நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 20 ஜனவரி, 2022

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை திறப்பு!

 


ஆய்வறிஞர் கு. சிவமணி அவர்கள் திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்தல்

ஆய்வறிஞர் கு. சிவமணி அவர்கள் திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்தல். அருகில் மு.இளங்கோவன், கோபிசிங், சி. சிவபுண்ணியம், மணப்பாறை நாவை. சிவம் உள்ளிட்டோர்.


மு.இளங்கோவன் பரிசளித்தல். அருகில் இரா. கலியபெருமாள், கோபிசிங், கு.சிவமணி, கு.வெ.பாலசுப்பிரமணியன்
 

  தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் உள்ள வளனார் நகரில் 15.01.2022 மாலை 5 மணிக்குத் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரந்தைத் தமிழ்க்கல்லூரியின் மேனாள் முதல்வர்பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் தலைமை தாங்கி, திருவள்ளுவர்  சிலையினைத்  திறந்து வைத்து, அரியதோர் சிறப்புரை வழங்கினார். திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு மாதமாகத் திருக்குறள் முற்றோதலில் ஈடுபட்ட 40 குழந்தைகளின் குடும்பங்களுக்குத் திருவள்ளுவர் சிலை பரிசளிக்கப்பட்டது. 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்த 10 குழந்தைகளுக்குத் திருக்குறள் திலகம் விருதும் உருவா 1300 பணப்பரிசும், திருக்குறள் எழுதுவதற்கு ஆறு குழந்தைகளுக்குத் திருக்குப் பலகையும்  வழங்கப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுபெற்றோர்க்குப் புதுவைப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் பரிசளித்துப் பாராட்டினார். 

  தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பதிவாளர் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், நா.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் இரா. கலியபெருமாள், மணற்பாறைப் புலவர் நாவை. சிவம், அரு உலகநாதன்,  பழ. மாறவர்மன், இராம. கோவிந்தன்  உள்ளிட்ட அறிஞர்கள்  கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். 

  தஞ்சையில் வாழும் திரு. . கோபிசிங் அவர்களும், பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் உறவினர் திரு சி. சிவபுண்ணியம் அவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  பேராசிரியர் இலலிதா சுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தார். 

  புலவர் மா. கந்தசாமி அவர்கள் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

புதன், 12 ஜனவரி, 2022

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா!


 


நாள்:  15.01.2022 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 4. மணி

இடம்: திருக்குறள் பிரதீபா குமரன் இல்லம்,

எண் 26, வளனார் நகர், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் – 5 

  திருவள்ளுவர் திருநாளில் திருவள்ளுவருக்குச் சிலை எடுப்பித்து, அவர்தம் திருக்குறள் பணியைப் போற்றும் பணியில் தஞ்சையில் வாழும் திரு. அ. கோபிசிங் அவர்களும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் உறவினர் திரு சி. சிவபுண்ணியம் அவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வில் கரந்தைத் தமிழ்க்கல்லூரி மேனாள் முதல்வர்,  ஆய்வறிஞர் பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் தலைமை தாங்கி, திருவள்ளுவர்  சிலையினைத்  திறந்து வைத்து, அரியதோர் சிறப்புரை வழங்க உள்ளார். சிலை திறப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் பரிசுபெறுவோர்க்குப் புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் பரிசளித்து வாழ்த்துரை வழங்க உள்ளார். 

  பேராசிரியர் இலலிதா சுந்தரம் அவர்கள் முன்னிலையுரையாற்ற உள்ளார். 

  திருக்குறள் பற்றாளர்கள் குறள்நெறிச் செல்வர், மேனாள் வணிகவரித்துறை அமைச்சர், சி. நா. மீ. உபயதுல்லா, திருக்குறள் தூதர் கு. மோகனராசு, முனைவர் இரா. கலியபெருமாள், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், முனைவர் சண்முக செல்வகணபதி, புலவர் நாவை. சிவம் உள்ளிட்ட அறிஞர்கள்  கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க உள்ளனர். 

 திரு. சி. சிவபுண்ணியம் வரவேற்புரையாற்றவும், திருக்குறள் தூதர் . கோபிசிங் நன்றியுரையாற்றவும் உள்ளனர். புலவர் மா. கந்தசாமி அவர்கள் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. 

அனைவரும் வருக!



சனி, 1 ஜனவரி, 2022

ஈராயிரம் ஆண்டு வரலாற்றைச் சுமந்து நிற்கும் செய்திப் பலகை…

 

  புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச்  செல்லும்பொழுது கடப்பாக்கம் ஊருக்கு முன்பாக நல்லூர் என்னும் ஊருக்குச் செல்லும் சிறு பாதை பிரியும் (புதுவையிலிருந்து 44 கி. மீ). அவ்விடத்தில் சாலையின் வலப்புறத்தில் இப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றிய நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் வாழ்ந்த ஊரையும் அவ்வூர் இடைக்கழிநாடு என்னும் பகுதியுள் அடங்கியிருந்தது என்பதையும் தாங்கிய செய்திப்பலகையாக இஃது உள்ளது. சங்க இலக்கியங்கள் யாவும் புனைவு அல்ல. வரலாற்றைத் தாங்கியுள்ள ஆவணங்கள் என்பதற்கு இச்சான்று ஒன்றே போதும்.