நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 20 ஜூன், 2025

பேராசிரியர் சீனிவாச கண்ணன்

 

முனைவர் சீனிவாச கண்ணன்


[பேராசிரியர் சீனிவாச கண்ணன் விருதுநகர் மாவட்டம் விழுப்பனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். சென்னையில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேராசிரியர்; ஆண்டாள், பெரியாழ்வார் பாசுரங்கள்: சமூக, சமயப் பண்பாட்டு ஆய்வு என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். விசாகப்பட்டினம் என்னும் பெயர் தமிழ்க் கல்வெட்டில் குலோத்துங்கசோழப்பட்டணம் என்று அழைக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுச் சான்றுகளின் துணையுடன் எழுதியும் பேசியும் வருபவர்; பன்னூலாசிரியர்] 

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் அவர்களின் நூல்களைத் தேடி, சில அயல்நாட்டு நூலகங்களுக்கு அண்மையில் சென்றிருந்தேன். கோடை விடுமுறைக் காலம் இதற்கு வாய்ப்பாக இருந்தது.  பணிநாளில் நாளும் கல்லூரி செல்லும் நான் விடுமுறைக் காலங்களில் வாய்ப்புக்கு ஏற்பவே  அலுவலகம் செல்ல இயலும். மற்ற நேரங்களில் இல்லிருந்து ஆய்வுப்பணிகளில் மூழ்கிக் கிடப்பதும் வழக்கம். 

12.05.2025 நாளிட்டு ஒரு விரைவு அஞ்சல் என் அலுவலக முகவரிக்கு வந்திருந்ததைச் சில நாள் கழித்தே பார்க்க முடிந்தது. பேராசிரியர் சீனிவாச கண்ணன் அவர்கள் சென்னையிலிருந்து எழுதியிருந்தார்கள். மடல் செய்தி கண்ணில்பட்டவுடன் அந்த மடலின் முதன்மை கருதி, உடன் தொலைபேசியில் பேராசிரியர் அவர்களைத் தொடர்புகொண்டு, தங்கள் மடலைப் பார்ப்பதில் காலம் தாழ்ந்தமைக்குப் பொறுத்தருளும்படி வேண்டிக்கொண்டேன். இரவு நேரத்தில் ஓய்வில் பேசுவதாகச் சொல்லி இணைப்பிலிருந்து விடுபட்டேன். அந்த அரிய மடலை மீண்டும் மீண்டும் படித்தேன். 

மடலின் உள்ளடக்கம் இதுதான்: 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் அவர்கள் தம் அருமைப் புதல்வரைப் பார்க்க, விசாகப்பட்டினம் சென்றதாகவும், அங்குள்ள காட்சியகத்தில் தமிழ்க் கல்வெட்டு ஒன்றைக் கண்டதாகவும், அக்கல்வெட்டுச் செய்தியில் விசாகப்பட்டினம் என்னும் பெயரைக் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகாரத் தொண்டைமான் குலோத்துங்க (குலொத்துங்க) சோழபட்டணம் என்று மாற்றினான் எனவும், இக்கல்வெட்டு இன்றும் விசாகப்பட்டினத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இச்செய்தி கலிங்கத்துப்பரணியிலும் பிற வரலாற்றுப் பக்கங்களிலும் இடம்பெறவில்லை எனவும் மடலில் எழுதப்பட்டிருந்தது. மேலும் இச்செய்தியைத் தினமணி நாளிதழின் இணைப்பு இதழ்களில் தம்மால் கட்டுரையாக எழுதப்பட்டுள்ளதையும் தெரிவித்ததுடன், உரிய கல்வெட்டையும் படமாக எனக்கு அனுப்பியிருந்தார். பேராசிரியர் சீனிவாச கண்ணனின் தமிழ்ப்பற்றையும், ஆய்வு ஆர்வத்தையும் மடலில் கண்டு மகிழ்ந்தேன். 

இச்செய்தியை வேறுவகையில் குறிப்பிட்டு, அறிஞர் கே.பி. கிருட்டினன் என்பார் தமிழ்ப்பொழில் இதழில் 1964, மார்ச்சு, ஏப்பிரல் இதழில் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. அக்கட்டுரையில், 

“பந்தலாயினிக் கொல்லத்தைச் சேர்ந்த கண்டன் சந்திரைய செட்டியார் என்பவர் சக வருஷம் 1172 ஆம் ஆண்டு அதாவது வீர நரசிங்க தேவனின் 15 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி 1250-51) குலோத்துங்க சோழபட்டினம் என்ற மறுபெயர்கொண்ட விசாகப்பட்டினத்தில் கருமாணிக்காழ்வாருக்கு ஒரு சனிவார மண்டபம் கட்டுவித்த செய்தியைத் தமிழில் தெரிவிக்கிறது” (பக்கம் 325, தமிழ்ப்பொழில், 1964, மார்ச்சு, ஏப்பிரல்) 

என்று ஒரு செய்தி பதிவாகியுள்ளது. 

மேற்கண்ட தமிழ்ப்பொழில் செய்திக்கு அரண்சேர்க்கும் வகையில் நம் பேராசிரியர் சீனிவாச கண்ணன் அனுப்பியிருந்த கல்வெட்டுச் செய்திகளும் படங்களும் எனக்குப் புதிய வெளிச்சங்களையும் நம்பகத் தன்மையையும் தந்தன. சீனிவாச கண்ணன் இக்கல்வெட்டுச் செய்தியை ஒட்டித் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரிய கட்டுரைகளை எழுதியுள்ளமை இவர்தம் ஆய்வு ஆர்வத்தைக் காட்டியது. 

விசாகப்பட்டினத்தில் உள்ள அக்கல்வெட்டுச் செய்தி இது: 

ஸ்வஸ்திஸ்ரீ ஸகரையண்டு ஆயிரத்

தொருநூற்றெழுபத்திரண்டாவதில் வீரனார

சிங்கதெவற்கி யாண்டு யரு வதில் பந்தலாயிநி

க்கொல்லத்து கண்டந் சந்திரைய செட்டியார் தர்மம்

விஸாகப்பட்டினமாந குலொத்துங்க சோழப்பட்டிணத்தில் கருமா

ணிக்க ஆழ்வாற்கு சநிவாரமண்டபம் கட்டுவிச்சார் சந்திரசெட்டியார்”


 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் எடுத்துக்காட்டும் மேற்கண்ட கல்வெட்டுச் செய்தி முதன்மையானது ஆகும். தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான கலிங்கத்துப் பரணி இலக்கிய நயத்தால் நம் உள்ளம் ஈர்க்கும் நூலாகும். அரிய வரலாற்றுக் குறிப்புகளும் அந்த நூலில் உள்ளன. ஆனால் குலோத்துங்கசோழனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் விசாகப்பட்டினத்தைக் குலோத்துங்கசோழபட்டணம் என மாற்றிய குறிப்பு இந்நூலில் இடம்பெறவில்லை என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளமை போற்றத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இச்செய்தியை முனைவர் கண்ணன் பல்வேறு அரங்குகளிலும் ஆய்வு இதழ்களிலும் வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வருவது மகிழ்ச்சிக்கு உரியது. 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

பேராசிரியர் சீனிவாச கண்ணன் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் வட்டம், விழுப்பனூர் என்னும் சிற்றூரில் 10.12.1947 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் சீனிவாசன் - இலக்குமி என்பனவாகும். கண்ணன் அவர்கள் தொடக்க, உயர்நிலைப் படிப்புகளை வத்திராயிருப்பு என்னும் ஊரில் பயின்றவர்.  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் இளம் அறிவியல் - விலங்கியல் பயின்றவர். மேலும் கல்வியியல் படிப்பும் அக்கல்லூரியில் இவருக்கு வாய்த்தது. பேராசிரியர் கண்ணன் முதுகலைத் தமிழ் இலக்கியத்தைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் முனைவர் பட்ட ஆய்வை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் க.த. திருநாவுக்கரசு அவர்களின் நெறியாள்கையிலும் செய்தவர். இவரின் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு: ஆண்டாள், பெரியாழ்வார் பாசுரங்கள்: சமூக, சமயப் பண்பாட்டு ஆய்வு என்பதாகும். 

1974 ஆம் ஆண்டு முதல் சென்னைத் துரைப்பாக்கம் தன்ராஜ் பெயித் ஜெயின் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 2006 ஆம் ஆண்டு பணிநிறைவு பெற்றவர். 2006 முதல் 2007 வரை மதுரவாயல், தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியும், 2007 முதல் 2017 வரை சுயநிதிக் கல்லூரிகளில் தமிழ்ப்பணியாற்றியும் தமிழ்த்தொண்டு செய்தவர். 

சென்னைத் தொலைக்காட்சியில்(பொதிகை) தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் சென்னை அகில இந்திய வானொலியில் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகவும் நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதிவரும் எழுத்தாளராகவும் விளங்குபவர். 

ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து நல்ல ஆய்வேடுகள் உருவாவதற்குத் துணைநின்றவர். 

பேராசிரியர் சீ. கண்ணன் அவர்களுக்கு 1977 இல் திருமணம் நடைபெற்றது. இவர்தம் துணைவியார் பெயர் விசயலெட்சுமி என்பதாகும். இல்லறப் பயனாய் இவர்களுக்குக் கவிதா, விஜய் கிருஷ்ணா என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

முனைவர் சீ. கண்ணன் எழுதிய வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை (உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு), ஆழ்வார்கள் ஆராதித்த வள்ளுவம் முதலிய நூல்களின் ஆசிரியாகவும் விளங்குபவர். அகவை முதிர்ந்த நிலையிலும் சென்னையில் இருந்தபடி, வைணவ இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டும், பிற தமிழாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டும் தமிழ்த்தொண்டாற்றி வருகின்றார்.






கருத்துகள் இல்லை: