நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 நவம்பர், 2019

தொல்காப்பியம் குறித்த பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களின் சிறப்புரை!


பேராசிரியர் பா. வளன் அரசு 

தமிழகத்தின் மூன்று பேராசிரியர்களை நான் அடிக்கடி நினைவுகூர்வது உண்டு. முனைவர் மு.தமிழ்க்குடிமகன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் பா. வளன் அரசு ஆகியோர் அவர்கள். தூய தமிழ் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்த பெருமக்கள். முன்னிருவர் இயற்கை எய்தினர். மூன்றாமவர் இன்றும் நெல்லைப் பகுதியில் தனித்தமிழ் பரப்பும் பல்வேறு பணிகளைச் செய்வதுடன் தமிழகத்திலும், கடல் கடந்தும் சொற்பெருக்காற்றித் தமிழ் வளர்த்து வருகின்றார். பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களைத் தொல்காப்பிய நூலினை அறிமுகம் செய்து, உரையாற்றுமாறு வேண்டினோம். குற்றால அருவிபோலும் அவர்தம் பொழிவு அமைந்தது. கடல்மடை திறந்தாற்போல் பல்வேறு செய்திகளைக் கொட்டி முழக்கினார்கள். இத்தகு பெருமைக்குரிய உரையைத் தமிழார்வலர்கள் கேட்பதுடன் கல்லூரி, பல்கலைக்கழகத்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

பேராசிரியர் பா. வளன் அரசு அவர்கள் நெல்லை, பாளையங்கோட்டையில் வாழ்ந்து வருபவர். தூய சேவியர் கல்லூரி, தூய யோவான் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றவர். வீரமாமுனிவரின் தேம்பாவணி குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மாணவர்களின் உள்ளத்துள் பதியும் வண்ணம் வகுப்புகளை நடத்துவதில் கைதேர்ந்தவர். திருக்குறள் ஈடுபாடும் தனித்தமிழ் ஈடுபாடும் நிறைந்த பெருமகனாரைத் தொல்காப்பியம் குறித்து உரையாற்றச் செய்து, உலகத் தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் வைக்கின்றோம்.

தமிழ்த்தாயின் திருவடிகளுக்கு ஓர் எளிய மாணவன் சூட்டும் அணிகலன் இக்காணொளி ஆகும். ஆவணமாக்குவதில் துணைநின்ற அனைவருக்கும் நன்றியுடையோம். எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்தும் தங்களுக்குத் தமிழ்த்தாயின் திருவருள் உரியதாகுக!

பேராசிரியர் பா. வளன் அரசு உரை கேட்க / பார்க்க இங்கு அழுத்துக!

கருத்துகள் இல்லை: