நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 27 ஜூன், 2025

பேராசிரியர் ச. கணபதி முதலியார்

 

பேராசிரியர் . கணபதி முதலியார் 

[ச.கணபதி முதலியார் திருநெல்வேலி ம. தி. தா. இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் வல்லவர். தொல்காப்பியத்தில் நல்ல புலமையுடையவர். The Story of the Eye – Devotee, இலக்கியச் சிந்தனை முதலிய நூல்களின் ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.] 

பேராசிரியர்  . கணபதி முதலியார் திருநெல்வேலியில் பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் சங்கரலிங்கம் என்பதாகும். திருநெல்வேலி சாஃப்டர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றவர். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இளங்கலை (B.A.) வரலாற்றுப் பாடம் பயின்றவர். சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி (L.T.) முடித்தவர். தனித்தேர்வராக முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். 

ச. கணபதி முதலியார் சேலம் நகராட்சிப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். விழுப்புரம் அரசுப் பள்ளியில் சிறிது காலம் பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டு,  திருநெல்வேலி ம. தி. தா. இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறையில் துணை விரிவுரையாளராகப் பணியை ஏற்றார். கல்லூரியில் விரிவுரையாளராகவே பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

ச. கணபதி முதலியார் அவர்களின் துணைவியார் பெயர் சீதாலெட்சுமி என்பதாகும். இவர்களுக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.

1. குக நமசிவாயம் 2.சங்கர நமசிவாயம், 3. மெய்கண்ட சிவம்,  4.நமசிவாய பெருமாள் 5. மீனாட்சி, 6. அகிலாண்டம்.

 இவரது மகன் திரு. குக நமசிவாயம் பாளையங்கோட்டையில் உள்ளார். இவர் அகில இந்திய வானொலி நிலையத்தில் நூலகராகப் பணியில் சேர்ந்து, பல்வேறு பொறுப்புகளை வகித்து ஓய்வுபெற்றவர். 

ச. கணபதி முதலியார் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அவ்வகையில்,

1. நான் கலந்து பாடுங்கால்

2. சிறுகதை விளக்கம்

3. கையறுநிலைச் செய்யுள்

4. மணிமேகலை

5. இலக்கியச் சிந்தனை (கட்டுரைத் தொகுப்பு) 

6. The Story of the Eye - Devotee

7. அருட்பா

8. பழமொழி

முதலிய நூல்களும் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

பேராசிரியர் ச. கணபதி முதலியார் அவர்கள் செந்தமிழ்ச் செல்வி இதழில் 17 கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை: 

1. வள்ளுவர் குறள் நடை, இதழ் 3, - 1957

2. கம்பர் காப்பிய நடை, இதழ் 5,6,7, - 1957

3. சேக்கிழார் புராண நடை, இதழ்  10,11,12,1,2,3 - 1957,1958

4. சங்ககாலச் செய்யுள் நடை, இதழ் 2, 3, 4, 5, 6, 8. - 1962 

30.10.1960 ஞாயிற்றுக்கிழமை, நெல்லை,சந்திப்பு இசைமன்றத்தில் நடைபெற்ற தொல்காப்பியர் விழாவில் இந்துக்கல்லூரியின் பேராசிரியர் எஸ். கணபதி முதலியார் எம்.ஏ., எல்.டி. அவர்கள் தொல்காப்பியம் குறித்து ஒருமணி நேரம் உரையாற்றியுள்ளார் என்ற செய்தியைத் நெல்லை இரா. சண்முகம் தொல்காப்பியரின் தொன்மைத் தமிழ் நெறி என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  தொல்காப்பியத்தின் சாரமான செய்திகளை இவர் எடுத்துரைத்துப் பேசியுள்ளார் என்பதையும் அறியமுடிகின்றது. 

கணபதி முதலியார் அவர்களின் நூல்கள் செம்பதிப்புகளாக வெளிவருதல் வேண்டும். இதுவரை நூலுருவம் பெறாத கட்டுரைகள் நூல்வடிவம் பெறவேண்டும் என்பது தமிழார்வலர்களின் எதிர்பார்ப்பாகும். 

பேராசிரியர் ச. கணபதி முதலியார் தம் தமிழ்ப் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு முதல் மாதம் ஓய்வு ஊதியம் 25 உருவா பெறுவதற்குத் தகுதி பெற்றிருந்தார். ஆயின் முதல் மாதம் ஓய்வு ஊதியம் பெறுவதற்குக் கையொப்பம் இடுவதற்குக் கை ஒத்துழைக்காமல் கடைசி வரை ஓய்வூதியம் பெறாமல் மருத்துவமனையில் 1971, சனவரி மாதத்தில் இயற்கை எய்தினார். மிகப்பெரும் தமிழ் அறிஞரான ச. கணபதி முதலியாரின் பணிகள் முழுமையாகத் தெரியவரும்பொழுது இவர்தம் இலக்கிய ஆளுமை உலகுக்குப் புலப்படும்.

 



நன்றி:

பேராசிரியர் கட்டளை கைலாசம், திருநெல்வேலி.


****** இக்கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

கருத்துகள் இல்லை: