06.2011 பிற்பகல் திரு.கோபி அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு போய் தலைநகர் வாசிங்டன்னில் உள்ள இயற்கை வரலாற்றுக் காட்சியகத்தைப் (NATIONAL MUSEUM O NATURAL HISTORY) பார்க்கும்படி மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பகலுணவுக்குப் பிறகு திரு. கோபியின் வருகைக்குக் காத்திருந்தேன். தம் மகன் ஆதித்தனை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திவிட்டு வரும்பொழுது போக்குவரவு நெருக்கடியால் காலத்தாழ்ச்சியாக வருவதைத் தொலைபேசியில் கோபி சொன்னார். சொன்னபடி சிறிது நேரத்திற்குள் வந்தார்.

அவர் மகன் ஆதித்தியன் அரசுப்பள்ளியில் படிப்பதாகவும் அவனுக்குரிய பொத்தகச் சுவடிகள் அரசால் தரமாகத் தயாரிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளதாகவும் இருப்பில் இருந்த சில சுவடிகளைக் காட்டினார். குழந்தைகளின் படங்கள், வகுப்புகள் எனப் பல விவரங்கள் அந்தச் சுவடியில் இருந்தன. பெற்றோர்கள் விரும்பினால் மட்டும் அந்தப் புத்தகத்தில் மாணவக் குழந்தைகளின் படம் இடம்பெறுமாம். பாதுகாப்பு கருதுபவர்கள் படத்தை வெளியிட விரும்பமாட்டார்களாம். இதுவும் நம் நாட்டில் மேற்கொள்ளத்தக்க ஒரு நற்பழக்கமாகவே கருதுகின்றேன்.

திரு.கோபியின் மகிழ்வுந்து வாசிங்டன் நகர எல்லையை அடைந்தது. பாதை மாறி ஒரு வட்டம் போட்டு உரிய இடத்துக்கு வந்தோம். மலேசியா கோலாலம்பூரில் நடு இரவு ஒன்றில் நானும் முரசு.நெடுமாறன் ஐயா அவர்களும் பாதைமாறி ஒருமணி நேரத்துக்கு மேலாகச் சுற்றியது நினைவுக்கு வந்தது.

அமெரிக்க இயற்கை வரலாற்றுக் காட்சியகம் பரந்துகிடந்தது. எங்கும் குளிரூட்டப்பட்ட அரங்குகள். நாங்கள் அங்கு இயற்கை குறித்த படம் பார்ப்பதற்குரிய நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டோம். சான்சன் இமேஜ் திரையரங்கில் படம் 5.15 மணிக்கு என்றனர். கோபி அக்காட்சியகத்தின் உறுப்பினர் ஆனார். உறுப்புக்கட்டணம் 6.50 டாலர். குறித்த நேரத்தில் படம் ஓடியது. அனைவரும் அமைதியாக அமர்ந்து பார்த்தனர்.

கென்யாவில் வளர்க்கப்படும் குரங்குகள், யானைக்குட்டிகள் குறித்த விவரிப்பும் காட்சியும் சிறப்பாக இருந்தன. குரங்குகள் மரத்தில் விளையாடுவது மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தது. இயற்கை சார்ந்த தொலைக்காட்சிகளை விட இக்காட்சிகள் சிறப்பு. முப்பரிமானக் காட்சி என்பதால் கண்முன் காட்சிகள் நடப்பது போன்ற உணர்வைப் பெற்றோம். பையன் ஆதித்யன் தம் முகத்தை நோக்கிக் குரங்குகள் வருவதாக உணர்ந்து அதனைத் தாவித் தாவிப் பிடித்தபடி இருந்தான். யானைகளும், குரங்குகளும் பழக்கத்துக்கு உட்பட்டுப் பாசத்துக்கு ஏங்கிய காட்சிகளை நேரில் கண்டு மகிழ்ந்தோம். படம் அரை மணி நேரத்திற்கு மேல் ஓடியிருக்கும். மெதுவாக வெளியே வந்தோம்.


காட்சிக்கூட முகப்பில் உயிரோட்டமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள யானை

மரம், செடி, கொடி, பூ, புழு, பூச்சி, மண், மலை என்று உலகின் அனைத்து இயற்கை வளர்ச்சிகளையும் படிப்படியாகக் கண்டு மகிழ்ந்தோம். மாந்தனின் அத்தனை உறுப்புகளையும் பிரித்துப் போட்டு வைத்துள்ளனர். தென்னாப்பிரிக்கர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் தனிக்காட்சிக் கூடங்களும் இருந்தன. தங்கம், வெள்ளி குறித்த காட்சிகளையும் பார்த்தபடி வந்தோம். வைரத்தின் அனைத்து வகைகளையும் கண்ணாரக் கண்டு அதன் ஒளிப்பு அழகை நேரில் கண்டு வியந்தேன். பாதுகாப்பு இந்தப் பகுதியில் மிகுதியாக இருந்தது. எங்கும் வெளிச்சமும் வளிக்கட்டுப்பாடும் இருந்தது. தகுந்த அறிவிப்புப் பலகைகள் இருந்தன. யார் உதவியும் இல்லாமல் யாவற்றையும் பார்க்கலாம். கண்ணாடிக் கூண்டுகளில் பொருள்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. போதிய விளக்கங்களும் உள்ளன.

நெப்போலியன் தன் காதல் மனையாளுக்கு வழங்கிய வைரமாலைகள் ஆயிரம் கதைகளைத் தாங்கிக்கொண்டு அனைவரின் பார்வைக்கும் விருந்தாக உள்ளது. இந்தியா, பிரேசில் பகுதிகளில் கிடைக்கும் வைரங்களும் காட்சிக்கு இருந்தன. தங்கப் பாலங்களைப் பார்க்கமுடிந்தது. இரும்புப் பாறைகளையும் பார்க்க முடிந்தது.

விண்வெளிக்குச் சென்று நிலவிலிருந்து கொண்டுவந்த மண்ணையும் அதனை எடுக்கப் பயன்படுத்திய கருவிகள், பெட்டிகள், உறைகளையும் பாதுகாப்பது கண்டு வியந்தேன். இந்தப் பகுதியை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மாலை 7.15 மணிவரை காட்சியகத்தைப் பார்த்துக் கடைசியாக நாங்கள் வெளியே வந்தோம்.


விண்கல் அருகில் மு.இளங்கோவன்,ஆதித்தியன்


முதல் நெப்போலியனின் காதல் மனையாள் அணிந்த வைரமாலை


வைரமாலைகள்(தாய்க்குலங்களின் கனிவான கவனத்திற்கு: பார்க்கமட்டும்,கேட்காதீர்கள்(!)


வைரமாலைகள்(தாய்க்குலங்களின் கனிவான கவனத்திற்கு: பார்க்கமட்டும்,கேட்காதீர்கள்(!)

இரவு மருத்துவர் சித்தானந்தம் அவர்களின் இல்லம் வரும்பொழுது நல்ல தூக்க நிலையில் இருந்தேன். நம் நாட்டு நிலையிலிருந்து என் உடல் விடுபடாததுதான் இச்சோர்வுக்குக் காரணம். கோபியிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டில் படுக்கும்பொழுது இரவு 1 1 மணி இருக்கும்.

புதன், 22 ஜூன், 2011

மேரிலாந்தில் பொட்டாமாக்கு ஆற்றின் அழகு…


பொட்டாமாக்கு ஆறு(படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)

அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் அருகில் ஓடும் பொட்டாமாக்கு ஆறு மேரிலாந்து வழியாகப் பல கல்தொலைவு ஓடுகின்றது. ஒருகரையில் மேரிலாந்து மாநிலமும், இன்னொரு கரையில் வெர்சீனியாவும் இருப்பது சிறப்பு. மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களின் இல்லத்திலிருந்து கால்மணி நேரத்தில் பொட்டாமாக்கு ஆற்றின் அருவியைக் காணச் சென்றோம். இன்று மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் பணிக்குச் சென்றதால் நானும் அம்மா முனைவர் குணா அவர்களும் மகிழ்வுந்தில் அருவிக்குச் சென்றோம்.

முனைவர் குணா அவர்கள் புகழ்பெற்ற புற்றுநோய் குறித்த ஆய்வாளர். பல ஆய்வுத்தாள்களை வழங்கியுள்ளார். இருவரும் அவர்களின் கல்வி,ஆய்வு குறித்து உரையாடியபடி சென்றோம். சாலையின் இரு மருங்கிலும் நெடிதுயர்ந்த மரங்கள். ஆள் அரவமற்ற காட்டின் உள்ளே "வெயில் நுழைவு அறியாத குயில்நிழல் பொதும்பராக" அந்தத் தண்ணஞ்சிலம்பு புலப்பட்டது. சங்கப்பனுவலின் பல காட்சிகளை இந்த இடத்தில் இயைத்துப் பார்த்தேன். சிலம்பில் இடம்பெறும் “மருங்குவண்டு சிறந்தார்ப்ப” என்னுமாறு போல இரண்டு பக்கமும் அடந்த சோலை நடுவே எங்கள் மகிழ்வுந்து சீறிப்பாய்ந்தது.

ஒவ்வொரு இடத்திலும் சாலையில் ஊர்தி ஓட்டுவோர் பின்பற்ற வேண்டிய விதிகளைக் கடைப்பிடித்தபடி செல்வதால் இங்குத் தேவையற்ற நேர்ச்சிகள் தடுக்கப்படுகின்றன. அனைவரும் மார்பு வார் அணிந்து கொள்கின்றனர். நிறுத்தத்தின் எதிரில் வண்டிகள் இல்லை என்றாலும் தங்களுக்கு உரிய கட்டளைகள் வரும்வரை நின்றே செல்கின்றனர். தவறுதலாக வண்டி ஓட்ட நேர்த்தால் தங்கள் தவறுக்கு மனம் வருந்தி வருத்தம் தெரிவிக்கின்றனர். யாரேனும் முறையற்று வண்டி ஓட்டினால் ஒலி எழுப்பி அவரை எச்சரிக்கின்றனர். இந்த ஓர் ஓலி நம் சென்னை மக்களின் ஒருமணி நேர ஏச்சு,பேச்சுக்குச் சமமாம்.

நம் ஊரின் பேருந்தில் ஆண் பெண் இருப்பது நினையாமல் இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் வல்லடி வழக்கிட்டு அவையல் கிளவிகள் மொழிவது எம் செவிப்பறைகளில் நினைவாக ஓடி நின்றது. இத்தகு உயர்பண்புகள் நம் தமிழகத்து இருபால் மக்களிடம் என்றைக்கு வாய்க்குமோ என்று நினைத்தபடி மகிழ்வுந்தில் அமர்ந்து இயற்கை அழகைக் கண்டவாறு சென்றேன். பொட்டமாக்கு அருவிப்பூங்காவை அடைந்தோம். உரிய இடத்தில் முனைவர் குணா அவர்கள் மகிழ்வுந்தை நிறுத்தினார்கள். நடந்தபடி சென்றோம்.

எங்கும் ஞெகிழித்தாள்களோ, மதுப்புட்டிகளோ, வெற்றிலைப் பாக்கு எச்சில்களோ, உணவுப் பண்டங்களின் எச்சங்களோ இல்லை.குப்பைக்கூடைகளில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தவறினால் தண்டம்தான். பேருந்து ஓட்டத்தில் எச்சிலைத் துப்பி, தண்ணீரை ஊற்றிக் கைகழுவிப் பலருக்கும் இடையூறு ஏற்படுத்திவிட்டுத் தட்டிக்கேட்டவர்களை இழுத்துப் போட்டு அடித்துப் பேருந்துப் பயணத்தை நிலைகுலையச்செய்த என் தமிழ்நாட்டு உறவினர்களுக்கு எந்தக் கல்விக்கூடத்தில் இந்தப் பாடத்தைப் பயிற்றுவிப்பது என்ற கவலையே எனக்கு ஏற்பட்டது.

பொட்டாமாக்கு ஆற்றை ஓட்டி ஒரு வாய்க்கால் ஓடுகின்றது. அது செசாபேக்கு-ஓகையா வாய்க்கால் (CHESAPEAKE AND OHIO CANAL) என்று அழைக்கப்படுகின்றது. இந்த வாய்க்கால் 1917 முதல் மக்கள் படகுப்பயணம் செய்ய உதவியுள்ளதை அங்குள்ள குறிப்புகள் வழியாக அறிந்தேன். 1828 சூலை 4 இல் இந்த முயற்சி தொடங்கப்பட்டதாகவும் ஒரு குறிப்பு கிடைத்தது.

பொட்டமாக்கு ஆற்றின் நீரும் பிறவகை நிலத்துநீரும் வந்து நெடுந்தொலைவு ஓடும்படி வாய்க்காலை இயற்கையாக அமைத்துள்ளனர். அந்த வாய்க்காலில் படகோட்டம் நடக்குமாம். நெடுந்தொலைவுக்குப் படகில் பயணம் செய்ய இந்த வாய்க்காலை அங்குள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களாம். இரண்டு பக்கமும் வாய்க்காலின் கரையில் உந்து வண்டிகள், மதிவண்டிகள் செல்ல வாய்ப்பான சாலைகள் உள்ளன.தொடக்க காலத்தில் படகை நீர்நிலையில் நிறுத்திக் கரையில் குதிரையில் கயிறுகட்டிப் பிணைத்து குதிரை நடக்கும் வேகத்துக்குப் படகு சென்றுள்ளது. இடையில் உள்ள மலைக்குகளிலும் அந்த வாய்க்கால் நுழைந்து செல்கிறது.அங்கும் படகு இழுக்கும் குதிரை செல்ல பாதை இருந்துள்ளதைப் படக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன்.


பொட்டாமாக்கு ஆறு


பொட்டாமாக்கு ஆறு


பொட்டாமாக்கு ஆற்றின் வாய்க்கால்(படகு பயன்பாட்டுக்கு)

இளநங்கையர்கள் சிலர் ஆடவர்களுடன் பேசி மகிழ்ந்தபடி செல்கின்றனர். உள்நாட்டுச் சுற்றுலாச்செலவர்களும் பலர் காணப்படுகின்றனர். ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து பாடங்களை இயற்கைச்சூழலில் கற்பிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்களும் தங்களுக்குரிய உணவு, எழுதுபொருள்கள், பாடப்பொத்தகங்கள் கொண்டு வந்து தங்கள் பணிகளை ஆர்வமுடன் செய்தனர். குழுச்செலவினர் சிலர் உணவுப்பொருட்களுடனும், மதுவிருந்துக்குரிய பொருட்களுடனும் வந்து பொழுதைக் கழிக்கின்றனர்.

நாங்கள் சென்ற சமயம் மராமத்து வேலைகள் நடந்துகொண்டிருந்தன. நம் ஊர் ஆசாரியார்களைப் போலச் சிலர் தச்சுவேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இங்கு இரும்பைவிட அதிகம் மரத்தைப் பயன்படுத்தி மதகு வேலைகள் செய்துள்ளனர். வாய்க்காலில் தண்ணீர் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த ஒரு படகினை மறித்து நிறுத்தியிருந்தனர். வாத்துகள் பல அன்னப்பறவைபோல் ஓய்யார உடலைசைத்து நகர்ந்து நீந்தின. சிட்டுக்குருவிகள் அமெரிக்கா முழுவதும் காணக்கூடியதாக உள்ளன. சில சிட்டுக்குருவிகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டேன். வாசிங்டன்னிலும் பல இடங்களில் குருவிகளைப் பார்த்தேன்.


மரவேலைப்பாடுகளுடன் மதகு(பொட்டாமாக்கு ஆற்றின் வாய்க்கால்)


நீரைத் தடுத்து நிறுத்தும் படகு


பொட்டாமாக்கு ஆற்றின் கரையில் மு.இளங்கோவன்

முனைவர் குணா அம்மா அவர்கள் இங்குள்ள பலர் நடைப்பயிற்சிக்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டார்கள். பொட்டாமாக்கு ஆற்றறில் சிறிய அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் ஆற்றின் இயற்கைச் சீற்றத்துக்குக் குறைவில்லை. நெடுமரங்கள் பல இயற்கையாக முறிந்து இழுத்துவரப்பட்டு அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. நம்மூர் என்றால் இரவோடு இரவாக அள்ளிச் சென்றிருப்பார்கள். இயற்கையைப் போற்ற வேண்டும் என்பதில் அமெரிக்க மக்கள் மிகவும் கவனமாக உள்ளனர். அங்குமிங்கும் நடந்து, ஆற்றையும் அதிலிருந்து வீழ்ந்து செல்லும் அருவியையும் கண்ணாரக் கண்டோம். அங்குள்ள காட்சியகத்தையும் கண்டு மகிழ்ந்தோம்.

ஓய்வறைகள், காட்சிக்கூடம், நெறியாளர்கள், காப்பாளர்கள் யாவரும் தத்தம் கடமையைச் சிறப்பாகச் செய்தனர். ஆற்றைப் பற்றியும் வாய்க்காலைப் பற்றியும் பல பயனுடைய தகவல்கள் அடங்கிய குறிப்பேட்டை இலவசமாகத் தந்தனர். பெற்றுக்கொண்டோம். காணொளியில் ஓடும் காட்சிகளையும் பார்த்தோம்.

அடுத்து நாங்கள் மேரிலாந்திலுள்ள நூலகம் ஒன்றைப் பார்வையிட நினைத்தோம். அழகான பெரிய மாளிகையில் நூலகம் கவின்மிகு தோற்றத்துடன் காட்சியளித்தது. அங்குள்ள வண்டிகள் நிறுத்திமிடம் பரந்துகாணப்படுகின்றது. ஆனால் நாங்கள் சென்ற நேரம் நூலகம் மூடியிருந்தது. எனவே எங்கள் மகிழ்வுந்து ஒரு பேரங்காடியை நோக்கித் திரும்பியது.

கடைக்குப் போகவேண்டும் என்றால் யாவரும் புதுவை- கடலூர் வரை உள்ள தொலைவு பயணம் செய்து தங்களுக்கு உரிய கறிகாய்களை, மளிகைப்பொருட்களை வாங்கி வருகின்றார்கள். அடுப்பில் ஏனங்களை வைத்துவிட்டு தேங்காய் வேண்டும், மாங்காய் வேண்டும், எண்ணெய் வேண்டும், தொன்னை வேண்டும் என்று குறிப்பிடும் நம் மனையுறை மகளிரை நினைத்துப் பெருமூச்சுவிட்டேன்.

MACYS HOME என்ற பேரங்காடிக்கு நாங்கள் சென்றோம். மெத்தை, தலையணை, போர்வை, துணிமணிகள், குளிர்ப்பெட்டிகள், ஏனங்கள், யாவும் கடல்போன்ற அரங்கில் காட்சிக்கு இருந்தன. அடுத்த பகுதிக்குச் சென்று பார்த்தேன். கணக்கற்ற மின்னணுப்பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. அண்மையில் வந்த கணினிகளைப் பார்வையிட வேறொரு அரங்கிற்குச் சென்றேன். விலை எல்லாம் ஒன்றரை இலக்கத்தைத் தாண்டியிருந்தது. என் பயணத்திட்டத்தின் செலவே அவ்வளவுதான் என்று நினைத்தபடி வேறு சில அரங்குகளைப் பார்த்துவிட்டு பகல் ஒருமணிக்கு ஐயா சித்தானந்தம் இல்லத்துக்கு வந்தோம்.

செவ்வாய், 21 ஜூன், 2011

தமிழ் இணையமாநாடு நிறைவுநாளும் அமெரிக்கச் சுற்றுச் செலவின் தொடக்கமும்…


பிலடல்பியாவில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மணி அருகில் மு.இளங்கோவன்

 பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் இணைய மாநாட்டின் நிறைவுநாளான 19.06.2011 காலையில் ஆம்டன் இன் (HAMPTO INN) தங்குமனையில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பல்கலைக்கழக அரங்கத்திற்குச் சென்றோம். நண்பர் வைரம் அவர்கள் அரங்கத்திற்கு முதல் ஆளாக வந்திருந்தார்.

 குறிஞ்சிப்பாட்டுப் பூக்களை அடையாளம் கண்டு நிறுவும் முயற்சியில் ஈடுப்பட்டவர். பல ஆண்டுகளாக மின்னஞ்சலில் தொடர்புகொண்டுள்ளோம். அன்றுதான் நேரில் பார்த்தோம். பார்த்த கையுடன் அவரின் திருமண அழைப்பினைக் கொடுத்தார். இன்னும் ஒரு கிழமையில் அமெரிக்காவில் பார்த்துவரும் தொலைத்தொடர்புத்துறைப் பொறியாளர் பணியை விட்டுவிட்டு, பிலிப்பைன்சில் மேல்படிப்புக்காகச் செல்ல உள்ளார். செல்வதற்குமுன் பெற்றோர்கள் பையனுக்குத் திருமணம் செய்து அனுப்பவேண்டும் என்று நினைத்தனர் போலும். வரும் சூலைமாதம் தேவக்கோட்டையில் திருமணமாம்.


முனைவர் மு.இளங்கோவன், பொறியாளர் வைரம்

 வைரத்தின் திருமண அழைப்பிதழைப் பார்க்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் அவரின் தமிழ்ப்பற்று கண்டு உண்மையில் மனம் திறந்து பாராட்டுவார்கள். திருமண அழைப்புடன் சங்க இலக்கிய அகக்காட்சிகள் இரண்டையும் பாடல் உரையுடன்-படத்துடன் வைத்துள்ளார். ’செம்புலப்பெயல்நீர் போல’ எனும் குறுந்தொகைப் பாடலும் பொருளும் ஆங்கில விளக்கமும், பெருநன்று ஆற்றின்(115) என்ற குறுந்தொகைப் பாடலும் பொருளும் ஆங்கில விளக்கமும் வரைந்துள்ளார். அவருக்குத் திருமண வாழ்த்துச்சொல்லி என் நூல்கள் சிலவற்றைத் திருமண அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தேன். இது நிற்க.

 மாநாட்டின் நிறைவுநாள் என்பதாலும் அன்று அமெரிக்காவில் தந்தையர்நாள் கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்பதாலும் கூட்டம் சிறிது குறைந்தே இருந்தது. காலையில் நடந்த முதல் அமர்வில் பேராசிரியர் செல்வா அவர்கள் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிவரங்களைத் தந்து அறிமுகம் செய்தார். இரசனி இரசித் அவர்கள் இணையம், கணினி வழியாகத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்தல் தொடர்பான கட்டுரையைப் படித்தார். அடுத்து பழனியப்பன் வைரம் அவர்கள் சங்க இலக்கியங்களைச் சமூகப் பயன்பாட்டுக்குத் தக இணையத்தில் ஏற்ற வேண்டும் என்பது குறித்த கட்டுரையை வழங்கினார். இவர் கட்டுரை அனைவராலும் பாராட்டப்பட்டது. கதைகள், பாடல்கள் வழியாகச் சங்கப் பாடல்கள் மக்களிடம் சென்றுசேர வேண்டும் என்று இவர் எடுத்துவரும் முயற்சியை அனைவரும் மனம்திறந்து பாராட்டினர்.

 அடுத்து சிவா பிள்ளை (இலண்டன்), சீதாலெட்சுமி (சிங்கை), பரமசிவம் (மலேசியா) உள்ளிட்டவர்கள் கட்டுரை வழங்கினர். மதன்கார்க்கி வேறொரு அரங்கில் கட்டுரை படித்தார். ஒரு அரங்க நிகழ்வை மட்டும் நான் கண்டு கேட்டதால் இன்னொரு அரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரையைக் கேட்க முடியவில்லை. தேநீர் இடைவேளையின்பொழுது எளியநிலையில் தந்தையர்நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முனைவர் மு. அனந்தகிருட்டினன், முனவைர் இ.அண்ணாமலை உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 அமர்வுகள் நிறைவுற்றதும் நிறைவு விழா தொடங்கியது. மாநாட்டைச் சிறப்பாக நடத்திய முனைவர் வாசு, வாசுவின் துணைவியார் திருவாட்டி விஜி, கவி, முனைவர் கல்யாண் உள்ளிட்டவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். விழாவுக்கு உதவியாக இருந்த மருத்துவர் சோம.இளங்கோவன், முனைவர் முத்துமணி உள்ளிட்ட அன்பர்கள் பாராட்டப்பட்டனர். முனைவர் மு.அனந்தகிருட்டினன், முனைவர் மு.பொன்னவைக்கோ உள்ளிட்டவர்கள் மாநாட்டின் சிறப்பினை எடுத்துரைத்தனர். அனைவரும் மதிய உணவு உண்டு விடைபெற்றோம்.

 என்னை அழைத்துச் செல்ல முதல்நாளே வந்திருந்த மருத்துவர் சித்தானந்தம் முனைவர் குணா ஆகியோருடன் விடுதிக்குச் சென்று பொருள்களை எடுத்துக்கொண்டு அமெரிக்க உலாவுக்கு ஆயத்தம் ஆனோம்.

 முதலில் நாங்கள் வரலாற்றுச்சிறப்பு மிக்க இடமான பிலடல்பியாவின் பழைய ஆளவை அரங்கம், பழைய முறை மன்றம் உள்ளிட்டவற்றைக் கண்டோம். மிகப்பழைய கட்டடங்களைப் பேணிப் பாதுகாக்கின்றனர். அங்குக் குதிரை வண்டிகள் மிகுதியாக இருந்தன. எங்களைக் குதிரை வண்டி ஓட்டத்துக்கு அழைத்தனர். கொழுத்து நின்ற அந்தக் குதிரைகளின் வனப்பை விரித்துரைத்தபடி கால்நடையாகவே அந்தப் பகுதியைப் பார்த்து மகிழ்ந்தோம். பழையவற்றைப் பாதுகாப்பதில் அமெரிக்க மக்களும் அரசும் கொண்டிருக்கும் பேரீடுபாடு கண்டு மகிழ்ந்தேன்.


அமெரிக்காவின் முதல் முறைமன்றம்


அமெரிக்கச் சட்டங்கள் உருவாக்கப்பட்ட அவையம்

சற்றொப்ப இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் விடுதலை, சட்ட உருவாக்கம் பற்றிய ஆவணக் களஞ்சியமாக இந்த இடம் உள்ளது. சட்டம் உருவாக்குவதற்குத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் அமர்ந்து கலந்துரையாடிய இருக்கைகள், மிசைகள், கூண்டுகள் யாவும் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. நெறியாளர் ஒருவர் எங்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அமெரிக்கா வரக்கூடியவர்கள் பார்க்க வேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த இடங்களைப் பார்க்க நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். எங்களுக்கு இது தெரியாது. பெரும்பாலானவர்கள் வாங்கியிருந்தனர். நாங்கள் திரும்பிச்சென்று நுழைவுச்சீட்டு வாங்க நினைத்தோம்.ஆனால் நெறியாளர் பரவாயில்லை உள்ளே வாருங்கள் என்று அனுமதித்தார். இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நெறிமுறைகளை அனைவரும் மதிக்கவேண்டும் அதேபொழுது மாந்தவிருப்பம் போற்றப்பட வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் எண்ணமாக உள்ளதை உணர்ந்தேன். பிற இடங்களில் சட்டம், நெறிமுறைகள் இருக்கும். மாந்த விருப்பம் இருக்காது.

 மாலைப்பொழுது ஆனதும் நாங்கள் பென்சில்வேனியாவிலிருந்து புறப்பட்டு, டெலவர் மாநிலங் கடந்து மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் வாழும் மேரிலாந்து மாநிலப் பகுதிக்கு வந்தோம்.

 வரும் வழியில் இந்தியக் கறிகாய்க் கடை கண்டு வீட்டுக்கு வேண்டிய பழங்கள் கறிகாய்கள் வாங்கினோம். பின்னர் அருகில் இருந்த உட்லண்ட் உணவகத்தில் உணவுக்கு நுழைந்தோம். தந்தையர் நாள் என்பதால் பெற்றோருடன் பலர் வந்திருந்தனர். இந்திய முகங்களைக் காணமுடிந்தது. ஒரு தோசை உண்டேன். குளிர்க்குடிப்பும் இணைப்பாக அருந்தினேன். ஒரு வார இடைவெளியில் நம்மூர் உணவு உண்டதில் மகிழ்ச்சி. தயிர்ச்சோற்றுக்கு அடிமையான என் நாக்கு அங்கும் இங்கும் பார்த்தும் எதுவும் கிடைக்காமல் சிறிது அவல்பொறியை உண்டு ஆறுதல் அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டோம்.

 சிறிது தொலைவில் ஒரு “பார்மசி” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பலகை கொண்ட கடையருகில் சித்தானந்தம் ஐயா மகிழுந்தை நிறுத்தினார். மருத்துவர் ஏதோ மருந்து வாங்கப் போகின்றார் என்று நினைத்துத் தயங்கி நின்றேன். வாருங்கள் சில பொருட்கள் வாங்கிவருவோம் என்றார். கடையின் கதவு தானே  திறந்தது. மிகப்பெரிய வளிக்கட்டுப்பாட்டுக் கூடங்களால் அமைந்த அரங்கில் பசுமை மாறாத கறிகாய்களும், பழங்களும், வெதுப்புப்பொருட்கள், மளிகைப்பொருட்களும், சிறுவர்களுக்குரிய விளையாட்டுப் பொருட்களும் குளிர்க்குடிப்புகளும், எழுதுபொருள் உள்ளிட்டவைகளும் இனிப்பு, காரம் உள்ளிட்டவைகளும் கண்டு வியந்தேன்.

 அடுத்திருந்த அழகிய ஞெகிழித் தாள்கள் கொண்டு மூடப்பட்ட “ பிறந்த நாள்கேக்” போன்ற ஒரு பொருளை ஐயா அவர்கள் எடுத்தார்கள். என்ன இது? என்றேன். கோழிக்கறி என்றார். அவ்வளவு தூய்மையாகப் பாதுகாப்புச் செய்யப்பட்டுள்ளது கண்டு வியந்தேன். அருகில் இருந்த இடங்களில் மீன், பன்றி, மாட்டு இறைச்சி, காடை, கௌதாரி என்று இன்னும் பெயர் தெரியா பலவற்றின் இறைச்சிகள் பாதுகாப்பாக இருப்பது கண்டு வியந்தேன். அவை வீணாகாத வகையில் குளிரூட்டப்பட்டு இருந்தது.

 எனக்குப் புதுச்சேரியின் பெரியக்கடை மீன் அங்காடியும், நெல்லித்தோப்பு மீன் அங்காடியும், கடலூர் முதுநகர் மீன்அங்காடியும் நினைவுக்கு வந்தன. மனத்தில் லேசானா மீன்வாடை அடித்தது. எல்லாப் பொருள்களையும் எடுத்துவந்து நாங்களே அவற்றுக்குரிய விலைப்பட்டி உருவாக்கி, கடனட்டையிலிருந்து காசை இறக்கிப், பையில் பொருள்களைப் போட்டு எடுத்து வந்தோம். இத்தனைக்கும் அங்கு கடையாள் அவர்கள் வேலைகளைத்தான் பார்த்தார்கள். அமெரிக்க மக்களின் நேர்மையும் சட்டம் ஒழுங்கின் சிறப்பையும் கண்ணால் கண்டு போற்றினேன்.

 20.06.2011 காலை ஒன்பது மணிக்கு நானும் மருத்துவர் சித்தானந்தம் ஐயாவும் வாசிங்டன் நோக்கிச் சென்றோம். பத்து மணியளவில் நகரை அடைந்தோம். சித்தானந்தம் ஐயா வீட்டிலிருந்து வாசிங்டன் நகரம் வரை சாலைகள் மிகச்சிறப்பாக இருந்தன. போக்குவரவு விதிகளை அனைவரும் போற்றுகின்றனர். ஊட்டி, குன்னூர் போன்ற மலைப்பகுதிகளில் மழை, சாரல் நடுவே பயணம் செய்வது போன்று இயற்கை அன்னையின் இதமான குளிர்க்காற்றில் மகிழ்ச்சியுடன் சென்றோம்.


ஆளவைப் பேராய மாளிகையில் மு.இளங்கோவன்

 முதலில் நாங்கள் அமெரிக்க ஆளவைப் பேராயத்தின் கட்டடத்தைக் கண்டு மகிழ்ந்தோம். பழைய கட்டடங்களை எவ்வாறு புதுப்பித்து, கண்காணிக்கின்றனர் என்பதை அறிந்து வியந்தேன். எங்களுக்கு ஒரு பெண் நெறியாளர் இருந்து அந்தக் கட்டடத்தின் சிறப்புகளைச் சொல்லியவண்ணம் வந்தார். அவர் பேச்சு மட்டும் கேட்கும்படியான ஒரு காதுக்கருவி தந்தனர். அதனை அணிந்துகொண்டு அந்த அம்மா சொன்னவற்றைத் தெரிந்துகொண்டோம்.

 கோபுரத்தின் உட்புறத்தில் வரையப்பட்டுள்ள படங்கள் பலவும் பல்வேறு செய்திகளைச் சொல்கின்றன. அங்குள்ள தலைவர்களின் சிலைகள் சிறப்பு.


லிங்கன் சிலையருகில் மு.இளங்கோவன்


மார்ட்டின் லூதர் கிங் சிலையருகில் மு.இளங்கோவன்


 அனைத்து மாநில மக்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையில் பல மாநிலத்தைச் சேர்ந்த புகழாளர்கள் கல்லில் வாழ்கின்றனர். அதனைப் பார்த்தபடி அமெரிக்க நூலகப் பேராயத்தையும் பார்வையிட்டோம். உலகில் உள்ள நூல்கள் பற்றிய விவரங்கள், நூல்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. சிலர் அமைதியாக அமர்ந்து படித்துக்கொண்டுள்ளனர்.


அமெரிக்க நூலகப் பேராய அரங்கின் முகப்பில் மு.இளங்கோவன்

 சில காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டுப் பகலுணவுக்கு வந்தோம். அருகில் உள்ள தொடர்வண்டி நிலையில் இந்திய உணவான புலவும் கோழிக்கறிக் குழம்பும், வெண்டைக்காய்ப் பொறியலும் இருந்தன. உண்டு மகிழ்ந்தேன்.

 அமெரிக்கர்களின் அறிவியல், விண்ணியல் ஆய்வுகளுக்குச் சான்றாக அமைந்துள்ள அறிவியல் காட்சிக்கூடத்தைப் பார்வையிட்டோம். அமெரிக்கர்களின் விண்ணியல் ஆய்வு, இராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றைக் காட்டும் பல காட்சிப்பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பலவகையான வானூர்திகளின் மாதிரிகள், இராக்கெட் மாதிரிகள், நிலவில் மாந்தன் கால் வைத்த அரிய படங்கள், இராக்கெட்டில் விண்வெளிக்கு ஆய்வுக்குச் சென்றவர்கள் பயன்படுத்திய பொருள்கள் யாவும் சிறப்பாக இருந்தன. அங்கு நடைபெற்ற மும்மடங்குப் படக்காட்சி எங்களைப் புது உலகிற்கு அழைத்துச்சென்றது.


அறிவியல் காட்சியகத்தில் மு.இளங்கோவன்


அறிவியல் காட்சியகத்தில் மு.இளங்கோவன்(வேறு ஒரு கோணம்)

 விண்வெளிவீரர்கள் விண்வெளி ஆய்வுக்குச் செல்லும்பொழுது நடக்கும் முன்னேற்பாடுகள், விண்வெளிக்குச் செல்பவர்களின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி, இராக்கெட் புறப்படும் இயல்புக்காட்சி, வான்வெளியில் மிதந்தபடி விண்வெளி வீரர்கள் உரையாடும் காட்சி, உணவு உண்ணும் காட்சி யாவும் பார்த்து வியப்புற்றேன்.

 கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிவரும் இயற்கையின் பெருவியப்பை ஒவ்வொருவரும் காண வேண்டிய முக்கிய இடம் இதுவாகும். இவற்றை மிகச்சிறப்பாகப் படமாக்கியுள்ள திரைக்கலைஞார்கள், ஒளி ஓவியர்கள், ஒலிக்கோப்பாளர்கள் யாவரும் போற்றி மதிக்கத்தக்க அறிவாளிகளே ஆவர்.

 இவற்றைக் காணும்பொழுது நம் நூல்களில் இயற்கை பற்றியும், அறிவியல் பற்றியும் அறியாது மூடத்தனமாகப் பதிந்துவைத்துள்ள புராணக்கதைகள் நினைந்து என் தமிழுள்ளம் மெதுவாகச் சிரித்துக்கொண்டது. இப்படி நினைத்துப்பார்த்தேன். தமிழகத்தின் திரைப்படம், தொலைக்காட்சிகளில் அழுமுகப் பெண்களை உருவாக்கும், வேப்பிலைக் கொத்துகளை வைத்துச் சாமியாடும், பேய் பிசாசுக் கதைகளை இன்னும் சொல்லிக்கொண்டிருக்கும், பாம்புகளை, முட்டைகளைக் காட்டியும் யானையை இரந்துண்ணும்படியாகவும் படம் எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குநர்கள், ஒளி ஓவியர்கள், கதையாசிரியர்கள், தயாரிப்பாளர்களை அழைத்து வந்து இந்தக் காட்சிகளைக் காட்டி, வியப்பூட்டும் அறிவு கொளுத்தும் இத்தகு படங்களை உள்வாங்கிக்கொண்டு படம் எடுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அறிவியல் அரங்கை முழுமையாகப் பார்வையிட ஒருநாள் வேண்டும். பருந்துப் பார்வையாகத்தான் அனைத்தையும் பார்த்தோம். குளிர்க்குளம்பி ஒன்றை வாங்கிக் குடித்தோம்.


கென்னடி சதுக்கம் மற்றும் போர்வீரர்கள் நினைவிடத்தில் மு.இளங்கோவன்

 அதன் பிறகு கென்னடி சதுக்கம், போர்வீரர்களின் நினைவுத்துயிலிடம், லிங்கன் நினைவகம் உள்ளிட்டவற்றைப் பார்த்து மகிழ்ந்தோம். கென்னடி சதுக்கத்தில் கென்னடியின் கல்லறை, பொன்மொழிகள் யாவும் மதிப்புக்கு உரிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உலகப்போர், வியட்நாம்போர் உள்ளிட்ட போர்களில்  இயற்கை எய்திய வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் தூய்மையாகப் பாதுக்கப்படுகின்றது.

 அதுபோல் இலிங்கள் சதுக்கத்திலும் அவரின் பொன்மொழிகள், சிலைகள் சிறப்பாக உள்ளன. அடுத்து எங்கள் மகிழ்வுந்து வெள்ளை மாளிகை நோக்கி விரைந்தது.


இலிங்கன் நினைவிடத்தில் மு.இளங்கோவன்



வெள்ளை மாளிகையின் முகப்பில் மு.இளங்கோவன்

 அழகிய ஆற்றங்கரையைக் கடந்து வெள்ளை மாளிகை இருக்கும் நகர்நோக்கிச் சென்றோம். உலகையே திரும்பிப் பார்க்கச் செய்யும் அந்த மாளிகை சிறிய அளவில் அமைதியாகக் காட்சி தருகின்றது. காட்சிக்கு எளியன் என்று திருவள்ளுவர் அரசருக்குச் சொன்னபடி வெள்ளை மாளிகை தெரிந்தது. அருகில் ஒரு பூங்கா உள்ளது. அந்தப் பூங்காவில்தான் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அணிவகுப்புகள் நடக்கும் என்று சொன்னார்கள். எல்லாவற்றையும் பார்த்தப்படியும் படங்கள் எடுத்தபடியும் இரவு 7.30 மணிக்கு ஐயா சித்தானந்தம் அவர்களின் வீட்டுக்கு வந்தோம். நம்மூரில் மாலை மூன்று மணிக்கு வெயில் அடிக்குமே அதுபோல் இரவு 7 .30 மணிக்கு வெயில் அடித்தபடி இருந்தது…

ஞாயிறு, 19 ஜூன், 2011

இணையமாநாட்டின் இரண்டாம்நாள் நினைவுகள்…


"வெண்பாநிரல்" தந்த பொறியாளர் மு.சித்தநாத பூபதி அவர்கள்

18.06.2011 காலை எட்டு முப்பது மணிக்கு விடுதியிலிருந்து புறப்பட்டோம். மாநாட்டு அரங்கிற்கு ஒன்பதுமணி அளவில் சிற்றுந்து சென்றது. முதல் அமர்வு காலையில் தனித்தனி அமர்வுகளாக நடந்தன. இரண்டு இடங்களில் நடந்த அமர்வுகளில் நாங்கள் பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் தலைமையில் மூவர் கட்டுரை வழங்கினோம். இன்னொரு அரங்கில் நடந்த நிகழ்வுபற்றி அறியமுடியவில்லை. நண்பர் இல.சுந்தரம் அவர்கள் அந்த அரங்கில் கட்டுரை வழங்கியதைப் பின்பு அறிந்தேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாலா அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த மூன்று கட்டுரைகளை வழங்கினார், தமிழ்க்கதை ஒன்றைக் கொடுத்தால் தானே அதற்குரிய படங்களை வரைந்துகொடுக்கும் மென்பொருள் உருவாக்கம் பற்றி அவையில் சொன்னதும் அனைவரும் மகிழ்ந்தோம். ஆய்வாளர் பியூலா அவர்கள் செய்திகளுக்குரிய உணர்வுசார்ந்த படங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் பற்றிப் பேசினார்.

நான் இணையவழித் தமிழ்ப்பாடங்கள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். முன்னாள் துணைவேந்தர்கள் மு.ஆனந்தகிருட்டினன், மு.பொன்னவைக்கோ உள்ளிட்ட அறிஞர்களும், பன்னாட்டுக் கணினி, இணைய ஆர்வலகளும் பார்வையாளர்களாக இருந்தனர். என் கட்டுரையைப் படிக்கத்தொடங்கியபொழுது நண்பர் சங்கரபாண்டியும், மருத்துவர் சித்தானந்தம், குணா அவர்களும் தனித்தனியாக வந்து அரங்கில் அமர்ந்தனர்.மருத்துவர் சோ.இளங்கோவன், பேரா. வாசு உள்ளிட்டவர்களும் அரங்கில் இருந்தனர்.


என் கட்டுரை வழங்கப்பட்டபோது கலந்துகொண்ட அறிஞர்கள்

தேநீர் இடைவேளைக்குப் பிரிந்தோம்.

பிறகு பொது அமர்வு தொடங்கியது. பேராசிரியர் சிப்மன் அவர்கள் தலைமையில் நடந்த பொது அமர்வில் பேராசிரியர்கள் இ.அண்ணாமலை, வாசு, முருகையன், இராதாசெல்லப்பன் கட்டுரை வழங்கினர். அண்ணாமலை, வாசு கட்டுரை பேச்சுத் தமிழ் குறித்து அமைந்ததால் உரையாடல் விறுவிறுப்பாகச் சென்றது.

அதன்பிறகு உணவுக்குப் பிரிந்தோம்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தனி அமர்வுகள் நடந்தன. தமிழகத்தின் இனிய நேரு கட்டுரை படித்தார். வேறொரு அரங்கில் இருந்ததால் நான் செல்லமுடியவில்லை. இதன் இடையே திருக்குறள் போட்டி குழந்தைகளுக்கு நடந்தது. பிள்ளைகளும் பெற்றோர்களும் அரங்கில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நம் தமிழ்க்குழந்தைகள் திருக்குறளைச் சொல்ல முயன்ற பாங்கு அறிந்து மகிழ்ந்தேன். திருவாளர் துரைக்கண்ணன் அவர்கள் தம் குழந்தையுடனும் தந்தையாருடனும் வந்திருந்தார். மீண்டும் சந்திக்க நினைத்தோம். இயலவில்லை. மலேசிய அன்பர்களின் கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. இளந்தமிழ் கட்டுரையும் பாராட்டுக்கு உள்ளானது.

சார்சாவிலிருந்து திரு.மு.சித்தநாதபூபதி வந்திருந்தார். முன்பே அறிமுகம் ஆனோம். அவர் கட்டுரை “வெண்பா நிரல்: வெண்பாவிற்கான பொது இலக்கணங்களைச் சரிபார்க்கும் நிரல்” என்ற தலைப்பில் கட்டுரையை வழங்கினார். மிகச்சிறந்த கட்டுரை. தமிழுக்கு ஆக்கமான கட்டுரை.

கட்டடக்கலைப் பொறியாளரான பூபதி அவர்கள் தமிழ் இலக்கணங்களை உள்வாங்கிக்கொண்டு, ஓரளவு தமக்குத் தெரிந்த(அவரே சொன்னது) தொழில்நுட்பத்தைக் கொண்டு இவர் உருவாக்கிய இந்த நிரல் தமிழுக்கு ஆக்கமான நிரல். மைக்ரோசாப்டு எக்செல் தொழில்நுட்பம்கொண்டு இதனை உருவாக்கியுள்ளார். இதனை இன்னும் மேம்படுத்தி வழங்கினால் உலகத் தமிழர்கள் மகிழ்வர். (கோபி, முகுந்து போன்ற கணினித்துறை ஆர்வலர்கள் இவரைத் தொடர்புகொண்டு தமிழுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பது என் கோரிக்கை.)

இதுபோல் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கட்டளைக் கலித்துறைக்கும் நிரல் உருவாக்கினால் அருகிவரும் தமிழ் யாப்பறிபுலவர்களின் எண்ணிக்கையை இவரின் நிரல் சரிசெய்யும்.
காசுகொடுத்தால்தான் நிரல்களை வழங்குவோம் என்று அடம்பிடிக்கும் கணினி ஆர்வலர்களிடமிருந்து வேறுபட்டுத் திருவாளர் பூபதி அவர்கள் இந்த நிரலை அனைவருக்கும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளமைக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். இவரைத் தனியே கண்டுரையாடிப் பின்னும் எழுதுவேன். இவரிடமிருந்து தமிழுக்கு இன்னும் எதிர்பார்க்கின்றேன்.

மற்ற அமர்வுகளில் நடந்த கலந்துரையாடல்கள், கட்டுரை வழங்கலில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்தினேன். மாலையில் உத்தமம் உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. கலந்துகொண்டேன். அனைவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு நானும் மருத்துவர் சோம.இளங்கோவன் இணையர், மருத்துவர் சித்தானந்தம் இணையர் ஓர் இந்திய உணவகம் தேடி, இரவு உணவு உண்டு, உரையாடி மகிழ்ந்தோம்.


மரு.சித்தானந்தம், மு.இ, மரு.சோம.இளங்கோவன்,பேராசிரியர் கல்யாணசுந்தரம்

மரு. சோம. இளங்கோவன் ஐயாவையும் அவர்களின் துணைவியாரையும் தொடர்வண்டி நிலையத்தில் விட்டுவிட்டு என்னைக் கொண்டுவந்து அறையில் விட்டு மரு.சித்தானந்தம் அவர்கள் வேறொரு விடுதிக்கு இரவு பதினொரு மணியளவில் சென்றார்.

இன்று(19.06.2011) நிறைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு மருத்துவர் சித்தானந்தம் அவர்களுடன் பென்சில்வேனியா, பிளடல்பியா பகுதிகளைச் சுற்றிப் பார்க்க உள்ளேன். இரவு வாசிங்டன் சென்று திரு. சித்தானந்தம் ஐயா அவர்களின் விருந்தோம்பலில் இருப்பேன்.

இணையவழித் தமிழ்ப்பாடங்கள்


அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணையமாநாட்டில் முனைவர் மு.இளங்கோவன் ஆய்வுரை வழங்குதல்

  தமிழ்மொழி செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் சொத்தாக இம்மொழி உள்ளது. தமிழ்மொழியைக் கற்கவும், தமிழ் இலக்கியங்களை - இலக்கணங்களைக் கற்கவும் அரசு, பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிநபர்களின் பங்களிப்பால் இணையத்தில் செய்திகள் பலவகையில் உள்ளிடப்பட்டுள்ளன. இவை இன்னும் சில தளங்களில் மேம்படுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளன.

  தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழம்.நெட் தளங்களிலும், பிற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் தளங்களிலும் தமிழ் எழுத்துகளை அறியவும், படிக்கவும், எழுத்துகளைக் கூட்டிச் சொற்களைப் படிக்கவும் , சொல்வளம் பெருக்கவும் வசதிகள் உள்ளன. தமிழ் வழியில் தமிழ் படிக்கவும், ஆங்கில வழியில் தமிழ் படிக்கவும் வசதிகள் உள்ளன.
பல்கலைக்கழகங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றித் தனி மாந்தர்களும் தமிழ்க்கல்வியைக் கணினி, இணையத்தில் கற்க இத்துறையில் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிலரின் முயற்சி இணையத்தில் இருப்பதால் உலக அளவில் பலராலும் பயன்படுத்த முடிகின்றது. சிலரின் முயற்சி குறுவட்டுகளில் மட்டும் இருப்பதால் உலக அளவில் அவர்களின் துணையில்லாமல் பயன்படுத்த முடியவில்லை. எனவே குறுவட்டில் தமிழ்க்கல்வியைத் தயாரித்து வைத்துள்ளவர்கள் இணையத்தில் ஏற்ற வேண்டும்.

  தமிழ்க்கல்வி குறித்த பாடங்களை உலக அளவில் அமைக்கும்பொழுது பிறநாட்டுச்சூழல் உணர்ந்து வடிவமைக்க வேண்டியுள்ளது. தமிழகத்துக் குழந்தைகளுக்கு உருவாக்கும்பொழுது தமிழகத்துச் சூழலை உணர்ந்து வடிவமைக்க வேண்டும். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் வடிவமைக்கப்படும் பாடங்கள் அந்தந்த நாட்டுச் சூழலை உணர்ந்து வடிவமைக்க வேண்டும். ஆனால் அண்மைக்காலம் வரை தமிழகத்தைச் சார்ந்து, பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

  இணையத்தில் தமிழ்க் கல்விக்குப் பயன்படும் செய்திகள் பாடல்களாகவும், கதைகூறும் பகுதிகளாகவும் யு டீயூப் தளங்களில் பல உள்ளன. இணையத்தில் உள்ள தமிழ்க்கல்வி சார்ந்த செய்திகள் தொடக்க நிலை, அடிப்படை நிலைகளைக் கொண்டு மட்டும் உள்ளது. இவற்றின் தன்மைகளை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.

  மேலும் உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி, பல்கலைக்கழகம், ஆய்வுசார்ந்த பாடத்திட்டங்கள், பேச்சுரைகள், காட்சி விளக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாகத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், காப்பியங்கள், பக்திப் பனுவல்கள், நன்னூல், இக்கால இலக்கியம் முதலான பாடங்கள் அறிஞர்களின் பேச்சுகளாகவும் (ஒலி-ஒளி), காட்சியுரைகளாகவும்(Power Point) உருவாக்கப்பட வேண்டும். இதனை எவ்வாறு உருவாக்குவது, பராமரிப்பது, இதன் பயன்பாடு, பற்றிய செய்திகளைத் தாங்கி இக்கட்டுரை அமைகின்றது.


பென்சில்வேனியா பல்கலைக்கழத்தின் முயற்சி

  பென்சில்வேனியாவில் பேராசிரியர் ஷிப்மேன், முனைவர் வாசு ஆகியோரின் முயற்சியில் இணையம் வழியாகத் தமிழ்கற்றல், பயிற்றுவித்தலுக்குரிய பாடப்பகுதிகளை உருவாக்கி இணையத்தில் வைத்துள்ளனர். (http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/). இதில் இடம்பெற்றுள்ள பாடப்பகுதிகள் பிறமொழிச்சூழலில் தமிழ் கற்போருக்கு உதவும் வகையில் உள்ளன.

  நெடுங்கணக்கு அறிமுகப் பகுதியில் தமிழ் உயிர் எழுத்துகளையும், உயிர்மெய் எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளையும் எழுதவும் ஒலிக்கவுமான பயிற்சிகள் உள்ளன. தமிழ் எழுத்துகளும் அதனை ஒலிக்க உதவும் ஆங்கில எழுத்துகளும் இருப்பதால் ஆங்கிலம் அறிந்தார் தமிழ் கற்க இந்தப் பகுதி பயன்படும். இந்தத் தளத்தைப் பயன்படுத்த எழுத்துருக்கள் தரவிறக்கம், ஒலிப்புக்கருவி மென்பொருள் தரவிறக்கம் செய்ய வேண்டும். தமிழ் எழுத்துகளை (உயிர், மெய்) நினைவுப்படுத்திக்கொள்ள அமைக்கப்பட்டுள்ள படக்காட்சிகள் தமிழ் எழுத்துகளை அறிவோருக்கு நன்கு பயன்படும். மெய்யெழுத்தும் உயிர் எழுத்தும் இணைந்து எவ்வாறு உயிர்மெய் எழுத்து உருவாகின்றது என்ற வகையில் படக்காட்சி வழியாக நன்கு விளக்கப்பட்டுள்ளது.

எ.கா. க்+ அ = க ; ச்+அ = ச; ண்+ஓ = ணோ

  ஒரு எழுத்துக்கு விளக்கம் கொடுத்து அதுபோல் பிற எழுத்துகளும் எவ்வாறு மாறும் என்பதைப் பயிற்சியில் அறிய வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.

மரம்+ஐ= மரத்தை என்று சாரியை உருவாகும் விதமும் காட்டப்பட்டுள்ளது.
வீடு+இல்= வீட்டில் என்று மாறுவதும் காட்டப்பட்டுள்ளது.

  பேராசிரியர் ஷிப்மென் அவர்களின் விளக்கம் தொடுப்புகளின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

 பேச்சுத் தமிழுக்குரிய அடிப்படைக் கருவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வகுப்பறை, வீடு, பொது இடங்களில் பயன்படுத்தப்படும் உரையாடலில் இடம்பெறும் சொற்களை அறிமுகப்படுத்தும் பயிற்சிகளும் ஒலிப்பு வசதிகளுடன் உள்ளன. இவற்றில் வினா-விடை முறை காணப்படுகின்றது. தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கி இதனைப் படிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலம்-தமிழ் ஒலிப்பு வசதிகள் இருப்பதால் பிறமொழியினர் தமிழைக் கற்க இந்தத் தளம் பேருதவியாக இருக்கும்.

  வினா விடை வடிவம், ஆம் இல்லை வடிவம் எனப் பல வடிவங்களில் சொற்களையும் தொடர்களையும் அறிமுகப்படுத்தி ஆங்கிலத்தின் துணையுடன் தமிழ் கற்பிக்க இந்தத் தளம் பலவகையான நுட்பங்களைக் கொண்டு விளங்குகின்றது.

  விடுபட்ட சொற்களைப் பொருத்துதல், பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்களை உருவாக்குதல் என்ற வகையில் இடம்பெற்றுள்ள பயிற்சிகளும் நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் காட்டும் பயிற்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாய்மொழியாக வழங்கப்பட்டுவரும் நாட்டுப்புறக்கதைகளை அறிமுகப் படுத்துதல் தமிழ் மரபு அறிவிக்கும் செயலாக உள்ளது. தமிழர் பண்பாடு உணர்த்தும் கலைகள், பழக்கவழக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தமிழர் மரபு அறியவிழைவார்க்குப் பேருதவியாக இருக்கும்.

 ஒருங்குகுறி எழுத்துகளைப் பயன்படுத்தும்பொழுதும், தொழில்நுட்பம் எளிமைப்படுத்தித் தரும்பொழுதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் விரும்பப்படும் தளமாக இது விளங்கும்.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளம் http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm

  தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தில் தமிழ் கற்பதற்குரிய பலவகை வசதிகள் உள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் உள்ள வசதிகள் யாவும் தமிழ்ச்சூழலில் தமிழ் கற்பாருக்கு உதவும் பொருள்களாக உள்ளன. தமிழை அறிமுக நிலையிலிருந்து பட்டக்கல்வி வரை இந்தத் தளம் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது. மழலைக்கல்வி, பாடங்கள், பாடநூல்கள், இணையவகுப்பறை, நூலகம், அகராதி, கலைசொற்கள், சுவடிக்காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் எனும் தலைப்புகளில் உள்ள செய்திகள் யாவும் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் அறிய விழைவார்க்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மழலைக்கல்வி என்ற பகுதியில் பாடல்கள், கதைகள், உரையாடல், வழக்குச்சொற்கள், நிகழ்ச்சிகள், எண்கள், எழுத்துகள் என்னும் தலைப்புகளில் அமைந்து தொடர்புடைய செய்திகள் பொருத்தமுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

  பாடல்கள் என்ற பகுப்பில் கோழி, காக்கை, கிளி, பசு, முத்தம் தா, நாய் என்று சிறுவர்களுக்குக் கதைப்பாட்டு வழியாகத் தமிழ் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்தப் பாடல்கள் இசையமைப்புடனும், படக்காட்சியுடனும் தரவிறக்குவதில் எந்தச் சிக்கலும் இல்லாததால் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும்.

  பாடல்களும் பயிற்சிகளும் எனும் பகுதியில் பாடல்களைக் குழந்தைகள் கற்பதற்குரிய வசதிகள் உள்ளன. பயிற்சி பெறுவதற்குரிய கட்டளைகள் எளிமையாக உள்ளதால் குழந்தைகள் தாமே கற்க இயலும். பயிற்சி பெறுவதற்குரிய பகுதியில் நிலா, கைவீசம்மா, காகம், என் பொம்மை, எங்கள்வீட்டுப்பூனை, பம்பரம் எனும் தலைப்பில் மாணவர்களுக்குப் புரியும்படியான பாடல்கள் உள்ளன.

  கதைகள் என்னும் தலைப்பில் குப்பனும் சுப்பனும்(கோடரிக்கதை), கொக்கும் நண்டும், புத்தியின் உத்தியால் பிழைத்த குரங்கு, தாகம் தணிந்த காகம் எனும் தலைப்பில் கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் முன்பே தமிழகத்துக் குழந்தைகளுக்கு அறிமுகமான கதைகள் அல்லது பின்புலங்களைக் கொண்டவை என்பதால் எளிமையாகப் புரியும். இந்தக் கதைகளை எடுத்துரைக்கும் முறையில் அமைத்துள்ளதால் பிறர் உதவியின்றிக் குழந்தைகள் தாமே கதைகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. காட்சி, ஒலி வழி அமைந்துள்ளதால் எளிமையாகப் புரிந்துகொள்வர்.

உரையாடல்

  உரையாடல் பகுதியில் ஏழு உரையாடல் பகுதி உள்ளது. குழந்தைகளுக்கு நற்பண்புகளை ஊட்டும் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் படக்காட்சியுடன் விளக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு நற்பண்புகளை ஊட்டும் இந்தப் பயிற்சியின் வழியாகச் சொற்கள் நன்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வழக்குச்சொற்கள்

  பறவைகளின் ஒலிகள், காய்கள், வீடுகள், விலங்குகளின் ஒலிகள், பழங்கள், கிழமைகள், உறவுப் பெயர்கள், நிறங்கள், சுவைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆறுவகைப் பறவைகளின் ஒலிகள் இங்குக் காட்டப்பட்டுள்ளன. காய்களின் பெயர்கள் ஒலித்துக்காட்டப்படுவதால் சொற்களை எளிமையாகக் குழந்தைகள் அறிவார்கள்.

  நிகழ்ச்சிகள் என்ற பகுதியில் நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் குறித்த காலம் அறிவிக்கும் பயிற்சிகள் உள்ளன.

  எண்கள் என்ற தலைப்பில் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாடம் - பாடல் - பயிற்சி என்னும் பகுப்பில் செய்திகள் உள்ளன. இதில் உள்ள பயிற்சிகள் பகுதியில் எண்களின் ஒலியைக் கேட்டுப் பொருத்தமான படத்தைச்சுட்டும் பகுதி அமைந்துள்ளது. குறிப்பாக ஒன்று என்னும் ஒலியைக் கேட்டு, ஒரு பொம்மை உள்ள படத்தைச் சுட்டியால் சுட்ட வேண்டும். பொருத்தமானவற்றைச் சுட்டினால் சரியான விடை எனவும் பொருத்தம் இல்லை என்றால் தவறான விடை என்றும் குறிப்புகள் ஒலிக்கும்.
பாடல் என்ற பகுப்பில் ஒன்று முதலான எண்கள் பாடல்வடிவிலும் காட்சி வடிவிலும் விளக்கப்பட்டுள்ளன.

  எழுத்து என்னும் பகுப்பில் பாடம் - பயிற்சி - பாடல்கள் என்ற தலைப்பில் செய்திகள் உள்ளன. உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள், ஒரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள், மூன்று எழுத்துச் சொற்கள், நான்கு எழுத்துச் சொற்கள், ஐந்து எழுத்துச் சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

  தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் எளிமையிலிருந்து கடுமைக்குச் செல்வது என்ற அடிப்படையில் பாடங்கள் கதையும் பாட்டுமாகத் தொடங்கி நிறைவில் எழுத்து, சொல் அறிமுகமாக வளர்ந்துள்ளது.

  தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் மழலைக்கல்வி- சான்றிதழ்க்கல்வி, மேற்சான்றிதழ்க் கல்வி, இளநிலைக் கல்வி(B.A) உள்ளிட்ட பாடப்பகுதிகளின் பாடங்களும் உள்ளிடப்பட்டுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள பாடங்கள் மாணவர்களின் கல்விநிலையை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பினும் அவர்களின் உள்ள நிலையை மனத்தில் கொண்டு உருவாக்கப்படவில்லை.

  இணைய வகுப்பறை விரிவுரைகள் என்னும் பகுப்பில் சான்றிதழ்க்கல்விக்கான பாடங்கள் அடிப்படைநிலை, இடைநிலை, மேல்நிலை என்று வகுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் நன்னன், சித்தலிங்கையா ஆகியோர் இதற்குரிய பாடங்களை அறிமுகம் செய்கின்றனர். ஆங்கில வழியிலும் தமிழ்ப்பாடப்பகுதிகள் சித்தலிங்கையா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

  சைவ சமயம் சார்ந்த பகுதிகள் அறிமுகம் செய்யப்படுவது போல் தமிழின் சங்க நூல்கள், இலக்கணங்கள், இலக்கியங்கள் தமிழகத்து அறிஞர்களால் பாடமாக நடத்தப்பட்டுத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பாடப்பகுதிகளில் வைக்கப்பட வேண்டும். ஒரு பாடத்தைப் பல அறிஞர்கள் நடத்தி அந்தப் பகுதிகள் பயன்பாட்டுக்கு இருந்தால் தேவையானவர்களின் விரிவுரைகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் பயில முடியும். சான்றாகத் தொல்காப்பியப் பாடத்தை முனைவர் கு.சுந்தரமூர்த்தி, சங்க இலக்கியங்களை முனைவர் தமிழண்ணல், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்களை முனைவர் சோ.ந.கந்தசாமி, சிலப்பதிகாரத்தை முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் போன்ற அறிஞர்களின் பேச்சுப்பதிவுகளாகத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்.

பொள்ளாச்சி நசனின் முயற்சி http://www.thamizham.net/

  பொள்ளாச்சி நசனின் தமிழம்.நெட் தளத்தில் தமிழ் கற்கும் வசதி அமைந்துள்ளது. இத்தளத்தில் தமிழை ஆங்கிலம் வழியாகப் பயிற்றுவிக்கும் வகையில் செய்திகள் உள்ளன. மற்ற தளங்கள் நெடுங்கணக்கு அடிப்படையில் தமிழை அறிமுகம் செய்வதிலிருந்து மாறுபட்டு எழுதுவதற்கு எளிய எழுத்துகளை முதலில் அறிமுகம் செய்து பிறகு மற்ற எழுத்துகளை நசன் அறிமுகம் செய்கின்றார். ட, ப, ம என்று இவரின் எழுத்து அறிமுகம் உள்ளது.

  எடுத்துக்காட்டாக ஐந்து நிலைகளில்(Level) 19 பாடங்களை (Lesson) இவர் அமைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பயிற்சிகளை அமைத்து அடுத்த ஐந்து நிலைகளில் பதினாறு பாடங்களை அமைத்துள்ளார். ஐந்து பாடல் பகுதிகளை அமைத்து அதில் 247 எழுத்துகளையும் பாடி அறியும்படியும் நசன் செய்துள்ளார். அதுபோல் ஓரெழுத்துச்சொற்கள் ஈரெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் இவற்றையும் பட்டியலிட்டு அறிமுகம் செய்துள்ளார்.

தமிழ்க்களம் (http://tamilkalam.in/)

  தமிழ்க்களம் தளத்தில் குறியிலக்கும் நோக்கங்களும், தமிழ் கற்றல் கற்பித்தல், வகுப்பறை என்னும் மூன்று பகுப்பில் செய்திகள் உள்ளன. தமிழ்க்களத்தில் பாடங்கள் மூன்று பெரும் பகுதிகளாக அமைந்துள்ளன.

பகுதி 1: எழுத்துகள் அறிமுகமும் அவற்றாலான சொற்களைப் படித்தலும் எழுதலும். பகுதி 2: சொற்களஞ்சியம் பெருக்கம். பகுதி 3: கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்களில் உயர்நிலை எய்துதல்

பகுதி 1: பகுதி ஒன்றில் பதினான்கு பாடங்கள் தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் அறிந்து ஒலித்துப் பயிற்சி பெற அமைந்துள்ளன. அவ்வெழுத்துகளாலான எளிய சொற்களைப் படிக்கவும் , எழுதவும் பயிற்சிபெற விரும்புவோர் அப்பாடங்களில் தொடர்ச்சியாகப் பயிற்சி பெறவும் வழியமைக்கப்பட்டுள்ளது.

 வரிவடிவ எழுத்துப் பயிற்சிக்கு என எட்டுப் பாடங்கள் அமைந்துள்ளன ஒவ்வொரு பாடமும் மூன்று கூறுகளை உட்கொண்டுள்ளன.

  தமிழ்ப் பாடங்கள் பேராசிரியர் திரு.வி.கணபதி புலவர் இ.கோமதிநாயகம் ஆகியோரால் எழுதப் பெற்றுள்ளன. தமிழ்க்களத்தில் எழுத்துரு தரவிறக்கம், ஒலிப்புக்குரிய மென்பொருள் தரவிறக்கம் தேவைப்படுகின்றன. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி http://www.pallikalvi.in/

  பள்ளிக் கல்வி என்னும் தமிழக அரசின் தளத்தில் பள்ளிக்கல்விக்குரிய பாடநூல்கள் இடம்பெற்றுள்ளன(கட்டுரை உருவான சமயத்தில் சமச்சீர் கல்வி குறித்த சிக்கலால் பாடநூல்கள் இடம்பெறவில்லை. எனவே விரிவாகப் பார்வையிட இயலவில்லை).

தமிழமுதம் http://www.tamilamudham.com/Jan11.html

   தமிழமுதம் என்ற இணையவழி வானொலியில் தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பாடல்கள் ஒலிவழியாகக் கேட்கும் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாகத் திருவெம்பாவைப் பாடல்கள், திருமுறைகள்(பித்தா பிறைசூடி) கேட்கும்வகையில் இனிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம் http://www.tamil-online.info/Introduction/learning.htm

  மைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தின் சார்பில் தமிழ்ப்பாடங்கள் இணையத்தில் உள்ளன. இதில் இணையம் வழியாகத் தமிழ் கற்க 500 உருவா கட்டணம் கட்டிப் படிக்க வேண்டும்(அமெரிக்க டாலர் 50). மாதிரிப்பாடங்கள் சிறிது வைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பு வசதி உண்டு. எழுத்துகளைத் தரவிறக்கிக் கற்க வேண்டும். தளம் புதுப்பிக்கப்பட வேண்டும். தரமான முயற்சியில் இத்தளம் தமிழை அறிமுகப்படுத்துகின்றது.


வடக்குக் கரோலினா பல்கலைக்கழகம் http://www.unc.edu/~echeran/paadanool/home.html

  வடக்குக் கரோலினா பல்கலைக்கழகத் தளத்தில் தமிழ் கற்பதற்குரிய பல வசதிகள் உள்ளன. முன்னுரையுடன் மூன்று பகுதிகள் உள்ளன. பன்னிரு இயல்கள் உள்ளன. 38 பாடங்கள் உள்ளன. பின்னிணைப்புகளும் உள்ளன. தமிழ் கற்பதற்குரிய அடிப்படைச்செய்திகள் எழுத்துருச் சிக்கல் இன்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பு வசதி, எழுதிக்காட்டும் வசதி யாவும் கொண்டு தரமான தளமாக இந்தத் தளம் உள்ளது

இந்தியானா பல்கலைக்கழகம் http://www.iu.edu/~celtie/tamil_archive.html

 இந்தியானா பல்கலைக்கழகத்தின் தளத்திலும் தமிழ் கற்பதற்குரிய வசதிகள் உள்ளன.
.
தமிழ் டியூட்டர் http://www.tamiltutor.com/

  தமிழ் டியூட்டர் என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டால் தமிழைக் கற்கும் வசதியை இந்தத் தளம் தருகின்றது..

குழந்தைகளுக்கான தளம் http://www.kidsone.in/

குழந்தைகளுக்கான பன்மொழி கற்கும் வாய்ப்புடைய தளம் இது. இதில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழி அறிமுகம் எளிய நிலையில் செய்யப்பட்டுள்ளது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் http://www.uptlc.moe.edu.sg/

  இனிய இசைகொண்ட அறிமுகப்பாடலுடன் இந்தத் தளம் விரிகின்றது. சிங்கப்பூர் கல்வி அமைச்சின் சார்பிலான தளம். சிங்கப்பூரில் தமிழ் கற்பிக்கும் சில காணொளிப் பகுதிகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்கள் சிலவும் காட்சி விளக்கவுரைகளும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன (http://www.uptlc.moe.edu. sg/index.php/ntlrc/primary).

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின்முயற்சி http://www.srmuniv.ac.in/tamil_perayam.php#

  எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் வழியாக இணையவழிக் கல்வி, கணினித்தமிழ்க் கல்வி அளிக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. தமிழ் முதுகலை, இளம் முனைவர் பட்டத்திற்குரிய பாடப்பகுதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தளம் தமிழ் உயர்கல்விக்கான தேவைகளை நிறைவுசெய்யும் என நம்பலாம்.

தமிழ் டைசஸ்டு http://www.tamildigest.com/

  தமிழ் டைஜஸ்ட் திட்டம், ஆங்கில மொழியைப் பயன்படுத்தி, தொடக்க நிலையிலிருந்து மேம்பட்ட நிலைவரை தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இணையம் வழியாக இத்திட்டம் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழ்நாட்டிற்கு வெளியே, மற்றும் இந்தியாவிற்கு வெளியேயும் வாழ்ந்துவரும் தமிழ் பேசும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் டைஜஸ்ட் திட்டம் தன் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

  16 வெவ்வேறு நிலைகளில் உள்ள பாடத்திட்டம் இதில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டமும் சற்றொப்ப ஒன்றரை மணி நேரம் வரை ஓடக்கூடியது. பாடத்திட்டத்தை ஹை என்ட் டிஜிடல் காணொளியிலும், எலக்ட்ரானிக் அல்லது வன்படி பயிற்சிப் புத்தகம் வழியாகவும் தமிழ் டைஜஸ்ட் திட்டம் வழங்குகிறது. இந்தப் பாடத் திட்ட முறைகள், குழந்தைகள், பெரியவர்கள் என்று வேறுபாடு இல்லாமல் தமிழ் கற்கும் பட்டறிவை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள உதவுகிறது. ஆறு மாதங்களில் தமிழ் கற்கும் வசதியை இந்தத் தளம் வழங்குகின்றது.

  இந்தத் தளத்தின் பாடத்திட்டங்களைப் பயன்படுத்த கட்டணம் கட்டுதல் வேண்டும். மாதிரிப்பகுதிகள் இணையத்தில் உள்ளன.

  ஆங்கிலம் வழியாகத் தமிழ் மொழியைக் கற்கத், தொடக்க நிலையிலிருந்து உயர்நிலை வரை மிகச்சிறப்பாகப் பாடத்திட்டங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்க்கல்விக்கழகம் http://www.tamilacademy.com/

  தமிழ்க்கல்விக்கழகம் தளத்தில் அயலகத்தில் உள்ள தமிழ்க்குழந்தைகள் படிக்கும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. கட்டணம் கட்டி இணையம் வழியாக இந்தத் தளத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தலாம். தொழில்நுட்ப வசதிகளுடன் கண்ணைக்கவரும் வகையில் இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

  இணையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ப்பாடங்கள் அவரவர்களின் வாய்ப்புகள், தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. உயர்கல்விக்குரிய பாடங்கள் இனிதான் உருவாக்கப்பட வேண்டும் அகவை முதிர்ந்த நிலையில் உள்ள தமிழ்ப்பேரறிஞர்களின் வாய்மொழி வடிவில் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள் பாடமாக நடத்தப்பெற்று இணையவெளியில் பாதுகாக்கப்பட வேண்டும். அதுபோல் பிறநாட்டுத் தமிழறிஞர்களின் வாய்மொழியிலும் தமிழ்ப்பாடங்கள் நடத்தப்பெற்றுத் தொகுக்கப்பெற வேண்டும். தமிழ் சார்ந்த பாடங்கள் உருவாக்கும் முயற்சி உலக அளவில் நடந்தாலும் இவற்றை எல்லாம் ஒரு குடையில் பார்க்கவும், ஆராயவும், பாடத்திடங்களுக்கு இடையே ஓர்மை காணப்படவும் அறிஞர்கள் சிந்திக்கவேண்டும்


இணையவழித் தமிழ்க் கல்விக்குரிய தளங்கள்:

1.http://www.pallikalvi.in/Schools/Samacheerkalvi.htm

2.http://tamilkalam.in/

3.http://www.tamil-online.info/Introduction/design.htm

4.http://www.plc.sas.upenn.edu/tamilweb/

5.http://www.uptlc.moe.edu.sg/

6.http://www.tamilvu.org/

7.http://ccat.sas.upenn.edu/~haroldfs/tamilweb/webmail.html

8.http://www.maharashtraweb.com/learning/learningTamil.htm

9.http://www.tamilamudham.com/tamil-resources.html

10.http://www.tamil-online.info/Introduction/learning.htm

11.http://www.talktamil.4t.com/

12.http://www.tamiltoons.com/view/14/tamil-alphabet-/

13.http://www.thamizham.net/

14.http://ethirneechal.blogspot.com/2010/06/learn-tamil-online.html

15.http://www.thetamillanguage.com/

16.http://www.unc.edu/~echeran/paadanool/home.html http://www.learntamil.com/

17.http://www.tamilo.com/learn-tamil-education-57.html

18.http://www.languageshome.com/

19.http://www.google.com/search?q=learn+tamil&hl=en&prmd=vnb&source=univ&tbs=vid:1&tbo=u&ei=4AfqS5utMIfStgODn7WiDg&sa=X&oi=video_result_group&ct=title&resnum=4&ved=0CDkQqwQwAw

20.http://www.saivam.org.uk/saivamTamil.htm

21.http://www.ukindia.com/zip/ztm1.htm

22.http://www.tamilcube.com/tamil.aspx

23.http://www.mylanguageexchange.com/Learn/tamil.asp

24.http://kids.noolagam.com/

25.http://www.tamilunltd.com/

26.http://languagelab.bh.indiana.edu/tamil_archive.html#basic

27.http://www.srmuniv.ac.in/tamil_perayam.php#

28.http://www.tamildigest.com/

29.http://www.youtube.com/watch?v=euFzMK4LS8o&feature=related

30.http://www.catamilacademy.org/

31.http://noolagam.org/

32.http://kids.noolagam.com/

33.http://www.tamilacademy.com/


*அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற(2011 சூன் 17-19) கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரை. தமிழ் இணையம்2011 மாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரையின் இற்றைப்படுத்தப்பட்ட வடிவம்.

* கட்டுரையைப் பயன்படுத்துவோர் தவறாமல் எடுத்தாண்ட இந்த இணையதள முகவரியைக் குறிப்பிடவும்.