நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 14 ஜூலை, 2022

தவத்திரு ஊரன் அடிகளார் மறைவு!

 

தவத்திரு  ஊரன் அடிகளார் 

 வள்ளலார் வழியில் வாழ்வு நடத்தியவரும் திருவருட்பாவினைப் பதிப்பிப்பதிலும் வள்ளலார் அவர்களின் வரலாற்றினை விரித்து எழுதியதிலும் பெரும் பங்காற்றிய தவத்திரு ஊரன் அடிகளார் 13.07.2022 நள்ளிரவு, வடலூரில் உள்ள தம் மனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

 கடந்த இருபதாண்டுகளாக அடிகளாருடன் நன்கு பழகும் பேறு எனக்கு வாய்த்தது. அடிகளார் அவர்களை அழைத்து, பல கூட்டங்களை நடத்தியுள்ளேன். யான் உருவாக்கிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படத்தில் அடிகளாரின் செவ்வி மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மேலும் அடிகளாரின் வாழ்வியலை ஆவணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பல மணி நேரம் அவர்களின் உரையாடலைப் பதிந்து வைத்துள்ளேன். இந்நிலையில் அடிகளாரின் மறைவுச் செய்தி அறிந்து பெருந்துயரில் தவிக்கின்றேன்.

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் சார்ந்த ஊர் கண்ணனூர் ஆகும். அதனைச் சார்ந்த நரசிங்கமங்கலம் என்னும் ஊரில் தவத்திரு ஊரன் அடிகளார் 1933 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் பிறந்தவர். இவர்தம் இயற்பெயர் குப்புசாமி என்பதாகும். ஊரன் அடிகளாரின் தந்தையார் பெயர் இராமசாமிப் பிள்ளை. தாயார் பெயர் நாகரத்தினம் அம்மாள்.

 1967 இல் துறவு பூண்டவர். 1968 முதல் வடலூரில் வாழ்ந்து வந்தவர். பன்னூலாசிரியர். சிறந்த சொற்பொழிவாளர். 

 ஊரன் அடிகளாரின் மறைவு சமய உலகத்திற்கும் வள்ளலார் ஆய்வாளர்களுக்கும் அன்பர்களுக்கும் பேரிழப்பாகும்.

தொடர்புடைய பதிவுகள்:

https://muelangovan.blogspot.com/2014/05/blog-post_1610.html

https://muelangovan.blogspot.com/2017/02/blog-post_16.html

https://muelangovan.blogspot.com/2014/05/blog-post_18.html

கருத்துகள் இல்லை: