நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
ஊரன் க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி
ஊரன் க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி

புதன், 7 மே, 2014

தமிழைத் துறவாத துறவி ஊரன் அடிகளார்…

தவத்திரு ஊரன் அடிகளார்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரைப் பற்றி அறிந்தவர்களை அண்மைக் காலமாகத் தேடிச் சந்தித்து செய்திகளைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது ப. சு. அவர்களை அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஐயா அவர்களிடத்து ஆற்றுப்படுத்தியவர் தவத்திரு ஊரன் அடிகளார் என்று நினைவூட்டினர். என் பிறந்த ஊருக்குச் செல்லும்பொழுது வடலூரில் இறங்கி அடுத்த பேருந்து மாறுவது வழக்கம். வடலூரில் வாழும் ஊரன் அடிகளாரை இதுநாள்வரை அவர்தம் இல்லம் சென்று கண்டதில்லை. ஆனால் தவத்திரு ஊரன் அடிகளாரை முன்பே ஆர்க்காட்டில் ஒருமுறை கண்டு வணங்கியுள்ளேன். வேறு சில நிகழ்வுகளில் அவர்களின் இனிய உரையைச் செவிமடுத்துள்ளேன்.

     . சு. நூற்றாண்டு விழாவில் அடிகளாரை அழைத்துச் சிறப்பிக்க நினைத்தேன். அவர்களின் செல்பேசி எண் பெற்று உரையாடினேன். வரும் 25 ஆம் பக்கல் திருவருட்பா அகவலுக்கு அவர் வரைந்துள்ள உரைநூல் வெளிவர உள்ளதாகவும் அதுவரை எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இயலாது எனவும் முடிவெடுத்துள்ளதைத் தெரிவித்தார்கள். . சு. நூற்றாண்டு என்றதும் அந்தத் தூய துறவு உள்ளம் இளகியது. பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து ப. சு. வுக்கும் தமக்குமான நினைவுகளை அடிகளார் அசைபோட்டார்கள். விழாவுக்கு வருவதாக இசைவு தந்தார்கள். அழைப்பிதழை அணியப்படுத்தி அடிகளாருக்கு நேரில் வழங்க அமையம் பார்த்தேன்.

ஞாயிறு (04.05.2014) காலை 11. 30 மணிக்கு வடலூரில் இறங்கி அடிகளாரின் தவமனைக்குச் சென்றேன். அன்பொழுக வரவேற்றார்கள். என்னை அறிமுகம் செய்துகொண்டு உரையாடலைத் தொடங்கினேன். தவத்திரு ஊரன் அடிகளாரின் சைவ ஆதீனங்கள் உள்ளிட்ட நூல்களை நான் முன்பே படித்துள்ளதைச் சொன்னேன். அதுபோல் அவர்களின் வரிசை நூல்களையும் படித்துள்ளதை நினைவூட்டினேன். தம் நூல்கள் வெளிவந்தமைக்கான காரணத்தை அடிகளார் அவர்கள் சொன்னபொழுது அவர்களின் தமிழ்ப்பற்று விளங்கியது. அவர்களின் சமய ஈடுபாடு மதிக்கும்படியாக இருந்தது. தமிழகத்துத் திருமடங்களைப் பற்றியும் அவைகள் செய்துவரும் சமயப்பணிகள் பற்றியும் நெடுநாழிகை உரையாடினோம்.

. சு. நினைவுகளைத் தவத்திரு அடிகளார் தொடங்கும் முன் தாம் எழுதிய 10 பக்கத்தில் அமைந்த கட்டுரை ஒன்றை எனக்குப் படிக்கத் தந்தார்கள். படிக்கத் தொடங்கியது முதல் அடிகளார் மேல் எனக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டவண்ணம் இருந்தது. அடிகளாருக்குச் சிலப்பதிகாரத்தில் இருந்த புலமை எனக்குப் பளிச்செனத் தெரிந்தது. தம் துறவு வாழ்க்கைக்கு அடிப்படையே சிலப்பதிகாரமும் அதன் ஆசிரியர் இளங்கோவடிகளுமே என்று குறிப்பிட்டார்கள். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அல்லவா?

தவத்திரு அடிகளாரிடம் மெதுவாகப் பேசத்தொடங்கினேன். . சு. பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அருட்செல்வரிடத்து நேரம் பார்த்து அறிமுகம் செய்த நிகழ்வுகளையும் பூம்புகாரில் ப.சு. அவர்களைச் சந்தித்தையும், . சு. அவர்களின் சைவ நெறி ஈடுபாட்டையும் ஆர்வமுடன் எடுத்துரைத்தார்கள். அனைத்தையும் என் கையிலிருந்த காணொளிக் கருவியில் படம் பிடித்துக்கொண்டேன். சில புகைப்படங்களையும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன்


தவத்திரு ஊரன் அடிகளார் அவர்கள் தம் மனையின் முதல்மாடியில் நூலகத்தின் நடுவில் வாழ்ந்துவருகின்றார். அரிய, பெரிய நூல்கள் அவர்தம் நூலகத்தில் அணிசெய்கின்றன. முறைப்படுத்தி நூல்களை அடிகளார் அவர்கள் பாதுகாக்கின்றார்கள். அவர்கள் நூலகத்தில் உள்ள திருவருட்பா குறித்த பல பழைய பதிப்புகளை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். சமய நூல்கள், ஆய்வு நூல்கள் பல உள்ளன. தமிழாராய்ச்சியையே தம் வாழ்க்கையாகக் கொண்டுள்ள அடிகளாரிடம் விடைபெறும்பொழுது நெஞ்சார வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.

 தவத்திரு ஊரன் அடிகளார் நூலகத்தில்

தவத்திரு ஊரன் அடிகள் நூலகத்தின் ஒரு பகுதி

வியாழன், 16 பிப்ரவரி, 2017

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு! ஊரன் அடிகளார் சிறப்புரை!


 தவத்திரு ஊரன் அடிகளார் உரை
புதுச்சேரியில் அமைந்துள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு வரிசையில் இன்று(16.02.2017) வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் ஊரன் அடிகள் சிறப்புரையாற்றினார். தொல்காப்பியமும் வள்ளலாரும் என்ற தலைப்பில் இவர் உரை அமைந்திருந்தது. சிறப்புரையில் தொல்காப்பியத்தின் சிறப்பினையும், தொல்காப்பிய நூற்பாக்களுக்கு வள்ளலார் வழங்கியிருந்த விளக்கத்தினையும் ஊரன் அடிகள் எடுத்துரைத்து, தமிழ் இலக்கியத்தில் தவறாகப் பதிவுபெற்றிருந்த முக்கியமான செய்தியை விளக்கித் தெளிவுப்படுத்தினார். ஐந்திரம் என்பதற்கு உரிய சொல் விளக்கமும், தொல்காப்பிய ஆய்வுகளைக் குறித்தும் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தி, தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள பொருளதிகாரப் பகுதி எந்த மொழியிலும் இல்லாத வகையில் வாழ்வியல் இலக்கணத்தை எடுத்துரைக்கின்றது. எழுத்ததிகாரத்தில் ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்களுக்கு உரிய புணர்ச்சியைப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடும் இடங்களில் உள்ள பொருத்தமின்மையை வள்ளலார் வழியில் ஊரன் அடிகள் இந்த உரையில் விளக்கினார். பாவாணர், மு. வரதராசனார் கருத்துகளையும், உரையாசிரியர்களின் கருத்துகளையும் துணையாகக் கொண்டு ஊரன் அடிகளார் உரையாற்றினார்.

தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார்; , மு.இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்; பேராசிரியர் தெ. முருகசாமி தலைமையுரை வழங்கினார். இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். பிரான்சிலிருந்து வருகை தந்த பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ சிறப்பிக்கப்பட்டார். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கணப் புலவர்களும் தமிழார்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழாகரர் தெ. முருகசாமி தலைமையுரை
முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரை
மு.இளங்கோவன் அறிமுகவுரை
 அறிஞர் பெருமக்கள்

முனைவர் இரா.கோவலன் நன்றியுரை

 அறிஞர் பெருமக்கள்
அடிகளாரிடம் வாழ்த்தினைப் பெறுவோர்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்கள் சிறப்பிக்கப்படுதல்( முனைவர் இரா. நிர்மலா, ஈகியர் அப்துல் மஜீத்)
அடியார்கள் வாழ்த்தினைப் பெறுதல்

அடிகளாரின் உரையைக் கேட்க இங்கே அழுத்தவும்

வியாழன், 14 ஜூலை, 2022

தவத்திரு ஊரன் அடிகளார் மறைவு!

 

தவத்திரு  ஊரன் அடிகளார் 

 வள்ளலார் வழியில் வாழ்வு நடத்தியவரும் திருவருட்பாவினைப் பதிப்பிப்பதிலும் வள்ளலார் அவர்களின் வரலாற்றினை விரித்து எழுதியதிலும் பெரும் பங்காற்றிய தவத்திரு ஊரன் அடிகளார் 13.07.2022 நள்ளிரவு, வடலூரில் உள்ள தம் மனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

 கடந்த இருபதாண்டுகளாக அடிகளாருடன் நன்கு பழகும் பேறு எனக்கு வாய்த்தது. அடிகளார் அவர்களை அழைத்து, பல கூட்டங்களை நடத்தியுள்ளேன். யான் உருவாக்கிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படத்தில் அடிகளாரின் செவ்வி மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மேலும் அடிகளாரின் வாழ்வியலை ஆவணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பல மணி நேரம் அவர்களின் உரையாடலைப் பதிந்து வைத்துள்ளேன். இந்நிலையில் அடிகளாரின் மறைவுச் செய்தி அறிந்து பெருந்துயரில் தவிக்கின்றேன்.

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் சார்ந்த ஊர் கண்ணனூர் ஆகும். அதனைச் சார்ந்த நரசிங்கமங்கலம் என்னும் ஊரில் தவத்திரு ஊரன் அடிகளார் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் பிறந்தவர். இவர்தம் இயற்பெயர் குப்புசாமி என்பதாகும். ஊரன் அடிகளாரின் தந்தையார் பெயர் இராமசாமிப் பிள்ளை. தாயார் பெயர் நாகரத்தினம் அம்மாள்.

 1967 இல் துறவு பூண்டவர். 1968 முதல் வடலூரில் வாழ்ந்து வந்தவர். பன்னூலாசிரியர். சிறந்த சொற்பொழிவாளர். 

 ஊரன் அடிகளாரின் மறைவு சமய உலகத்திற்கும் வள்ளலார் ஆய்வாளர்களுக்கும் அன்பர்களுக்கும் பேரிழப்பாகும்.

தொடர்புடைய பதிவுகள்:

https://muelangovan.blogspot.com/2014/05/blog-post_1610.html

https://muelangovan.blogspot.com/2017/02/blog-post_16.html

https://muelangovan.blogspot.com/2014/05/blog-post_18.html

ஞாயிறு, 18 மே, 2014

இருபதாம் நூற்றாண்டில் தமிழிசையை மக்களிடம் பரப்பியவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் - புதுச்சேரி நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் பேச்சு



தவத்திரு ஊரன் அடிகள் நூலை வெளியிட பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா பெற்றுக்கொள்ளுதல். அருகில் பாரிசு பாலகிருட்டினன்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க - இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து இன்று 17. 05. 2014 சனிக்கிழமை மாலை ஆறு மணிமுதல் ஒன்பது மணிவரை புதுச்சேரி செயராம் ஓட்டலில் நடத்தின.

குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவுக்கு வடலூர் ஊரன் அடிகளார் தலைமை தாங்கினார். முனைவர் மு.இளங்கோவன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார். முனைவர் அரிமளம் பத்மநாபன் விழா குறித்த நோக்கவுரையாற்றினார். மலேசிய இந்தியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவையின் தேசியத் தலைவர் முனைவர் விக்டர் சுப்பையா, இரா. மதிவாணன் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இந்தியக் கடலோரக் காவல்படையின் புதுச்சேரி பிரிவு கமாண்டன்டு நா. சோமசுந்தரம் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மலேசிய எழுத்தாளர் புலவர் முருகையன் எழுதிய உலகத்தின் ஒளிவிளக்கு பெற்றோரும் பிள்ளைகளும் என்ற நூலினை தவத்திரு ஊரன் அடிகள் வெளியிட, முதற்படியினைப் பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா பெற்றுக்கொண்டார். சிறப்புப் படிகளை பாரிசிலிருந்து வருகை தந்த திரு. பாலகிருட்டிணன், புதுவை திரு. அமரநாதன் பெற்றுக்கொண்டனர்.

குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த நினைவுரைகளைச் சூலூர் பாவேந்தர் பேரவையைச் சேர்ந்த செந்தலை கௌதமன், தமிழியக்கத் தலைவர் முனைவர் மு.இளமுருகன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ. அங்கயற்கண்ணி, மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல்துறைத் தலைவர் முனைவர் சு. குமரன், புதுவைத் திருவள்ளுவர் மன்றத்தின் நிறுவுநர் சுந்தர. இலட்சுமிநாராயணன், ஆ பிழைபொறுத்தான் ஆகியோர் வழங்கினர்.


குடந்தை ப. சுந்தரேசனாரின் மாணவர் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் சுந்தரேசனாரின் சிறப்புகளை எடுத்துரைத்து, சுந்தரேசனார் பாடிய பாடல்களை அரங்கிலிருந்தவர்களுக்குப் பாடிக்காட்டிச் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மு. பாலசுப்பிரமணியன் நன்றியுரை வழங்கினார்.

நூற்றாண்டு விழா - காட்சிகள்

மு.இளங்கோவன் வரவேற்புரை

தவத்திரு ஊரன்அடிகள் தலைமையுரை

முனைவர் அரிமளம் பத்மநாபன் சிறப்பிக்கப்படுதல்

மலேசியத் தமிழர்களைச் சிறப்பித்தல்

மலேசியத் தமிழர்களைச் சிறப்பித்தல்

மலேசியப் பேராசிரியர் குமரன், டாக்டர் விக்டர் சுப்பையா சிறப்பிக்கப்படுதல்

புலவர் சூலூர் கௌதமன் நினைவுரையாற்றுதல்

சுந்தர இலட்சுமிநாராயணன் நினைவுரை


முனைவர் மு.இளமுருகன் எழுச்சியுரை

டாக்டர் விக்டர் சுப்பையா(மலேசியா) வாழ்த்துரை

பொறியாளர் பாலா நன்றியுரை

வெள்ளி, 26 ஜனவரி, 2024

வள்ளலார் வழித்தொண்டர் ஜெய. பாலகிருஷ்ணன்

 

ஜெய. பாலகிருஷ்ணன் 

பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் வாழ்ந்துவரும் ஜெய. பாலகிருஷ்ணன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் பயின்றவர். கடலூரில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். 1985 ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றவர். வள்ளலார் வழியில் தம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொண்டவர். இராமலிங்கர் பணிமன்றத்தின் சார்பில்  2005 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் உலக வள்ளலார் மாநாட்டை நடத்தியவர். பிரான்சு – சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர். ’வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்’ என்னும் நூலின் ஆசிரியர். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர். 

பலவாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்குத் தவத்திரு. ஊரன் அடிகளார் அவர்கள் வடலூரிலிருந்து, புதுச்சேரிக்கு வந்திருந்தார். புதுவை செயராம் உணவகத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு  வந்திருந்த அடிகளார் அவர்கள் பிரான்சு நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு வந்திருந்த திரு. ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களையும் அழைத்திருந்தார். ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களும் அடிகளாரின் அழைப்பின்பெயரில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி அடிகளார் மேடையில் எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதன் பிறகு தொடர்பு இல்லாமல் இருந்தோம். அண்மையில் புதுவை பால மோகன மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மீண்டும் பாலகிருஷ்ணன் ஐயாவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தாலும் உரையாடி மகிழும் வாய்ப்பு இல்லாமல் போனது. 

பிரான்சு நாட்டிலிருந்து அண்மையில் புதுவைக்கு வந்துள்ள திருவாளர்கள் ஜெயராமன் ஐயா, தணிகா ஐயா உள்ளிட்டோருடன் இன்றைய மாலை வேளையில் புதுவை நேரு வீதியில் உள்ள இந்தியன் குளம்பியகத்தில் தேநீர் சந்திப்பு ஒன்று நடந்தது. எங்கள் பேச்சின் ஊடாக ஜெய. பாலகிருஷ்ணன் ஐயாவுக்கு 27.01.2024 இல் நடைபெறும் விருது வழங்கும் விழா குறித்து உரையாடினோம். விருது பெறும் அறிஞர் குறித்து நன்மொழிகளை அரங்கில் பரிமாறிக்கொள்ள போதிய விவரங்களை வேண்டியபொழுது, வழக்கம்போல் அவரின் பன்முகத் திறனை ஒவ்வொன்றாக நண்பர்கள் நினைவுகூர்ந்தனர். வள்ளலார் நெறியில் வாழ்ந்து வரும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களை இன்றைய(25.01.2024) தைப்பூச நாளில் நேரில் சந்தித்து உரையாடுவது சிறப்பு என்று கருதியும் அவர்தம் தமிழ்ப் பணிகளை அறிய வேண்டும் என்ற அவாவிலும், அவர் இல்லம் சென்றேன். அவர்தம் திருமண மண்டபத்தில் தைப்பூசம் சார்ந்த வள்ளலார் வழிபாட்டை முடித்துக்கொண்டு, அடுக்குமாடி இல்லத்தில் ஓய்விலிருந்த அவரிடம் உரையாடத் தொடங்கியபொழுது, அவரின் தமிழ் பயின்ற வரலாறும், தமிழ் இலக்கியப் பயிற்சியும் தெரியத்தொடங்கின. 

ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் வாழ்வு… 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் வடக்குத் தில்லைநாயகபுரம் என்னும் ஊரில் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் 05.12.1950 இல் பிறந்தவர். பெற்றோர் வீ. ஜெயராமலு, வச்சலா அம்மாள். உடன்பிறந்தோர் ஜெ. பக்கிரிசாமி (அண்ணன்), ஜெ. பங்காருசாமி(தம்பி). 

தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் சிதம்பரத்தை அடுத்துள்ள சி. முட்லூர் அரசு பள்ளிகளில் பயின்றவர். புகுமுகக் கல்வி முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு: ஸ்ரீ வில்லிபாரதத்தில் பாத்திரப் படைப்புகள் என்பதாகும். இவர் தம் எம். ஓ. எல். (M.O.L) படிப்பில் ’கொங்கு மண்டல சதகம்’ குறித்து ஆராய்ந்து திட்டக்கட்டுரை வழங்கியவர். 


தங்கப் பதக்கம் பெறும் மாணவர் ஜெ. பாலகிருஷ்ணன்

வறுமையின் கோரப்பிடியில் இவரின் படிப்பு நடைபெற்றாலும் படிப்பிலும் உடலோம்புவதிலும் பெரும் விருப்பம் கொண்டிருந்தவர். தம் படிப்பில் முதன்மைக்காக  24. 06. 1972 இல்  நிறுவுநர் நாளில் தங்கப்பதக்கம் பெற்றவர். இவர் புகுமுக வகுப்பில் சிறப்புத் தமிழினைப் பாடமாக எடுத்துப் படித்தவர். இளங்கலைத் தமிழ் வகுப்பினை 1972-75 இல் படித்தவர். இவர் எம்.ஓ.எல். படித்தபொழுது இவருடன் 18 பேர் படித்தனர். இவரின் பேராசிரியர்களாக மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், அழ. பழநியப்பன், செ. வைத்தியலிங்கம், ஆறு. அழகப்பன், அ.ஆனந்த நடராசன், சு. சாமி ஐயா, ஆ.இராமசாமிப் பிள்ளை, சுப.இராமநாதன், வெ. செயராமன், ந.வீ. செயராமன், சோ.ந. கந்தசாமி, சிவ. திருநாவுக்கரசு, கதி. தியாகராசன் உள்ளிட்டோர் விளங்கினர். பேராசிரியர் க. வெள்ளைவாரணம் ஐயாவிடமும் பாடம் கேட்ட பெருமைக்குரியவர். 

எடைதூக்கும் வீரர் ஜெ. பாலகிருஷ்ணன்


எடைதூக்கும் வீரர் ஜெ. பாலகிருஷ்ணன்

எடைதூக்கும் போட்டியில் (Weightlifting) பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற போட்டிகளில் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, பல்கலைக்கழத்திற்குப் பெருமைசேர்த்தவர். புகுமுக வகுப்பில் இவருக்கு ஏற்பட்ட விளையாட்டு ஆர்வம் இவர் முதுகலை படிக்கும்பொழுது அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம் வரை எடைதூக்கும் போட்டியாளராக அனுப்பிவைத்தது. 1978- முதல் 1979 வரை ஓராண்டு மட்டும் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டவர்.  1979 இல் கடலூர் தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து, 1985 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தவர். இப்பள்ளி அரசு உதவிபெறும் பள்ளியாகும்.

09.02.1979 இல் புதுவையைச் சேர்ந்த மோகனா அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். முதல் மகன் செந்தில்; அனு, வாணி என்னும் இரு பெண் மக்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் பிரான்சில் வாழ்ந்து வருகின்றனர். புதுச்சேரி அல்லயன்சு பிரெஞ்சுப் பள்ளியில் பகுதி நேரமாகப் பிரெஞ்சு மொழி பயின்ற பாலகிருஷ்ணன் அவர்கள் 10.07.1985 இல், மூன்று ஆண்டு ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக்கொண்டு, பிரான்சு நாட்டுக்குப் பயணமானார். 25.11.1985 முதல் 10.12.2010 வரை பாரிசில் உள்ள வீல் - இவரார் (Ville Evarard) என்ற மருத்துவமனையில் அலுவலகப் பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

பிரான்சு நாட்டில் வாழ்ந்த திரு. சிவசண்முகம் அவர்கள் வழியாக இராமலிங்க அடிகளாரின் படைப்புகளும் பணிகளும் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அறிமுகம் ஆயின. வள்ளலாரின் ’பசித்தோர்க்கு உணவு’, ’கடவுளுக்கு உருவம் இல்லை’, ’இறைவன் ஒளி வடிவானவன்’ உள்ளிட்ட கொள்கைகளில் ஈர்ப்புண்ட பாலகிருஷ்ணன் அவர்கள் வள்ளலார் வழியில் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். 2005 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17, 18 ஆகிய நாள்களில் பிரான்சில் நடைபெற்ற இராமலிங்கர் பணி மன்றத்தின் விழாவில் தலைமைப் பொறுப்பேற்று, உலக வள்ளலார் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவர். பின்னர் பிரான்சு சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவி, வள்ளலார் நெறிகளைப் பரப்பி வருபவர். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூத்த தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைக் கற்றறிந்த ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் ’வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்’ என்னும் புறநானூற்றுப் பாடலடியை நூல் தலைப்பாக்கிப் புற நானூற்றுச் செய்திகளின் அடிப்படையில் அரிய நூலொன்றைப் படைத்துள்ளார்.  புறநானூற்றுச் செய்திகளை எளிய மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் அரிய படைப்பாக இந்த நூல் விளங்குகின்றது. தவத்திரு ஊரன் அடிகளார் அணிந்துரையுடன் வெளிவந்துள்ள இந்த நூல் 2017 ஆம் ஆண்டில் 126 பக்கத்தில் வெளிவந்துள்ளது. 



புதுச்சேரியில் பால மோகன மகால் உருவாக்கியும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கியும், புதுவை - திண்டிவனம் சாலையில் முதியோர் இல்லம் உருவாக்கியும் மக்கள் பணியில் மனம் செலுத்தும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்கள் வள்ளலார் நெறியை வையமெங்கும் பரப்பும் பல்வேறு திட்டங்களை மனத்துள்கொண்டுள்ளார். 

வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடிய, கருணை நெஞ்சத்தாரைத் தம் முன்னோடியாகக் கொண்டு வாழ்ந்து வரும் ஜெய. பாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் ஆய்வுப்பணிகளும் எழுத்துப்பணிகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து, தமிழுக்கு ஆக்கம் நல்கும் என்று நம்புவோமாக!



செவ்வாய், 27 மே, 2014

குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்க்கை ஆவணப்படமாகின்றது...



பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் ப. சு. பற்றிய நினைவுரை( படப்பிடிப்பு)

  தமிழுக்கு உண்மையாக உழைத்த பெருமக்களை இத்தமிழுலகம் உரிய காலங்களில் போற்றுவதில்லை.  அவர்களின் பேரறிவை மதிப்பதும் இல்லை. அவர்களை வறுமையில் வாடாமல் காத்ததும் இல்லை. அவ்வாறு செய்திருந்தால் அத்தகு பெரியோர்களிடத்திருந்து இன்னும் பல்வேறு ஆக்கங்கள் இம்மொழிக்கும் நாட்டுக்கும் கிடைத்திருக்கும். அவ்வகையில் திரு. வி. க, மயிலை சீனி. வேங்கடசாமியார், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பெருமக்கள் பல்வேறு இன்னல்களை ஏற்று வாழ்ந்துள்ளனர். எனினும் தங்களால் இயன்ற வகையில் இவர்கள் தமிழுக்குப் பாடுபட்டுள்ளனர்.

  அந்த வகையில் தமிழிசை மீட்சிக்கு உழைத்த குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் வறுமை வாழ்க்கையில் தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துள்ளனர். அன்பர்கள் சிலர் அவரின் கடைசிக்காலத்தில் உதவியுள்ளனர் எனினும் அவரின் துறைசார் அறிவுக்கு ஈடான பொருள்வளத்தையோ, புகழ்நிலையையோ அவர்கள் பெறவில்லை என்பதுதான் உண்மை. தமிழிசைத்துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, பெருமைக்குரிய குடந்தை ப. சுந்தரேசனாரை வாழும்காலத்தில் போற்றாத மக்கள், மறைந்த பிறகா போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவார்கள்?

  இக்குறையை ஓரளவு போக்கும் வகையில் தமிழ்ப்பற்றாளர்கள் அன்னாரின் நூற்றாண்டு விழாவைத் தமிழகத்திலும் அயலகத்திலும் கொண்டாட முன்வந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூற்றாண்டு விழாவைப் புதுச்சேரியில் கொண்டாடிய இந்நிலையில் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் ஓர் ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் உள்ளோம்.

  எத்தகு பொருள் உதவியோ, ஆள் வலிமையோ இல்லாமல் மலையுடைக்கும் முயற்சிக்கு நிகரான படப்பிடிப்புப் பணியில் ஈடுபட்டு உழைத்த எனக்குப் பேராசிரியர் மு. இளமுருகன், புலவர் சூலூர் கௌதமன் உள்ளிட்டோர் ஊக்கமொழிகளைப் பகர்ந்ததோடு, என் பயணத்தில் உடன் வந்தும் மகிழ்வித்தனர். ஆம். புதுச்சேரியில் படப்பிடிப்பு என்று சொன்னவுடன் தம் பொருட்செலவில் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு முழு ஒதுழ்ழைப்பு நல்கினர். பேராசிரியர் இ.அங்கயற்கண்ணி அம்மா அவர்களும் எங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.

  பூம்புகார் மாதவி மன்றத்தின் தலைவர் திரு. நா. தியாகராசன் ஐயா அவர்கள் தம் தள்ளாத அகவையிலும் தனித்து, பூம்புகாரிலிருந்து புதுவைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதுபோல் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன்(சென்னை), பேராசிரியர் அரிமளம் பத்மநாபன் ஆகியோர் குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த நினைவுகளைப் பெருந்தன்மையுடன் பதிவு செய்துள்ளனர்.


 திருவாரூர் புலவர் இரெ. சண்முகவடிவேல், தவத்திரு ஊரன் அடிகளார், மலேயா பல்கலைக்கழகப் பேராசிரியர் சு. குமரன், ஆ. பிழைபொறுத்தான் ஆகியோர் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியுள்ளனர். அடுத்த படப்பிடிப்பு அரியலூர், திருமழபாடி, புள்ளம்பாடி, பூவாளூர், திருத்தவத்துறை (இலால்குடி), திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது.
புலவர் சூலூர் கௌதமன் ப.சு. பற்றிய நினைவுரை( படப்பிடிப்பு)


தவத்திரு ஊரன் அடிகளார் நினைவுரை( படப்பிடிப்பு)



திரு. நா. தியாகராசன்(பூம்புகார் மாதவி மன்றம்) ( படப்பிடிப்பு)


முனைவர் இ. அங்கயற்கண்ணி  நினைவுரை( படப்பிடிப்பு)

முனைவர் மு.இளமுருகன் நினைவுரை( படப்பிடிப்பு)


படப்பிடிப்புக்குப் பிறகு ஓரிடத்தில் உரையாடியபொழுது

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அறக்கட்டளை இண்டாம் ஆண்டுப் பெருவிழா கடலூரில் நடைபெறுகின்றது!


  பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அறக்கட்டளை நடத்தும் இண்டாம் ஆண்டுப் பெருவிழா கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் 03.08.2014 மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது. இந்த விழாவில் திருவருட்பாவில் வாழ்வியல் நெறிகள் என்னும் தலைப்பில் அமைந்த நூலின் வெளியீடு நடைபெற உள்ளது.

  திருவருட்பா இசைத்தலுடன் தொடங்கும் விழாவில் முனைவர் விசயலெட்சுமி வெற்றிவேல் எழுதிய திருவருட்பாவில் வாழ்வியல் நெறிகள் என்னும் நூல் வெளியிடப்படுகின்றது. கவிஞர் இரா. ச. சொக்கநாதன் தலைமையில்  நடைபெறும் விழாவில் பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அவர்கள்  அறிமுகவுரையாற்றுகின்றார். நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க தவத்திரு ஊரன் அடிகளார் இசைந்துள்ளார். நூலின் முதற்படியினைப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்கள் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்குவார். 

  இந்த விழாவில் விருதுகள் வழங்கியும் பாராட்டுப் பட்டயம் வழங்கியும் சிறப்புப் பேருரையாற்ற முனைவர் ஔவை. நடராசன் அவர்கள் இசைந்துள்ளார். தமிழார்வலர்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அறக்கட்டளையினர் அழைத்து மகிழ்கின்றனர்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

தொல்காப்பியமும் வள்ளலாரும் – தொடர்பொழிவு 8



அன்புடையீர்! வணக்கம்.

தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. உலகத் தொல்காப்பிய   மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் அறிஞர்களின் பங்கேற்பில் தொல்காப்பியம் தொடர்பொழிவு நடைபெறுகின்றது. தாங்கள் இந்த நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்கவும் தொல்காப்பிய உரையமுதம் பருகவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 16. 02. 2017, வியாழக் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம், 119,  நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்
 அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

தலைமை: தமிழாகரர் தெ. முருகசாமி அவர்கள்

சிறப்புரை: முனைவர் அருள்திரு ஊரன் அடிகளார் அவர்கள்
      
தலைப்பு: தொல்காப்பியமும் வள்ளலாரும்

நன்றியுரை: முனைவர் இரா. கோவலன் அவர்கள்


அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003

தொடர்புகொள்ள:

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / முனைவர் மு.இளங்கோவன் + 9442029053

சனி, 3 மே, 2014

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்(28.05.1914 - 09.06.1981) நூற்றாண்டு விழா - அழைப்பிதழ்


அன்புடையீர் வணக்கம்.
தமிழிசை ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பணிசெய்த பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க - இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியைச் சிறப்புச்செய்வான் வேண்டி மலேசியாவிலிருந்து வருகைதரும் தமிழுறவுகளுக்கு விழாவில் வரவேற்பு வழங்க உள்ளோம். தமிழிசை ஆர்வலர்களை அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

நாள்: 17. 05. 2014, காரி(சனி)க்கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் வி. முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

வரவேற்புரை: முனைவர் மு.இளங்கோவன்

நோக்கவுரை: முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், தமிழிசை அறிஞர்

முன்னிலை:
டாக்டர்  விக்டர் சுப்பையா (தேசியத் தலைவர், மலேசிய, இந்தியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை)

செந்தமிழ்த் தேனீதிரு. இரா. மதிவாணன், சென்னை

அறிஞர்களைச் சிறப்பித்தல்:
திரு நா. சோமசுந்தரம், கமாண்டன்ட், இந்தியக் கடலோரக் காவல்படை

நினைவுரைகள்

தவத்திரு ஊரன் அடிகளார், வடலூர்
புலவர் செந்தலை ந. கௌதமன், பாவேந்தர் தமிழ்ப் பேரவை,சூலூர்
முனைவர் மு. இளமுருகன், தமிழியக்கம், தஞ்சாவூர்
முனைவர் . அங்கயற்கண்ணி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
முனைவர் சு. குமரன்,இந்திய ஆய்வியல்துறை, மலேயா பல்கலைக்கழகம்
திரு. வி. வயித்தியலிங்கம், ஆடுதுறை
திரு. . பிழைபொறுத்தான், சென்னை
புலவர் பொ. வேல்சாமி, நாமக்கல்

சிறப்புரை: பேராசிரியர் மா. வயித்தியலிங்கன், சென்னை

நன்றியுரை: பொறிஞர் மு. பாலசுப்பிரமணியன்

அழைப்பில் மகிழும்
-    உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் & புதுச்சேரி இலக்கிய வட்டம்