நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
இசையறிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசையறிஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

இசைத் தமிழின் இலங்கை முகம்!



பழந்தமிழரின் இசை நுட்பங்களைப் பற்றி விரிவாகப் பேசும் ‘யாழ்நூல்’ எனும் ஆய்வு நூலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த விபுலாநந்தர். இந்நூல் மூலமாகவே தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ்பெற்றவர். எனினும், இந்த அடையாளத்தைத் தாண்டி அவர் சாதித்தது நிறைய. அவரைப் பற்றிய முழுமையான அறிமுகம் தமிழ்ச் சூழலில் இல்லை என்றே சொல்லலாம். இதழாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் தொடர்ந்து இயங்கியவர். இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி மாணவர்களின் கல்விக்கண் திறந்த கல்வியாளராகவும், பேராசிரியராகவும் மிகச்சிறந்த துறவியாகவும் விளங்கியவர்.

1892-ல் இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவு என்னும் ஊரில் விபுலாநந்தர் பிறந்தார். இயற்பெயர் மயில்வாகனன். காரைத்தீவு, கல்முனை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தொடக்கக் கல்வி பயின்ற அவர், கொழும்பில் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர். ‘கேம்பிரிட்ஜ்’ தேர்வு எழுதி இளம் அறிவியல் பட்டமும் பெற்றிருக்கிறார். தனது 24-வது வயதில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ‘பண்டிதர்’ பட்டம் பெற்றார். இப்பட்டம் பெற்ற முதல் இலங்கைக் குடிமகன் இவர்தான். கொழும்பு, மட்டக்களப்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். காந்தி யாழ்ப்பாணம் சென்றபோது அவரை வரவேற்ற பெருமை விபுலாநந்தருக்கு உண்டு.

துறவறம்

திருவிளங்கம் எனும் தனது நண்பர் நோய்வாய்ப்பட்டு இறந்ததால், வாழ்வின் மீது பற்றிழந்த நிலைக்குச் சென்றார். இந்தக் காலகட்டத்தில் ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னைக்கு வந்து ராமகிருஷ்ண மடத்தில் 1922 முதல் 1924 வரை துறவறப் பயிற்சி பெற்றார். பிரமச்சரிய காலத்தில் ‘பிரபோத சைதன்யர்’ என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. 1924-ல் சிவானந்தரால் ஞான உபதேசம் பெற்றார். அவருக்கு ‘விபுலாநந்தர்’ என்ற பெயர் அமைந்தது அந்தக் காலகட்டத்தில்தான்.

பின்னர், 1925 முதல் 1931 வரை இலங்கையில் பல்வேறு பள்ளிகளை ஏற்படுத்தினார். தனக்கு ஞான உபதேசம் செய்த குருநாதர் நினைவாக மட்டக்களப்பில் ‘சிவானந்த வித்யாலயம்’ என்ற பெயரில் பள்ளியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் கல்வியறிவு பெற வழிவகுத்தார். ராமகிருஷ்ணர், விவேகானந்தர் கருத்துகளை இலங்கையில் பரப்பி, ஆன்மிக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்.

அண்ணாமலை அரசர் ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் அழைப்பின் பேரில் 1931 முதல் 1933 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு பணியாற்றியபோது, விவேகானந்தரின் ‘ஞானதீபம்’, ‘கர்மயோகம்’, ‘ராஜயோகம்’, ‘பதஞ்சலி யோகசூத்திரம்’ முதலான நூல்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார். பாரதியார் கவிதைகளைப் பரப்புவதிலும் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதிலும் முன்னோடியாக இருந்தார். ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கும் அவர், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

தமிழறிஞர்களின் நட்பு

உ.வே.சா, ஞானியார் அடிகள், திரு.வி.க, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை. துரைசாமிப் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், பேராசிரியர் க.வெள்ளைவாரணன் உள்ளிட்ட அறிஞர்களுடன் நல்லுறவு கொண்டவர்.
ராமகிருஷ்ண விஜயம், பிரபுத்த பாரதம் (ஆங்கிலம்), வேதாந்த கேசரி, விவேகானந்தன் (இலங்கை) உள்ளிட்ட இதழ்களின் ஆசிரிய ராகப் பணிபுரிந்திருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும், ஞானியார் மடம், மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளிலும், சென்னை, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்களிலும் இசைத் தமிழ்ச் சிறப்பினை எடுத்துரைத்து உரையாற்றியவர். அவரது உரைகளை அக்காலத்தில் ‘தி இந்து’ (ஆங்கில) நாளிதழ் பதிவுசெய்துள்ளது.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் யாழ் குறித்த குறிப்புகளையும், சங்க இலக்கியங்களில் இடம்பெறும் யாழ் பற்றிய குறிப்புகளையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து, ‘யாழ்நூல்’ என்ற நூலை 1947-ல் வெளியிட்டார். இந்த நூல் வெளிவருவதற்குப் புதுக்கோட்டை நற்சாந்துப்பட்டியைச் சேர்ந்த கோனூர் ஜமீன்தார் இராம. பெரி. பெரி. சிதம்பரம் செட்டியார் பொருளுதவியும் ஆதரவும் தந்துள்ளார். விபுலாநந்தரின் மீது பற்றுகொண்ட சிதம்பரம் செட்டியார், பதினோராயிரம் சதுரஅடி பரப்பளவுகொண்ட தனது வீட்டினை வழங்கி, ஆய்வுக்கு உதவினார். அந்தச் சமயத்தில் விபுலாநந்தரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

இறுதி ஆசை

அந்த நூல் வெளியிடப்பட்டால் தனது உடல்நிலை தேறிவிடும் என்று விபுலாநந்தர் நம்பினார். அவரது விருப்பம் அறிந்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழியாக நூல் அச்சேற வழிவகை செய்தார் சிதம்பரம் செட்டியார். அவரைப் போன்ற பலரும் விபுலாநந்தருக்கு உதவி செய்தனர்.

பேராசிரியர் க.வெள்ளைவாரணன், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரின் உதவியுடன் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்புதூர் திருக்கோயிலில், 1947-ல் ‘யாழ்நூல்’ வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின்போது, விபுலாநந்தர் உருவாக்கிய யாழினைச் சங்கீதபூஷணம் க.பெ.சிவானந்தம் பிள்ளை இசைத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார். இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில், நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ.முருகப்பா, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சாம்பமூர்த்தி ஐயர், பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ.வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப் பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசன் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

‘யாழ்நூல்’ வெளிவந்த 44-வது நாள், கொழும்பு மாநகரில் உள்ள மருத்துவமனையில் இயற்கை எய்தினார் விபுலாநந்தர். அவரின் உடல் மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புதைக்கப்பட்டு, சமாதி அமைக்கப்பட்டது. அவரது இறுதி நிகழ்ச்சியில் பல மதத்தவரும் கலந்துகொண்டு திருமறைகளை ஓதி வழிபட்டனர். அவரது நினைவு தினத்தைத் தமிழ்மொழி தினமாக அனுசரித்தது இலங்கை அரசு. அவரது கல்விப் பணியும் ஆன்மிகப் பணியும் இலங்கையில் பல்வேறு அறிவார்ந்த மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. விபுலாநந்தர் உருவாக்கிய பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்கள் இன்று கல்வியில் முன்னேறி உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவரது வாழ்வின் மேன்மையைச் சொல்லும் செய்தி இது!

- மு.இளங்கோவன்,
புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறைப் பேராசிரியர்.
விபுலாநந்தரைப் பற்றிய விரிவான ஆவணப்படத்தை உருவாக்கிவருபவர்.

தொடர்புக்கு: muelangovan@gmail.com

நனி நன்றி: 
படம்: ஓவியக் கலைஞர் இரவி(புதுச்சேரி)

புதன், 24 ஏப்ரல், 2013

இசையறிஞர் அரிமளம் சு. பத்மநாபன்




முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள்

இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் ஐயா அவர்களின் உதவியாளனாக யான் இருந்தபொழுது பலருக்கும் மடல் எழுதும் உரிமையை எனக்கு இசைமேதை அவர்கள் வழங்கியிருந்தார். அந்தக் காலத்தில் எனக்கு அறிமுகமான பெயர் அரிமளம் சு. பத்மநாபன். ஒருமுறை மதுரை- பசுமலையில் ஐயா அவர்களின் இல்லத்திலும் அரிமளம் அவர்களைக் கண்டுள்ளேன். புதுச்சேரிக்குப் பணிக்கு வந்த புதிதில் அரிமளம் அவர்களைத் தேடிச்சென்று காண்பதை வழக்கமாக்கிக்கொண்டேன். தமிழிசை பற்றியும், தமிழ் ஆராய்ச்சி உலகு பற்றியும் நெடுநாழிகை உரையாடுவது எங்கள் வழக்கம்.

வீ.ப.கா.சுந்தரம் ஐயாவின் கொள்கைகளை உள்வாங்கிக்கொண்டு பாடுதுறையில் வல்லுநராக விளங்குபவர் அரிமளம். தொல்காப்பியத்தையும், பத்துப்பாட்டையும் செம்மொழி நிறுவனத்திற்காக முற்றோதல் வகையில் ஆவணப்படுத்திய வரலாற்றுச் சிறப்புக்கு உரிமையாளர் நம் அரிமளம் அவர்கள். “ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழ விளங்கி” எனத் தொடங்கும் தண்டியலங்காரப் பாட்டின் சிறப்பை அரிமளம் அவர்களின் குரல்வழிக் கேட்டு முழுப்பொருள் உணர்ந்தேன். அதுபோல் திருக்குறளை அவர்கள் சுத்த தன்யாசி இராகத்தில் பாடிய குறட்பாக்களை ஆயிரம் முறையேனும் கேட்டிருப்பேன். இந்தோளப் பண் பாடுவதிலும் நம் அரிமளம் புகழ்பெற்றவர்.

இன்று(23.04.2013) அரிமளம் அவர்களுடன் இசைகுறித்துக் கலந்துரையாட வாய்ப்பு அமைந்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீண்ட எங்கள் உரையாடலில் பாவேந்தர் பாடல்கள், நாலாயிரப் பனுவல், கம்பராமாயணம், திருப்பாவை உள்ளிட்டவற்றை அரிமளம் பாடக் கேட்டு உள்ளம் உவகைகொண்டேன். அரிமளம் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள் புதுக்கோட்டையை அடுத்த அரிமளம் என்ற ஊரில் 14.06.1951 திருவாளர் அரிமளம் சுப்பிரமணியம், மங்களம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். பிறந்த ஊரில் தொடக்கக் கல்வியைப் பயின்ற இவர் தந்தையாரிடம் முறைப்படி இசை கற்றவர். முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். கல்வியியலில் முதுகலை பயின்றவர். “தமிழ்நாடக இசை” குறித்துப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர்.

1976 இல் புதுவையில் அமைந்துள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் இசையாசிரியராகப் பணியில் இணைந்தவர். புதுவை அரசின் கல்வித்துறையில் 1977 இல் இணைந்து 2000  இல் விருப்ப ஓய்வுபெற்றார். அதன் பிறகு புதுவைப் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத்துறையில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைத்துறையிலும், திருச்சிராப்பள்ளி    கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியிலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

  செம்மொழி நிறுவனத்தில் 2006 முதல் பணியில் இணைந்து தொல்காப்பியம், பத்துப்பாட்டு முற்றோதல் குறித்த குறுவட்டுகளை வெளியிட்ட அறிஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.

அரிமளம் அவர்களின் தமிழ்க்கொடைகள்:

 நூல்கள்:

 தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக் கூறுகள், 2000
 சங்கரதாஸ் சுவாமிகளின் சந்தங்கள் ஓர் ஆய்வு, 2002
சங்கரதாஸ் சுவாமிகளின் இரு நாடகங்கள், 2006(சாகித்திய அகாதமி )
 சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் களஞ்சியம், 2008(காவ்யா வெளியீடு)
  தமிழிசையும் இசைத்தமிழும், 2009 (காவ்யா வெளியீடு)

கட்டுரைகள்  :  
  
சாகித்திய அகாடமி, புதுதில்லி, தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத்       தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட  பல்வேறு அமைப்புகளின் மலர்கள், இதழ்கள், நூல்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்.

பாடத்திட்டப் பணிகள்

சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழக இசைத்துறைப் பட்டப் படிப்புகளுக்கான  பாடங்களில் சில.

புதுச்சேரி அரசுக் கல்வித்துறைக்காக ஒன்று முதல் பத்தாம் வகுப்புகளுக்கான இசைப் பாடத்திட்டத் தயாரிப்பு

குறுவட்டுகள்

வெளியீடு - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
.         பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தல், பாடுதல்
.        தொல்காப்பியம் முற்றோதல்
.         பத்துப்பாட்டு முற்றோதல்

பாடுதுறை :    மரபுவழிக் கலைஞர்

அரங்கிசை                :  42 ஆண்டுகள்
இசையாசிரியர்              :         40 ஆண்டுகள்
இசையமைப்பாளர    :         36 ஆண்டுகள்
ஆவணப்படங்கள்                –  2
 தமிழிசைக் குறுவட்டு          –  1
 இசை, நாட்டிய நாடகங்கள்    - 10
தமிழ்  இசைப் பயிலரங்குகள்  - 50 

பழந்தமிழிசையில் திருக்குறள் முழுமையும் ஆவணப் பதிவாக அகில இந்திய  வானொலி நிலையம்,    புதுச்சேரி.

திருக்குறள் இசைத் தமிழ் (தமிழிசைக் குறுவட்டுகள்)  தமிழ் மையம், சென்னை                  
  
சேர்ந்திசை இயக்குநர்:    தேசிய சேர்ந்திசைப் பயிற்றுநர்,
தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், (NCERT), மனித வள மேம்பாட்டு அமைச்சகம், புதுடில்லி.

இந்தியாவின் அனைத்து மாநில இசையாசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு தேசிய, மொழி நல்லிணக்கத் தமிழ்ப் பாடல்களைப் பயிற்றுவிக்கும் பணி.

சிறப்புக் குறிப்புகள்:     9.8.1987 அன்று மும்பையில் பிரதமர் இராசீவ் காந்தி தலைமையில், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், கிராந்தி மைதானத்தில் 3000 பள்ளிக் குழந்தைகளைக் கொண்டு பாரதியார் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடச் செய்த சேர்ந்திசை நிகழ்ச்சி.

15.8.1987 அன்று  புதுதில்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் சேர்ந்திசை

5.9.1987 அன்று ஆசிரியர் தின விழாவில்  புதுச்சேரியில் சுற்றுச்சூழல் குறித்த பாடல்களை  3000 பள்ளிக் குழந்தைகள் பாட, 1000 குழந்தைகள் நாட்டியம் ஆடிய நிகழ்ச்சி.


 
                அரிமளம் அவர்கள் பெற்ற விருதுகள்:
                                                                                 
கலைமாமணி     (புதுச்சேரி  அரசு)
  விபுலானந்தர் விருது    (கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை)
இராஜா சர் முத்தையா செட்டியார் விருது         (மதுரை)
ஞான  சரஸ்வதி பீட  புரஸ்கார்                        (சென்னை)
இசை ஞானச் சுடர்                                           (புதுச்சேரி)
தமிழ் இசை வேந்தர்                                         (விழுப்புரம்)
சங்கரதாசு சுவாமிகள் விருது                          (புதுச்சேரி)
நாடகச் செல்வம்                                              (சென்னை)
நாடக நற்றமிழ் ஞாயிறு                                   (மதுரை)
அருட்பா இசைமணி                                        (வடலூர்)
சுக நாத லய ஞான மணி                                  (மதுரை)
பெரும்பாண நம்பி                                           (இலால்குடி)
இசைத்தமிழ் அறிஞர்                                       (மதுரை)

அரிமளம் சு.பத்மநாபன் முகவரி:

முனைவர் அரிமளம் சு.பத்மநாபன்
14, மூன்றாம் குறுக்கு தெரு,
இராமன் நகர் (குறிஞ்சி நகர்),
இலாசுப்பேட்டை, புதுச்சேரி – 605 008
0413 – 2252342  /  94423 96550   
                                                                               
   arimalam.padmanabhan@ gmail.com        

அரிமளம் அவர்களின் இணையதளம்