நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழன் வழிகாட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழன் வழிகாட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 அக்டோபர், 2012

கனடியத் தமிழர்களின் கைவிளக்கு - செந்தியின் தமிழன் வழிகாட்டி…



கனடாவிலிருந்து நண்பர் செந்தி அவர்கள் வெளியிடும் தமிழன் வழிகாட்டி கையேடு ஒவ்வொரு ஆண்டும் எனக்கு அனுப்பி வைக்கப்படுவது உண்டு. முன்பெல்லாம் என் அறிவுத் தந்தையாகப் போற்றப்படும் ஈழத்துப்பூராடனார் அவர்கள் தம் சொந்தப் பொறுப்பில் அனுப்பி வைப்பார்கள். அவர்கள் இயற்கை எய்திய பிறகு நண்பர் செந்தி அவர்கள் தொடர்ந்து அனுப்பி வைப்பது உண்டு.

தமிழன் வழிகாட்டி கையேடு எங்கள் வீட்டின் வரவேற்பறையில் பார்வையில் இருப்பதால் வீட்டிற்கும் வரும் விருந்தினர்கள் இந்தக் கையேட்டின் சிறப்பைக் கண்டு உடன் படித்துத் தருவதாக எடுத்துச் சென்றுவிடுவார்கள். அவ்வாறு செல்லும் கையேடு பல வீடுகளுக்குச் சென்று மீண்டும் என் கையினுக்கு வருவதற்குப் பல மாதங்கள்கூட ஆவது உண்டு. இந்த ஆண்டுக்கான கையேடும் வழக்கம்போல் முன்பே வந்துவிட்டது. பல நண்பர்களின் கையினுக்கு மாறி மீண்டும் இன்று என் கையினுக்கு வந்தது.

வழக்கம்போல் கையினுக்குக் கிடைக்கும் நூலினை உடன் ஒரு புரட்டு புரட்டிவிடுவேன். ஓய்வு கிடைக்கும்பொழுது மீண்டும் ஆழமாகப் படிப்பது உண்டு. அந்த வகையில் இரண்டாம் முறையாகச் செந்தியின் தமிழன்வழிகாட்டியைப் படித்துப் பார்த்து வியப்புற்றேன்.

தமிழன் வழிகாட்டிக்கு ஒரு வரலாறு உண்டு. கனடாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களுள் செந்தி அவர்களும் அவரின் குடும்பமும் அடங்கும். மிகக் குறைந்த பணத்துடன் கனடாவில் தஞ்சம் புகுந்த செந்தி, தம் கடும் உழைப்பால் புகழ்பெற்ற மாந்தராக இன்று விளங்குகின்றார். அவர் ஆண்டுதோறும் நடத்தும் வணிகக் கண்காட்சி கனடாவில் புகழ்பெற்ற ஒன்றாகும். அதுபோல் அவர் ஆண்டுதோறும் தொய்வில்லாமல் வெளியிடும் தமிழன்வழிகாட்டியும் சிறப்பிற்கு உரிய ஒன்றகாக் கனடாவில் வாழும் தமிழர்களால் போற்றப்படுகின்றது என்பதை இதில் இடம்பெற்றுள்ள பலதுறை விளம்பரங்களைக் கொண்டு மதிப்பிட முடிகின்றது.

கனடா தேசத்திற்குள் நுழையும் தமிழர் கையில் தமிழன் வழிகாட்டி கையேடு இருந்தது என்றால் அவர்கள் எந்த உதவிக்கும் தொல்லைப்பட வேண்டிய அவசியம் இல்லை. வீடு வாங்க, விற்கத் தொடங்கி, வாழ்நாள் காப்பீடு, திருமணம், நிதியகச் சேவை, வீட்டுமனை வாங்க விற்க, அவசர காலத் தொலைபேசி எண்கள், நேர்ச்சிகால(விபத்து)உதவித்தொகை பெறுதல், கணக்குத் தணிக்கை, விளம்பர உதவி, உந்துவண்டிப் பழுதுபார்ப்பு, வங்கி, வெதுப்பகம்(பேக்கரி), வழக்கறிஞர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், அழகுநிலையங்கள், கட்டுமானப் பொறியாளர்கள், பேருந்து வசதிகள், நாற்காலி வாடகை, திரைப்படம், கல்லூரி, கணினி, இணைய நிலையங்கள், மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், துணி வெளுப்பகங்கள், கலை, கல்வி, கல்விக்குரிய நிதிக்கடன், மரச்சாமான்கள், முடித்திருத்தகங்கள், உள்ளரங்க அழகுநிலையங்கள், நகைக்கடைகள் குறித்த பல விளம்பரங்கள் உள்ளன. 

மேலும்  கராத்தே பழகுமிடம், நூலகம், பணப்பரிமாற்று இடங்கள், இசைக்குழுக்கள், செய்தி ஏடுகள், கண் கண்ணாடிக்கடைகள், வண்ணப்பூச்சுகள், திருவிழாக்களுக்குப் பொருட்களை வாடகைக்குவிடுவோர் குறித்த விவரம்,  அடகுக்கடை நடத்துவோர், மருந்தகம், குழாய்ப்பதிப்புப் பணியாளர்கள், அச்சகத்தினர், வானொலி நிலையம், வீட்டுமனை வணிகர்கள், பத்திரப்பதிவர்கள், தொலைக்காட்சிகள், கோயில்கள், கோயில் குருக்கள், துணிக்கடைகள், மொழிபெயர்ப்பாளர்கள், பயண ஏற்பாட்டக முகவர்கள், காணொளிக் கடையாளர்கள், இணையதள வடிவமைப்பாளர்கள், யோகாப்பயிற்சி, உணவகம், என்று பலநிலைப்பட்ட விவரங்களைத் தாங்கித் தமிழன் வழிகாட்டி வெளிவந்துள்ளது.

கனடாவில் வாழும் புகழ் பெற்ற அறிஞர்கள், அரசியல் ஆர்வலர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள் பற்றிய குறிப்புகளைப் படத்துடன் வெளியிட்டுள்ளமை இந்தக் கையேட்டின் தனிச்சிறப்பபாகும்.

சேலைகட்டுதல் தொடங்கி ஆண்கள் கழுத்துபட்டை அணிவது,  வரையிலான அன்றாடத் தேவைகள் காட்சி விளக்கப் படமாகத் தரப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. கனடாவில் வெளியிடப்பெற்ற அஞ்சல் முத்திரைகள் பற்றிய விவரங்கள் இந்தக் கையேட்டில் போற்றும்படி உள்ளது. முதன்மையான தொலைபேசி எண்கள் பெரிய எழுத்தில் படிக்கும் தரத்தில் உள்ளன.

கனடாவில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் குறித்த பட்டியல் திரைத்துறை ஆய்வாளர்களுக்குப் பயன்படும்.

தமிழர்கள் கனடாவில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில்களில் மேம்பட்டு இருக்கும் இவர்கள் நிகழ்த்திய முதல் செயல்பாடுகள் மிகச்சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன:
அவற்றுள் சில:

முதன்முதல் கனடாவில் தமிழரால் வெளியிடப்பட்ட ஆங்கிலப்பத்திரிகை: Monsoon: D.B.S.ஜெயராஜ்

முதன்முதலில் கனடாவில் தமிழ்ச்சிறுவனின் பெயர் சூட்டப்பட்ட பூங்கா: Birunthan Park.

முதன்முதல் கனடாவில் வெளியிடப்பட்ட தமிழ் சஞ்சிகை: குறிஞ்சிமலர்

முதன்முதல் கனடாவில் தமிழர்களிடையே நடத்தப்பட்ட சமயச்சடங்கு இல்லாத திருமணம்: இராசேந்திரன்-இந்துமதி திருமணம்.(1994)

முதன்முதல் கனடாவில் தமிழ்த்திரைப்பட வரலாறு 60 தொகுதிகளாக வெளியிட்டவர்கள்: றிப்ளக்சு குடும்பத்தைச் சார்ந்த ஜோர்ஜ் இதயராஜ்-எட்வேட் இதயச்சந்திரா சகோதரர்கள்

முதன்முதலில் ஆதிக் கிரேக்க காப்பியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்: ஈழத்துப்பூராடனார்.

கனடாவின் முதல் தமிழ்த்திரைப்படம்: ஏமாற்றம்,தயாரிப்பாளர் முருகு.

இவ்வாறு பல அரிய செய்திகள் இந்தக் கையேட்டில் உள்ளன. தமிழர்கள் அனைவருகுகமான பொது அறிவுப்போட்டிக்கு உதவும் தரத்தில் பல செய்திகள் உள்ளன.

1996 இல் 174 பக்கத்தில் வெளியான தமிழன் வழிகாட்டி இன்று  1040 பக்கங்களில் மிகச்சிறந்த வண்ண அச்சில் வெளிவந்துள்ளமை தமிழன் வழிகாட்டியின் வளர்ச்சியையும் தமிழர்களின் வளர்ச்சியையும் காட்டுகின்றது.

வருங்கால வரலாறு எழுதுகின்றவர்களுக்குத் தமிழன் வழிகாட்டித் தகவல் களஞ்சியமாக இருந்து தமிழர் வரலாற்றை எழுத உதவும் என்பது என் நம்பிக்கை.

தமிழன் வழிகாட்டி வெறும் ஏடாக மட்டுமல்லாமல் இயக்கமாக மாறித் தாயக மக்களுக்கு உதவியுள்ளமையும் இந்த ஏட்டில் பதிவாகியுள்ளது.

தொடரட்டும் செந்தியின் தமிழ்ப்பணி…

தமிழன் வழிகாட்டி முகவரி
மின்னஞ்சல்: tamilsguide@rogers.com
இணையதளம்: www.tamilsguide.com
பேசி: + 416.615.4646
ஒளிநகல்: + 416.615.2414


ஞாயிறு, 5 டிசம்பர், 2010

"தமிழன் வழிகாட்டி" செந்தியுடன் ஒரு நாள் சந்திப்பு!


பாவேந்தர் அருங்காட்சியகத்தில் மு.இளங்கோவன், செந்தி அவர்கள்

 ஈழத்து நூல்களையும் அறிஞர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர் முனைவர் ஈழத்துப்பூராடனார் ஆவார். ஐயா அவர்கள் ஈழத்தில் ஆசிரியப் பணியாற்றி ஓய்வுபெற்றுத் தம் துணைவியார், குடும்பத்தாருடன் இப்பொழுது கனடாவில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். ஐயா அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மறவாமல் தமிழன் வழிகாட்டி என்ற கனடா நாட்டுத் தமிழர்கள் குறித்த தகவல்கள் அடங்கியப் பெரிய வழிகாட்டி நூலை எனக்கு அனுப்பி வைப்பார்கள்.

 தமிழன் வழிகாட்டி நூலில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் உரிய உதவி, தேவை பற்றிய விளம்பரங்கள், செய்திகள் இருக்கும். குடமுழுக்குத் தொடங்கி, துணிவெளுப்பு வரையிலான பல வகை விளம்பரங்கள் கண்டு ஈழத்தமிழர்கள் கனடா நாட்டில் வேர்விட்டு வளர்ந்துள்ளார்களே என்று நினைத்து மகிழ்ந்திருந்தேன். தமிழன் வழிகாட்டியின் ஆசிரியர் அல்லது உரிமையாளர் பெயர் திரு.செந்தி (செந்திலாதவன்) என்பதை நூல்வழி அறிந்திருந்தேன். அவரின் முயற்சியைப் பாராட்டி ஈழத்துப்பூராடனார் ஐயாவுக்குப் பல மடல்கள் எழுதியதும் உண்டு. இவை நடந்தது பல ஆண்டுகளுக்கு முன் ஆகும்.

 அதன் பிறகு இணையத்தில் ஈடுபட்டு உழைத்தபொழுது தமிழன் வழிகாட்டி இணையத்தில் காலூன்றி வளர்ந்திருப்பதைக் கவனித்தேன். மின்னஞ்சல் வழியாகத் திரு. செந்தி அவர்களுடன் தொடர்பில் இருந்தேன். கனடாவிலிருந்து யாரேனும் வந்தாலும் அவர்கள் வழியாகச் செந்தி அவர்களைப் பற்றி வினவுவது வழக்கம். செந்தியின் சிறப்பினையும் வினைத்திட்பத்தையும் கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் "செயல்மறவர் செந்தி" என்று ஒற்றைவரியில் தமிழ் உளிகொண்டு செதுக்கிய ஓர் அறிமுகத்தைக் கண்டு செந்தியின் நினைவில் இருந்தேன்.

 ஒருநாள் மணிமேகலை நூல் வெளியீட்டகத்திலிருந்து ஒரு நூல்பொதி என் முகவரிக்கு வந்திருந்தது. அதில் திருக்குறள் விளக்கவுரை என்றும் மேலும் திருக்குறள் தொடர்பிலான சில நூல்களும் இருக்கக் கண்டேன். திருக்குறளை அயலகத்தில் பரப்பும் அரிய முயற்சியாக உள்ளதே என்று பார்த்தபொழுது அதன் உரையாசிரியர் திரு.அ.பொ.செல்லையா என்று இருந்தது. அவர்கள் ஈழத்தில் தமிழ்ப்பற்றும், திராவிட இயக்க உணர்வும் வாய்க்கப் பெற்றவராகவும் விளங்கியவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபொழுது பேராசிரியர் க. அன்பழகன் உள்ளிட்டவர்களையும் அறிஞர் அண்ணா, முதல்வர் கலைஞர் பணிகளையும் அறிந்தவர். ஈழத்தில் திருவள்ளுவருக்குச் சிலை எடுத்த பெருமைக்குரியவர். அ.பொ. செல்லையாவின் தமிழ்ப்பற்று அறிந்து அவர்களின் குடும்பச்செல்வம்தான் நம் செந்தி என்று அறிந்து உவந்திருந்தேன். தமிழாசிரியர் ஒருவரின் மகன் பொருளாலும், புகழாலும் உலக அளவில் சிறப்புற்று விளங்குகின்றார் என்பதை அறிந்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

 இதனிடயே செந்தி அவர்களின் அன்னையார் திருமதி யோகரத்தினம் அம்மா அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்பது அறிந்து எனக்கு மேலும் வியப்பு பன்மடங்கானது. அந்த மொழிபெயர்ப்பையும் கண்ணுறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் மொழிபெயர்ப்புப் பட்டறிவுகளை ஒரு கட்டுரையாக்கி விடுத்துவைக்க வேண்டினேன். கட்டுரையும் அம்மாவால் உருவாக்கப்பட்டு ஒரு கிழமைக்குள் வந்தது. கட்டுரையின் தரமும் சிறப்பும் உணர்ந்து அக்கட்டுரையைக் கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வழங்கலாமே என்று ஒரு கருத்தினை வழங்கினேன். அம்மாவும் தம் கணவருக்கு அமையாத ஒரு பெருஞ்சிறப்பு தமக்கு அமைய உள்ளதே என நினைத்து அகவை முதிர்ந்த நிலையிலும் கோவை மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டுக் கட்டுரையை மாநாட்டுக் குழுவினர்க்கு அனுப்பியுள்ளார். அறிஞர்குழுவால் அக்கட்டுரை ஏற்கப்பட்டது.

 அம்மா தமிழகத்திற்குத் தமிழ்நாட்டு அரசின் விருந்தினராக வருவதற்குரிய ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டார். அவர்களுக்குரிய சில நெறிமுறைகளை நானும் சொன்னேன். அகவை முதிர்ந்த அவர்கள் தனியாகக் கனடாவிலிருந்து புறப்பட்டு வருவதில் செலவு(பயணம்)க்களைப்பு இருக்கும் என்றும் தமிழகத்திற்கு இதுவரை வந்தது இல்லை என்றும் தயங்கினார்கள். அந்தச் சூழலில் நண்பர் செந்தி அவர்கள் " உங்கள் மகன் இளங்கோவன் அங்கு இருக்கின்றார். கவலையின்றிப் புறப்படுங்கள்" என்று ஊக்க உரை தந்ததும் அந்தத் தமிழ்த்தாய் என்னையும் அரசையும் நம்பித் தமிழகம் வந்தார்கள்.

 அம்மாவைச் சந்திக்கும் நோக்கில் மாநாட்டுக்கு முதல்நாளே நான் கோவை சென்று அம்மாவைக் கண்டேன். அவர்கள் வரும்பொழுதே வானூர்தியின் பறப்பு ஒவ்வாமல் வாந்தி மயக்கமாக வந்துள்ளார்கள். உண்ணாமல் உறங்காமல் இருந்துள்ளார்கள். நான் சென்று கண்டபொழுது மிகவும் சோர்ந்து காணப்பட்டார்கள். உடன் விடுதி உரிமையாளரின் மருத்துவமனையில் அம்மாவைச் சேர்த்து உரிய மருத்துவம் பார்த்து அம்மாவை இயல்புநிலைக்குக் கொண்டுவந்தேன். அந்த நிகழ்வுகள் பற்றி அம்மாவும் நானும் முன்பும் எழுதியுள்ளோம்.

 மாநாடு முடியும்வரை அம்மாவைப் பாதுகாப்பாகப் பார்த்து அவர்களுக்கு உரிய பணிவிடைகள் செய்து பாதுகாத்தேன். அதுபோல் அவர்கள் கோவையிலிருந்து சென்னைக்குத் திரும்பி இரண்டு நாள் தங்கி அதன் பிறகு இலங்கை சென்று ஒரு மாத இடைவெளியில் மீண்டும் கனடா செல்வது திட்டம். அம்மா கோவையிலிருந்து சென்னைக்கு வந்தார்கள். சென்னையில் தங்குவதற்கு உரிய இடத்திற்குச் செல்ல இயலாமல் சென்னை வானூர்தி நிலையத்தில் தயங்கியபடி நின்றிருந்தார்கள். அங்கிருந்தபடி எனக்குத் தொலைபேசியில் பேசினார்கள். புதுச்சேரியில் இருந்தபடி பெரும் பரபரப்புக்கு இடையே என் சென்னை நண்பர் திரு. மு. இராசசேகர் அவர்களின் உதவியால் அம்மாவை உரிய இடத்தில் தங்கவைத்து இலங்கைக்குச் செல்லும்வரை துணையாக உதவினேன். ஒரு மாத்ததிற்குப் பிறகு அம்மா கனடா திரும்பியதும் அன்பொழுக நன்றி மடல் எழுதியபடி இருந்தார்கள்.

 கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபொழுது செந்தி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தும் வணிகத்திருவிழா நடக்க ஏற்பாடாகியிருந்தது. எனவே செந்தி அவர்கள் மாநாட்டுக்கு வர இயலாமல் வணிகத் திருவிழாவில் இருக்கும்படி நேர்ந்தது. வணிகத் திருவிழா முடித்துச் செந்தி இயல்பு நிலைக்குத் திரும்பியபொழுதில் ஒரு கிழமைப் பயணமாகத் தமிழகம் வந்தார்கள்.

 அம்மா அவர்கள் மறவாமல் என்னைக் கண்டு நன்றியுரைக்கும்படி தம் அன்புமகன் செந்திக்கு ஓர் ஆணையிட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில் சென்னை வந்த திரு.செந்தி அவர்கள் புதுச்சேரி வருவதற்கு நாள் ஒதுக்கினார்கள். நானும் அவரும் உள்ளம் திறுந்து பேசுவதற்காகப் பிற புறப்பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அமைதியாக வந்தார். நானும் அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தேன். இருவரும் என் அலுவலகத்தில் சந்தித்தோம். பிறகு இருவரும் புதுவையின் புகழ்பெற்ற இடங்களுக்குச் சென்றோம். அரவிந்தர் தவமனை, கடற்கரை, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், பாரதியார் காட்சியகம், பாவேந்தர் காட்சியகம் யாவும் சென்று அவருக்குக் காட்டினேன்.

 பாவேந்தர் பாரதிதாசன் காட்சியகத்தில் பாவேந்தர் தொடர்பிலான ஒளிவட்டுகளைப் பெற்றுக்கொண்டார். அதுபோல் பாரதியார் குறித்த ஆவணப்படத்தையும் பார்த்ததோடு அல்லாமல் அதன் படியினையும் வாங்கிக்கொண்டார்.


புதுவைக் கடற்கரையில் செந்தி அவர்கள்


அரவிந்தர் தவமனையில் மு.இளங்கோவன்,செந்தி அவர்கள்


மு.இ. இல்லத்தில் செந்தி அவர்கள்

 இருவரும் உள்ளார்ந்த அன்புடன் உரையாடினோம். அப்பொழுது செந்தி அவர்களின் கடும் உழைப்பும், திட்டமிட்டு இயங்கிய இயக்கமும் சமூகத்தில் ஒரு பெரிய மதிப்பை அவருக்கு ஏற்படுத்தித் தந்ததுள்ளதை அறிந்தேன். இலங்கையிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று வெளிநாடுகளுக்கு ஏதிலிகளாகச் செல்ல வேண்டிய நாட்டுச் சூழலில் செந்தி இங்கிலாந்து போன்ற பிற நாடுகளில் தங்கியிருந்து பிறகு கனடா சென்றார். கனடா செல்லும்பொழுது அவர் கையில் ஐம்பது டாலர் மட்டும் இருப்பு இருந்ததுள்ளது. கடுமையாக உழைத்து குறிப்பிட்ட ஆண்டில் குடும்பத்தினரையும் கனடாவுக்கு அழைத்துக்கொண்டார். கடும் உழைப்பும், சரியான திட்டமிடலும் அவருக்குப் பெரிய வளர்ச்சியைத் தந்தது. தமிழன் வழிகாட்டி விளம்பரப் புத்தகமாக இருந்து சமூகத்துக்கு அவரை அடையாளம் காட்டியுள்ளது. அதனையொட்டி வணிகத் திருவிழா கனடாவில் ஈழத் தமிழர்களை ஓரிடத்தில் இணைக்கும் பாலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.

 இன்று பொருளாலும், புகழாலும் வளர்ந்து நிற்கும் செந்தி போன்றவர்களின் வாழ்க்கை ஓர் உண்மையை உணர்த்தி நிற்கின்றது. முறையான உழைப்புக்கும் சரியான திட்டமிடலுக்கும் தோல்வி என்பதே இல்லை என்பதுதான் அது. நம் புதுவை இல்லத்திற்கு வந்து நம் முயற்சிகளைக் கண்ணுற்ற செந்திக்கு எங்கள் ஊரில் பழைய வீடு பாழடைந்து கிடந்ததையும் அதனைச் செப்பமிட்டு எங்கள் முன்னோர் நினைவாகக் காத்து வருவதையும் படங்கள் வழியாகக் காட்சிப்படுத்தினேன். ஈழத்தில் தங்கள் முன்னோர் வீடும் இதுபோல் சிதைந்து கிடப்பதாகவும் அதனைப் புதுப்பிக்கும் முயற்சிக்கு என் பட்டறிவு தேவை எனவும் உரைத்தார். இருவரும் உள்ளம் ஒன்றிப் பிரியா விடைபெற்றுக்கொண்டோம். தம் தாயாரின் தமிழகச் செலவுக்கு உதவியாக இருந்தமைக்கு நன்றி சொல்வதற்கு நேராக என்னைக் காண வந்த தன்னம்பிக்கைத் தோழரின் பண்பறிந்து போற்றினேன்.