நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 22 மே, 2025

தொல்காப்பிய மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் வெ. முருகன்


முனைவர் வெமுருகன் 

[முனைவர் வெ. முருகன் தருமபுரி மாவட்டம் கூச்சனூர் ஊரினர்; ஆங்கிலப் பேராசிரியர்; தொல்காப்பியம், கலித்தொகை முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழக நிறுவனத்திற்காக ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதியினைத் தொகுத்தவர். பேராசிரியர் வை. சச்சிதானந்தம் அவர்களின் வழியாக ஒப்பிலக்கிய ஆய்வுகள், அகராதிப் பணிகள், மொழிபெயர்ப்புத் துறைகளின் திசைகளை அறிந்தவர். செம்மொழி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழக அகராதிப் பணிகளில் பணியாற்றியவர்] 

சில திங்களுக்கு முன்னர்(25.03.2025) அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற அகராதி நாள் விழாவில் கலந்துகொண்டு அறிஞர்களின் உரைகளைச் செவிமடுக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. பேராசிரியர் . அருளி ஐயாவின் உரையும் அறிஞர் வெ. முருகன் அவர்களின் உரையும் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்தது.  முன்னவர் உரை தனித்தமிழின் சிறப்புரைக்கும் வகையில் செழித்திருந்தது. அடுத்து அமைந்த அறிஞர் வெ.முருகன் அவர்களின் உரை தமிழ் அகராதிகளின் நிலைகளை எடுத்துரைப்பனவாகவும், ஆக்சுபோர்டு நிறுவனத்திற்காகத் தாம் உருவாக்கிய அகராதிகளின் சிறப்புகளை எடுத்துரைப்பனவாகவும் இருந்தன. 

அறிஞர் வெ. முருகன் அவர்களை இலண்டன், இலிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் உரை நிகழ்த்தியபொழுதே நேரில்கேட்டுச் சுவைத்தவன். அவர் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ள பெரும்பணியை முன்னரே அறிந்து, அந்த மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழ் தெரியாத என் பிறமொழி நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 

இலங்கையில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் தொல்காப்பியத்தைப் பலவகை ஆராய்ச்சி நுட்பங்களுடன் பதிப்பித்தும், படிப்பித்தும் உயர்பணிகளைச் செய்திருந்தாலும் அவர்கள் தம்முடன் வாழும் சிங்களமொழி அறிஞர்களுக்குத் தொல்காப்பியத்தைச் சிங்களத்தில் பெயர்த்து அறிமுகம் செய்திருக்கலாம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. யான் அறிந்தவகையில் தொல்காப்பியம் சிங்களமொழிக்கு அறிமுகம் ஆகவில்லை என்று உணர்ந்தேன்(அறிந்தோர் அறிவிப்பின் ஏற்பேன்). அதனால் என் நண்பர் தம்மிக விக்கிரமசிங்கே அவர்களுக்கு முனைவர் வெ.முருகனின் மொழிபெயர்ப்பில் அமைந்த தொல்காப்பியம் நூலொன்றை (ஆசியவியல் நிறுவனம் வெளியீடு) வாங்கிச் சென்று கொடுத்து, எம் மொழியின் இலக்கண அமைப்பைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்து மக்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் என்று பலவாண்டுகளுக்கு முன்னர் கொடுத்துவந்தேன். அந்த வகையில் தொல்காப்பியத்துக்கு மொழிபெயர்ப்புப் பெரும்பணி செய்த பேராசிரியர் வெ. முருகன் அவர்களின் மீது தனிப்பட்ட அன்பும் மதிப்பும் எனக்கு உண்டு. 

பேராசிரியர் வி. முருகன் அவர்கள் ஆங்கில இலக்கியம் பயின்ற அறிஞர் ஆவார். தமிழ் அறிஞர்களுடன் தொடக்கம் முதல் நல்ல தொடர்பில் இருப்பவர். தம் ஆங்கில அறிவின் துணையைக்கொண்டு, தமிழுக்கு உயர்ந்த தொண்டாற்ற வேண்டும் என்று தம்மை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டு உழைப்பவர். தமிழின் சிறப்பும், தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட செவ்வியல் நூல்களின் சிறப்பும் இன்னும் உலகத்தார் ஏற்கும் வகையில் கொண்டுசேர்க்கப்படவில்லை என்பது அறிஞர் வெ. முருகனின் எண்ணமாக உள்ளது. அதற்குத் தகுந்த பணிகளைச் செய்துவரும் வெ. முருகன் அவர்களின் பணிகளுள் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்தமை, கலித்தொகையை ஆங்கிலத்தில் பெயர்த்தமை, தமிழுக்கு ஆக்சுபோர்டு நிறுவனம் வழியாக அகராதியை வெளியிட்டமை இவரின் வாழ்நாள் சாதனைப் பணிகளாகும். 

கொள்கைத் தெளிவும் குறிக்கோள் நோக்கும் கொண்டு தமிழுக்கு ஆக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்துவரும் வெ. முருகன் அவர்களின் தமிழ்ப்பணிகளையும் வாழ்வியலையும் சுருக்கமாக எடுத்துரைப்பதில் மகிழ்கின்றேன். இவர் போலும் தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதி உழைக்கும் அறிஞர் பெருமக்களை உலகத் தமிழர்கள் உச்சிமேல்வைத்துப் போற்றுவது முதன்மைக் கடமையாகும். 

வெ. முருகனின் தமிழ் வாழ்க்கை 

பேராசிரியர் வெ. முருகன் அவர்கள் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கூச்சனூர் என்னும் ஊரில் 05.06.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் வெள்ளையன், குப்பம்மாள் ஆகும். தம் ஊருக்கு அருகில் உள்ள வேப்பம்பட்டி என்னும் ஊரில் அமைந்திருந்த அரசு இடைநிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பினையும் அதனையடுத்து உயர்நிலைக் கல்வியை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பெற்றவர். திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் புகுமுக வகுப்பினை நிறைவுசெய்த(1968) வெ.முருகன் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள வளனார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயில நினைத்தவர். ஆனால் அங்குப் பயில்வதற்கு இடம் கிடைக்காத காரணத்தால் தருமபுரி அரசு கல்லூரியில் இளம் அறிவியல் – கணக்குப் பாடத்தினை எடுத்துப் பயின்றவர்(1968-1971). 1971 முதல் 1973 ஆம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  பேராசிரியர் சுந்தரராசன் தலைமையில் இயங்கிய ஆங்கிலத்துறையில் முதுகலையைப் பயின்று, பட்டம் பெற்றவர். 

தம் முதுகலைப் படிப்பிற்குப் பிறகு 1973 ஆம் ஆண்டு செங்கல்பட்டு அரசு கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியில் இணைந்தவர். அதனை அடுத்து விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி, குடியேற்றம் திருமகள் கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி முதலான கல்லூரிகளில் பணியாற்றியவர். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் பணியைத் தொடங்கித், துறைத்தலைவர் வரை  உயர்ந்து 2009 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றவர். 

பேராசிரியர் வெ. முருகன் தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ளும் நோக்கிலும் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆய்வியல் நிறைஞர் வகுப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைந்து, ஒப்பிலக்கிய அறிஞர் சச்சிதானந்தன் அவர்களின்  மேற்பார்வையில் ஆய்வு நுட்பங்களை அறிந்துகொண்டவர்(1976-1977). அறிஞர் வை. சச்சிதானந்தனின் நெறிகாட்டல் ஆய்வுப்பட்டத்துக்கு மட்டும் என்று அமையாமல் வாழ்நாள் முழுமைக்கும் அமைந்துவிட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைபுலமை பெறுவதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகப் படிப்பு மிகுந்த உதவியாக இருந்தது. அறிஞர் தமிழண்ணல், அறிஞர் மு.சண்முகம் பிள்ளை போன்றவர்களின் நெறிகாட்டலும் நட்பும் இவரைத் தமிழின் பக்கம் திருப்பியது. பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

பேராசிரியர் வெ. முருகன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தினார் (அறிஞர் அன்னி தாமசு அவர்களும் பேராசிரியர் பிரபாகர ரெட்டி அவர்களும் இவ்வாய்வில் துணைநின்ற அறிஞர்கள் ஆவர்). 

வெ.முருகன் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றிருந்தும், தமிழ் இலக்கியங்களின் அறிமுகம் நன்கு அமைந்திருந்தும் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களை மொழிபெயர்க்க வேண்டுமெனில் இருபதாம் நூற்றாண்டு மொழியியல் செய்திகள் அறிமுகம் ஆகியிருத்தல் வேண்டும் என்ற தெளிவுடன் ஐதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகள் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ், பட்டய வகுப்புகளில் இணைந்து மொழியியல் செய்திகளைக் கற்று, உண்மைகளை அறிந்தவர். சங்க இலக்கியப் பின்புலம் இல்லாமல் தொல்காப்பியத்தை முழுமையாக அறிந்துகொள்ள இயலாது என்று சங்க இலக்கியங்களையும் பிற தமிழ் இலக்கியங்களையும் உரையின்றிப் படித்து நிறைபுலமை பெற்றவர். அதன் பிறகு ஈராண்டுகளுக்கும் மேல் முழுமையாக உழைத்து, தொல்காப்பியத்தை மொழிபெயர்த்து ஆசியவியல் நிறுவனம் சார்பில் வெளியிட்டவர். பின்னர் இந்த நூல் செம்மையாக்கம் செய்யப்பெற்று செம்மொழி நிறுவனத்தின் வழியாகவும் வெளிவந்துள்ளது அதுபோல் செம்மொழி நிறுவனத்தின் வாயிலாக இவரின் கலித்தொகை மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது. 


வெ. முருகன் அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்து அகராதியின் விரிவாக்கப் பதிப்பிலும் பணிபுரிந்தவர். இதுவரை இவர் மொழிபெயர்ப்பிலும் ஆசிரியத் தன்மையிலும் 34 நூல்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வரைந்துள்ளார். இவர் மேற்பார்வையில் எண்மர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்று ஆராய்ச்சிப் பணிகளை நிறைவுசெய்து அளித்துள்ளார். ஆசியவியல் நிறுவனத்திலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திலும் சிறப்பு நிலை அறிஞராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவர்தம் மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டி இரண்டு முறை விருதளித்துப் பாராட்டியுள்ளது. 

பேராசிரியர் வெ. முருகன் அவர்கள் 1976 ஆம் ஆண்டு தேன்மொழி அவர்களை இல்லறத் துணையாக ஏற்றவர். இவர்களுக்கு முல்லை, பாரி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இவர்கள் உயர்கல்வி பெற்று அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். 

மொழிபெயர்ப்புப் பணியிலும் அகராதிப் பணியிலும் ஆராய்ச்சிப் பணியிலும் ஈடுபட்டுத் தமிழுக்கு அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் பேராசிரியர் வெ. முருகன் என்னும் இப் பெருமகனாரைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டுதல் தலைக்கடனாகும். 




பேராசிரியர் வெ. முருகன் அவர்களின் அறிவுக்கொடை 

Books Published 

1. Oxford English – English – Tamil Dictionary. (1650 pages), New Delhi: Oxford

University Press, 2009. 

2. Oxford Compact English – English – Tamil Dictionary. (1000 pages), New

Delhi: Oxford University Press, 2015.

3. Oxford Mini English – Tamil Dictionary. (654 pages), New Delhi: Oxford

University Press, 2021. 

4. Oxford Dictionary of the Tamil Language (Tamil-Tamil-English). New Delhi:

Oxford University Press (under compilation) 

5. Applied Linguistic Readings of Tolkāppiyam. Central Institute of Classical

Tamil, 2023 

6. A Dictionary of Tamil Literary and Critical Terms (Tamil – English)

(6000 words). Chennai: Institute of Asian Studies, 1999. 

7. Pals Tamil e-Dictionary (Tamil – Tamil – English) (49000 words) Chennai:

Palaniappa Brothers, 2004. 

8. Pals Tamil – Tamil – English Dictionary, Chennai: Palaniappa Brothers, 2009.

9. Lexicographic Practice in Tamil: Problems and Prospects (dictionary

criticism) (370 pages) Chennai: Institute of Asian Studies, 2006. 

10. Tolkappiyam in English (with complete text, transliteration, illustrative notes

and glossary) (711 pages). Chennai: Institute of Asian Studies, 2000. 

11. Kalittokai in English (with critical introduction, text, transliteration, notes and

glossary) (738 pages), Chennai: Institute of Asian Studies, 1999. 

12. Tirukkural in English, Chennai: New Century Book House, Third Edition, 2015.

13. Narrinai in English (Editor and prose translator) (1970 pages). Chennai: Central

Institute of Classical Tamil, 2011. 

14. Paripatal in English, (prose translation), Chennai: Central Institute of Classical

Tamil 2022. 

15. Kulothungan's Journey of Man (Maanuda Yaathirai in English), Chennai: New

Century Book House, 2013. 

16. Shower of Poetry (Selected Poems of Kalaignar M. Karunanidhi) Coimbatore:

Bharathiar University, 2009. 

17. Selected Poems of Bharathidasan (in English) (310 pages) Chennai:

International Institute of Tamil Studies, 1994.

18. An Unending Ascent (Selected Poems of Kulothungan (V.C. Kulandaiswamy) in

English, for VCK Educational and Research Foundation). Chennai: Pavai

Publications, 2002. 

19. The Wandering Voice (Translation of Three Tamil ballads into English) Chennai: Institute of Asian Studies, 1988.Best Translation Award winner. 

20. The Art of Drumming (Translation of a musical treatise into English) Chennai:

Institute of Asian Studies, 1989. 

21. The Dateless Muse (Translation of Tamil ballads into English) Chennai: Institute of Asian Studies, 1989. Best Translation Award winner. 

22. The Unsung Melodies (Translation of Tamil ballads into English) Chennai:

Institute of Asian Studies, 1990. 

23. Contribution to Subramania Bharati (English Translation). Vols I & II. Vol.I

2016; Vol II 2017. New Delhi: Sahitya Akademi. 

24. English Grammar Just for you (with grammatical concepts and rules translated

into Tamil for the benefit of learners in Tamil medium institutions). Trans: V.Murugan, New Delhi: Oxford University Press, 2015 

Editorial Work 

1. Editor, Narrinai in English, Central Institute of Classical Tamil, Chennai, 2011. 

2. Editor, Tolkappiyam in English, Central Institute of Classical Tamil, Chennai.

2021 

3. Editor Kalittokai in English. Central Institute of Classical Tamil, 2023 

4. Editor. Rev. G.U.Pope : Thirukkural in English (along with a non metrical verse

translation, transliteration and introduction) (850 pages). Chennai: Institute of

Asian Studies, 2018. 

5. Co-editor. Kalaignar Karunanidhi in English Translation. 12 volumes.

Bharathiar University, Coimbatore 2009. 

6. Editor, Siddha Medicine, Vols I to VII. Chennai : Tamil Valarchi Kazhagam,

2010-16. 

7. Associate Editor, The Encyclopaedia of Tamil Literature. Vol. I. Chennai:

Institute of Asian Studies, 1990 

8. Associate Editor, Journal of Asian Studies (from 1986 to 1989) Chennai:

Institute of Asian Studies. 

9. Associate Editor, Papers on Tamil Studies, Chennai: International Institute of

Tamil Studies, 1981.


*** குறிப்பு: இக் கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

புதன், 14 மே, 2025

திருவாசக உரையாசிரியர் மு. சன்னாசி

 

புலவர் மு. சன்னாசி 

[புலவர் மு.சன்னாசி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் பிறந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். தமிழாசிரியராக முப்பத்தேழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். திருவாசகம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட நூல்களுக்கு உரை வரைந்தவர். சமய இலக்கியங்களிலும் இலக்கணத்திலும் பெரும் புலமைகொண்டவர்] 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி எண்ணற்ற தமிழறிஞர்களை உருவாக்கிய கல்விச் சாலையாகும். இந்நிறுவனத்தில் பணியாற்றியவர்களும், பயின்றவர்களும் தமிழுக்கு ஆற்றிய பணிகள் தனித்து ஆராயத்தக்கவையாகும். கே.எம். வேங்கடராமையா, தமிழ்நூற்கடல் தி.வை.கோபாலையர் முனைவர் கு. சுந்தரமூர்த்தி, தா.ம.வெள்ளைவாரணம், மு.சுந்தரேசம் பிள்ளை, ம.வே.பசுபதி, ச. திருஞானசம்பந்தம் உள்ளிட்ட பேராசிரியர்களும் இவர்களிடம் பயின்ற பலநூறு மாணவர்களும் பல்வேறு நிலைகளில் தமிழ்த்தொண்டாற்றியுள்ளனர். அவ்வகையில் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவரும் திருவாசகம் நூலுக்கும், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலுக்கும் உரை வரைந்தவருமான புலவர் மு.சன்னாசி அவர்களின் தொடர்பு அண்மையில் எனக்குக் கிடைத்தமை என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பேறு எனலாம். 

அண்மையில் தினமணி நாளேட்டின் இணைப்பு வெளியீடான தினமணிக் கதிரில் என் பணிகளை அறிமுகம் செய்து, எழுத்தாளர் அருள்செல்வன் அவர்கள் அரியதொரு கட்டுரை வரைந்திருந்தார்(11.05.2025). அக்கட்டுரை தமிழகத்தில் உள்ள அறிஞர்கள் பலரின் பார்வைக்குச் சென்றது. அதனைக் கண்ணுற்ற பெருமக்கள் என் தொடர்பு எண்ணைப் பெற்று என் முயற்சியைப் பாராட்டி, ஊக்கப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை வித்துவான் வகுப்பில் பயின்றவரும் மதுரையை அடுத்துள்ள சமயநல்லூரில் வாழ்ந்துவருபவருமான புலவர் பெருந்தகை மு. சன்னாசி ஐயா என்னுடன் தொடர்புகொண்டு, உரையாடி, தம் கல்வி பயின்ற காலத்துப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். தம் படிப்புக் காலத்து நினைவுகளையும், தம் தமிழ்ப்பணிகளையும், தமிழ் இலக்கியங்களில் தமக்கிருக்கும் புலமையையும் என்னுடன் உரையாடியபொழுது உணர்த்தினார்கள். திருவாசகத்திலும் சமய நூல்களிலும் மிகப்பெரும் புலமை பெற்ற அப்பெருமகனார் போலும் தமிழ்ச்சுரங்கங்கள் பலர் நம் பார்வைக்கு வராமல் உள்ளனர். புலவர் மு. சன்னாசி அவர்களின் தமிழ் வாழ்க்கையையும் தமிழ்ப் பணிகளையும் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்கின்றேன். 

புலவர் மு. சன்னாசி அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

மு. சன்னாசி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் 15.12.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் முத்திருளன் - பேச்சியம்மாள் என்பதாகும். புலவருடன் உடன் பிறந்தவர்கள் ஐந்து ஆண்கள், ஒரு பெண் ஆவர். மு. சன்னாசி அவர்கள் ஆத்தூரில் இருந்த மாவட்டக் கழகத் தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையும், கழக உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 11 ஆம் வகுப்பு வரையும் பயின்றவர். 

ஆத்தூரில் பள்ளியிறுதி வகுப்பு நிறைவுற்றதும் 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் பயின்று பட்டம் பெற்றவர். 1971 முதல் 1972 வரை(ஆறு திங்கள்) குமாரபாளையம் அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பயிற்சி பெற்றவர். அப்பொழுது குமாரபாளையம் கல்லூரியை வழிநடத்திய முதல்வர் பெருந்தகை சந்தானம் என்னும் பேராசிரியர் ஆவார். தமிழ்த்துறையில் சற்குணபாண்டியனாரும் தாணுமாலையபெருமாள் அவர்களும் ஆசிரியர்களாக அருந்தமிழ்ப் பணியாற்றினர். 

மு. சன்னாசி அவர்கள் 1972 ஆம் ஆண்டு சூலைத் திங்களில்  தேனி மாவட்டம், இராயப்பன்பட்டி, சவரியப்ப உடையார் நினைவு மேனிலைப் பள்ளியில்  தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கியவர். முப்பத்தேழு ஆண்டுகள் பணியனுபவம் கொண்ட புலவர் மு. சன்னாசி அவர்கள் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய பட்டறிவுகொண்டவர். 2009 மே மாதம் பணி நிறைவு பெற்றவர். தம் பணிக்காலத்தின் இடையில் 1978 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலைப் பட்டம் பெற்றவர். 1979 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக எம்.எட். பட்டமும் பெற்றவர். ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினை 1990 இல் பெற்றவர். ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு இவர் தேர்ந்த தலைப்பு “திருவாசகத்தில் வாய்மொழி இலக்கியத்தின் தாக்கம்” என்னும் தலைப்பாகும். 

    பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் பயிற்றுவிப்பதில் தன்னிகரற்று விளங்கிய புலவர் மு. சன்னாசி அவர்கள் மேடைப்பேச்சிலும் வல்லவர் ஆவார். அறிவாராய்ச்சியாக நடைபெற்ற அக்காலத்துப் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, முனைவர் மு. தமிழ்க்குடிமகன், முனைவர் சோ. சத்தியசீலன், பேராசிரியர் இராதாகிருட்டினன் (தேசியக்கல்லூரி) முதலானவர்களின் தலைமையில் உரையாற்றிய பெருமைக்குரியவர். தமிழ்ச்சமயம் சார்ந்து பொழிவாற்றுவதில் நிகரற்றவர்.  பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் இலக்கணத்தையும், அடிப்படை மொழியியலையும் ஆர்வமுடன் பயிற்றுவித்து வருபவர். 

மதுரையில் அமைந்துள்ள நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெறும் செந்தமிழ்க் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் இவருக்குத் "தமிழ்த்தென்றல்" என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர். திரு மகேந்திரபாபு அவர்களின் துணையுடன் பைந்தமிழ்த் தொலைக்காட்சியில் சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் குறித்த உரைகளைப் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார். அவ்வகையில் சிலப்பதிகாரம் முப்பது காதைகளுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளன. உ. வே. சா. வின் என் சரித்திரம் 65 பிரிவுகளில் பிரித்துப் பாடமாக வலையொளியில் தரப்பட்டுள்ளது. 

இல்லற வாழ்க்கை 

மு. சன்னாசி அவர்கள் 23.05.1977 இல் தம் இல்லறவாழ்வின் துணைவியாகத் திருவாட்டி மங்கையர்க்கரசி அவர்களை ஏற்று,  மூன்று மக்கள் செல்வங்களைப் பெற்றவர். அவர்கள்: 1. ச.அருள்முருகன், 2. ச.சிவபாரதி 3. ச. மாணிக்கவாசகம் ஆவர். 

மு.சன்னாசி அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   பொற்றாமரையும் திருவாசகமும் – 2021

2.   திருவாசகத்தில் வாழ்வியல் ஆலோசனைகள் - 2019

3.   மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் – உரையாசிரியர் - 2021

4. அருள்மிகு திருக்காளத்தீசுவரர் ஞானாம்பிகை திருக்கோவில் – திருத்தல வரலாறு – 2005

5.   திருக்கழுகுமலைச் சிவபெருமான் இரட்டை மணிமாலை உரை – 2023

6.   கழுகுமலைப் பதிகம் உரை – 2023

7.   2022 முதல் 2025 வரை தொடர்ந்து மீனாட்சியம்மை – சொக்கநாதர் திருமணத்தை முன்னிட்டு, திருமுறைப் பாடல் தொகுப்பு நூல் புலவர் மு.சன்னாசி உரையுடன் திருக்கோவில் சார்பில் வெளிவருகின்றது. 

புலவர் மு. சன்னாசி அவர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், மொழிவளர்சிக்கும் தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும் என்பதும் தமிழ் இலக்கியங்களை மக்கள் மனங்களில் பதிவுசெய்தல் வேண்டும் என்பதும் நம் எதிர்பார்ப்பாகும். புலவர் பெருந்தகை மு.சன்னாசி ஐயா நீடு வாழி என வாழ்த்துகின்றேன்.





 

வெள்ளி, 2 மே, 2025

டைம்சு ஆப் இந்தியா (TIMES OF INDIA) நாளேட்டில் பாரதிதாசன் பரம்பரை குறித்த கட்டுரை

           




       பாரதிதாசன் பரம்பரை என்னும் தலைப்பில் என் முனைவர் பட்ட ஆய்வு நிறைவுற்றுச் சற்றொப்ப முப்பதாண்டுகள் ஆகின்றன. அவ்வாய்வின் விளைபயனாகப் பொன்னி என்னும் இலக்கிய இதழினைப் பல முனைகளில் ஆய்வுசெய்து, தமிழுலகுக்கு நினைவூட்டியுள்ளேன். அதன் ஆசிரியர் முருகு. சுப்பிரமணியனாரின் நூற்றாண்டு விழாவாக இந்த ஆண்டு அமைகின்றது. 

    இந்நிலையில் அண்மையில் தமிழ்நாட்டரசு பாவேந்தரின் பிறந்தநாளையொட்டித் தமிழ்மொழி வாரம் அறிவிப்பினை வெளியிட்டுப் பாவேந்தர் பற்றாளர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவேந்தரின் பெருமைகளை நினைவுகூரும் வகையில் இன்றைய(02.05.2025) TIMES OF INDIA நாளேட்டில் திரு. வினோத்குமார் அவர்கள் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் என்னையும் புலவர் செந்தலை ந. கவுதமனாரையும் நேர்கண்டு, அழகிய கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார். 

    பாவேந்தர் பாரதிதாசனாரின் சிறப்புகளை நான் மாணவப்பருவத்தில் அறிந்துகொள்ள வாய்ப்பு நல்கிய பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும், என் நெறியாளர் முனைவர் எழில்முதல்வன் அவர்களுக்கும் இன்றைய கட்டுரையாளர் திரு. வினோத்குமார் அவர்களுக்கும் நன்றியன்.

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள்

 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன்

[பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் மொழியியல் அறிஞர். அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். புதுவைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவர். அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிப்பதில் பெரும்புலமை கொண்டவர். இதுவரை ஆங்கிலத்திலும் தமிழிலும் 23 நூல்களை எழுதியுள்ளார். அசாம், நாகாலாந்து பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் மொழி குறித்த அகராதியை உருவாக்கியவர்]

 பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்த சந்தனசாமி – செயமேரி ஆகியோரின் மகனாக  13.07.1948 இல் பிறந்தவர். புதுச்சேரியில் உள்ள பாத்திமா பள்ளியில் தொடக்க, உயர்நிலைக் கல்வி பயின்ற பின், திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியில் இளம் அறிவியல் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பயின்றவர். அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆசியவியல் மொழியியலும், மொழியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

புதுவை அரசிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் கல்வித்துறைப் பணிகளில் ஈடுபட்டு, பணியாற்றியவர். மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (CIIL) ஆய்வு உதவியாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்(1972-1977). நாகாலாந்து, அசாம் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் பேசும் தங்கூல் (Tangkhul) மொழியை ஆராய்ந்து, அம்மக்களின் மொழிக்கு இலக்கணமும், அகராதியும் எழுதியவர். பண்பாட்டுத் தளத்திலும் பல ஆய்வுகளை நிகழ்த்தியவர்.

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், புல முதன்மையராகவும், தேர்வுநெறியாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர். அயல்நாட்டு மாணவர்களுக்கும் புதுவை அரசுப்பணியில் உள்ள பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அதிகாரிகளுக்கும் தமிழைப் பயிற்றுவிப்பதில் பெரும்புலமை கொண்டவர். 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் பல்வேறு ஆய்வு நிறுவனங்களிலிருந்து நிதிநல்கைகள் பெற்று ஆய்வறிஞராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய சிறப்பிற்குரியவர். அவ்வகையில் செர்மனி நாட்டின் மூனிச்சு நகரில் உள்ள பல்கலைக்கழகத்திலும், சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தங்கூல், இந்தி, பிரெஞ்சு முதலிய மொழிகளை அறிந்தவர். இவர் மேற்பார்வையில் 11 பேர் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தியுள்ளனர்; 40 பேர் இளம் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தியுள்ளனர். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கலந்துகொண்டு வழங்கியவர்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபத்து மூன்று நூல்களையும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் தொல்காப்பியத்தின் சிறப்புரைக்கும் வகையில் மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், மொழியியல் நோக்கில் தொல்காப்பிய, சங்க இலக்கிய ஆய்வுகள் ஆகிய நூல்களைப் படைத்தளித்துள்ளார். தொல்காப்பியத்தை மொழியியல் நோக்கில் ஆராய்ந்துரைக்கும் பெருந்திறன் பெற்றவர். இவர்தம் தொல்காப்பியப் புலமை, ஆய்வு ஆளுமையைப் போற்றும் வகையில் இன்று(18.04.2025) புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் இவருக்குத் “தொல்காப்பிய ஆய்வறிஞர்” என்னும் உயரிய விருதளித்துப் போற்றுவதில் உலகத் தொல்காப்பிய மன்றம் பெருமைகொள்கின்றது. 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்களின் இலக்கியக் கொடைகள்:

  1. (2025) Le Tour De Pondy (Pondicherry Tourist Guide book), Author’s Publication.
  2. (2012) Spoken Tamil for Foreigners: A-Team Info Media Publishers, Chennai
  3. (1996) Tangkhul Naga Dictionary: Central Institute of Indian Languages (CIIL), Mysore.
  4. (1988) Language Use in Mass Media: Creative Publishers, New Delhi
  5. (1987) Tangkhul Grammar: CIIL, Mysore
  6. (1986) Seminar on Dialectology (edited): Tamil University, Thanjavur
  7. (1982) Tangkhul Folk Literature: CIIL, Mysore
  8. (1981) Tamil clitics: Dravidian Linguistics Association, Trivandrum
  9. (1980) Tangkhul Phonetic Reader: CIIL, Mysore
  10. (2024) Nenjin Alaikal (நெஞ்சின் அலைகள்), Author’s Publication, Pondicherry.
  11. (2024) Piranjchiyar Aatchiyil puducherry. (பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி), Author’s Publication, Pondicherry.
  12. (2014) Puthucheery maavaTTa TheevaalayangkaL (புதுச்சேரி மாவட்டத் தேவாலயங்கள்), Nanmozhi Pathippakam, Pondicherry
  13. (2009) Mozhiyiyal Nookkil Tolkappia, Sanga Ilakkiya Aayvugal. (மொழியியல் நோக்கில் தொல்காப்பிய, சங்க இலக்கிய ஆய்வுகள்), International Institute of Tamil Studies, Chennai.
  14. (2001) Moliyiyal Nookkil Tolkappiam (Linguistic View on Tolkappiam), (மொழியியல் நோக்கில் தொல்காப்பியம்), Oriental Longmans, Ltd.: Chennai.
  15. (1993) Thagaval thodarpiyal (Mass Communication) (தகவல் தொடர்பியல்), Muthu Patippagam, Villuppuram.
  16. (1993) Moliyiyal Sinthanaikal (A Collection of Articles in Tamil Linguistics): (மொழியியல் சிந்தனைகள்). Maniam Patippagam, Kurichipadi
  17. (1992) Ilakkiya Saaral (a Collection of Articles in Tamil Literature): (இலக்கியச் சாரல்). Manian Patippagam, Kurinchipadi.
  18. (1990) Karaikal - Putucheri Teruppeyar Aayukal (A Study on the Street Names of Pondicherry and Karaikal): (காரைக்கால் புதுச்சேரி தெருப்பெயர் ஆய்வுகள்), Muthu Patippagam, Villupuram
  19. (1989) Vinnai Totum Vilutual (Collection of Free Verse Poems): (விண்ணைத் தொடும் விழுதுகள்). Muthu Patippagam, Villupuram
  20. (1988) Samuga Moliyiyal Agaraati (A Glossary of Tamil Sociolinguistics): (சமூக மொழியியல் அகராதி). Muthu Patippagam,Villupuram
  21. (1987) Iru Moliya Aayvukal (Bilingual Studies in Tamil): (இருமொழிய ஆய்வுகள்), Muthu Patippagam, Villupuram
  22. (1987) Kilai Molikal (Dialectology in Tamil): (கிளை மொழியியல்), Muthu Patippagam, Villupuram
  23. (1986) Moliyiyal Irattai Valakku (Diglossia in Tamil): (மொழியியில் இரட்டை வழக்கு), Manivasagar Patippagam, Madras.

வியாழன், 17 ஏப்ரல், 2025

முனைவர் மு. இளங்கோவனின் இணைய ஆற்றுப்படை, தொடரும் தொல்காப்பிய மரபு நூல்கள் வெளியீட்டு விழா! தொல்காப்பிய அறிஞர்களுக்குப் பாராட்டு விழா!

 


நாள்: 18.04.2025, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி - 8.30 மணி 

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் வி. முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன்

முன்னிலை: பேராசிரியர் மு.பா. இராமானுசம் I திரு. தூ. சடகோபன் I பாவலர் ஆறு. செல்வம் I I முனைவர் உரு. அசோகன் I  பேராசிரியர் இரா. கோவலன் I

நூல்கள் வெளியீடு: மாண்புமிகு பேரவைத் தலைவர் 

ஏம்பலம் திரு அரங்க. செல்வம்

நூலின் முதல்படி பெறுதல்: திரு. க. குணத்தொகையன் I “தாமரைத்திரு” வில்லியனூர் கி. முனுசாமி I திரு. அ. சக்திகுமார்  I பேராசிரியர் செ. பெரியாண்டி I திரு. மு. அருள்செல்வம் I திரு. செ. திருவாசகம்

விருதுகள் வழங்கி, அருளாசியுரை: 

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்,

இருபதாம் பட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம்

பாராட்டுப்பெறும் தொல்காப்பிய அறிஞர்கள்

“இலக்கிய மாமணி” அறிஞர் இரா. கலியபெருமாள், தஞ்சாவூர்

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன், புதுச்சேரி

பேராசிரியர் பொ. நா. கமலா, சிவகாசி

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன், சிங்கப்பூர் 

நூல்கள் அறிமுகவுரை

பேராசிரியர் பா. பட்டம்மாள் I மருத்துவர் க. கலைவேந்தன்

நன்றியுரை: பேராசிரியர் வேல். கார்த்திகேயன்

அழைப்பின் மகிழ்வில்

உலகத் தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி – 605 003

தொடர்புக்கு: +9442029053






சனி, 5 ஏப்ரல், 2025

தமிழ்ச் செம்மல் புலவர் வே. பதுமனார்

புலவர் வே. பதுமனார் 

[புலவர் வே. பதுமனார் வேலூர் மாவட்டம், குடியேற்றம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் என்ற அமைப்பினை ஏற்படுத்திக் குடியேற்றத்தில் தமிழ்ப்பணியாற்றி வருபவர். வள்ளலார் நெறியைப் பின்பற்றுபவர்; பன்னூலாசிரியர்; சொற்பொழிவாளர். தமிழியக்கம் என்ற அமைப்பின் பொருளாளராகவும் விளங்குபவர்] 

வேலூர் மாவட்டம் குடியேற்றத்தை நினைக்கும்பொழுதெல்லாம்முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்” என்னும் இலக்கிய அமைப்பை நிறுவித் தமிழ்த் தொண்டாற்றிவரும் புலவர் வே. பதுமனார் அவர்கள் என் நினைவில் நிலைபெறுவார்கள். அவ்வமைப்பை நேர்த்தியாக வளர்த்தெடுத்து, ஆண்டுதோறும் அறிஞர் பெருமக்களை அழைத்து ஒரு கிழமை இலக்கியத் திருவிழாவைப் புலவர் வே. பதுமனார் அவர்கள் செம்மாப்புடன் நடத்தி, சீர்த்திபெறுவது வழக்கம். 

நான் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது புலவர் வே. பதுமனார் அவர்களின் அழைப்பை ஏற்று இரண்டுமுறை முத்தமிழ்ச் சுவைச்சுற்ற இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு, அவர்களின் அன்பைப் பெற்றுள்ளேன். நாட்டுப்புறப் பாடல்களைத் தரையிசைப் பாடல்கள் என்னும் தலைப்பமைத்து மக்கள் மன்றத்துக்கு அறிமுகம் செய்யும் பேறு புலவர் வே. பதுமனார் அவர்கள் வழியாகக் கிடைத்தது. 

இலக்கிய நிகழ்வுகளில் புலவர் வே. பதுமனார் அவர்களைச் சந்திப்பதோடு அமையாமல் என் அன்பிற்குரிய மாணவர் சுகுமார் இல்லம் செல்லும்பொழுதும் (சுகுமார் அவர்களின் ஊரும் குடியேற்றமாகும்) மறவாமல் வே. பதுமனார் அவர்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். விருந்தோம்பலில் புலவர் கைதேர்ந்தவர். அன்புடன் வரவேற்றுப் போற்றுவார். சிலபொழுது சந்திக்கும் வாய்ப்பு அமையாத நிலையில் தம் மாணவர்களை அனுப்பிக் குடியேற்றத்தில் என்னை வரவேற்று மகிழ்வதையும் புலவர் அவர்கள் பலமுறை செய்துள்ளார்கள். கடந்த கால் நூற்றாண்டுக் காலம் பதுமனாருடன் பழகும் வாய்ப்புப் பெற்றமையை நினைத்து மகிழ்கின்றேன். 

  புலவர் பதுமனாரின் “முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்” இலக்கிய அமைப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் குடியேற்றம் பகுதியில் அரிய தமிழ்ப்பணிகளைச் செய்து வருகின்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கிய விழாவில் அறிஞர் பெருமக்கள் பலர் கலந்துகொண்டு அருமையான இலக்கியப் பொழிவுகளையும் பட்டிமன்றங்களையும் நிகழ்த்துவது உண்டு. பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் பலரும் முத்தமிழ்ச் சுவைச்சுற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளனர். அவ்வகையில் சாலமன் பாப்பையா, அப்துல் ரகுமான், அப்துல் காதர், கு. ஞானசம்பந்தன், நெல்லை கண்ணன் திருவாரூர் சண்முகவடிவேல்  உள்ளிட்ட பெருமக்களின் உரைகளால் குடியேற்றத்தில் தமிழ்ப்பயிரின் விளைச்சல் அதிகம் எனலாம். புலவர் வே. பதுமனாரின் மாணவர்கள் இந்த விழாக்களை மிகச் சிறப்பாக நடத்தித் தம் ஆசிரியருக்குப் பெரும்புகழ் ஈட்டித் தருவதைக் கண்ணாரக் கண்டுகளித்துள்ளேன். 

புலவர் வே. பதுமனார் அவர்கள் மிகச் சிறந்த ஆசிரியர் ஆவார். மிகச் சிறந்த சொற்பொழிவாளர்; மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர்; நூலாசிரியர்; தமிழியக்கம் என்னும் அமைப்பின் பொருளாளர்; முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்தின் நிறுவுநர். வள்ளலார் வழியில் வாழ்க்கையை நெறிப்பட அமைத்துக்கொண்டவர். தம் தந்தையார் வழியில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை மிகச் சிறப்பாக நடத்திவருபவர். இத்தகு பெருமைக்குரிய வே. பதுமனார் அவர்களின் சிறப்புகளை இவண் தொகுத்து வழங்குவதில் மகிழ்கின்றேன்.

புலவர் வே. பதுமனாரின் தமிழ் வாழ்க்கை

புலவர் வே. பதுமனார் அவர்கள் 02. 04. 1936 இல் குடியேற்றத்தில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் சாமி. கு. வேலாயுதம் - இராசம்மாள் என்பனவாகும். வே. பதுமனாரின் இயற்பெயர் வே. பத்மநாபன் என்பதாகும். தொடக்கக் கல்வியைக் குடியேற்றம் நகராட்சி தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியைக் குடியேற்றம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், ஆசிரியர் பயிற்சியை ஆர்க்காடு அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகத் தமிழ் வித்துவான், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாகக் கல்வியியல் இளையர்(B.Ed.) பட்டம் பெற்றவர். 1961 முதல் 1994 வரை  33 ஆண்டுகள் குடியேற்றம் திருவள்ளுவர் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராகவும்,  தமிழாசிரியராகவும்,  முதுகலைத் தமிழாசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். பல்லாயிரம் மாணவர்களுக்குப் பாடம் பயிற்றுவித்த பெருமை இவருக்கு உண்டு. 

புலவர் வே. பதுமனார் அவர்கள் ஜெயக்கொடி அம்மையாரை 20.08.1964 இல் மணந்து, இல்லறப் பயனாய்ப் பொற்கொடி (இளநிலைப் பொறியாளர்), பவளக்கொடி(தமிழாசிரியர்), விசுவநாதன் (முதுநிலைப் பொறியாளர், இந்து ஆங்கில நாளேடு) ஆகிய மக்கள் செல்வங்களைப் பெற்று மாண்புற வாழ்ந்துவருகின்றார். 

புலவர் வே. பதுமனார் வகுப்பறைக்குள் பாடம் நடத்துவது மட்டும் தம் பணி என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் மக்கள் மன்றங்களில் உரையாற்றி, தமிழுணர்வு பரப்பிய தகைமிகு செம்மல் ஆவார். சங்கப் பனுவல்கள், திருக்குறள், வள்ளலார் பாடல்கள், பாவேந்தரின் தமிழுணர்வுப் பாடல்களை மக்களிடம் கொண்டுசேர்த்த அறிநெறிச் செம்மல் இவர். வானொலிகளில் இவர்தம் உரைகள் உலகை வலம் வந்துள்ளன. தொலைக்காட்சிகளில் தோன்றிப் பட்டிமன்றங்களைத் தலைமை தாங்கி நடத்திய பாங்கும் இவருக்கு உண்டு. 

விருதுகளும் பெருமைகளும் 

புலவர் வே. பதுமனார் அரசு சார்பிலும் பல்வேறு தகுதிமிகு அமைப்புகள் சார்பிலும் வழங்கப்பெற்ற விருதுகளை ஏற்று, அந்த விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர். அவ்வகையில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பெற்ற தமிழ்ச்செம்மல் விருது(2017), தூய தமிழ்ப் பற்றாளர் விருது(2020) குறிப்பிடத்தகுந்தவை ஆகும். வாணியம்பாடி முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வழங்கப்பெற்ற தமிழ்ப்பணிச் செம்மல் விருது, கவிக்கோ விருது(2022), புதுக்கோட்டை கம்பன் கழகம் வழங்கிய இலக்கிய மாமணி விருது முதலியன குறிப்பிடத்தகுந்த விருதுகளாகும். 

அயலகச் செலவு 

புலவர் வே. பதுமனார் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஏற்றமிகு உரைகளையும் பொழிவுகளையும் வழங்குவதற்குச் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து முதலிய நாடுகளுக்குச் சென்றுவந்தவர். 

தமிழ் மொழிக்கும் இன மேம்பாட்டுக்கும் பயன்படும் வகையில் இவர் பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதித் தமிழ்ப்பணியாற்றியமை போல் பல்வேறு சிறப்பு மலர்களையும் வெளியிட்டுத் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். அவ்வகையில் இவர் உழைப்பில் வள்ளுவர் வழிநடப்போம்(1998), வெட்டுவானம் திரு. வி. க. நூற்றாண்டு விழா மலர்(1999), இந்தியக் குடியரசு பொன்விழா மலர்(2000), திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி பொன்விழா மலர் (2002), வி.ஐ.டி.வேந்தர் விசுவநாதனின் கல்வியின் மேலாண்மை (2007),  குடியேற்றம் வள்ளலார் பள்ளிப் பவளவிழா மலர்(2010), மு. வ. நூற்றாண்டு விழா மலர் (2013), கல்விக்கோ கோ. விசுவநாதனின் முத்துவிழா மலர் (2018), கல்விக்கோ கோ. விசுவநாதனின் முத்துவிழாக் கவிமலர் (2018), குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் அறக்கட்டளை வெள்ளிவிழா மலர் (2022) முதலிய மலர்களை வெளியிட்டுத் தமிழக வரலாற்றின் சில பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. 

வேலூரில் வாழ்ந்துவரும் கல்விக்கோ கோ. விசுவநாதன் ஐயா நிறுவிய தமிழியக்கம் அமைப்பு உலகு தழுவிய அமைப்பு ஆகும். இதன் பொருளாளராக இருந்து, புலவர் வே. பதுமனார் அவர்கள் தம் முதுமைப் பருவத்தும் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். நூற்றாண்டு விழாவினைக் கண்டு, தமிழன்னைக்குப் புகழ்சேர்க்குமாறு புலவர் பெருந்தகை வே. பதுமனாரைப் போற்றி வணங்குகின்றேன். 











வே. பதுமனார் தமிழ்க்கொடை 

1.   பொன்முடி தமிழ்த்துணைவன் 11 ஆம் வகுப்பு – 1978

2.   பொன்முடி தமிழ்த்துணைவன் 12 ஆம் வகுப்பு – 1980

3.   கட்டுரைத் தீங்கனிகள் – 1984

4.   நடுத்தெரு நாகரிகம் – 1988

5.   வள்ளுவர் வழி நடப்போம் உரைநூல் - 1989

6.   பதுமனார் தமிழ்த்துணைவன் – 1990

7.   அம்பலம் - 1997

8.   கீத தாகம் – 1998

9.   மாசுபடா மாரியம்மன் தாலாட்டுப் பாமாலை - 1998

10. தலைமேடை நாடகம் – 1998

11. வள்ளலார் வழங்கிய நித்திய கருமமும் சத்திய தருமமும் - 2000

12. ஆசிரியர் நேற்று இன்று நாளை - 2001

13. சிறுகதைச் செல்வம் - 2001

14. நாக்கு நாகரிகம் - 2001

15. குடியேற்றம் கரும்புலியீசுவரர் தல வரலாறு - 2004

16. எது ஏது ஏதேது – 2004

17. தமிழ்ச்சிமிழ் கவிதைத்தொகுப்பு - 2007

18. வாரியார் வழங்கிய வளர்தமிழ் - 2007

19. திருக்கோயில் திருநெறி - 2007

20. திருக்குறள் சொற்பொருள் அகராதி - 2013

21. கம்பன் கவியே கவி - 2013

22. இப்படியும் மனிதர்கள் - 2013

23. கல்வியின் மேலாண்மை - 2013

24. வேர்வையின் வெற்றி – 2013

25. வி.ஐ.டி வேந்தர் முத்துவிழா மலர் – 2000

26. சூட்டி மகிழத் தெளிதமிழ்ப் பெயர்கள் – 2014

27. வடமொழி வழக்கு தெளிதமிழ்ச் சொல் அகராதி – 2014

28. வியர்வையின் வெற்றி – 2014

29. சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் – 2019

30. விழித்தால் விடியும் - 2019

31. வந்தவாறு வருமாறு (புலவர் தன் வரலாறு) - 2022

32. சிறகுகள் எங்கும் செந்தமிழ் மகரந்தம் – 2022

33. புறநானூற்று விழுமியங்கள் – 2022

34. அரனார் அருள்வேட்டல் – 2022

35. மணித்தமிழ்க் கட்டுரைகள் – 2024

36. நீதிக் கலங்கரை விளக்கம் - 2024

37. இது இப்படிதான் - 2024

38. கற்றதும் பெற்றதும் – 2025 

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகள், படங்களை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.