நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 21 ஜனவரி, 2013

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முப்பெரும் சிறப்புப்பொழிவுகள்




சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் முனைவர் அரங்க. இராமலிங்கம் அவர்கள் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் புலமையும்கொண்ட பேராசிரியர் அவர்கள் நாடறிந்த நல்ல சொற்பொழிவாளர். பக்திப் பனுவல்களின் மேன்மையையும், தமிழ் இலக்கியச் சிறப்பையும் தமிழ்நாட்டிலும் கடல்கடந்த நாடுகளிலும் தம் நாவன்மையால் வெளிப்படுத்தி வருபவர். அன்னாரின் முயற்சியால் திங்கள்தோறும் சங்கத்தமிழ், திங்கள்தோறும் தெய்வத்தமிழ், திங்கள்தோறும் இலக்கணத் தமிழ் என்ற சிறப்புப்பொழிவுகள் நடைபெற உள்ளன. இந்தத் திங்களுக்கான பொழிவுகளை முனைவர் அ. அ. மணவாளன், முனைவர் தி. இராசகோபாலன், முனைவர் க. ப. அறவாணன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.

இந்த மாதப்பொழிவுகள் 2013 சனவரி 22, 23, 24 ஆகிய மூன்று நாள்களும் மாலை 4 மணிமுதல் 5.30 மணிவரை சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகின்றன.

தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு அன்னைப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்தப் பொழிவுகள் ஆய்வுமாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். அறிஞர்களின் பேச்சுகள் காற்றில் கரைந்துபோகாமல் ஒலி - ஒளிப்பதிவாக்கி  இணையத்தில் நிலைபெறச்செய்தால் உலகின் பலபகுதிகளில் வாழும் தமிழர்கள் கேட்கமுடியும்.

இத்தகு அரிய வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ள பேராசிரியர் அரங்க. இராமலிங்கனார் அவர்களுக்குத் தமிழுலகம் நன்றிகூரக் கடமைப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: