நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

அருள்திரு விபுலாநந்தர் அவர்களின் மறைவறிந்து வரலாற்றுப் பேரறிஞர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இயற்றிய இரங்கல் பாடல்!




அருள்திரு விபுலாநந்த அடிகள்


சோழர் வரலாறு என்றவுடன் நம் நினைவுக்கு வரும்பெயர் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் என்பதாகும். இவர்தம் வரலாற்றுப் பெருநூல் வெளிவந்த பிறகு பல்வேறு புதினங்கள், திரைப்படங்கள் சோழர் வரலாறு தாங்கி வெளிவந்தன. அந்த அளவு இவர்தம் நூல் தமிழகத்தில் அறிவுப்புரட்சியை உண்டாக்கியது. இவர் பாண்டியர் வரலாறு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியாளராக இருந்து தமிழ்ப்பணியாற்றிய பெருமகனார். குடந்தையை அடுத்த திருப்புறம்பியம் என்னும் ஊரைச் சார்ந்தவர். திரும்புறம்பியப் போர் வரலாற்று முதன்மை வாய்ந்த போராகும்

கல்வெட்டுப் புலமையும் வரலாற்றுப் புலமையும் இலக்கியப் புலமையும் கொண்ட இவ்வறிஞர் பாட்டுத்துறையில் வல்லார் என்பதை இதுநாள்வரையில் அறியாமல் இருந்தேன். அருள்திரு விபுலாநந்தர் வாழ்க்கை வரலாற்றைத் தேடிக் கற்கத் தொடங்கியபொழுது, விபுலாநந்தர் மறைவையொட்டி இவர் எழுதிய பாடல்கள் என்னை வியப்படைய வைத்தன. என்னே கற்பனை! என்னே அரிய சொல்லாட்சி! என்னே பாட்டுநடை! என்று வியப்புற்றேன். பாட்டு ஆர்வலர்களின் பார்வைக்கு அப்பாட்டுத் தேனமுதைப் படைக்கின்றேன்.


அந்தோ! விபுலாநந்த அறிஞநீ யவனிதுறந் தகன்றா யென்னுஞ்
சிந்தாகுலச்செய்தி செவிமடுக்க யாஞ்செய்பவஞ் செப்பற் பாற்றோ
எந்தாய்நின் னருண்முகத்தை யென்றுகொலோ காண்பேமென் றேங்கி யேங்கி
நந்தாத பெருந்துயருள் நனிமூழ்கி யிஞ்ஞான்று நடுக்குற் றேமால்.

உற்றாரை யான்வேண்டேன் ஊருடன்பேர் வேண்டேனென் றுரைத்தா யந்நாள்
கற்றாரை யான்வேண்டே னெனமொழியு மொருநிலையைக் காணே னென்று
சொற்றாய்நீ கலைஞரெலாந் துயர்க்கடல்வீழ்ந் தரற்றநிலந் துறத்தல் நன்றே
கற்றார்க்கோர் உறுதுணையாம் விபுலாநந் தப்பேர்கொள் கலைவல் லோனே

இந்நாளில் துறவியென இயம்பிடுவோர் எழில்மாடத் தினிதே தங்கி
உன்னாத பொருளில்லை உஞற்றாத செயலில்லை யுன்னைப் போலப்
பன்னாளு மக்கட்குப் பணிபுரிந்து மகிழ்வுற்றோர் பாரில் யாவர்
பன்னாடும் போற்றுமெங்கள் விபுலாநந் தப்பேர்கொள் பாவல் லோனே.

முத்தமிழும் பயின்றிந்நாள் முறையாக வாய்ந்தோர்யார் மொழிமி னென்றோர்க்(கு)
உத்தமநீ யுள்ளாயென் றுணர்த்திமிக விறுமாந்தேம் ஓரா தெம்மை
இத்தலத்தே விட்டகன்றாய் இதுவோநின் றண்ணளிதான் இயம்பாய் ஐயா
வித்தகனே விழுத்தவத்து விபுலாநந் தப்பேர்கொள் மேன்மை யோனே.

எங்கள்தமிழ்த் தாய்க்கந்நாள் எழிற்சிலம்பொன் றளித்தபிரான் இளங்கோ வேந்தன்
துங்கவிபு லாநந்தத் தூயோனா யிவ்வுலகில் தோன்றி முன்னாள்
சங்கமிருந் தாய்ந்தவிசைத் தமிழதனை யாழ்நூலாகத் தந்த பின்னே
புங்கமிகுந் திருக்கயிலை புகுந்ததனால்  மற்றிதனைப் புலங்கொள் வீரே!



நன்றி: தமிழ்ப்பொழில் இதழ்

சனி, 27 ஆகஸ்ட், 2016

விபுலாநந்தர் மறைவுக்கு உரைவேந்தர் ஔவை. சு.துரைசாமி பிள்ளை எழுதிய இரங்கற் பாக்கள்!




யாழ்நூல் தந்த விபுலாநந்தர் மறைவுச் செய்தி கேட்டுத் தமிழகத்தின் மிகச் சிறந்த அறிஞர்கள் கையற்றுக் கலங்கியுள்ளனர். அவர்களுள் உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமி பிள்ளை அவர்கள் எழுதிய பாக்கள் நெஞ்சை உருக்கும் பாடல்களாக உள்ளன. உரைவேந்தரின் உரைவளம் மாந்திய தமிழுலகம் அவரின் பாட்டமிழ்தம் பருகுவதற்குப் படியெடுத்து வழங்குகின்றேன்.

விபுலாநந்தரின் பன்முக ஆற்றலையும், பண்புநலன்களையும், பைந்தமிழ்ப் பணிகளையும் எடுத்துரைக்கும் உரைவேந்தர் அவர்கள் அகத்தியருக்கும் மேலான ஆற்றலுடையவராக விபுலாநந்தரைப் பரவிப் பாடுகின்றார். நம்மிடமிருந்து பிரித்து, விபுலாநந்தரைக் கொண்டு சென்ற கூற்றுவனை இகழ்ந்துபேச நம்மை அழைப்பதன் வாயிலாக அடிகளார் மேல் கொண்டிருந்த பற்றினை உரைவேந்தர் புலப்படுத்தியுள்ளார்.

வன்சொல்லால் கூற்றுவனை வையலாம் வம்மினோ
இன்சொல்லால் நம்மை இனிதளித்த- தென்முனிக்கு
மேலாம் அருள்விபு லானந்த மாமுனிவிண்
பாலாகச் செய்த பழிக்கு!

என்பது அப்பாடல்.

எண்ணாள ரென்கோமற்(று) எழுத்தாள ரென்கோ
இயலாய தமிழாளர் இசையாள ரென்கோ
கண்ணாளும் விஞ்ஞானக் கலையாள ரென்கோ
கருத்தாளும் செஞ்சொல்லின் கவியாள ரென்கோ
எண்ணாளும் இவ்வண்ணம் எண்ணிமகிழ்ந் தோமை
எண்ணியெண்ணிப் புண்ணாக இனிச்செய்த தந்தோ
தண்ணாளர் அருள்விபுலானந்தர் எங்கள் இறையைத்
தனிக்கொண்டு பிரிவித்த தறமில்லாக் கூற்றே

என்று பாடியுள்ளதில் ஒரு நுட்பம் உள்ளதைக் கவனிக்க இயலும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் அழகினைப் புகழும் கோவலன்,

மலையிடைப் பிறவா மணியே என்கோ
லையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா விசையே யென்கோ

என்று பாடுவான். அவ்வகையில் சிலப்பதிகாரத்தில் பேரீடுபாடுகொண்ட விபுலாநந்தரை உரிய சொல்லெடுத்து, “என்கோ” என்று உயர்த்திப் பாடியுள்ளமை உரைவேந்தரின் கலையுள்ளத்திற்குச் சான்றாக உள்ளது.


சனி, 20 ஆகஸ்ட், 2016

திருக்குறள்- புதிய பதிப்பு






திருக்குறள் நூல் அறிஞர்களால் காலந்தோறும் சிறப்பாகப் பதிப்பிக்கப்பெற்று, உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. கனடாவில் வாழும் திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் தம் மகள் சி. ஆர்த்திமருமகன் . பிரசாத் ஆகியோரின் திருமணநாளில் (20.08.2016) திருக்குறளுக்குப் புதிய பதிப்பு ஒன்றை வெளியிடுகின்றார். மணவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்குக் கையுறைப் பொருளாகத் திருக்குறள் நூல் வழங்கப்பட உள்ளது. 464 பக்கம் கொண்ட இத்திருக்குறள் பதிப்பில் திருக்குறள் மூலம், முனைவர் பா. வளன் அரசு உரை, தவத்திரு போப் அடிகளாரின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தவத்திரு டுரூ, இலாசரசு ஆகியோரின் ஆங்கில விளக்கம் ஆகியன அமைந்துள்ளன. தமிழர்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய இந்த நூல் தமிழறியாத பிறமொழியினரும் பயன்படுத்தும் வகையில் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆங்கில விளக்கத்துடன் பதிப்பிக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

திருக்குறள் பதிப்பு விவரம்
திருக்குறள்  - ஆசிரியர்: திருவள்ளுவர்
உரை - முனைவர் பா.வளன் அரசு
ஆங்கில மொழிபெயர்ப்பு: தவத்திரு. போப் அடிகளார்
ஆங்கில விளக்கம்: தவத்திரு. டுரூ, இலாசரசு

பதிப்பாசிரியர்கள்:
சிவம் வேலுப்பிள்ளை
மு.இளங்கோவன்
விலை: உருவா 250
பக்கம்: 464

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

விபுலாநந்த சுவாமிகளின் யாழ்நூல் தொடர்புடைய அரிய மடல்…



விபுலாநந்த சுவாமிகளின் யாழ்நூல் பதிப்பித்தல் தொடர்பான மடல் 


தவத்திரு விபுலாநந்த சுவாமிகளின் யாழ்நூல் 1947, 1974, 2003 ஆகிய ஆண்டுகளில் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது. யாழ்நூல் உருவாக்கத்திற்குப் பத்தாண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது என விபுலாநந்த அடிகளார் தம் முன்னுரையில் குறித்தாலும் (பக்கம்.27:1947) முன்னுரை எழுதிய ஐந்தாண்டுகள் கழித்துதான் நூலுக்கு முடிவுரை எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. எனவே சற்றொப்ப பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக விபுலாநந்தரின் அறிவு, உழைப்பை ஈடாகப் பெற்றே யாழ்நூல் வெளிவந்துள்ளது.


யாழ்நூலை எழுதி முடிக்க அடிகளார் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்திதுள்ளார். மாயாவதி ஆசிரமப் பணியிலிருந்து விடுபடல்(1941), கொழும்புப் பல்கலைக்கழகப் பணியேற்றல்(1943 - 47), கடுங்காய்ச்சலில் வீழ்ந்தமை, முடக்குவாதம் வந்தமை என்று பணியும், பிணியும் அடிகளாரை வாட்டியுள்ளன. ஆயின் யாழ்நூலை அச்சிடுவதே தம் நோய்தீர்க்கும் மருந்து என்று நண்பர்களிடம் குறிப்பிடவும், புதுக்கோட்டையில் வாழ்ந்த தமிழ்வள்ளல் இராம. சிதம்பரம் செட்டியார் அவர்கள் விபுலாநந்தருக்கு வேண்டிய அனைத்து ஏந்துகளையும் செய்து தந்து ஆதரித்தார். 14,000 சதுர அடிகொண்ட தம் இராம நிலையவளமனையின் முன்பகுதியை அடிகளாரின் ஆராய்ச்சிக்கு ஒதுக்கித் தந்தும், பல்வேறு பணியாளர்கள், உதவியாளர்களை அமர்த்தியும், யாழ்க் கருவியை உருவாக்க உதவும் தச்சர்கள், இசைநுட்ப வல்லுநர்களைப் பணிக்கு அமர்த்தியும் யாழ்நூல் உருவாக உதவியுள்ளார்.

விபுலாநந்த அடிகளார் தங்கி ஓய்வெடுக்கவும் அமைதியாகத் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யவும் இலங்கையில் இருந்த தம் தேயிலைத் தோட்ட வளமனையை வழங்கியும் திரு. செட்டியார் அவர்கள் யாழ்நூல் ஆராய்ச்சிக்கு உதவியுள்ளார். தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்களுக்கும் அகவையில் குறைந்த திரு. சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கும் மிகச்சிறந்த நட்பும் உறவும் இருந்துள்ளமையை இருவரின் எழுத்துகளையும் ஊன்றிக் கற்கும்பொழுது உணரலாம். இராம. இராம. சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு நம் சுவாமிகள் வரைந்த மடல் ஒன்று அண்மையில் என் பார்வைக்குக் கிடைத்தது. அந்த மடலில் யாழ்நூலை அச்சிட நம் அடிகளார் வழங்கிய திட்டமும், யாழ்நூல் அச்சேறத் துணைநின்ற அ. கணபதிப்பிள்ளை அவர்களின் சிறப்பும் தெரியவருகின்றது. அடிகளார் வரைந்த மற்ற கடிதங்கள், குறிப்பேடுகள் கிடைத்தால் யாழ்நூல் சிறப்பை உணர மேலும் வழிகிடைக்கும்.



விபுலாநந்த அடிகளின் யாழ்நூல் வெளியீடு குறித்த அரிய மடல்
9.5.45
Camp
Woodstock Estate,
Rogele

பிரிய நண்பர் திரு. பெ. ராம. ராம. சித அவர்களுக்கு
ஆண்டவன் அருளை முன்னிட்டு எழுதுவது.

நலம். 25/4 இல் சென்னையிலிருந்து எழுதிய கடிதமும், 5/5 இல் புதுக்கோட்டையிலிருந்து எழுதிய கடிதமும் கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு இன்று ஒருங்கு கிடைத்தன.

பேரன்புள்ள திரு. **அ. க. அவர்கள் கடிதத்தையும் படித்தேன். அக்கடிதத்தில் ஒரு குறிப்பு எழுதி, இதனுள் வைத்திருக்கிறேன். அவர்களுக்கு அனுப்பிவிடலாம். அச்சுச் சட்டத்தின்படியும், நானூறு பக்கம் புத்தகத்தை ஓராண்டில் வெளியிட்டால் அதிகாரிகள் வினாவுவதற்கிடமுண்டு.

1944 ல் அச்சாகி முடிந்த முதல் ஐந்து இயல்களை(ப்) பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலை திரிபியல், பண்ணியல்களை இப்பொழுது வெளியிடலாம். படங்களை ஈற்றிற் சேர்ப்பது இப்பொழுது  வெளிவரும் ஆங்கில ஆராய்ச்சி நூல்களின் மரபு பற்றி யாமும் ஈற்றிற் சேர்த்துக்கொள்ளுவோம். உள்ளுரையும் நூல் முற்றிலும் அச்சான பிறகு அச்சிடுதற்குரியது. இப்பொழுது நாம் அச்சிடவேண்டியது முகப்புத்தாள் மாத்திரமே (Title Page). இது திரு. அ. க. அவர்களுக்கு முன்னமே எழுதியிருக்கிறேன். வெளிக் கவருக்கு கையினால் செய்த தாள் தடிப்பானது. மதுரையிலும், விருதுநகரிலும் கிடைக்கும். வெண்சிவப்பு நிறத்தில் உபயோகிக்கலாம். முகப்பு(த்) தாளிலுள்ள விஷயத்தைச் சுருக்கி அச்சிடலாம்.


விபுலாநந்த சுவாமிகள்

யாழ்நூல்


YAL NUL
By
Swami Vipulanda

கரந்தை தமிழ்ச்சங்கம்
தஞ்சாவூர்

ஒருவாரத்தில் இங்கிருந்து புறப்படுகிறேன். 21- ஆந்தேதி கொழும்பில் ஒரு கூட்டமுண்டு. அடுத்த நாளே புதுக்கோட்டைக்கு புறப்படலாம். குழந்தைகளுக்கும் தங்களுக்கும் எனது அன்பு.

அன்புள்ள விபுலாநந்தர்.

ஐந்தியல்களை இப்பொழுது வெளியிடலாம். அரங்கேற்று விழா வேண்டுமானால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இரண்டாம் பாகம் வெளியிடும்போது வைத்துக்கொள்ளலாம்.
வி.

**அ.க. என்று குறிக்கும்பெயர் அ. கணபதிப்பிள்ளை என்னும் அன்பராவார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் பணியாற்றிய பெருந்தகை. திரு. உமாமகேசுவரம் பிள்ளையின் உற்ற நண்பர்; நம்பிக்கைக்குரியவர். உமாமகேசுவரானர் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டபொழுது உடன் சென்றவர். உமாமகேசுவரனார் வடநாட்டில் இயற்கை எய்தியபொழுது அவரை அடக்கம்செய்து, இறுதிக்கடன்களை நிறைவேற்றித் தமிழகம் திரும்பியவர்.

## சுவாமிகளின் கடிதத்தில் தட்டச்சில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. சுவாமிகளில் திருவாய்மொழியை உதவியாளர் தட்டச்சிட்டிருப்பார் என்று தெரிகின்றது.

## எழுதுகோலால் இரண்டாம் பக்கத்தில் எழுதப்பட்டுள்ள கணக்கு விவரம் மடலைப் பாதுகாத்தோரின் செயலாகத் தெரிகின்றது.

நன்றி: ஒன் இந்தியா - தமிழ் இணையதளம் 
http://tamil.oneindia.com/cj/mu-illangovan/rare-letter-vipulananda-swamigal-259828.html

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

பேராசிரியர் சண்முக. செல்வகணபதியின் திருப்புகழ் குறித்த உரை





தஞ்சைக்குச் செல்லும்பொழுதெல்லாம் தவறாமல் கரந்தை செயகுமார் அவர்களைச் சந்திப்பது உண்டு. இந்தமுறையும் தஞ்சைப் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியதும் என் வருகையைக் குறிப்பிட்டுச் செல்பேசியில் பேசினேன். அடுத்த பதினைந்து நிமையத்தில் கரந்தை செயகுமார் வந்துசேர்ந்தார். இருவரும் அருகில் இருந்த கடையில் அமர்ந்து குளம்பி அருந்தினோம். பயண நோக்கத்தைப் பகிர்ந்துகொண்டு, அவர்தம் வலைப்பதிவுப் பணிகளை வாயாரப் புகழ்ந்து பாராட்டினேன். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் கவினார்ந்த பணிகளை இருவரும் நினைவுகூர்ந்தோம்.

தஞ்சாவூரின் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேராசிரியர் சண்முக. செல்வகணபதியின் இல்லத்திற்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்ததால் அருகில் இருந்தவர்களிடம் செல்பேசி எண் பெற்று, பேராசிரியர் அவர்களின் துணைவியாரிடம் எங்கள் வருகையைச் சொன்னோம். இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன் எனவும் அதுவரை காத்திருக்கும்படியும்  அவர் பணித்தார்; சொன்னபடி சற்று நேரத்தில் வந்துசேர்ந்தார். பேராசிரியர் அவர்களைச் சந்திக்க விரும்புவதைச் சொன்னோம். முன்பே நான் அவர்களின் இல்லத்திற்குச் சென்றுள்ளதால் என்னை அம்மா அடையாளம் கண்டு கொண்டார்.

இன்று (06.08.2016) மாலை 7 மணி முதல் 8 மணி வரை தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மண்டபத்தில் பேராசிரியர் செல்வகணபதி திருப்புகழ் தொடர்வகுப்பு நடத்துவதாகவும், 8.30 மணிக்கு இல்லம் திரும்புவார் எனவும் பேராசிரியரின் நிகழ்ச்சி நிரலை அம்மா குறிப்பிட்டார். இல்லத்தில் காத்திருப்பதைவிடக் கோவிலுக்குச் சென்றால் சற்று நேரம் திருப்புகழ்ப் பாடம் கேட்கலாம் என்று நானும் கரந்தையாரும் புறப்பட்டோம்.

தஞ்சைப் பெரிய கோவிலின் மண்டபத்தை நாங்கள் அடைவதற்கும் திருத்தவத்துறை (இலால்குடி) கோயில் இறைவன் மீது அருணகிரியார் பாடிய பாடலைப் பேராசிரியர் விளக்கத் தொடங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது. திருத்தவத்துறையின் சிறப்பினையும், இத்தலம் குறித்தும் சமய அடியார்கள் பாடிய பாடல்கள் குறித்தும் பேராசிரியர் முதலில் விளக்கினார். திருத்தவத்துறைக்கும் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுக்கும் உள்ள தொடர்பினை இனிமையாக விளக்கத் தொடங்கினார். நாங்கள் வந்திருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்து நான் உருவாக்கிய ஆவணப்பட முயற்சி குறித்து எடுத்துரைத்து, அரங்கில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். பார்வையாளர்கள் என்ற வரிசையில் எண்மர் இருப்பர். எங்களையும் சேர்த்தால் பதின்மர் இருப்போம். பெரிய கோவிலுக்கு வந்துசெல்லும் சுற்றுலாக்காரர்கள் உரையரங்கம் நடைபெறும் மண்டப முகப்பில் வந்து நின்று பார்ப்பார்கள்; சற்று நேரத்தில் வந்தவேகத்தில் செல்வார்கள். தமிழ் கற்றவர்களுக்கே திருப்புகழின் சிறப்புகள் தெரியாமல் இருக்கும்பொழுது கல்லாக் கூட்டத்திற்கு எங்கே அதன் சிறப்பு தெரியப்போகின்றது?

நீண்ட நாளுக்குப் பிறகு ஒரு மாணவனைப் போல் அமர்ந்து திருப்புகழ்ப் பாடலைப் பாடம் கேட்க அமைந்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன். இதுவரை 111 வகுப்புகள் திருப்புகழ் குறித்துத் தஞ்சைப் பெரியகோயில் நடந்துள்ளனவாம். நாங்கள் சென்று கேட்டது 112 ஆம் தொடர் வகுப்பு என்று அறிந்தபொழுது வியப்பு ஏற்பட்டது. திருப்புகழை எவ்வாறு படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை எளிய நிலை அறிவுடையவர்களுக்கும் புரியும்படி பேராசிரியர் சண்முக. செல்வகணபதி விளக்கியபொழுது அவர்தம் பாடஞ்சொல்லும் திறமை எனக்கு விளங்கியது.

தாம் நடத்தும் பாடப் பகுதியையும் அதற்குரிய விளக்கத்தையும் கணினியில் தட்டச்சிட்டு, அதன் படியைப் பார்வையாளர்களுக்கு வழங்கும் பேராசிரியரின் பாடத் தயாரிப்பு முறையைப் பாராட்டுதல் வேண்டும். மக்களுக்குப் பாடஞ்சொல்லும்பொழுது கேட்போர்க்கு இடர்ப்பாடு இருத்தல்கூடாது என்று ஆயத்தமாகத் திட்டமிட்டு வந்த அவரின் கடமையுணர்ச்சி பளிச்சிட்டது. இவரிடம் கல்லூரியில் பாடம்கேட்ட மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்!. தொல்காப்பியம், நன்னூலைப் பார்க்காத சில அன்பர்கள் பல்கலை- கல்லூரிகளில் பணியாற்றுவதைப் பற்றி ஐயா தமிழண்ணல் சொன்னதை இங்கு நினைத்துக்கொண்டேன்.

திருப்புகழ்(திருத்தவத்துறை, 918)

தானன தந்தன தத்த தத்தன
     தானன தந்தன தத்த தத்தன
          தானன தந்தன தத்த தத்தன ...... தனதான

......... பாடல் .........

காரணி யுங்குழ லைக்கு வித்திடு
     கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்
          காணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே

காதள வுங்கய லைப்பு ரட்டிம
     னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி
          காமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப்

பூரண கும்பமெ னப்பு டைத்தெழு
     சீதள குங்கும மொத்த சித்திர
          பூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான

போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்
     யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு
          பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே

வீரபு யங்கிரி யுக்ர விக்ரம
     பூதக ணம்பல நிர்த்த மிட்டிட
          வேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட

வீசிய பம்பர மொப்பெ னக்களி
     வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்
          வேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா

சீரணி யுந்திரை தத்து முத்தெறி
     காவிரி யின்கரை மொத்து மெத்திய
          சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே

சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
     மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய
          தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே.

என்னும் திருப்புகழ்ப் பாடலை விளக்குவதற்கு முன்பாகப் பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருப்பெருந்துறை இறைவி மீது பாடிய, “மாமலர் நறுங்குழற் கொண்டலிடை நித்தில மணிப்பிறை நிலாவெறிப்ப” எனும் பாடலைப் பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத் தமிழிலிருந்து எடுத்துக்காட்டி விளக்கினார். மேலும் சேக்கிழாரின் பெரியபுராணத்திலிருந்தும் வரிகளை மேற்கோள்காட்டிப் பேசியமை எம் போலும் தமிழ்ப்பசியுடன் வந்து அமர்ந்தோருக்குப் பெருவிருந்து என்று சொல்லலாம்.

திருப்புகழை எவ்வாறு படிக்கவேண்டும் என்று இன்று சிறப்பாக அறிந்துகொண்டேன். முதலில் சந்தச் சிறப்பை விளக்கினார். சந்தம்தான் திருப்புகழ்க் கோட்டையைத் திறக்கும் திறவுகோல் என்றார். சந்தத்தைப் படித்துக்காட்டி, பாடலைப் பலமுறை படித்தார். பாட்டின் அமைப்பு எங்களின் மனத்தில் பதிந்தது. பிறகு பிற்பகுதியிலிருந்து பொருள்சொல்லத் தொடங்கினார்.

காவிரியின் வளம், முருகபெருமானின் திறல், அருணகிரியாரின் இன்ப விழைவுநிலை என்று பேராசிரியர் சண்முக. செல்வகணபதி விளக்கினார். சகானா இராகத்தில் இப்பாடல் உள்ளது என்றார். இந்த இராகம் பாவேந்தருக்குப் பிடித்தது என்று கூறி, பாவேந்தரின் இசையமுதிலிருந்து நினையாரோஎன்ற பாடலைப் பாடிக்காட்டினார். ஒப்புமை கருதி, குறுந்தொகையிலிருந்து 16 ஆம் பாடலை மேற்கோள் காட்டினார். 16 இடங்களில் திருப்புகழில்  தவில் ஓசை குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.


பல்வேறு நூல்களிலிருந்து மேற்கோள்கள், பல்வேறு நுட்பங்கள், பல்வேறு செய்திகளை எடுத்துக்காட்டித் தம் உரையைச் சிறப்பாக அமைத்தார். பெருநிதியை வாரி வழங்கும் வள்ளல்போல் பேராசிரியர் செல்வகணபதி தாம் நடத்திய திருப்புகழ் வகுப்பில் தமிழ் அமிழ்தமாகச் செய்திகளை வாரி வழங்கினார். இவர்தம் செல்பேசியைத் திறந்துவைத்திருந்ததால், அதன் வழியாகத் திருச்சிராப்பள்ளி அன்பர்கள் அவர்கள் இல்லத்திலிருந்து இந்த உரையைச் செவிமடுத்தமையை அறியமுடிந்த்து. மிகச் சரியாக எட்டுமணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. ஐயாவிடம் வந்த காரணம் சொல்லி, அழைப்புவிடுத்து, விடைபெற்றுக் கொண்டோம். வாரவிடுமுறைநாள் என்பதால் தஞ்சைச் சாலைகளில் சுற்றுலாக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மக்கள் கடலை நீந்தித், தொடர்வண்டி நிலையம் வருவதற்கும் உழவன் விரைவு வண்டி புறப்படுவதற்கும் சரியாக இருந்தது.