நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 செப்டம்பர், 2013

வழக்கறிஞர் க.இராசவேலு செண்பகவல்லி அவர்களின் தமிழ் வாழ்க்கை



வழக்கறிஞர் க.இராசவேலு செண்பகவல்லி அவர்கள்


திருச்சிராப்பள்ளியில் தமிழ்த்தொண்டாற்றிய அறிஞர்களுள் வழக்கறிஞர் க .இராசவேலு அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது(1993 - 97) தமிழ்த்துறையில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகளுக்குத் தவறாமல் வருகை தரும் பெருமகனார் நம் இராசவேலு ஐயா அவர்கள் ஆவார். என் பேராசிரியர் எழில்முதல்வன் அவர்களிடத்து மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தவர். இருவருக்கும் இடையில் மிகச்சிறந்த நட்பு இருந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் எங்கள் பேராசிரியர் எழில்முதல்வன் அவர்கள் வழக்கறிஞர் க. இராசவேலு அவர்களின் சிறப்பினை நினைவுகூர்வார்கள். பேராசிரியர் எழில்முதல்வன் அவர்கள் செண்பகத் தமிழ் அரங்கில் சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றியதாகவும் எனக்கு நினைவு உள்ளது.

தொலைபேசியிலும் மடலிலுமாக வழக்கறிஞர் க. இராசவேலு அவர்களிடம் நான் நீண்ட  நட்புகொண்டிருந்தேன். தமிழறிஞர்களை அழைத்துப் பேசச்செய்து அவர்களின் பேச்சை முறையாக ஒலிவடிவில் பதிந்துவைத்துள்ள வழக்கறிஞர் க. இராசவேலு ஐயா அவர்களின் பாங்கு தமிழர்களால் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். வழக்கறிஞர் க.இராசவேலு அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைப்பதில் பெருமைகொள்கின்றேன்.

                1936 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 20 ஆம் நாள், கந்தசாமி சின்னம்மாள் என்னும் பெற்றோர்க்கு ஐந்தாம் மகவாகத் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தில் வழக்கறிஞர் க.இராசவேலு பிறந்தவர். பள்ளிக் கல்வியைத் திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லுரிக் கல்வியைத் திருச்சிராப்பள்ளித் தேசியக் கல்லூரி, தூய வளனார் கல்லூரி ஆகியவற்றிலும் கற்று, பொருளாதாரத்தில் பி.ஏ.ஆனர்சு  பட்டம் பெற்றர். சட்டப்படிப்பைச் சென்னை அரசு  சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல். பட்டம் பெற்று, வழக்கறிஞர் தொழில் மேற்கொண்டர்.

                பள்ளியில் படிக்கும் போதே தமிழ்ப் பாடத்தில் மிகுந்த விருப்பம் காட்டிய இவர் தமிழில் எப்போதும் முதல் மதிப்பெண்களே பெற்று வந்தார். பள்ளியில் இவருக்குத் தமிழ்ப்பாடம் கற்பித்தவர் தமிழ்மாமணிபுலவர் அ.சேதுமாணிக்கனார் ஆவார். பள்ளியில் படிக்கும்போதே இவரும், இவர் நண்பர் நா. இராமசாமி என்பவரும் சேர்ந்து மதிஎன்னும் கையேட்டிதழை வெளியிட்டு வந்தனர். அந்த மதிஎன்னும் கையோட்டிதழில் இவர் பல கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.

                பள்ளியில் படிக்கும் போதே தொல்காப்பியர் கலைக்குழுஎன்னும் ஒரு நாடகக் குழுவினை உருவாக்கி, அக்குழுவின் மூலம் முதன் முதலாக வீரபாண்டியக் கட்டபொம்மன்வரலாற்றை நாடகமாக எழுதி அரங்கேற்றினார். அதில் முக்கிய பாத்திரமான வீரபாண்டிய கட்டபொம்மன் பாத்திரத்தையும் தாமே ஏற்று நடித்தார்.

நாடக ஆர்வம் இவரைத் தொடர்ந்து பற்றிக் கொள்ள நண்பர் கண்ட கனவு,  இருவிழிகள்,  ஒரேநீதி,  இளங்கோ துறவு முதலிய பல நாடங்களை இவர் எழுதி, அவற்றில் முக்கிய வேடங்களையும் ஏற்று நடித்துள்ளார். இவருடைய நண்பர் கண்ட கனவுநாடகத்தைக் கண்ணுற்ற நாடகக்காவலர் ஆர்.எஸ். மனோகர் அவர்கள் மிகவும் புகழ்ந்து பாராட்டினார். அதேபோல் இவருடைய இளங்கோ துறவுநாடகத்தைச் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்கள் பார்த்துப் பாராட்டுரை வழங்கினார்.

1962 நவம்பர் 7ஆம் நாள் இவர் செண்பகவல்லி என்னும் நங்கையைத் தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். இவருக்கு வான்மதி என்ற பெண்ணும், மணிவண்ணன், மதிவாணன், இளங்கோவன், ஆனந்த்பாபு என்னும் ஆண்மக்கள் நால்வரும் உள்ளனர்.

க. இராசவேலு அவர்கள் இளமையிலேயே மேடையில் பேசிப் பழகிப்பயிற்சி பெற்றுத்  தாம் சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கூட்டங்கள் பலவற்றில் பேசியுள்ளார்.

                தேசியக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும் போது இவருடைய தமிழறிவுக்கும், தமிழ்க்கல்விக்கும், தமிழ் ஆர்வத்திற்கும் உரமூட்டியவர், இவருக்குத் தமிழ்ப்பாடம் போதித்த அமரர் பேராசிரியர் இரா.இராதாகிருட்டிணன் அவர்கள் ஆவார்.

க. இராசவேலு அவர்கள் 1969 ஆம் ஆண்டு நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு நகரமன்ற உறுப்பினர் ஆனார். பின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு வாக்கு வேறுபாட்டில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

க. இராசவேலு அவர்கள் திருவரங்கம் அருள்திரு அரங்கநாதர் திருக்கோயிலின் அறங்காவலராகப் பொறுப்பேற்றுப் பின்னர் அத்திருக்கோயிலின் அறங்காவலர் குழுத்தலைவராகவும் ஆறாண்டு காலம் பணியாற்றியுள்ளார். இவர் இப்பொறுப்பில் இருந்த போது திருவரங்கத்தில் கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய அம்மண்டபத்திலேயே கம்பனுக்கு விழா எடுத்தது இவருடைய தனிச் சிறப்பாகும்.

இளமையிலேயே பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் தந்தை பெரியார் அவர்களை ஒரு முறை தம் இல்லத்திற்கு அழைத்து மிகப் பெரிய விருத்தினை வழங்கி மகிழ்ச்சி கொண்டார்.       அருள்மொழியரசு திருமுருக கிருபானந்த வாரியர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற சமயப் பெரியார்களுடனும், கலைஞர், நாவலர், சிலம்புச் செல்வர் போன்ற அரசியல், தமிழ் அறிஞர்களுடனும் நல்ல நட்பும், தொடர்பும் கொண்டிருந்தார்.

                1989 ஆம் ஆண்டு இவருடைய துணைவியார் செண்பகவல்லி அம்மையார் மறைந்தார். கவிதையிலே அதிக நாட்டமில்லாதிருந்த இவர், மனைவியின் மறைவிற்குப்பின் தம்  துணைவியாரைப்பற்றி ஐம்பதாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியதுடன் அவரைப் பற்றி சிறுசிறு கவிதை நூல்கள் பதினாறு வெளியிட்டுள்ளார்.

மறைந்த தன் துணைவியாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில் அவர் பெயரிலேயே செண்பகத் தமிழ் அரங்குஎன்னும் ஓர் அமைப்பினை  1992 ஆம் ஆண்டு சனவரி 18ஆம் நாள் நிறுவி,  21  ஆண்டுகாலமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இலக்கிய, ஆன்மிக, பகுத்தறிவு, அறிவியல் கூட்டங்களை நடத்தி வந்தார். இவ்வமைப்பு ஏற்கனவே இவரால் நடத்தப்பட்டு வந்த தமிழ் அரங்குஎன்ற அமைப்பின் புத்துயிர் ஆக்கமேயாகும். அன்றைய தினம் இவர் நடத்திய தமிழ் அரங்கில், சிலம்புச் செல்வர், ம.பொ.சி, தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் கு.திருமேனி, புலவர் கீரன், கி.வ.ஜ.போன்ற பெருமக்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தமது துணைவியாரைப்பற்றி இவர் எழுதிய கவிதைகளோடு திருமழபாடி இரட்டை மணிமாலை, திருமேனி வெண்பா அந்தாதி, துலுக்க நாச்சியார் நாட்டிய நாடகம், பேராசியர், எம்.எஸ்.நாடார் பற்றிய திருப்பித்தருவாயா? முதலிய பல்வேறு கவிதை நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். காவியம் படைக்க வேண்டும் என்னும் பெரு நோக்கில் இவர் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை பெரும் காப்பியமாக உருவாக்கியுள்ளார்.

குமரிமுனையில் 133அடி வள்ளுவர் உருப்பெற்றது போல் இவர் உள்ளத்திலும் ஓர் எண்ணம் உருப்பெற்றது திருக்குறள் 1330 ஐயும் 1330 இசைப்பாடல்களாக வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுத் திருக்குறள் பாயிரம் நாற்பது குறளை இவர் இசைப்பாடல்களாக வடித்துள்ளார்.

செண்பகத் தமிழ் அரங்கு -  ஓர் அறிமுகம்

தன் துணைவியர் செண்பகவல்லயின் நினைவிப் போற்றவும், தன் தமிழார்வத்திற்கு ஒரு வடிகால் தேடவும், வழக்கறிஞர் க.இராசவேலு உருவாக்கிய அமைப்புத்தான், திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கு ஆகும். திருவள்ளுவராண்டு 2023 தைத்திங்கள்4-ஆம் நாள் (18-01-1992) அன்று புலவர் அ.கே.கேதுமாணிக்கனார் அவர்களது திருக்கரத்தால் தொடங்கப்பெற்ற செண்பகத் தமிழ் அரங்கு சனிக்கிழமைதோறும் கூட்டங்களைத் தொய்வின்றி நடத்தி, இன்று 900-ஆவது கூட்டத்தைக் காண்கின்றது.

        ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு, வழக்கறிஞரின் சிறிய தந்தையார் திரு.சு.தங்கையன் அவர்களின் இளையமகன் அமரர் த.கருணாநிதி நினைவாக, ‘தமிழ்மாமணிஎன்னும் விருது வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

முனைவர் மு.சி.கேசவன், முனைவர் கு.திருமேனி, புலவர் அ.கே.சேதுமாணிக்கனார், கவிஞர் சக்திசரணன், பெரும்புலவர் ப.அரங்கசாமி, முனைவர் அ.ஆறுமுகம், குறளன்பன் ஆ.வே.இராமசாமி, முனைவர் எழில் முதல்வன், நாவலர் சி.அரசப்பனார், முனைவர் சு.அரங்கசாமி, ஸ்ரீவைணவச் செம்மல் கி.பத்மநாப ரெட்டியார், தமிழ்க்கடல் தி.வே.கோபாலய்யர், முனைவர் ச.சாமிமுத்து, முனைவர் கு.சுந்தரமூர்த்தி, இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரனார், தவத்திரு ஊரன் அடிகளார் முனைவர் ப.வளன்அரசு, மெஹர்ப.யூ.அய்ய+ப், பொறிஞர் இரா.பாலகங்காதரனார், முனைவர் ப.சுப்பிரமணியன், முனைவர் கு.திருமாறன் ஆகியோர் கடந்த பதினாறு ஆண்டுகளில் அரங்கினால் தமிழ் மாமணி விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட சான்றோர்கள் ஆவார்.

தக்க சான்றோர்களைக் கொண்டு, ஆண்டு தோறும் தொடர் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப் பெற்று வருகின்றன.

சைவசித்தாந்தம், பெரியபுராணம், நாலாயிரத்திவ்ய பிரபந்தம், வள்ளலார் வாழ்வும் வாக்கும், சேக்சுபியர் நாடகங்கள், பாவேந்தர் படைப்புகள், பெர்னாட்சா நாடகங்கள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கந்தர்அனுபூதி, பைபிள் கதைகள், உலக அறிஞர்கள் வரிசை, தொல்காப்பியம், கம்பராமாயணம், திருக்கோவையார், திருக்குரான் சிந்தனைகள், திராவிடப் பேரியக்க வரலாறு, மணிமேகலை சமயம் வளர்த்த அருளாளர்கள், விடுதலை வேள்வியில் தமிழகம், ஐஞ்சிறுகாப்பியங்கள், ஆகியவை நடத்தப் பெற்ற தொடர் சொற் பொழிவுகளாகும். தமிழியக்கங்கள், இராவணகாவியம் ஆகிய இவ்விரண்டும் தொடர்ப் பொழிவுகளாக நடைபெற்று வருகின்றன. இவையன்றி நூற்றாண்டு கண்ட தமிழறிஞர்கள் பலரின் நூற்றாண்டையும் செண்பகத் தமிழ் அரங்கு கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றது.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, குற்றாலக்குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முக்கூடற்பள்ளு, முத்தொள்ளாயிரம், நளவெண்பா, வளையாபதி, குண்டலகேசி போன்ற தமிழ் இலக்கியச் செல்வங்களைப் பொழிவாக்கி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பிறமொழி இலக்கியங்களான கோமரின் ஆடிசி - இலியட், கதேயின் பாஸ்ட், இந்திய மொழிகளான வங்காளி,  மராத்தி,  இந்தி,  சாமி, ஒரியா, சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றின் இலக்கிய வரலாறுகள், இவைகளன்றி அறிவியல், ஆன்மீகம், திரைக்கலை, புவியியல், விண்ணியல், வரலாறு உளவியல் மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு பொதுத் தலைப்புகளைச் சார்ந்த சொற்பொழிவுகளையும் இவ்வரங்கு நடத்திப் பெருமையும், மகிழ்ச்சியும் கொண்டிருக்கிறது. முத்தமிழின் கூறுகளான இயல், இசை, நாடகத்தோடு கவியரங்கங்களும், படைப்பாளிகள் பலரது நூல் வெளியீட்டு விழாக்களும் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வரங்கினைத் தொடக்கி வைத்து, அரங்கினால் தமிழ்மாமணி விருதளித்துப் பாராட்டுச் செய்யப்பெற்ற புலவர் அ.கே.சேதுமாணிக்கனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், ‘தொல்காப்பியர் விருதுவழங்கப்படுகிறது. இவ்விருது சென்னை முதுபெரும்புலவர் ச.சீனிவாசன் முதுமுனைவர் இரா.இளங்குமரனார், முனைவர் தமிழண்ணல், முனைவர்  சண்முக.செல்வகணபதி, முனைவர் இ.சூசை ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

                அரங்கு தொடங்கிய நாள்தொட்டு, தொடர்ந்து எல்லா நிகழ்வுகளும் ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.  தற்போது அந்த ஒலி நாடாக்கள் குறுந்தகடுகளாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது சிறப்பான செய்தி. அவ்வாறு குறுந்தகடுகளாக மாற்றப்பட்ட முதற் பெருமையினைத் திராவிடப் பேரியக்க வரலாற்றுத் தொடர் பெற்று பெருமைகொண்டது.

புலவர் ப.இராமதாசு அவர்களின் மகனார் இரா.இளங்கோ அவர்கள் அரங்கின் பணிகளை ஆய்வு செய்து, தன் ஆய்வு நிறைஞர் (எம்.பில்) பட்டத்திற்கான ஆய்வேட்டினை அளித்துள்ளார்.

         பாரதியின் 125-ஆம் ஆண்டு பிறந்தநாள் தொடங்கி, ஓராண்டு காலம் பாரதியின் பாடல்களை உரையும் பாட்டுமாக வழங்கியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவ்உரைகள் விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது. நிறுவனரின் பெற்றோர் கந்தசாமி சின்னம்மாள் பெயரில் நூலகம் அரங்கின் சார்பாக நிறுவப்பட்டுள்ளது. செண்பகத்தமிழ் அரங்கு தனது 500-ஆவது கூட்டப் பெருவிழாவினைக் கண்டோர் வியக்கும் வண்ணம் 2001-ஆம் ஆண்டு மூன்று நாள்கள் தமிழ்ப் பெருவிழாவாக நடத்தியதை யாரும் மறக்க முடியாது.

இவ்வினிய செண்பகத்தமிழ் அரங்கினை நிறுவி, நாளும் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய தன்னலம் கருதாப் பெருந்தகையாக விளங்கிய செண்பக ஆசுகவிச்செம்மல்வழக்கறிஞர் க.இராசவேலுசெண்பகவல்லி அவர்கள் கடந்த 02.07.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நிறுவனரின் தமிழ்ப்பணியினைத் தொடர்ந்து தொய்வின்றி கொண்டுசெல்லும் பொருட்டு. 2013ஆகத்துத் திங்களிலிருந்து காரிக்கிழமைகள்தோறும் கூட்டங்கள் நிகழத் தொடங்கிவிட்டன. நிறுவுநரின் கைம்மாறு கருதாத் தமிழ்ப்பணியால் செண்பகத்தாயின் பெயர் உலகமெலாம் பரவியதுபோல், நிறுவுநரின்பெயரும் நீடித்து நிலைபெற வேண்டும்.  எனும் நோக்கில் செண்பகத்தமிழ் அரங்கு எனும் இவ்வமைப்பு, ‘செண்பகவல்லி - இராசவேலர் தமிழ் அரங்கு, எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2013 ஆகத்துத் திங்கள் வரை 1135 தமிழ்க்கூட்டங்களை நிறைவு செய்துள்ளது.

வழக்கறிஞர் க.இராசவேலு அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் திருமகனார் இராச.இளங்கோவன் அவர்கள் செண்பகத் தமிழ் அரங்குப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகின்றார்.

தொடர்புக்கு:

இராச.இளங்கோவன் அவர்கள்,
செண்பகவல்லி –இராசவேலர் தமிழ் அரங்கு,
18/102, காந்திசாலை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி -620 006.
அலைபேசி : + 99446 16123                                                                                
தொலைபேசி : 0431 -2432476






நூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமி அவர்கள் மறைவு


நாமக்கல் ப.இராமசாமி அவர்கள்

நாமக்கல்லில் தமிழ் நூல்களைத் தொகுத்துப் பாதுகாத்தவரும், மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளரும், என் அருமை நண்பருமாக விளங்கியவருமான பெருந்தகை ப.இராமசாமி ஐயா அவர்கள்  தம் இல்லத்தில் 23.09.2013 அன்று இரவு 9 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி இன்று அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். இயற்கை எய்திய நம் ஐயாவுக்கு அகவை 75 ஆகும்.

முப்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்து வைத்திருந்த இப்பெருமகனாரை 2009 இல் கண்டு உரையாடியுள்ளேன். அதன் பிறகு தொடர்ந்து செல்பேசி வழியாக உரையாடித் தமிழ் இன்பம் பெறுவது உண்டு. தம் நூல்களைத் தமிழீழத்திற்குக் கொடையாக வழங்க அப்பெருமகனார் எண்ணியிருந்தார். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் அவரை நேசித்த தமிழ்ப்பற்றாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாமக்கல் திரு. ப. இராமசாமி ஐயா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் அக்டோபர்த் திங்கள் 10 ஆம் நாள் நாமக்கல்லில் தமிழ் உணர்வாளர்களின் முன்னிலையில் நடைபெற உள்ளது. ப.இராமசாமி ஐயா அவர்களுக்குத் திருவாளர்கள் இரா. அன்பழகன், இரா. காராளன், இரா. திருவள்ளுவன் என்ற ஆண்மக்கள் மக்கட் செல்வங்களாக உள்ளனர்.

ப.இராமசாமி ஐயா பற்றிய என் பழைய பதிவைக் காண இங்கே சொடுக்குக

தொடர்புக்கு:

திரு. ப. இரா. திருவள்ளுவன் 9245263333

பாட்டியல் நூல்களில் யாப்பியல் கலைச்சொற்கள் நூலாசிரியர் க.இராதாகிருட்டிணன்


முனைவர் க.இராதாகிருட்டிணன் 

அரியலூர் அரசு கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் முனைவர் க.இராதாகிருட்டிணன் ஆவார். இவர் 14.09.1957 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள் கணபதி, தையல்நாயகி. பெண்ணாடம் அரசு பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றவர். கொளஞ்சியப்பர் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்தவர். பாட்டியல் நூல்களில் யாப்பியல் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் பட்டத்தைப் பேராசிரியர் அ.அ.மணவாளன் அவர்களின் நெறிப்படுத்தலில் பெற்றவர். பேராசிரியர் துரை. பட்டாபிராமன் அவர்களின் நெறிப்படுத்தலில் நாமக்கல் கவிஞரின் திருக்குறள் உரை - திறனாய்வு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர். மொழியியல், சோதிடவியல், சைவசித்தாந்தம், கணினி போன்ற துறைகளில் சான்றிதழ் பெற்றவர். 

பேராசிரியர் க.இராதாகிருட்டிணன் அவர்கள் 1987 இல் அருணா சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியும், 1993 முதல் நேரு நினைவுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியும், 2009 முதல் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பணியாற்றியும், 2010 முதல் அரியலூர் அரசு கல்லூரியில் பணியாற்றியும் நன் மாணாக்கர் பலரை உருவாக்கி வருபவர். இருபதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வரைந்தவர். ஆறு நூல்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார்.

பேராசிரியர் க.இராதாகிருட்டிணன் அவர்களின் தமிழ்க்கொடை:

1.   பாட்டியல் நூல்களில் யாப்பியல் கலைச்சொற்கள்
2.   நாமக்கல் கவிஞரின் திருக்குறள் உரை – திறனாய்வு
3.   துணையறிவோம் தொழில்புரிவோம்
4.   வேதாத்திரியின் செயல் வினைத் தத்துவம்
5.   சித்த மருத்துவம்
6.   நவீன இலக்கியத்தில் பெண்ணியல் போக்கு


ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

முனைவர் துரை.சீனிச்சாமி அவர்கள்

முனைவர் துரை.சீனிச்சாமி அவர்கள்

தமிழில் காப்பியக்கொள்கைகள் என்ற நூலின் வழியாகத் தமிழ் உலகிற்கு நன்கு அறிமுகமானவர் பேராசிரியர் துரை. சீனிச்சாமி அவர்கள். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள நம் பேராசிரியர் அவர்கள் ஓய்வுக்குப் பிறகும் தமிழ் நூல்களைப் படைப்பதிலும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்குவதிலும் ஈடுபாட்டுடன் உள்ளார். பழகுதற்கு இனிய பண்பாளரான இவரின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.
முனைவர் துரை.சீனிச்சாமி அவர்கள் நெல்லை மாவட்டம் புளியங்குடியை அடுத்துள்ள சிந்தாமணி என்னும் சிற்றூரில் பிறந்தவர். பேராசிரியர் அவர்கள் திருவாளர் சேம்சு துரைராசு, அன்னம்மாள் ஆகியோரின் மகனாக 1944 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் நாள் பிறந்தவர். தொடக்கக் கல்வியைச் சிந்தாமணியிலும், உயர்நிலைக் கல்வியைப் புளியங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், புகுமுக வகுப்பைப் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியிலும் படித்தவர். இளங்கலைப் பட்ட வகுப்பை விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் பயின்றும், முதுகலைப் படிப்பைக் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பயின்றும் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றும் பட்டங்களைப் பெற்றவர்(1975). முனைவர் பட்டத்திற்கு இவர் ஆய்ந்த பொருள் கம்பராமாயணத்தில் இயற்கை என்பதாகும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்விப் பிரிவில் 1976 முதல் 1982 வரை பணியாற்றியவர். அதன் பிறகு பேரறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்களால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர். அங்குப் பணியில் இணைந்த பிறகு தமிழில் காப்பியக் கொள்கைகள் என்ற நூலின் இருதொகுதிகளைத் தமிழிற்கு வழங்கிப் பெருமை பெற்றவர். 2004 ஆம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்.
முனைவர் துரை.சீனிச்சாமி அவர்கள் சிறந்த ஆய்வாளராக விளங்குவதுடன் சிறந்த திறனாய்வாளராகவும், படைப்பாளியாகவும் விளங்குபவர்.
முனைவர் துரை.சீனிச்சாமி அவர்களின் தமிழ்க்கொடை:

1.   தமிழில் காப்பியக் கொள்கைகள் (தொகுதி 1, தொகுதி 2)
2.   தமிழ் நாவல்களில் உளச் சித்தரிப்பு
3.   கவிதைக் கோட்பாடு
4.   திறனாய்வு எதிர்காலம்
5.   இலக்கியத்தில் இயற்கை
6.   நாவல்: நவீன விமர்சனங்கள்
7.   இருபதாம் நூற்றாண்டுக் கவிதை: புதிய போக்கும் தோற்றமும் வளர்ச்சியும்
8.   செவ்வியல் இலக்கியம்
9.   சிலப்பதிகாரம் கதையும் கருத்தியலும்
10. தொல்காப்பியமும் இலக்கிய வகையும்(அச்சு)
11. தமிழ் ஆராய்ச்சி வரலாறும் வளர்ச்சியும்(அச்சு)

படைப்பு நூல்கள்:
அந்தி
உரித்த யானை