banner

நிகழ்வுகள்

// பொதிகைத் தொலைக்காட்சியில் தமிழக நடவுப்பாடல்கள் குறித்த மு.இளங்கோவனின் உரையிடையிட்ட பாட்டு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது…//உலகத் தமிழாசிரியர் மாநாடு, கோலாலம்பூர், மலேசியா, நாள் 2013,சூன் 3-5 //

திங்கள், 20 மே, 2013

தனித்தமிழ் அறிஞர் பறம்பை அறிவன் மறைவு



பறம்பை அறிவன்
மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரானர் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுடையவரும் பாவாணரின் உலகத் தமிழ்க்கழக மாநாட்டைப் பரமக்குடியில் நடத்துவதற்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்குப் பெருந்துணைபுரிந்தவருமான தனித்தமிழ் அறிஞர் பறம்பை அறிவன் அவர்கள் 19.05.2013 மாலை 5.30 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாகத் தம் எழுபத்தேழாம் அகவையில் மதுரையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

பறம்பை அறிவன் அவர்களின் இயற்பெயர் மு.பெ.நளபதி. பெற்றோர் பெரியசாமி, கருப்பாயி ஆகியோர் ஆவர். இவர் பரமக்குடியை அடுத்த எமனேசுவரத்தில் பிறந்தவர். ஆசிரியர் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழியம் என்ற இதழை நடத்தி வந்தவர். இப்பெருமகனார் இரா.லீலாவதி என்னும் அம்மையாரை மணந்து, மூன்று ஆண்மக்களையும், மூன்று பெண்மக்களையும் ஈன்றெடுத்த பெருமைக்குரியவர். தமிழிய வரலாற்றுப் பேரவை என்னும் அமைப்பை நிறுவித் தமிழ்த்தொண்டாற்றிவந்தார். தனித்தமிழ் இயக்கத்திற்கு அன்னாரின் மறைவு பேரிழப்பாகும்.

செவ்வாய், 7 மே, 2013

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி பன்னாட்டுப் பாவரங்கம்



வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம், இலக்கியா பதிப்பகத்துடன் இணைந்து பாரதி பன்னாட்டுப் பாவரங்கம் என்னும் நிகழ்ச்சியை 09.06.2013, ஏலகிரியில் நடத்துகின்றது. ஆர்வலர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வழங்கலாம்.

மரபுப்பா, புதுப்பா எதுவாக இருப்பினும் 25 வரிகளுக்கு மிகாமல் படைப்புகள் இருக்க வேண்டும். பேராளர் கட்டணம் 500 உருவா

அனைத்துத் தொடர்புகளுக்கும்:

பேராசிரியர் ப.சிவராஜி,
தமிழ்த்துறைத் தலைவர்,
இசுலாமியாக் கல்லூரி,
வாணியம்பாடி, வேலூர் மாவட்டம் - 635 752
செல்பேசி: 0091 9095831291
sivarajihodtamil@gmail.com