நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
திராவிட இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிட இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

திராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ.இளங்கோ


 முனைவர் சிவ.இளங்கோ

புதுவையில் திராவிட இயக்க வளர்ச்சிக்குத் தொடக்க காலத்தில் பலர் தொண்டாற்றியுள்ளனர். அவர்களுள் பாவேந்தர் பாரதிதாசன், புதுவைச் சிவம், தேங்காய்த்திட்டு இராமகிருஷ்ணன், வாணிதாசன் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களுள் புதுவைச் சிவம் அவர்கள் பாவேந்தரின் படைப்புகளை வெளியிடுவதிலும் பதிப்பகத்தைக் கவனிப்பதிலும் பெரும் பங்காற்றியவர் ஆவார். புதுவைச் சிவம் பாவேந்தரைத் தம் ஆசிரியராகவே மதித்துப் போற்றியவர். பாவேந்தர் அரசு பணியில் இருந்ததால் வெளிப்படையாக இயங்கமுடியாத நிலை ஏற்பட்டபொழுது புதுவைச் சிவம் அவர்களின் பெயரில் இயக்கப்பணிகளை முன்னெடுத்துள்ளார்.

புதுவைச் சிவம் கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும், திராவிட இயக்கத் தொண்டராகவும் செயல்பட்டவர். திராவிட இயக்கக் கொள்கை ஈடுபாட்டின் காரணமாக இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். புதுவைச் சிவத்தின் படைப்புகளையும் பாவேந்தரின் வெளியுலகம் அறியப்படாத படைப்புகளையும் வழங்கி ஆய்வுலகத்தின் பாராட்டைப் பெற்றவர் முனைவர் சிவ. இளங்கோ ஆவார். இவர் புதுவைச் சிவத்தின் மகனாவார்.

புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு நான் ஆய்வு செய்ய வந்த காலம்(1992-1993) முதல் முனைவர் சிவ. இளங்கோ அவர்களை அறிவேன். பாரதிதாசன் பரம்பரை என்ற என் ஆய்வுக்கு இவர் வழங்கிய நூல்களும் குறிப்புகளும் பலவகையில் பயன்பட்டன. முனைவர் சிவ.இளங்கோ அவர்களின் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் சிவ.இளங்கோ

புதுவைச் சிவம்- செகதாம்பாள் ஆகியோரின் இளைய மகனாகப் பிறந்தவர் சிவ. இளங்கோ  ஆவார்(15.02.1957). அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், இளம் முனைவர் பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். கவிஞர் புதுவைச் சிவமும் திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் இவரின் முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. புதுச்சேரியின் அரசியல் வரலாற்றையும் திராவிட இயக்க வரலாற்றையும் நூல்கள் வழியாக வழங்கி வருபவர்.

 சிவ.இளங்கோ நூல்கள்:

கவிஞர் புதுவைச் சிவம் நினைவுப்பூக்கள்(1989)

பாவேந்தரும் புதுவைச் சிவமும்(1990)

புதிய பேராசிரியர்கள்(1990)

பாரதிதாசன் என்கிற கனக-சுப்புரத்தினம்(1991)

பிரஞ்சிந்தியாவும் திராவிட இயக்கமும்(2000)

எட்டுமணிநேர வேலை-ஆசியாவின் முதல் வெற்றி(2004)

பெரியார் பெருந்தொண்டர் புதுவைச் சிவம்(2007)

புதுவைச் சிவம் கவிதைகளும் புரட்சிக் கோட்பாடுகளும்(2008)

கவிஞர் புதுவைச் சிவத்தின் சீர்திருத்த நாடகங்கள்(2012)

தொகுப்பாசிரியர்:

புதுவைச் சிவம் கவிதைகள்(1997)

புதுவைச்சிவம் நாடகங்கள்(2000)

புதுவைச் சிவம் படைப்புகள்(2007)

புதுவைச் சிவம் கட்டுரைகள்(2009)

முனைவர் சிவ.இளங்கோ அவர்கள் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் வழியாகத் தமிழகம் புதுவையில் நன்கு அறிமுகம் ஆனவர்.

பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகின்றார்.தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவில் இணைந்து தமிழ்த் தொண்டாற்றியவர்.


அண்ணா பேரவையின் புதுவை மாநில அமைப்பாளர். கவிஞர் புதுவைச் சிவம் அறக்கட்டளையின் நிறுவுநர்.தொலைக்காட்சி, வானொலிகளில் செய்தி வாசிப்பாளராகவும், செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். புதுவை அரசின் தொல்காப்பியர் விருது உட்படப் பல விருதுகளையும் பாராட்டையும் பெற்றவர்.





முகவரி
முனைவர் சிவ. இளங்கோ அவர்கள்,
எண்.6, புதுவைச்சிவம் வீதி,
வெங்கட்டா நகர்
புதுச்சேரி- 605 011
செல்பேசி: 0091 9994078907


வெள்ளி, 23 ஜூலை, 2010

திராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம்


வழக்கறிஞர் தெ.சமரசம்

நான் வேலூர் மாவட்டம் கலவை, ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது (1999-2005) ஆர்க்காட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தேன். அடிக்கடி வேலூரில் நடக்கும் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம். வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் அடிக்கடி மிகச்சிறந்த தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். அந்தக் காலச்சூழலில் அடிக்கடி தெ.சமரசம் அவர்களின் இலக்கிய ஈடுபாட்டை அறிவேன். அவர்களின் துணைவியார் அம்மா மருத்துவர் பத்மா சமரசம் அவர்களின் புகழ்பெற்ற மருத்துவச் சேவைகளையும் அறிவேன்.அவர்களுக்கு அழகிய வளமனை போன்ற வீடும், மருத்துவமனையும் வேலூர் நகரில் இருந்து இலக்கிய அறிஞர்களுக்கு வேடந்தாங்கலாக உதவும்.

நான் வேலூர் முத்துரங்கம் கல்லூரிக்கு அஞ்சல் வழி வகுப்பெடுக்கச் செல்லும்பொழுது ஐயாவையும் அம்மாவையும் அவர்கள் இல்லம் சென்று கண்டு மகிழ்வதுண்டு. வழக்கறிஞர், மருத்துவர் இணைந்து தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருகின்றரே என்று நான் வியப்படைவேன்.அவர்களை இரண்டாண்டுக்கு முன்பு சென்று தனிப்பட்ட முறையில் கண்டு உரையாடி அவர்களின் வாழ்வியலை அறிந்து வந்திருந்தேன்.

அதுபொழுது மருத்துவர் அம்மா அவர்களுக்குத் தமிழ் இணையத்தையும் தமிழ்த்தட்டச்சையும் அறிமுகப்படுத்தியமையும் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் அம்மா அவர்கள் ஆர்வத்துடன் தமிழ் இணையத்தை ஒரு மாணவி போல் அமர்ந்து கற்றுக்கொண்டார்கள் என்பதை நினைக்கும்பொழுது உள்ளபடியே பூரிப்படைகின்றேன்.இவர்களைப் போலும் தமிழார்வம், சமூக விடுதலை உணர்வுடையவர்கள் உலகெங்கும் பரவியிருக்கின்றார்கள். அவர்கள் அறியும்பொருட்டுத் தெ.சமரசம், மருத்துவர் ச.பத்மா அம்மா ஆகியோரின் இணைந்த தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள அம்பலூர் என்னும் சிற்றூரில் 02.12.1934 இல் சுயமரியாதை உணர்வுடைய குடும்பம் சார்ந்த தெய்வசிகாமணி,அபரஞ்சிதம் என்னும் பெரியோர்க்கு மகனாகப் பிறந்து தந்தை பெரியார் அவர்களின் மடியில் அமர்த்தி அனைவருக்கும் இசைவாக விளங்கவேண்டும் என்ற விருப்பில் ஐயாவின் வாயால் சமரசம் என்று பெயர் சூட்டப்பெற்ற பெருமைக்குரியவர் வழக்கறிஞர் தெ.சமரசம் அவர்கள்.

தெ.சமரசம் அவர்களின் தாயார் 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றவர். தந்தையாரும் பலமுறை சிறை சென்று வந்த சிறப்பிற்கு உரியவர்.

தொடக்கக்கல்வியை ஆம்பலூரிலும் பின்னர் பட்டப்படிப்பை வாணியம்பாடியிலும் முடித்தவர்.சட்டப்படிப்பைச் சென்னையில் முடித்தவர். கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் கழகப்பணிகளில் தீவிரமாக இருந்தவர். சட்டக் கல்லூரித் தி.மு.க.கிளைச்செயலாளராக ஆலடி அருணா அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். பின்னர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

சட்டப்படிப்பு முடிந்ததும் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். திரு.மோகன் குமாரமங்கலம் அவர்களிடத்தில் சென்னையிலும், வேலூரில் குற்ற வழக்குகளைத் திறம்படக் கையாண்டு புகழ்பெற்ற ஏ.கே.தண்டபாணி அவர்களிடத்து வேலூரிலும் இவர் மிகச்சிறந்த பயிற்சி பெற்றார்.

தெ.சமரசம் அவர்களின் திருமணத்துக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். 1966 இல் பண்ணுருட்டியில் திருமணம் நடைபெற்றது. மருத்துவர் அம்மா அவர்கள் பிறந்த ஊர் பண்ணுருட்டி என்பதே காரணம் ஆகும். அம்மா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் பயின்றவர்கள். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் இல்வாழ்க்கைத் துணையாக அமைந்தது ஐயாவின் வாழ்வில் அரும்பணிகளுக்குப் பேருதவியாக இருந்தது.

மகன் இனியன், மகள் கனிமொழி இருவரும் அம்மாவைப் போல் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர்.இவருடைய உடன் பிறப்பு கவிஞர் தாமரைச்செல்வி-கவிஞர் சேரன் தமிழோடு இணைந்து வாழ்கின்றார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணிபுரியும் தெ.சமரசம் அவர்கள் மாவட்ட அரசு வழக்குரைஞராக, மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, வேலூர் நகராட்சி வழக்குரைஞராக, நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் அறிவுரைஞராகப் பல பொறுப்புகளை வகித்தவர்.சிற்றிதழ்கள் பலவற்றின் வளர்ச்சிக்கு அவ்வப்பொழுது உதவுவதும்,எழுதுவதும் இவர் இயல்பு.

எழுத்துச்செம்மல்,பயணநூல் பகலவன், சிந்தனைச் சுடர், ரோட்டரிச் சுடர், செந்தமிழ்ச்செம்மல் எனப் பல்வேறு விருதுகள் இவரின் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன. எழில்கொஞ்சும் இலங்கை, வரலாறு படைக்கும் ரோட்டரி,மனம் கவரும் மலேசியா, நெஞ்சம் கவரும் நியூசிலாந்து, இந்தியாவைக் காப்போம், நீதியின் கண்கள் உள்ளிட்ட நூல்களை எழுதிய பெருமைக்குரியவர்.

மனம் கவரும் மலேசியா நூலுக்குத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்.வேலூர்த் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.விசுவநாதன் அவர்களுடன் இணைந்து பல தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவராகத் தொடர்ந்து பணிபுரிகின்றார்.

தமிழ் உணர்வு சார்ந்த தெ.சமரசம் ஐயா அவர்களும்,மருத்துவர் பத்மா அம்மா அவர்களும் வேலூரின் இரு புகழ்மணிகள் என்றால் அது பொருத்தமாக அமையும்.