நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 1 டிசம்பர், 2007

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் வரவேற்பு

மலேசியாவிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் 34 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குச் சுற்றுச் செலவாக வந்துள்ளனர். பல்வேறு கல்வி நிறுவனங்கள், தமிழ் எழுத்தாளர்களைச் சந்தித்து மலேசியத்தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்வது இவர்களின் வருகையின் நோக்கமாகும். தமிழக அரசு இவ்வருகையை ஊக்குவிக்கும் முகமாகப் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. 

மலேசிய எழுத்தாளர்குழு நேற்று (30.11.2007) வெள்ளிக்கிழமை புதுச்சேரி வந்தது. புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய எழுத்தாளர்கள் தங்கள் இலக்கிய நிலைகளைப் பகிர்ந்த்துகொண்டனர். புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார். 

புதுவை அறிஞர்கள், எழுத்தாளர்கள், கல்விப் புலத்தைச் சார்ந்தவர்கள், பல்வேறு கலை, இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். புலவர் சீனு. இராமச்சந்திரன், கல்வி வள்ளல் வி. முத்து, ஆதவன் உள்ளிட்ட தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்களும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தினரும் விழாவைச் சிறப்புடன் நடத்தினர்.

 இருநாட்டு எழுத்தாளர்களும் அறிமுகமாகித் தங்கள் படைப்புகள், எழுத்துப் பணிகளைப் பரிமாறிக்கொண்டனர். 01.12.2007 இன்று புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறையில் மலேசியத்தமிழ் இலக்கியங்கள் குறித்த கருத்தரங்கில் எழுத்தாளர்கள் கட்டுரை படிக்கின்றனர். பேராசிரியர் சபாபதி, கார்த்திகேசு, முரசு.நெடுமாறன். இராசேந்திரன், புண்ணியவான் உள்ளிட்ட எழுத்தாளர்கள் வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: