நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 19 ஜூன், 2009

கன்னியாகுமரி மாவட்ட வலைப்பதிவு,எழுத்தாளர் நண்பர்களுக்கு...


மாண்புமிகு கலைஞர் அவர்களால் குமரி முனையில் எடுக்கப்பெற்றுள்ள திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோயில்,சுங்கான் கடை, மானிங் ஸ்டார் பல்தொழில் நுட்பக்கல்லூரியில்(பாலிடெக்னிக்) 20.06.2009 சனி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை தமிழ் இணையப்பயிலரங்கம் நடக்கிறது.திரு.பிரிட்டோ,திரு.செல்வதரன் உள்ளிட்ட நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து இந்தப் பயிலரங்கை ஒரிசா பாலசுப்பிரமணி(B+) அவர்கள் ஒருங்கிணைத்துள்ளார்.

வழக்கம் போல் பல்வேறு தடைகளைக் கடந்து நல்ல உள்ளங்களின் மேலான ஒத்துழைப்பால் இந்தப் பயிலரங்கம் வெற்றியுடன் நடைபெற உள்ளது.உங்கள் அனைவரின் வாழ்த்துதலையும் ஒத்துழைப்பையும் கோருகிறேன்.

கன்னியாகுமரி,நாகர்கோயில்,திருவனந்தபுரம்,திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வலைப்பதிவு நண்பர்களும், எழுத்தாளர்களும்,தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு புதியவர்களுக்கு உதவலாம்.பயிற்சியில் மின்னஞ்சல்,உரையாடல் பற்றி விளக்கும் பொழுது இணைப்பில் உள்ளவர்கள் வந்து பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துரைக்கலாம்.

தரமான பயிற்சி வழங்கப்படுவதால் சில விதிமுறைகள் வகுத்து நிகழ்ச்சியை அமைத்துள்ளோம்.நிறை குறைகள் சுட்டிக்காட்டப்பட்டால் அடுத்த நிகழ்வில் அவற்றைச் சரிசெய்துகொள்வோம்.

புதுவையிலிருந்து நானும் சேலத்திலிருந்து திரு.செல்வமுரளி,விசய இலட்சுமணனும் கலந்துகொள்கிறோம் ஒரிசா பாலசுப்பிரமணியும் வந்துள்ளார்.அனைவரும் இணைந்து பயிற்சியளிக்க உள்ளோம்.தமிழ்த்தட்டச்சு,தமிழ் 99 விசைப்பலகை,மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம்,வலைப்பூ உருவாக்கம்,இணைய இதழ்கள்,வலைத்தளப் பாதுகாப்பு,தமிழ் விக்கிபீடியா,நூலகம் திட்டம்,மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை உள்ளிட்ட இணையம் சார்ந்த செய்திகள் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட உள்ளன.

உணவு,சிற்றுண்டி வழங்கப்படும்.முன்னமே பதிவுசெய்து கொண்டுள்ள நண்பர்கள் உரிய நேரத்தில் வந்து பங்குகொள்ள,பயன்பெற அழைக்கிறேன்.

கிழக்குப் பதிப்பக உரிமையாளர் நண்பர் திரு.பத்ரி அவர்கள் தம் நிறுவனம் சார்பில் வழங்கியுள்ள NHM எழுதியை இருப்பில் உள்ளவற்றைச் சிலருக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்.

பொள்ளாச்சி கவிஞர் சிற்பி ஐயா அவர்களும் பேராசிரியர் கி.நாச்சிமுத்து ஐயாவும்(சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,புது தில்லி),நா.கணேசன்(நாசா விண்வெளி ஆய்வுமையம்),திரு.கல்யாணசுந்தரம்(மதுரைத் திட்டம்,சுவிசர்லாந்து),பேராசிரியர் சி.இ.மறைமலை,முனைவர் பொற்கோ,தகடூர் கோபி,முகுந்து ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

சங்கமம்லைவ்,தட்சுதமிழ் உள்ளிட்ட இணைய இதழ் ஆசிரியர்கள் தங்கள் தளங்களில் இச்செய்தியை வெளியிட்டனர்.செய்தி இதழ்கள்,ஊடகங்கள் இந் நிகழ்வு பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளன.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.நாளை கன்னியாகுமரி-நாகர்கோயிலிலிருந்து எழுதுவேன்.நிகழ்ச்சி பற்றிய படங்களை,பேச்சு விவரங்களை வழங்குவேன்.

தொடர்புக்கு :
9994352587
9790307202
9865894576

1 கருத்து:

ஜோ/Joe சொன்னது…

வாழ்த்துகள்!