நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 20 டிசம்பர், 2019

கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் சிறப்பு உரையரங்கம்!




  மெல்பர்ன் தமிழ்ச்சங்கத் தலைவர் ந. சுந்தரேசனுக்குத் 
தொல்காப்பியத் தொண்டர் விருதளித்து மகிழும் 
உலகத் தொல்காப்பிய மன்றத்தார்.

புதுச்சேரி, உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் 20.12.2019 மாலை, செகா கலைக்கூடத்தில் கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள் என்னும் தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. பிரான்சு பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் தெ. முருகசாமி “கம்பராமாயணத்தில் தொல்காப்பியப் பதிவுகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தை உள்வாங்கிக்கொண்டு, கம்பர் தம் இராமாயணத்தை எழுதியுள்ள சிறப்பினைத் தக்க மேற்கோள்கள் கொண்டு இந்த உரையரங்கில் பேராசிரியர் தெ. முருகசாமி நிறுவினார். மேலும் தொல்காப்பியர் குறிப்பிடும் “மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்”, “ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”, “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ”, “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” என்னும் நூற்பாக்களோடு பொருந்திப்போகும் கம்பராமாயண வரிகளை எடுத்துரைத்தும். தொல்காப்பியர் குறிப்பிடும் வேற்றுமைகள், இடைச்சொற்களைக் கம்பர் பயன்படுத்தியுள்ள பாங்கினை எடுத்துக்காட்டியும், தமிழ் இலக்கிய உலகில் ஒரு முன்னோடிப் புலவராக கவிச்சக்கரவர்த்தி கம்பர் விளங்கியமையை எடுத்துரைத்தார்.

ஆத்திரேலியாவின், மெல்பர்ன் தமிழ்ச் சங்கத் தலைவர் பொறியாளர் ந. சுந்தரேசனுக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருது அளித்து உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் பாராட்டப்பட்டது. நற்றமிழ் நாவரசி பூங்குழலி பெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார்., முனைவர் தூ. சடகோபன் நன்றியுரை வழங்கினார்.  பெங்களூரிலிருந்து திரு. பார்த்தசாரதி கலந்துகொண்டு நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்ந்தார். தமிழறிஞர்களும், தொல்காப்பிய ஆர்வலர்களும் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ தலைமையுரை

பேராசிரியர் தெ. முருகசாமி சிறப்புரை


கருத்துகள் இல்லை: