நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#செம்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#செம்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 டிசம்பர், 2019

“செம்மொழி” இதழாசிரியர் எம்.இலியாஸ் அவர்கள் நீடு வாழ்க!


எம்.இலியாஸ்
(ஆசிரியர்- செம்மொழி)

 சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் செம்மொழி இதழின் ஆசிரியரும், தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளரும், எங்களின் நெஞ்சம் நிறைந்தவருமான அண்ணன் எம். இலியாஸ் அவர்களின் பிறந்த நாளான (திசம்பர் 26) இன்றைய நாளில் அவரைப் போற்றி வாழ்த்துவதில் நெஞ்சம் நிறைவடைகின்றேன்.

 கோவை செம்மொழி மாநாட்டில் தொடங்கிய எம் நட்பு, வளர்பிறைபோல் வளர்ந்து, சிங்கப்பூர் செல்லும்பொழுதெல்லாம் கண்டு உரையாடும் குடும்பநட்பாக மலர்ந்துள்ளமை நினைத்து, மகிழ்கின்றேன்.

 எம்.இலியாஸ் அவர்கள் சிறந்த பேச்சாளர்; கட்டுரையாசிரியர்; பன்னூலாசிரியர்; அரசியல் தலைவர்களுடனும், தமிழறிஞர்களுடனும் நெருங்கிப் பழகுபவர்; இளையவர்களையும் முதியவர்களையும் ஒருசேரப் போற்றும் உயர்ந்த உள்ளத்தினர். அனைவருடனும் நல்ல தொடர்பில் இருப்பவர்.

 சிங்கப்பூர் அதிபராக விளங்கிய மாண்பமை எஸ்.ஆர். நாதன் அவர்களின் அன்பைப் பெற்றவர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்களின் உள்ளம் நிறைந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கவிக்கோ, நாகூர் ஹனிபா உள்ளிட்ட பெருமக்களின் தொடர்பைப் போற்றி மதித்தவர்.

 சிங்கப்பூர் செல்லும் தமிழ் ஆர்வலர்களுக்கு நிழல்தரும் மரமாகவும், பயன்தரும் மரமாகவும் விளங்கும் பெருந்தகையாளர்.

 திருமுல்லைவாசலைப் பிறப்பிடமாகக் கொண்ட அண்ணன் எம்.இலியாஸ் அவர்கள் தமிழகத்தையும் சிங்கப்பூரையும் இணைக்கும் தமிழ்ப்பாலமாக விளங்குபவர். இவரின் செம்மொழி இதழ்ப்பணியும், தமிழவேள் கோ.சாரங்கபாணியாரை முன்னிலைப்படுத்திச் செயல்படும் செயல்பாடுகளும், சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகளுக்குத் துணைநிற்கும் இவரின் பெரும்பண்பும் இவருக்கு நிலைத்த புகழைத் தரும். அண்ண! சுற்றமும் நட்பும் சூழ, நீடு வாழி!



திங்கள், 25 பிப்ரவரி, 2013

பேராசிரியர் க. இராமசாமி அவர்கள்



                                            பேராசிரியர் க. இராமசாமி அவர்கள்

செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக விளங்கும் முனைவர் க. இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 10.10.09.1948 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் கந்தசாமி- வள்ளியம்மாள் ஆவர். தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் அவர்கள் வழியாகத் தமிழ் உணர்வுபெற்ற முனைவர் க. இராமசாமி அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக இளம் அறிவியலில் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆய்வு செய்து மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம், இந்தி, வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (CIIL) துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில் பாடுபட்டுள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் நல்ல ஈடுபாடுகொண்ட பேராசிரியர் க. இராமசாமி அவர்கள் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் “புரட்சி செய்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் வாச்பாய் அவர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.

இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன் பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர். 

முனைவர் க. இராமசாமி அவர்களின் முயற்சியில் தொல்காப்பியம் முற்றோதல், பத்துப்பாட்டு முற்றோதல், பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழியில் படித்தல் உள்ளிட்ட குறுவட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. செம்மொழி விருது வழங்கல், ஆய்வுத்திட்டங்களுக்கு நிதிநல்கை, நூலக உருவாக்கம், ஆய்வறிஞர்கள் பணியமர்த்தம், கருத்தரங்குகள் தமிழகமெங்கும் நடத்த ஆவன செய்தமை என்று பல பணிகள் நடைபெற்றன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள் பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க. இராமசாமி அவர்களுக்கு உண்டு.