நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் மலேசியாவில் வெளியீடு - படங்கள்




குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தை வெளியிடும் டத்தோசிறீ ச.சாமிவேலு அவர்கள், முதல்படியைப் பெற்றுக்கொள்ளும் டத்தோ சூ. பிரகதீஷ்குமார் அவர்கள். அருகில் உத்தராகண்டு மாநிலங்களவை உறுப்பினர் திரு. தருண்விஜய் எம். பி, டான்சிறீ சு. குமரன், பேராசிரியர் மன்னர் மன்னன், முனைவர் மு.இளங்கோவன்( நிகழ்வு:மலேசியா)

 மலேசியத் தலைநகரான கோலாலம்பூர் தான்சிறீ சோமா அரங்கில் 28.12.2014 ஞாயிறு காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை  ஆவணப்பட வெளியீட்டு விழா. டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ச. சாமிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையை ஆவணப்பட ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சி.. மன்னர்மன்னன் வழங்கினார். மலேசியத் தமிழ்நெறிக்கழகத் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆவணப்படத்தின் புரவலரும் நிகழ்ச்சியின் புரவலருமான டத்தோ சூ. பிரகதீஷ்குமார், நைனா முகமது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில்  டத்தோசிறீ ச. சாமிவேலு அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட, திரு. டத்தோ பிரகதீஷ்குமார், திரு. தருண்விஜய் எம்.பி. ஆகியோர் முதலிரு படிகளைப் பெற்றுக்கொண்டனர். டான்ஸ்ரீ சு. குமரன்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கி. கருணாகரன் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் முதலில் திரையிட்டுக் காட்டப்பட்டது. தமிழிசைச் சிறப்பைத் தனியொருவராக இருந்து பரப்பிய குடந்தை ப.சுந்தரேசனாரின் வாழ்க்கையை டத்தோசிறீ ச.சாமிவேலு உள்ளிட்டவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

ஆவணப்பட நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் திரு. தருண்விஜய் எம்.பி. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திருவள்ளுவருக்குச் சிலை இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனவும் அதற்கு டத்தோசிறீ ச. சாமிவேலு போன்றவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். திருவள்ளுவர் திருப்பயணத்தைக் கன்னியாகுமரியிலிருந்து பொங்கல் திருநாளையொட்டித் தாம் மேற்கொள்ள உள்ளதையும் அவைக்கு எடுத்துரைத்தார். தாம் இன்று வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் வழியாகத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். தாம் இப்பொழுது தமிழ் கற்கத் தொடங்கியிருந்தாலும் தமக்குத் தமிழர்கள் தமிழில் பேசும்போது எந்த வகையான சிக்கலும் இல்லாமல் புரிகின்றது என்றும் குறிப்பிட்டார். உத்ராகண்டு மாநிலங்களவை உறுப்பினரான இவர்தம் திருக்குறள் ஈடுபாட்டைப் போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சியில் இவருக்குத் திருக்குறள் தூதர் என்ற விருது வழங்கிப் பாராட்டினர்.

 மலேசிய நாட்டின் மூத்த தலைவர் திரு. டத்தோசிறீ ச. சாமிவேலு அவர்கள் திரு. தருண்விஜய் எம். பி. அவர்களுக்குத் திருக்குறள் தூதர் விருது வழங்குதல்( இடம்: மலேசியா) அருகில் பேராசிரியர் மன்னர் மன்னன், முனைவர் மு.இளங்கோவன்

ஆவணப்பட இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் நிறைவில் ஏற்புரையாற்றினார்.

குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்பட வெளியீட்டு விழா மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றம், மலேசியத் தமிழ் அறவாரியம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம், பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்குழு ஆகிய அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்தின.

மலேயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் திரு. மன்னர் மன்னன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.
 மு.இளங்கோவன், திரு. மன்னர் மன்னன், டத்தோ சிறீ ச. சாமிவேலு, டத்தோ பிரகதீஷ்குமார், திரு. தருண்விஜய் எம்.பி, டான்சிறீ சு. குமரன், திரு. நைனா முகமது


சனி, 27 டிசம்பர், 2014

மலேசியாவில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் வெளியீடு



தமிழிசைக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தம் வாழ்க்கையை ஒப்படைத்தவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவார். அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழிசை ஆய்வில் ஈடுப்பட்டிருந்தவர். மறைந்துபோன நூல்கள் வரிசையில் இருந்த பஞ்ச மரபு நூலினைப் பதிப்பித்து வழங்கியவர். இவரின் வாழ்வியல், பாடல்கள் அடங்கிய ஆவணப்படம், தமிழ் உணர்வாளர்கள் தழைத்து வாழும் மலேசிய மண்ணில் வெளியீடு காண உள்ளது.

மலேசியத் தலைநகரான கோலாலம்பூர் தான்சிறீ சோமா அரங்கில் 28.12.2014 ஞாயிறு காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் ஆவணப்பட வெளியீட்டு விழா டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ச. சாமிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கு வருகைதரும் தமிழ் உணர்வாளர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் மலேசியத் தமிழ்நெறிக்கழகத் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் வரவேற்று உரையாற்றுகின்றார். நிகழ்ச்சி குறித்த அறிமுக உரையை ஆவணப்பட ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சி.. மன்னர்மன்னன் வழங்குகின்றார். ஆவணப்படத்தின் புரவலரும் நிகழ்ச்சியின் புரவலருமான டத்தோ சூ. பிரகதீஷ்குமார், டத்தோ பா. சகாதேவன், டத்தோ இரா. மணிவாசகன் முன்னிலையில் நடைபெறும் விழாவில் டான்ஸ்ரீ சு. குமரன்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கி. கருணாகரன் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

ஆவணப்பட நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் திரு. தருண்விஜய் எம்.பி. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இவர் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக்கவும், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் உரிய இடம் இந்திய அளவில் கிடைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர். உத்ராகண்டு மாநிலங்களவை உறுப்பினரான இவர்தம் திருக்குறள் ஈடுபாட்டை இந்த நிகழ்ச்சியில்  பாராட்ட உள்ளனர்.

ஆவணப்பட இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் நிறைவில் ஏற்புரையாற்ற உள்ளார்.

குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்பட வெளியீட்டு விழா மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசிய நாமக்கல் நலனபிவிருத்தி மன்றம், மலேசியத் தமிழ் அறவாரியம், மலேசிய சைவ நற்பணிக் கழகம், பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம், பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்குழு ஆகிய அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்துகின்றன.


சனி, 20 டிசம்பர், 2014

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நடத்தும் கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு விழா




  திரைப்பா ஆசிரியரும் தமிழ் இலக்கியப் பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டு மிகச் சிறந்த பணிகளைச் செய்தவருமான கவி. கா. மு. ஷெரீப் அவர்களின் நூற்றாண்டு விழா 26.12.2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குச் சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள இராணி சீதை மன்றத்தில் நடைபெறுகின்றது.

  பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் குமரி அபூபக்கர், முகேஷ் குழுவினரின் இசை அரங்கம் நடைபெறுகின்றது.

  ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வரவேற்புரையாற்ற, திருவாளர்கள் வீரபாண்டியன், காவ்யா சண்முகசுந்தரம், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.

  தமிழ்வள்ளல் சிங்கப்பூர் எம். ஏ. முஸ்தபா அவர்கள் கவி கா.மு. ஷெரீப் குறித்த நூல்கள், மலர்களை வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றுகின்றார். பி. எச். அப்துல் ஹமீது அவர்கள் தொகுப்புரை வழங்க உள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும், கலாம் பதிப்பகத்தினரும் செய்துள்ளனர்.


தொடர்புக்கு: 94440 25000

புதன், 10 டிசம்பர், 2014

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் குறித்து இன்றைய இந்து நாளிதழில் செய்தி!





  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படம் விரைவில் வெளிவர உள்ளதைத் தமிழன்பர்கள் அறிவார்கள். இது குறித்த செய்தியினைத் திரு. ஆர். சிவராமன் அவர்கள் இன்றைய இந்து நாளிதழில்(10.12.2014) சிறப்பான அறிமுகமாக வழங்கியுள்ளார். அவருக்கும் செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழுக்கும் நன்றியன். இச்செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன்.

A Tamil professor’s tribute to yesteryear musicologist

R. SIVARAMAN

It is a major attempt by a Tamil professor to document the life sketches of Tamil Musicology Research Expert Kudanthai Pa. Sundaresanar who played a significant role in taking Tamil classic ‘Silappadikaram’ towards masses through his mellifluous voice.

Mu. Elangovan, Assistant Professor of Tamil in Kanchi Mamunivar College of Post Graduate Studies has made a documentary film on the yesteryear scholar.
The Tamil Scholar excelled in lecturing the nuances of music in the verses of Tamil classics Silappadikaram, Thirumurugattrupadai, Paripadal, Panniru Thirumuraigal and other literary works which have a wealth of information about various arts like music and dance of those times.

The onslaught of time erased his contribution to classical Tamil Music as his lectures and works are not properly recorded or documented.

Sundaresanar was an adept in languages such as Telugu, Hindi and Sanskrit. He was a great singer and deeply involved in Saivism. In his time, he had created awareness on classical Tamil music among the public in several parts of the State.

Sundaresanar was born in 1914 in Sirkazhi and educated up to fourth standard. In his tender age, he joined a jewellery shop. Sundaresanar’s enormous curiosity led him to learn several literary works on music from several pundits in Kumbakonam.

In 1946, he started giving musical discourses at Arul Neri Appar Kazhagam in Aduthurai.

Sundaresanar rose to the level of professor by sheer hard work and dedication. As he was relieved from the post, he had to struggle a lot.
He criss-crossed Tamil Nadu and Puducherry with a mission to spread awareness on classical Tamil music.

He died in 1981 due to illness.

“During my college days, several persons recalled the lecturing skills of Sundaresanar on the great epic Silappadikaram. Since then I did thorough study on his life and contribution to Tamil music. I collected audio recordings which were in bits and pieces. Now we have compiled it as an audio-video presentation which runs for around 50 minutes. His voice is played in the background,” Prof. Elangovan said.


He added that the documentary will create more awareness on classical Tamil music.

திருக்குறள் தேசியத்தகுதி நூல் மட்டுமன்று! உலகப் பொதுமறை!

  தமிழ் நூல்கள் குறித்து நான் வகுப்பறைகளில் பாடம் நடத்தும்பொழுது மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்குத் தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளைச் சொல்லி ஊக்கமூட்டுவேன். தமிழில் எண்ணற்ற நூல்கள் உள்ளன. எண்ணற்ற நூல்கள் இறந்துபட்டன. இருக்கும் நூல்களுள்ளும் மூன்று நூல்களை மட்டும் வைத்துக்கொண்டு நம் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டிவிடமுடியும் என்று குறிப்பிடுவேன்.

அந்த நூல்களாவன:

1. தமிழ்மொழியின் சிறப்பையும், தொன்மையையும் நிலைநாட்ட உதவும் தமிழை வரம்பிட்டுக் காத்த ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம்.

2.தமிழர்களின் நெறிப்பட்ட வாழ்க்கையையும், அறிவார்ந்த மெய்யுணர்வுகளையும் தாங்கிநிற்கும் திருக்குறள்.

3. தமிழர்களின் கலை, பண்பாட்டு அறிவுக்கருவூலமான சிலப்பதிகாரம்.

  இந்த மூன்று நூல்களையும் தமிழர்கள் அறிய வேண்டும். படிக்க வேண்டும், போற்ற வேண்டும், ஆராய வேண்டும் என்று தமிழறிஞர்கள் பலரும் அவரவர் வாய்ப்புக்கு ஏற்பத் தொடர்ந்து குரல்கொடுத்துள்ளனர். இந்த நூல்களுள் நடுவணதாக நிற்கும் திருக்குறள் அயலகத்து அறிஞர்களை வியக்க வைத்த பெருமைக்குரியது. அதனால்தான் திருக்குறளை வீரமாமுனிவர் போன்ற வெளிநாட்டுத் துறவிகள் தம் மொழியில் பெயர்த்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகப் பார்வைக்கு வைத்தனர். அனைத்து ஆசைகளையும் துறந்த துறவிகளிடத்தும், ஆசையை உண்டாக்கி மொழி பெயர்க்க வைத்த பெருமை திருக்குறளுக்கு அமைந்தது எனில் மிகையன்று.

  திருக்குறள் எழுதப்பட்ட காலம்முதல் தமிழகத்திலும் தமிழ் சார்ந்த பிற புலங்களிலும் மதிக்கப்பட்டுள்ளதை இலக்கியங்கள் வழியாகவும் பிற சான்றுகள் வழியாகவும் அறிய முடிகின்றது. திருக்குறளை மேற்கோளாக ஆண்டு பல நூல்கள் வந்துள்ளன. திருக்குறளைப் பல புலவர்கள் தனித்துச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்(திருவள்ளுவமாலை). திருக்குறளுக்கு நுட்பமான பல உரைகள் பரிமேலழகர் போன்ற சான்றோரால் இயற்றப்பட்டன.

  திருக்குறள் குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் பல நினைவுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. திருவள்ளுவர் கோயில், திருவள்ளுவருக்குக் கோட்டம், திருவள்ளுவர் சிலை, திருவள்ளுவர் படம், திருவள்ளுவர் உருவம் பொறித்த காசுகள், திருவள்ளுவர் பெயரில் நகர், பூங்கா, சாலை, பேருந்து, மன்றங்கள், தவச்சாலைகள், விருதுகள் என்று தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் அயலகத்திலும் உள்ளமையை நினைக்கும்பொழுது நமக்குப் பெருமை ஏற்படுகின்றது.

 திருக்குறள்தான் தம்மை இந்த நிலைக்கு உயர்த்தியது என இந்தியாவின் மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு அ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் பேசியும் எழுதியும் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறளின் சிறப்பைச் சொல்லி வருகின்றமை எம்மனோர்க்குப் பேருவகை அளிக்கும் செயலாகும்.

  மேனாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் இந்திய நாடாளும் மன்றத்தில் இந்திய நாட்டுக்கான பெருமைக்குரிய நிதி நிலை அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கும் முன்பாகத் திருக்குறளின் பொன்வரிகளை முன்மொழிவாக வழங்கியமை இந்திய வரலாற்றில் பதிந்துகிடக்கும் செய்தியாகும்.

  சமூகச் சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் அவர்கள் திருக்குறள் சிறப்பை மக்களுக்கு நினைவுகூரும் வகையில் திருக்குறள் மாநாடுகள் நடத்தியுள்ளமை இங்கு எண்ணிப்பார்க்கத்தக்க செய்திகளாகும். 1948, 1949 இல் என இரண்டுமுறை தந்தை பெரியார் அவர்களின் முயற்சியில் திருக்குறள் மாநாடு தமிழகத்தில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இந்த மாநாட்டில் தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரும்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் போன்றவர்கள் கலந்துகொண்டமை பெருமைக்குரிய நிகழ்வுகளாகும்.

 தமிழகத்துத் தவமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் உலகத் திருக்குறள் பேரவை கண்டு பல மாநாடுகள் நடத்தியமையும் மொழிப்போர் மறவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் குறள்நெறி தந்தமைமையும் ஈரோடு அரசமாணிக்கனார் குறளியம் கண்டமையும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் திருவள்ளுவர் தவச்சாலை கண்டு தவவாழ்வு வாழ்ந்தமையும் நினைவிற்கொள்ளத் தக்க செய்திகளாகும்.

  கேரள மண்ணில் துறவி சச்சிதானந்தம் அவர்கள் திருவள்ளுவரைக் கடவுளாகப் போற்றும் வாழ்க்கையை மேற்கொண்டுள்ளதை அறியமுடிகின்றது. திருக்குறள் முறைப்படி வாழ்க்கை வட்டச் சடங்குகளைச் செய்து வாழ்வதையும் திருக்குறளன்பர்கள் கூறுவர்.

  திருக்குறள் கற்றோரையும் மற்றோரையும் ஈர்த்து நன்னெறி புகட்டுவதால் உலக அளவில் மதிக்கப்படும் நூலாக உள்ளது. “பிறப்பு ஒக்கும்” என்று மாந்தர்களிடையே ஒருமைப்பாட்டை உணர்த்துகின்றது. “மனத்துக்கண் மாசிலனாக” வாழ்க என மாந்தர்களை நன்னெறிப்படுத்துகின்றது. “அறத்தால் வருவதே இன்பம்” என்கின்றது. “இனிய உளவாக” எனச்சொல்லி நன்மொழி நவிலத் தூண்டுகின்றது.

தனிமாந்த வாழ்க்கையை நெறிப்படுத்தி, உலகச் சமுதாயத்தில் ஒன்றிணைக்கும் திருக்குறள் இந்தியாவுக்கு மட்டுமன்று உலகத்திற்கே ஒளியேற்றும் உயரிய நூல். இதனை இந்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அறிஞர்களும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.

  இந்த நிலையில் உத்தரகண்டு மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திரு. தருண்விஜய் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசின் மனிதவளத்துறை திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் சிறப்புச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளத்தை நினைக்கும்பொழுது விரைந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவு நிறைவேறும் என்று தோன்றுகின்றது.

  உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்தால் இன்றையை தேவை நமக்குப் புலனாகும்.

Thirukural Translation List

LANGUAGES  TRANSLATIONS
Assamese        1
Bengali            3
Burmese          1
Chinese        2
Czech              1
Dutch               1
English           25
Fijian                 2
Finnish              1
French               7
German         7
Gujarati              1
Hindi                  7
Japanese           1
Kannada            4
Latin                  2
Malay                 3
Malayalam          7
Oriya                  1
Punjabi               1
Polish                 1
Rajasthani          1
Russian               2
Sanskrit          2
Saurashtra           1
Sinhala                2
Swedish               1
Telugu                  2
Urdu                     2

(பட்டியலில் விடுபட்ட மொழிபெயர்ப்புகள் குறித்த விவரம் அறிந்தோர் தெரிவிக்க நன்றியுடன் ஏற்பேன்)

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை



திருக்குறளைத் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவர் முன்வைத்த கோரிக்கை: "சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் புலவர் திருவள்ளுவரால், திருக்குறள் நூல் இயற்றப்பட்டது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் மூன்று பகுதிகள், 133 அதிகாரங்கள் 1,330 குறட்பாக்கள் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது. 1730-ஆம் ஆண்டில் லத்தீன் மொழியிலும், 1886-இல் ஆங்கிலத்திலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது.

அதன்பிறகு பல்வேறு நாடுகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது, இதன் தனிச் சிறப்பை உணர்த்துகிறது. இதேபோல் இந்தியாவில் பெரும்பாலான மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட கருத்துகள், மதசார்பின்மை நிலையுடன் மொழி, மத, பிராந்திய எல்லைகளைக் கடந்து திருக்குறள் விளங்குகிறது. இந்தியாவில் உள்ள தற்போதைய தலைமுறையினர் மட்டுமன்றி எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்றவாறும் இந்நூலின் கருத்துகள் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாட்டில் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய கல்விசார் பெருமைகளையும் நம் நாடு கொண்டுள்ளது.

இந்நிலையில், தேசிய அளவில் நம்மை பிரதிபலிக்கும் நூலாக திருக்குறள் இருந்தால் அதுவே உண்மையாக நம் நாட்டு மக்களுக்கு பயன்தரக் கூடியதாக இருக்கும். எனவே, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் திருச்சி சிவா.


நன்றி: தினமணி 10.12.2014

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

பாவாணர் பயிற்றகத்தின் சார்பில் முப்பெரு நூற்றாண்டு விழா



  பாவலர்மணி வாணிதாசனார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், நடமாடும் தமிழ் திருக்குறள் பெருமாள் ஆகிய சான்றோர் பெருமக்களின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் 13.12.2014 இல் காரி(சனி)க்கிழமை காலை 10 மணி முதல் முழுநாள் நிகழ்வாக நூற்றாண்டு விழா சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.

இடம்: விசயவர்த்தினி திருமண மண்டபம், பாகூர், புதுச்சேரி மாநிலம்

  காலை பத்து மணிக்கு முதல் அமர்வு பாவலர் வாணிதாசனார் விழாவாக நடைபெறுகின்றது. புலவர் கதிர். முத்தையன் நோக்கவுரையாற்ற, பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா, பேராசிரியர் இராச. குழந்தைவேலனார், சொல்லாய்வுச்செல்வர் சு. வேல்முருகன் உள்ளிட்ட அறிஞர்கள் உரையாற்றுகின்றனர்.

  பிற்பகல் 2 மணிக்கு இரண்டாம் அமர்வு குடந்தை ப. சுந்தரேசனார் விழாவாக நடைபெறுகின்றது. பாவலர் சு. சண்முகசுந்தரம், பாவலர் தா. அன்புவாணன் வெற்றிச்செல்வி, முனைவர் மு.இளங்கோவன், இறைநெறி இமயவன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தின் முன்னோட்டம் அறிஞர் பெருமக்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட உள்ளது.

  மூன்றாம் அமர்வு மாலை 4 மணிக்குத் தொடங்கி 7 மணிவரை நடைபெறுகின்றது. புலவர் சி. வெற்றிவேந்தன், பாவலர் சீனு. அரிமாப்பாண்டியன், தழல் ஆசிரியர் தேன்மொழி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.


  சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு தி. தியாகராசன், மாண்புமிகு பெ. இராசவேலு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். தமிழுக்கு உழைத்த அறிஞர் பெருமக்களின் நூற்றாண்டு விழாவுக்குப் பாவணர் பயிற்றகத்தார் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.