சிங்கப்பூரில் பணியாற்றும் என் நண்பர் முனைவர் பா. இராமநாதன் அவர்கள் இன்று (05.09.2026) புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டுச் சமுதாயக் கூடத்தில் நடைபெறும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதாகவும் ஓய்விருந்தால் வந்து சந்திக்குமாறும் அன்பு அழைப்பு விடுத்திருந்தார். கடந்த கிழமைதான் அவரைச் சிங்கப்பூரில் சந்தித்து உரையாடினேன். நாங்கள் இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி, ஆய்வு மாணவர்களாக வளர்ந்தவர்கள். பன்னெடுங்கால இடைவெளிக்குப் பிறகு பலமுறை சிங்கப்பூரில் சந்தித்துள்ளோம். அவரைக் காணும் நோக்கில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் கருத்தரங்க அறைக்குச் சென்றேன்.
புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாட்டு மாநாட்டுக் கூடத்தின் முகப்பில் ஓரிருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து, படியேறி, முதல்மாடி செல்லும்பொழுது ஓர் அன்பர் வருக! வருக என்று அழைத்தார். ஒப்புக்கு அவரிடம் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு இடையூறு இல்லாமல் பின்வரிசையில் சென்று நான் அமர்ந்துகொள்ள கதவினைத் திறக்க முற்பட்ட பொழுது, வரவேற்பு கொடுத்த அந்த அன்பர் முன்வரிசைக்கு வருமாறு அழைத்துச்சென்றார். போகும்போது அவர் வாய்மொழியில், “ஆதிபராசக்தி கல்லூரி” என்ற ஒற்றைச் சொல் மட்டும் காதில் விழுந்து இனித்தது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் நான் பணியாற்றிய நினைவு வந்தது. அழைத்துச் சென்றவரின் உயரமும், தோற்றமும் இவர் அக்கல்லூரியில் பணியாற்றியவர் போலும் என்ற நினைவுடன் அரங்கின் உள்ளே நுழைந்தேன். அப்பொழுதுதான் அவர் காதருகே சொன்னார். எம் நிறுவனம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது ஐயா என்றார். ஆசிரியராகிய நீங்கள் இந்த நிகழ்வுக்கு வந்துள்ளது எனக்கு மிகப்பெரிய பெருமை என்று உள்ளம்குளிர உரைத்தார். இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய என் நினைவுகளை மீட்டி, ஆதிபராசக்தி கல்லூரியில் படித்தவரா? அல்லது நம்முடன் பணியாற்றியவரா? என்று நினைத்துப் பார்த்தேன். இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கும் இவரை என்னால் நினைவுகூர இயலவில்லை.
முதல்வரிசையில்
அமர்ந்தேன். அருகில் இருந்த அன்பர் ஒருவரிடம், என்னை அழைத்து வந்த இவர் யார்? என்று
கேட்டேன். சார்! இவர்தான் பாலாஜி வரதன். Village
Technology School நிறுவனத்தின் இணைச் செயல் அதிகாரி என்றார். இந்த நிறுவனத்தின் செயல்
அதிகாரி அவர்களின் பெயரும் பாலாஜிதான் என்று குறிப்பிட்டார். எத்தனையோ வகையில் நினைவில்
கொண்டுவரப் பார்த்தேன். என்னிடம் பயின்றவரா? என்னுட்ன் பணியாற்றியவரா? என்று முயன்று
பார்த்தும் பாலாஜி அவர்களை நினைவில் கொண்டுவர இயலவில்லை.
நிகழ்வு நடைபெறும் மேடையில் ஆசிரியர் பெருமக்கள் பரிசுபெறுவதும், அதனை முதன்மை விருந்தினர்கள் எடுத்து வழங்குவதுமாக இருந்தனர். என் நண்பர் பா. இராமநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர் என்பதால் முதல் வரிசையில் பார்வையாளர்களுடன் நான் அமர்ந்திருப்பதை அறிந்து இன்ப முகத்தால் வரவேற்றார்.
விருது பெறும் ஆசிரியர்களின் பெயர்கள் படிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் என்னை வரவேற்று அழைத்துச் சென்ற அதே பாலாஜி, ஒலிவாங்கி முன்னர்த் தோன்றி, அரங்கில் இருந்தவர்களை நோக்கி, நண்பர்களே! ஒரு மகிழ்வான செய்தி. ஒவ்வொருவரும் கடந்த காலத்தில் படித்த பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று நம் ஆசிரியர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இன்று எதிர்பாராத வகையில் என் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் இந்த அரங்கிற்கு வந்துள்ளார். நான் யார் என்பதை அவரால் நினைவுகூர இயலாதபடி என் தோற்றம் மாறியுள்ளது. இவர் ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது உயிர் வேதியியல் (BioChemistry) துறையில் நான் இளம் அறிவியல் வகுப்பில் பயின்றபொழுது மொழிப்பாடம் நடத்திய பெருமை இவருக்கு உண்டு. இவருடன் பேராசிரியர் வைத்தீஸ்வரன் அவர்களும் பணியாற்றியவர். இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி என்று கூறி, என்னை மேடைக்கு அழைத்து, சிறப்பு ஆரம் நல்கிச் சிறப்பிக்கும்பொழுதுதான் புரியாத புதிர்கள் பல விடுபட்டன.
சிறப்பு ஆரத்தையும் நினைவுப் பரிசையும் பெற்றுக்கொண்டு, மேடையிலேயே அமருமாறு சொன்னார்கள். பலரின் பார்வையும் என்மீது வியப்போடு விழுந்துகொண்டிருந்தது. நிகழ்ச்சித் தொடர்ந்தது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த ஆசிரியர் பெருமக்கள் தங்களின் கல்விப்பணிகளுக்காகச் சிறப்பு ஆரங்களைப் பெற்றவண்ணம் இருந்தனர். இந்த நிகழ்வைப் பாராட்டிச் சிறிது நேரம் உரையாற்றுமாறு என்னைக் கேட்டுக்கொண்டனர்.
கிடைத்தற்கு அரிய இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு, நானும் நல்லாசிரியர் ஒருவரால் உயர்கல்வி கற்க நேர்ந்ததையும், இன்று பணியாற்றிக்கொண்டிருக்கும் நிலையையும் சொன்னேன். தம்பி பாலாஜி அவர்கள் நான் வகுப்பில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வகுப்பெடுப்பேன் என்று சொல்லி அறிமுகம் செய்ததால், அரங்கில் இருந்த அனைவரும் ஒரு நாட்டுப்புறப் பாடலைப் பாடுமாறு வேண்டுகோள் வைத்தனர். நானும் நினைவில் வந்த ஒரு நடவுப்பாடலைப் பாடி என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.
வ. பாலாஜி அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் என்ற ஊரைச் சேர்ந்தவர். பெற்றோர் பெயர் வரதன் – நகோமி என்பனவாகும். 25. 05. 1983 இல் பிறந்தவர். இளம் அறிவியல் படிப்பில் உயிர் வேதியியல் பயின்றவர். பின்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பயிற்சி மற்றும் மேம்பாட்டு கல்விசார் தலைமைத்துவத் துறையிலும், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் துறையிலும் ஆளுமை மிக்கவர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலாஜி அவர்கள் இத்துறையில் புகழ்பெற்று விளங்குபவர். பெரும் நிறுவனப் பயிற்சியாளராகவும் விளங்குபவர். செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), ட்ரோன் தொழில்நுட்பம், ஏரோமாடலிங் (Aeromodelling), 3D பிரிண்டிங், புதுமை, தொழில்முனைவு, வடிவமைப்பு சிந்தனை (Design Thinking), தலைமைத்துவ மேம்பாடு மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் திறன்கள் ஆகியவற்றில் இவர் ஆற்றல் பெற்றுள்ளார். 'வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல்' (Village Technology School)-இன் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) மற்றும் இணை நிறுவனராக, நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடு, கல்விசார் புதுமை மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற கற்றல் சூழல்களை உருவாக்குவதில் முதன்மையான பங்காற்றுகின்றார். மேலும், VTS குளோபல் இன்னோவேஷன்ஸ் LLP-யின் இயக்குநர், ரோபோட்டிக்ஸ் ஃபவுண்டேஷன் ஆஃப் தமிழ்நாடு-இன் இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவர், மற்றும் BYST சென்னைக் கிளையின் இணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகிப்பதன் மூலம் தொழில்முனைவு, திறன் மேம்பாடு மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் தீவிரமாகப் பங்களித்து வருகிறார்.
பாலாஜி வரதன் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கியுள்ளதுடன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் இளம் புதுமையாளர்களுக்கும் பயிற்சி வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் தம் அறிவை விதைத்து, இருபத்தியொன்றாம் நூற்றாண்டை வழிநடத்தும் மாணவர்களை உருவாக்கி வரும் பாலாஜி வரதனைப் போலும் உயர் மாணவர் ஒருவரை ஆசிரியர் திருநாளில் (05.09.2026) சந்தித்தமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றேயாகும்.
வாழ்க பாலாஜி வரதன்! வளர்க அவர்தம் நிறுவனங்கள்!!



