[பேராசிரியர் வே. கட்டளை கைலாசம் நெல்லை ம. தி. தா. இந்துக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, பதிப்பித்தவர். கழி(ளி)யலாட்டம் குறித்து முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டவர். நெல்லை மாவட்ட இலக்கிய அறிஞர்கள் குறித்து ஆராய்ந்து வருபவர். சைவ இலக்கியங்களில் ஈடுபாடுகொண்டவர்.]
பேராசிரியர் வே. கட்டளை கைலாசம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், சிங்கிகுளம் என்னும் சிற்றூரில் சு. கட்டளை வேலாயுதம் பிள்ளை, மகாமாயியம்மாள் ஆகியோரின் நான்காவது மகனாக 12.04.1956 இல் பிறந்தவர். இவரது முன்னோர்கள் சிங்கிகுளம் கைலாசநாதர் கோவிலுக்கு அறக்கட்டளை நிறுவி, நாள் பூசையையும், சிறப்பு நாட்களுக்கான விழாக்களையும் நடத்தி வந்தனர். எனவே, இக்குடும்பத்தாருக்குக் ‘கட்டளை” என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
கட்டளை கைலாசம் தனது தொடக்கப் பள்ளிப் படிப்பைச் சிங்கிகுளம் ‘கைலாசபதி நடுநிலைப் பள்ளியில் தொடங்கியவர். உயர்நிலைப் பள்ளிக்கல்வியைப் பத்தமடை இராம சேசு ஐயர் பள்ளியிலும், பதினொன்றாம் வகுப்புப் படிப்பைக் (SSLC) கரிசல் சி.எம்.எஸ். பள்ளியிலும் பயின்றவர். 1972 இல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூாயில் புகுமுக வகுப்பில் சேர்ந்தவர். அங்கு இளநிலை வேதியியல் (B.Sc. Chemistry) முடித்து, முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார் (M.A.,). பின்னர் தூய சவேரியார் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியப் பயிற்சி (B.Ed.,) பெற்றார்.
1983 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் (அஞ்சல் வழி) முதுகலைப் பொருளாதாரப் பட்டம் (M.A., (Eco.) பெற்றவர். ம.தி.தா இந்துக் கல்லூரியில் பகுதி நேர இளம் ஆய்வாளர் பட்டப்படிப்பில் (M.Phil.,) சேர்ந்து 1986-இல் நிறைவு செய்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேரா. முனைவர். நெல்லை. ந. சொக்கலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் 1993 இல் முனைவர் பட்டம் பெற்றார். 2010 இல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொலைநிலை தொடர் கல்வி வாயிலாக முதுநிலை யோகா (M.Sc., (YHE) பட்டமும் பெற்றவர். ‘சைவ சித்தாந்த இரத்தினம்” பயிற்சியைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றுள்ளார்.
ஆசிரியப் பணி்:
1979 இல் புதுச்சேரி (புதுவை) பெத்செமினெரி மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தவர். அங்கு ஓராண்டுக் காலம் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்ட முதுநிலைக் கல்விப் பட்டத்தில் (M.Ed.,) சேர்ந்து பட்டம் பெற்றார். 1980 இல் தூத்துக்குடி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1981 முதல் 1985 வரை திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப் பள்ளியிலும், 1985 முதல் 1996 வரை முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியிலும், மேனிலைப் பள்ளித் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
03.04.1996 இல் திருநெல்வேலி, மதுரைத் திரவியம் தாயுமானவர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார். சூன் 2009 முதல் மே 2013 வரை ம.தி.தா. இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி, பணிநிறைவுப் பெற்றார். 33 ஆண்டுகளாகத் தமிழாசிரியப் பணியை மேற்கொண்டவர். இவர் 40 ஆண்டுகளாக ஓலைச் சுவடி ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டவர்.
இல்வாழ்க்கை:
முனைவர் கட்டளை கைலாசம் 26.10.1983 இல் மல்லிகாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மருத்துவர் வசந்த் என்னும் மகன் உள்ளார். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
ஆய்வுப் பணி் :
1. இளம் நிலை ஆய்வு (M.Phil.) - ‘இசக்கியம்மன் வழிபாடு (சிங்கிகுளம் வட்டாரம்)” (1986)
2. முனைவர் பட்ட ஆய்வு (Ph.d) - கழி(ளி)யலாட்டம் ஓர் ஆய்வு” (1993)
ஆய்வுத் திட்டங்கள்
1. ‘அரவான் வழிபாடு” (1994)
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அஃப் கில்டபைட்டலுடன் ((Prof. Alf
Hiltebeital) இணைந்து ஆய்வு மேற்கொண்டு கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.
2. ‘தமிழகத் தென்மாவட்ட நாட்டார் (கருநாடகம்) நாடகம்” 2006 முதல் 2008 வரை, பல்கலைக் கழக மானியக் குழுவின் (UGC) நிதி உதவியுடன் சிற்றாய்வுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
3. தேசிய சுவடி இயக்கம் (NMM) மற்றும் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் இணைந்து நடத்திய சுவடிக் கணக்கெடுப்பின் 2006 ஆம் ஆண்டு தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு ஓலைச்சுவடிகள் வைத்திருப்போரின் முகவரிகள் இவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. ‘சித்தர் தத்துவமும் வேதாந்திரியமும்” என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆய்வு நெறியாளர்
முனைவர் கட்டளை கைலாசம் அவர்களின் மேற்பார்வையில் இளம் ஆய்வாளர் (M.Phil.) - 60 பேர் பட்டம்பெற்றுள்ளனர். மேலும் இவரின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றோர் - 12 பேர் ஆவர்.
வெளியிட்ட நூல்கள்:
1. இந்திய மொழிகளும் இலக்கியங்களும் (2002)
2. இய(ச)க்கியம்மன் (2006)
3. கழியல் ஆட்டம் நிகழ்த்துக்கலை (2009)
4. சித்தர் தத்துவமும் வேதாந்திரியமும் (2016)
5. சுவடிகளின் சுவடுகள் (2017)
6. ஏடும் எழுத்தும் (2018)
7. தாமிரவருணித் தமிழ் வனம் (2021)
8. தமிழ் மரபில் கிஸ்தவம் (2023)
9. உ.வே.சா. நெல்லையில் கண்டதும் காணாததும் (2024)
அரிய ஓலைச்சுவடிகள் பதிப்பு
1. அவேசு நாடகம்
2. அர்சிய சிஷ்ட ஞானப்பிரகாசியார்
3. கனிகூர்ந்தம்மாள் நாடகம்
4. முருகர் ஒயில்க்கும்மி
5. செட்டியாபத்து அஞ்சுவீட்டுசாமி கும்மிப்பாடல்
6. செட்டியாபத்து அஞ்சுவீட்டுசாமி திருமணிக்கும்மி
7. வள்ளியம்மை கலியாண வாழ்த்து
8. நாடார் இனத் திருமண வாழ்த்து
9. விடுகதை பாட்டும் உரையும்
10. வினோத கதை
இவர் எழுபதிற்கும் (70) மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
பதிப்புப் பணி்
1. ‘ஆய்வுச் சிந்தனை”- ஆய்வாளர்களின் கட்டுரைகள் அடங்கிய (2006, 2007, 2008, 2009, 2010)
2. புதுமைப்பித்தன் நூற்றாண்டு மலர் (2006)
3. வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் 150வது ஆண்டு மலர் (2008)
4. கோம்பி விருத்தம் (மறுபதிப்பு) (2008)
5. அண்ணா நூற்றாண்டு ஆய்வு மலர் (2010)
6. மடல்அவிழ் சைவம் (2018)
7. மனுநெறித் திருநூல் ரூ ஆங்கிலியர் அந்தாதி (2018)
8. ச.வே.சு.வின் படைப்புலகம் தொகுதி - 2 (2012)
சிறப்பு விருதுகள்
1. பைந்தமிழ்த் தொண்டர் - சைவ சமய மாநாடு 2018
பாளையங்கோட்டை சைவ சபை
2. தருமை ஆதீனப்புலவர், (ஓலைச்சுவடித் துறை)
மற்றும் பொற்பதக்கம் - தருமை ஆதீனம் 14.11.2024
3. செந்தமிழ் வளர் செம்மல் - பாரதியார் உலகப் பொதுச்சேவை
நிதியம், திருநெல்வேலி 20.02.2025
40 ஆண்டுகளாக ஓலைச்சுவடிகளைத் தேடுதல், அதனைப் பாதுகாத்து அச்சேற்றுதல், கணினியில் பதிவு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு இயங்கி வருகிறார். இவர் போலும் அறிஞர்களைப் போற்றுவது தமிழர் கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக