நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 17 ஜூன், 2015

தொல்காப்பியப் பரவலில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் பங்களிப்பு



தமிழில் முதல் நூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியத்தின் நிழலைக் கடந்த ஈராயிரம் ஆண்டுத் தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பின் நெடுகிலும் காணலாம். ஓலையில் இருந்த இச்சுவடியை முதன்முதல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் அச்சில் பதித்து உலகுக்கு வழங்கினார்(1847). அவரைத் தொடர்ந்து சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம் முழுமையையும் பதிப்பித்து வழங்கினார். அதன்பிறகு அறிஞர் பெருமக்கள் பலரும் தொடர்ந்து பதிப்பித்தும், உரைவரைந்தும்,மொழிபெயர்த்தும் தமிழ் உலகிற்கு வழங்கிவருகின்றனர்.

மூதறிஞர் செம்மல் .சுப.மாணிக்கனார் அவர்கள் தொல்காப்பியம் குறித்துச் சிந்தித்தும் எழுதியும் பேசியும் தம் கடமையையாற்றியுள்ளார். எங்கள் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் தொல்காப்பியப் பதிப்பில் புதிய அத்தியாயம் படைத்தவர். இவர்கள் வரைந்த ஆராய்ச்சி முன்னுரைகள் பெருஞ்சிறப்பிற்கு உரியன. அறிஞர்கள் ச.வே.சுப்பிரமணியம், தமிழண்ணல் உள்ளிட்டோர் இன்றும் தொடர்ந்து தொல்காப்பியம் குறித்து எழுதியும் பேசியும் வருகின்றனர். இந்தத் திசை நோக்கி நகரும்பொழுது சில எண்ணங்கள் தோன்றின. முதலில் தமிழின் முதல்நூலாக அமையும் தொல்காப்பியத்தை மக்கள் அனைவருக்கும் உரிய நூலாக எளிய வடிவங்களில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் தொல்காப்பிய மன்றம் தோற்றம் கண்டுள்ளது. மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்களின் தொல்காப்பிய ஈடுபாட்டை, அவர்தம் நூல்களில் கற்று, உணர்வுபெற்றுத் தொல்காப்பியம் பரப்பும் முயற்சியில் நண்பர்களின் நெறிகாட்டலில் இயங்க உள்ளோம்.

மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கம் அவர்கள் தொல்காப்பியக் கடல், தொல்காப்பியப் புதுமை, தொல்காப்பியத் திறன் என்ற மூன்று தலைப்பில் நூல்களை வழங்கியுள்ளார். இந்த நூல்கள் பல்வேறு அமையங்களில் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகும். ஒருகட்டுரை இருவேறு நூல்களில் பதிவாகியுள்ளமையையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொல்காப்பியம் மாணிக்க உரையும் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு), தமிழ்க்காதல் நூலும் (மணிவாசகர் பதிப்பகம்) மூதறிஞர் அவர்களின் தொல்காப்பியப் புலமை காட்டும் நூல்களாகும்.

மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் 1600 நூற்பாக்களைக் கொண்ட தொல்காப்பியத்தின் பெருமை உணராத நம்மவரை, “பதின்மூன்று அடுக்கு நிலைகொண்ட திருவரங்கக் கோபுரத்தை நிமிர்ந்து அண்ணாந்து பார்க்கமாட்டாத நெஞ்சக்கூனர்க்கு என்ன சொல்வது? (பக்கம் 365, தொல்காப்பியக் கடல்) என்று வினா எழுப்புவது நம் உறக்கம் கலைக்கும் வரிகளாகும்.

தொல்காப்பியம் ஓர் இலக்கணம் என்ற அவப்பார்வையால் அறிஞருலகம் திருக்குறளுக்குக் கொடுத்துவரும் நன்மதிப்பை இம்முதனூலுக்குக் கொடுக்கத் தவறிவிட்டது” என்று உள்ளம் வருந்துகின்றார் (பக்கம் 5).

தமிழ்மொழிக்கும், தமிழினத்துக்கும், தமிழ் நிலத்துக்கும், தமிழ் நாகரிகத்துக்கும் முதல்நூல் தொல்காப்பியம்” என்பது மூதறிஞர் அவர்களின் துணிபு( தொல்காப்பியக் கடல், பக்கம். 56 ).

தொல்காப்பியக் கடல் என்னும் நூலில் ‘தமிழ் முதல் நூல்’ என்ற தலைப்பில் உள்ள கட்டுரை 1957 இல் புதுக்கோட்டைத் திருக்குறள் கழகப் பொழிவாகும். தொல்காப்பியச் சிறப்பைப் பலபடப் பேசும் கருத்துகள் இக்கட்டுரையில் உள்ளன.

“பேரரசர்கள் நிறுவிய வரலாற்றுக் கற்றூண்களும் கற்கோட்டைகளும் சின்னமும் பின்னமும்பட்டு அழிந்தொழியும் இவ்வுலகில், ஒரு தமிழ்ப்புலவன் மூவாயிரம் ஆண்டுகட்குமுன் பனையேட்டில் எழுதிய தொல்காப்பியப் பெருநூல் சிதைவின்றி வழிவழிக் காக்கப்பட்டு, இன்றும் நம் உடைமையாக வாழ்கின்றது. காலக்கோட்படாதும், கடும்பகைக் கோட்படாதும் இத் தனிப்பெரும் பனுவலைக் குடும்பச்சொத்துப் போற் காத்தளித்த நம் முன்னோர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு தவப்பெரிது. நம் மூதாதையர் அடித்தொண்டினைப் பின்பற்றித் தமிழினத்தின் பொதுவுடைமையான தொல்காப்பியத்தினை நம் பிந்தியோர்க்கு நாமும் காத்து வழங்கவேண்டாமா? (பக்கம் 68, 69, தொல்காப்பியக் கடல்) என்று உறுதியேற்க செம்மல் வ.சுப.மாணிக்கம் அவர்கள் நமக்கு வழிகாட்டுகின்றார்.

தொல்காப்பியத்தில் இல்லறநெறி, பாலியல்நெறி, போர்நெறி, அரசியல்நெறி, மெய்ந்நெறி, பொதுநெறி, மொழிநெறி, இலக்கிய நெறிகள் உள்ளன என்று நுண்ணிதின் உணர்ந்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் எடுத்துக்காட்டியுள்ளார்

 வ.சுப.மாணிக்கம் அவர்களின் நூல்களில் கீழ்வரும் தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.



தொல்காப்பியக் கடல்- மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம்

31 கட்டுரைகள் அடங்கிய நூல்.12+372=384 பக்கம் கொண்டது. 1987 இல் முதல் பதிப்பு. மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு.
இந்த நூலில் உள்ள கட்டுரைகள்:

  1. தொல்காப்பிய நயம்
  2. தொல்காப்பியம் நிலைபெற்றது எப்படி?
  3. எழுத்துமுறை
  4. தொல்காப்பியப் புதுமை
  5. மொழியறிஞன் தொல்காப்பியன்
  6. தமிழ் முதல்நூல்
  7. தொல்காப்பியர் நெறிகள்
  8. தொல்காப்பியப் புதிய உத்திகள்
  9. புதிய ஃ
  10. மாற்றொலியன்
  11. பாவம்
  12. ஆத்திசூடியும் எழுத்தியலும்
  13. மொழி முதலெழுத்துக்களின் வரம்பு
  14. அவன் என்பது யார்?
  15. வழுவமைதியா? மயக்கமா?
  16. சொல்லிய முறை
  17. புறத்தும் புறத்தோரும்
  18. பாடாண் எட்டு
  19. சிறந்தது பயிற்றல்
  20. பாடம் முரணா? வடிவா?
  21. பொருளே உவமம்
  22. பாவின் இனங்களா?
  23. செய்யுளியல்காரிகை
  24. தொல்காப்பிய உரைநயம்
  25. தொல்காப்பிய உரை நெறிகள்
  26. தொல்காப்பிய உரைத் திறன்கள்
  27. இலக்கண ஒருமைப்பாடு
  28. இலக்கணப் படைப்புக்கள்
  29. தமிழ்நாடு? தமிழ்நாட்டு?
  30. புதிய ஐந்திறப் போக்கு
  31. தொல்காப்பியம் இன்றும் நாளையும்



தொல்காப்பியப் புதுமை.சுப. மாணிக்கம்

மு.. 1988, 156 பக்கம். மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு.

இந்த நூலில் 16 கட்டுரைகள் உள்ளன. அவையாவன:

  1. தொல்காப்பியப் புதுமை
  2. தொல்காப்பியன் ஒரு மொழியறிஞன்
  3. தமிழ் முதல் நூல்
  4. காவியப் பேச்சு
  5. சாத்தனார்
  6. தியாகம்
  7. அழகியல்
  8. மணிநாவொலி
  9. பாவம்
  10. அருஞ்சொற்கள்
  11. வாழ்க்கைத்துணை
  12. பாரதியின் புலமை
  13. பாரதியின் பழமை
  14. பாரதி கண்ட தேசிய ஒருமை
  15. சங்க நெறிகள்
  16. தொல்காப்பிய நெறிகள் என்பன அவை.



தொல்காப்பியம் எழுத்திகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம்

தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, 1989 அக்டோபர், பக்கம் 10+202=212

தொல்காப்பியம் நூல் மரபு, மொழிமரபு என்னும் ஈரியல்களுக்கு அமைந்த விரிவான உரை நூல் இஃது.

தொல்காப்பியம் நூலுக்குப் பனம்பாரனார் பாடிய 15 அடிகள் சிறப்புப் பாயிரத்திற்கு மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்கள் 16 பக்கம் அகலவுரை கண்டுள்ளமை இவர்தம் தமிழ் நூல்பயிற்சிக்கு எடுத்துக்காட்டாகும்.

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் அவர்களின் வழியில் தொல்காப்பியம் பரப்புவோம்!


1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஐயாவைப் பற்றி அரிய தகவல்களை அறிந்தேன். தங்களது இம்முயற்சி பாராட்டத்தக்கது. தொடர்ந்து தங்களது பதிவுகளைப் படித்து வருகிறேன். அறியாதன அறிகின்றேன். நன்றி.