நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 26 மார்ச், 2020

என் முதல்நூல் மாணவராற்றுப்படையை வெளியிட்டு(1990), அருளாசி நல்கிய தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் உரை!


தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 

 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை மாணவனாக நான் பயின்றுகொண்டிருந்தபொழுது, மாணவராற்றுப்படை என்னும் பெயரில் எழுதிய நூலினை, 24.03.1990 இல் வெளியிட்டோம். திருப்பனந்தாள் காசித் திருமடத்தில் காறுபாறு சுவாமிகளாக அப்பொழுது விளங்கிய தவத்திரு. குமாரசாமித் தம்பிரான் அவர்கள் அந்த நூலினை வெளியிட்டு அருளாசி வழங்கினார்கள். அவர்களின் வாழ்த்துதலின் வண்ணம் என் வாழ்க்கை தமிழ் கற்பதிலும், ஆய்வதிலும், பயிற்றுவிப்பதிலுமாக அமைந்தது. இந்நிகழ்வு நடந்து முப்பதாண்டுகள் ஓடின. அன்றைய நாளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும், ஒலிப்பதிவும் இன்றும் அந்த நிகழ்வை நினைவூட்டிக்கொண்டே உள்ளன. எம் ஒலிக்களஞ்சியத்திலிருந்து சுவாமிகள் அவர்களின் உரையை முப்பதாண்டுகளுக்குப் பிறகு இன்று வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.

தெளிந்த கருத்துகளும், ஆழ்ந்த உண்மைகளும், இளம் ஆர்வலர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் தாயுள்ளமும் கொண்டு, தவத்திரு அடிகளார் அவர்களின் பேச்சு அமைந்துள்ளமையைக் கேட்போர் உணரமுடியும். சிற்றூர்ப்புறத்து மாணவனாகச் சென்ற எனக்கு நற்பண்பும், நல்லறிவும் தந்து, வளர்த்த தவத்திரு அடிகளார் அவர்களை என்றும் நன்றியுடன் போற்றி வணங்குவேன்.

தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் தம் கல்வி, கேள்விகளாலும், இறைவழிபாட்டாலும், சமயப்பணிகளாலும் மேம்பட்டு, திருமடத்தின் தலைவர்களாலும், சமய அன்பர்களாலும் போற்றப்பட்டு, புகழ்மிக்க தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆம் அதிபராக தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் என்னும் திருப்பெயர் தாங்கி, மக்களுக்குச் சமயப் பணியையும் தமிழ்ப்பணியையும் திறம்பட ஆற்றி வருகின்றார்கள்.

தமிழ்நாட்டு அரசு மயிலாடுதுறை மாவட்டம் உருவாவதற்கு அறிவிப்பு நல்கிய இச் சூழலில், அரசு அலுவலகம், கட்டடங்கள் அமைப்பதற்குத் தேவையான நிலத்தைத் தம் திருமடத்தின் சார்பில் வழங்கிப் புதிய மாவட்டம் தோற்றம்பெற நம் சுவாமிகள் அவர்கள் உதவியுள்ளார்கள். இப்பெரும் செயலைப் போற்றி, இந்த இனிய நாளில் அவர்தம் முப்பதாண்டுகளுக்கு முந்திய பேச்சினை ஒலிவடிவில் வழங்குவதில் மகிழ்கின்றேன்.

தவத்திரு அடிகளார் அவர்களின் அருளுரையைச் செவி மடுக்க இங்கே அழுத்துங்கள்.

தொடர்புடைய பதிவுகள்


சனி, 21 மார்ச், 2020

பாவாணர் பற்றாளர் மா. பஞ்சாட்சரலிங்கனார்…



 மா. பஞ்சாட்சரலிங்கனார்

மலேசியாவில் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவராக விளங்கும் அருமை நண்பர் இரா. திருமாவளவன் தம் முகநூல் பதிவொன்றில் பஞ்சாட்சரலிங்கம் (பஞ்ச+அட்சர+இலிங்கம்) என்னும் தமிழ்த்தொண்டரைக் குறித்து எழுதியிருந்த பதிவொன்றைக் கண்டு, அடுத்தமுறை நான் மலேசியா வரும்பொழுது திரு. பஞ்சாட்சரலிங்கனாரைக் காண்பதற்கு ஒழுங்குசெய்ய வேண்டும் என என் விருப்பத்தைத் தெரிவித்திருந்தேன். திருவாளர் பஞ்சாட்சரலிங்கனாரை நான் காண வேட்கைகொண்டமைக்கு அவரிடம் பாவாணர் எழுதிய மடல்கள் பல இருக்கின்றமையும், பாவாணர் குறித்த அரிய செய்திகள் உள்ளமையுமே காரணமாகும். பாவாணர்மேல் மிகுந்த பற்றுக்கொண்ட பஞ்சாட்சரலிங்கனார், பாவாணர் ஐயாவின் விருப்பத்தின்படி அவருக்கு 700 வெள்ளி மதிப்பில் நாடாப்பதிவான் ஒன்று வாங்கி அந்நாளில் திருவாட்டி கங்கா நாயர் என்ற தம் உறவினர் வழி அனுப்பியும், சென்னைக்கு வந்து பாவாணரைக் கண்டு(1975) உரையாடித் தம்மால் இயன்ற பொருட்கொடை நல்கியும் தமிழ்த்தொண்டராக அடையாளம் காணப்பட்டவர். பாவாணரின் பணிகளுக்குத் துணைநின்ற, பாவாணரின் ஆய்வுகளில் பேரீடுபாடு கொண்ட மலேசியாவில் வாழும் பஞ்சாட்சரலிங்கனாரைக் காண்பதற்குரிய நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அதற்குரிய வாய்ப்பும் சென்ற மாதம் (பிப்ரவரி, 2020) கனிந்தது.

பஞ்சாட்சரலிங்கனார் ஊரில் இருப்பதையும், எம்மைக் காண ஆர்வமுடன் இருப்பதையும் இரா. திருமாவளவனார் சொல்ல, மாலையில் அவர்தம் இல்லம் செல்லும் வகையில் திட்டமிட்டோம். 10.02.2020 மாலை 7 மணியளவில் யான் தங்கியிருந்த அருக்காணி பசுமை மையத்திற்குத் திருமாவளவனார் மகிழுந்தில் வந்து சேர்ந்தார். அங்கிருந்து இருவரும் புறப்பட்டோம். போக்குவரவு நெருக்கடி இல்லையாதலால், அரைமணி நேரத்தில் பஞ்சாட்சரலிங்கனார் இல்லம் சென்று சேர்ந்தோம். மகிழுந்தை நிறுத்தும் சாலையோரத்தில் பல்வேறு மூலிகைச் செடிகளைக் காட்டி, இவை யாவும் பஞ்சாட்சரலிங்கனாரால் பாதுகாத்து, வளர்க்கப்படுகின்றன என்று திருமாவளவனார் எடுத்துக்கூறினார். பப்பாளி, வாழை உள்ளிட்ட பயன்மரம் சிலவும் நீண்டு செழித்து நின்றிருந்தன. அருகில் உள்ள கோவில்கள், பொது இடங்களில் எல்லாம் மூலிகைச் செடிகளை வளர்ப்பதைத் தம் ஆர்வப் பணியாகச் செய்து, தமிழ் மூலிகை மரபு மலேசியாவில் தழைக்க உழைத்தவர் நம் பஞ்சாட்சரலிங்கனார் ஆவார்.

கதவைத் திறந்து வரவேற்ற பஞ்சாட்சரனார், முதுமை காரணமாகவும், கால்வலி காரணமாகவும் கையில் தடியூன்றி வந்து, அன்பொழுக, எம்மை அழைத்துச் சென்று இருக்கையில் அமருமாறு வேண்டிக்கொண்டார். தம் ஆருயிர் மனைவியை அழைத்து, எங்கள் வருகையைச் சொன்னதும் அந்த முதுபெரும் தாயார் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். இந்தோனேசியப் பணிப்பெண் ஒருவர் தேநீர் கொண்டுவந்து எங்களுக்கு வழங்கி, ஓரிரு மலாய்ச் சொற்களை வீசி, அவர்தம் அன்புமொழிகளை எங்களுக்குப் பரிசளித்தார்.

மா.பஞ்சாட்சரலிங்கம் அவர்களுடன் மு.இளங்கோவன்

இரா. திருமாவளவனார் பஞ்சாட்சரலிங்கனாரிடம் என்னை முறைப்படி அறிமுகம் செய்துவைத்தார். பாவாணர்மேல் நான் கொண்டிருக்கும் மதிப்பினையும், அன்பினையும் சொல்ல, அமைதியாகத் தம் பழைய நினைவுகளைப் பஞ்சாட்சரலிங்கனார் மீட்டத் தொடங்கினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

மலேசியாவில் வாழ்ந்த க. மாணிக்கம், அமுதம் ஆகியோரின் மகனாக 15.09.1936 இல் நம் பஞ்சாட்சரலிங்கம் பிறந்தவர். இவர்தம் முன்னோர் இலங்கையின் வடமராட்சி ஊரினர். மலேசியாவில் போர்ச்சூழல் நிலவியதால் 1939 இல் தம் மூன்றாம் அகவையில் இவர் தம் தாயாருடன், தம் முன்னோர் நாடான இலங்கைக்குச் சென்றார். அங்கு (இலங்கையில்) எட்டாம் வகுப்பு வரை படித்த இவர், மலேசியாவில் அமைதி மீண்டும் திரும்பியதும் 1949 இல் நாகைப்பட்டினத்தில் கப்பலேறி, மலேசியாவின் பினாங்கிற்குத் திரும்பினார். பஞ்சாட்சரலிங்கனாரின் தந்தையார் மலேசியாவில் இரயில்வே துறையில் பணியில் இருந்தவர். தந்தையார் பாவாணரைப் பார்க்கச் சென்றபொழுது கொழும்புக் குடை வாங்கிச் சென்றமையைப் பஞ்சாட்சரலிங்கனார் நினைவுகூர்ந்தார். அதுபோல் தொடர்வண்டியில் பயன்படுத்தப்படும் வார்ப்பு இரும்பில் அமைந்த தோசைக்கல், கரண்டி உள்ளிட்டவற்றையும் பாவாணர் இல்லத்திற்கு நம் பஞ்சாட்சரலிங்கனார் வேறு வேறு சூழல்களில் அனுப்பிவைத்துள்ளார்.

பஞ்சாட்சரலிங்கனார் மிகச் சிறந்த ஓட்டப் பந்தய வீரர். 24 கி.மீ. தூரம் ஒடி, பல்வேறு பரிசுகளையும் கோப்பைகளையும் பெற்றுள்ளார். மலேசியா, சிங்கப்பூரில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்துகொண்டு, தாம் பெற்ற பரிசுகளை நினைவாக வீட்டில் வைத்துள்ளமையைக் கண்டு மகிழ்ந்தோம். மலேசிய அரசின் பதிவுத்துறையில் எழுத்து வினைஞராக (Clerk) பணிபுரிந்தபொழுது, பல்வேறு தொழிலதிபர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தமையையும் அத்தொடர்பைப் பயன்படுத்தி, பாவாணருக்கு நிறைய உதவிகள் செய்யமுடிந்தமையையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பாவாணருக்கு வேண்டிய அழகிய எழுதுபொருள்கள், தூவல்கள், தாள்கள், பொத்தான்கள் உள்ளிட்டவற்றை வாங்கி அனுப்புவதில் மகிழ்ச்சிகொண்டிருந்தார்.

பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் நூலினைப் படித்த பஞ்சாட்சரலிங்கனார்க்குப் பாவாணர்மேல் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. மலேசியாவில் வாழ்ந்த நெற்குப்பை ஊரைச் சேர்ந்த திருவாளர் செ. சொக்கலிங்கம் அவர்கள் வழியாகத் தென்மொழி உள்ளிட்ட இலக்கிய இதழ்களைப் பெற்று, பஞ்சாட்சரலிங்கனார் படித்துள்ளார்.

மலேசியாவில் வாழ்ந்த சா. சி. சுப்பையா (குறிஞ்சிக் குமரனார்), முருகு. சுப்பிரமணியன், கு. அழகிரிசாமி, சி.வேலுசாமி, அருட்தந்தை தனிநாயகம் அடிகளார், தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம், சுப. நாராயணன், கோ. சாரங்கபாணி உள்ளிட்ட பெருமக்கள் குறித்த பல்வேறு செய்திகளைப் பஞ்சாட்சரலிங்கனார் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். பெருஞ்சித்திரனார் மலேசியா சென்றபொழுது(1972 அளவில்) சோகூர்பாரு ஊரில் வாழ்ந்த தமிழ்ச்செல்வர் ஒருவர் ரோல்சு ராய்சு (Rolls Royce) மகிழுந்தில் கோலாலம்பூருக்கு அனுப்பி வைத்தமையை எடுத்துச் சொல்லி, தமிழ்ப் புலவர் ஒருவர் ரோல்சுராய்சு மகிழுந்தில் வந்து இறங்கியமை தங்களுக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது என்று குறிப்பிட்டார்.

மு.இளங்கோவன், மா. பஞ்சாட்சரலிங்கம்


பஞ்சாட்சரலிங்கனார் தாய்வழிப் பாட்டனார் திரு. பண்டாரம் வழியாக மூலிகைச் சிறப்புகளை அறிந்தமையையும், சண்டி இலை உள்ளிட்டவற்றை இலங்கையிலிருந்து கொண்டு வந்து மலேசியாவில் பதியம் இட்டதையும் நினைவுகூர்ந்தார். இவ்விலையை இன்று சுண்டி இலை எனவும் சொல்வர் என்று கூறி, இதனைக்கொண்டு கால்முறிவினைச் சரிசெய்யலாம் என்றார். கோவில், ஊர்ப்பொது இடங்களில் மூலிகைகளை, மரங்களை வளர்ப்பதை விருப்பமாகச் செய்யும் பஞ்சாட்சரலிங்கனார் அவர்களின் இயற்கை ஈடுபாடு அறிந்து மகிழ்ந்தோம்.

ஓடுவதும் நடப்பதும் பஞ்சாட்சரலிங்கனார்க்கு விருப்பமான செயல்களாகும். பத்துமலைக் கோவில் படிக்கட்டில்  மூன்று முறை ஏறி இறங்குவதைப் பொழுதுபோக்காகச் செய்தவர் இவர். சிலாங்கூர் மாநிலத்தில் இருபத்து நான்கு கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி, முதல் பரிசு பெற்று, கோப்பை வென்றவர். அக்கோப்பையை கி.ஆ.பெ. விசுவநாதம், கோ. சாரங்கபாணியார் முன்னிலையில் ஏலம்விட்டு, அத்தொகையைத் தமிழ்வளர்ச்சிப் பணிக்கு வழங்கியமையை நினைவுகூர்ந்தார்.

பெருஞ்சித்திரனார் மலேசியா சென்றிருந்தபொழுது அவரின் பேச்சுக்கு மாறுபட்டு, முருகு. சுப்பிரமணியன் பேசியதை நினைவூட்டிய பஞ்சாட்சரலிங்கனார் முருகு. சுப்பிரமணியனாரின் தமிழ்நேசன் பணிகள், அரசியல் செல்வாக்கு, அவரின் எழுத்துப்பணிகள் குறித்த விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

நாங்கள் விடைபெறும் விருப்பத்தைச் சொன்னதும் பஞ்சாட்சரலிங்கனாரும், அவர் துணைவியாரும் அன்பொழுக வாழ்த்தி வழியனுப்ப முனைந்தனர். மறுநாள் என் பிறந்தநாள் என்பதை இரா. திருமாவளவனார் நினைவூட்டியதும், சிறு கரண்டி (தங்க முலாம் பூசப்பெற்றது) ஒன்றை எனக்கு நினைவுப் பரிசாக வழங்கி, வழியனுப்பினர். நானும் இரா. திருமாவளவரும் தமிழ்வளர்ச்சிக்கு அறிஞர் பெருமக்கள் மலேசிய மண்ணில் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தபடியே அருக்காணி பசுமை மையத்தை நள்ளிரவு 12 மணியளவில் வந்தடைந்தோம்.


 மா. பஞ்சாட்சரலிங்கம், அவரின் துணைவியார், 
மு.இளங்கோவன், இரா. திருமாவளவன்

மு.இளங்கோவன், மா. பஞ்சாட்சரலிங்கம் 


நன்றி: இரா. திருமாவளவன்(மலேசியா)

புதன், 18 மார்ச், 2020

தூய தமிழ்ப் பற்றாளர் இரா. அரிதாசு…


இரா. அரிதாசு

அண்மையில் தமிழ்நாட்டு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில் தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டவர்களின் பட்டியலில் இரா. அரிதாசு அவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தமையை நாளிதழ்களில் கண்டு அளவிலா மகிழ்ச்சியுற்றேன். யான் பயின்ற உள்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் இவர் இரவுநேரக் காவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும். இரவுநேரக் காவலர் எனினும் பகல்பொழுதிலும் இவர் பள்ளியில் ஏவலராகப் பணியாற்றி அனைவரின் அன்பையும் பெரும் மதிப்பையும் பெற்றவர் என்பதும் இதற்குக் காரணம் ஆகும்.

இரா. அரிதாசு தம் பணி ஓய்வுக்குப் பிறகு 2009 செப்டம்பர் முதல் திருவாரூர், பவித்திரமாணிக்கம் என்னும் ஊரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். அரிதாசுவின் குடும்பம் எளிய குடும்பம். ஒரு மகளும் இரண்டு மகனும் இவருக்கு மக்கள் செல்வங்களாக வாய்த்துள்ளனர். இவரின் துணைவியார் செயலட்சுமி குடும்பநிலையுணர்ந்து, இல்லற வாழ்வை இனிது அமைப்பவர். இது நிற்க.

உள்கோட்டை என்னும் ஊர் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்து உள்ளது. இந்த ஊரில் வேளாண்மை, நெசவுத்தொழில் இரண்டும் புகழுடன் விளங்குவன. பட்டுப்புடவை நெசவு குறிப்பிடத்தக்க தொழிலாக உள்ளது. உழவர்களும் நெசவாளர்களும் நிறைந்து காணப்படும் இவ்வூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் பலநிலைப்பட்ட குடும்பங்களில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர் இவர்களின் தாய்வீடாக விளங்குவது இத் தொடக்கப்பள்ளியாகும். உள்ளூர், வெளியூர்களிலிருந்து வந்து இருபால் ஆசிரியர்கள் பணிபுரிவது வழக்கம். ஆண்டுக்கு ஓரிருமுறை கல்வித்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்துவார்கள். மற்றபடி தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு நடுவங்களாக இந்தத் தொடக்கப்பள்ளி உருமாறும். ஓரிரு முறை ஆண்டு விழா நடந்ததாக நினைவு உள்ளது. மற்றபடி இந்தப் பள்ளியில் படித்து முன்னேறியவர்களின் பட்டியலை எடுத்தால் எண்ணிக்கை நிறைவாக இருக்கும். தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் இந்தப் பள்ளியும் சரிவைச் சந்தித்துள்ளது.

உள்கோட்டை தொடக்கப்பள்ளியில்தான் நான் அரிச்சுவடி பயின்றேன்.(1972-1977). காங்கியனூர் (யுத்தப்பள்ளம்) திருவாளர் கே. சோமசுந்தரம் ஆசிரியர் என் விரல்பிடித்து, நெல்லில் அகரம் எழுதச் செய்து, தமிழ்த்திசையைக் காட்டியவர். திருவாளர்கள் நா. கிருட்டினன், இரா. சம்பந்தம், மு. கலியபெருமாள், ஆ. தனபால், பி. இராமலிங்கம், கே. கிருஷ்ணய்யா, இரா. பாலசுப்பிரமணியன், ச. சங்கரலிங்கம், ந. பழனியாண்டி, வீரமுத்து, சா. ஆறுமுகம், பெ.சுப்பிரமணியன் (பிச்சனூர்), ப. சாமுவேல் (உள்கோட்டை), ப. தனசேகரன் (ஆமணக்கந்தோண்டி), திருவாட்டி இராசமாணிக்கத்தம்மாள், த. பன்னீர்செல்வம்(தொட்டிக்குளம்), எஸ். எமிலி செயசீலி, அ. பிச்சையம்மாள், உள்ளிட்ட ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணிபுரிந்து, கல்லாத குடியில் பிறந்த எம் பிள்ளைகளின் அறிவுக்கண் திறந்தவர்கள் என்பதை நன்றியுடன் இங்குப் பதிவுசெய்கின்றேன் (சற்றொப்ப ஐம்பதாண்டுகளுக்கு முன் பணியாற்றியவர்கள் என்பதால் என் நினைவுக்குறைவால் விடுபாடு இருப்பின் பொறுத்தாற்றுங்கள்).

நான் தொடக்கப்பள்ளியின் படிப்பை முடித்து, அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு இடம்பெயர்ந்த இரண்டு ஆண்டில் இரா. அரிதாசு அவர்கள் தொடக்கப்பள்ளியில் இரவுக்காவலராகப் பணியில் இணைந்தார். தூய வெள்ளாடையில் இருப்பார். மணி அடிப்பது, பிள்ளைகளுக்குப் பகலுணவு இடுவது, வருகைப் பதிவேடு கொண்டு செல்வது, கல்வி அதிகாரிகள் வரும்பொழுது தேநீர், சிற்றுண்டி வாங்கி வருவது இவர்தம் பணியாக இருக்கும். பள்ளியை ஒட்டிய பகுதிகளில் தோட்டம் அமைப்பது, நீர் ஊற்றுவது என்று இவர் பணி நீண்டிருக்கும். இவர் எப்பொழுதும், எவ்விடத்தும் தமிழில் பேசுவதால் அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

நம் ஊரில் அப்பொழுது ஓரிருவர் மறைமுகமாக மது அருந்துவர். அவர்களைத் தீயொழுக்கம் உடையவர்களாக மக்கள் நினைப்பர். அத்தகையோரால் ஊருக்கு இழிபெயர் என்று புறம்பேசுவர். அத்தகையோரும் முரட்டுத் தனமாக நடந்து மக்களின் வெறுப்புக்கு ஆளாவார்கள். அத்தகு தவறான பழக்கம் உடையவர்கள் கூட நம் அரிதாசு அவர்களைக் கண்டால் மிகவும் மரியாதையாக நடந்துகொள்வார்கள். தம் பிள்ளைகளை நன்கு பார்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்வார்கள்.

இரா. அரிதாசு  பணியாளர் நிலையில் இருந்தாலும் நல்ல தமிழில் உரையாடுவதால் பள்ளிக்கு வரும் அதிகாரிகள் இவரிடத்து மிகவும் மதிப்பாக நடந்துகொள்வார்கள். ஊருக்கு ஓரிரு பேருந்துகளே அப்பொழுது வந்தன. அதில் வரும் அதிகாரிகளை வழியனுப்ப அரிதாசு அவர்களே மிதிவண்டியில் அழைத்துச் செல்வார். அப்பொழுது இவரின் தனித்தமிழ் உரையாடல்களைக் கேட்டு அனைவரும் வியப்படைவர். தைப்பு முள் என்றும், தொய்வ அச்சு என்றும், வருகைப் பதிவேடு என்றும், பணிப் பதிவேடு என்றும், தற்செயல் விடுப்பு என்றும், மருத்துவ விடுப்பு என்றும் ஒலிபெருக்கி என்றும் இவர் தங்கு தடையில்லாமல் பேசுவது கண்டு முறையாகத் தமிழ்க்கல்லூரியில் பயின்றவர் என்று அனைவரும் நம்புவது உண்டு. இவர் பள்ளியிறுதி வகுப்பு வரையில் பயின்றவர் என்பது அருகில் நெருங்கிப் பழகியோர்க்கு மட்டும் தெரியும்.

இரா. அரிதாசு தூய தமிழ்ப் பெயர்ப்பலகை திறப்பில் ஆர்வம் கொண்டவர். தம் பள்ளியில் படிக்க வரும் குழந்தைகள் பிறமொழிப் பெயர்களைத் தாங்கியிருந்தால் தம் கையில் உள்ள தனித்தமிழ்ப் பெயர்ச்சுவடியைக் கொடுத்து, இதில் உள்ள ஒரு பெயரைப் பள்ளியில் பதியுங்கள் என்று நெறிகாட்டுவார். இவரால் இப்பகுதியில் அறவாழி, பாவேந்தன், தேனருவி உள்ளிட்ட பெயர்கள் வழக்கில் நிலைபெற்றன.

எம் ஊர் பொங்கல் விழாவுக்கு வருகைபுரிந்த புதுவைப் புலவர் பாளை எழிலேந்தி, அரிதாசுவின் தமிழார்வம் அறிந்து செந்தமிழ்ச் செல்வர் என்ற பட்டத்தை வழங்கி, ஒரு விழாவெடுத்துப் பாராட்ட அந்த நாளில் (1992) ஐந்நூறு உருவா நிதி வழங்கினார் எனில் இவர்தம் தமிழார்வம் தெளிவாக விளங்கும். இவரின் பெருமை மக்களுக்குப் புலப்படத் தொடங்கியதும் ஒவ்வொருவராக இவரை மதிக்கத் தொடங்கினோம். குடந்தைக் கதிர். தமிழ்வாணன், திருப்பனந்தாள் ஆ. பிழைபொறுத்தான், உள்கோட்டை சனதா சி.மாணிக்கம் உள்ளிட்ட அன்பர்கள் இவரைப் போற்றினர். அண்டை அயலூரில் உள்ள தமிழார்வலர்களும் இவரைப் போற்றினர்.

கடமையை உயிராகப் போற்றிய இவர், நல்ல மாணவர்கள் உருவாவதற்குக் காரணமாகவும் இருந்தவர். இவரின் தமிழ்ப்பற்றால் கவர்ந்த நானும் மிகவும் நெருக்கமாகப் பழகி இவர்தம் அன்பைப் பெற்றுள்ளேன். என்னைக் காண ஊருக்கு வரும் தமிழறிஞர்கள் பலரும் இரா. அரிதாசு அவர்களைப் போற்றிப் பாராட்டியுள்ளனர். பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வாழ்த்தினைப் பெற்றுள்ள இரா. அரிதாசுவின் தமிழார்வத்தைப் போற்றித் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் சென்னையில் நடைபெற்ற விழாவில்(11.03.2020) பாராட்டியுள்ளமை எம்மனோர்க்குப் பேருவகை தருகின்றது. இம்முயற்சியில் ஈடுபட்டு உழைத்த அகரமுதலித் திட்டத்தின் இயக்குநர் திருவாளர் தங்க. காமராசு ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெறும் இரா. அரிதாசு(இடமிருந்து மூன்றாமவர்)

இரா.அரிதாசு அவர்கள் 04.08.1948 ஆம் ஆண்டு திருவாளர் இராசன்(ஓமியோ மருத்துவர்), இலட்சுமிகாந்தம் ஆகியோர்க்கு மகனாக குடந்தை வட்டம், சோழபுரம் அருகே உள்ள மேல அத்தியூரில் பிறந்தவர். சோழபுரம் செயம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். 1965 முதல் 1970 வரை தற்காலிகப் பணியில் கல்லாத்தூர், மேலக்குடியிருப்பு, கங்கைகொண்டசோழபுரம் ஆகிய ஊர்களில் பணியாற்றியவர். 1968 இல் மேலக்குடியிருப்பு நல்லாசிரியர் அரங்கநாதன் என்பாரின் நெறிப்படுத்தலில் தமிழார்வம் தழைக்கப்பெற்று,  தனித்தமிழ் ஆர்வலராக மாறியவர். 1970 ஆம் ஆண்டு முதல் வாணதிரையன் குப்பம் என்ற ஊரில் பணியாற்றியும் 1978 இல் செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்தும், 1979 முதல் 2008 ஆகத்து 31 வரை உள்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் இரவு நேரக் காவலராகப் பணியாற்றியும் அனைவரின் உள்ளத்திலும் தமிழ் ஆர்வலராக இடம்பெற்றவர்.

தமிழை அகத்தும் புறத்தும் நிலைநிறுத்தி வாழ்ந்துவரும் தூய தமிழ்ப் பற்றாளர் இரா. அரிதாசுவின் பெருமை உலகம் உள்ளவரை நின்று நிலவட்டும்!