நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 20 நவம்பர், 2019

திருக்குறள்தொண்டர் தமிழ்க்குழவி வாழ்க!



தமிழ்க்குழவி

தமிழை வணிகப் பொருளாக்கி, கல்வி நிறுவனங்களை – பல்கலைக் கழகங்களைச் சீரழிக்கும் கல்விக்கதிரவன்கள்” நடுவில் தமிழகத்தின் வெளிச்சம்படாத இடங்களில் இருந்துகொண்டு நற்றமிழ்த் தொண்டு செய்பவர்களை நாம் கொண்டாடுதல் வேண்டும். போற்றுதல் வேண்டும். அப்பொழுதே தமிழ் வளரும். தமிழுக்குத் தொண்டு செய்த புலவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், அருட்தந்தையர்கள், அருளாளர்கள, கொடை வள்ளல்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு உரைத்தல் அரிது. ஆம்!

அண்மையில் நாகர்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. நண்பர்கள் ஓரிருவர் என்னுடன் வந்தனர். நெல்லையிலிருந்து எங்களுக்கு நெறிகாட்டி அழைத்துச் சென்றவர் திருவாளர் இராமசாமியார். நாகர்கோவில் பயணத்தின்பொழுது கட்டாயம் நாம் தமிழ்க்குழவியைச் சந்திக்க வேண்டும் என்றார். தமிழ்க்குழவி யார்? என்றேன். தமிழ்க்குழவி அவர்கள் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்களை எழுதியுள்ளார் எனவும், பிள்ளைகளுக்கு ஞாயிறுதோறும் திருக்குறள் பயிற்றுவித்து, முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் 1330 திருக்குறளையும் சொல்லத் தக்க வகையில் பயிற்சியளித்து, தமிழக அரசின் பத்தாயிரம் உருவா பரிசில் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் என்றும் அறிந்து, மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். நான் செய்யச் சென்ற பணியை ஒதுக்கிவைத்து, முதற்பணியாகத் “திருக்குறள் தொண்டர்” திருவாளர் தமிழ்க்குழவி இல்லம் சென்றேன். “களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்” என்று மழலைச் செல்வங்கள் திருக்குறளை உரக்கச் சொல்லி, மனப்பாடம் செய்தவண்ணம் இருந்தனர்.

நாங்கள் சென்ற நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழ்க்குழவியின் இல்லத்தில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தானிகளில் ஆர்வமுடன் திருக்குறள் கற்க, அழைத்துவந்து விடுவதும் திரும்ப அழைத்துச் செல்வதுமாக இருந்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் திருக்குறள் நூலினைக் கையில் வைத்தபடி, திருக்குறளைப் படித்தும், மனப்பாடம் செய்து ஒப்புவித்தவாறும் காணப்பட்டனர். அகவை முதிர்ந்தவர்கள் ஓரிருவர் அப்பிள்ளைகளுக்குத் திருக்குறளை ஆர்வத்துடன் பயிற்றுவித்துக்கொண்டும், திருத்தம் செய்துகொண்டுமிருந்தனர். நம் தமிழ்க்குழவி ஐயாவும் பிள்ளைகளுக்குப் பயிற்றுவித்தவண்ணம் அவர்களின் நடுவண் இருந்தார். அழைப்பு மணியோசை கேட்டு, வெளிவந்து எங்களை வரவேற்றார்.

திருக்குறள் பயிற்றுவிக்கும் உயரிய பணியில் ஈடுபட்டிருக்கும் தங்களுக்கு இடையூறாக வந்தமைக்குப் பொறுத்தாற்றும்படி முதற்கண் வேண்டிக்கொண்டேன். ஐயா அவர்களும் எம் வருகை நினைத்து, அமைதியாக அமர்ந்து பேசமுடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்தார். பத்து மணித்துளிகள் மட்டும் ஒதுக்கிப் பேசுமாறு கேட்டேன். அன்புடன் இசைந்தார். தம் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும், தொண்டு குறித்தும் நெஞ்சுருகிப் பேசினார். மீண்டும் சந்திப்போம் என்றவாறு விடைபெற்று, அவர் நல்கிய நூல்கள் சிலவற்றைப் பெற்றுக்கொண்டு அடுத்த பணிக்கு ஆயத்தமானேன்.

தமிழ்க்குழவியுடன் உரையாடியதிலிருந்து…

தமிழ்க்குழவியின் இயற்பெயர் ஆ. விசுவநாதன் என்பதாகும். இவரின் தந்தையார் பெயர் பெ. ஆனந்தன். குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வடலிவிளை ஊரினர். 02.02.1950 இல் பிறந்தவர். 1967 முதல் 1970 வரை தெ.தி. இந்துக் கல்லூரியில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர். கல்லூரிப் படிப்பில் முதன்மை பெற்றுத் தங்கப்பதக்கம் பெற்றவர். 1970-73 ஆம் ஆண்டுகளில் உதகை, வால்பாறை ஊர்களில் பொலைபேசி இயக்குநராகப் பணியாற்றியவர். 1974 முதல் 76 வரை ஈரோடு மாவட்டம் பவானியில் தொலைபேசி இயக்குநராகப் பணியாற்றியர். 1976 -77 இல் நாகர்கோவிலில் தொலைபேசி  இயக்குநராகப் பணி.1979 முதல் 1994 வரை கரூரில் தொலைபேசித்துறையில் பணியாற்றினார். தாம் பணிபுரிந்த ஊர்களில் இலக்கியத் தொண்டிலும், தமிழ்த்தொண்டிலும், திருக்குறள் தொண்டிலும் முனைப்புடன் ஈடுபட்டு உழைத்தார். 2010 இல் கரூர் தொலைபேசித்துறையில் துணை மண்டலப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஊர்தோறும் திருக்குறள் பூங்கா அமைத்துத், திருக்குறள் எழுதி வைத்தல், நூல் எழுதுதல், திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்துதல் இவரின் விருப்பமான பணிகள். தம் பணி ஓய்வுக்குப் பிறகு 07.11.2010 முதல் குறளகம் என்னும் பெயரில் திருக்குறள் வாழ்வியலாக்கப் பயிற்சி மையத்தை நிறுவித் திருக்குறள் தொண்டினைத் தமிழ்க்குழவி ஆற்றிவருகின்றார்.

தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, பள்ளிகளில் திருக்குறள் விழிப்புணர்ச்சி வகுப்புகளை நடத்தி, தொடர்ந்து திருக்குறள் தொண்டு செய்துவருகின்றார். வானொலி நிகழ்வுகளில் கலந்துகொண்டு திருக்குறள் குறித்த உரைகளை வழங்கிவருகின்றார். திருக்குறள் அறிஞர்களைப் போற்றுதல், திருக்குறள் நூலினை அன்பளிப்பாக வழங்குதல், எளிய குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்துவருகின்றார்.

தமிழ்க்குழவியின் திருக்குறள் தொண்டினைப் போற்றிப் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் நிறுவனங்களும் பாராட்டினையும் விருதுகளையும் வழங்கியுள்ளன. தமிழ்க்குழவி அவர்கள் திருக்குறள் பயிற்சி வகுப்புகள், திருக்குறள் சிந்தனை முற்றங்கள், திருக்குறள் மாநாடுகள், மாணவர்களுக்கான போட்டிகள் எனத் தொடர்ந்து தம் ஓய்வூதியச் சேமிப்பிலிருந்து  செலவிட்டு, நற்றமிழ்ப் பணியாற்றி வருகின்றார்.

தமிழ்க்குழவியின்  தமிழ்க்கொடை:

1.   தமிழ்க்குழவி கவிதைகள்
2.   அம்மன் அருட்பா நூறு
3.   குறள் மணம்
4.   திருவருட் பிரகாச வள்ளலார் பிள்ளைத் தமிழ்
5.   குறள்வளம்
6.   காமராசர் பிள்ளைத் தமிழ்
7.   ஜீவா பிள்ளைத் தமிழ்
8.   மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ்
9.   குறள்மண மாலை
10. பாவலர் செய்குதம்பி பிள்ளைத்தமிழ்
11. கவிமணி பிள்ளைத் தமிழ்
12. ஆண்டாள் பிள்ளைத் தமிழ்
13. வங்கமணிகள் மூவர் பிள்ளைத் தமிழ்
14. நேசமணி பிள்ளைத் தமிழ்
15. ஏசுநாதர்பிள்ளைத் தமிழ்
16. குன்றக்குடி அடிகளார் பிள்ளைத் தமிழ்
17. காரைக்கால் அம்மையார் பிள்ளைத் தமிழ்
18. சித்தார்த்தன் பிள்ளைத் தமிழ்
19. திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ்
20. பாரதி பிள்ளைத் தமிழ்


கருத்துகள் இல்லை: