நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 28 ஜூலை, 2026

பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு – 2026

 

 

  தமிழ்நாட்டு அரசு கலை, பண்பாட்டுத்துறை ஆதரவுடன், தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுண்கலைப்புலமும் இணைந்து நடத்தும் பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு 2026, ஆகத்து மாதம் 04, 05, 06 ஆகிய நாள்களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது

  04. 08. 2026 (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழத்து இசைத்துறை மாணவர்களின் மங்கல இசை, வாழ்த்துப் பாடல்களுடன் தொடக்க விழா இனிதே தொடங்குகின்றது. முனைவர் தி. அருட்செல்வி அவர்கள் வரவேற்புரையாற்றவும், சிங்கப்பூர்த் தமிழிசை ஆராய்ச்சிக் கழகத்தின் நிறுவுநர் ப. புருடோத்தமன் அவர்கள் நோக்கவுரையாற்றவும் உள்ளனர். 

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து இசைத்தமிழ்த் தொகுதி 6 தமிழிசைப்பாடல்கள் நூலினைத் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவர் எஸ்.அறிவுடைநம்பி வெளியிட, இசையறிஞர் குரு. ஆத்மநாதன் பெற்றுக்கொள்வார். 

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து இசைத்தமிழ்த் தொகுதி 3 தமிழிசைப்பாடல்கள் நூலினைப் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் முனைவர் ஆர். சிங்காரவேல் வெளியிட, கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். 

 முனைவர் வி. எல் .வி. சுதர்சன் அவர்கள் எழுதிய இன்தமிழ் இசைப்பாடல்கள் நூலினைப், ப. புருடோத்தமன் வெளியிட, பண்ணிசைப் பேரறிஞர் திருத்தணி என். சுவாமிநாதன் பெற்றுக்கொள்வார்கள். 

 தருமபுர ஆதீனம் இருபத்தேழாம் பட்டம்  முனைவர் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு  திருத்தணி என் சுவாமிநாதன், குடந்தை தி. இலட்சுமணன் ஆகியோர்க்கு முதுபெரும் பாணர் விருதினையும்,  திருபுவனம் குரு. ஆத்மநாதன் அவர்களுக்குப் பெரும்பாணர் விருதினையும் வழங்கி, அருளாசி வழங்க உள்ளார்கள். 

 பொறியாளர் இரா. கோமகன் வாழ்த்துரை வழங்கவும், முனைவர் வ. ல. வே சுதர்சன் நன்றியுரை வழங்கவும் உள்ளனர். 

 இந்தப் பன்னாட்டு மாநாட்டில் இசையறிஞர்கள் டி. கே. எஸ். கலைவாணன், திருபுவனம் ஆத்மநாதன், வலிவலம் ஆர். எஸ். வெங்கட்ராமன் ஆகியோரின் இன்னிசைப் பயிலரங்குகள் நடைபெற உள்ளன. 

  முனைவர் மு. இளங்கோவன்,  முனைவர் செ. கற்பகம், முனைவர் இரா. கா. குமார், முனைவர் தி. அருட்செல்வி, முனைவர் வ. ல. வே. சுதர்சன், முனைவர் நா.கிரிஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு அமர்வுகள் நடைபெற உள்ளன. 

 தமிழிசை ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.











 

கருத்துகள் இல்லை: