30.10.1960 ஞாயிறு இரவு, நெல்லைச் சந்திப்பு இசைமன்றத்தில்(சங்கீத சபாவில்) தமிழ்நாட்டு நல்வழி நிலையம் சார்பில் பொதிகைத் தமிழ் மாணவர் மன்றம் மூன்றாம் ஆண்டு விழாவும், தொல்காப்பியர் விழாவும் நடைபெற்றுள்ளது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளில் நெல்லை, வண்ணார்பேட்டை இராசானந்தம் என்ற அன்பர் முன்னின்று உழைத்துள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றது. நெல்லை இராசானந்தம் தமிழ்நாட்டு நல்வழி நிலையம், பொதிகைத் தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்புகளின் தலைவராக விளங்கியவர். இவர் தொல்காப்பியர் விழாவினை நெல்லைப் பகுதியில் நடத்துவதற்கு ஆர்வமுடன் உழைத்தவர். பல மாதங்களாக விழா நடத்துவதற்கு முனைந்தும் யாது காரணமாகவோ குறிப்பிட்ட நாள்களில் விழா நடத்தமுடியாமல் 30.10.1960 இல் விழா நடத்தப்பட்டுள்ளதை இரா. சண்முகம் அவர்களின் தொல்காப்பியரின் தொன்மைத் தமிழ் நெறி நூலின் முன்னுரையால் அறியமுடிகின்றது.
ஆயின், நெல்லை.இரா. சண்முகம் அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூரில் வாழ்ந்தபொழுது 1950 – களில் கோலாலம்பூரில் தொல்காப்பியர் விழா நடத்துவது குறித்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். கோலாலம்பூரில் வாழ்ந்த தமிழார்வலர்கள், தமிழறிஞர்களிடம் ஆதரவு திரட்டியுள்ளார். ஆனாலும் அவர்தம் கனவு அந்த நாளில் நிறைவேறவில்லை. 30.10.1960 இல் நெல்லையில் நடைபெற்ற தொல்காப்பியர் விழாவில் நெல்லை இரா. சண்முகம் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்பினைக் குறித்து உரையாற்றியுள்ளார். தம் உரையை நூலாகவும் பின்னாளில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை இந்துக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் எஸ். கணபதி முதலியார் எம்.ஏ.எல்.டி. அவர்கள் தொல்காப்பியம் குறித்து ஒருமணி நேரம் உரையாற்றியுள்ளார் என்ற செய்தியையும் அறியமுடிகின்றது. இவரைத் தொடர்ந்து குலசேகரன்பட்டினம் வீரசிவம் அவர்களும் திருச்சி வீ. வீரம்மாள் அவர்களும் உரையாற்றிய குறிப்புகள் உள்ளன.
இன்று நடைபெறும் தொல்காப்பியப்
பரவல் முயற்சிகளுக்கு முன்னோடியாக நெல்லை, வண்ணார்பேட்டை இராசானந்தம்
விளங்கியுள்ளார் என்பது தெரியவருகின்றது. கல்விப்புலங்களிலிருந்து
தொல்காப்பியத்தை மக்கள் மன்றத்துக்குக் கொண்டுவருவதற்கு
இப்பெரியார் உழைத்துள்ளார் என்பதை அறியமுடிகின்றது. நெல்லை
வண்ணார்பேட்டை இராசானந்தம் ஐயாவைப் பற்றிய கூடுதல்
விவரம் அறிந்தோர் தங்களுக்குத் தெரிந்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு: muetamil@gmail.com / +91
9442029053
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக