நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 30 மே, 2024

முனைவர் க. அன்பழகன் (ஹரணி)

முனைவர் க. அன்பழகன் (ஹரணி) 

[முனைவர் க. அன்பழகன் ’ஹரணி’ என்னும் புனைபெயரில் எழுதுபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்ககத் தமிழ்ப்பிரிவின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  “ஒரு பொருட் பல சொற்கள் (பெயர்கள்)” குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.  தமிழாய்வுலகில் முப்பது ஆண்டுகளும் படைப்புலகில் நாற்பது ஆண்டுகளுமெனத் தொடர்ந்து இயங்கி வருபவர். சிறுகதை, குறுங்கதை, புதினம், கவிதைகள் இவரின் படைப்புத் தளங்களாக உள்ளன] 

தஞ்சை மாவட்டம் கலையும் இலக்கியமும் செழித்த பகுதியாகும். புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள் இப்பகுதியில் தோன்றித் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அவ்வகையில் தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த முனைவர் க. அன்பழகன் அவர்கள் ஹரணி என்ற பெயரில் கடந்த நாற்பதாண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருபவர். சிறுகதை, புதினம், கவிதை, ஆய்வு என்று பல முனைகளில் இயங்கி வருபவர். பழகுதற்கு இனிய பண்பாளர். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் ஆழமான பயிற்சியும், மாணவர்களுக்கு உள்ளம் உவகையுறும் வகையில் கற்பித்தலில் மிகப்பெரும் பட்டறிவும் உடையவர். பல்வேறு தமிழறிஞர்களுடனும், எழுத்தாளர்களுடனும் பழகிய பட்டறிவுடையவர்.

வேலூர் மாவட்டம் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் நான் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியபொழுது (1999-2005), வேலூர் ஊரிசு கல்லூரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழிக்கல்வி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் வாய்ப்பு அமைந்தபொழுது முனைவர் க. அன்பழகன் அவர்களைச் சந்திக்கவும், கலந்துரையாடவும் வாய்ப்பு முதன்முதல் வாய்த்தது. அதன்பிறகு பல்வேறு இலக்கியச் சந்திப்புகளில் எங்களின் நட்பு வளர்பிறைபோல் வளர்ந்து, இன்று முழுநிலவாக முழுமைபெற்று விளங்குகின்றது. பல நாள் பழகினாலும் தலைநாள் பழகியதுபோல் அன்புசெலுத்தும் இப்பெருமகனாரின் வாழ்வியலையும் பணிகளையும் அறிந்தபொழுது வளரும் மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று அவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

க. அன்பழகனின் இளமைக் கல்வி  

தஞ்சாவூரில் வாழ்ந்த பொ. கலியபெருமாள், க. ஞானாம்பாள் ஆகியோரின் மகனாக க. அன்பழகன் 02.06.1961 இல் பிறந்தவர். இவருடன் மூன்று பெண் பிள்ளைகளும் ஓர் ஆணும் உடன் பிறப்புகளாகப் பிறந்தனர். கரந்தை உமாமகேசுவரனார் உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர்.

புகுமுக வகுப்பு, இளம் அறிவியல் (வேதியியல்) வகுப்புகளைத் தஞ்சாவூர் மன்னர் சரபோசி கல்லூரியில் பயின்றவர். முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டத்தினைச் சென்னைப் பல்கலைக்கழகம் வழியாகப் பயின்று பெற்றவர். இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழியாகப் பெற்றவர். முனைவர் பா. மதிவாணன், முனைவர் பெ. மாதையன் ஆகியோர் இவரின் நெறியாளர்களாக அமைந்தனர். இவர் முனைவர் பட்டத்திற்குத் தேர்ந்த தலைப்பு “ஒரு பொருட் பல சொற்கள் (பெயர்கள்)” என்பதாகும்.

1982 முதல் 1999 வரை தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அலுவலக நிலையில் பல பணிப்பொறுப்புகளில் இருந்தவர். முனைவர் ஔவை து. நடராசனார். முனைவர் கி. கருணாகரன் உள்ளிட்ட துணைவேந்தர்களின் உதவியாளராக இருந்து பணியாற்றிய பெருமைக்குரியவர். உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது முனைவர் க. இராசாராம் அவர்களின் உதவியாளராக இருந்து, மாநாடு வெற்றிபெற உழைத்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி

   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2000 ஆம் ஆண்டு முதல் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தில் தமிழ் விரிவுரையாளர், பேராசிரியர், தமிழ்ப்பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றியவர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற அஞ்சல்வழிக் கல்வி வகுப்புகளில் கலந்துகொண்டு, தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பாடங்களாக நடத்திய பெருமைக்குரியவர். அஞ்சல் வழிக் கல்விக்காகப் பல்வேறு பாட நூல்களை எழுதியவர். பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்காகவும் பல்வேறு பாட நூல்களை எழுதி வழங்கியவர்.

படைப்புப் பணி

க.அன்பழகனின் தந்தையார் பொ. கலியபெருமாள் அவர்கள் மருந்தாளுநராகப் பயிற்சி பெற்று, பணியாற்றியவர். ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் அறிந்தவர். தஞ்சையில் இவர் பணியாற்றியபொழுது தம் மகனை நூலகங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர். நூலகப் பேழைகளில் உள்ள நூல்களை அறிமுகம் செய்வதுடன், வீட்டுக்குத் தினத்தந்தி, இராணி உள்ளிட்ட நாளிதழ், வார இதழ்களை வாங்கிவரும் வழக்கம் உடையவர். இந்த இதழ்களின் அறிமுகம் படிப்பார்வம் கொண்ட க.அன்பழகனுக்குப் படைப்பார்வம் வருவதற்குக் காரணங்களாக இருந்தன. க. அன்பழகன் ஆறாம் வகுப்பில் பயிலும்பொழுதே எழுதத் தொடங்கியவர். 1979 இல் முதல் கவிதை வெளியானது. 1983 - 84 இல் இவரின் சிறுகதை வெளிவரத் தொடங்கியது. தீபம், ஆரண்யா, கொல்லிப்பாவை, சுபமங்களா உள்ளிட்ட சிற்றிதழ்கள் இவர் படைப்பைத் தாங்கி வெளிவந்துள்ளன. இதயம் பேசுகிறது இதழில் “பறக்க மறந்த சிறகுகள்” என்ற கதையை எழுதி அனைவரின் கவனத்தையும் பெற்றவர்.

தஞ்சாவூரில் வாழ்ந்த தஞ்சை பிரகாஷ் அவர்களின் தொடர்பு அன்பழகனுக்குச் சமகால எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களின் படைப்புகளைப் படித்து, அதுகுறித்து உரையாடவும் பெரும் வாயில்களைத் திறந்துவிட்டன. சுந்தர ராமசாமி, சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் தொடர்பும் சந்திப்பும் படைப்புலகில் க. அன்பழகனுக்கு ஈடுபாடு வளர்வதற்குக் காரணங்களாயின.

1990 முதல் 1995 வரை தமிழகத்தில் வெளிவந்த பல்வேறு சிற்றிதழ்களில் க.அன்பழகன் என்ற பெயரிலும் ஹரணி என்ற பெயரிலும் தொடர்ச்சியாக எழுதிவந்தார். இவரின் சிறுகதை எழுதும் ஆற்றலை அறிந்த முனைவர் ஔவை. து. நடராசன் இவரின் படைப்பாற்றலைப் பல வகையில் ஊக்குவித்தார். இவரின் ஊக்கத்தால் 1993 இல் உயிர்க்குடில் என்ற சிறுகதைத் தொகுப்பினை ஔவை. நடராசனின் அணிந்துரையுடன் வெளியிட்டார். உயிர்க்குடில் என்ற சிறுகதை குங்குமம் இதழில் நட்சத்திர சிறுகதையாக வெளிவந்த பெருமைக்குரியது. ஆயிரம் கதைகளுக்கு மேல் எழுதி, அன்பழகன் சிறுகதைச் செங்கதிராக மிளிரவேண்டும் என்று ஔவை பாராட்டினார். அந்த வாக்கு மெய்யாகும் வகையில் அன்பழகனின் 1200 சிறுகதைகள் இதுவரை வெளிவந்துள்ளன. இவர்தம் படைப்புகளை ஆராய்ந்து இதுவரை ஐந்துபேர் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இளம் முனைவர் பட்ட ஆய்வுகளைச் செய்துள்ளனர்.

2021 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தொடர்ந்து எழுத்துத்துறையில் க. அன்பழகனின் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.






முனைவர் க. அன்பழகனின் தமிழ்க் கொடைகள்: 

சிறுகதைத் தொகுப்புகள் 

  • உயிர்க்குடில் (1993)
  • ஒவ்வொரு மழை நாளிலும் (2000)
  • மறுபடியும் நதி வரும் (2003)
  • வலை (2004)
  • புரண்டு படுக்கும் வாழ்க்கை (2011)
  • செல்லாத நோட்டு (2012)
  • காலம் தின்றவர்கள் (2014,)
  • அப்பா (2020)
  • மிட்டாய் வண்டி (2016)
  • காந்தியும் குமரேசனும் (2017)
  • மனிதர்கள் நடைபாதையில் இருக்கிறார்கள் (2021)
  • செல்போன் வாங்கப்போன முயல்குட்டி (2021)
  • சதிகார நரியும் அதிகார ஓநாயும் (2021).
  • சான்றோர் இளமையியல் (2022) 
  • தீம்பெயல் (2024)
  • நதியின் பிழையன்று (2024)


நாவல்கள்

  • ரௌத்ரம் பழகு (1996)
  • பேருந்து (2014)
  • அப்பிராணி (2016)
  • வாழ்ந்தே தீருவேன் (2021)
  • கனையெரி (2021)  

குறுநாவல்கள் 

  • சரஸ்வதி (1995)
  • நெருப்பில் புதைந்த கனவுகள் (1997)
  • நிழல்கள் (1998)
  • பெரிதினும் பெரிது கேள் (1999)
  • சாபப் பட்சிகள் (1999)
  • காக்கை விருட்சம் (1999)
  • பெண் எனும் நல்லாள் (2021)
  • பிச்சைக்காரர்கள் (2024)
  • முல்லை (2024)
  • பூக்கள் பூத்துக்கொண்டேயிருக்கின்றன (2024) 

இணைய நூல்கள் 

ஜால்ரா,

என்னமோ நடக்குது, 

நத்தைகள் (2022) 

கவிதைத் தொகுப்புகள் 

உதிரிலைகள் (2017)

விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி (2019)

வானம் விழுங்கும் வானவில் (2021)

வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் கூடுகளாய் (2022) 

தமிழாய்வு நூல்கள் 

மின்மினித்தடங்கள் (2004)

ஒருபொருட்பல சொற்கள் (2004)

வண்ணச்சிறகுகள் (2005)

தமிழ் நாவல்களில் பெண்கள் (2005)

சொல்லும்பொருளும் (2009)

திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார் (2015)

தண்டியலங்காரம் (2015)

இலக்கிய நிழல் (2024) 

கட்டுரை நூல்கள் 

பெண்ணியல் கட்டுரைகள் (2004)

பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா (2010)

நத்தையோட்டுத் தண்ணீர் (2012)  

மாண்புமிகு வள்ளுவம் (2016)

விழையாமை என்னும் பேராண்மை – திருக்குறள் நூல் (2022)

The Magnanimity called Non-interference (திருக்குறள் நூல் ஆங்கிலத்தில்), செம்மொழி அறங்கள் – (2022) (இணைய நூல்கள்) 

க. அன்பழகன் பெற்ற விருதுகள் 

வைரமுத்து சமூக இலக்கியப்பேரவை விருது (1995)

செழுந்தமிழ்ச் செம்மல் விருது (2009)  

கரூர் சிகரம் விருது (2012)

தியாக துருகம் பாரதி தமிழ்ச்சங்க விருது (2013)

மண்ணின் சிறந்த படைப்பாளி விருது (2014)

சென்னைக் கம்பன் கழகம் –  தமிழ் நிதி விருது (2016)

வானதி விருது  (2016)

உலகத் திருக்குறள் பேரவை  – குறள்நெறிச் செல்வர் விருது (2017)

திருப்பூர் இலக்கிய விருது (2022).

பொதிகை மின்னல் சிறந்த நூல் இலக்கிய விருது மற்றும் பொற்கிழி (2023),

வண்டல் சிறுகதைப்போட்டி பரிசு (2023)

கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறந்த நூல்விருது (2023)

சிறந்த எழுத்தாளருக்கான திருக்கருகாவூர், அக்கினி அறக்கட்டளை விருது (2024)

புதுச்சேரி பனுவல் நூல் போட்டி 2023 - க்கான விருது (2024)

அமெரிக்க மின்னிதழ் ஆனந்தச் சந்திரிகை மற்றும் சென்னை நூலேணிப் பதிப்பக விருது. 

சிறப்புப் பரிசு 

கவிதை நூல்  - வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் இருந்து கூடுகளாய்..(2024). 

           இவரது படைப்புகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலையில் பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, அகராதியியல், அறிவியல், உளவியல், அறிவியல் தமிழ்,   சிறுவர் இலக்கியம் எனப் பல தளங்களில் செயற்பட்டு இத்துறைகளுக்கு வளமூட்டி வருபவர். 

படைப்புகள் விவரம் 

1.   சிறுகதைகள் இதுவரை வெளிவந்தவை 1200

2.   கவிதைகள் – 200 - க்கு மேற்பட்ட கவிதைகள்.

3.   குறுநாவல்கள் – 20 - க்கு மேற்பட்டவை.

4.   தொடர்கள் – 5 - க்கு மேற்பட்டவை.

5.   கட்டுரைகள் – பொது மற்றும் இலக்கியக் கட்டுரைகள் 50 க்கு மேற்பட்டவை.

6.   தினமணி தமிழ்மணியில் வெளியான கட்டுரைகள் – 25

7.   தினமலர் பட்டம் பகுதியில் வெளியான தமிழாய்வுக் கட்டுரைகள் – 30

8.   ஆங்கிலக் கவிதைகள் பிரசுரம் – 10

10பாடநூல்கள் எழுதியமை – இளங்கலை மற்றும் முதுகலை – 7 நூல்கள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்).

11. பெற்ற பரிசுகள் – 100 க்கு மேற்பட்ட பரிசுகள்.

12. பெற்ற விருதுகள் – 10

13. வகித்த பொறுப்புகள் – தமிழ்ப்பிரிவுத் தலைவர், தேர்வுக்குழுத் தலைவர், பாடத்திட்டக்குழு உறுப்பினர், முனைவர் பட்ட ஆய்வுக்குழு உறுப்பினர், வல்லுநர்க்குழு உறுப்பினர், வினாத்தாள் தயாரிப்புக்குழுத் தலைவர், விடைத்தாள் மதிப்பீட்டுக்குழுத் தலைவர் உள்நாடு மற்றும் வெளிநாடு.மானிட்டரிங் கமிட்டி உறுப்பினர், விடைத்தாள் தயாரிப்புக்குழு உறுப்பினர், நடுவர் – படைப்பிலக்கிய நூல்கள் தேர்வு (உள்நாடு மற்றும் வெளிநாடு), வாழ்நாள் உறுப்பினர் (உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர்), ஒருங்கிணைப்பாளர் (தேசியக் கருத்தரங்குகள்) மற்றும் தொலைதூரத் தொடர்பு வகுப்புகள் புறநிலைத் தேர்வாளர் (எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வுகள்), தலைவர் (இணைய வழித்தேர்வுகள்), சோதிடவியல் பட்டயம், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை வாய்மொழித்தேர்வுகள். 

14சென்ற நாடுகள்   

Ø  இலங்கை – உலக இந்து மாநாடு (2003),

Ø  மலேசியா, ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு(2015). 

15. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ள படைப்புகள் விவரம்.

 

Ø  மேனிலைப்பள்ளிப் பாடத்திட்டம் (1995 முதல் ஐந்தாண்டுகள் ),

Ø  இருளில் இரு பறவைகள் எனும் சிறுகதை,

 

Ø  வண்ணச்சிறகுகள் (இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுநூல் – (2006) கோபி கலை அறிவியல் கல்லூரிப் பாடத்திட்டம், 

 

Ø  செல்லாத நோட்டு எனும் சிறுகதை (வேலூர் ஊரிஸ் மகளிர் கல்லூரி பாடத்திட்டம்) (2007),

 

Ø  மூக்குத்தி எனும் சிறுகதை ( மன்னர் சரபோசி கல்லூரி பாடத்திட்டம்) (2009),

 

Ø  செல்லாத நோட்டு சிறுகதை (நஞ்சப்பா மகளிர் கலை அறிவியல் கல்லூரி பாடத்திட்டம், பொள்ளாச்சி)(2010),

 

Ø  காலம் தின்றவர்கள் சிறுகதைத்தொகுப்பு – தொலைநிலைக் கல்வி, பாரதியார் பல்கலைக்கழகம், (2011 முதல் மூன்று ஆண்டுகள் )

 

Ø  பேருந்து நாவல் , திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாடத்திட்டம் 2015 இலிருந்து ஏழாண்டுகள் ,

 

Ø  பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா (மொரிசியஸ் கல்வி நிறுவனத்தில் பார்வை நூல்) (2009),

 

Ø  மாண்புமிகு வள்ளுவம், வள்ளுவம் குறித்த ஆய்வு நூல் (சரபோசி அரசு கல்லூரிப் பாடத்திட்டத்தில்) (2018 முதல் மூன்றாண்டுகள்),

 

Ø  அப்பா சிறுகதைத்தொகுப்பு  (அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரி பாடத்திட்டத்தில்) (2022-2023 முதல் மூன்றாண்டுகள்)..

 

Rephrase with Ginger (Ctrl+Alt+E)

திங்கள், 27 மே, 2024

மருத்துவர் மு. குலாம் மொகிதின்

 

மருத்துவர் மு. குலாம் மொகிதின் 

[மருத்துவர் மு. குலாம் மொகிதின் அவர்கள் எலும்பு, முதுகெலும்பு அறுவைப் பண்டுவத்தில் புகழ்பெற்ற வல்லுநர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் பிறந்தவர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிலும் கல்வி பயின்றவர். பணியாற்றிய சிறப்பிற்குரியவர். தமிழ் வழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடையவர். மருத்துவத்தைச் சேவையாகச் செய்வதில் விருப்பம் உடையவர் ] 

திருவையாற்றில் கரந்தை செயக்குமார் அவர்களின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட பிறகு, தஞ்சைத் தொடர்வண்டி நிலையத்தில் சோழன் விரைவு வண்டியைப் பிடிப்பதற்குக் காத்திருந்தேன். பொலிவும் அறிவால் கவர்ந்திழுக்கும் தோற்றமும் கொண்ட ஒருவர் தம் மகனுடன் நடைமேடைக்கு வந்தார். ஓரிரு முறை என்னை உற்று நோக்கிய அவர், என்னை நெருங்கி, நீங்கள் மு. இளங்கோவன்தானே! என்றார். ஆம். என்றேன். 

ஐயா, நீங்கள் யார்? என்று வினவினேன். தம் பெயர் மருத்துவர் மு. குலாம் மொகிதின் எனவும் தஞ்சையில் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளதாகவும். தற்பொழுது புதுச்சேரிக்கு அருகில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். புலவர் இரா. இளங்குமரனார் அவர்களுடன் தாம் பழகிய பட்டறிவுகளைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார். என் வலைப்பதிவுகளையும், தொல்காப்பியம் சார்ந்த காணொலிகளையும், முகநூல் பதிவுகளையும் படித்துள்ளதை ஆர்வம் பொங்க எடுத்துரைத்தார். 

எங்கள் உரையாட்டு நிகழ்ந்துகொண்டிருந்தபொழுதே சோழன் விரைவு வண்டியும் நடைமேடையில் வந்து நின்றது. நானும் அவரும் அடுத்தடுத்த பெட்டிகளில் செலவு செய்வதாக முன்பதிவு இருந்தது. தம் உடைமைகளை அவருக்கு உரிய பெட்டியில் கொண்டுபோய் வைத்துவிட்டு வருவதாகச் சொல்லி விடைபெற்றார் மருத்துவர் மு. குலாம் மொகிதின். 

நானும் என் பெட்டியில் ஏறி, எனக்குரிய இடத்தில் அமர்ந்தேன். ஆய்வர் வந்து இருக்கையை உறுதிசெய்து சென்றார். சிறிது நேரத்தில் சொன்னபடியே மருத்துவர் மு. குலாம் மொகிதின் அவர்கள் என் இருக்கைக்கு வந்து உரையாடத் தொடங்கினார். தஞ்சையிலிருந்து கடலூர் வரை சற்றொப்ப மூன்று மணிநேரம் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. இடையில் வண்டி நிற்பதும் வண்டியில் இருப்பவர்கள் இறங்குவதும் புதியவர்கள் ஏறி அமர்வதுமாக இருந்தாலும் எங்கள் உரையாடலில் எந்தக் குறுக்கீடும் இல்லை.

 

மு.இளங்கோவன், முகுலாம் மொகிதின்

மருத்துவர் மு. குலாம் மொகிதின் அவர்கள் எலும்பு, முதுகெலும்பு அறுவைப் பண்டுவத்தில் தலைசிறந்த வல்லுநர். தமிழகத்தின் பல ஊர்களில் அரசு மருத்துவமனைகளில், கல்லூரிகளில் தம் மருத்துவப் பணியைச் செய்தவர். தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் (சுவிசு, இங்கிலாந்து, செர்மனி, இத்தாலி) மருத்துவப் படிப்பைப் படித்துப் பட்டங்கள் பெற்றவர். பயிற்சிகளை மேற்கொண்டவர். ஒமன் நாட்டிலும் பணியாற்றிய பட்டறிவு கொண்டவர். தலைசிறந்த தமிழ் உணர்வாளர். மருத்துவத்தைத் தமிழில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டவர். எலும்பு, முதுகெலும்பு மருத்துவம் சார்ந்த அரிய உரைகளையும் கட்டுரைகளையும் வழங்கியவர். 

மு. குலாம் மொகிதின் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில், 07-02-1959 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் முகமது இஸ்மாயில், அ. பாத்திமா பீவி ஆவர். 

குடும்பம் வணிகத்தின் பொருட்டு இலங்கைக்குச் சென்றதால் நுவரேலியாவுக்கு அருகில் உள்ள பண்டாரவளை, புனித தோமையர் பள்ளியில் குலாம் அவர்களின் இளமைக் கல்வி அமைந்தது. குடும்பம் மீண்டும் தமிழகம் திரும்பியதும் அன்னவாசல் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் புதுக்கோட்டை முன்மாதிரிப் பள்ளியிலும் கல்வி பயின்றவர். பள்ளியில் படிக்கும்பொழுதே உயர்ந்த பண்புகள் அமைவதற்குக் காரணமாக விளங்கியவர் முனைவர் அ பன்னீர்செல்வம் அய்யா (சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல் இயக்குநர்) என்று மருத்துவர் குலாம் அவர்கள் நன்றிப் பெருக்குடன் தெரிவித்தார்.

பள்ளியிறுதி வகுப்பில் படித்தபொழுது (1975  ஆம் ஆண்டு, 11ஆம் வகுப்பு) தேர்வில் கணக்குப் பாடத்தில் 100 / 100 மதிப்பெண் பெற்றவர். இந்திய அரசின் கல்வி உதவித் தொகை (National Merit Scholarship) பெற்றவர். திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியில் பயின்று, புகுமுக வகுப்பில் தேறியவர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் தம் மருத்துவப் படிப்பை (MBBS) (1976-1983) நிறைவுசெய்தவர். 1983-1989 புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றியவர். 

1989-90 இல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எலும்பு அறுவைப் பட்டயப் படிப்பையும் (D.Ortho), 1991-1993 இல் பட்ட மேற்படிப்பை (MS Ortho), மதுரை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றவர். 

எலும்பு, முதுகெலும்பு அறுவையில் மேற்பயிற்சியினைக் கோவை கங்கா மருத்துவமனையில் பெற்றவர். 

கேண்டோன் மருத்துவமனை, கூர், சுவிட்சர்லாந்து; கேத்ரினன் மருத்துவமனை, சுடுட்கார்ட், ஜெர்மனி; பாஸல் மருத்துவமனை, சுவிட்சர்லாந்து; லேகோ மருத்துவமன, லேகோ, இத்தாலி; குயின்ஸ் மெடிக்கல் சென்டர், நாட்டிங்காம், இங்கிலாந்து ஆகிய புகழ்பெற்ற மருத்துவமனைகளில் பயிற்சிபெற்ற பட்டறிவு உடையவர். 

கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல ஊர்களுக்கும், சிங்கப்பூர், புருணை, ஹாங்காங், சௌதி அரேபியா, துபாய், ஓமான் நாடுகளுக்கும் சென்று தம் அறிவாராய்ச்சியை வெளிப்படுத்தியவர். 

மலேசியா, மக்கௌ (சீனா) நாடுகளுக்கும் சென்று வந்தவர். 

அண்டக்குளம், விராலிமலை, வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றி மக்கள் மருத்துவராக விளங்கியவர். மேலும், தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளிலும் பணியாற்றிப் பல நூறு மருத்துவ மாணவர்களை உருவாக்கியவர். 

மருத்துவத்துறையில் மாமணியாக விளங்கும் குலாம் மொகைதின் அவர்கள் 28. 02. 2017 இல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். 

அயல்நாட்டுப் பணி: 

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் அமைந்துள்ள கோலா மருத்துவமனையில் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

தமிழ்ப் பணி 

எலும்பு அறுவை மருத்துவக் கருத்தரங்கு முதன் முதல் தமிழ்நாடு எலும்பு அறுவை மருத்துவச் சங்கம் சார்பில் தஞ்சாவூரில்  அக்டோபர், 2023, இல் நடைபெற்றபொழுது அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தியவர்.

தமிழ்நாடு எலும்பு அறுவை மருத்துவர்களின் மாநில மாநாடு (பிப்ரவரி,2024, ஈரோட்டில் நடைபெற்றபொழுது தமிழ் அமர்வுக்கு  ஒருங்கிணைப்பாளராக இருந்து மிகச் சிறப்பாக நடத்தியவர். 

மருத்துவத் துறையில் பேரீடுபாட்டுடன் விளங்கும் குலாம் மொகைதின் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுத் தம் அறிவையும் துறைசார் ஈடுபாட்டையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். அவ்வகையில் எலும்பு அறுவை மருத்துவமல்லாமல் ஆர்வத்தினால் பிறதுறை சார்ந்த படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி வழியாகப் படித்துள்ளார். அவை: 

Ø  PGDHM... மருத்துவ மனை மேலாண்மை பட்டயப் படிப்பு (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) 

Ø  PGDEA....கல்வியியல் நிர்வாகம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) 

Ø  PGDCA... கணினி பயண்பாட்டியியல் பட்டயப்படிப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்) 

Ø  PGDNLP (இயற்கை மொழி செயலாக்கப் பட்டயப்படிப்பு, அண்ணாமலை பல்கலைக்கழகம்) 

Ø  முதுகலை இதழியல் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) 

Ø  முதுகலை வணிகவியல் (கல்வியியல் மேலாண்மை, அண்ணாமலை பல்கலைக்கழகம்) 

பகுத்தறிவிலும், தமிழ்ப்பற்றிலும், சமூக நீதியிலும் பெரும்பிடிப்பினைக் கொண்டுள்ள மருத்துவர் குலாம் மொகைதின் அவர்கள் தாய்மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் உடையவர். இவர்களைப் போன்ற மருத்துவர்களால்தான் தமிழ் மருத்துவத்துறை செழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

 

வெள்ளி, 24 மே, 2024

இலங்கைப் பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன் (காப்பியதாசன்)

                                     பண்டிதர் . . கடம்பேசுவரன் (காப்பியதாசன்)

[பண்டிதர் கடம்பேசுவரன் அவர்கள் இலங்கையில் சிந்துபுரத்தில் பிறந்து, தொழில்கல்வி பயின்று, தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக இலக்கிய இலக்கணங்களைக் கற்றுப் பண்டிதராக விளங்கியவர். ஆசிரியர், எழுத்தாளர், செய்தியாளர், கலை ஆர்வலர், நாடகக் கலைஞர், சமூக சேவகர் என்ற பன்முகத் தன்மையுடன் விளங்கியவர். தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய பெருமைக்குரியவர். தொல்காப்பியத்தின் மேல் தமக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாகக் காப்பியதாசன் என்ற புனைபெயரிலும் எழுதியவர்] 

மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் அவர்கள்   யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சிந்துபுரத்தில்  1947 திசம்பர் 10 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் மயில்வாகனம்  நவரத்தினம் (ஆசிரியர்),  பாக்கியம் என்பதாகும்

பண்டிதர் கடம்பேசுவரன் அவர்கள் தமது தொடக்கக் கல்வியை  வட்டுக்கோட்டை, சிந்துபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள திருநாவுக்கரசு மகா வித்தியசாலையிலும், பின்னர் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியிலும் ஆங்கில வழி மூலம் பாடங்களைப் படித்தவர்.  பின்னர்த் தொழில் துறைக்காகக்  கொழும்பு கட்டுப் பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றவர். எனினும் இவருக்கு இருந்த தணியாத தமிழ் விருப்பத்தால் தமிழறிஞர்களுடன் நெருங்கிப் பழகித் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆர்வமாகக் கற்றுத் தேர்ந்தவர். 

பண்டிதர் கடம்பேசுவரன் அவர்களின் தாயார் 1968 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அந்த வேளையில் தாயாரின் கடைசி ஆசையையும் தந்தையின்  சொல்லையும்  கேட்டு தாய்மாமன் குழந்தைவேலு-நல்லம்மா  ஆகியோரின் மகள் மகேசுவரி என்பவரை 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர். அந்த இனிய இல்லற வாழ்க்கையின் பயனாக 3/12/1975- அன்று மணிமார்பன், 08/02/ 1980 – இல் மகள் ஆரணி,  02/07/1987 இல் மகன் துளசிவர்மன் பிறந்தனர். இவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து, உயர் பொறுப்புகளில் உள்ளனர். 

கடம்பேசுவரன் ஈழநாடு,  தினக்குரல், வீரகேசரி, உதயன் உள்ளிட்ட இதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரையாளராகவும் பல்வேறு நிலைகளில் 1979 முதல் 1986 வரை கடமையாற்றியவர். 

1. பண்டிதமணி சுப்பையா பிள்ளை, 2. பண்டிதமணி செ . துரைராஜ சிங்கம், 3.கலாநிதி வித்துவான் . . வேலன், 5. மகாவித்துவான் இலக்கண வித்தகர் பண்டிதர் இ. நமசிவாய தேசிகர்  6.பண்டிதர் பொன்னுத்துரை, 7. வித்துவான் இபொன்னையா, 8. பண்டிதமணி மு கந்தையா, 9. பண்டிதமணி சோ. இளமுருகனார், 10.பண்டிதர் இலக்கணக்கொத்து  சி. இராசையா முதலிய அறிஞர் பெருமக்களுடன் பழகித் தம் தமிழறிவை வளர்த்துக்கொண்டவர். 

1977 இல்  கலாநிதி வித்துவான் . . வேலனுடனான சந்திப்பால்  தமிழ் கற்று, பால பண்டிதரானமையும், 1984 இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர்,  மட்டுவில் பொன்னுத்துரை பண்டிதர் ஆகியோரிடம்  தமிழ் கற்றுப் பண்டிதரானமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும். 

1983- மாயன் என்னும் பெயரில் தொழிற்சாலையைத் தொடங்கி நடத்தினார். 1988 இல் ஈழநாடு பத்திரிகையில் இணைந்து எழுத்துப் பணிகளை ஆற்றினார். 

1990  இல் புனித பத்திரிசியார் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இணைந்து, மாணவர்கள் உள்ளம் பதியும் வகையில் தமிழைப் பயிற்றுவித்தார். 

            1992 இல் இவரின் மூலவேர் புத்தகம் வெளியீடு கண்டது. 1994 இல் வட்டுக்கோட்டைத் தொகுதி தமிழ்ச் சங்கத்தில் இணைந்தார். 

1994 இல் தமிழறிஞர்  சரித்திரம்,  வட்டுக்கோட்டைத் தொகுதி - தமிழ்ச்சங்கத்தார் (தொகுப்பாசிரியர்கள்), வட்டுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம். 1வது பதிப்பு: திசம்பர் 1994 வெளிவர முழுமையாக  உதவினார். 1996 இல் ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டு அளப்பரிய பணிகளைச் செய்தவர். 

 2000 இல் சுன்னாகம் அவைக்காற்றுகைக் குழுவின்  தலைவராகப் பொறுப்பேற்று  எழுதிய நாடகங்கள் பலவாகும். மா. அருள்சந்திரனோடும் திருமதி கல்யாணி சுந்தரநேசனோடும் இணைந்து "ஓதல்லோ" "ஹாம்லெட்" “வெனிஸ் வணிகன்” "தூண்டில் புழுவினைப்போல்,” "ஓலங்கள்" ஆகிய நாடகங்கள் மேடையேறின. அந்த   அவைக்காற்றுகைக் குழுவின் ஊடாகக்கல்யாணி” நாடக இலக்கிய இதழ் வெளியீடு செய்யப்பட்டது

தொடர்ந்து சங்கம் வளர்த்த ஆன்றோர்கள் பண்டிதர் தாபொன்னம்பலவாணர்கவிஞர் சோ.பத்மநாதன் (சோபா) என்போருடன் இணைந்து பாலபண்டிதர், பண்டிதர் வகுப்பு நடத்தித் தமிழ் இலக்கண இலக்கியப் பரவலுக்குக் காரணமாக இருந்தவர் . இவ்வகுப்புகளால் பலர் தமிழ் கற்றனர். 

2000-2003 இல் இவர் எழுதிய நாடகங்கள் "பெண்மை கொல்லோ",  "பெருமையுடைத்து", “வாழ்க்கைப் பயணங்கள் " "பாவலரும் காவலரும்"  "பொறுப்பேனா யான்" , "ரமணி வள்ளல் " எனபன மேடையேற்றப்பட்டன

2004 இல் புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழாசிரியர் பணியிலிருந்து பணியோய்வு பெற்ற கடம்பேசுவரன் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றி, மரபு இலக்கண நூல்களைப் பயிற்றுவித்தவர்.  சமய நிறுவனங்களில் அமைந்த இவரின் இலக்கண, இலக்கிய வகுப்புகளும் சமய இலக்கிய வகுப்புகளும் இலங்கைத் தமிழ் மாணவர்களால் பெரிதும் போற்றப்பட்டவையாகும். 

14/01/2009 இல் சிறுவர் இலக்கியம் "தீந்தேன்” வெளிவந்தது. இது இறுவட்டாகவும் வெளியீடு கண்டது. இசையாகப் பாடியவர் பொன் - வாமதேவன், இசையைத் தந்தவர் தவநாதன் ஆவார்.  றோபேர்ட்  வாத்தியம் விமல் சங்கர் ஆவார். இந்த இறுவட்டின் பாடல்கள் இணையத்தில் கேட்கும்படியாக வெளியிடப்பட்டுள்ளது. 

ம. ந. கடம்பேசுவரன் பெற்ற விருதுகள்: 

கடம்பேசுவரனாரின் புலமையையும் பணிகளையும் அறிந்த தமிழமைப்புகளும் அரசும் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கிப் பெருமைபெற்றன. 

Ø  2005 கலைவாரிதி விருது (வடமாகாண கலாசார திணைக் கழகம், வடமாகாணம்) 

Ø   2009 இல் இலக்கியப்பேரவை விருது 

Ø  2010 இல் சாகித்திய விருது 

Ø  2012 இல் வடமாகாண "ஆளுநர் விருது" – (கலை பண்பாட்டு இலக்கியம்) 

Ø  விளையாட்டுத் துறை அலுவல்கள் அமைச்சு வட மாகாணம். 

Ø  9 /12 /2012 அன்று ஆளுநர் விருது வழங்கிக் கௌரவிப்பு செய்யப்பட்டது. 

Ø  2012 இல் கலா பூசணம் விருது (இலங்கை கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு

Ø  17/01/ 2015 அன்று ஒஸ்லோவில் (Norway) நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் தமிழ்ச் சங்கத்தினால் சிறப்பிக்கப்பட்டார்

Ø  2017  இலங்கை தமிழ் இலக்கிய நூலகமும் இலண்டன் தமிழ் இலக்கிய சங்கமும்  இணைந்து கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்திய இலக்கியப் பெருவிழாவில் தமிழ் வளர்ச்சி இலக்கிய விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.  

Ø  16 /12/ 2017 இ. தா.  உதயணன் இலக்கிய விருது  

Ø  22/ 11 /2019 இல் வலிகாமம் - மேற்குக் கலாசார பண்பாட்டுப் பெருவிழாவின்போது பிரதேச கீதம் இயற்றியமைக்காகக் கலாசார பேரவையும், கலாசார அதிகார சபையும், வலிகாமம்- மேற்குப்  பிரதேச செயலகம் சங்கானையால் சிறப்பிக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டது. 

Ø  2021 இரண்டாவது அனைத்து உலகத் தமிழில் ஆய்வு மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபொழுது  தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய பெரும் பங்களிப்பினைச் சிறப்பிக்கும் வகையில்  நினைவுச் சின்னமும் இலக்கியப் பண்பாட்டு பொதுப் பணிகளுக்காக "கலைநேயப் பரிதி" என்ற விருதும் வழங்கப்பட்டன. 

நன்னூல் விருத்தியுரை, தொல்காப்பியம் எழுத்ததிகாரம், முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்களின் வெளிவராத பாடல்கள் எனும் மூன்று புத்தகங்களும் 2024 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சான்றோர்களால் வெளியீடு செய்யப்பட்டன. 

சைவ இலக்கியங்களில் பேரீடுபாடும் பெரும் புலமையும் கொண்ட கடம்பேசுவரனார் அவர்கள் நாவலர் மகா வித்தியாலயத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இளஞ்சைவப் புலவர், சைவப் புலவர் பட்டங்களைப் பெறுவதற்கு முனைந்த மாணவர்களுக்குச் சைவ சமய நூல்களைப் பயிற்றுவித்து ஈழத்தில் சைவப் பயிர் வளர்வதற்குத் துணை நின்றவர்




தொல்காப்பியத்தைப் பயிற்றுவிப்பதைப் பெரும் ஈடுபாட்டுடன் செய்தவர். தொல்காப்பியத்தின் மேல் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் தம் புனைபெயரைக் காப்பியதாசன் என்று அமைத்துக்கொண்டவர். தொல்காப்பியத்துடன் நன்னூல், நன்னூல் காண்டிகை உரைகளைக் கற்பித்து ஈழத்தில் தமிழ்ப் புலமை வேரூன்றக் காரணமாக விளங்கியவர்



ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக நாற்பது ஆண்டுகளாகப் பணியாற்றியவர்

மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் 16-04-2024 செவ்வாய்க் கிழமை இலங்கையில் இயற்கை எய்தினார்

யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், "ஈழத்து மரபுவழி பண்டிதக் கல்வியின் பேராசானைத் தமிழுலகம் இழந்து நிற்கின்றது. கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக மரபுவழித் தமிழ்க் கல்வி நிறுவனமான ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கத்தைப் பல்வேறு இன்னல்களின் மத்தியில் காத்து நின்ற செயல் வீரனின் மறைவு ஈடுசெய்ய முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்

பண்டிதர் ம. ந. கடம்பேசுவரனாரின் தமிழ்க்கொடைகள்: 

v  பொற்காலம்

v  மூல வேர் (1993)

v  தமிழ் இலக்கியத் திறனாய்வும் கோட்பாடும் (2014)

v  தீந்தேன் (இறுவட்டு)

v  பொறுப்பேனா  யான்

v  காப்பியதாசன் கட்டுரைகள்

v  இலக்கண மரபு (வரலாற்றாய்வு வழிகாட்டி) (2013)

v  நன்னூல்  விருத்தியுரை: விளக்கமும் அகலவுரையும்(2023)

v  செந்தமிழ் காப்போம்

v  முது தமிழ்ப் புலவர் வெளிவராத பாடல்கள்

v தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (உயர் கல்விக்கான வினா-விடை வழிகாட்டி) –(2021)

v  தொல்காப்பியச் செய்யுளியல் ஆய்வுச் சுருக்கம்

 

நன்றி:

திரு. லோகேந்திரலிங்கம், ஆசிரியர், உதயன், கனடா

முனைவர் விசாகரூபன், இலங்கை

கடம்பேசுவரனாரின் குடும்பத்தினர்கள்.

உதயன் இதழில் வெளியான கட்டுரையைப் படிக்க இணைப்பு இதோ: