நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 4 மே, 2016

புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தில் பேராசிரியர் ப. அருளியின் ஆய்வுரை!


பேராசிரியர் ப. அருளி அவர்களின் ஆய்வுரை

உலகத் தொல்காப்பிய   மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியம் குறித்த ஐந்தாம் தொடர்பொழிவு, புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் உள்ள செகா கலைக்கூடத்தில் 04.05.2016 அறிவன்(புதன்)கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியர் சொல்லாய்வறிஞர் ப. அருளி அவர்கள் கலந்துகொண்டு, தொல்காப்பியம் உரியியல் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பியர் சொற்களைப் பற்றிச் சிந்தித்துள்ள உரியியல் பகுதிகளை அழகுற விளக்கினார்.

99 நூற்பாக்களில் அமைந்த தொல்காப்பிய உரியியலில் 120 சொற்களுக்கு உரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட பேராசிரியர் ப. அருளி அவர்கள் புரை என்ற ஒரு சொல்லை மட்டும் சற்றொப்ப ஒருமணிநேரம் விளக்கியுரையாற்றினார். எஞ்சிய 119 சொற்களும் இன்னும் பல மணிநேரம் உரையாற்றும் சிறப்பிற்குரியன என்று எடுத்துரைத்தார். அறிஞர்கள் முன்னிலையில் அமைந்த இந்த உரையில் தமிழ்ச்சொற்கள் பிறமொழிகளில் எவ்வாறு வழங்குகின்றன என்பதையும் சான்றுகளுடன் எடுத்துக்காட்டினார்.

முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்ற, முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையாற்றினார். பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரான்சிலிருந்து வருகைதந்த கவிஞர் கி. பாரதிதாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அறிவியல் அறிஞர் தாமரைக்கோ நன்றியுரை வழங்கினார்.

பேராசிரியர் ப. அருளி அவர்களின் துணைவியாரும், தென்மொழி இதழாசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா அவர்களின் மகளாரும், தழல் இதழாசிரியருமான திருவாட்டி தா.பெ.அ. தேன்மொழி அவர்களின் பிறந்த நாள் இன்று என்பதை அறிந்த தமிழறிஞர்கள் நிகழ்ச்சியின் நிறைவில் அவருக்கு வாழ்த்துரைத்து, நினைவுப் பரிசில்களை வழங்கினர்.

புதுச்சேரியில் வாழும் தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

ஆய்வுரை கேட்க இங்கே அழுத்துங்கள்



சொல்லாய்வறிஞர் ப.அருளி அவர்களின் சொல்லாய்வுரை



பேராசிரியர் ப. அருளி அவர்களுக்கு நூல்பரிசு வழங்கும் கவிஞர் கி.பாரதிதாசன்


தழல் ஆசிரியர் தா.பெ.அ. தேன்மொழி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துரைக்கும் அறிஞர்கள்


பார்வையாளர்கள் வரிசையில் மூத்த தமிழறிஞர்கள்

கருத்துகள் இல்லை: